jump to navigation

”திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை வரவேற்கிறேன்!” நவம்பர் 21, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், அலையன்ஸ் பிரான்சேஸ், இலங்கை தமிழர், கனிமொழி, குடும்பம், குட்டி ரேவதி, சமூகம், சாதி, சித்த மருத்துவர், சூரியகதிர், தமிழ், பெண்கள், லீனா மணிமேகலை.
Tags: , , , , , , ,
4 comments

 

photo : 'marakkanam' Bala

தமிழ் இலக்கியப் பரப்பில் அழுத்தமான பெண்ணிய கவிதைகளை எழுதி வருபவர் குட்டி ரேவதி! இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு ‘முலைகள்’ என பெயரிட்டதாலேயே பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானார். உள்ளடக்கம் காரணமாக அதே தொகுப்பு விமரிசகர்களால் பாராட்டவும்பட்டது. கவிதை, கட்டுரை என எழுத்து செயல்பாடுகளோடு பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து களஆய்வு செய்து ஆவணப்படுத்தியும் வருகிறார். சித்த மருத்துவர், புகைப்படக்காரர் என மேலும் பல முகங்கள் குட்டி ரேவதிக்கு…வெகுஜன பத்திரிகைகளில் இதுவரை பேசாத சில விஷயங்களை பேச வைக்க வேண்டும் என்ற முனைப்போடு குட்டி ரேவதியை அணுகியபோது ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டார். நன்பகல் வேளை ஒன்றில் சென்னை அலையன்ஸ் பிரான்சேஸ் வளாகத்தின் மர நிழல்களுக்கிடையே நடந்தது இந்தச் சந்திப்பு…

”படைப்பாளி என்பவர் சமூகத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறார்? பெண் கவிதைகள் மீதான விமரிசனம் இன்று எப்படி இருக்கிறது?”

எனக்குப் பிடிக்காததை இதுவரை வலிந்து செய்ததில்லை. தொலைதூரத்தில் தெரிகிற குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கிப் போக வேண்டும் என்ற திட்டமிடலும் இல்லை, எந்த அவசரமும் இல்லை. கவிதை எழுதுவது என் இயல்பு. கவிதையின் நீட்சியாக என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறேன். தடாகத்தில் தூக்கி எறியப்படுகிற கல்போல படைப்புகளைச் சமூகத்தின் முன் வைக்கிறோம். அதிர்வுகள் பெரிதாக இருக்கலாம், சிறியதாகவும் இருக்கலாம். ஆனால், சமீப காலமாக தமிழ் படைப்பாளிகளுக்கு அதிகாரத்தின் மீதான கவர்ச்சி அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக ஈழம் சார்ந்து படைப்பாளிகளின் அணுகுமுறை கேள்விக்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இங்கே போர் இல்லை. மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிறது. சவுகர்யமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமூகத்தைப் போல படைப்பாளிகளும் மந்தமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். பெரிய எழுத்தாளர்கள் என… என் வாயால் அவர்கள் பேரைக்கூட உச்சரிக்க விரும்பவில்லை – பெண் கவிதைகள் குறித்து இதுவரை அவர்கள் நேர்மையான அணுகுமுறையோடு விமரிசனம் செய்ததில்லை. இதை திட்டமிட்ட சதி என்றுகூட சொல்லலாம். தொடர்ந்து இப்படிப்பட்ட புறக்கணிப்பு நிகழும்போது, பின்னால் வரும் சந்ததிக்குப் பெண் கவிதை குறித்த வரலாறே தெரியாமல் போகலாம்!

”இலங்கை பிரச்சினையில் அரசியல்வாதிகளைப்போல இலக்கியவாதிகள் நடந்துகொண்டார்கள் என்கிற விமரிசனம் எழுந்துள்ளது. இதில் உங்களுடைய கருத்து என்ன?”

சமீபகாலமாக ஈழ வரலாறு குறித்து அத்தனை நூல்களையும் தேடிப்பிடித்து படித்து வருகிறேன். நமக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான பூகோள ரீதியான உறவுகள், சமூக, வரலாற்று, அரசியல் உறவுகள் நெகிழ்வைத் தருகின்றன. இப்படிப்பட்ட எந்த வகையான புரிதலும் இல்லாமல் ஆறேழு மாதங்களாக இலக்கியவாதிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், கவியரங்கங்கள் கேலிக்கூத்தாகத்தான் இருந்தன. தொலைக்காட்சியில் காட்டப்படுகிற கொலைகளைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்களாகத்தான் இவர்கள் நடந்துகொண்டார்கள். நம்முடைய தம்பியோ, அண்ணனோ காயப்பட்டிருந்தால் உடல், மனம் என சகலமும் துடித்திருக்குமே! அந்தத் துடிப்பு நமக்கு வந்திருக்க வேண்டாமா? இதைவிட அபத்தம், தமிழக அரசின் உலகத் தமிழ் மாநாடு குறித்த அறிவிப்பு. ஆயிரம் ஆயிரமாக சொந்த உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு தமிழுக்கு விழா எடுத்து என்னவாகப்போகிறது? மொழியின் புளகாங்கிதத்தை பேசவா? தமிழ் மக்கள் குறித்தோ, பண்பாடு, இலக்கியம் குறித்தோ எந்தவித அறிதலும் அரசுக்குக் கிடையாது. நவீன இலக்கியத்தின் ஏஜென்சி போல கனிமொழியைச் செயல்பட வைப்பதுதான் இலக்கியம் குறித்து அரசுக்கு இருக்கிற அதிகபட்ச அக்கறை. 80,90 வயதுகளைக் கடந்த தமிழ் அறிஞர்களை வைத்து நடத்தப்படுகிற உலகத் தமிழ் மாநாட்டால் என்ன நடந்துவிடப்போகிறது? பசுமை நிறைந்த நினைவுகளே என பாடச்சொல்லியா கேட்கப்போகிறோம்?! வரலாற்றில் எங்கும் நிகழ்ந்திராத வன்முறை ஈழத்தில் நடந்திருக்கிறது. முப்பத்தைந்து ஆண்டுகாலமும் இதுவெறும் அரசியல் பிரச்சினையாக பார்க்கப்பட்டதாலேயே இன்று ஒட்டுமொத்த தமிழர்களும் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் படுகொலைகளை நம்மால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். நம் எல்லோருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.

 ”ஓரினச் சேர்க்கையை குற்றம் என சொல்லும் இந்தியக் குற்றவியல் சட்டம் 377வது பிரிவை நீக்குவது குறித்து உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில் ஊடகங்களில் ஓரினச் சேர்க்கை குறித்து ஆரோக்கியமான விவாதம் எழுந்துள்ளது. கவிஞர் லீனா மணிமேகலை கூட தன்னுடைய ‘உலகின் முதல் அழகிய பெண்’ கவிதைத் தொகுப்பின் முன்னுரையில், தான் இருபால் விருப்பமுள்ளவர் என எழுதியுள்ளார். கட்டுப்பாடுகள் மிக்க இந்திய சமூகத்துக்குள் இத்தகைய வெளிப்படையான அறிவிப்புகள், விவாதங்கள் மாற்றங்களை ஏற்படுத்துமா?”

சட்டம் போட்ட பிறகுதான் ஊடகங்கள் ஒதுக்கப்பட்ட விஷயங்களைப் பேசவேண்டும் என்பதில்லை. அரசுக்குச் சொறிந்து கொடுக்கும் வேலையை விட்டுவிட்டு ஊடகங்கள் தன்னளவில் சுயமாக மக்களுக்காகச் செயல்பட முடியும். ஆனால், மனித மனங்களில் படிந்துபோயுள்ள வக்கிரமான பாலியல் ஆசைகளை நிறைவேற்றக்கூடியவையாகத்தான் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. சமீபத்தில் நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்திலும் அனந்தலட்சுமி கொலை சம்பவத்திலும் ஊடகங்கள் நடந்துகொண்ட விதத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அந்தந்த நேரத்தில் கிடைக்கும் செய்திகளின் தன்மைக்கு ஏற்றபடிதான் ஊடகங்கள் செயல்படுகின்றனவே தவிர சமூக மாற்றத்துக்காக அல்ல. சமூகம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் ஒருவர், தன்னை இருபால் விருப்பமுள்ளவர் என சொல்லிக்கொள்வது மீடியாவின் கவனத்தை தன்பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சி. சமூகத்தின் மீது ஆழமான பார்வை வைத்திருக்கிறவர்களால் மேலோட்டமாக போகிற போக்கில் இப்படிப்பட்ட ஸ்டேட்மெண்டைக் கொடுக்க முடியாது.

”சமீப காலமாக ‘லிவிங் டுகெதர்’ என்று சொல்லப்படுகிற திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது அதிகரித்து வருகிறது. இது திருமணம் என்கிற நிறுவன அமைப்புக்கு மாற்றாக இருக்கும் என நம்புகிறீர்களா..?”

நானும் இப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற வகையில், ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது திருமண அமைப்புக்கு மாற்றாக இருக்கும் எனச் சொல்லமுடியும். ஆனால், முழுமையான மாற்றாக இருக்கும் என்று கூற முடியாது. பெண் மீதான பாலியல் ஒடுக்குமுறைகளுக்கும் திருமணம் என்கிற அதிகார அமைப்பின் முரண்பாடுகளுக்கும் இது தீர்வு தரும். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதுதான் இயற்கையின் நியதி. ஆனால் திருமணம் என்பது காலில் போடப்பட்ட அடிமைச் சங்கிலி. அதனால், நல்ல ஆண்களுடன் சேர்ந்து வாழ்வதை நான் வரவேற்கிறேன். இந்த வாழ்க்கையில் பெண்களின் தனிப்பட்ட ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆண்களுக்கும்கூட இது இறுக்கம் தளர்ந்த வாழ்க்கையாக இருக்கும். இருவருடைய வாழ்க்கையும் லகுவாக அமையும். விவாகாரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட பிறகுதான் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என லெனின் சொன்னது போலத்தான் இன்றைய திருமண வாழ்க்கை இருக்கிறது. விவாகரத்தும் விவாகரத்துக்குப் பிறகான வாழ்க்கையும் நம் நாட்டில் கொடுமையான விஷயங்கள். ஆனால், திருமண அமைப்புக்குள் போகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் விடுதலைக்கான கனவுகள் திறந்திருக்கும். பெரியார் சொன்னதுபோல, ‘ஐந்து வருடம் சேர்ந்து வாழுங்க. அதுக்குப்பிறகு குழந்தை வேணும்னு நினைச்சா பெத்துக்குங்க..!’

 ”இறுதியாக…நாடாளுமன்ற தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றினீர்கள். இப்போது கட்சியிலிலிருந்து விலகிவிட்டதாக தெரிகிறது. திடீர் அரசியல் பிரவேசத்துக்கும் விலகலுக்கும் என்ன காரணம்..?”

அரசியல் ரொம்ப அவசியம். ஆனால் அதற்கு இன்னும் நான் தயாராகவில்லை! மக்களோடு இன்னும் கீழே இறங்கி வேலை செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. கூடவே தற்கால அரசியல் சூழலில் பெண்களுக்கான இடம் கேள்விக்குரியதாக இருக்கிறது. காலம் இருக்கிறது, மீண்டும் என்னுடைய அரசியல் பிரவேசம் எழுச்சியோடு நிகழும்!

நன்றி : சூரியகதிர்

பெண்களும் சாதி உணர்வும் நவம்பர் 2, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், குடும்பம், சமூகம், சாதி, பெண்கள், முத்துராமலிங்க தேவர்.
Tags:
8 comments

FACES

டந்த பத்து ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன். இந்த ஆண்டுதான் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் விழாவை சென்னை எப்படி கொண்டாடுகிறது என்பதைக் காண முடிந்தது. சாதி வெறியின் அறுவறுப்பான கொண்டாட்டம்நீ முந்தி நான் முந்தி என ஓட்டுக் கட்சிகள் நடத்தும் ஆபாச கூத்துக்கள். முத்துராமலிங்க தேவரின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் நந்தனம் வழியே அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால் இந்த கேவலங்களை நேரடியாக பார்க்க முடிந்தது.அப்பட்டமான சாதிவெறிக் கொண்டாட்டம்கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்த அந்த சிறுவர்களின் முகத்தில் அப்படியொரு வெறித்தனம்சாலையில் பிதுங்கி வழிந்த நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்த அரை மணி நேரத்தில் ஒரு பெண் சாதி குறித்து சொன்ன அந்த பெருமித வார்த்தைகள் நினைவில் வந்து வந்து போயின.

திருமணம் ஆகி, குழந்தைக்கு தாயாகியும் பத்தாண்டு காலம் காதலித்தவனை மறக்க முடியாமல் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி எறிந்து காதலித்தவனுடன் வாழ முடிவெடுத்தவர் அந்தப் பெண். புரட்சிகரமான இந்த முடிவுக்கேற்றபடி சில மாதங்கள் காதலனுடன் வாழவும் செய்தவர். பெற்றோருக்கு விஷயம் தெரியவர காதலனை விட்டு கணவருடன் மீண்டும் இணைந்தவர். சமூகத்துக்காக கணவருடன் வசித்தாலும் இன்னமும் மனதளவில் அவர் காதலனுடன் வாழ்வதாகவே நினைக்கிறவர்.

எல்லாவற்றையும் உதறிவிட்டு ஏன் நீங்கள் விரும்பியவருடனேயே வாழக்கூடாது என கேட்டதற்கு அவர் சொன்ன பதில்..நாங்க தேவர் ஜாதிஅவர் வேற ஜாதிநாங்க எப்படி காலம் முழுசும் சேர்ந்து வாழ முடியும்?

தான் எப்படி வாழ வேண்டும் தீர்மானித்துக் கொண்ட அந்தப் பெண்ணின் முடிவு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இங்கு விவாதத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டிய விருப்பப்பட்டவருடன் சேர்ந்து வாழ அந்தப் பெண் சொன்ன காரணத்தைத்தான். சமூகத்துக்கு தெரியாமல் தன் சாதி அல்லாத தான் விரும்பிய ஆணுடன் வாழ முற்பட்டவருக்கு, நாலு பேருக்கு தெரிய வரும் சூழல் வரும்போது தான் பிறந்த சாதி முக்கியமாகப் படுகிறது. பொதுவாக ஆண்கள்தான் சாதியை ஆணித்தரமாக கடைப்பிடிப்பவர்களாக கண்டிருக்கிறோம், ஆண்களுக்குத்தான் சாதீய உணர்வு அதிகம் எனவும் பேசுகிறோம். நிதர்சனத்தில் ஆண்களுக்கு இருக்கும் அதே அளவில் பெண்களுக்கும் சாதி உணர்வு,பெருமிதம் இருக்கிறது. குடும்பம் என்னும் அமைப்பின் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சாதி கருத்தாக்கங்களை கொண்டு செல்வதில் பெண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஆண் சட்டம் போடுபவனாக இருக்க, பெண் அதை செயலாற்றவும் கட்டிக்காப்பாற்றவும் செய்கிறார். பள்ளிக் காலங்களிலேயே சக தோழிகள் சாதி தொடர்புடைய விஷயங்களில் கவனமாக இருந்துவந்ததை அவதானித்திருக்கிறேன். என்ன சாதி என்பதைப் பொறுத்தே பேச்சும் பழக்கமும் இருக்கும். பொதுவெளியில் கிடைக்காத சுதந்திரம் பெண்களை சாதி உணர்வற்றவர்களாகக் காட்டிக்கொண்டிருக்கிறது. தன் சாதியைச் சேராதவர்கள் மீது நேரடியாக ஆண்களைப் போல வன்முறையை ஏவிவிடாதபோதும், சாதி தீயை அணைந்துவிடாமல் காப்பாற்றுவதை பெண்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இது விரிவாகப் பதிவு செய்யப்பட வேண்டும். பெண்கள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து பேசும்போது பெண்களுக்கும் சாதிக்குமான உறவு குறித்தும் பேச வேண்டும்

நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை! ஏப்ரல் 27, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், ஆயுதப் போராட்டம், இன உணர்வு, இலங்கை தமிழர், ஊடகம், சமூகம், செப்டம்பர் 11, நேபாள மாவோயிஸ்ட்கள், புதுவை சுகுமாறன், போராட்டம், போர்ச்சூழல், விடுதலைப் புலிகள்.
Tags: , , , , , ,
49 comments

nepal-maoist-postersற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து என்ன பேசினாலும் நம்முடைய சார்பு நிலையில் எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது. அதாவது புலிகளுக்கு ஆதரவு-இலங்கை தமிழருக்கு ஆதரவு அல்லது புலிகளுக்கு எதிர்ப்பு-இலங்கை அரசுக்கு ஆதரவு. இவை இரண்டைத்தவிர மற்றொரு நிலைப்பாடும் இருக்கக்கூடும், தேவையாக இருக்கிறது என்பதை பலரும் சிந்திக்கக்கூட மறுக்கிறார்கள். அரசியல் கட்சிகள் முதல்கொண்டு ஊடகங்கள் வரை தங்கள் ஆதாயத்துக்குகேற்றபடி நிலைப்பாட்டினை எடுக்கின்றன. பொதுபுத்தியில் படிந்துபோயுள்ள தமிழர் என்கிற இனவுணர்வைத் தூண்டி ஆதாயம் பெறப்பார்க்கின்றன. அறிவுஜீவிகள் என்று மார்தட்டிக் கொள்கிறவர்களின் செயல்பாடும் இப்படித்தான் உள்ளது. சாதி உணர்வு, மத உணர்வு எந்த அளவுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமோ அதே அளவுக்கு கண்மூடித்தனமான இன உணர்வும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதே.

இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் உணர்ச்சி வசப்படுவதை விட்டுவிட்டு அடுத்த நகர்வு குறித்து யோசிப்பதுதான். இன்னும் பல தசாப்தங்களுக்கு போரை நடத்திக்கொண்டிருப்பதா? போர் முடிவுக்கு வரும்பட்சத்தில் தமிழர், இலங்கையில் நிலையான அமைதியோடு வாழ வழிவகை என்ன? நம்முன் இருக்கும் கேள்விகள்

நேபாளத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி ஆயுத ஏந்திய மாவோயிஸ்டுகளின் அணுகுமுறையை இலங்கை பிரச்சினையில் புலிகள் ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? நேபாளத்தில் மன்னராட்சியும் நிலப்பிரபுத்துவமும் பிரச்சினைகள் என்றால் இலங்கையில் இருப்பது இனப்பிரச்சினை என்று மேலோட்டமாகப்பார்த்து தள்ளிவைக்காமல் இது குறித்து சிந்தனையும் விவாதமும் செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு நேபாள அரசியல் நிர்ணநய சபைக்கான தேர்தலுக்குப் பார்வையாளராக சென்று வந்திருந்த புதுவை சுகுமாறனிடம் நான் கண்ட நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இது. நான் பணியாற்றிய வார இதழில் வெளியானது . சூழ்நிலை கருதி மீள்பிரசுரம் செய்கிறேன்.

மக்கள் ஆட்சியா, மன்னர் ஆட்சியா என்று புயல் வீசிக்கொண்டு இருந்த நேபாளத்தில் இப்போது ஜனநாயகக் காற்று! பத்தாண்டுகளாக நடந்த ஆயுதப் போராட்டத்தின் முடிவில், மாவோயிஸ்ட்கள் தலைமையிலான ஆட்சி அமைந்திருக்கிறது. நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தலின் பார்வையாளராகச் சென்று வந்த மனித உரிமை ஆர்வலர் புதுவை கோ.சுகுமாறனுடன் ஒரு சந்திப்பு

”ஆயுதம் தாங்கிய போராட்ட அமைப்பான மாவோயிஸ்ட்கள் நேபாளத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எப்படி இது சாத்தியமாயிற்று?”

”நேபாள மக்களின் ஒரே வருமானம் சுற்றுலாதான். காட்மாண்டு நகரம், இரண்டு மலைகளுக்கு நடுவே கோடையிலும் கொப்பளிக்கும் நாராயணி ஆறு. இந்த இரண்டும் கொள்ளை அழகுடையவை. இருந்தாலும், ஏழ்மையும் வறுமையும்தான் நேபாளத்தின் உண்மையான முகம். விவசாயம் நொடித் துப்போன பல லட்சம் பேர் கூர்க்காக்களாக, இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் கிளம்பிவிடுகிறார்கள். கடந்த 240 ஆண்டுகளாக மன்னரைக் கடவுளாக நினைத்து, அவர் தங்களுக்கு நல்லது செய்வார் என்று நம்பிக்கொண்டு இருந்தவர்கள் நேபாள மக்கள். 1996ல் மன்னர் குடும்பத்துக்குள்ளேயே நடந்த படுகொலைகள் அந்த நம்பிக்கையை முதன்முறையாகத் தகர்த்தன. அதன் பிறகுதான் கட்சிகளின் மேல் மக்கள் நம்பிக்கை வைக்கத் தொடங்கினார்கள். மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள் மாவோயிஸ்ட்கள். கடந்த பத்தாண்டுகளாக நடந்த போராட்டத்தில் இரண்டு தரப்பிலும் சேர்த்து 12 ஆயிரம் பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு, மூன்றாவது முறையாக அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் இப்போது நடந்தது. மாவோயிஸ்ட்கள் இதில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து வென்றதற்கு அரசியல்ரீதியாக நிறைய காரணங்கள் இருந்தாலும் அடித்தட்டு மக்களை ஒன்றிணைத்ததுதான் முக்கியமான காரணம்! தேர்தல் மிக அமைதியாக நடந்தது. கிட்டத்தட்ட 85 சதவிகித ஓட்டுப்பதிவு நடந்தது. ரொம்பவும் சாதாரணமாக மரத்தடியில் ஓட்டுப் பெட்டியை வைத்திருந்தார்கள். ஓட்டு எண்ணுவதும்கூட அதீத பாதுகாப்பு இல்லாமல் எளிமையாக, நேர்மையாக நடந்தது. இந்தத் தேர்தல் வெற்றி என்பது, நேபாள மக்களின் அமைதிக்குக் கிடைத்த வெற்றி!”

”ஆயுதங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு ஜனநாயகத்துக்குத் திரும்பியிருக்கும் மாவோயிஸ்ட்கள், இதே நிலையைத் தொடர்வார்களா?”

”செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு, ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்கள் அனைத்தையும் தீவிரவாத அமைப்புகளாக அறிவித்தது அமெரிக்கா. இதனால், விடுதலைப் புலிகள் உள்பட பல போராட்டக் குழுக்கள் அந்தந்த நாடுகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. பெரும்பாலும் அவை தோல்வியிலேயே முடிந்தன. நேபாள மாவோயிஸ்ட்கள் மட்டுமே இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டவிடம், ‘ஜனநாயகப் பாதையில் நீடிப்பீர்களா?’ என்று கேட்டோம். ”ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில்தான் ஆயுதம் தூக்கினோம். இனி, அது தேவைப்படாது. ஆயுதம் ஏந்திய போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் மூன்றாவது உலக நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளுக்கு நாங்கள் முன்னுதாரணமாக இருப்போம்” என்றார்.”

”நேபாளத்தில் ஜனநாயகம் மலர்ந்திருப்பதை இந்தியா எப்படிப் பார்க்கிறது?”

”ஒருவகையில் இது இந்தியாவுக்குக் கிடைத்த அடிதான். மாவோயிஸ்ட்கள் தலைமையில் ஆட்சி அமைவதை ஒருவித படபடப்புடன்தான் பார்க்கிறது இந்தியா. நேபாளத்தில் செல்வாக்கான கட்சியான மாதேஸி கட்சி, ஆரம்பத்தில் இந்தத் தேர்தலில் பங்கேற்க மறுத்து வந்தது. இதன் பின்னணியில் இந்திய உளவுத் துறை இருப்பதாகச் சொல்கிறார்கள். அரண்மனையிலிருந்து வெளியேறப்போகும் நேபாள மன்னரை இந்தியாவில் தங்கவைக்க இந்திய அரசு விரும்புவதாகச் சொல்கிறார்கள். அதை மாவோயிஸ்ட்கள் விரும்பவில்லை. இதுவரை சீனா வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், அது மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என்கிறார்கள். இந்தியா என்ன செய்யப்போகிறது என்று பார்க்கலாம்!”

”நேபாள மாவோயிஸ்ட்களின் இந்த வெற்றி, மற்ற ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு வழிகாட்டுமா?”

”நிச்சயமாக! 1983லிருந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் புலிகளால் இதுவரை அமைதியை எட்ட முடியவில்லை. காரணம், மாவோயிஸ்ட்களைப் போல நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை. விடுதலைப்புலிகள் இந்த முன்னுதாரணத்தைப் பரிசீலிக்கச் செய்ய வேண்டிய நேரம் இது!”

14-5-08

லக்ஷ்மணானந்தா கொலையை துப்பு துலக்கினார் குருசாமி! ஏப்ரல் 13, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், இந்துத்துவம், ஒரிசா, கந்தமால், பழங்குடிகள், பா.ஜ.க. வேட்பாளர், லக்ஷ்மணானந்தா கொலை.
Tags: , , ,
8 comments

kandhamal violence

ஒரிசாவில் இந்துத்துவம் - பின்னணி

ஒரிசாவின் கந்தமால் மாவட்டம் இந்துத்துவதீவிரவாதத்திற்கு உதாரணமாகும் சிறப்புத் தகுதி உடையது. காலங்காலமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டு வாழும் தலித்துகளும் பழங்குடிகளும் இம்மாவட்ட மக்கள். கிறித்துவ மிஷனரிகள் தலித், பழங்குடிகள் மத்தியில் பணியாற்றிவருகிறார்கள். விளைவாக மதமாற்றங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பழங்குடிகள் கிறித்துவர்களாக மாறும்போது பழங்குடிகளுக்குண்டான அரசாங்க உரிமைகள் அத்தனையும் கிடைக்கும் என்பதும் தலித்துகள் கிறித்துவர்களாக மாறும் தலித்துகளுக்குரிய உரிமைகள் இல்லை, அதனால் மிஷனரிகள் பிரத்யேக உரிமைகளை தலித்துகளுக்குப் பெற்றுத்தர முயற்சித்தார்கள் என்பதும் இங்கு தலித்-பழங்குடிகளிடையே புகைச்சல் ஏற்பட்டதன் பின்னணி. இதை ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பா..க போன்ற இந்துத்துவ சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. இந்த புகைச்சலை ஊதிப்பெரிதாக்கிள எரிய விட்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தன். 1994 முதல் தலித்-பழங்குடி மோதல் கிறித்துவர்கள்-இந்துக்கள் இடையேயான மோதலாக உருவெடுத்தது. விஷ்வ ஹிந்து பரிஷத்,ஆஸ்ரமங்கள் என்ற பெயரில் கந்தாஸ் பழங்குடி இன மக்களை வன்முறையாளர்களாக இந்துத்துவ ரவடிகளாக மாற்றத் தொடங்கியது. இதில் முக்கியமானவர் லக்ஷ்மாணனந்தா சாமியார் 1960களிலே கர சேவை செய்வதற்காக கந்தமால் மாவட்டத்தில் ஆசிரமம் அமைத்தவர். கிறித்துவத்துக்கு மாறும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பழங்குடி மக்களை இந்துத்துவ விஷத்தை ஊட்டி ஏவி விட்டுக்கொண்டிருந்தவர். கிறித்துவதுக்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களை தாய்மதத்திற்கு திருப்புவதுதான் பல பத்தாண்டுகளாக இவர் செய்து வந்த குறிப்பிடத்தகுந்த மற்றொரு வேலை!

கிறிஸ்துமசுக்கு முன் தினமான டிசம்பர் 24, 2007ல் சதாரணமாக இருதரப்பினருக்கிடையே ஆரம்பித்த வாய்ச்சண்டை கிறித்துவ தலித்துகளுக்கு எதிராக பெரும் கலவரமாக வெடித்தன் பின்னணியில் லக்ஷ்மணானந்தா சாமியார் இருந்ததாக கைகாட்டுகிறார்கள். சர்ச்சுகளுக்கு முன்பு தலித் கிறித்துவர்கள் உயிரேடு கொலுத்தப்பட்டது, கிராமம் கிராமமாக கிறித்துவர்களின் வீடுகள்,இருந்த சுவடே தெரியாமல் அடித்து நொறுக்கப்பட்டது, குழந்தை,பெண்கள் உள்பட பல கிறித்துவர்கள் தேடிக் கொல்லப்பட்டது என வன்முறைகள் இந்துத்துவதீவிரவாதிகளால் திட்டமிட்டு கட்டவிழ்க்கப்பட்டன. (தலையில் காவித்துணி கட்டி, இரண்டு கைகளும் வாள் ஏந்தி விண்ணை அதிரவைக்கும்படி கூவிக்கொண்டு வன்முறையை காட்டிய ஒரு காவித்தொண்டரின் புகைப்படம் அத்தனை நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வந்தது நினைவிருக்கலாம்!) பா..க ஆதரவோடு ஆட்சியை அலங்கரித்துக்கொண்டிருந்த நவீன் பட்நாயக் அரசு வன்முறையை தடுத்து நிறுத்தும் நோக்கில் எதுவும் செய்யவில்லை, கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. அந்த தாக்குதலின் போது சேதமான வீடுகள்கூட இன்னும் அங்கே சீரமைக்கப்படவில்லை.

 லக்ஷ்மணானந்தா கொலையை துப்பு துலக்கினார் குருசாமி!

கடந்த வாரம் என்னுடைய தோழியை சந்திப்பதற்காக எத்திராஜ் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். தோழியை பார்க்க நேரமெடுத்ததில் எதிரே இருந்த ஷாப்பிங் காம்ளக்ஸ்சுக்குள் நுழைந்து பராக்கு பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெராக்ஸ் காப்பிகள் கண்ணில் பட்டன. ‘லக்ஷ்மணானந்த படுகொலை - யார் கொலையாளி?’ தலைப்பில் எஸ்.குருமூர்த்தி துக்ளத் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் நகல்கள் அவை. அந்தக்கடைக்காரர் காவித்தொண்டர் போலும் இலவச விநியோகம் செய்துகொண்டிருந்தார்.

ஆகஸ்ட் 2008ல் லக்ஷ்மணானந்தா என்ற விஷ்வ ஹிந்து பரிஷத் சாமியார் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை ஆராய்ந்து எழுதியிருக்கிறார் குருசாமி. கட்டுரையின் சாரம் லக்ஷ்மணானந்தா, ஒரிசாவில் ஆற்றிய தொண்டுகள், அப்பாவியான அவரை கிறித்துவ தீவிரவாத அமைப்புகளும் மாவோயிஸ்டுகளும் சேர்ந்து தீர்த்துக்கட்டினர் என்பதே. அவர் துணைக்கு அழைத்திருந்தது ஒரிசா முன்னாள் டி.ஜி.பி. அசோக் சாகு என்பவரை.

” ‘இந்த(கந்தமால்) தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் புதிதாக மதம்மாறிய கிறிஸ்தவர்கள்என்று ஒரிஸ்ஸாவின் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அசோக் சாகு என்பவர் தன்னுடைய கட்டுரையில் எழுதியிருக்கிறார்என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டு..

“மலைவாழ் மக்களிடையே நடக்கும் மத மாற்றங்கள் நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்களில் கிறித்துவ தீவிரவாதமாகவும் பயங்கரவாதமாகவும் மாறி பிரிவினை சக்திகளை தூண்டி விட்டிருக்கிறது என்கிறார் அசோக் சாகுஎன்று தன்னுடைய துப்பு துலக்கலுக்கு ஆதாரம் காட்டுகிறார் குருசாமி. வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் தழைக்க நிதர்சனமான காரணங்களான அரசாங்க புறக்கணிப்பும் தொடரும் வறுமையும் வேலையின்மையும் வசதியாக மூடி மறைக்கப்பட்டு, கிறித்துவர்களாக மாறியதே காரணமென கண்டுபிடித்துச் சொல்கிறது காவிப்படை. அந்த காரணத்தை ஒரிசாவுக்கும் பொறுத்தப்பார்க்கிறது. இந்த காரணத்தை கண்டுபிடித்தமைக்காக குருசாமி சிபாரிசு செய்தாரோ என்னவோ.. அதே அசோக் சாகுதான், கந்தமால் தொகுதி பா... வேட்பாளர்.

 

sadhu violence

வேட்பாளரைக் காணவில்லை!

இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு பா..கவில் தனித்த இடம் உண்டு. நான்கு சிறுபான்மையினரை வெட்டிக்கொன்றால் அல்லது 40 சிறுபான்மையினர் வீடுகள் நாசமா போகக்காரணமாக இருந்தால் இந்தா புடி எம்.பி சீட்டு என்று வெளியே சொல்லப்படாத சட்டம் இருக்கும்போல. போன மாதம்தான் குஜராத் கலவரத்தில் தேடப்பட்டு வந்த மோடி அமைச்சரவையின் உயர் கல்வித்துறை அமைச்சர் போலீசில் சரணடைந்தார். இப்போது கந்தமால் தொகுதி வேட்பாளர் அசோக் சாகுவைத் தேடுகிறது மாநில போலீஸ். எம்.பி ஆகி அமைச்சர் ஆவதற்குள் விதி விளையாடிவிட்டது. முன்னாள் விஷ்வ ஹிந்து தொண்டரும் ஐபிஎஸ் படித்தவருமான அசோக் சாகு, ஒரிசாவின் குருசாமி! தேடித்தேடி கிறித்துவபயங்கரவாதம், ‘முஸ்லிம்தீவிரவாதம் என்றெல்லாம் கட்டுரை எழுதுவார். (சங்க் பரிவார் இணைய தளத்தில் இவருடைய கட்டுரைகள் படிக்கக் கிடைக்கும்) எழுதுவதோடு, காவித்தொண்டாற்றுவதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். எம்.பி.சீட்டுக்கு ஆசைப்பட்டு தேர்தல் களத்தில் இறங்கிவிட்டார். போதாத காலம்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவர் பேசிய எழுச்சியூட்டும் பேச்சு‘(‘லக்ஷ்மணானந்தா சாமிகளை கொன்றது யார்? கொலை செய்தவனுக்குத் தெரியுமா இதற்கு பயங்கரமான பின்விளைவுகள் ஏற்படும் என்று?’) தேர்தல் ஆணைய விதிகளின்படி சர்ச்சைக்குரிய பேச்சாகிவிட்டது. மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய காவல்துறை காத்திருக்க அப்ஸ்கான்ட் ஆகிவிட்டார் அசோக் சாகு!

இப்படிப்பட்ட மதிப்பிற்குரியவர் எழுதிய கட்டுரைகளைத் தோண்டித்துருவி ஆராய்ந்து கந்தமால் மக்களின் ரட்சகர்களாக காவித்தொண்டர்களை முன்னிறுத்த கட்டுரை எழுதியிருக்கிறார் குருசாமி. அப்பட்டமான மத படுகொலைகளுக்குப் பின்னணியில் இருக்கும் உண்மையை மூடிமறைக்கப் பார்க்கிறது காவித்துணி. இப்போதைக்கு அது கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது!

“பெண்கள் சுயஉதவிக்குழு பணம் வட்டித்தொழில் செய்யத்தான் பயன்படுகிறது!” மார்ச் 30, 2009

Posted by மு.வி.நந்தினி in அண்ணி, அரசியல், இடஒதுக்கீடு, சுய உதவிக்குழு, திருநங்கைகள், தே.மு.தி.க, நரிக்குறவர் இனப் பெண்கள், பழங்குடி, பழங்குடிகள், பிரேமலதா விஜயகாந்த், பெண்கள், விருத்தாசலம் தொகுதி, ஸ்டாலின்.
6 comments
premalatha-vijaykant1

அரசியல்வாதிகளுடன் பேசுவதே ஒருவகையில் காமெடியான அனுபவம்தான். நிசர்சனத்தை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தபோதும்,அதை மறைத்து வெளி அலங்காரம் பூசிக்கொண்டு நடிப்பில் கைத்தேர்ந்தவர்கள். சில சமயம் அவர்களை அறியாமலே உண்மையான முகத்தைக் காட்டிவிடுவார்கள். பிரேமலதாவும் நடித்தார். வெகுஜன இதழ்களில் எழுதும் அந்த நடிப்பையும் உண்மையென சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனாலும் மற்ற அரசியல்வாதிகள் செய்யும் அரசியலைவிட, தேமுதிக-வின் அரசியல் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
ஒரு வருடத்திற்கு முன் பிரேமலதாவுடன் நடந்த சந்திப்பு. நிறைய பேசினார். நிறைய எழுதியதை உதவி ஆசிரியர் எடிட் செய்யப்பட்டு வெளியானது இந்த பேட்டி. அவர் பேசிய ஒரு முக்கியமான விஷயம் பெண்கள் சுயஉதவிக்குழுக்கள் பற்றியது. பெண்களின் சுய முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்டது என்று சொல்லிக்கொண்டு அரசியல்வாதிகள் பெண்களை வட்டித்தொழிலுக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். இதுகுறித்து நிறையவே பேச வேண்டியிருக்கிறது… தேர்தல் அரசியல் சூடு பிடித்திருக்கும் வேளையில் தேமுதிக-வின் அரசியல் நிலைப்பாட்டை கணிக்கும் ஆர்வத்தோடு பிரேமலதா விஜயகாந்தின் பேட்டியை மறுபிரசுரம் செய்கிறேன். நண்பர்களின் கருத்துக்களை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.

பிரேமலதா விஜயகாந்த்சமீபத்தில், திருச்சியில் நடந்த தே.மு.தி.. மகளிர் மாநாட்டை முன்னின்று நடத்தியதிலிருந்து, அரசியல் வட்டாரத்தில்ஹாட் டாப்பிக்ஆகியிருக்கிறார். கடைசி கேள்வி வரை எந்தவிதப் பதற்றமோ முகச்சுளிப்போ இல்லாமல், பக்குவப்பட்ட ஓர் அரசியல்வாதி போன்று மிகத் தெளிவாகவும் நிதானமாகவும் பதில் சொல்கிறார்.

”எப்படி இருந்தது மகளிர் மாநாடு?”

”சூப்பர் ஹிட்! மாநாடு அறிவித்து இருபதே நாட்களில் கிட்டத்தட்ட 7 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு வரலாறுபடைத்து இருக்கிறார்கள். இதற்கு முன் வேறு எந்தக் கட்சியிலும் இவ்வளவு பெண்கள் ஒரே இடத்தில் கூடியது இல்லை. பணம் தரவில்லை; பிரியாணி போடவில்லை. ‘குடும்பத்தோடு கலந்துக்கணும்’ என்று கேப்டன் சொன்ன வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்து, கூட்டத்துக்கு வந்து கலந்துகொண்டு தங்களுடைய உண்மையான பாசத்தை நிரூபித்துவிட்டார்கள் எங்கள் பெண்கள்!”

”உங்களை முன்னிலைப்படுத்துவதற்காகத்தான் இந்த மகளிர் மாநாடு நடத்தப்பட்டதா?”

”எந்தக் கட்சியிலும் இல்லாத பல பாஸிட்டிவான விஷயங்கள் எங்கள் கட்சியில் இருக்கின்றன. அதையெல்லாம் பார்க்கமறுக்கிறவர்கள்தான் ‘மனைவி, மச்சினன்’ என்று தேவை இல்லாத விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்த லில் கேப்டன் நின்ற தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே என் சகோதரர் நின்றார். மற்ற அனைத்துத் தொகுதிகளும் கேப்டனுக்கு ரசிகர்களாக இருந்து கட்சியில் இணைந்தவர்களுக்கும், புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. அவர்கள் யாரும் ரத்த உறவு உள்ளவர்கள் இல்லை.

மாநாடு அறிவிப்பு செய்தபோது, ‘பிரேமலதாவுக்குக் கட்சியில் முக்கியமான பதவி தரப்போகிறார்கள். அதை அறிவிக்கத்தான் இந்த மாநாடுஎன்றார்கள். இதோ, மாநாடு நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இதுவரை எனக்கு எந்தப் பதவியும் கொடுக்கப்படவில்லை. நான் தே.மு.தி.கவின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே! தலைவரின் மனைவி என்ற வகையில் என்னை மகளிர் மாநாட்டுக்குத் தலைமை ஏற்க வைத்தார்கள். அவ்வளவுதான்!

கட்சிப் பதவிகளுக்கு வரும் எண்ணமோ, தேர்தலில் போட்டியிடும் ஆர்வமோ எனக்கு இல்லை. இனிமேலும் வரப்போவது இல்லை. புரட்சிக்கலைஞரின் மனைவி என்பதே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய மரியாதை. தொண்டர்கள் என்னை அன்போடுஅண்ணிஎன்று அழைப்பதே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பட்டம்!”

”சமீபகாலமாக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், சுய உதவிக் குழு பெண்களுக்கு நிறைய நலத் திட்டங்கள் வழங்குவதைப் பார்த்துதான், பெண்களை ஈர்க்கும் வகையில் உங்கள் மகளிர் மாநாட்டிலும் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறதே?”

”எங்கள் தலைவர் பிறரைப் பார்த்து உதவி செய்யக்கூடியவர் அல்ல; உதவி செய்வது என்பது அவருடைய பிறவிக் குணம். நடிக்க வந்து, இந்த 30 வருடங்களாக ஏழை, எளியவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் மூலமாக நிறைய உதவிகள் செய்துகொண்டு இருக்கிறார். அவருடைய ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு 50 ஆயிரம் கொடுத்து வருகிறார். கிட்டத்தட்ட 15 வருடங்களாக, ஜானகி அம்மாள் உயிருடன் இருந்தபோதிலிருந்தே இதைச் செய்து வருகிறார். ஆனால், எம்.ஜி.ஆரைச் சொந்தம் கொண்டாடுபவர்களுக்கு இப்போதுதான் உதவி செய்ய மனசு வந்திருக்கிறது! அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், ஏதோ தாங்கள்தான் பெண்கள் சுய உதவிக் குழுக்களை எல்லாம் வளர்த்துவிட்டதாக மார்தட்டிக்கொள்வார்கள். உண்மையில், சுய உதவிக் குழுக்களில் என்ன நடக்கிறது என்பது பற்றி யாருக்கும் அக்கறை கிடையாது. பல கிராமங்களில் உள்ள பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு, கிடைக்கும் பணத்தை வைத்து என்ன பொருளைத் தயாரிப்பது, அதை எப்படி விற்பது என்று எதுவுமே தெரிய வில்லை. கிடைத்த பணத்தை வட்டிக்கு விடுவதுதான் நடக்கிறது. சுய உதவிக் குழுக்களில் உள்ள பல பெண்கள் இதை என்னிடமே தெரிவித்தார்கள். இந்த விஷயங்கள் எங்கள் காதுக்கு வந்த பிறகுதான், இவர்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதன் முதல் கட்டம்தான், தலைவர் தன் சொந்தப் பணத்திலிருந்து 50 லட்ச ரூபாயை சுய உதவிக் குழுப் பெண்களுக்கு வழங்கியது. விருத்தாசலம் தொகுதியில் எம்.எல்.ஏ. நிதி முழுவதையும் பயன்படுத்தியது போக, தன் சொந்தப் பணத்தில் இலவச கம்ப்யூட்டர் மையங்களையும், தண்ணீர் டேங்க்குகளையும் கட்டிக் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர். அரசுப் பணத்தை எடுத்து யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், தன் சொந்தப் பணத்தை எடுத்துக்கொடுக்கும் மனசு எத்தனை பேருக்கு இருக்கிறது? மக்களுக்கு யார் நல்லது செய்தாலும், அதை எங்கள் தலைவரும் எங்கள் கட்சியும் நிச்சயம் பாராட்டுவோம். ஆனால், அரசு திட்டங்கள் எல்லாம் இங்கே அடிக்கல் நாட்டு விழாவோடு முடிந்துவிடுகின்றனவே?”

”பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடே இன்னும் எட்டாக் கனியாக இருக்கும்போது, உங்கள் தலைவரோ ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 50 சதவிகித இடஒதுக்கீடு தருவோம்’ என்கி றார். இது சாத்தியமா?”

”கட்சி ஆரம்பித்து நடந்த முதல் தேர்தலிலேயே 33 சதவிகித இடஒதுக்கீட்டைப் பெண்களுக்குக் கொடுத்து, வேட்பாளர்களாக நிறுத்தியது எங்கள் கட்சி மட்டும்தான்! பெண்களுக்குத் திறமை போதவில்லை என்று சொல்லப்படுவதால்தானே 33 சதவிகித இடஒதுக்கீடு இன்னும் கிடைக்காமல் இருக்கிறது! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யப்போகும் முதல் பணியே எல்லோருக்கும் தரமான கல்வி கிடைக்கச் செய்வதுதான். கல்வி கிடைத்தால் திறமை தானாக வந்துவிடும். அப்போது 33 சதவிகிதம் மட்டுமல்ல, 50 சதவிகிதமும் சாத்தியம்தான்!”

”உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு வேறு என்னவெல்லாம் நலத் திட்டங்கள் கொண்டுவருவீர்கள்?”

”மக்கள் தொகையில் பெண்கள், ஆண்களுக்குச் சமமாக இருக்கிறார்கள். தேர்தலில் ஆண்களைவிட அதிக அளவில் வாக்களிக்கிறார்கள். ஆனால், பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள்கூடத் தரப்படுவது இல்லை. வீடு, அலுவலகம் என்று எல்லா இடங்களிலும் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள் பெண்கள். தேர்தலில் மட்டுமல்லாது, மற்ற எல்லாத் துறைகளிலுமே பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொண்டுவருவோம். தங்கள் காலில் நிற்க ஆரம்பித்தாலே, தடைகளை எதிர்கொள்ளும் பலம் பெண்களுக்கு வந்துவிடும். அடுத்து, மிக முக்கியமாகத் தீர்க்க வேண்டிய பிரச்னை வரதட்சணைக் கொடுமை! வரதட்சணை வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டால்தான், எந்த ஆணும் எங்கள் கட்சியில் சேர முடியும். எங்கள் தலைவரும் வரதட்சணை வாங்கக்கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, வரதட்சணை என்பதே இல்லாதபடிக்குக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவருவோம். இதுவரை கண்டுகொள்ளப்படாத பழங்குடி, நரிக்குறவர் இனப் பெண்கள், திருநங்கைகள் என எல்லோரையும் உயர்த்தும் திட்டங்களைச் செயல்படுத்துவோம்!”

”பொறியியல் கல்லூரியை நிர்வகிக்கிறீர்கள்; தவறாமல் கட்சிக் கூட்டங்க ளுக்குச் செல்கிறீர்கள்; குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும்இருக்கிறது. எப்படிச் சமாளிக்கிறீர்கள்?”

”ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் கையாளக்கூடிய திறமை என்னைப் போல எல்லாப் பெண்களுக்குமே இருக்கிறது. நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டுப் பிரித்து வேலை செய்தால், இன்னும்கூட நிறையச் செய்ய முடியும்!”

26/03/08

சிங்களவர்களின் விருப்பம் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான்! மார்ச் 28, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், இலங்கை தமிழர், சிங்கள ராணுவம், சினிமா, போர்ச்சூழல், யாழ்ப்பாணம், விருது.
Tags:
3 comments

vithanageஉலக சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர் பிரசன்ன விதனாங்கே. போரின் ஆழமான பாதிப்புகளுக்கிடையே மனிதத்தைத் தேடும் இலங்கைப் படைப்பாளி. இவருடையடெத் ஆன் எ ஃபுல் மூன் டேசர்வதேச அளவில் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற படம். தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளுக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

”உங்களுடைய பின்னணி…”

”நான் கொழும்பு நகரத்தைச் சேர்ந்தவன். என் அப்பா தீவிர சினிமா ரசிகர். தமிழ், இந்தி, சிங்களம் என எல்லா மொழிப் படங்களுக்கும் என்னை அழைத்துச் செல்வார். இப்போது நான் இருக்கும் இடத்துக்கான தயாரிப்புகள் அத்தனை யும் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பமாகிவிட்டன. சினிமாவும் புத்தகங்களும் தனிமையில் எனக்கான கனவுலகத்தைத் திறந்துவைத்தன. சிறுவனாக இருந்தபோது நடிகனாக வேண்டும் என்றுதான் விரும்பினேன். வளர வளர… ‘பதேர் பாஞ்சாலி’ போன்ற படங்கள் பார்க்கக் கிடைத்த போது, என்னுடைய சிந்தனையின் தடம்மாறிவிட்டது. ‘எது நல்ல படம்’ என்ற புரிதல் கிடைத்தது. இலங்கையில் சினிமாவைக் கற்றுத் தர பள்ளிகள் கிடையாது. சினிமாவைப் பார்த்து, எனக்குநானே ஆசானாக இருந்து சினிமா எடுக்கக் கற்றுக் கொண்டேன். சினிமாவில் திரைக் கதாசிரியராக நுழைந்து, இயக்குநராக மாறினேன். 92ல்முதல் படம் ‘சிசிலா கினி கனி’ வந்தது. இப்போது ஆறாவது படமான ‘ஆகாச குசும்’ தயாராகிக்கொண்டு இருக்கிறது. சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகத் துறையில் சிறிது காலம் இருந்தேன். என் படங்களில் நல்ல நடிகர்களும், நல்ல நடிப்பும் வருவதற்கு நாடகத் துறை அனுபவம்தான் கை கொடுக்கிறது.”

”நீங்கள் ஒரு சிங்களராக இருந்தபோதும், ஆளும் சிங்கள அரசின் மீதான விமர்சனத்தைத் தயங்காமல் உங்கள் படங்களில் வைக்கிறீர்கள். இதற்குஅரசுத் தரப்பிலிருந்து ஏதும் அச்சுறுத்தல்கள் வரவில்லையா?”

”இருபத்தைந்து ஆண்டுகால போர்ச்சூழல் இலங்கையின் ஒவ்வொரு மனிதனையும் பாதித்திருக்கிறது. இலங்கையில் ஒவ்வொருவரும் தான் நேசித்த யாராவது ஒருவரைத் தொலைத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். போருக்குப் பின்னால் இருக்கக்கூடியஉண்மை யைச் சொல்லும்போது கசப்பு இருக்கத்தான் செய்யும். நான் உணர்ந்த உண்மையை என் படங்களில் சொல்ல விரும்புகிறேன். ‘டெத் ஆன் எ ஃபுல் மூன் டே’ படத்துக்கு அரசு தடை விதித்தது. நான் உயர்நீதிமன்றம் வரை சென்று போராடி திரையிட அனுமதி வாங்கினேன். ‘நீ அவன் ஆள்’ போன்ற முத்திரையும் குத்தினார்கள். ஒரு படைப்பாளி என்ற வகையில் இதை எதிர்கொள்வதும் என்னுடைய பணிதான்!”

”உங்கள் படங்கள் மக்களிடம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?”

”வளரும் படைப்பாளியாக இருந்தபோது விருதுகளைப் பெரிய அங்கீகாரமாக நினைத்த துண்டு. ‘டெத் ஆன் எ ஃபுல்மூன் டே’ சிறப்பு அனுமதியோடு யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்டது. சிங்கள ராணுவத்தில் பணியாற்றி, போரில் பலியான ஒரு ராணுவ வீரன்… அவன் இறந்துவிட்டதை அறிந்தும் அவன் வருவான் என காத்திருக்கும் ஒரு வயோதிகத் தந்தை… இதன் பின்னணியில் போரின் விளைவுகளைப் பேசும் படம். தமிழ் இளைஞர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அவர்களுடைய வாழ்த்துக்களை நெகிழ்ச்சியோடு வெளிப்படுத்தி இருந்தார்கள். பிரித்துவைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் உள்ளுக்குள் உறைந்துபோன மனிதத்தைத் தோண்டி எடுக்கும் வேலையை ஒரு படைப்பு செய்ய வேண்டும். அப்படியான படைப்புகளுக்குத்தான் உள்ளத்தில் இருந்து பாராட்டுக்கள் வரும்! அது என் படங்களுக்குக் கிடைக்கிறபோது நான் முழுமையான படைப்பாளியாகிறேன்.”

”இலங்கையில் தற்போதுள்ள நிலைமை என்ன? தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் நடக்கும் உரிமைப் போரின் முடிவுக்கு, ஒரு சிங்களராக நீங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன?”

”இந்தியாவில் பணவீக்கம் 11 சதவிகிதமாக இருக்கிறது என்கி றார்கள். ஆனால், இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்பே பண வீக்கம் 20 சதவிகிதத்தைத்தாண்டி விட்டது. அத்தியாவசியப் பொருட் களின் விலை பத்து மடங்கு விலையேற்றம்செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஒரு நிம்மதியான, அமைதியான சூழலுக்கு மக்கள் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். சிங்களவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறார்கள். பிரிட்டிஷ்காரர்கள் தங்களுடைய சுயநலத்துக்கு நம்மைப் பிரித்து ஆண்டார்கள். அதையே ஏன் நாமும் கடைப்பிடிக்க வேண்டும்? எல்லோருடைய வாழ்க்கையிலும் போரின் பாதிப்புகள் நிறையத் தழும்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. ஒரு குடிமகனாக என்னுடைய கருத்தெல்லாம்… அமைதியை அமைதியான முறையில்தான் கொண்டு வர வேண்டும்என்பது தான்!”

ஆனந்த விகடன் (09-07-08)

பின் குறிப்பு : பிரசன்ன விதானங்கே குறித்து ஆனந்த விகடனில் வந்த உலக சினிமா தொடரில் படித்தபோது பிரமிப்பும் மரியாதையும் உண்டானது. அவர் அடிக்கடி சென்னை வருகிறார் என்ற தகவலின் அடிப்படையில் ரொம்ப காலம் யாரைப் பிடித்தால் அவரை சந்திக்க முடியும் என்று தேடிக்கொண்டிருந்தேன். ஒருநாள் எதேச்சையாக அஜயன் பாலாவிடம் இதை சொல்லப்போக,எழுத்தாளர் விஸ்வாமித்திரன், பிரசன்னவிடம் இணை இயக்குநராக இருக்கும் விஷயத்தை சொன்னார். உடனே விஸ்வாமித்திரனை கைபேசியில் பிடித்தேன். 3 மாதங்களுக்கு பிறகுதான் அவர் சென்னை வரவிருக்கிறார் என்றார் விஸ்வாமித்திரன். 3 மாதங்கள் முடிந்த நிலையில் மீண்டும் அவரிடம் பேசினேன். இங்குதான் இருக்கிறார் எனறார். மகிழ்ச்சிஒரு சந்திப்புக்கு உதவி செய்யுங்கள் என்றேன். சரி என்றார். நினைவுபடுத்த மீண்டும் அழைத்தேன். அடுத்த வாரம் என்றார். வாரம் கழிந்த நிலையில் மீண்டும் அழைத்தேன். வேலை பளு என்றார்இப்படியாக சில மாதங்கள் கழிந்த நிலையில் ஒரு நாள் விஸ்வாமித்திரனிடம் சண்டையே போட்டுவிட்டேன். பாவம் பயந்து விட்டாரோ என்னவோ பிரசன்னவின் முந்தைய படங்களைப்பார்க்கச் சொல்லி, சந்திக்கவும் ஏற்பாடு செய்துகொடுத்தார்.
பிரசன்னவின் படங்களைப் போல அவருடைய சுபாவமும். வெளிபூச்சு இல்லாத மனிதராக பழகினார். என்னுடைய கேள்விகளுக்கு மனதிலிருந்து பேசினார். இலங்கை அரசிமிடருந்து அவருக்கு வந்துகொண்டிருந்த மிரட்டல்கள் காரணமாக அரசியல் பேசுவதை தவிர்த்தார். அப்படியிருந்தும் அவருடைய பேட்டி, அமைதியை விரும்பும் ஒரு மனிதநேயவாதியின் எதிர்ப்பார்ப்பை கூறுவதாகவே அமைந்திருந்தது. அரசியல் பேசியது. இன்றை சூழலுக்கு இது மிகவும் தேவை என்பதால் பிரசன்னவின் பேட்டியை மீள் பிரசுரம் செய்திருக்கிறேன்.

பெண் இருப்பு எப்போதும் சூன்யப் புள்ளியில்… மார்ச் 23, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், ஆணாதிக்கம், குடும்பம், சமூகம், பாலியல், பெண்கள்.
5 comments

பகுதி-1

Nawal El Saadawiருவரின் ஒழுக்க மீறலை அல்லது ஒழுக்க சீலத்தை சுட்டும்போது, அவர் சார்ந்துள்ள மதத்தோடு பொறுத்தி பேசுவது இயல்பான விஷயமாக இங்கே இருக்கிறது. ‘இஸ்லாமியதீவிரவாதி என்ற சொல்லாடலும் பார்ப்பான் உயர்ந்தவன்என்கிற எண்ணமும் இதற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். உயர்ந்த நல்லோழுக்கங்களையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் இன்னபிற நல்லனவற்றையும் வலியுறுத்துவதாக சொல்லப்படும் அனைத்து மதங்களைச் சேர்ந்த தீவிர பற்றாளர்களும்கூட அடிப்படையில் மனிதர்களே! மதங்களால் புனிதர்களாகப்படும் எல்லோருக்குமே புனிதத்திற்கு எதிரிடையான பக்கமும் இருக்கிறது என்பதற்கு வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் ஏராளமான உதாரணங்களை நாம் பார்த்துவருகிறோம். மதத்தால் புனிதராக்கப்பட்டவருக்குள் எப்படி சராசரியான மனித இயல்புகள் இருக்கிறதோ, அதுபோலவே இஸ்லாம், கிறித்துவம், இந்து என உலக மதங்கள் அத்தனையிலும் பெண் ஒடுக்குதலும் அவள் இரண்டாம் பாலினமாகக் கருதப்படுவதும் இருக்கிறது.

கருணையும் குரூரமும் மனித இயல்பானால், பெண் மீதான ஒடுக்குதல் என்பது ஆணாதிக்கச் சிந்தனை, இச்சமூகத்திற்கு இயல்பென செயற்கையாக உருவாக்கிக் கொடுத்திருக்கும் கொடை. அது வழிவழியாக இச்சமூகத்ததில் பெண் ஒடுக்கப்பட வேண்டியவள் என்பதை ஆணுக்கும் ஒடுக்கப்பட பிறந்தவர்கள் என்பதை பெண்ணுக்கும் போதிக்கிறது. இந்தியாவில், ஈரானில், அமெரிக்காவில் எங்கு பிறந்தாலும் காலச்சாரங்களும் நாடுகளும் வேறுபட்டிருந்தாலும் பெண், ஒடுக்குதலுக்கு ஆளாக வேண்டியவள் தான்! இது குறித்து பெண்ணிய சிந்தனையோடு கூடிய ஆய்வுகளும் கட்டுரைகளும் இலக்கிய பதிவுகளும் உலகம் முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் எகிப்து பெண்ணிய எழுத்தாளரான நவ்வல் எல் சதாவியின் எழுத்துகளை மதிப்பு மிக்க ஆவணங்களாக கருத முடியும்.

நீண்ட மாதங்களுக்கு முன் ஒரு இலக்கிய பத்திரிகையில் நவ்வல் எல் சதாவி குறித்த கட்டுரையை வாசித்தபோது, அவர் மீது ஒருவகை ஈர்ப்பு உண்டானது. நவ்வல் எல் சதாவி குறித்த மேலதிக விவரங்களை அவருடைய இணைய தளத்தில் படித்து அறிந்தேன். சில கட்டுரைகளையும் அங்கே படிக்க முடிந்தது. கட்டுரை, சிறுகதை, நாவல் என பன்முகத் தன்மையோடு ஏராளமாக எழுதியிருக்கும் அவருடைய எழுத்துகளைப் படிக்க ஆர்வம் மேலிட்டது. குறிப்பாக Women at point zero நாவலை படிக்க விரும்பினேன். புத்தகக் கடைகளில் விசாரித்தபோது அப்போதைக்கு இருப்பில் இல்லை என்று கூறி, வேண்டுமானால் தருவித்து தருவதாக பதில் வந்தது. அழைப்பு எண்ணை தந்துவிட்டு வந்த நேரம், எண்ணையே மாற்ற வேண்டியதாகிவிட்டது. நேரில் சென்றும் விசாரிக்கவில்லை. அதோடு வேறுவேறு வேலைகளில் கவனம் கொள்ள எதேச்சையாக தி.நகர் புக் லேண்டில் Women at point zero-ன் தமிழ் பெயர்ப்பாக சூன்யப் புள்ளியில் பெண்நாவலை புத்தகமாகப் பார்த்தேன். ஆங்கிலத்தில் படித்திருந்தால் ஒரே மூச்சில் படித்திருக்க முடியுமா என்று தெரியாது. தமிழில் கிடைத்ததால் விரைந்து முடித்தேன். லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு இது. மூல மொழியில் படிக்காததால் மொழிபெயர்ப்பு குறித்து பேசுவது சரியாக இருக்காது.

1974 ல் நவ்வல் எல் சதாவி அரசியல் கைதியாக சிறையில் இருந்தபோது அங்கு சந்தித்த ஃபிர்தவுஸ் என்ற பெண்ணின் வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. நாவல் குறித்து பேசுவதற்கு முன் நவ்வல் எல் சதாவி குறித்து சில குறிப்புகளைத் தர விரும்புகிறேன். நவ்வல் எல் சதாவியின் அப்பா சுதந்திரப் போராட்ட வீரர். கல்வி அமைச்சகத்தில் பணியாற்றியவர். பெண் இரண்டாம் பட்சமாக ஒதுக்கப்படுவதை தன் குடும்பத்திலிருந்தே ஆரம்பிக்கும் அனுபவத்தின் வாயிலாக உணர்கிறார் நவ்வால். தன் சகோதரனைவிட தான் படிப்பிலும் இன்னபிற விஷயங்களிலும் முதன்மையானவராக இருந்தபோதும் சகோதரனுக்கு தன் குடும்பத்தினரிடம் கிடைக்கும் சலுகையும் அன்பும் (இந்த விஷயம் நம்முடைய குடும்பங்களுக்கு இப்போதும் பொருந்திப்போவதை கவனிக்க) இவருக்கு கிடைப்பதில்லை. அடிப்படையில் ஒரு பெண் எதிர்கொள்ளும் குடும்ப, சமூக பிரச்சினைகளை நவ்வால் எதிர்கொண்டபோதிலும் உளவியல் மருத்துவம் படிக்க வைக்கும் அளவுக்கு அவருடைய குடும்பத்தினர் கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

உளவியல் மருத்துவராக குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட பெண்களை சந்திக்கும்போது அவருக்குள் பெண்ணிய சிந்தனை கிளர்ந்து எழுந்துள்ளது, எழுதத் தொடங்கியிருக்கிறார். ஆய்வு நோக்கில் அவர் எழுதிய கட்டுரைகள், நாவல்கள் மத அடிப்படைவாதத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் அரசுகளை விமர்சிப்பதாகவும் இருந்த காரணத்தினால் அரசியல் கைதியாக ஒரு வருடம் சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கே எழுதவதற்கு மறுக்கப்படுகிறது. கழிப்பறையில் பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பரில் ஐப்ரோ பென்சிலைக் கொண்டு எழுதுகிறார். சிறையிலிருந்து விடுதலையான பின்பும் அடிப்படைவாதிகளிடமிருந்தும் அரசிடமிருந்தும் தொடர்ந்துகொண்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார் நவ்வால். அவருடைய எழுத்துப் பயணம் சற்றே அசுவாசத்தோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இலங்கை தமிழர் பிரச்சினையும் சுரணையற்ற மனிதர்களை உற்பத்தி செய்யும் கல்விக்கூடங்களும்! மார்ச் 5, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், இலங்கை தமிழர், கல்விக்கூடங்கள், குழந்தைகள், சமூகம், சுகிதா, தமிழ், தீட்சண்யா, மாறுவேடப்போட்டி.
Tags: ,
7 comments

20071112503903012க பத்திரிகையாளரும் என்னுடைய தோழியுமான சுகிதா,இரண்டு வாரங்களுக்கு முன் நண்பர்கள் எல்லோரையும் தன் மகள் தீட்சண்யாவின் பள்ளி ஆண்டுவிழாவைக் காண வருமாறு அழைத்திருந்தார். மழலையர் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் இரண்டரை வயது தீட்சண்யா மறுவேடப்போட்டியில் கலந்துகொள்ளப்போவதாகக் கூறி,நேரில் வந்து அவளை உற்சாகப்படுத்தும்படி சொல்லியிருந்தார். சுகிதா இது போன்ற போட்டிகளிலெல்லாம் விருப்பம் அற்றவர். மாறுவேடப்போட்டி என்று பெயரிருந்தாலும் கலந்துகொள்ளும் அனைத்து குழந்தைகளும் வெற்றிப்பெற்றவர்களாகவே கருதப்படுவர் என பள்ளியின் நிர்வாகத்தரப்பு உறுதியாகச் சொன்னதன் பேரில் தீட்சண்யாவின் பெயரை பதிவு செய்திருக்கிறார். மாறுவேடப்போட்டி என்றதும் தங்களுடைய குழந்தைகளை திருவள்ளுவர், விவேகானந்தர் போன்று வேடமிட்டு மழலைத் தத்துவங்களை உளற வைப்பதிலும் கடவுளர் வேடமிட்டு மத விஷத்தை பிஞ்சிலே ஆழப்பதிய வைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், சுகி ரொம்பே விலகி நின்று சிந்தித்து விட்டார். போர்ச்சூழல் குழந்தைகளை எவ்வகையில் பாதிக்கிறது என்பதை சக பெற்றோருக்கும் விழா பார்வையாளர்களுக்கும் உணர்த்த, தன் குழந்தையை இலங்கை போரில் பாதிக்கப்பட்ட குழந்தையைப்போன்று வேடமிடப்போவதாக எங்களிடன் சொல்லியிருந்தார். அவருடைய முயற்சிக்கு நேரில் வாழ்த்துக்கூற நண்பர்கள் கிளம்பினோம். சாலிக்கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆண்டுவிழா களைகட்டியிருந்தது. சரியாக நாங்கள் உள்ளே நுழைந்த நேரம் தீட்சண்யா மேடையை விட்டு இறங்கிக் கொண்டிருந்தார். எப்போதும் உற்சாகத்தோடு பார்த்து பழகிய சுகியின் முகத்தில் அன்றுதான் முதல்முறையாக சோர்வைக் கண்டேன். தீட்சண்யா மேடையேறியதைக் காணாவிட்டாலும் மற்ற குழந்தைகளின் மழலைப்பேச்சுக்களை சிறுது நேரம் கேட்டுக்கொண்டிருந்தோம். வழக்கம்போல ஓளவையார்,திருவள்ளுவர்,விவேகானந்தர்,முருகன்,சிவன்,கூடவே உலக அழகி வேடமிடப்பட்ட குழந்தைகள்…அதற்கு மேல் எங்களுக்கு பொறுமையில்லை. எல்லோருக்கும் பரிசு என்று சொல்லியிருந்த .பள்ளி நிர்வாகம் 6 குறளை ஒப்பித்த ஒரு குழுந்தைக்கு முதல் பரிசு என்று அறிவித்தது. அடுத்தடுத்த பரிசுகளும் இப்படியாக நீதிபோதனை,ஆன்மிக குப்பைகளை ஒப்பித்த குழந்தைகளுக்கு அறிவித்துக்கொண்டிருந்தபோது தோழியின் வீட்டுக்குப்போக நாங்கள் ஆட்டோ பிடித்துக்கொண்டிருந்தோம்.தோழியின் முக வாட்டத்திற்கான காரணமும் எங்களுக்கு புரிந்துபோனது.

நடந்ததை சொல்ல ஆரம்பித்தார் சுகி…விழா நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருந்த தொகுப்பாரிடம் இலங்கையில் நடக்கும் பிரச்சினை குறித்து இரண்டு வரி அறிமுகத்தை தமிழில் பேசுமாறு சொல்லியிருக்கிறார் தோழி. மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் அவர் ஆங்கிலத்திலேயே பேசியிருக்கிறார். நிர்வாகத் தரப்பில் கூறப்பட்ட காரணம் ,அடுத்து இலங்கை தமிழர் மீதான தாக்குதலை,குழந்தைகள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்று எழுதிக்கொண்டு போயிருந்த பதாகையை மேடையில் வைக்க அனுமதி மறுத்திருக்கிறது கல்விச் சான்றோர்கள் நிரம்பிய அந்த மேடை! இதுகுறித்து விழாவுக்கு வந்திருந்த “தமிழ்” பெற்றோர் எவருக்கும் எந்த புகாரும் இல்லை,வருத்தமுமில்லை. தோழி தனி ஒருவராக மன்றாடிவிட்டு எதுவும் நிகழாத சூழலில் குழந்தையோடு மேடையிலிருந்து இறங்கியிருக்கிறார்.

கல்விக்கூடங்கள் எனும் மூளை மழுங்கடிக்கப்பட்ட மனித உற்பத்தி சாலைகளில் இதுபோன்ற முற்போக்கான சிந்தனைகளுக்கு ஆதரவை எதிர்ப்பார்ப்பது நம் தவறுதான். ஒருபுறம் இலங்கை தமிழருக்காக இங்கிருந்து குரல்கொடுக்கும் தமிழர்களையும் இன்னொரு புறம் எங்கே எது நடந்தால் என்ன என் குழந்தை தங்கிலீஷ் படித்து அமெரிக்கா போனால் சரியென்று கிடக்கிற தமிழர்களையும் ஒருசேர பார்க்க முடிகிறது. இதில் யாரைக்குற்றம் சொல்லியும் பலனில்லை. ஏற்கனவே சமுதாயத்தில் ஊன்றப்பட்டு வேறோடியிருக்கிற ஒரு பிரச்சினைக்கு ஒருவரியில் தீர்ப்பு சொல்லிவி்ட முடியாது. ஆனாலும் குறைந்தபட்ச சமூக சிந்தனைகூட நம் கல்விக்கூடங்களுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது என்கிற கேள்வியும் நம்முன் எழத்தான் செய்கிறது…

ஊடகப்பெண்களை சமையலறைக்கு துரத்தும் அராஜக ஆணாதிக்க கும்பல்! ஜனவரி 29, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், ஆணாதிக்கம், ஊடகப்பெண்கள், குடும்பம், சமூகம், பாலியல், பெண்கள்.
2 comments

சமீபத்தில் ஐந்தாண்டுகள் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவமுள்ள ஒரு பெண் பத்திரிகையாளர்,தன்னுடைய பணியினை ராஜினாமா செய்யும் பொருட்டு மும்முரமாக இருந்தார். இன்னொரு நிறுவனத்திலிருந்து தற்சமயம் பணியாற்றிக்கொண்டிருந்த நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாதங்களே கழிந்திருந்த நிலையில்,அவருடைய ராஜினாமா சக ஊழியர்கள் மத்தியில் துப்பறிவதற்கும் விவாதிப்பதற்கும் உரிய விஷயமாக இருந்தது.
“என்னுடைய வருங்கால கணவருக்கு நான் வேலைக்குப் போவது பிடிக்கவில்லை” என்று தன்னுடைய நிலையை அவர் கூறியபோது ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது என்னவோ உண்மைதான். அதற்கு பின்னணியில் இருக்கும் நிதர்சனத்தை உணர்ந்தபோது அவர் எடுத்த முடிவும் சரி என்று தோன்றியது. தீர்க்கமான சிந்தனையோடு செயல்பட்டவராக இல்லாதபோதும், நேர்மையானவராகவும் பணியில் அக்கறை காட்டுபவராகவும் இருந்த அவருடைய இருப்பு முக்கியமானதாகவே கருதமுடியும். அவர் பத்திரிகையாளராக தொடர்ந்து இயங்கியிருக்கும் வேளையில், காலம் அவரது சிந்தனையையும் செயலையும் கூர்த்தீட்டியிருக்கலாம்.
ஆனால் அவர் ஒரு பெண் என்பதாலேயே பணியிடங்களில் அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களும் நிலை குலையச் செய்த கிசுகிசுக்களும் அவரை திருமணத்தின் பெயரில் பத்திரிகை துறையிலிருந்தே வெளியேறும் முடிவை நோக்கி தள்ளியிருக்கின்றன. இன்று அவர் பத்திரிகை துறையிலிருந்தே ஒதுங்கிப்போய் விட்டார். இது ஏதோ தனிப்பட்ட ஒருவரைச் சார்ந்த நிகழ்வாக நினைத்து ஒதுக்கிவிட முடியாது. கனவுகளோடும் நம்பிக்கையோடும் ஊடகத்துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் பல பெண்கள் அவநம்பிக்கையோடு வெளியேறியதன் பின்னணியை விவாதத்திற்கு உட்படுத்துவதும் பதிவு செய்வதும் உடனடியாக செய்தாக வேண்டிய பணியாகும். பத்திரிகையாளராக ஐந்தாண்டு கால அனுபவத்திலும் தமிழ் ஊடகங்களில் சகபணியாளர்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான அவதூறுகளை அத்துமீறல்களை எழுதுவது மற்ற எல்லாவற்றையும்விட அவசியமானதாகவே கருதுகிறேன்.

ஒரு பெண் பத்திரிகையாளர் மாற்றுச் சிந்தனையும் அரசியல் ரீதியிலான புரிதலும் உள்ளவராக இருந்தாலும் தமிழ் ஊடகங்களில் சமையல் குறிப்பு எழுதுவதற்கும் நடிகைகளின் ஆடை,அணிகலங்களை சிலாகிப்பதற்கும்தான் பணிக்கப்படுவார். அதிகபட்சமாக அரசியல்வாதிகளின் மனைவிகளை பேட்டி காணும் வாய்ப்பு கிட்டலாம்! பெண்ணின் பணிகளாக ஆணாதிக்கத்தால் உருவான இச்சமூகம் ஆண்டாண்டு காலமாக சொல்லிவரும் சமையல், வீட்டப்பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றின் மெருகேற்றப்பட்ட வடிவங்கள் இவை. சமூகம் எப்படி இதையெல்லாம் மீறி வரக்கூடாது என்கிறதோ, அதையேதான் ஆணாதிக்க சிந்தனை பீடித்த ஊடகவாதிகளும் (அரசியல்-புலனாய்வு இதழ்களில் “பாதுகாப்பு” என்ற காரணம் காட்டி பெண்கள் அத்தகைய இதழ்களில் பணியாற்ற மறுக்கப்படுவதை இந்த பின்னணியில் வைத்துப்பார்க்க வேண்டும்) ஊடக பெண்களிடம் எதிர்ப்பார்க்கிறார்கள். இதை எதிர்க்கும் பெண் ஆசிரியர் குழுவால் திட்டமிட்டு ஒதுக்கப்படுவார். ஒருகட்டத்தில் மனஉளைச்சலுக்கு ஆளாகி பத்திரிகை துறையிலிருந்து ஒதுங்கிவிடுவார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் ஊட்டும்படியான மாற்றுச்சிந்தனையோடு ஒன்றிரண்டு கட்டுரைகளோடு காணாமல்போன பத்திரிகையாளர்கள் குடும்பம் என்னும் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போயிருப்பதை கண்கூடாகப்பார்க்க முடிகிறது.
இது ஒருபுறம் இருக்க சுயசிந்தனையும் ஊடகம் குறித்த புரிதலும் இல்லாத பெண்களுக்கு தமிழ் ஊடகங்களில் சிறப்பான வரவேற்பு கிடைப்பதையும் பார்க்க முடிகிறது. ஆண்களைப்போல சிந்திப்பதற்கும் ஆண்களின் ரசனைக்கேற்ப தங்களுடைய எழுத்தை வடிவமைத்துக்கொள்ளவும் இந்தப் பெண்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். சராசரி வாசகனும்கூட எழுதியவர் ஒருபால் விருப்பம் கொண்டவரோ என்று நினைக்கும் அளவுக்கு பெண் உடல் குறித்த கிளர்ச்சியூட்டும் வர்ணனைகள் வரும்படி அவர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள். தமிழ் மாத,வார,நாளிதழ்களைப் படிக்கும் எவருக்கும் இந்த முரண்பாடு தெளிவாகவே புரியும்.
குடும்பம், அரசியல் உள்ளிட்ட சமூகத்தின் மற்ற தளங்களில் பெண் எப்படி, ஆணின் சிந்தனைகளை உள்வாங்கி அதை செயல்படுத்தும் கருவியாக இருக்கிறாளோ அதைப்போலவே ஊடகப்பெண்ணும் செயல்படுகிறாள். அவளை அப்படியே வைத்திருப்பதில்தான் ஆணாதிக்கத்தின் இடம் தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. இப்படி சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட பெண்களே பாலியல் ரீதியிலான சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள். அறிவையும் உணர்வையும் அடிப்படையாகக் கொண்ட பணியில் உடல் முன்னிறுத்தப்படுகிறது. வழமையாக பெண்ணின் உடல் முன்னிறுத்தப்படும்போது கட்டமைக்கப்படும் அதிகாரம் இங்கேயும் நிகழ்கிறது. உடல் அதிகாரத்தை கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் ஆணின் செயல்பாடு ஒரு பெண்ணோடு நின்று விடுவதில்லை. அது ஒரு தொடர்கதை.

குறுஞ்செய்தியோடு ஆரம்பிக்கும்,பிறகு உடல் சமிக்ஞைகள், இரட்டை பொருள்தரும் பேச்சு, தான் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்று அதிகாரத்தை காட்டுவது எதற்கும் வளையவில்லை எனில் பிரச்சினை ஆரம்பிக்கும். அடிமையைவிட கேவலமாக நடத்துவார்கள், அல்லது அலுவலக மேசையைப்போல அசையாத பொருளாக வைத்திருப்பார்கள். வளைந்து கொடுத்தால் பதவி உயர்வுகளும் இன்னபிற அங்கீகாரங்களும் தேடிவரும். அதிகாரத்தை கை கொண்டவனின் வழி இதுவெனில் இயலாமையில் துடித்துக்கொண்டிருக்கும் அவனுக்கு கீழ உள்ளவர்களின் பணி சுற்றி உள்ள பெண்கள் குறித்து அவதூறுகள் சொல்வதும் கிசுகிசுக்களை புனைவதும்தான். ஊடகங்களில் தங்களை ப்ரோ பெமினிஸ்டு(Pro-Femenist)களாக காட்டிக்கொள்ளும் பலரது முழு நேர பணியே இதுதான்.
இத்தகைய சுரண்டலையும் அவதூறுகளையும் சகிக்க முடியாத எந்த பெண்ணும், அவள் அறிவு ரீதியாக பலமானவளாக இருந்தபோதும் அவளது முடிவு ஊடகத்தை விட்டு ஒதுங்குவதாகத்தான் இருக்கும். ஒதுங்குதலும் ஒதுக்குதலும் இயல்பாக நடந்தேறியபின் ஆணாதிக்கம் எக்காளமிட்டுச் சிரிக்கும்!

(“புரட்சிகர பெண்கள் விடுதலை மையம்” வெளியிடவிருக்கும் பெண்கள் தின சிறப்பிதழுக்காக எழுதிய கட்டுரையின் ஒருபகுதி )