jump to navigation

”திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை வரவேற்கிறேன்!” நவம்பர் 21, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், அலையன்ஸ் பிரான்சேஸ், இலங்கை தமிழர், கனிமொழி, குடும்பம், குட்டி ரேவதி, சமூகம், சாதி, சித்த மருத்துவர், சூரியகதிர், தமிழ், பெண்கள், லீனா மணிமேகலை.
Tags: , , , , , , ,
4 comments

 

photo : 'marakkanam' Bala

தமிழ் இலக்கியப் பரப்பில் அழுத்தமான பெண்ணிய கவிதைகளை எழுதி வருபவர் குட்டி ரேவதி! இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு ‘முலைகள்’ என பெயரிட்டதாலேயே பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானார். உள்ளடக்கம் காரணமாக அதே தொகுப்பு விமரிசகர்களால் பாராட்டவும்பட்டது. கவிதை, கட்டுரை என எழுத்து செயல்பாடுகளோடு பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து களஆய்வு செய்து ஆவணப்படுத்தியும் வருகிறார். சித்த மருத்துவர், புகைப்படக்காரர் என மேலும் பல முகங்கள் குட்டி ரேவதிக்கு…வெகுஜன பத்திரிகைகளில் இதுவரை பேசாத சில விஷயங்களை பேச வைக்க வேண்டும் என்ற முனைப்போடு குட்டி ரேவதியை அணுகியபோது ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டார். நன்பகல் வேளை ஒன்றில் சென்னை அலையன்ஸ் பிரான்சேஸ் வளாகத்தின் மர நிழல்களுக்கிடையே நடந்தது இந்தச் சந்திப்பு…

”படைப்பாளி என்பவர் சமூகத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறார்? பெண் கவிதைகள் மீதான விமரிசனம் இன்று எப்படி இருக்கிறது?”

எனக்குப் பிடிக்காததை இதுவரை வலிந்து செய்ததில்லை. தொலைதூரத்தில் தெரிகிற குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கிப் போக வேண்டும் என்ற திட்டமிடலும் இல்லை, எந்த அவசரமும் இல்லை. கவிதை எழுதுவது என் இயல்பு. கவிதையின் நீட்சியாக என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறேன். தடாகத்தில் தூக்கி எறியப்படுகிற கல்போல படைப்புகளைச் சமூகத்தின் முன் வைக்கிறோம். அதிர்வுகள் பெரிதாக இருக்கலாம், சிறியதாகவும் இருக்கலாம். ஆனால், சமீப காலமாக தமிழ் படைப்பாளிகளுக்கு அதிகாரத்தின் மீதான கவர்ச்சி அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக ஈழம் சார்ந்து படைப்பாளிகளின் அணுகுமுறை கேள்விக்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இங்கே போர் இல்லை. மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிறது. சவுகர்யமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமூகத்தைப் போல படைப்பாளிகளும் மந்தமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். பெரிய எழுத்தாளர்கள் என… என் வாயால் அவர்கள் பேரைக்கூட உச்சரிக்க விரும்பவில்லை – பெண் கவிதைகள் குறித்து இதுவரை அவர்கள் நேர்மையான அணுகுமுறையோடு விமரிசனம் செய்ததில்லை. இதை திட்டமிட்ட சதி என்றுகூட சொல்லலாம். தொடர்ந்து இப்படிப்பட்ட புறக்கணிப்பு நிகழும்போது, பின்னால் வரும் சந்ததிக்குப் பெண் கவிதை குறித்த வரலாறே தெரியாமல் போகலாம்!

”இலங்கை பிரச்சினையில் அரசியல்வாதிகளைப்போல இலக்கியவாதிகள் நடந்துகொண்டார்கள் என்கிற விமரிசனம் எழுந்துள்ளது. இதில் உங்களுடைய கருத்து என்ன?”

சமீபகாலமாக ஈழ வரலாறு குறித்து அத்தனை நூல்களையும் தேடிப்பிடித்து படித்து வருகிறேன். நமக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான பூகோள ரீதியான உறவுகள், சமூக, வரலாற்று, அரசியல் உறவுகள் நெகிழ்வைத் தருகின்றன. இப்படிப்பட்ட எந்த வகையான புரிதலும் இல்லாமல் ஆறேழு மாதங்களாக இலக்கியவாதிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், கவியரங்கங்கள் கேலிக்கூத்தாகத்தான் இருந்தன. தொலைக்காட்சியில் காட்டப்படுகிற கொலைகளைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்களாகத்தான் இவர்கள் நடந்துகொண்டார்கள். நம்முடைய தம்பியோ, அண்ணனோ காயப்பட்டிருந்தால் உடல், மனம் என சகலமும் துடித்திருக்குமே! அந்தத் துடிப்பு நமக்கு வந்திருக்க வேண்டாமா? இதைவிட அபத்தம், தமிழக அரசின் உலகத் தமிழ் மாநாடு குறித்த அறிவிப்பு. ஆயிரம் ஆயிரமாக சொந்த உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு தமிழுக்கு விழா எடுத்து என்னவாகப்போகிறது? மொழியின் புளகாங்கிதத்தை பேசவா? தமிழ் மக்கள் குறித்தோ, பண்பாடு, இலக்கியம் குறித்தோ எந்தவித அறிதலும் அரசுக்குக் கிடையாது. நவீன இலக்கியத்தின் ஏஜென்சி போல கனிமொழியைச் செயல்பட வைப்பதுதான் இலக்கியம் குறித்து அரசுக்கு இருக்கிற அதிகபட்ச அக்கறை. 80,90 வயதுகளைக் கடந்த தமிழ் அறிஞர்களை வைத்து நடத்தப்படுகிற உலகத் தமிழ் மாநாட்டால் என்ன நடந்துவிடப்போகிறது? பசுமை நிறைந்த நினைவுகளே என பாடச்சொல்லியா கேட்கப்போகிறோம்?! வரலாற்றில் எங்கும் நிகழ்ந்திராத வன்முறை ஈழத்தில் நடந்திருக்கிறது. முப்பத்தைந்து ஆண்டுகாலமும் இதுவெறும் அரசியல் பிரச்சினையாக பார்க்கப்பட்டதாலேயே இன்று ஒட்டுமொத்த தமிழர்களும் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் படுகொலைகளை நம்மால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். நம் எல்லோருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.

 ”ஓரினச் சேர்க்கையை குற்றம் என சொல்லும் இந்தியக் குற்றவியல் சட்டம் 377வது பிரிவை நீக்குவது குறித்து உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில் ஊடகங்களில் ஓரினச் சேர்க்கை குறித்து ஆரோக்கியமான விவாதம் எழுந்துள்ளது. கவிஞர் லீனா மணிமேகலை கூட தன்னுடைய ‘உலகின் முதல் அழகிய பெண்’ கவிதைத் தொகுப்பின் முன்னுரையில், தான் இருபால் விருப்பமுள்ளவர் என எழுதியுள்ளார். கட்டுப்பாடுகள் மிக்க இந்திய சமூகத்துக்குள் இத்தகைய வெளிப்படையான அறிவிப்புகள், விவாதங்கள் மாற்றங்களை ஏற்படுத்துமா?”

சட்டம் போட்ட பிறகுதான் ஊடகங்கள் ஒதுக்கப்பட்ட விஷயங்களைப் பேசவேண்டும் என்பதில்லை. அரசுக்குச் சொறிந்து கொடுக்கும் வேலையை விட்டுவிட்டு ஊடகங்கள் தன்னளவில் சுயமாக மக்களுக்காகச் செயல்பட முடியும். ஆனால், மனித மனங்களில் படிந்துபோயுள்ள வக்கிரமான பாலியல் ஆசைகளை நிறைவேற்றக்கூடியவையாகத்தான் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. சமீபத்தில் நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்திலும் அனந்தலட்சுமி கொலை சம்பவத்திலும் ஊடகங்கள் நடந்துகொண்ட விதத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அந்தந்த நேரத்தில் கிடைக்கும் செய்திகளின் தன்மைக்கு ஏற்றபடிதான் ஊடகங்கள் செயல்படுகின்றனவே தவிர சமூக மாற்றத்துக்காக அல்ல. சமூகம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் ஒருவர், தன்னை இருபால் விருப்பமுள்ளவர் என சொல்லிக்கொள்வது மீடியாவின் கவனத்தை தன்பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சி. சமூகத்தின் மீது ஆழமான பார்வை வைத்திருக்கிறவர்களால் மேலோட்டமாக போகிற போக்கில் இப்படிப்பட்ட ஸ்டேட்மெண்டைக் கொடுக்க முடியாது.

”சமீப காலமாக ‘லிவிங் டுகெதர்’ என்று சொல்லப்படுகிற திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது அதிகரித்து வருகிறது. இது திருமணம் என்கிற நிறுவன அமைப்புக்கு மாற்றாக இருக்கும் என நம்புகிறீர்களா..?”

நானும் இப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற வகையில், ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது திருமண அமைப்புக்கு மாற்றாக இருக்கும் எனச் சொல்லமுடியும். ஆனால், முழுமையான மாற்றாக இருக்கும் என்று கூற முடியாது. பெண் மீதான பாலியல் ஒடுக்குமுறைகளுக்கும் திருமணம் என்கிற அதிகார அமைப்பின் முரண்பாடுகளுக்கும் இது தீர்வு தரும். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதுதான் இயற்கையின் நியதி. ஆனால் திருமணம் என்பது காலில் போடப்பட்ட அடிமைச் சங்கிலி. அதனால், நல்ல ஆண்களுடன் சேர்ந்து வாழ்வதை நான் வரவேற்கிறேன். இந்த வாழ்க்கையில் பெண்களின் தனிப்பட்ட ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆண்களுக்கும்கூட இது இறுக்கம் தளர்ந்த வாழ்க்கையாக இருக்கும். இருவருடைய வாழ்க்கையும் லகுவாக அமையும். விவாகாரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட பிறகுதான் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என லெனின் சொன்னது போலத்தான் இன்றைய திருமண வாழ்க்கை இருக்கிறது. விவாகரத்தும் விவாகரத்துக்குப் பிறகான வாழ்க்கையும் நம் நாட்டில் கொடுமையான விஷயங்கள். ஆனால், திருமண அமைப்புக்குள் போகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் விடுதலைக்கான கனவுகள் திறந்திருக்கும். பெரியார் சொன்னதுபோல, ‘ஐந்து வருடம் சேர்ந்து வாழுங்க. அதுக்குப்பிறகு குழந்தை வேணும்னு நினைச்சா பெத்துக்குங்க..!’

 ”இறுதியாக…நாடாளுமன்ற தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றினீர்கள். இப்போது கட்சியிலிலிருந்து விலகிவிட்டதாக தெரிகிறது. திடீர் அரசியல் பிரவேசத்துக்கும் விலகலுக்கும் என்ன காரணம்..?”

அரசியல் ரொம்ப அவசியம். ஆனால் அதற்கு இன்னும் நான் தயாராகவில்லை! மக்களோடு இன்னும் கீழே இறங்கி வேலை செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. கூடவே தற்கால அரசியல் சூழலில் பெண்களுக்கான இடம் கேள்விக்குரியதாக இருக்கிறது. காலம் இருக்கிறது, மீண்டும் என்னுடைய அரசியல் பிரவேசம் எழுச்சியோடு நிகழும்!

நன்றி : சூரியகதிர்

பெண்களும் சாதி உணர்வும் நவம்பர் 2, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், குடும்பம், சமூகம், சாதி, பெண்கள், முத்துராமலிங்க தேவர்.
Tags:
8 comments

FACES

டந்த பத்து ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன். இந்த ஆண்டுதான் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் விழாவை சென்னை எப்படி கொண்டாடுகிறது என்பதைக் காண முடிந்தது. சாதி வெறியின் அறுவறுப்பான கொண்டாட்டம்நீ முந்தி நான் முந்தி என ஓட்டுக் கட்சிகள் நடத்தும் ஆபாச கூத்துக்கள். முத்துராமலிங்க தேவரின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் நந்தனம் வழியே அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால் இந்த கேவலங்களை நேரடியாக பார்க்க முடிந்தது.அப்பட்டமான சாதிவெறிக் கொண்டாட்டம்கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்த அந்த சிறுவர்களின் முகத்தில் அப்படியொரு வெறித்தனம்சாலையில் பிதுங்கி வழிந்த நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்த அரை மணி நேரத்தில் ஒரு பெண் சாதி குறித்து சொன்ன அந்த பெருமித வார்த்தைகள் நினைவில் வந்து வந்து போயின.

திருமணம் ஆகி, குழந்தைக்கு தாயாகியும் பத்தாண்டு காலம் காதலித்தவனை மறக்க முடியாமல் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி எறிந்து காதலித்தவனுடன் வாழ முடிவெடுத்தவர் அந்தப் பெண். புரட்சிகரமான இந்த முடிவுக்கேற்றபடி சில மாதங்கள் காதலனுடன் வாழவும் செய்தவர். பெற்றோருக்கு விஷயம் தெரியவர காதலனை விட்டு கணவருடன் மீண்டும் இணைந்தவர். சமூகத்துக்காக கணவருடன் வசித்தாலும் இன்னமும் மனதளவில் அவர் காதலனுடன் வாழ்வதாகவே நினைக்கிறவர்.

எல்லாவற்றையும் உதறிவிட்டு ஏன் நீங்கள் விரும்பியவருடனேயே வாழக்கூடாது என கேட்டதற்கு அவர் சொன்ன பதில்..நாங்க தேவர் ஜாதிஅவர் வேற ஜாதிநாங்க எப்படி காலம் முழுசும் சேர்ந்து வாழ முடியும்?

தான் எப்படி வாழ வேண்டும் தீர்மானித்துக் கொண்ட அந்தப் பெண்ணின் முடிவு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இங்கு விவாதத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டிய விருப்பப்பட்டவருடன் சேர்ந்து வாழ அந்தப் பெண் சொன்ன காரணத்தைத்தான். சமூகத்துக்கு தெரியாமல் தன் சாதி அல்லாத தான் விரும்பிய ஆணுடன் வாழ முற்பட்டவருக்கு, நாலு பேருக்கு தெரிய வரும் சூழல் வரும்போது தான் பிறந்த சாதி முக்கியமாகப் படுகிறது. பொதுவாக ஆண்கள்தான் சாதியை ஆணித்தரமாக கடைப்பிடிப்பவர்களாக கண்டிருக்கிறோம், ஆண்களுக்குத்தான் சாதீய உணர்வு அதிகம் எனவும் பேசுகிறோம். நிதர்சனத்தில் ஆண்களுக்கு இருக்கும் அதே அளவில் பெண்களுக்கும் சாதி உணர்வு,பெருமிதம் இருக்கிறது. குடும்பம் என்னும் அமைப்பின் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சாதி கருத்தாக்கங்களை கொண்டு செல்வதில் பெண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஆண் சட்டம் போடுபவனாக இருக்க, பெண் அதை செயலாற்றவும் கட்டிக்காப்பாற்றவும் செய்கிறார். பள்ளிக் காலங்களிலேயே சக தோழிகள் சாதி தொடர்புடைய விஷயங்களில் கவனமாக இருந்துவந்ததை அவதானித்திருக்கிறேன். என்ன சாதி என்பதைப் பொறுத்தே பேச்சும் பழக்கமும் இருக்கும். பொதுவெளியில் கிடைக்காத சுதந்திரம் பெண்களை சாதி உணர்வற்றவர்களாகக் காட்டிக்கொண்டிருக்கிறது. தன் சாதியைச் சேராதவர்கள் மீது நேரடியாக ஆண்களைப் போல வன்முறையை ஏவிவிடாதபோதும், சாதி தீயை அணைந்துவிடாமல் காப்பாற்றுவதை பெண்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இது விரிவாகப் பதிவு செய்யப்பட வேண்டும். பெண்கள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து பேசும்போது பெண்களுக்கும் சாதிக்குமான உறவு குறித்தும் பேச வேண்டும்

ஆண்வயப்பட்ட சமூகம் பெண்ணுடல் மீது திணிக்கும் வன்முறை ஏப்ரல் 27, 2009

Posted by மு.வி.நந்தினி in ஆணாதிக்கம், குடும்பம், சமூகம், பாலியல், பெண்கள், பெரியார்.
Tags: , , , , , ,
12 comments

muslimwomen

எந்த​வொரு பெண்ணும் குற்றவாளியாக இருக்க இயலாது. குற்றவாளியாக இருப்பதற்கு ஒருவர் ஆணாக இருந்தாக வேண்டியது அவசியம்!”

- ‘சூன்யப்புள்ளியில் பெண்’ நாவலில் இருந்து…

பெண்ணிய சொல்லாடல்களும் பெண்ணிய புரட்சியும் காலந்​தோறும் நடந்தபடி​யே உள்ளன. அ​வை அந்தந்த காலகட்டத்தில் தாக்கத்​தை ஏற்படுத்துகின்றன​​வே தவிர, தொடர்ந்து பேரியக்கமாக வளர்ந்து மா​பெரும் சமூக மாற்றத்​தை ஏற்படுத்த தவறிவிடுகின்றன. சாதி ஒழிப்பு, பிராமணீய எதிர்ப்பு, பெண் விடுத​லை உள்ளிட்ட புரட்சிக்கருத்தாக்கங்க​ளை ஏற்படுத்தியவர் பெரியார். அவர் வழிவந்த திராவிட இயக்கம் அ​மைப்பு ரீதியாக வலுவாக வளர்ந்தும், திராவிட கட்சிகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்து​கொண்டும் இருக்கின்றன. ஆனால் பேரியக்கமாக வளர​வேண்டிய பெரியாரின் கருத்துக்கள் நீர்த்துப்​போய் வெறும​​​னே பிராமணீய எதிர்ப்பு என்பது மட்டு​​மாக எஞ்சி நிற்கிறது. சாதி ரீதியிலான ஒடுக்குதல்களும் பெண்கள் மீதான சமூக வன்மு​​றைகளும் இன்று வடிவம் மாறி முன்​பைவிட கொடூர முகத்துடன் வ​ளைய வருகின்றன.

பெண்கள் கடல் தாண்டிப்போய் பணம் சம்பாதிக்கும் இக்காலக்கட்டத்திலும்கூட, ஒரு பெண்ணின் மறுமணம் என்பது கனவிலும் நி​னைத்துப்பார்க்கக்கூடாத விஷயம்தான்! எட்டு மாத கைக்குழந்தையானாலும் சரி, எண்பது வயது மூதாட்டியானாலும்சரி பெண்ணுடல் எப்போதும் இச்சைக்குரியதாகவே உள்ளது ஆண்களுக்கு. வீடு, பள்ளி,கல்லூரி, பணியிடம் என சமூகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண் சுரண்டலுக்கு உள்ளாகிறாள். பெண் ஒடுக்குமுறை குறித்து நாம் நிறைய பேச வேண்டியுள்ளது. பெரியார் கருத்துக்களை கொண்டு செல்ல அவருடைய நிறுவன வழிதோன்றல்களால் இனி முடியாது என்னும் உண்மையோடு சூன்யப்புள்ளியல் பெண் நாவல் குறித்து எனது பகிர்தல்களை உங்கள் முன் வைக்கிறேன். சூன்யப்புள்ளியில் பெண் நாவலில் வரும் ஃபிர்தவுஸின் வாழ்க்கைச் சூழல், அவள் எதிர்க்கொள்ளும் வன்முறைகள்ம் சூழலுக்கும் பொருந்திப்போவதாலேயே நாவல் குறித்து பேச விரும்புகிறேன் .

எகிப்தின் நைல் நதியோரம் வாழும் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த மூத்தவள் ஃபிர்தவுஸ். வறுமை சூழ்ந்த அந்த குடும்படும் அவளைச்சுற்றியுள்ள சமூகமும் சிறந்த அடிமையாக வாழ்வதற்கான அடிப்படையை குழந்தைப்பருவம் முதலே கற்றுக்கொடுக்கத் தொடங்குகின்றன. வீட்டு வேலைகளை செய்வதற்கும் உடன் பிறந்தவர்களை கவனிப்பதற்கும் தன் வீட்டிலேயே அடிமையாக பணிக்கப்படுகிறாள். எதிர்பாராத சூழ்நிலையில் அப்பாவும் தொடர்ந்து அம்மாவும் இறந்துவிட, உடன் பிறந்தவர்களும் வறுமை காரணமாக குழந்தைகளாகவே பலியாகிடும் போது மாமாவின் பராமரிப்பில் விடப்படுகிறாள் ஃபிர்தவுஸ். அவளின் குழந்தைமையை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்ட அதே மாமாவுடன் எகிப்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம். மாமா தன்னை வேலைக்காரியாக, பாலியல் அடிமையாக நடத்தினாலும் பள்ளிக்கு அனுப்பி வைப்பவனாகவும் இருக்கிறான். நடுநிலைப்பள்ளி வகுப்புகளை முடிக்கும் ஃபிர்தவுஸை, அவசரஅவரசமாக 60 வயது கிழவனுக்கு கணிசாமான வரதட்சணைத் தொகைக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் மாமாவும் அவரது மனைவியும். குணத்திலும் உருவத்திலும் அருவருப்பை ஏற்படுத்தும் அந்தக்கிழவனின் அடிஉதைகளை தாங்கப்பொறுக்காமல் வீட்டை விட்டு ஓடிப்போகிறாள் ஃபிர்தவுஸ்.

மற்றவர்களை பசியில் விட்டு, தான் மட்டும் உண்டு ஏப்பம் விடும் அப்பா, அப்பாவுக்குரிய இடத்தில் இருந்துகொண்டு தன் உடலைச் சுரண்டிய மாமா, பேராசைப் பிடித்த கருமி கணவன் என அதுவரை எதிர்கொண்ட ஆண்களைவிட, வீட்டை விட்டு வெளிவந்த பிறகு ஃபிர்தவுஸ் எதிர்கொள்ளும் ஆண்கள் எந்த வகையிலும் வேறுபட்டவர்கள் அல்ல. வேலை வாங்கித்தருகிறேன் என்ற பெயரில் தானும் சுரண்டி, அவளை விற்பனை பொருளாக்குகிறான் ஒருவன். அவனிடமிருந்து தப்பித்துப்போனவள் முற்போக்கு பேசுபவனின் காதலில் விழுகிறாள். அவனுடைய முற்போக்குத்தனம் படுக்கை அறையை பகிர்ந்துகொண்டு, பணம் நிரம்பப் படைத்த இன்னொருத்தியுடன் செல்கிறது. சோர்ந்துபோகும் ஃபிர்தவுஸ், மேல்தட்டு வர்க்க பாலியல் தொழிலாளி ஒருத்தியின் மூலம் தன்னுடலுக்குரிய விலையை தானே நிர்ணயிப்பவளாக மாறுகிறாள். அன்பு, காதல் என்ற பெயரில் இலவசமாக தன்னைப் பயன்படுத்திக்கொள்ள இனி ஒருபோதும் எந்த ஆணையும் அனுமதிப்பதில்லை என முடிவெடுக்கிறாள். அரபு மன்னர்களையும் அரசு உயர்பதவியில் இருப்பவர்களையும் மகிழ்விக்கும் தேர்ந்த மேல்தட்டு பாலியல் ​தொழிலாளி ஆகிறாள் அவள். தனக்குரிய தானே நிர்ணயித்து வாழ்ந்து கொண்டிருப்பவளின் வாழ்க்கையில் அரசியல் செல்வாக்குமிக்க தரகனின் தலையீடு ஏற்படுகிறது. தனக்குரிய சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க முடியாதவளாய் சந்தர்ப்ப வசத்தில் தரகனை கத்தியில் குத்திக் கொல்கிறாள். ஃபிர்தவுஸை கைது செய்து குற்றவாளியாக்கி தூக்கு தண்டனை விதிக்கிறது அரசு. நீதி வலுபடைத்தவர்களுக்கானது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்.

எகிப்து உளவியல் மருத்துவரும் பெண்ணிய எழுத்தாளருமான நவ்வல் எல் ஸதாவி சிறையில் இருந்தபோது சந்தித்த தூக்கு தண்டனைக் கைதி ஃபிர்தவுஸ். ஓர் எளிய விவசாயப் பின்னணியில் ஆரம்பிக்கும் ஃபிர்தவுஸின் வாழ்க்கை திசை மாறி இறுதியில் அசாதாரணமாக முடிகிறது என்பதை அழுத்தமாக கூறுகிறது இந்நாவல். ஆரம்பத்திலும் நாவல் முடியும்போது மட்டும் ஆசிரியர் வந்துபோகிறார். மற்றபடி நாவல் முழுக்க ஃபிர்தவுஸின் பார்வையிலேயே செல்கிறது, சுயசரிதைக்குரிய நடையுடன். ஃபிர்தவுஸின் மனஉணர்வுகளை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது நவ்வலின் எழுத்து.

ஃபிர்தவுஸின் வாழ்க்கையில் சற்றுநேர பூன்னகையைப் பூக்க வைத்தவர்கள் பால்ய வயது தோழனும் நடுநிலைப் பள்ளியில் வகுப்பு ஆசிரியை இக்பாலும்தான். தன் வாழ்க்கையை ஒவ்வொரு கட்டத்திலும் சூன்யமாக்கியது ஆண்களே என்பது ஃபிர்தவுஸின் நிலைப்பாட இறுதியில் நிற்கிறது. பெண்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆண்தான் பின்னணி என்பது அவள் முன்வைக்கும் முடிவு. “நீங்கள்(ஆண்கள்) எல்லோரும் பயங்கர குற்றவாளிகள். நீங்களெல்லோருமே அப்பாக்கள், மாமாக்கள், கணவர்கள், தரகர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், எல்லாவகையான தொழில்களை செய்யும் எல்லா ஆண்களும்…”

ஆண்வயப்பட்ட சமூகத்தில் பெண்ணுடல் மீது திணிக்கப்படும் வன்முறைக்கு ஆவணமாக இருக்கிறது இந்நாவல். இதுபோன்ற ஆயிரம் ஆவணங்களை நம் சமூகத்திலிருந்தும் எடுக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டுவதே இந்நாவல் குறித்த எனது இந்தப்பதிவின் நோக்கம். மறுக்கிறவர்கள் தினத்தந்தி கட்டம்கட்டி எழுதும் அழகி பிடிபட்டார்கதைகளைப் படிக்காமல் அழகிகளின் மறுபக்கத்தைப் படித்துப் பாருங்கள்!

சூன்யப் புள்ளியில் பெண்

நவ்வல் எல் சதாவி

தமிழில்  : லதா ராமகிருஷ்ணன்
வெளியீடு
உன்னதம்-638455

ஆலந்தூர் அஞ்சல்

கவுந்தப்பாடி

ஈரோடு மாவட்டம்

பேசி-9940786278

நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை! ஏப்ரல் 27, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், ஆயுதப் போராட்டம், இன உணர்வு, இலங்கை தமிழர், ஊடகம், சமூகம், செப்டம்பர் 11, நேபாள மாவோயிஸ்ட்கள், புதுவை சுகுமாறன், போராட்டம், போர்ச்சூழல், விடுதலைப் புலிகள்.
Tags: , , , , , ,
49 comments

nepal-maoist-postersற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து என்ன பேசினாலும் நம்முடைய சார்பு நிலையில் எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது. அதாவது புலிகளுக்கு ஆதரவு-இலங்கை தமிழருக்கு ஆதரவு அல்லது புலிகளுக்கு எதிர்ப்பு-இலங்கை அரசுக்கு ஆதரவு. இவை இரண்டைத்தவிர மற்றொரு நிலைப்பாடும் இருக்கக்கூடும், தேவையாக இருக்கிறது என்பதை பலரும் சிந்திக்கக்கூட மறுக்கிறார்கள். அரசியல் கட்சிகள் முதல்கொண்டு ஊடகங்கள் வரை தங்கள் ஆதாயத்துக்குகேற்றபடி நிலைப்பாட்டினை எடுக்கின்றன. பொதுபுத்தியில் படிந்துபோயுள்ள தமிழர் என்கிற இனவுணர்வைத் தூண்டி ஆதாயம் பெறப்பார்க்கின்றன. அறிவுஜீவிகள் என்று மார்தட்டிக் கொள்கிறவர்களின் செயல்பாடும் இப்படித்தான் உள்ளது. சாதி உணர்வு, மத உணர்வு எந்த அளவுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமோ அதே அளவுக்கு கண்மூடித்தனமான இன உணர்வும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதே.

இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் உணர்ச்சி வசப்படுவதை விட்டுவிட்டு அடுத்த நகர்வு குறித்து யோசிப்பதுதான். இன்னும் பல தசாப்தங்களுக்கு போரை நடத்திக்கொண்டிருப்பதா? போர் முடிவுக்கு வரும்பட்சத்தில் தமிழர், இலங்கையில் நிலையான அமைதியோடு வாழ வழிவகை என்ன? நம்முன் இருக்கும் கேள்விகள்

நேபாளத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி ஆயுத ஏந்திய மாவோயிஸ்டுகளின் அணுகுமுறையை இலங்கை பிரச்சினையில் புலிகள் ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? நேபாளத்தில் மன்னராட்சியும் நிலப்பிரபுத்துவமும் பிரச்சினைகள் என்றால் இலங்கையில் இருப்பது இனப்பிரச்சினை என்று மேலோட்டமாகப்பார்த்து தள்ளிவைக்காமல் இது குறித்து சிந்தனையும் விவாதமும் செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு நேபாள அரசியல் நிர்ணநய சபைக்கான தேர்தலுக்குப் பார்வையாளராக சென்று வந்திருந்த புதுவை சுகுமாறனிடம் நான் கண்ட நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இது. நான் பணியாற்றிய வார இதழில் வெளியானது . சூழ்நிலை கருதி மீள்பிரசுரம் செய்கிறேன்.

மக்கள் ஆட்சியா, மன்னர் ஆட்சியா என்று புயல் வீசிக்கொண்டு இருந்த நேபாளத்தில் இப்போது ஜனநாயகக் காற்று! பத்தாண்டுகளாக நடந்த ஆயுதப் போராட்டத்தின் முடிவில், மாவோயிஸ்ட்கள் தலைமையிலான ஆட்சி அமைந்திருக்கிறது. நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தலின் பார்வையாளராகச் சென்று வந்த மனித உரிமை ஆர்வலர் புதுவை கோ.சுகுமாறனுடன் ஒரு சந்திப்பு

”ஆயுதம் தாங்கிய போராட்ட அமைப்பான மாவோயிஸ்ட்கள் நேபாளத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எப்படி இது சாத்தியமாயிற்று?”

”நேபாள மக்களின் ஒரே வருமானம் சுற்றுலாதான். காட்மாண்டு நகரம், இரண்டு மலைகளுக்கு நடுவே கோடையிலும் கொப்பளிக்கும் நாராயணி ஆறு. இந்த இரண்டும் கொள்ளை அழகுடையவை. இருந்தாலும், ஏழ்மையும் வறுமையும்தான் நேபாளத்தின் உண்மையான முகம். விவசாயம் நொடித் துப்போன பல லட்சம் பேர் கூர்க்காக்களாக, இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் கிளம்பிவிடுகிறார்கள். கடந்த 240 ஆண்டுகளாக மன்னரைக் கடவுளாக நினைத்து, அவர் தங்களுக்கு நல்லது செய்வார் என்று நம்பிக்கொண்டு இருந்தவர்கள் நேபாள மக்கள். 1996ல் மன்னர் குடும்பத்துக்குள்ளேயே நடந்த படுகொலைகள் அந்த நம்பிக்கையை முதன்முறையாகத் தகர்த்தன. அதன் பிறகுதான் கட்சிகளின் மேல் மக்கள் நம்பிக்கை வைக்கத் தொடங்கினார்கள். மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள் மாவோயிஸ்ட்கள். கடந்த பத்தாண்டுகளாக நடந்த போராட்டத்தில் இரண்டு தரப்பிலும் சேர்த்து 12 ஆயிரம் பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு, மூன்றாவது முறையாக அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் இப்போது நடந்தது. மாவோயிஸ்ட்கள் இதில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து வென்றதற்கு அரசியல்ரீதியாக நிறைய காரணங்கள் இருந்தாலும் அடித்தட்டு மக்களை ஒன்றிணைத்ததுதான் முக்கியமான காரணம்! தேர்தல் மிக அமைதியாக நடந்தது. கிட்டத்தட்ட 85 சதவிகித ஓட்டுப்பதிவு நடந்தது. ரொம்பவும் சாதாரணமாக மரத்தடியில் ஓட்டுப் பெட்டியை வைத்திருந்தார்கள். ஓட்டு எண்ணுவதும்கூட அதீத பாதுகாப்பு இல்லாமல் எளிமையாக, நேர்மையாக நடந்தது. இந்தத் தேர்தல் வெற்றி என்பது, நேபாள மக்களின் அமைதிக்குக் கிடைத்த வெற்றி!”

”ஆயுதங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு ஜனநாயகத்துக்குத் திரும்பியிருக்கும் மாவோயிஸ்ட்கள், இதே நிலையைத் தொடர்வார்களா?”

”செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு, ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்கள் அனைத்தையும் தீவிரவாத அமைப்புகளாக அறிவித்தது அமெரிக்கா. இதனால், விடுதலைப் புலிகள் உள்பட பல போராட்டக் குழுக்கள் அந்தந்த நாடுகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. பெரும்பாலும் அவை தோல்வியிலேயே முடிந்தன. நேபாள மாவோயிஸ்ட்கள் மட்டுமே இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டவிடம், ‘ஜனநாயகப் பாதையில் நீடிப்பீர்களா?’ என்று கேட்டோம். ”ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில்தான் ஆயுதம் தூக்கினோம். இனி, அது தேவைப்படாது. ஆயுதம் ஏந்திய போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் மூன்றாவது உலக நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளுக்கு நாங்கள் முன்னுதாரணமாக இருப்போம்” என்றார்.”

”நேபாளத்தில் ஜனநாயகம் மலர்ந்திருப்பதை இந்தியா எப்படிப் பார்க்கிறது?”

”ஒருவகையில் இது இந்தியாவுக்குக் கிடைத்த அடிதான். மாவோயிஸ்ட்கள் தலைமையில் ஆட்சி அமைவதை ஒருவித படபடப்புடன்தான் பார்க்கிறது இந்தியா. நேபாளத்தில் செல்வாக்கான கட்சியான மாதேஸி கட்சி, ஆரம்பத்தில் இந்தத் தேர்தலில் பங்கேற்க மறுத்து வந்தது. இதன் பின்னணியில் இந்திய உளவுத் துறை இருப்பதாகச் சொல்கிறார்கள். அரண்மனையிலிருந்து வெளியேறப்போகும் நேபாள மன்னரை இந்தியாவில் தங்கவைக்க இந்திய அரசு விரும்புவதாகச் சொல்கிறார்கள். அதை மாவோயிஸ்ட்கள் விரும்பவில்லை. இதுவரை சீனா வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், அது மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என்கிறார்கள். இந்தியா என்ன செய்யப்போகிறது என்று பார்க்கலாம்!”

”நேபாள மாவோயிஸ்ட்களின் இந்த வெற்றி, மற்ற ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு வழிகாட்டுமா?”

”நிச்சயமாக! 1983லிருந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் புலிகளால் இதுவரை அமைதியை எட்ட முடியவில்லை. காரணம், மாவோயிஸ்ட்களைப் போல நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை. விடுதலைப்புலிகள் இந்த முன்னுதாரணத்தைப் பரிசீலிக்கச் செய்ய வேண்டிய நேரம் இது!”

14-5-08

“அடித்து துரத்தும் வரலாறு இடதுசாரிகளுக்கு புதிதல்ல…” ஏப்ரல் 4, 2009

Posted by மு.வி.நந்தினி in 18785444, அமிதவ் கோஷ், இடதுசாரிகள், சமூகம், சிங்கூர், சுற்றுச்சூழல், தஸ்லிமா நஸ்ரின், நந்திகிராம், போராட்டம், விருது.
Tags: , ,
3 comments

amitav1

ஒரு எழுத்தாளர் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமானால் அவருடைய எழுத்தை நிச்சயமாகப் படித்தாக வேண்டும். எழுத்தாளர் குறித்து மற்றவர்கள் தரும் விமர்சனம், மேலதிக தகவல்கள் அந்த எழுத்தாளரின் அறிமுகத்தை தருமேயன்றி அவையே இறுதியான மதிப்பீடுகளாக முடியாது. நம்முடைய சுய அனுபவத்தின் மூலமாகவே எழுத்தாளர் குறித்த மதிப்பீட்டினை பெற முடியும் என்பது என் கருத்து. குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு இது மிகவும் அவசியம். தமிழில் எழுதும் எழுத்தாளர்களை நேர்காணல் செய்யும் அவர்கள் எழுதிய குறைந்தது இரண்டு புத்தகங்களையாவது படித்துவிட்டுத்தான் பேசுவது என்கிற வழக்கத்தை வைத்திருக்கிறேன். (வெகுஜன ஊடகங்களில் விரிவான நேர்காணலுக்கு சாத்தியம் இல்லை என்பதால் இந்த அளவுகோல்) அமிதவ் கோஷ் தன்னுடைய SEA OF POPPIES’ நாவலின் சென்னை வெளியீட்டுக்காக வந்திருப்பதாக பென்குயின் பதிப்பகத்தின் சென்னை பொறுப்பாளர் என்னை அழைத்திருந்தார். அவர் சொல்லித்தான் அமிதவ் கோஷ் என்கிற எழுத்தாளர் இருக்கிறார் என்பதே தெரியும். அமிதவ் குறித்த தகவல்களை இணையத்தின் மூலம் அறிந்துகொண்டபோது அவர் இந்திய - ஆங்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த ஆளுமை என்பது புரிந்தது. அவருடைய எழுத்துகளை படிக்க ஆர்வம் கொண்டபோதும் என்னுடைய ஆங்கில போதாமையின் காரணமாக குறைந்த கால அவகாசமே இருந்த நிலையில் SEA OF POPPIES’ நாவலில் ஆசிரியர் குறிப்பும் மதிப்புரையுமே படிக்க முடிந்தது. அதனாலேயே நாவல் குறித்து அதிகம் கேட்காமல் நந்திகிராம், சிங்கூர் பிரச்சினை, மகாஸ்சுவேதா தேவி என்று வேறுவேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் தயாரித்துக்கொண்டேன். அமிதவ் உடனான பேட்டி என்னளவில் திருப்தி கொடுத்தது, அவருடனான சந்திப்பு பிரமிப்பை அளித்தது. அவருடைய படைப்புகளை படிக்க முயன்று கொண்டிருக்கிறேன். அமிதவ் கோஷின் டிரைலாஜி நாவலான SEA OF POPPIES’ புக்கர் பரிசுக்கு இறுதிப் பட்டியல் வரை தேர்வானது. இந்த ஆண்டு புக்கர் பரிசு அமிதவுக்குத்தான் என்று எழுத்தாளர் வட்டாரங்களில் எதிர்பார்ப்பும் இருந்தது. இறுதி நிமிடத்தில் அர்விந்த் அடிகாவுக்கு புக்கர் கிடைத்தது. கடந்த ஜூலையில் பதிவு செய்த பேட்டி இது. சுருக்கமாகவே நான் பணியாற்றிய இதழில் வெளியானது. அவர் பேசியபோது எடுத்த குறிப்புகள் எதுவும் என்னிடம் இல்லை என்பதால் இதழில் வெளியான பேட்டியையே இங்கு கொடுத்திருக்கிறேன். நந்திகிராம் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இடதுசாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து அமிதவ்விடம் கேட்டபோது மக்களை அடித்து துரத்துவது இடதுசாரிகள் ஏற்கனவே செய்ததுதான் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. ஒரு வரலாற்று உண்மையை சொன்னதற்காகவே அமிதவ் கோஷின் இந்த பேட்டியை மீள் பிரசுரம் செய்கிறேன்.அமிதவ் கோஷ்வங்காளம் உருவாக்கிய இந்தியாவின் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர். மனதில் நினைப்பதைப் பளிச் என்று பேசுகிற படைப்பாளி. அமிதவ் கோஷின் ஒரு புத்தகத்துக்காக பதிப்பகங்கள் தரும் தொகை கிட்டத்தட்ட அரைக் கோடி! அமெரிக்காவில் வசிக்கும் அமிதவ், பென்குயின் பதிப் பகம் பதிப்பித்திருக்கும்சீ ஆஃப் பாப்பிஸ்‘ (Sea of poppies) என்ற புதிய நாவலின் வெளியீட்டுக்காக சென்னை வந்து இருந்தார்.

”வங்காள விரிகுடாவின் கடற்கரையிலிருந்து சைனாவுக்கு ஓபியம் கொண்டுசெல்வதுதான் பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில் கொடிகட்டிப் பறந்த கடல் வாணிபமாக இருந்தது. பீகாரின் பல பகுதிகளில் இதற்காகவே கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் ஓபியம் செடிகள் வளர்க்கப்பட்டன. ஓபியம் செடிகளிலிருந்து பூக்கும் பூக்கள்தான் பாப்பி! நீல நிறத்தில் பூத்துக்கிடக்கும் இந்த பூக்களைப் பார்க்கும்போது நிலத்தில் கடல் முளைத்தது போல இருக்கும். அங்கிருந்துதான் ‘சீ ஆஃப் பாப்பிஸ்’ என்ற தலைப்பு கிடைத்தது” வார்த்தைகளை நிதானமாக, அழுத்தமாகப் பேசுகிறார் அமிதவ்.

”மேற்கு வங்கத்தில் நடக்கும் பிரச்னைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? இடதுசாரி அரசு நடந்துகொள்ளும் விதம் சரிதானா?”

”கோவாவில் எனக்கு வீடு இருக்கிறது. கொல்கத்தாவில் உள்ளதைப் போல கோவாவிலும் சில பிரச்னைகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆனால், அரசின் அணுகுமுறையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதே ‘செஸ்’ விவகாரத்தை கோவாவில் பள்ளி ஆசிரியர்களாகவும் சாதாரண கூலிகளாகவும் இருப்பவர்கள் கையில் எடுத்துப் போராடுகிறார்கள். அங்கே மக்கள் போராட்டம் வென்றிருக்கிறது. நிலங்களைக் கையகப் படுத்தும் திட்டம் கை விடப்பட்டு இருக்கிறது. மேற்கு வங்க அரசு தன்னுடைய கொள்கை களை மக்கள் மேல் திணிக்கப் பார்க்கிறது. சிங்கூர், நந்திகிராம் பகுதிகளில் நடக்கும் போராட்டத்தால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகிக்கொண்டு இருக்கின்றன. மாநிலத்தின் வளர்ச்சியைத் தவறான முறையில் செயல்படுத்தப் பார்க்கிறது வங்க அரசு. வங்கப் போர் நடந்த காலத்தில் அகதிகளாக சுந்தரவனக் காடுகளில் குடியேறினார்கள் வங்க தேச மக்கள். சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற காரணம் சொல்லி, இதே வழிமுறையில் அவர்களை அடித்துத் துரத்தியே கொன்று குவித்த வரலாறு இடதுசாரி அரசுக்கு உண்டு!”

”எழுத்தாளரும் சமூகப் போராளியுமான மகாஸ்வேதா தேவி, ‘நரேந்திர மோடியைவிட மோசமானவர் புத்ததேவ்’என்று சொல்லி இருக்கிறார். இது குறித்து உங்களுடைய பதில் என்ன?”

”மகாஸ்வேதாதேவி மூத்த எழுத்தாளர். அவர் இப்படியரு கருத்தைச் சொல்லும்போது நிறைய சிந்தித்திருக்க வேண்டும். இந்திய வரலாற்றில் மிகவும்மோச மான மத தாக்குதலை நிகழ்த்தியவர் நரேந்திர மோடி. அவரோடு புத்ததேவை ஒப்பிடுவது சரியல்ல. மேற்கு வங்கத்துக்குப் பொருந்தாத முன்னேற்றக் கொள்கையை எடுத்ததுதான் புத்ததேவ் அரசு செய்த மாபெரும் தவறு. முப்பது ஆண்டு காலமாக ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதன் விளைவுதான் இது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நினைத்ததை எல்லாம் சொல்லக் கூடாது. கருத்துச் சொல்வதிலும் சில கட்டுப்பாடுகள் தேவை. மகாஸ்வேதா தேவியைப் போல தஸ்லிமா நஸ்ரினுக்கும் இது பொருந்தும். சொல்லத் தேவை இல்லாத சில கருத்துக்களைச் சொல்லி, இப்போது ஐரோப்பிய கலாசாரத்துக்கு பொருந்திப்போக முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார் தஸ்லிமா!”

16/7/08

பெண் இருப்பு எப்போதும் சூன்யப் புள்ளியில்… மார்ச் 23, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், ஆணாதிக்கம், குடும்பம், சமூகம், பாலியல், பெண்கள்.
5 comments

பகுதி-1

Nawal El Saadawiருவரின் ஒழுக்க மீறலை அல்லது ஒழுக்க சீலத்தை சுட்டும்போது, அவர் சார்ந்துள்ள மதத்தோடு பொறுத்தி பேசுவது இயல்பான விஷயமாக இங்கே இருக்கிறது. ‘இஸ்லாமியதீவிரவாதி என்ற சொல்லாடலும் பார்ப்பான் உயர்ந்தவன்என்கிற எண்ணமும் இதற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். உயர்ந்த நல்லோழுக்கங்களையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் இன்னபிற நல்லனவற்றையும் வலியுறுத்துவதாக சொல்லப்படும் அனைத்து மதங்களைச் சேர்ந்த தீவிர பற்றாளர்களும்கூட அடிப்படையில் மனிதர்களே! மதங்களால் புனிதர்களாகப்படும் எல்லோருக்குமே புனிதத்திற்கு எதிரிடையான பக்கமும் இருக்கிறது என்பதற்கு வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் ஏராளமான உதாரணங்களை நாம் பார்த்துவருகிறோம். மதத்தால் புனிதராக்கப்பட்டவருக்குள் எப்படி சராசரியான மனித இயல்புகள் இருக்கிறதோ, அதுபோலவே இஸ்லாம், கிறித்துவம், இந்து என உலக மதங்கள் அத்தனையிலும் பெண் ஒடுக்குதலும் அவள் இரண்டாம் பாலினமாகக் கருதப்படுவதும் இருக்கிறது.

கருணையும் குரூரமும் மனித இயல்பானால், பெண் மீதான ஒடுக்குதல் என்பது ஆணாதிக்கச் சிந்தனை, இச்சமூகத்திற்கு இயல்பென செயற்கையாக உருவாக்கிக் கொடுத்திருக்கும் கொடை. அது வழிவழியாக இச்சமூகத்ததில் பெண் ஒடுக்கப்பட வேண்டியவள் என்பதை ஆணுக்கும் ஒடுக்கப்பட பிறந்தவர்கள் என்பதை பெண்ணுக்கும் போதிக்கிறது. இந்தியாவில், ஈரானில், அமெரிக்காவில் எங்கு பிறந்தாலும் காலச்சாரங்களும் நாடுகளும் வேறுபட்டிருந்தாலும் பெண், ஒடுக்குதலுக்கு ஆளாக வேண்டியவள் தான்! இது குறித்து பெண்ணிய சிந்தனையோடு கூடிய ஆய்வுகளும் கட்டுரைகளும் இலக்கிய பதிவுகளும் உலகம் முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் எகிப்து பெண்ணிய எழுத்தாளரான நவ்வல் எல் சதாவியின் எழுத்துகளை மதிப்பு மிக்க ஆவணங்களாக கருத முடியும்.

நீண்ட மாதங்களுக்கு முன் ஒரு இலக்கிய பத்திரிகையில் நவ்வல் எல் சதாவி குறித்த கட்டுரையை வாசித்தபோது, அவர் மீது ஒருவகை ஈர்ப்பு உண்டானது. நவ்வல் எல் சதாவி குறித்த மேலதிக விவரங்களை அவருடைய இணைய தளத்தில் படித்து அறிந்தேன். சில கட்டுரைகளையும் அங்கே படிக்க முடிந்தது. கட்டுரை, சிறுகதை, நாவல் என பன்முகத் தன்மையோடு ஏராளமாக எழுதியிருக்கும் அவருடைய எழுத்துகளைப் படிக்க ஆர்வம் மேலிட்டது. குறிப்பாக Women at point zero நாவலை படிக்க விரும்பினேன். புத்தகக் கடைகளில் விசாரித்தபோது அப்போதைக்கு இருப்பில் இல்லை என்று கூறி, வேண்டுமானால் தருவித்து தருவதாக பதில் வந்தது. அழைப்பு எண்ணை தந்துவிட்டு வந்த நேரம், எண்ணையே மாற்ற வேண்டியதாகிவிட்டது. நேரில் சென்றும் விசாரிக்கவில்லை. அதோடு வேறுவேறு வேலைகளில் கவனம் கொள்ள எதேச்சையாக தி.நகர் புக் லேண்டில் Women at point zero-ன் தமிழ் பெயர்ப்பாக சூன்யப் புள்ளியில் பெண்நாவலை புத்தகமாகப் பார்த்தேன். ஆங்கிலத்தில் படித்திருந்தால் ஒரே மூச்சில் படித்திருக்க முடியுமா என்று தெரியாது. தமிழில் கிடைத்ததால் விரைந்து முடித்தேன். லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு இது. மூல மொழியில் படிக்காததால் மொழிபெயர்ப்பு குறித்து பேசுவது சரியாக இருக்காது.

1974 ல் நவ்வல் எல் சதாவி அரசியல் கைதியாக சிறையில் இருந்தபோது அங்கு சந்தித்த ஃபிர்தவுஸ் என்ற பெண்ணின் வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. நாவல் குறித்து பேசுவதற்கு முன் நவ்வல் எல் சதாவி குறித்து சில குறிப்புகளைத் தர விரும்புகிறேன். நவ்வல் எல் சதாவியின் அப்பா சுதந்திரப் போராட்ட வீரர். கல்வி அமைச்சகத்தில் பணியாற்றியவர். பெண் இரண்டாம் பட்சமாக ஒதுக்கப்படுவதை தன் குடும்பத்திலிருந்தே ஆரம்பிக்கும் அனுபவத்தின் வாயிலாக உணர்கிறார் நவ்வால். தன் சகோதரனைவிட தான் படிப்பிலும் இன்னபிற விஷயங்களிலும் முதன்மையானவராக இருந்தபோதும் சகோதரனுக்கு தன் குடும்பத்தினரிடம் கிடைக்கும் சலுகையும் அன்பும் (இந்த விஷயம் நம்முடைய குடும்பங்களுக்கு இப்போதும் பொருந்திப்போவதை கவனிக்க) இவருக்கு கிடைப்பதில்லை. அடிப்படையில் ஒரு பெண் எதிர்கொள்ளும் குடும்ப, சமூக பிரச்சினைகளை நவ்வால் எதிர்கொண்டபோதிலும் உளவியல் மருத்துவம் படிக்க வைக்கும் அளவுக்கு அவருடைய குடும்பத்தினர் கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

உளவியல் மருத்துவராக குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட பெண்களை சந்திக்கும்போது அவருக்குள் பெண்ணிய சிந்தனை கிளர்ந்து எழுந்துள்ளது, எழுதத் தொடங்கியிருக்கிறார். ஆய்வு நோக்கில் அவர் எழுதிய கட்டுரைகள், நாவல்கள் மத அடிப்படைவாதத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் அரசுகளை விமர்சிப்பதாகவும் இருந்த காரணத்தினால் அரசியல் கைதியாக ஒரு வருடம் சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கே எழுதவதற்கு மறுக்கப்படுகிறது. கழிப்பறையில் பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பரில் ஐப்ரோ பென்சிலைக் கொண்டு எழுதுகிறார். சிறையிலிருந்து விடுதலையான பின்பும் அடிப்படைவாதிகளிடமிருந்தும் அரசிடமிருந்தும் தொடர்ந்துகொண்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார் நவ்வால். அவருடைய எழுத்துப் பயணம் சற்றே அசுவாசத்தோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இலங்கை தமிழர் பிரச்சினையும் சுரணையற்ற மனிதர்களை உற்பத்தி செய்யும் கல்விக்கூடங்களும்! மார்ச் 5, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், இலங்கை தமிழர், கல்விக்கூடங்கள், குழந்தைகள், சமூகம், சுகிதா, தமிழ், தீட்சண்யா, மாறுவேடப்போட்டி.
Tags: ,
7 comments

20071112503903012க பத்திரிகையாளரும் என்னுடைய தோழியுமான சுகிதா,இரண்டு வாரங்களுக்கு முன் நண்பர்கள் எல்லோரையும் தன் மகள் தீட்சண்யாவின் பள்ளி ஆண்டுவிழாவைக் காண வருமாறு அழைத்திருந்தார். மழலையர் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் இரண்டரை வயது தீட்சண்யா மறுவேடப்போட்டியில் கலந்துகொள்ளப்போவதாகக் கூறி,நேரில் வந்து அவளை உற்சாகப்படுத்தும்படி சொல்லியிருந்தார். சுகிதா இது போன்ற போட்டிகளிலெல்லாம் விருப்பம் அற்றவர். மாறுவேடப்போட்டி என்று பெயரிருந்தாலும் கலந்துகொள்ளும் அனைத்து குழந்தைகளும் வெற்றிப்பெற்றவர்களாகவே கருதப்படுவர் என பள்ளியின் நிர்வாகத்தரப்பு உறுதியாகச் சொன்னதன் பேரில் தீட்சண்யாவின் பெயரை பதிவு செய்திருக்கிறார். மாறுவேடப்போட்டி என்றதும் தங்களுடைய குழந்தைகளை திருவள்ளுவர், விவேகானந்தர் போன்று வேடமிட்டு மழலைத் தத்துவங்களை உளற வைப்பதிலும் கடவுளர் வேடமிட்டு மத விஷத்தை பிஞ்சிலே ஆழப்பதிய வைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், சுகி ரொம்பே விலகி நின்று சிந்தித்து விட்டார். போர்ச்சூழல் குழந்தைகளை எவ்வகையில் பாதிக்கிறது என்பதை சக பெற்றோருக்கும் விழா பார்வையாளர்களுக்கும் உணர்த்த, தன் குழந்தையை இலங்கை போரில் பாதிக்கப்பட்ட குழந்தையைப்போன்று வேடமிடப்போவதாக எங்களிடன் சொல்லியிருந்தார். அவருடைய முயற்சிக்கு நேரில் வாழ்த்துக்கூற நண்பர்கள் கிளம்பினோம். சாலிக்கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆண்டுவிழா களைகட்டியிருந்தது. சரியாக நாங்கள் உள்ளே நுழைந்த நேரம் தீட்சண்யா மேடையை விட்டு இறங்கிக் கொண்டிருந்தார். எப்போதும் உற்சாகத்தோடு பார்த்து பழகிய சுகியின் முகத்தில் அன்றுதான் முதல்முறையாக சோர்வைக் கண்டேன். தீட்சண்யா மேடையேறியதைக் காணாவிட்டாலும் மற்ற குழந்தைகளின் மழலைப்பேச்சுக்களை சிறுது நேரம் கேட்டுக்கொண்டிருந்தோம். வழக்கம்போல ஓளவையார்,திருவள்ளுவர்,விவேகானந்தர்,முருகன்,சிவன்,கூடவே உலக அழகி வேடமிடப்பட்ட குழந்தைகள்…அதற்கு மேல் எங்களுக்கு பொறுமையில்லை. எல்லோருக்கும் பரிசு என்று சொல்லியிருந்த .பள்ளி நிர்வாகம் 6 குறளை ஒப்பித்த ஒரு குழுந்தைக்கு முதல் பரிசு என்று அறிவித்தது. அடுத்தடுத்த பரிசுகளும் இப்படியாக நீதிபோதனை,ஆன்மிக குப்பைகளை ஒப்பித்த குழந்தைகளுக்கு அறிவித்துக்கொண்டிருந்தபோது தோழியின் வீட்டுக்குப்போக நாங்கள் ஆட்டோ பிடித்துக்கொண்டிருந்தோம்.தோழியின் முக வாட்டத்திற்கான காரணமும் எங்களுக்கு புரிந்துபோனது.

நடந்ததை சொல்ல ஆரம்பித்தார் சுகி…விழா நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருந்த தொகுப்பாரிடம் இலங்கையில் நடக்கும் பிரச்சினை குறித்து இரண்டு வரி அறிமுகத்தை தமிழில் பேசுமாறு சொல்லியிருக்கிறார் தோழி. மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் அவர் ஆங்கிலத்திலேயே பேசியிருக்கிறார். நிர்வாகத் தரப்பில் கூறப்பட்ட காரணம் ,அடுத்து இலங்கை தமிழர் மீதான தாக்குதலை,குழந்தைகள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்று எழுதிக்கொண்டு போயிருந்த பதாகையை மேடையில் வைக்க அனுமதி மறுத்திருக்கிறது கல்விச் சான்றோர்கள் நிரம்பிய அந்த மேடை! இதுகுறித்து விழாவுக்கு வந்திருந்த “தமிழ்” பெற்றோர் எவருக்கும் எந்த புகாரும் இல்லை,வருத்தமுமில்லை. தோழி தனி ஒருவராக மன்றாடிவிட்டு எதுவும் நிகழாத சூழலில் குழந்தையோடு மேடையிலிருந்து இறங்கியிருக்கிறார்.

கல்விக்கூடங்கள் எனும் மூளை மழுங்கடிக்கப்பட்ட மனித உற்பத்தி சாலைகளில் இதுபோன்ற முற்போக்கான சிந்தனைகளுக்கு ஆதரவை எதிர்ப்பார்ப்பது நம் தவறுதான். ஒருபுறம் இலங்கை தமிழருக்காக இங்கிருந்து குரல்கொடுக்கும் தமிழர்களையும் இன்னொரு புறம் எங்கே எது நடந்தால் என்ன என் குழந்தை தங்கிலீஷ் படித்து அமெரிக்கா போனால் சரியென்று கிடக்கிற தமிழர்களையும் ஒருசேர பார்க்க முடிகிறது. இதில் யாரைக்குற்றம் சொல்லியும் பலனில்லை. ஏற்கனவே சமுதாயத்தில் ஊன்றப்பட்டு வேறோடியிருக்கிற ஒரு பிரச்சினைக்கு ஒருவரியில் தீர்ப்பு சொல்லிவி்ட முடியாது. ஆனாலும் குறைந்தபட்ச சமூக சிந்தனைகூட நம் கல்விக்கூடங்களுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது என்கிற கேள்வியும் நம்முன் எழத்தான் செய்கிறது…

ஊடகப்பெண்களை சமையலறைக்கு துரத்தும் அராஜக ஆணாதிக்க கும்பல்! ஜனவரி 29, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், ஆணாதிக்கம், ஊடகப்பெண்கள், குடும்பம், சமூகம், பாலியல், பெண்கள்.
2 comments

சமீபத்தில் ஐந்தாண்டுகள் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவமுள்ள ஒரு பெண் பத்திரிகையாளர்,தன்னுடைய பணியினை ராஜினாமா செய்யும் பொருட்டு மும்முரமாக இருந்தார். இன்னொரு நிறுவனத்திலிருந்து தற்சமயம் பணியாற்றிக்கொண்டிருந்த நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாதங்களே கழிந்திருந்த நிலையில்,அவருடைய ராஜினாமா சக ஊழியர்கள் மத்தியில் துப்பறிவதற்கும் விவாதிப்பதற்கும் உரிய விஷயமாக இருந்தது.
“என்னுடைய வருங்கால கணவருக்கு நான் வேலைக்குப் போவது பிடிக்கவில்லை” என்று தன்னுடைய நிலையை அவர் கூறியபோது ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது என்னவோ உண்மைதான். அதற்கு பின்னணியில் இருக்கும் நிதர்சனத்தை உணர்ந்தபோது அவர் எடுத்த முடிவும் சரி என்று தோன்றியது. தீர்க்கமான சிந்தனையோடு செயல்பட்டவராக இல்லாதபோதும், நேர்மையானவராகவும் பணியில் அக்கறை காட்டுபவராகவும் இருந்த அவருடைய இருப்பு முக்கியமானதாகவே கருதமுடியும். அவர் பத்திரிகையாளராக தொடர்ந்து இயங்கியிருக்கும் வேளையில், காலம் அவரது சிந்தனையையும் செயலையும் கூர்த்தீட்டியிருக்கலாம்.
ஆனால் அவர் ஒரு பெண் என்பதாலேயே பணியிடங்களில் அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களும் நிலை குலையச் செய்த கிசுகிசுக்களும் அவரை திருமணத்தின் பெயரில் பத்திரிகை துறையிலிருந்தே வெளியேறும் முடிவை நோக்கி தள்ளியிருக்கின்றன. இன்று அவர் பத்திரிகை துறையிலிருந்தே ஒதுங்கிப்போய் விட்டார். இது ஏதோ தனிப்பட்ட ஒருவரைச் சார்ந்த நிகழ்வாக நினைத்து ஒதுக்கிவிட முடியாது. கனவுகளோடும் நம்பிக்கையோடும் ஊடகத்துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் பல பெண்கள் அவநம்பிக்கையோடு வெளியேறியதன் பின்னணியை விவாதத்திற்கு உட்படுத்துவதும் பதிவு செய்வதும் உடனடியாக செய்தாக வேண்டிய பணியாகும். பத்திரிகையாளராக ஐந்தாண்டு கால அனுபவத்திலும் தமிழ் ஊடகங்களில் சகபணியாளர்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான அவதூறுகளை அத்துமீறல்களை எழுதுவது மற்ற எல்லாவற்றையும்விட அவசியமானதாகவே கருதுகிறேன்.

ஒரு பெண் பத்திரிகையாளர் மாற்றுச் சிந்தனையும் அரசியல் ரீதியிலான புரிதலும் உள்ளவராக இருந்தாலும் தமிழ் ஊடகங்களில் சமையல் குறிப்பு எழுதுவதற்கும் நடிகைகளின் ஆடை,அணிகலங்களை சிலாகிப்பதற்கும்தான் பணிக்கப்படுவார். அதிகபட்சமாக அரசியல்வாதிகளின் மனைவிகளை பேட்டி காணும் வாய்ப்பு கிட்டலாம்! பெண்ணின் பணிகளாக ஆணாதிக்கத்தால் உருவான இச்சமூகம் ஆண்டாண்டு காலமாக சொல்லிவரும் சமையல், வீட்டப்பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றின் மெருகேற்றப்பட்ட வடிவங்கள் இவை. சமூகம் எப்படி இதையெல்லாம் மீறி வரக்கூடாது என்கிறதோ, அதையேதான் ஆணாதிக்க சிந்தனை பீடித்த ஊடகவாதிகளும் (அரசியல்-புலனாய்வு இதழ்களில் “பாதுகாப்பு” என்ற காரணம் காட்டி பெண்கள் அத்தகைய இதழ்களில் பணியாற்ற மறுக்கப்படுவதை இந்த பின்னணியில் வைத்துப்பார்க்க வேண்டும்) ஊடக பெண்களிடம் எதிர்ப்பார்க்கிறார்கள். இதை எதிர்க்கும் பெண் ஆசிரியர் குழுவால் திட்டமிட்டு ஒதுக்கப்படுவார். ஒருகட்டத்தில் மனஉளைச்சலுக்கு ஆளாகி பத்திரிகை துறையிலிருந்து ஒதுங்கிவிடுவார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் ஊட்டும்படியான மாற்றுச்சிந்தனையோடு ஒன்றிரண்டு கட்டுரைகளோடு காணாமல்போன பத்திரிகையாளர்கள் குடும்பம் என்னும் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போயிருப்பதை கண்கூடாகப்பார்க்க முடிகிறது.
இது ஒருபுறம் இருக்க சுயசிந்தனையும் ஊடகம் குறித்த புரிதலும் இல்லாத பெண்களுக்கு தமிழ் ஊடகங்களில் சிறப்பான வரவேற்பு கிடைப்பதையும் பார்க்க முடிகிறது. ஆண்களைப்போல சிந்திப்பதற்கும் ஆண்களின் ரசனைக்கேற்ப தங்களுடைய எழுத்தை வடிவமைத்துக்கொள்ளவும் இந்தப் பெண்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். சராசரி வாசகனும்கூட எழுதியவர் ஒருபால் விருப்பம் கொண்டவரோ என்று நினைக்கும் அளவுக்கு பெண் உடல் குறித்த கிளர்ச்சியூட்டும் வர்ணனைகள் வரும்படி அவர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள். தமிழ் மாத,வார,நாளிதழ்களைப் படிக்கும் எவருக்கும் இந்த முரண்பாடு தெளிவாகவே புரியும்.
குடும்பம், அரசியல் உள்ளிட்ட சமூகத்தின் மற்ற தளங்களில் பெண் எப்படி, ஆணின் சிந்தனைகளை உள்வாங்கி அதை செயல்படுத்தும் கருவியாக இருக்கிறாளோ அதைப்போலவே ஊடகப்பெண்ணும் செயல்படுகிறாள். அவளை அப்படியே வைத்திருப்பதில்தான் ஆணாதிக்கத்தின் இடம் தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. இப்படி சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட பெண்களே பாலியல் ரீதியிலான சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள். அறிவையும் உணர்வையும் அடிப்படையாகக் கொண்ட பணியில் உடல் முன்னிறுத்தப்படுகிறது. வழமையாக பெண்ணின் உடல் முன்னிறுத்தப்படும்போது கட்டமைக்கப்படும் அதிகாரம் இங்கேயும் நிகழ்கிறது. உடல் அதிகாரத்தை கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் ஆணின் செயல்பாடு ஒரு பெண்ணோடு நின்று விடுவதில்லை. அது ஒரு தொடர்கதை.

குறுஞ்செய்தியோடு ஆரம்பிக்கும்,பிறகு உடல் சமிக்ஞைகள், இரட்டை பொருள்தரும் பேச்சு, தான் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்று அதிகாரத்தை காட்டுவது எதற்கும் வளையவில்லை எனில் பிரச்சினை ஆரம்பிக்கும். அடிமையைவிட கேவலமாக நடத்துவார்கள், அல்லது அலுவலக மேசையைப்போல அசையாத பொருளாக வைத்திருப்பார்கள். வளைந்து கொடுத்தால் பதவி உயர்வுகளும் இன்னபிற அங்கீகாரங்களும் தேடிவரும். அதிகாரத்தை கை கொண்டவனின் வழி இதுவெனில் இயலாமையில் துடித்துக்கொண்டிருக்கும் அவனுக்கு கீழ உள்ளவர்களின் பணி சுற்றி உள்ள பெண்கள் குறித்து அவதூறுகள் சொல்வதும் கிசுகிசுக்களை புனைவதும்தான். ஊடகங்களில் தங்களை ப்ரோ பெமினிஸ்டு(Pro-Femenist)களாக காட்டிக்கொள்ளும் பலரது முழு நேர பணியே இதுதான்.
இத்தகைய சுரண்டலையும் அவதூறுகளையும் சகிக்க முடியாத எந்த பெண்ணும், அவள் அறிவு ரீதியாக பலமானவளாக இருந்தபோதும் அவளது முடிவு ஊடகத்தை விட்டு ஒதுங்குவதாகத்தான் இருக்கும். ஒதுங்குதலும் ஒதுக்குதலும் இயல்பாக நடந்தேறியபின் ஆணாதிக்கம் எக்காளமிட்டுச் சிரிக்கும்!

(“புரட்சிகர பெண்கள் விடுதலை மையம்” வெளியிடவிருக்கும் பெண்கள் தின சிறப்பிதழுக்காக எழுதிய கட்டுரையின் ஒருபகுதி )