jump to navigation

“கோர்வையாக எழுதுகிறவர்களெல்லாம் பத்திரிகையாளர் ஆகிவிட முடியாது!” – ஜெயராணி மார்ச் 4, 2010

Posted by மு.வி.நந்தினி in ஆணாதிக்கம், ஊடக பெண்கள், ஊடகப்பெண்கள், குடும்பம், சமூகம், சினிமா, ஜர்னலிஸம், ஜெயராணி, தமிழ், பத்திரிகை அறம், பாலியல், பெண்கள், போராட்டம், விருது.
Tags: , , ,
10 comments

நான் ஜர்னலிஸம் மாணவி. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் படித்தேன். பேசுவதும் பழகுவதும் எழுதுவதும் பள்ளி நாட்களிலேயே எனக்கு இயல்பாகவே வந்தது. பட்டப்படிப்பு முடித்ததுமே நாளிதழ் ஒன்றில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது என்றாலும் ஜர்னலிஸம் படித்துவிட்டுதான் பத்திரிகையாளராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். வாழ்வில் இதுவரையிலும் எடுத்த மிகச் சரியான முடிவுகளில் அதுவும் ஒன்றென தோன்றுகிறது. எனக்கான எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்துவிட்டது ஜர்னலிஸம் படிப்புதான். புகைப்படக்கலையையும் அங்குதான் கற்றுக் கொண்டேன்.

தூக்குவதற்கு சிரமமான நிக்கான் மெட்டல் பாடி கேமராவை வைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றிய நாட்கள் தான் என் எல்லா பயணங்களுக்கும் மூலம். உலகமென்றால் அது வீட்டின் நான்கு சுவர்தான் என்று கற்றுக்கொடுத்த மிக கட்டுப்பாடானக் குடும்பத்திலிருந்து கற்பிதத்திலிருந்து விடுபட்டு என் கால்களையும் சிந்தனையையும் சுதந்திரப்படுத்திக் கொண்டேன். நடந்து நடந்து இவ்வுலகைக் கடந்துவிடும் பேராவலில் சுற்றிய நாட்கள் அவை.     பயணமும் அதில் கிடைத்த அனுபவங்களும்தான் என்னை செதுக்கியது.

கோர்வையாக எழுத வருகிறவர்கள் யாரும் செய்தியாளராகிவிட முடியும் என்றாலும்.. பத்திரிகை அறம், சுதந்திரம் போன்ற அடிப்படை விஷயங்களை கற்றுத் தேர்ந்தது ஜர்னலிஸம் படித்த அந்த இரண்டாண்டுகளில்தான். என்ன மாதிரியான செய்தியாளராக இயங்கப் போகிறோம் என்று புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக என் கற்றல் காலம் அமைந்தது. அதற்காக, ஜர்னலிஸம் படித்தவர்கள் எல்லோருமே பத்திரிகை அறத்தை மீறாதவர்களாக இருப்பார்கள் என்றோ படிக்காதவர்கள் எல்லோரும் அறத்தை புறக்கணிக்கிறவர்கள் என்றோ சொல்ல வரவில்லை.

பத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் இன்று இருக்கிற நிலையில், ஊடக அறம் பற்றின புரிதலோ விழிப்புணர்வோ இல்லையென்றால் நிச்சயம் சுரணையற்ற செய்தியாளராகிவிட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் புதியவர் ஒருவருக்கு செய்தி எழுத கற்றுத் தரும் ஊடகங்கள் ஒருபோதும் அறத்தை போதிப்பதில்லை. அதனால்தான் பெரும்பாலும் உரிமைகளை பாதிக்கிற செய்திகளாகவே நாம் படிக்கவும் பார்க்கவும் கிடைக்கின்றன. ஜர்னலிஸம் படிக்கிறவர்களுக்கு பத்திரிகை அறம் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு இயல்பாக அமைகிறது. பின்னர் பணி காலத்தில் அதை செயல் படுத்த வேண்டுமா வேண்டாமா என்ற முடிவு அவரவர் கைகளில். கற்றல் வழி நடத்தல் என்பது என் பிடிவாதம் என்பதால் இந்த பத்தாண்டுகளில் பத்திரிகை அறத்தை கேள்விக்குள்ளாக்குகிற எந்த செய்தியையுமே நான் எழுதவில்லை.

எழுத்து மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தேன் என்று சொல்வதற்கில்லை. அதனால்தான் பத்திரிகை துறையை தேர்ந்தெடுத்தேன் என்று சொன்னால் அது பொய். தனிப்பட்ட முறையில் என் எல்லா உணர்வுகளுக்கும் உகந்ததாக இந்த துறை அமைந்தது. ஒவ்வொருவருக்கும் அவரவரரின் திறமைக்கும் குணத்திற்கும் ஏற்ற வேலை என்று ஏதாவது இருக்குமில்லையா? என் குணத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்தியது பத்திரிகைத் துறை. காரணம் எழுத்து, புகைப்படம், பயணம் என்ற மூன்று அற்புதமான விஷயங்களையும் என்னால் இங்கு செயல்படுத்த முடிந்தது.  விரும்பியதையே தொழிலாக, வேலையாக செய்வது எத்தனை சுகம்! எத்தனையோ இன்னல்களுக்கிடையில் அந்த சுகத்தை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

எல்லா நவீன துறைகளைப் போலவும், பெண்கள் ஊடகப் பணிக்கு வருவதற்கு குடும்பங்கள் தடை போடுகின்றன என்பது உண்மைதான். சில ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே வசிக்கக்கூடிய கிராமம் ஒன்றிலிருந்து சென்னை நோக்கிய என் பயணம் அத்தனை எளிதானதாக அமைந்துவிடவில்லை. பெரும்பாலான பெண்களுக்கு இந்த சவால் இருக்கிறது. இந்த சவால்களை ஏதாவது இயக்கங்கள் வந்துதான் எதிர்கொள்ள வேண்டும் என்றில்லை. தடைகளைத் தாண்டும் மனப் பக்குவத்தை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது. ஊடகத் துறையில் பெண்கள் முதல் தலைமுறையாக காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த கட்டுப்பாடுகளோ அடக்குமுறைகளோ இன்று பெருமளவில் தளர்த்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றும் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கு என்று பேசிக் கொண்டிருப்பது அபத்தம். இந்த மாதிரியான குறுகிய விவாதங்களை நாம் கடந்தாக வேண்டும்.

பெண்களுக்கிருக்கும் சவால் என்பது எல்லாத் துறைகளுக்கும் பொதுவான ஒன்று. கல்வியறிவு பெற்று பணிபுரியத் தொடங்கிய காலகட்டத்தில் பெண்களுக்கான பிரத்யேக வேலைகளில் ஒன்றாக ஒதுக்கப்பட்டது ஸ்டெனோகிராபர் பணி. அந்த காலக் கட்டத்தில் வந்த திரைப்படங்களில் பார்த்தால் ஸ்டெனோகிராஃபர்கள் எப்போதும் மேனேஜர்களின் மடியிலேயே உட்கார்ந்திருப்பதைப் போலவேதான் காட்சிகளை அமைத்தார்கள். அன்றைய தேதிக்கு நவீன துறையாக இருந்த ஸ்டெனோகிராஃபி பணிக்கு பெண்கள் அதிகளவில் வரத் தொடங்கினார்கள். திறமையால் வந்தார்கள் என்பதை விடவும் வயதையும் அழகையும் முன்னிறுத்தி பாலினத்தை தவறாக பயன்படுத்தியதாலே பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக அப்போது நம்பப்பட்டது. அதை தான் திரைப்படங்களில் காட்சிபடுத்தினார்கள்.

வெற்றிகரமான செயல்படும் ஒரு பெண் திறமையால் அதை சாதித்திருக்கமாட்டார் என்று நம்புவது இந்த சமூகத்தின் பொது புத்தி. இந்த பொது புத்திதான் இன்று ஊடகங்களிலும் நிலை கொண்டிருக்கிறது. பெண்களின் திறமையை புறக்கணிப்பதிலும் சாதனைகளை இழிவுபடுத்துவதிலும் ஆண்கள் அளவிற்கு (கூடுதலாகவே கூட) பெண்களும் ஈடுபடுகிறார்கள்.
ஊடகத் துறையில் பணிபுரியும் பெண்கள் சம அளவில் பெண்களாலும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். போட்டியும் பொறாமைகளும் இருக்கிற வரை இந்த நிலை நிலையானது என்றே தோன்றுகிறது. அதனால் அதிகபட்ச மன உறுதியை வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இன்று பெண்களுக்கிருக்கும் சவால்களுக்கு ஒத்த அளவிலான பிரச்சனைகள் ஆண்களுக்கும் இருக்கிறது. அதற்கு காரணம் ஊடகத்துறையில் மேலோங்கி இருக்கும் பண்ணையார்த்தனம். ஆண்களும் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்களா என்று  மிக உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் மன உளைச்சலை தரக் கூடிய மற்ற எல்லா துயரங்களையும் ஆண்களும் எதிர்கொள்கிறார்கள். பிரச்சனை ஆண் பெண் என்ற அடிப்படையில் வருகிற பாலின பாகுபாடு அல்ல. புரொபஷனலிஸம் என்று சொல்லக்கூடிய தொழில் நேர்த்திக்கு இருக்கும் தட்டுப்பாடு. ஒரு ஊழியரை எப்படி நடத்துவது அல்லது கையாள்வது என்ற அடிப்படை நாகரிகம் தெரியாத மேலதிகாரிகள் எல்லா துறையிலும் இருக்கிறார்கள். ஊடகத்துறையிலும் இருக்கிறார்கள். ஒரு அலுவலகத்தில் 10 பேர் பணிபுரிகிறார்கள் என்றால் அந்த 10 பேரும் ஒரே மாதிரியான அல்லது சம அளவிலான திறமைகளை கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. யார் யாருக்கு என்னென்ன திறமை இருக்கிறது என்று கண்டறிவதும் அவரை குறிப்பிட்ட அந்த வேலைக்கு பயன்படுத்துவதும் தலைமைப் பண்பின் முக்கிய அம்சம். ஊழியர்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகளை வழங்குவதால் மட்டுமே எந்த ஒரு நிறுவனமுமே அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்.

ஊடகங்களில் ஆண்களின் கை மேலோங்கி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. அதனால் செய்திகளில் மிக மோசமாக வெளிப்படும் ஆண் நெடி குமட்டலை உண்டாக்குவதாக இருக்கிறது!. தப்பித் தவறி கூட ஒரு பெண் செய்திகளில் அடிபட்டுவிடக் கூடாது. குற்றச்செய்திகள் என்றால் நிலைமை மிக மோசம். ஆண் நிருபர்களின் அதிகபட்ச கற்பனைத் திறனும் வக்கிரங்களும் வெளிப்படுவது பெண்கள் சம்பந்தப்பட்ட செய்திகளில்தான்.

பெரும்பாலான செய்திகள் இப்படி அந்த நேர கிளுகிளுப்பிற்கும் பரபரப்பிற்காக மட்டுமே எழுதப்படுகின்றன. பத்திரிகைகளில் நிலைகொண்டிருக்கும் ஆண் மொழியும், மேலோங்கியிருக்கும் ஆண் மனோபாவமும் மிகவும் மோசமான பாதிப்புகளை சமூகத்தில் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. எவ்வளவோ விமர்சனங்களுக்கு உள்ளான போதும் இன்னும் அந்த பிரபல நாளிதழ் செய்திகளில் அடிபடும் பெண்களை அழகி என்று குறிப்பிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. பெருமளவில் பெண்கள் ஊடகப்பணிக்கு வந்தால் இந்த அவலம் மாறுமா என்று கேட்டால் அதுவும் சந்தேகம்தான். ஏனென்றால் வருகிற எல்லோருமே ஆண் பெண் பாரபட்சமில்லாமல் கண்மூடித்தனமாக வழக்கமான இந்த எழுத்துமுறைக்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் சில பத்திரிகைகளில் பெண்களும் ஆண் மொழியில் ஆண் மனோபாவத்துடன் எழுதுவதை பார்க்க முடிகிறது. தன்னளவில் மிக நேர்த்தியான மொழியாற்றலையும், சமூகப் பார்வையையும் செய்தி எழுதும் நுணுக்கத்தையும்  கொண்டிருந்தாலே ஒழிய இதுபோன்ற வக்கிரங்களில் இருந்து தப்பிப்பது கடினம். ஜாதி, மத, பாலின அடையாளங்களைக் கடந்த சமத்துவ மொழி ஊடகங்களின் இன்றைய மிகப் பெரியத் தேவையாக இருக்கிறது.   வேண்டும் க்ண்க்இன்னும் அந்த பிரபல நாளிதழ் செய்திக் பலரை ஏமாற்றி பணம் பறித்தார் அதனால் அவர் செத்துப் போக்

திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவது போலவோ அல்லது இந்த சமூகம் நம்பிக் கொண்டிருப்பதைப் போலவோ ஜர்னலிஸ்ட்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல.
துப்புரவுப் பணியைப் போலத் தான் ஊடகத்துறையும். ஒரு துப்புரவுப் பணியாளருக்கு இருக்கும் பொறுப்பை விடவும் அதிகமாக ஜர்னலிஸ்ட்களுக்கு பொறுப்புணர்வு இருப்பதாக நான் நம்பவில்லை. முன்னவர் புற சுகாதாரத்திற்கும் பின்னவர் அக சுகாதாரத்திற்காகவும் பணி புரிகிறார்கள் அவ்வளவே வித்தியாசம். ஆனால் இங்கு நிறைய பேர் ஜர்னலிஸ்ட் என்று மார்தட்டிக் கொள்வதில் ஒரு வறட்டு கவுரவத்தைப் பார்க்க முடிகிறது. இது தேவையில்லாதது. வேறெந்தத் துறையில் வேலை செய்கிறவர்களைப் போல பத்திரிகையாளர்களும் தங்களை சாதாரண மனிதர்களாக முதலில் கருதத் துவங்க வேண்டும். யாரும் ஜர்னலிஸ்ட்டாகவே பிறப்பதில்லை. மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் போல பத்திரிகையாளர்களுக்கு கல்வி தகுதி கட்டாயமாகத் தேவைப்படாத நிலையில் எழுதத் தெரிகிறவர்களும் பேச முடிகிறவர்களும் பத்திரிகையாளராகிவிட முடிகிறது. கல்வித் தகுதி அவசியமில்லாத ஊடகத் துறைக்குத் தேவைப்படுவது மனித நேயமும், சமூக அறிவும் பொறுப்புணர்வும் மட்டுமே! செய்தி எழுதுதலின் நுணுக்கங்கள் அரசியல் நிகழ்வுகள், பொது அறிவு விஷயங்களை எல்லாம் களத்தில் இறங்கியவுடன் காலப் போக்கில் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மேலே குறிப்பிட்ட மூன்று விஷயங்களும் உள்ளார்ந்தவை. எல்லா தனி நபர்களுக்கும் அது இருக்க வேண்டும் என்றாலும் பல தரப்பினரையும் சென்று பறைசாற்றுகிற பணியைச் செய்கிற ஊடகவியலாளர்களுக்கு கூடுதலாக இருந்தாக வேண்டும்.

மனித நேயத்திற்கும், உரிமைகளுக்கும் சமத்துவத்திற்கு எதிரான வார்த்தைகளை இதுவரையும் நான் எழுதவில்லை. இனிமேலும் எழுதமாட்டேன்.  என் எழுத்துக்களும் கருத்துக்களும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். அது அன்பு. எல்லோருக்குமான அன்பு. குழந்தைகள், திருநங்கைகள் ஆண், பெண், இன்ன மொழி பேசுபவர், இந்த ஊர்க்காரர், நாட்டுக்காரர், சாதி, மதம் என எந்த பாகுபாடுமின்றி வரக்கூடிய இயல்பான அன்பு. இந்த உலகத்தின் அதிகபட்சத் தேவை அதுதான். கூட்டம் போட்டு, மேடையில் முழங்கினால்தான் என்றில்லை, தன்னளவில் எல்லோரும் அன்பானவர்களாக, உரிமை மீறல்களை அனுமதிக்காதவர்களாக இயங்கிக் கொண்டிருந்தாலே போதும். இவ்வுலகத்தின் அவலங்கள் முடிவுக்கு வந்துவிடும். சமூகப் பொறுப்புணர்வோடு பணிபுரியும் எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.
அன்பும் உண்மையும் நேர்மையும் நிச்சயம் வெற்றி பெறும். அவை அதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ளுமே தவிர ஒருபோதும் தோற்றுப்போவதில்லை.

ஜெயராணி…
ஆறாம்திணை என்ற இணையதளப் பத்திரிகையில் பணியைத் தொடங்கி, குமுதம், விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளில் புகைப்பட நிருபராகவும், உதவி ஆசிரியராகவும் சுமார் ஏழாண்டுகள் வேலை பார்த்தவர். தற்போது சன் செய்திப் பிரிவில் சிறப்பு செய்தியாளாராக பணியாற்றும் ஜெயராணி, நிஜம் நிகழ்ச்சியில் செய்தியாளராகவும் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் இருக்கிறார். மெயின் ஸ்ட்ரீம் ஊடகத்தில் இயங்கினாலும் பெண்கள், குழந்தைகள் திருநங்கைகள், தலித் மக்கள், சிறுபான்மையினருக்காகத் தொடர்ந்து எழுதி வருகிறார். தலித் முரசு போன்ற மாற்று இதழ்களிலும் தொடர்ந்து எழுதுகிறார். ஆனந்த விகடன், அவள் விகடன், தீராநதி, புது விசை, முற்றுகை ஆகிய இதழ்களில் கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்திருக்கின்றன.

‘இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ஜர்னலிஸ்ட்’ அமைப்பு ‘ஆனந்த விகடனில் விகடனில’ வெளியான ”இளைப்பாற விரும்புகிறோம்” கட்டுரைக்காக சிறப்புப் பாராட்டுச் சான்றிதழை வழங்கியது. (2004 )

‘இந்தியா டுடே’ பத்திரிகை ‘இந்தியாவின் 38 முக்கியமான பெண்களில்’ ஒருவராக தேர்ந்தெடுத்தது (2005)

ஊடகத்துறையில் தொடர்ந்து ஆற்றி வரும் பங்கிற்காக ‘அன்னைத் தெரஸா பல்கலைக்கழக’த்தால் ‘சிறந்த பத்திரிகையாளரா’க கவுரவிக்கப்பட்டார். (2009)

பின்குறிப்பு : எனக்குப் பிடித்த பத்திரிகையாளர் என்ற வகையில் ஜெயராணியிடம்  நேர்காணல் எடுக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அது நிறைவேற காலம் இன்னும் கணியவில்லை. பிடித்த பத்திரிகையாளர் என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அது நேர்காணலை எழுதும்போது சொல்லுவேன்.
இங்கே பிரசுமாகியிருக்கும் கட்டுரை நான் எழுதியது அல்ல. பெண்ணே நீ மாத இதழுக்காக ஜெயராணி எழுதியது. மார்ச் பெண்ணே நீ இதழில் எடிட் செய்யப்பட்டு வெளியான கட்டுரையின் முழுவடிவத்தை இங்கே கொடுத்திருக்கிறேன்.
பெண்ணே நீ இதழுக்கு எழுதிய கட்டுரையை இங்கே பிரசுரித்தமைக்காக பெண்ணே நீ க்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டுரையில் வெளியாகியிருக்கும் கருத்துக்களை ஒட்டி ஜெயராணி, சுகிதா, நான் மூவருமாக நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம்.   அதனாலே இந்தக் கட்டுரையை பிரசுரிப்பதில் ஆர்வம் கொண்டேன். ஜெயராணியும் அனுப்பித் தந்தார். விஷயமுள்ள கட்டுரை எல்லாதரப்பையும் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்.

ஆழ்கடலில் திசைமாறிய படகு… December 31, 2009

Posted by மு.வி.நந்தினி in குடும்பம், சமூகம், சினிமா, பார்டான்ஸர், பாலியல் தொழிலாளி, பெண்கள்.
Tags: ,
2 comments

பார்டான்ஸர்களின் மறுபக்கம்

 கோயில் திருவிழாக்களில், அரை இருள் சூழ்ந்த போதை நெடியடிக்கும் இரண்டாம் தர ஹோட்டல்களில் இந்தப் பெண்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்மிதமிஞ்சிய ஒப்பனையும் கிளர்ச்சி ஊட்டுவதற்கென்ற அணியப்பட்ட உடைகளுடனும் இவர்கள் ஆடும் நடனத்தை. கேபரே டான்சர், டிஸ்கோ டான்சர் இன்னும் சில பல பெயர்களில் இவர்களை அழைக்கிறோம். இந்த நடனம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறதா அல்லது அறுவறுக்க வைக்கிறதா என்கிற தர்க்கம்தான் இவர்கள் குறித்து நாம் காட்டும் அதிகபட்ச அக்கறையாக இருக்கும்! நிதர்சனத்தில் இந்த நடனப்பெண்களின் வாழ்க்கை ஆழ்கடலில் திசைமாறிப்போன படகு போன்றது. கரை திரும்புவதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது! இதோ அவர்களுடைய வாக்குமூலங்கள்தான் அதற்கு சாட்சி

என் பேரு ஜோதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறந்தது, வளர்ந்தது சென்னையிலதான். தினமும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படற குடும்பம். அப்பாவுக்கு சரியான சம்பாத்யம் கிடையாது. இதுலதான் அம்மா, நான், தம்பி, தங்கச்சிங்க வாழ்ந்தாவணும். ஏழாவதுக்கு மேல படிக்க இஷ்டமில்லாம போயிடுச்சி. அப்புறம் அக்கம் பக்கத்துல சின்ன சின்ன வேலைகளுக்கு போயிட்டு இருந்தேன். அப்படி வேலைக்குப் போன இடத்துலதான் அவரைப் பார்த்தது. அந்த வயசு நல்லது கெட்டதை யோசிக்கத் தெரியாது. நல்லா வச்சி காப்பாத்துவாருன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா அவர் சரி கிடையாது. பிறந்த வீட்டிலேயாவது ரெண்டு வேலை சாப்பாட்டுக்கு வழி இருந்துச்சி. இங்க ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாம, தினம் பட்டினியா கிடக்க வேண்டிய நிலை. அப்பதான் ஏரியாவுல தெரிஞ்ச ஒருத்தர்நீ ஏன் இப்படி கிடந்து கஷ்டப்படற? வெளிநாட்டுல டான்ஸ் ஆடப்போனா கைநிறைய பணம் கிடைக்கும். உன் செலவுக்குப் போக, தம்பி, தங்கச்சிங்களுக்கும் நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கலாம்னு. முதல்ல துபாய்க்கு அழைச்சுட்டு போனாங்க. ‘லட்சக்கணக்குல பணம் கிடைக்கும். சேட்டுங்க நகையெல்லாம் போடுவாங்கன்னு நிறைய சொன்னாங்க. ஆனா அங்க நிலைமையே வேற. மூணு நாளைக்குள்ள டான்ஸ் ஆடி நூறு டோக்கன் எடுக்கணும். ஒரு டோக்கனுக்கு இவ்வளவு ரூபாய்னு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிச்சுடுவாங்க. டான்ஸ் பார்க்க வர்றங்க. நம்ம டான்ஸ் புடிச்சிருந்தா காசு கொடுத்து டோக்கன் வாங்குவாங்க. எந்த அளவுக்கு டோக்கன் அதிகமா வாங்கறமோ அந்த அளவுக்கு நமக்கு மதிப்பும் மரியாதையும் கூடவே பணமும் கிடைக்கும். மூணு நாளைக்கு நூறு டோக்கன் எடுக்கணுங்கிறது முடியாத காரியம். அப்போதான் எங்களை அழைச்சிட்டு போன ஏஜெண்ட்டுகளோட நிஜ முகம் தெரிய ஆரம்பிக்கும். ‘டான்ஸ் ஆடி டோக்கன் எடுக்கலைன்னா என்ன? அதே காசை நாலு பேருக்கிட்ட படுத்து சம்பாதின்னு கட்டாயப்படுத்த ஆரம்பிப்பாங்க. எனக்கும் இதுதான் நடந்தது. நான் அதுக்கு சம்மதிக்கவே இல்லை. அடி-உதை, சூடுன்னு தினம் தினம் சித்திரவதை. ஒரு கட்டத்துக்கு மேல வந்தது வந்துட்டோம், நாம நிறைய சம்பாதிச்சு கொடுக்கப்போறதா நினைச்சுட்டு இருக்கிற குடும்பத்துக்கு நாம எதை செய்யப்போறோம்னு நினைச்சு நான் என் முடிவை மாத்திக்கிட்டேன் ஜோதியின் வார்த்தைகளில் வாழ்க்கையின் மீதான சலிப்பு தெரிக்கிறது.

” 12 மணி வரைக்கும் டான்ஸ் ஆடணும். அதுக்கு மேல 10, 20 பேருகிட்ட படுக்கச்சொல்வாங்க. துபாய்க்கு போறோம்னு தான் பேரு. ஏதோ ஒரு அபார்ட்மெண்ட்ல எங்களை தங்க வைப்பாங்க. 3 மாசம் இருந்தாலும் 3 வருஷம் இருந்தாலும் அந்த நாலு சுவத்தைதான் பார்த்துட்டு இருக்கணும். மெஷினைவிட கேவலமான வாழ்க்கை. இப்படியே தொடர்ந்தா பைத்தியம் பிடிச்சுடுமேங்கிற பயத்துல அங்கிருந்து வெளியேறணும்னு முடிவு செய்தேன். எவ்வளவோ கெஞ்சி கேட்டும் எங்களை அழைச்சுட்டு போன ஏஜெண்ட் விடலை. சென்னையில இருந்த நண்பர்கள் போலீசுக்குப் போயிடுவோம்னு மிரட்டியதால் என்னை பிளைட் ஏத்தி அனுப்பிவைச்சாங்க. இத்தனை கஷ்டத்துக்கும் பிறகு எனக்கு கிடைச்சது என்னவோ வெறும் ஐயாயிரம் ரூபாய்தான்!” என்கிற ஜோதி தற்சமயம் சென்னையில் உள்ள சில கிளப்புகளில் ஆடி வருகிறார். வெளிநாடுகளுக்கு போவதைவிட சென்னையிலேயே ஓரளவு பாலியல் ரீதியிலான தொல்லைகள் குறைவு என்பது ஜோதியின் கருத்து.

வெளிநாடுகள்ல டான்சுக்குன்னு கூப்பிட்டு போறதே மெயினா தொழில் செய்யறதுக்குதான். வடபழனி ஏரியாவுல இப்படி பெண்களை அனுப்பி வைக்கறதுக்கே ஏகப்பட்ட ஏஜெண்டுகள் இருக்காங்க. சினிமா ஆசையில ஜெயிக்கவும் முடியாம, வாழவும் வழியில்லாம தவிக்கிற பெண்கள்தான் இவங்களோட டார்கெட்!” என்கிற ஜோதியின் கூற்றுக்கு உதாரணம் காட்டுவதாக இருக்கிறது கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)வின் அனுபவம்.

திருச்சியை பூர்விகமாகக் கொண்ட கவிதாவுக்கு படிப்பு ஒன்பதாம் வகுப்பு. வாழ்வு தேடி குடும்பத்தோடு சென்னை வந்தவர். சினிமாவில் மேக்கப் அசிசிஸ்டெண்டாக வேலை. “இந்த வேலைக்கு காலம் முழுக்க நூறு ரூபாய்தான் கிடைக்கும். கேபரே டான்ஸ் ஆடினா மூணு மாசத்துல முப்பதாயிரம் சம்பாதிக்கலாம்என்ற ஆசை வார்த்தைகள் கவிதாவின் குடும்ப கஷ்டத்துக்கு வடிகாலாக இருக்க, கேபரே டான்ஸ் ஆடப்போனார்.

முதல்ல உள்ளூர்ல ஆடிட்டு இருந்தேன். வெளியூர் போன அதிகமா சம்பாதிக்கலாம்னு பாண்டிச்சேரிக்கு அனுப்பினாங்க. மூணு மாசம் அக்ரிமெண்ட். முன்னாடியே 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துட்டாங்க. நம்ம குடும்ப கஷ்டத்துக்கு விடிவு கிடைச்சுடுன்னு போனா.. கேபரே டான்சுக்கு இன்னொரு பக்கமும் இருக்குன்னு அப்புறம் தெரிய ஆரம்பிச்சது. வெறுமனே டான்ஸ் மட்டும் ஆடினா ஆயிரம் ஆயிரமா பணம் கொட்டிடாதுன்னு தொழில் செய்ய வற்புறுத்தினாங்க. வழக்கம்போல சித்ரவதை. வேற என்ன செய்ய முடியும்? அவங்க சொல்றமாதிரி கேட்க ஆரம்பிச்சேன். பெரும் போராட்டத்துக்குப் பிறகு அங்கேயிருந்து வெளியேறினேன்என்கிற கவிதா, தான் இப்படி பாலியல் தொழிலாளியாக மாறியது தன் வீட்டுக்கு தெரியாது என்கிறார்.

வெளியூருக்கு போகும்போது ஷூட்டிங் போறன்னு சொல்லிட்டு போவேன். இப்ப லோக்கல்லதான் ஆடிகிட்டு இருக்கேன். டான்ஸ் மட்டும் ஆடினா ரெண்டாயிரம், மூவாயிரம்தான் கிடைக்கும். தொழிலும் சேர்த்து செய்தா ஏழாயிரம் ரூபாய் வரைக்கும் எடுத்துட்டு வரலாம். திருவிழாவுலயும் ஆடப்போறேன். அங்கேயும் சில பேர் கேப்பாங்க. எனக்கு விருப்பம் இருந்தா போவேன். வேற வழியில்லாம இந்த வாழ்க்கைக்கு வந்துட்டோம்னு ஒவ்வொரு நாளும் வருத்தப்படறோம். இதுல இருந்து விடுபடணும்னு விரும்பறோம். ஆனா எங்களை மனுஷியாகூட சிலபேர் மதிக்கிறதில்லை. குடும்பத்தோடு கோயில், குளம்னு எங்காவது போயிருப்போம். புரோக்கருங்க அங்க வந்து வர்றீயான்னு கூப்பிடுவாங்க. புரோக்கருங்க மட்டும் இல்லை, வெளியூருக்கு போன இடத்துல யாருக்காவது நம்ம போன்நம்பர் கிடைச்சுட்டா போதும் சொல்ல முடியாத சித்ரவதைக்கு ஆளாக வேண்டியிருக்கும். அவங்க கூட போக விருப்பமில்லைனு சொல்லும்போது அவங்களால தாங்கிக்க முடியாது, அசிங்க அசிங்கமா பேச ஆரம்பிச்சுடுவாங்கஎன்கிறார் கவிதா.

பதினாறு வயதிலேயே வாழ்க்கையை தொலைத்திருக்கிறார் புஷ்பா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சேலத்தை சேர்ந்த இவர், காதலின் பேரால் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகி, அதனாலேயே சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர். வழி தேடி சென்னைக்கு வந்தவர், புரோக்கர்களின் ஆசை வார்த்தைகளால் படுகுழியில் விழுந்திருக்கிறார். திருவிழாவுக்கு நடனம் ஆடப்போன இடத்தில் பாலியல் தொழில் செய்ய வந்த அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்க, கொடுமையின் உச்சகட்டமாக நான்கு பேர் கொண்ட கும்பல் புஷ்பாவை கட்டி வைத்து பாலியல் வல்லுறவு செய்திருக்கிறது. அதன் பாதிப்புகள் புஷ்பாவின் கண்களில் இன்னமும் உணரமுடிகிறது. இப்போது கேபரே டான்ஸர் என்பதோடு பாலியல் தொழிலாளியாகவும் உருமாறியிருக்கிறார் புஷ்பா.குடும்பத்தில் பணப்பிரச்னை, கணவன் அல்லது காதலனால் ஏமாற்றப்படுதல், சினிமா கனவு இதில் ஏதாவது ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் கேபரே ஆடும் பெண்கள். இவர்களின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என துப்பறிந்தால் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் குற்றம் சொல்ல வேண்டியதிருக்கும். “மற்ற பெண்களைப் போல எங்கள் வாழ்க்கையும் மாறணும்என்கிற இந்தப் பெண்களின் அடிப்படை உரிமைக்கு மதிப்பளிப்பதே குற்றவுணர்ச்சியிலிருந்து நம்மை காப்பாற்றும்!

நன்றி : சூரியகதிர்

சிங்களவர்களின் விருப்பம் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான்! மார்ச் 28, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், இலங்கை தமிழர், சிங்கள ராணுவம், சினிமா, போர்ச்சூழல், யாழ்ப்பாணம், விருது.
Tags:
3 comments

vithanageஉலக சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர் பிரசன்ன விதனாங்கே. போரின் ஆழமான பாதிப்புகளுக்கிடையே மனிதத்தைத் தேடும் இலங்கைப் படைப்பாளி. இவருடையடெத் ஆன் எ ஃபுல் மூன் டேசர்வதேச அளவில் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற படம். தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளுக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

”உங்களுடைய பின்னணி…”

”நான் கொழும்பு நகரத்தைச் சேர்ந்தவன். என் அப்பா தீவிர சினிமா ரசிகர். தமிழ், இந்தி, சிங்களம் என எல்லா மொழிப் படங்களுக்கும் என்னை அழைத்துச் செல்வார். இப்போது நான் இருக்கும் இடத்துக்கான தயாரிப்புகள் அத்தனை யும் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பமாகிவிட்டன. சினிமாவும் புத்தகங்களும் தனிமையில் எனக்கான கனவுலகத்தைத் திறந்துவைத்தன. சிறுவனாக இருந்தபோது நடிகனாக வேண்டும் என்றுதான் விரும்பினேன். வளர வளர… ‘பதேர் பாஞ்சாலி’ போன்ற படங்கள் பார்க்கக் கிடைத்த போது, என்னுடைய சிந்தனையின் தடம்மாறிவிட்டது. ‘எது நல்ல படம்’ என்ற புரிதல் கிடைத்தது. இலங்கையில் சினிமாவைக் கற்றுத் தர பள்ளிகள் கிடையாது. சினிமாவைப் பார்த்து, எனக்குநானே ஆசானாக இருந்து சினிமா எடுக்கக் கற்றுக் கொண்டேன். சினிமாவில் திரைக் கதாசிரியராக நுழைந்து, இயக்குநராக மாறினேன். 92ல்முதல் படம் ‘சிசிலா கினி கனி’ வந்தது. இப்போது ஆறாவது படமான ‘ஆகாச குசும்’ தயாராகிக்கொண்டு இருக்கிறது. சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகத் துறையில் சிறிது காலம் இருந்தேன். என் படங்களில் நல்ல நடிகர்களும், நல்ல நடிப்பும் வருவதற்கு நாடகத் துறை அனுபவம்தான் கை கொடுக்கிறது.”

”நீங்கள் ஒரு சிங்களராக இருந்தபோதும், ஆளும் சிங்கள அரசின் மீதான விமர்சனத்தைத் தயங்காமல் உங்கள் படங்களில் வைக்கிறீர்கள். இதற்குஅரசுத் தரப்பிலிருந்து ஏதும் அச்சுறுத்தல்கள் வரவில்லையா?”

”இருபத்தைந்து ஆண்டுகால போர்ச்சூழல் இலங்கையின் ஒவ்வொரு மனிதனையும் பாதித்திருக்கிறது. இலங்கையில் ஒவ்வொருவரும் தான் நேசித்த யாராவது ஒருவரைத் தொலைத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். போருக்குப் பின்னால் இருக்கக்கூடியஉண்மை யைச் சொல்லும்போது கசப்பு இருக்கத்தான் செய்யும். நான் உணர்ந்த உண்மையை என் படங்களில் சொல்ல விரும்புகிறேன். ‘டெத் ஆன் எ ஃபுல் மூன் டே’ படத்துக்கு அரசு தடை விதித்தது. நான் உயர்நீதிமன்றம் வரை சென்று போராடி திரையிட அனுமதி வாங்கினேன். ‘நீ அவன் ஆள்’ போன்ற முத்திரையும் குத்தினார்கள். ஒரு படைப்பாளி என்ற வகையில் இதை எதிர்கொள்வதும் என்னுடைய பணிதான்!”

”உங்கள் படங்கள் மக்களிடம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?”

”வளரும் படைப்பாளியாக இருந்தபோது விருதுகளைப் பெரிய அங்கீகாரமாக நினைத்த துண்டு. ‘டெத் ஆன் எ ஃபுல்மூன் டே’ சிறப்பு அனுமதியோடு யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்டது. சிங்கள ராணுவத்தில் பணியாற்றி, போரில் பலியான ஒரு ராணுவ வீரன்… அவன் இறந்துவிட்டதை அறிந்தும் அவன் வருவான் என காத்திருக்கும் ஒரு வயோதிகத் தந்தை… இதன் பின்னணியில் போரின் விளைவுகளைப் பேசும் படம். தமிழ் இளைஞர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அவர்களுடைய வாழ்த்துக்களை நெகிழ்ச்சியோடு வெளிப்படுத்தி இருந்தார்கள். பிரித்துவைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் உள்ளுக்குள் உறைந்துபோன மனிதத்தைத் தோண்டி எடுக்கும் வேலையை ஒரு படைப்பு செய்ய வேண்டும். அப்படியான படைப்புகளுக்குத்தான் உள்ளத்தில் இருந்து பாராட்டுக்கள் வரும்! அது என் படங்களுக்குக் கிடைக்கிறபோது நான் முழுமையான படைப்பாளியாகிறேன்.”

”இலங்கையில் தற்போதுள்ள நிலைமை என்ன? தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் நடக்கும் உரிமைப் போரின் முடிவுக்கு, ஒரு சிங்களராக நீங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன?”

”இந்தியாவில் பணவீக்கம் 11 சதவிகிதமாக இருக்கிறது என்கி றார்கள். ஆனால், இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்பே பண வீக்கம் 20 சதவிகிதத்தைத்தாண்டி விட்டது. அத்தியாவசியப் பொருட் களின் விலை பத்து மடங்கு விலையேற்றம்செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஒரு நிம்மதியான, அமைதியான சூழலுக்கு மக்கள் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். சிங்களவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறார்கள். பிரிட்டிஷ்காரர்கள் தங்களுடைய சுயநலத்துக்கு நம்மைப் பிரித்து ஆண்டார்கள். அதையே ஏன் நாமும் கடைப்பிடிக்க வேண்டும்? எல்லோருடைய வாழ்க்கையிலும் போரின் பாதிப்புகள் நிறையத் தழும்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. ஒரு குடிமகனாக என்னுடைய கருத்தெல்லாம்… அமைதியை அமைதியான முறையில்தான் கொண்டு வர வேண்டும்என்பது தான்!”

ஆனந்த விகடன் (09-07-08)

பின் குறிப்பு : பிரசன்ன விதானங்கே குறித்து ஆனந்த விகடனில் வந்த உலக சினிமா தொடரில் படித்தபோது பிரமிப்பும் மரியாதையும் உண்டானது. அவர் அடிக்கடி சென்னை வருகிறார் என்ற தகவலின் அடிப்படையில் ரொம்ப காலம் யாரைப் பிடித்தால் அவரை சந்திக்க முடியும் என்று தேடிக்கொண்டிருந்தேன். ஒருநாள் எதேச்சையாக அஜயன் பாலாவிடம் இதை சொல்லப்போக,எழுத்தாளர் விஸ்வாமித்திரன், பிரசன்னவிடம் இணை இயக்குநராக இருக்கும் விஷயத்தை சொன்னார். உடனே விஸ்வாமித்திரனை கைபேசியில் பிடித்தேன். 3 மாதங்களுக்கு பிறகுதான் அவர் சென்னை வரவிருக்கிறார் என்றார் விஸ்வாமித்திரன். 3 மாதங்கள் முடிந்த நிலையில் மீண்டும் அவரிடம் பேசினேன். இங்குதான் இருக்கிறார் எனறார். மகிழ்ச்சிஒரு சந்திப்புக்கு உதவி செய்யுங்கள் என்றேன். சரி என்றார். நினைவுபடுத்த மீண்டும் அழைத்தேன். அடுத்த வாரம் என்றார். வாரம் கழிந்த நிலையில் மீண்டும் அழைத்தேன். வேலை பளு என்றார்இப்படியாக சில மாதங்கள் கழிந்த நிலையில் ஒரு நாள் விஸ்வாமித்திரனிடம் சண்டையே போட்டுவிட்டேன். பாவம் பயந்து விட்டாரோ என்னவோ பிரசன்னவின் முந்தைய படங்களைப்பார்க்கச் சொல்லி, சந்திக்கவும் ஏற்பாடு செய்துகொடுத்தார்.
பிரசன்னவின் படங்களைப் போல அவருடைய சுபாவமும். வெளிபூச்சு இல்லாத மனிதராக பழகினார். என்னுடைய கேள்விகளுக்கு மனதிலிருந்து பேசினார். இலங்கை அரசிமிடருந்து அவருக்கு வந்துகொண்டிருந்த மிரட்டல்கள் காரணமாக அரசியல் பேசுவதை தவிர்த்தார். அப்படியிருந்தும் அவருடைய பேட்டி, அமைதியை விரும்பும் ஒரு மனிதநேயவாதியின் எதிர்ப்பார்ப்பை கூறுவதாகவே அமைந்திருந்தது. அரசியல் பேசியது. இன்றை சூழலுக்கு இது மிகவும் தேவை என்பதால் பிரசன்னவின் பேட்டியை மீள் பிரசுரம் செய்திருக்கிறேன்.

Follow

Get every new post delivered to your Inbox.