சோதனை எலிகளாக்கப்படும் பழங்குடியினப் பெண்கள் மார்ச் 31, 2010
Posted by மு.வி.நந்தினி in அரசியல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், சமூகம், டாக்டர் டயானா ஹார்ப்பர், பழங்குடிகள், பழங்குடியினப் பெண்கள், மருத்துவ மோசடி.Tags: கர்ப்பப்பை வாய் புற்றுநோய், டாக்டர் டயானா ஹார்ப்பர், பழங்குடியினப் பெண்கள், மருத்துவ மோசடி
7 comments
‘உங்கள் வீட்டு 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பு மருந்து கொடுங்கள்’ என சில மாதங்களுக்கு முன் ரேவதி உள்ளிட்ட முன்னாள் நடிகைகள் ஒரு தொண்டு நிறுவனம் தயாரித்த விளம்பரத்தில் பிரச்சாரம் செய்தது நினைவில் இருக்கலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தகைய பிரச்சாரங்கள் உதவலாம். ஆனால் இவற்றுக்கு இன்னொரு புறம் இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும்.
‘நோய் வருவதற்கு உண்டான காரணங்களை கண்டறிந்து அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்காமல், தடுப்பு மருந்துகளை பயன்படுத்துங்கள் என்கிற பிரச்சாரங்கள் மருந்து நிறுவனங்களின் பணப்பையை நிரப்புவதற்காக செய்யப்படுபவை’ என்பது மக்கள் நலனில் அக்கறை கொண்ட மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து பற்றி ஒரு பகீர் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. ஆந்திராவில் சோதனைக்காக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை உட்கொண்ட மூன்று இளம்பெண்கள் உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்த இந்த மூவரும் பழங்குடி இன பெண்கள். இன்னொரு தகவல் என்னவென்றால் ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் பழங்குடி பெண்களுக்கு சோதனை ரீதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து கொடுத்திருக்கிறார்கள். இந்த பெண்கள் இறந்ததற்கான காரணம் தடுப்பு மருந்தை உட்கொண்டதுதான் என்று தெள்ளத்தெளிவாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது. வழக்கம் போல ஆந்திர காவல் மற்றும் சுகாதாரத்துறை மூன்று பெண்களும் தற்கொலை செய்துகொண்டார் என அறிக்கை (டெக்கான் கிரானிக்கல் செய்தி) விட்டு, சம்பவத்தை மூடிமறைத்துவிட்டார்கள்.
இந்திய அரசு, பழங்குடி மக்கள் மேல் ஆபரேஷன் கிரீன் ஹண்டில் இறங்கியிருக்க, மற்றொரு புறம் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பழங்குடி பெண்களை சோதனை எலிகளாக்கி இருக்கின்றன. இந்த மருத்துவ அத்துமீறலை எமக்கு தெரியப்படுத்தியவர் மருத்துவர் வீ. புகழேந்தி. கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படுத் கதிர்வீச்சு அபாயம் குறித்து தொடர்ந்து குறல் எழுப்பி வருபவர். சர்ச்சை குறித்தும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்தும் இவரிடம் கேட்டோம்…
“இந்தியாவில் அதிக பெண்கள் பாதிப்புக்கும் உயிரிழப்புக்கும் உள்ளாவது சர்விக்கிள் கேன்சர் என்று சொல்லப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குத்தான். வருடத்திற்கு கிட்டத்தட்ட 75 ஆயிரம் பெண்கள் இறப்பதாகவும், ஒன்றரை லட்சம் பெண்களுக்கு இந்த புற்றுநோய் அறிகுறி கண்டறியப்படுவதாகவும் அரசு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
சிறு வயதிலேயே பாலியல் தொடர்பு (பால்ய திருமணங்கள் மூலமாக) ஏற்படுவது, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் பாலியல் உறவு கொள்வது, பால் உறுப்புகளை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது, கர்ப்பத்தடை சாதனங்கள் பயன்படுத்துதல் போன்றவையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படக் காரணங்கள். இந்தக் காரணங்களை ஒதுக்கிவிட்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து குறித்துதான் இப்போது அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் டாக்டர் வீ. புகழேந்தி. தொடர்ந்த அவர்,
“இந்த புற்றுநோய் தடுப்பு மருந்தின் விலை 10 ஆயிரம் ரூபாய். தடுப்பு மருந்துகளை இலவசமாகப் போடுகிறோம் என்று கூவிக்கூவி அழைக்கும்போதே அலட்சியம் காட்டுபவர்கள் இருக்க, பத்தாயிரம் ரூபாய் கொடுத்து எத்தனை பேர் போடுவார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தின் பெரிய பெரிய கார்ப்பொரேட் மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்தை போடுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, இந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடு ஒரு தனியார் தொண்டு நிறுவனம் Gardasil என்ற பெயர் கொண்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை, ஆந்திரா மற்றும் குஜராத்தில் வசிக்கும் 14 வயதுக்குக்கு உட்பட்ட (செக்ஸுவலாக ஆக்டிவ் ஆகும்முன் இந்தத் தடுப்பு மருந்து போடப்பட வேண்டும்) பழங்குடி பெண்கள் 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை ரீதியில் அளித்திருக்கிறார்கள். மூன்று தவணைகளில் போடப்பட்ட இந்த மருந்தை மூன்றாவது தவணையாக உட்கொண்ட ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நடந்திருக்கிறது. தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதால்தான் இந்தப் பெண்கள் உயிரிழந்தார்கள் என மருத்துவபரிசோதனை முடிவுகள் சொல்கின்றன.
தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும்போது மயக்கம், தலைவலி, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு, அஜீரணக்கோளாறு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும் எனவும் உச்சபட்சமாக உயிரிழப்பும் நிகழலாம் எனவும் இந்த மருந்தை கண்டுபிடித்த டாக்டர் டயானா ஹார்ப்பர் தெரிவித்திருக்கிறார். லண்டனில் 14 வயது இளம் பெண் ஒருவருக்கு தடுப்பு மருந்து கொடுத்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து டயானா ஹார்ப்பரே ஒப்புக்கொண்ட உண்மை இது. அதோடு இந்தத் தடுப்பு மருந்து புற்றுநோய் வந்தால் அதனுடைய தாக்கத்தை குறைக்குமே தவிர, முற்றிலும் வராமல் தடுக்காது என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
இந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடுதான் பழங்குடியின இளம்பெண்கள் சோதனை மிருகங்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை அப்பாவிப் பெண்கள் விபரீத சோதனைகளுக்குப் பலியாவோர்களோ என்பதுதான் நம்முடைய கவலையாக இருக்கிறது.ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் தடுப்பு மருந்தின் விலை அதிகமாக இருக்கிறது என்று கவலைப்படுகிறார்களே தவிர, தடுப்பு மருந்தின் பக்கவிளைவுகள் குறித்து அக்கறைப்படவில்லை” என்று காட்டமான டாக்டர் வீ. புகழேந்தி, கர்ப்ப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை பட்டியலிட்டார்.
“ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பிரச்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும். திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ளும் பழக்கம் கிராமப்புறங்களில்தான் அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. இத்தகைய காலகட்டத்தில் பாலியல் குறித்த சரியான விழிப்புணர்வை கட்டாயம் செய்தாக வேண்டும். அடுத்து, நாப்கினை உபயோகப்படுத்துவதன் அவசியம் குறித்தும் பால் உறுப்புகளை தூய்மையாக பராமரிப்பது குறித்தும் எடுத்துச் சொல்ல வேண்டும். அரசு, இவற்றை முழுவீச்சோடு செய்தாலே கர்ப்ப்பை வாய் புற்றுநோய் இறப்பு விகிதம் தன்னால் கீழே இறங்கிவிடும்” என்று முடித்தார்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து சர்ச்சை குறித்து தெஹல்கா இதழ் விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. படிக்க…
லக்ஷ்மணானந்தா கொலையை துப்பு துலக்கினார் குருசாமி! April 13, 2009
Posted by மு.வி.நந்தினி in அரசியல், இந்துத்துவம், ஒரிசா, கந்தமால், பழங்குடிகள், பா.ஜ.க. வேட்பாளர், லக்ஷ்மணானந்தா கொலை.Tags: இந்துத்துவம், கந்தமால், பா.ஜ.க. வேட்பாளர், லக்ஷ்மணானந்தா கொலை
8 comments

ஒரிசாவில் இந்துத்துவம் - பின்னணி
ஒரிசாவின் கந்தமால் மாவட்டம் ‘இந்துத்துவ‘ தீவிரவாதத்திற்கு உதாரணமாகும் சிறப்புத் தகுதி உடையது. காலங்காலமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டு வாழும் தலித்துகளும் பழங்குடிகளும் இம்மாவட்ட மக்கள். கிறித்துவ மிஷனரிகள் தலித், பழங்குடிகள் மத்தியில் பணியாற்றிவருகிறார்கள். விளைவாக மதமாற்றங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பழங்குடிகள் கிறித்துவர்களாக மாறும்போது பழங்குடிகளுக்குண்டான அரசாங்க உரிமைகள் அத்தனையும் கிடைக்கும் என்பதும் தலித்துகள் கிறித்துவர்களாக மாறும் தலித்துகளுக்குரிய உரிமைகள் இல்லை, அதனால் மிஷனரிகள் பிரத்யேக உரிமைகளை தலித்துகளுக்குப் பெற்றுத்தர முயற்சித்தார்கள் என்பதும் இங்கு தலித்-பழங்குடிகளிடையே புகைச்சல் ஏற்பட்டதன் பின்னணி. இதை ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க போன்ற இந்துத்துவ சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. இந்த புகைச்சலை ஊதிப்பெரிதாக்கிள எரிய விட்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தன். 1994 முதல் தலித்-பழங்குடி மோதல் கிறித்துவர்கள்-இந்துக்கள் இடையேயான மோதலாக உருவெடுத்தது. விஷ்வ ஹிந்து பரிஷத்,ஆஸ்ரமங்கள் என்ற பெயரில் கந்தாஸ் பழங்குடி இன மக்களை வன்முறையாளர்களாக இந்துத்துவ ரவடிகளாக மாற்றத் தொடங்கியது. இதில் முக்கியமானவர் லக்ஷ்மாணனந்தா சாமியார் 1960களிலே கர சேவை செய்வதற்காக கந்தமால் மாவட்டத்தில் ஆசிரமம் அமைத்தவர். கிறித்துவத்துக்கு மாறும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பழங்குடி மக்களை இந்துத்துவ விஷத்தை ஊட்டி ஏவி விட்டுக்கொண்டிருந்தவர். கிறித்துவதுக்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களை ‘தாய்‘ மதத்திற்கு திருப்புவதுதான் பல பத்தாண்டுகளாக இவர் செய்து வந்த குறிப்பிடத்தகுந்த மற்றொரு வேலை!
கிறிஸ்துமசுக்கு முன் தினமான டிசம்பர் 24, 2007ல் சதாரணமாக இருதரப்பினருக்கிடையே ஆரம்பித்த வாய்ச்சண்டை கிறித்துவ தலித்துகளுக்கு எதிராக பெரும் கலவரமாக வெடித்தன் பின்னணியில் லக்ஷ்மணானந்தா சாமியார் இருந்ததாக கைகாட்டுகிறார்கள். சர்ச்சுகளுக்கு முன்பு தலித் கிறித்துவர்கள் உயிரேடு கொலுத்தப்பட்டது, கிராமம் கிராமமாக கிறித்துவர்களின் வீடுகள்,இருந்த சுவடே தெரியாமல் அடித்து நொறுக்கப்பட்டது, குழந்தை,பெண்கள் உள்பட பல கிறித்துவர்கள் தேடிக் கொல்லப்பட்டது என வன்முறைகள் ‘இந்துத்துவ‘ தீவிரவாதிகளால் திட்டமிட்டு கட்டவிழ்க்கப்பட்டன. (தலையில் காவித்துணி கட்டி, இரண்டு கைகளும் வாள் ஏந்தி விண்ணை அதிரவைக்கும்படி கூவிக்கொண்டு வன்முறையை காட்டிய ஒரு ‘காவித்தொண்ட‘ரின் புகைப்படம் அத்தனை நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வந்தது நினைவிருக்கலாம்!) பா.ஜ.க ஆதரவோடு ஆட்சியை அலங்கரித்துக்கொண்டிருந்த நவீன் பட்நாயக் அரசு வன்முறையை தடுத்து நிறுத்தும் நோக்கில் எதுவும் செய்யவில்லை, கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. அந்த தாக்குதலின் போது சேதமான வீடுகள்கூட இன்னும் அங்கே சீரமைக்கப்படவில்லை.
லக்ஷ்மணானந்தா கொலையை துப்பு துலக்கினார் குருசாமி!
கடந்த வாரம் என்னுடைய தோழியை சந்திப்பதற்காக எத்திராஜ் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். தோழியை பார்க்க நேரமெடுத்ததில் எதிரே இருந்த ஷாப்பிங் காம்ளக்ஸ்சுக்குள் நுழைந்து பராக்கு பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெராக்ஸ் காப்பிகள் கண்ணில் பட்டன. ‘லக்ஷ்மணானந்த படுகொலை - யார் கொலையாளி?’ தலைப்பில் எஸ்.குருமூர்த்தி துக்ளத் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் நகல்கள் அவை. அந்தக்கடைக்காரர் காவித்தொண்டர் போலும் இலவச விநியோகம் செய்துகொண்டிருந்தார்.
ஆகஸ்ட் 2008ல் லக்ஷ்மணானந்தா என்ற விஷ்வ ஹிந்து பரிஷத் சாமியார் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை ஆராய்ந்து எழுதியிருக்கிறார் குருசாமி. கட்டுரையின் சாரம் லக்ஷ்மணானந்தா, ஒரிசாவில் ஆற்றிய தொண்டுகள், அப்பாவியான அவரை கிறித்துவ தீவிரவாத அமைப்புகளும் மாவோயிஸ்டுகளும் சேர்ந்து தீர்த்துக்கட்டினர் என்பதே. அவர் துணைக்கு அழைத்திருந்தது ஒரிசா முன்னாள் டி.ஜி.பி. அசோக் சாகு என்பவரை.
” ‘இந்த(கந்தமால்) தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் புதிதாக மதம்மாறிய கிறிஸ்தவர்கள்‘ என்று ஒரிஸ்ஸாவின் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அசோக் சாகு என்பவர் தன்னுடைய கட்டுரையில் எழுதியிருக்கிறார்” என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டு..

வேட்பாளரைக் காணவில்லை!
இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு பா.ஜ.கவில் தனித்த இடம் உண்டு. நான்கு சிறுபான்மையினரை வெட்டிக்கொன்றால் அல்லது 40 சிறுபான்மையினர் வீடுகள் நாசமா போகக்காரணமாக இருந்தால் இந்தா புடி எம்.பி சீட்டு என்று வெளியே சொல்லப்படாத சட்டம் இருக்கும்போல. போன மாதம்தான் குஜராத் கலவரத்தில் தேடப்பட்டு வந்த மோடி அமைச்சரவையின் உயர் கல்வித்துறை அமைச்சர் போலீசில் சரணடைந்தார். இப்போது கந்தமால் தொகுதி வேட்பாளர் அசோக் சாகுவைத் தேடுகிறது மாநில போலீஸ். எம்.பி ஆகி அமைச்சர் ஆவதற்குள் விதி விளையாடிவிட்டது. முன்னாள் விஷ்வ ஹிந்து தொண்டரும் ஐபிஎஸ் படித்தவருமான அசோக் சாகு, ஒரிசாவின் குருசாமி! தேடித்தேடி ‘கிறித்துவ‘ பயங்கரவாதம், ‘முஸ்லிம்‘ தீவிரவாதம் என்றெல்லாம் கட்டுரை எழுதுவார். (சங்க் பரிவார் இணைய தளத்தில் இவருடைய கட்டுரைகள் படிக்கக் கிடைக்கும்) எழுதுவதோடு, காவித்தொண்டாற்றுவதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். எம்.பி.சீட்டுக்கு ஆசைப்பட்டு தேர்தல் களத்தில் இறங்கிவிட்டார். போதாத காலம்… தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவர் பேசிய ‘எழுச்சியூட்டும் பேச்சு‘(‘லக்ஷ்மணானந்தா சாமிகளை கொன்றது யார்? கொலை செய்தவனுக்குத் தெரியுமா இதற்கு பயங்கரமான பின்விளைவுகள் ஏற்படும் என்று?’) தேர்தல் ஆணைய விதிகளின்படி சர்ச்சைக்குரிய பேச்சாகிவிட்டது. மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய காவல்துறை காத்திருக்க அப்ஸ்கான்ட் ஆகிவிட்டார் அசோக் சாகு!
இப்படிப்பட்ட மதிப்பிற்குரியவர் எழுதிய கட்டுரைகளைத் தோண்டித்துருவி ஆராய்ந்து கந்தமால் மக்களின் ரட்சகர்களாக காவித்தொண்டர்களை முன்னிறுத்த கட்டுரை எழுதியிருக்கிறார் குருசாமி. அப்பட்டமான மத படுகொலைகளுக்குப் பின்னணியில் இருக்கும் உண்மையை மூடிமறைக்கப் பார்க்கிறது காவித்துணி. இப்போதைக்கு அது கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது!
“பெண்கள் சுயஉதவிக்குழு பணம் வட்டித்தொழில் செய்யத்தான் பயன்படுகிறது!” மார்ச் 30, 2009
Posted by மு.வி.நந்தினி in அண்ணி, அரசியல், இடஒதுக்கீடு, சுய உதவிக்குழு, திருநங்கைகள், தே.மு.தி.க, நரிக்குறவர் இனப் பெண்கள், பழங்குடி, பழங்குடிகள், பிரேமலதா விஜயகாந்த், பெண்கள், விருத்தாசலம் தொகுதி, ஸ்டாலின்.6 comments

அரசியல்வாதிகளுடன் பேசுவதே ஒருவகையில் காமெடியான அனுபவம்தான். நிசர்சனத்தை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தபோதும்,அதை மறைத்து வெளி அலங்காரம் பூசிக்கொண்டு நடிப்பில் கைத்தேர்ந்தவர்கள். சில சமயம் அவர்களை அறியாமலே உண்மையான முகத்தைக் காட்டிவிடுவார்கள். பிரேமலதாவும் நடித்தார். வெகுஜன இதழ்களில் எழுதும் அந்த நடிப்பையும் உண்மையென சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனாலும் மற்ற அரசியல்வாதிகள் செய்யும் அரசியலைவிட, தேமுதிக-வின் அரசியல் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
ஒரு வருடத்திற்கு முன் பிரேமலதாவுடன் நடந்த சந்திப்பு. நிறைய பேசினார். நிறைய எழுதியதை உதவி ஆசிரியர் எடிட் செய்யப்பட்டு வெளியானது இந்த பேட்டி. அவர் பேசிய ஒரு முக்கியமான விஷயம் பெண்கள் சுயஉதவிக்குழுக்கள் பற்றியது. பெண்களின் சுய முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்டது என்று சொல்லிக்கொண்டு அரசியல்வாதிகள் பெண்களை வட்டித்தொழிலுக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். இதுகுறித்து நிறையவே பேச வேண்டியிருக்கிறது… தேர்தல் அரசியல் சூடு பிடித்திருக்கும் வேளையில் தேமுதிக-வின் அரசியல் நிலைப்பாட்டை கணிக்கும் ஆர்வத்தோடு பிரேமலதா விஜயகாந்தின் பேட்டியை மறுபிரசுரம் செய்கிறேன். நண்பர்களின் கருத்துக்களை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.
பிரேமலதா விஜயகாந்த்… சமீபத்தில், திருச்சியில் நடந்த தே.மு.தி.க. மகளிர் மாநாட்டை முன்னின்று நடத்தியதிலிருந்து, அரசியல் வட்டாரத்தில் ‘ஹாட் டாப்பிக்‘ ஆகியிருக்கிறார். கடைசி கேள்வி வரை எந்தவிதப் பதற்றமோ முகச்சுளிப்போ இல்லாமல், பக்குவப்பட்ட ஓர் அரசியல்வாதி போன்று மிகத் தெளிவாகவும் நிதானமாகவும் பதில் சொல்கிறார்.
”எப்படி இருந்தது மகளிர் மாநாடு?”
”சூப்பர் ஹிட்! மாநாடு அறிவித்து இருபதே நாட்களில் கிட்டத்தட்ட 7 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு வரலாறுபடைத்து இருக்கிறார்கள். இதற்கு முன் வேறு எந்தக் கட்சியிலும் இவ்வளவு பெண்கள் ஒரே இடத்தில் கூடியது இல்லை. பணம் தரவில்லை; பிரியாணி போடவில்லை. ‘குடும்பத்தோடு கலந்துக்கணும்’ என்று கேப்டன் சொன்ன வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்து, கூட்டத்துக்கு வந்து கலந்துகொண்டு தங்களுடைய உண்மையான பாசத்தை நிரூபித்துவிட்டார்கள் எங்கள் பெண்கள்!”
”உங்களை முன்னிலைப்படுத்துவதற்காகத்தான் இந்த மகளிர் மாநாடு நடத்தப்பட்டதா?”
”எந்தக் கட்சியிலும் இல்லாத பல பாஸிட்டிவான விஷயங்கள் எங்கள் கட்சியில் இருக்கின்றன. அதையெல்லாம் பார்க்கமறுக்கிறவர்கள்தான் ‘மனைவி, மச்சினன்’ என்று தேவை இல்லாத விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்த லில் கேப்டன் நின்ற தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே என் சகோதரர் நின்றார். மற்ற அனைத்துத் தொகுதிகளும் கேப்டனுக்கு ரசிகர்களாக இருந்து கட்சியில் இணைந்தவர்களுக்கும், புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. அவர்கள் யாரும் ரத்த உறவு உள்ளவர்கள் இல்லை.
மாநாடு அறிவிப்பு செய்தபோது, ‘பிரேமலதாவுக்குக் கட்சியில் முக்கியமான பதவி தரப்போகிறார்கள். அதை அறிவிக்கத்தான் இந்த மாநாடு‘ என்றார்கள். இதோ, மாநாடு நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இதுவரை எனக்கு எந்தப் பதவியும் கொடுக்கப்படவில்லை. நான் தே.மு.தி.கவின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே! தலைவரின் மனைவி என்ற வகையில் என்னை மகளிர் மாநாட்டுக்குத் தலைமை ஏற்க வைத்தார்கள். அவ்வளவுதான்!
கட்சிப் பதவிகளுக்கு வரும் எண்ணமோ, தேர்தலில் போட்டியிடும் ஆர்வமோ எனக்கு இல்லை. இனிமேலும் வரப்போவது இல்லை. புரட்சிக்கலைஞரின் மனைவி என்பதே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய மரியாதை. தொண்டர்கள் என்னை அன்போடு ‘அண்ணி‘ என்று அழைப்பதே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பட்டம்!”
”சமீபகாலமாக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், சுய உதவிக் குழு பெண்களுக்கு நிறைய நலத் திட்டங்கள் வழங்குவதைப் பார்த்துதான், பெண்களை ஈர்க்கும் வகையில் உங்கள் மகளிர் மாநாட்டிலும் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறதே?”
”எங்கள் தலைவர் பிறரைப் பார்த்து உதவி செய்யக்கூடியவர் அல்ல; உதவி செய்வது என்பது அவருடைய பிறவிக் குணம். நடிக்க வந்து, இந்த 30 வருடங்களாக ஏழை, எளியவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் மூலமாக நிறைய உதவிகள் செய்துகொண்டு இருக்கிறார். அவருடைய ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு 50 ஆயிரம் கொடுத்து வருகிறார். கிட்டத்தட்ட 15 வருடங்களாக, ஜானகி அம்மாள் உயிருடன் இருந்தபோதிலிருந்தே இதைச் செய்து வருகிறார். ஆனால், எம்.ஜி.ஆரைச் சொந்தம் கொண்டாடுபவர்களுக்கு இப்போதுதான் உதவி செய்ய மனசு வந்திருக்கிறது! அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், ஏதோ தாங்கள்தான் பெண்கள் சுய உதவிக் குழுக்களை எல்லாம் வளர்த்துவிட்டதாக மார்தட்டிக்கொள்வார்கள். உண்மையில், சுய உதவிக் குழுக்களில் என்ன நடக்கிறது என்பது பற்றி யாருக்கும் அக்கறை கிடையாது. பல கிராமங்களில் உள்ள பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு, கிடைக்கும் பணத்தை வைத்து என்ன பொருளைத் தயாரிப்பது, அதை எப்படி விற்பது என்று எதுவுமே தெரிய வில்லை. கிடைத்த பணத்தை வட்டிக்கு விடுவதுதான் நடக்கிறது. சுய உதவிக் குழுக்களில் உள்ள பல பெண்கள் இதை என்னிடமே தெரிவித்தார்கள். இந்த விஷயங்கள் எங்கள் காதுக்கு வந்த பிறகுதான், இவர்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதன் முதல் கட்டம்தான், தலைவர் தன் சொந்தப் பணத்திலிருந்து 50 லட்ச ரூபாயை சுய உதவிக் குழுப் பெண்களுக்கு வழங்கியது. விருத்தாசலம் தொகுதியில் எம்.எல்.ஏ. நிதி முழுவதையும் பயன்படுத்தியது போக, தன் சொந்தப் பணத்தில் இலவச கம்ப்யூட்டர் மையங்களையும், தண்ணீர் டேங்க்குகளையும் கட்டிக் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர். அரசுப் பணத்தை எடுத்து யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், தன் சொந்தப் பணத்தை எடுத்துக்கொடுக்கும் மனசு எத்தனை பேருக்கு இருக்கிறது? மக்களுக்கு யார் நல்லது செய்தாலும், அதை எங்கள் தலைவரும் எங்கள் கட்சியும் நிச்சயம் பாராட்டுவோம். ஆனால், அரசு திட்டங்கள் எல்லாம் இங்கே அடிக்கல் நாட்டு விழாவோடு முடிந்துவிடுகின்றனவே?”
”பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடே இன்னும் எட்டாக் கனியாக இருக்கும்போது, உங்கள் தலைவரோ ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 50 சதவிகித இடஒதுக்கீடு தருவோம்’ என்கி றார். இது சாத்தியமா?”
”கட்சி ஆரம்பித்து நடந்த முதல் தேர்தலிலேயே 33 சதவிகித இடஒதுக்கீட்டைப் பெண்களுக்குக் கொடுத்து, வேட்பாளர்களாக நிறுத்தியது எங்கள் கட்சி மட்டும்தான்! பெண்களுக்குத் திறமை போதவில்லை என்று சொல்லப்படுவதால்தானே 33 சதவிகித இடஒதுக்கீடு இன்னும் கிடைக்காமல் இருக்கிறது! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யப்போகும் முதல் பணியே எல்லோருக்கும் தரமான கல்வி கிடைக்கச் செய்வதுதான். கல்வி கிடைத்தால் திறமை தானாக வந்துவிடும். அப்போது 33 சதவிகிதம் மட்டுமல்ல, 50 சதவிகிதமும் சாத்தியம்தான்!”
”உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு வேறு என்னவெல்லாம் நலத் திட்டங்கள் கொண்டுவருவீர்கள்?”
”மக்கள் தொகையில் பெண்கள், ஆண்களுக்குச் சமமாக இருக்கிறார்கள். தேர்தலில் ஆண்களைவிட அதிக அளவில் வாக்களிக்கிறார்கள். ஆனால், பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள்கூடத் தரப்படுவது இல்லை. வீடு, அலுவலகம் என்று எல்லா இடங்களிலும் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள் பெண்கள். தேர்தலில் மட்டுமல்லாது, மற்ற எல்லாத் துறைகளிலுமே பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொண்டுவருவோம். தங்கள் காலில் நிற்க ஆரம்பித்தாலே, தடைகளை எதிர்கொள்ளும் பலம் பெண்களுக்கு வந்துவிடும். அடுத்து, மிக முக்கியமாகத் தீர்க்க வேண்டிய பிரச்னை வரதட்சணைக் கொடுமை! வரதட்சணை வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டால்தான், எந்த ஆணும் எங்கள் கட்சியில் சேர முடியும். எங்கள் தலைவரும் வரதட்சணை வாங்கக்கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, வரதட்சணை என்பதே இல்லாதபடிக்குக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவருவோம். இதுவரை கண்டுகொள்ளப்படாத பழங்குடி, நரிக்குறவர் இனப் பெண்கள், திருநங்கைகள் என எல்லோரையும் உயர்த்தும் திட்டங்களைச் செயல்படுத்துவோம்!”
”பொறியியல் கல்லூரியை நிர்வகிக்கிறீர்கள்; தவறாமல் கட்சிக் கூட்டங்க ளுக்குச் செல்கிறீர்கள்; குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும்இருக்கிறது. எப்படிச் சமாளிக்கிறீர்கள்?”
”ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் கையாளக்கூடிய திறமை என்னைப் போல எல்லாப் பெண்களுக்குமே இருக்கிறது. நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டுப் பிரித்து வேலை செய்தால், இன்னும்கூட நிறையச் செய்ய முடியும்!”
26/03/08
புலிகளுக்காக ஒரு பயணம்… பெப்ரவரி 13, 2009
Posted by மு.வி.நந்தினி in ஊடகம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சுற்றுலா, தெப்பக்காடு, பந்திப்பூர், பழங்குடிகள், புலிகள் சரணாலயம், போராட்டம், மசினிகுடி, முதுமலை, யானைகள் சரணாலயம்.2 comments
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்கிற ஆவல் நெடுநாட்களாக இருந்தது. வெறுமனே பொழுதை போக்கிவிட்டு வரவும் ஆர்வம் இல்லை. நேரமும் சரிவர ஒத்துழைக்கவில்லை. நேரம் கனிந்து வந்தபோது, முதுமலையை சுற்றியுள்ள பகுதிகளை புலிகள் சரணாயமாக அறிவித்ததை ஒட்டி அப்பகுதிகளில் வாழும் மக்கள் (பழங்குடிகள்) எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்தி வெளியானது.
காட்டுயிர்/சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்து இயங்கும் நண்பர்களிடம் விசாரித்தபோது “நீங்களே நேரில் சென்று பாருங்கள்” என்று பீடிகை போட்டது முதுமலைக்குச் செல்லும் ஆவலுக்கு தூபம் இட்டது.
சமீப காலமாக மனிதனுக்கு கானக உயிர்களுக்குமான இருப்பு சார்ந்த போராட்டம் வலுத்து வரும் சூழலை ஒட்டி ஒரு ஆவணப்படத்தை உருவாக்கும் முயற்சி குறித்து நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். அதற்கான களஆய்வுப் பணிகளைத் தொடங்க இது சரியான தருணமென முதுமலைக்குச் செல்லும் பயணப்பணிகளைத் தொடங்கினோம். எல்லோருக்கும் ஒரே நேரத்தில் விடுப்பு கிடைக்காத சூழ்நிலையில் நானும் லிசியும் மைசூர் வழியாக கடந்த திங்கள் முதுமலைக்கு பயணப்பட்டோம்.
மைசூரிலிருந்து ஊட்டி செல்லும் சாலையில் 90 கி.மீட்டரில் இருக்கிறது முதுமலை யானைகள் சரணாலயம். அருகிலேயே பந்திப்பூர் புலிகள் சரணாலயம். இரண்டும் ஒரே காடுதான், முன்னது தமிழகப்பகுதியிலும் பின்னது கர்நாடகப்பகுதியிலும் இருக்கிறது. பந்திப்பூரை புலிகள் சரணாலயமாக அறிவித்தது 1973ல். நமக்கு இப்போதுதான் புலிகளின் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது. அதற்கும் எதிர்ப்புகள்…
முதுமலை தெப்பக்காட்டிலிருந்து 10 கி.மீ தொலைவில் மசினிகுடி என்ற ஊர். அவ்வூர் மக்கள்தான் புலிகள் சரணாலயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்கள். காட்டுப்பகுதியை கடந்து செல்லும்போது அதன் வனப்பு எங்களை லயிக்க வைத்தது. கூடவே நகரத்தை விஞ்சும் வகையில் நொடிக்கு ஒருதரம் கடந்து போன வாகனங்களைப் பார்க்க சாவு மணி அடிப்பதைப்போன்றதொரு உணர்வுதான் ஏற்பட்டது.
மூன்று நாட்கள் முதுமலையின் சில கிராமங்களைக் கண்டோம். முடிநதமட்டும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தோம். 20,30 ஆண்டுகளுக்கு முன் பிழைப்புக்காக அப்பகுதிகளில் குடியேறி அம்மண்ணின் வளத்தை உறிஞ்சி,இன்று சகல வசதிகளுடனும் வாழும் ஒரு சிலரின் எதிர்ப்புதான் ஊடகங்களால் பழங்குடிகளின் போராட்டமாக திரிக்கப்பட்டுள்ளது (அல்லது) ஊடகங்களுக்கு திரித்து சொல்லப்பட்டுள்ளது. புலிகள் சரணாலயம் ஆக்கப்பட்டால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், அதனால் சுற்றுலாவை நம்பிருக்கும் தங்களுடைய சுரண்டல் தொழில் பாதிக்கப்படும் என்பதுதான் இந்தப்போராட்டங்களின் காரணம்.

ஆனால் இப்போதும் யானை கலக்கிவிட்டுச் சென்ற குட்டை நீரையே குடிநீராக குடித்து வாழும் பழங்குடிகளின் மன்றாடல் என்னவோ யானையும் புலியுமாவது அதனுடைய உரிமையை அனுபவிக்கட்டும் எங்களை வேறு இடங்களில் குடியமர்த்துங்கள் என்பதாக இருக்கிறது…
விரிவாக சொல்ல வேண்டிய விஷயமிது, சுருக்கமாக தந்திருக்கிறேன்.
