jump to navigation

“கோர்வையாக எழுதுகிறவர்களெல்லாம் பத்திரிகையாளர் ஆகிவிட முடியாது!” – ஜெயராணி மார்ச் 4, 2010

Posted by மு.வி.நந்தினி in ஆணாதிக்கம், ஊடக பெண்கள், ஊடகப்பெண்கள், குடும்பம், சமூகம், சினிமா, ஜர்னலிஸம், ஜெயராணி, தமிழ், பத்திரிகை அறம், பாலியல், பெண்கள், போராட்டம், விருது.
Tags: , , ,
10 comments

நான் ஜர்னலிஸம் மாணவி. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் படித்தேன். பேசுவதும் பழகுவதும் எழுதுவதும் பள்ளி நாட்களிலேயே எனக்கு இயல்பாகவே வந்தது. பட்டப்படிப்பு முடித்ததுமே நாளிதழ் ஒன்றில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது என்றாலும் ஜர்னலிஸம் படித்துவிட்டுதான் பத்திரிகையாளராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். வாழ்வில் இதுவரையிலும் எடுத்த மிகச் சரியான முடிவுகளில் அதுவும் ஒன்றென தோன்றுகிறது. எனக்கான எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்துவிட்டது ஜர்னலிஸம் படிப்புதான். புகைப்படக்கலையையும் அங்குதான் கற்றுக் கொண்டேன்.

தூக்குவதற்கு சிரமமான நிக்கான் மெட்டல் பாடி கேமராவை வைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றிய நாட்கள் தான் என் எல்லா பயணங்களுக்கும் மூலம். உலகமென்றால் அது வீட்டின் நான்கு சுவர்தான் என்று கற்றுக்கொடுத்த மிக கட்டுப்பாடானக் குடும்பத்திலிருந்து கற்பிதத்திலிருந்து விடுபட்டு என் கால்களையும் சிந்தனையையும் சுதந்திரப்படுத்திக் கொண்டேன். நடந்து நடந்து இவ்வுலகைக் கடந்துவிடும் பேராவலில் சுற்றிய நாட்கள் அவை.     பயணமும் அதில் கிடைத்த அனுபவங்களும்தான் என்னை செதுக்கியது.

கோர்வையாக எழுத வருகிறவர்கள் யாரும் செய்தியாளராகிவிட முடியும் என்றாலும்.. பத்திரிகை அறம், சுதந்திரம் போன்ற அடிப்படை விஷயங்களை கற்றுத் தேர்ந்தது ஜர்னலிஸம் படித்த அந்த இரண்டாண்டுகளில்தான். என்ன மாதிரியான செய்தியாளராக இயங்கப் போகிறோம் என்று புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக என் கற்றல் காலம் அமைந்தது. அதற்காக, ஜர்னலிஸம் படித்தவர்கள் எல்லோருமே பத்திரிகை அறத்தை மீறாதவர்களாக இருப்பார்கள் என்றோ படிக்காதவர்கள் எல்லோரும் அறத்தை புறக்கணிக்கிறவர்கள் என்றோ சொல்ல வரவில்லை.

பத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் இன்று இருக்கிற நிலையில், ஊடக அறம் பற்றின புரிதலோ விழிப்புணர்வோ இல்லையென்றால் நிச்சயம் சுரணையற்ற செய்தியாளராகிவிட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் புதியவர் ஒருவருக்கு செய்தி எழுத கற்றுத் தரும் ஊடகங்கள் ஒருபோதும் அறத்தை போதிப்பதில்லை. அதனால்தான் பெரும்பாலும் உரிமைகளை பாதிக்கிற செய்திகளாகவே நாம் படிக்கவும் பார்க்கவும் கிடைக்கின்றன. ஜர்னலிஸம் படிக்கிறவர்களுக்கு பத்திரிகை அறம் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு இயல்பாக அமைகிறது. பின்னர் பணி காலத்தில் அதை செயல் படுத்த வேண்டுமா வேண்டாமா என்ற முடிவு அவரவர் கைகளில். கற்றல் வழி நடத்தல் என்பது என் பிடிவாதம் என்பதால் இந்த பத்தாண்டுகளில் பத்திரிகை அறத்தை கேள்விக்குள்ளாக்குகிற எந்த செய்தியையுமே நான் எழுதவில்லை.

எழுத்து மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தேன் என்று சொல்வதற்கில்லை. அதனால்தான் பத்திரிகை துறையை தேர்ந்தெடுத்தேன் என்று சொன்னால் அது பொய். தனிப்பட்ட முறையில் என் எல்லா உணர்வுகளுக்கும் உகந்ததாக இந்த துறை அமைந்தது. ஒவ்வொருவருக்கும் அவரவரரின் திறமைக்கும் குணத்திற்கும் ஏற்ற வேலை என்று ஏதாவது இருக்குமில்லையா? என் குணத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்தியது பத்திரிகைத் துறை. காரணம் எழுத்து, புகைப்படம், பயணம் என்ற மூன்று அற்புதமான விஷயங்களையும் என்னால் இங்கு செயல்படுத்த முடிந்தது.  விரும்பியதையே தொழிலாக, வேலையாக செய்வது எத்தனை சுகம்! எத்தனையோ இன்னல்களுக்கிடையில் அந்த சுகத்தை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

எல்லா நவீன துறைகளைப் போலவும், பெண்கள் ஊடகப் பணிக்கு வருவதற்கு குடும்பங்கள் தடை போடுகின்றன என்பது உண்மைதான். சில ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே வசிக்கக்கூடிய கிராமம் ஒன்றிலிருந்து சென்னை நோக்கிய என் பயணம் அத்தனை எளிதானதாக அமைந்துவிடவில்லை. பெரும்பாலான பெண்களுக்கு இந்த சவால் இருக்கிறது. இந்த சவால்களை ஏதாவது இயக்கங்கள் வந்துதான் எதிர்கொள்ள வேண்டும் என்றில்லை. தடைகளைத் தாண்டும் மனப் பக்குவத்தை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது. ஊடகத் துறையில் பெண்கள் முதல் தலைமுறையாக காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த கட்டுப்பாடுகளோ அடக்குமுறைகளோ இன்று பெருமளவில் தளர்த்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றும் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கு என்று பேசிக் கொண்டிருப்பது அபத்தம். இந்த மாதிரியான குறுகிய விவாதங்களை நாம் கடந்தாக வேண்டும்.

பெண்களுக்கிருக்கும் சவால் என்பது எல்லாத் துறைகளுக்கும் பொதுவான ஒன்று. கல்வியறிவு பெற்று பணிபுரியத் தொடங்கிய காலகட்டத்தில் பெண்களுக்கான பிரத்யேக வேலைகளில் ஒன்றாக ஒதுக்கப்பட்டது ஸ்டெனோகிராபர் பணி. அந்த காலக் கட்டத்தில் வந்த திரைப்படங்களில் பார்த்தால் ஸ்டெனோகிராஃபர்கள் எப்போதும் மேனேஜர்களின் மடியிலேயே உட்கார்ந்திருப்பதைப் போலவேதான் காட்சிகளை அமைத்தார்கள். அன்றைய தேதிக்கு நவீன துறையாக இருந்த ஸ்டெனோகிராஃபி பணிக்கு பெண்கள் அதிகளவில் வரத் தொடங்கினார்கள். திறமையால் வந்தார்கள் என்பதை விடவும் வயதையும் அழகையும் முன்னிறுத்தி பாலினத்தை தவறாக பயன்படுத்தியதாலே பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக அப்போது நம்பப்பட்டது. அதை தான் திரைப்படங்களில் காட்சிபடுத்தினார்கள்.

வெற்றிகரமான செயல்படும் ஒரு பெண் திறமையால் அதை சாதித்திருக்கமாட்டார் என்று நம்புவது இந்த சமூகத்தின் பொது புத்தி. இந்த பொது புத்திதான் இன்று ஊடகங்களிலும் நிலை கொண்டிருக்கிறது. பெண்களின் திறமையை புறக்கணிப்பதிலும் சாதனைகளை இழிவுபடுத்துவதிலும் ஆண்கள் அளவிற்கு (கூடுதலாகவே கூட) பெண்களும் ஈடுபடுகிறார்கள்.
ஊடகத் துறையில் பணிபுரியும் பெண்கள் சம அளவில் பெண்களாலும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். போட்டியும் பொறாமைகளும் இருக்கிற வரை இந்த நிலை நிலையானது என்றே தோன்றுகிறது. அதனால் அதிகபட்ச மன உறுதியை வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இன்று பெண்களுக்கிருக்கும் சவால்களுக்கு ஒத்த அளவிலான பிரச்சனைகள் ஆண்களுக்கும் இருக்கிறது. அதற்கு காரணம் ஊடகத்துறையில் மேலோங்கி இருக்கும் பண்ணையார்த்தனம். ஆண்களும் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்களா என்று  மிக உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் மன உளைச்சலை தரக் கூடிய மற்ற எல்லா துயரங்களையும் ஆண்களும் எதிர்கொள்கிறார்கள். பிரச்சனை ஆண் பெண் என்ற அடிப்படையில் வருகிற பாலின பாகுபாடு அல்ல. புரொபஷனலிஸம் என்று சொல்லக்கூடிய தொழில் நேர்த்திக்கு இருக்கும் தட்டுப்பாடு. ஒரு ஊழியரை எப்படி நடத்துவது அல்லது கையாள்வது என்ற அடிப்படை நாகரிகம் தெரியாத மேலதிகாரிகள் எல்லா துறையிலும் இருக்கிறார்கள். ஊடகத்துறையிலும் இருக்கிறார்கள். ஒரு அலுவலகத்தில் 10 பேர் பணிபுரிகிறார்கள் என்றால் அந்த 10 பேரும் ஒரே மாதிரியான அல்லது சம அளவிலான திறமைகளை கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. யார் யாருக்கு என்னென்ன திறமை இருக்கிறது என்று கண்டறிவதும் அவரை குறிப்பிட்ட அந்த வேலைக்கு பயன்படுத்துவதும் தலைமைப் பண்பின் முக்கிய அம்சம். ஊழியர்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகளை வழங்குவதால் மட்டுமே எந்த ஒரு நிறுவனமுமே அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்.

ஊடகங்களில் ஆண்களின் கை மேலோங்கி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. அதனால் செய்திகளில் மிக மோசமாக வெளிப்படும் ஆண் நெடி குமட்டலை உண்டாக்குவதாக இருக்கிறது!. தப்பித் தவறி கூட ஒரு பெண் செய்திகளில் அடிபட்டுவிடக் கூடாது. குற்றச்செய்திகள் என்றால் நிலைமை மிக மோசம். ஆண் நிருபர்களின் அதிகபட்ச கற்பனைத் திறனும் வக்கிரங்களும் வெளிப்படுவது பெண்கள் சம்பந்தப்பட்ட செய்திகளில்தான்.

பெரும்பாலான செய்திகள் இப்படி அந்த நேர கிளுகிளுப்பிற்கும் பரபரப்பிற்காக மட்டுமே எழுதப்படுகின்றன. பத்திரிகைகளில் நிலைகொண்டிருக்கும் ஆண் மொழியும், மேலோங்கியிருக்கும் ஆண் மனோபாவமும் மிகவும் மோசமான பாதிப்புகளை சமூகத்தில் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. எவ்வளவோ விமர்சனங்களுக்கு உள்ளான போதும் இன்னும் அந்த பிரபல நாளிதழ் செய்திகளில் அடிபடும் பெண்களை அழகி என்று குறிப்பிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. பெருமளவில் பெண்கள் ஊடகப்பணிக்கு வந்தால் இந்த அவலம் மாறுமா என்று கேட்டால் அதுவும் சந்தேகம்தான். ஏனென்றால் வருகிற எல்லோருமே ஆண் பெண் பாரபட்சமில்லாமல் கண்மூடித்தனமாக வழக்கமான இந்த எழுத்துமுறைக்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் சில பத்திரிகைகளில் பெண்களும் ஆண் மொழியில் ஆண் மனோபாவத்துடன் எழுதுவதை பார்க்க முடிகிறது. தன்னளவில் மிக நேர்த்தியான மொழியாற்றலையும், சமூகப் பார்வையையும் செய்தி எழுதும் நுணுக்கத்தையும்  கொண்டிருந்தாலே ஒழிய இதுபோன்ற வக்கிரங்களில் இருந்து தப்பிப்பது கடினம். ஜாதி, மத, பாலின அடையாளங்களைக் கடந்த சமத்துவ மொழி ஊடகங்களின் இன்றைய மிகப் பெரியத் தேவையாக இருக்கிறது.   வேண்டும் க்ண்க்இன்னும் அந்த பிரபல நாளிதழ் செய்திக் பலரை ஏமாற்றி பணம் பறித்தார் அதனால் அவர் செத்துப் போக்

திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவது போலவோ அல்லது இந்த சமூகம் நம்பிக் கொண்டிருப்பதைப் போலவோ ஜர்னலிஸ்ட்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல.
துப்புரவுப் பணியைப் போலத் தான் ஊடகத்துறையும். ஒரு துப்புரவுப் பணியாளருக்கு இருக்கும் பொறுப்பை விடவும் அதிகமாக ஜர்னலிஸ்ட்களுக்கு பொறுப்புணர்வு இருப்பதாக நான் நம்பவில்லை. முன்னவர் புற சுகாதாரத்திற்கும் பின்னவர் அக சுகாதாரத்திற்காகவும் பணி புரிகிறார்கள் அவ்வளவே வித்தியாசம். ஆனால் இங்கு நிறைய பேர் ஜர்னலிஸ்ட் என்று மார்தட்டிக் கொள்வதில் ஒரு வறட்டு கவுரவத்தைப் பார்க்க முடிகிறது. இது தேவையில்லாதது. வேறெந்தத் துறையில் வேலை செய்கிறவர்களைப் போல பத்திரிகையாளர்களும் தங்களை சாதாரண மனிதர்களாக முதலில் கருதத் துவங்க வேண்டும். யாரும் ஜர்னலிஸ்ட்டாகவே பிறப்பதில்லை. மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் போல பத்திரிகையாளர்களுக்கு கல்வி தகுதி கட்டாயமாகத் தேவைப்படாத நிலையில் எழுதத் தெரிகிறவர்களும் பேச முடிகிறவர்களும் பத்திரிகையாளராகிவிட முடிகிறது. கல்வித் தகுதி அவசியமில்லாத ஊடகத் துறைக்குத் தேவைப்படுவது மனித நேயமும், சமூக அறிவும் பொறுப்புணர்வும் மட்டுமே! செய்தி எழுதுதலின் நுணுக்கங்கள் அரசியல் நிகழ்வுகள், பொது அறிவு விஷயங்களை எல்லாம் களத்தில் இறங்கியவுடன் காலப் போக்கில் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மேலே குறிப்பிட்ட மூன்று விஷயங்களும் உள்ளார்ந்தவை. எல்லா தனி நபர்களுக்கும் அது இருக்க வேண்டும் என்றாலும் பல தரப்பினரையும் சென்று பறைசாற்றுகிற பணியைச் செய்கிற ஊடகவியலாளர்களுக்கு கூடுதலாக இருந்தாக வேண்டும்.

மனித நேயத்திற்கும், உரிமைகளுக்கும் சமத்துவத்திற்கு எதிரான வார்த்தைகளை இதுவரையும் நான் எழுதவில்லை. இனிமேலும் எழுதமாட்டேன்.  என் எழுத்துக்களும் கருத்துக்களும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். அது அன்பு. எல்லோருக்குமான அன்பு. குழந்தைகள், திருநங்கைகள் ஆண், பெண், இன்ன மொழி பேசுபவர், இந்த ஊர்க்காரர், நாட்டுக்காரர், சாதி, மதம் என எந்த பாகுபாடுமின்றி வரக்கூடிய இயல்பான அன்பு. இந்த உலகத்தின் அதிகபட்சத் தேவை அதுதான். கூட்டம் போட்டு, மேடையில் முழங்கினால்தான் என்றில்லை, தன்னளவில் எல்லோரும் அன்பானவர்களாக, உரிமை மீறல்களை அனுமதிக்காதவர்களாக இயங்கிக் கொண்டிருந்தாலே போதும். இவ்வுலகத்தின் அவலங்கள் முடிவுக்கு வந்துவிடும். சமூகப் பொறுப்புணர்வோடு பணிபுரியும் எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.
அன்பும் உண்மையும் நேர்மையும் நிச்சயம் வெற்றி பெறும். அவை அதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ளுமே தவிர ஒருபோதும் தோற்றுப்போவதில்லை.

ஜெயராணி…
ஆறாம்திணை என்ற இணையதளப் பத்திரிகையில் பணியைத் தொடங்கி, குமுதம், விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளில் புகைப்பட நிருபராகவும், உதவி ஆசிரியராகவும் சுமார் ஏழாண்டுகள் வேலை பார்த்தவர். தற்போது சன் செய்திப் பிரிவில் சிறப்பு செய்தியாளாராக பணியாற்றும் ஜெயராணி, நிஜம் நிகழ்ச்சியில் செய்தியாளராகவும் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் இருக்கிறார். மெயின் ஸ்ட்ரீம் ஊடகத்தில் இயங்கினாலும் பெண்கள், குழந்தைகள் திருநங்கைகள், தலித் மக்கள், சிறுபான்மையினருக்காகத் தொடர்ந்து எழுதி வருகிறார். தலித் முரசு போன்ற மாற்று இதழ்களிலும் தொடர்ந்து எழுதுகிறார். ஆனந்த விகடன், அவள் விகடன், தீராநதி, புது விசை, முற்றுகை ஆகிய இதழ்களில் கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்திருக்கின்றன.

‘இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ஜர்னலிஸ்ட்’ அமைப்பு ‘ஆனந்த விகடனில் விகடனில’ வெளியான ”இளைப்பாற விரும்புகிறோம்” கட்டுரைக்காக சிறப்புப் பாராட்டுச் சான்றிதழை வழங்கியது. (2004 )

‘இந்தியா டுடே’ பத்திரிகை ‘இந்தியாவின் 38 முக்கியமான பெண்களில்’ ஒருவராக தேர்ந்தெடுத்தது (2005)

ஊடகத்துறையில் தொடர்ந்து ஆற்றி வரும் பங்கிற்காக ‘அன்னைத் தெரஸா பல்கலைக்கழக’த்தால் ‘சிறந்த பத்திரிகையாளரா’க கவுரவிக்கப்பட்டார். (2009)

பின்குறிப்பு : எனக்குப் பிடித்த பத்திரிகையாளர் என்ற வகையில் ஜெயராணியிடம்  நேர்காணல் எடுக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அது நிறைவேற காலம் இன்னும் கணியவில்லை. பிடித்த பத்திரிகையாளர் என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அது நேர்காணலை எழுதும்போது சொல்லுவேன்.
இங்கே பிரசுமாகியிருக்கும் கட்டுரை நான் எழுதியது அல்ல. பெண்ணே நீ மாத இதழுக்காக ஜெயராணி எழுதியது. மார்ச் பெண்ணே நீ இதழில் எடிட் செய்யப்பட்டு வெளியான கட்டுரையின் முழுவடிவத்தை இங்கே கொடுத்திருக்கிறேன்.
பெண்ணே நீ இதழுக்கு எழுதிய கட்டுரையை இங்கே பிரசுரித்தமைக்காக பெண்ணே நீ க்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டுரையில் வெளியாகியிருக்கும் கருத்துக்களை ஒட்டி ஜெயராணி, சுகிதா, நான் மூவருமாக நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம்.   அதனாலே இந்தக் கட்டுரையை பிரசுரிப்பதில் ஆர்வம் கொண்டேன். ஜெயராணியும் அனுப்பித் தந்தார். விஷயமுள்ள கட்டுரை எல்லாதரப்பையும் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்.

”கச்சத்தீவை மீட்போம் என்று கூச்சலிடும்போதெல்லாம் கடலில் இருக்கிறவனுக்கு மரண அடி விழுகிறது!” பெப்ரவரி 17, 2010

Posted by மு.வி.நந்தினி in அரசியல், ஆழி சூழ் உலகு, இன உணர்வு, இலங்கை தமிழர், கொற்கை, சமூகம், ஜோ டி குருஸ், போராட்டம், மீனவர்கள், விடுதலைப் புலிகள்.
Tags: , , ,
1 comment so far
  

இதுவரைக்கும் வந்த தமிழ் நாவல்களில் மீனவர்களின் வாழ்க்கை பின்னணியில் ஜோ டி குருஸ் எழுதிய ஆழி சூழ் உலகு நாவலுக்கு தனித்த இடம் உண்டு. மீனவ சமூகத்தின் சிக்கல்கள், அவலங்களை அவர்களுடைய மொழியிலேயே வெளிப்படுத்தியது இந்நாவலின் தனித்துவத்துக்கு காரணம் என்பது விமர்சகர்களின் கருத்து. கொற்கை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தின் பின்னணியில் அடுத்த நாவலை தந்திருக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குருஸ். புத்தக காட்சியை ஒட்டி வெளியான கொற்கை நாவல்(காலச்சுவடு பதிப்பக வெளியீடு) வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கொற்கையை முன்வைத்து ஜோ டி குருஸுடன் இந்த நேர்காணல்..

கொற்கை நாவல் எதைப்பற்றி பேசுகிறது?

”ஆழிசூழ் உலகு நாவலில் அடித்தள மீனவ மக்களின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை சொல்லியிருந்தேன். பரதவர்கள், மீன் பிடிக்கிறவர்கள் மட்டுமல்ல கடல்வழி வாணிபத்தின் முன்னோடிகள் என்பதை கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டில் கொற்கை செழித்து விளங்கிய துறைமுகம். பாண்டிய நாடு வளமுடைத்து என்ற வாக்கு உருவானதே கொற்கை துறைமுகத்தை வைத்துதான். கொற்கையில் கிடைத்த நன்முத்துக்கள் பாண்டிய நாட்டை வளமுள்ளதாக ஆக்கியிருந்தது. கொற்கையில் கிடைத்த முத்துக்கள் அந்நூற்றாண்டுகளிலேயே பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இதனால் கடல்வழி வாணிபம் சிறந்திருக்கிறது. சில்க் ரூட், பெப்பர் ரூட் என்று சொல்வதைப்போல கொற்கைக்கு பெர்ல் ரூட் இருந்திருக்கிறது. முத்துக்களுக்காக கிரேக்கர்கள், அரேபியர்கள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், வெள்ளையர்கள் கொற்கையைத் தேடி வந்திருக்கிறார்கள். ஆனால் இது எதுவுமே வரலாற்றில் சரியாக பதிவாகவில்லை. ஏராளமான கடல் வளமுடைய மிகப்பெரிய துறைமுகமான கொற்கை பரதவர்களால் ஆனது, ஆளப்பட்டது. வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு அந்த சந்ததிகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து வரலாறு இல்லை. வணிகமும் கலாச்சாரமும் சிறந்து விளங்கிய கொற்கையை பார்த்து ரசித்து வெள்ளையன் உள்ளே வந்திருக்கிறான். இதுபற்றிய குறிப்புகள் நம்மிடம் இல்லை. வெள்ளையர்கள் பார்த்து, ரசித்து உள்ளே வருகிறான். இப்படி வளம்பெற்ற கொற்கை கடந்துவந்த நூறு ஆண்டுகளின் கதையைத்தான் கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த சமூக, பொருளாதார கலாச்சார மாற்றங்களை பேசுகிறது நாவல். போர்த்துக்கீசியர்கள், வெள்ளையர்கள் வெளியேறி சுதேசி அரசாங்கம் வந்த பிறகு கொற்கையில் வாழ்ந்த பரதவர்கள் சமூகம் எப்படி மாறியது என்பதையும் பரதவர்களின் பல்வேறு பிரிவுகளுக்குக்கிடையேயான சமூக சிக்கல்கள், அதை அவர்கள் கையாண்ட விதம் இதெல்லாம் தான் நாவலாக்கியிருக்கிறேன். இதை வரலாற்று ஆவணம் என்று சொல்லமுடியாது. நாவலுக்குள் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களால் இது வரலாற்று ஆவணமாகலாம்.”

மீண்டும் மீனவ சமூகத்தின் பின்னணியில் நாவல் எழுதக் காரணம்?

”சங்கப் பாடல்களில்கூட அம்மூவனார் போன்றவர்கள் நெய்தல் கரையைப் பற்றி பாடினார்களே தவிர, நெய்தல் நில மக்களின் சுக துக்கங்களை பாடவில்லை. நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் இதுகுறித்து எனக்கு நிறையவே ஆதங்கம் உண்டு. நெய்தலின் மீதும் நெய்தல் மக்களின் மீதும் உள்ள பாசத்தின் வெளிப்பாடுதான் என் எழுத்து முயற்சி. வருமானத்துக்காக ஒரு வேலையில் இருக்கிறேன், ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்.

என் சமூகத்தில் உள்ள அவலங்களை கோளாறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாக படுகிறது. ஆழி சூழ் உலகு நாவல் வெளிவந்த பிறகு, ஊரில் நிறைய எதிர்ப்பு வந்தது, வந்துக்கொண்டிருக்கிறது. நிலைக்கண்ணாடி போல ஒரு சமூகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும். மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் சமூக குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். ஆடி போல சமூகத்தைக் காட்ட வேண்டும். அதனால் மேற்படியான எதிர்ப்புகள் பற்றி கவலைப்படுவதில்லை!

நாவலில் சொல்லவந்ததை ஒரு கட்டுரையிலேயே கூட சொல்லி முடித்திருக்கலாம். ஆனால் அதை அப்படி சொல்ல விரும்பவில்லை. வாழ்வாக சொல்ல விரும்பினேன். ஆழி சூழ் உலகு எழுதி முடித்த உடனே கொற்கையை எழுத உட்கார்ந்தேன். 2005 தொடங்கி 2009 ஆண்டு முடிய நாவலுக்காக உழைத்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்து எனக்குள் போன செய்திகளை மெருகுபடுத்தி சேர்த்திருக்கிறேன். வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்கள், ஆண்களை சந்தித்து பேசி தகவல்களை திரட்டினேன். நாவலை எழுதி முடித்தவுடன் ஒருவித அயற்சி ஏற்பட்டது. எழுதி முடித்த பக்கங்களை தூக்கி பரணில் போட்டதைப் பார்த்த என் மனைவி பதறிக்கொண்டு ஐந்து வருட உழைப்பை வீணாக்கலாமா? என்றார். பிறகுதான் எழுதியதை பதிப்பகத்திடம் கொடுக்கும் முடிவுக்கு வந்தேன். நாவல் எழுதி முடித்தபோது ஏற்பட்ட அயற்சிக்குக் காரணம், முன்னோடியாக இருக்க வேண்டிய சமூகம் இப்படி முடங்கிக் கிடக்கிறதே என்கிற ஆதங்கம் தான்! என் சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்கிற கேள்வி என்னை சதா துளைத்துக்கொண்டே இருக்கிறது”

எழுதுவதைத் தாண்டி மீனவர்களின் இன்னல்களை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறீர்கள். குறிப்பாக இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் தமிழக மீனவர்கள் பற்றி ஆவணப்படங்கள் எடுத்ததன் பின்னணி என்ன?

”காலம்காலமாக தமிழக மீனவர்கள், வடமேற்கு இலங்கை நோக்கி மீன் பிடிக்கப்போவதுதான் வழக்கம். 1983ல் இலங்கை யாழ்பாணத்தில் நூலகம் எரிப்பு என்கிற நிகழ்வுக்குப்பிறகு, விடுதலைப்புலிகளின் எழுச்சி தொடங்கியபோதுதான் தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தின் தாக்குதல் அரங்கேற்றம் பெற்றது. தமிழக மீனவர்கள் மூலமாக விடுதலைப்புலிகளுக்கு உதவிகள் கிடைப்பதாக கருதியே இலங்கை அரசு இத்தகைய தாக்குதல்களை ஊக்குவித்தது. இன்று ஈழம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஈழப் போராட்டத்தின் பின்னணியில் தென் தமிழக மீனவர்களின் இரத்தமும் கலந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தமிழினம் என்கிற காரணம் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு இன்னும் ஏராளமான கோர முகங்கள் உண்டு. மீனவர்கள் பிடித்த மீன்கள் பிடிங்கிக் கொண்டு வளையை அறுத்துவிடுவதிலிருந்து காதில் இருக்கிற கடுக்கணை பிடிங்கிக் கொள்வது வரையான கடற்கொள்ளையர்களைப் போன்ற செயல்களையும் அவர்கள் செய்கிறார்கள். மீனை பச்சை திண்ணச் சொல்வது, ஐஸ்கட்டியில் நிர்வாணமாக படுக்கவைப்பது, கடலில் தள்ளிவிட்டு இரண்டு, மூன்று மணி நேரம் நீந்தவிட்டு களைத்துப்போகும்போது ஹெலிகாப்டரிலிருந்து சுட்டுப் பழகுவது, இதையெல்லாவற்றையும்விட அப்பன்-மகன் என்று தெரிந்த பின்னும் உறவு கொள்ள கட்டாயப்படுத்துவது கொடுமையின் உச்சம்! கச்சத்தீவை மீட்போம் என்று நாட்டில் கூச்சலிடும்போதெல்லாம் கடலில் இருக்கிறவனுக்கு மரண அடி விழுகிறது.

மீனவர்கள் நாதியில்லாதவர், அவர்களுக்கென்று அமைப்புகள் கிடையாது, ஒருங்கிணைந்த குரல் கிடையாது. இதுதான் காரணமேயில்லாமல் இத்தனை பேரின் இறப்புக்கும் பல இழப்புகளுக்கும் காரணம். நம்முடைய அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எல்லைகளில் வாழ்கிறவர்கள் தானே என்கிற விட்டேத்தி மனோபாவம். இருபது வருடங்களுக்கும் மேலாக மீனவர்களிடையே பணியாற்றுவதாக சொல்லிக்கொள்ளும் தொண்டு நிறுவனங்களிடம்கூட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றுவதற்கான எந்தவித திட்டமும் இல்லை. குறைகளை கணக்கெடுத்திருப்பதுதான் தொண்டு நிறுவனங்கள் செய்திருக்கும் மிகப்பெரிய சேவை!

இதெல்லாம்தான் விடியாத பொழுதுகள் என்ற முதல் ஆவணப்படம் எடுக்க தூண்டுதலாக அமைந்தது. அவலங்களை மட்டும் சொன்னால் எனக்கும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அதனாலேயே பிழைப்புக்காக எல்லைத் தாண்ட நேரிடும் மீனவர்களுக்கு மாற்று வழியைச் சொல்லும் நோக்கில் விடியலை நோக்கி என்ற ஆவணப்படத்தை எடுத்தேன். மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள மூக்கையூர் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்வு. மூக்கையூர் பகுதியில் வீணாகிக்கொண்டிருக்கும் ஆழ் கடல் வளத்தை பயன்படுத்த வாய்ப்பாகவும் இந்தத் தீர்வு அமையும். பரவலாக கவனம் பெற்ற இந்த ஆவணப்படத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விருது கொடுத்திருக்கிறது. விருது பெறுவது, கவனம் பெறுவது என்பதைவிட என் மக்களின் துயரம் அறியப்படவேண்டும் என்பதுதான் என் நோக்கம். மீனவ சமூகத்திலிருந்து வந்த எனக்கு, என் சமூகத்தின் வலி நன்றாகவே தெரியும். ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலே அலறுகிறார்கள் எம் மக்கள். கைநிறைய சம்பளமும் வசதி குறைவில்லாத வாழ்க்கையும் எனக்கு நிறைவை தந்துவிடாது. எம் மக்களின் வாழ்வுக்காக எதையாவது நான் செய்துகொண்டே இருப்பேன். ஏனெனில் மூச்சு விடுவது மட்டுமே வாழ்க்கையில்லை!”

”இயற்கையைக் காப்பாற்றுவதற்காக மக்கள் ஒன்று சேர வேண்டும்!” பெப்ரவரி 16, 2010

Posted by மு.வி.நந்தினி in காட்டுயிர், சுற்றுச்சூழல், பறவைகள், பாம்புகள், போராட்டம், முதலைகள், ரோமுலஸ் விட்டேகர், ஸ்டீவ் இர்வின்.
Tags: , , ,
3 comments

ரோமுலஸ் விட்டேகர்இந்தியாவின் ஸ்டீவ் இர்வின். ஆனால், இருவருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இவர், ஸ்டீவ் இர்வினைப் போல முதலைகளையும் பாம்புகளையும் வைத்து வேடிக்கை காட்டும் சாகசக்காரர் அல்ல. அவற்றைக் காப்பாற்ற வந்த காட்ஃபாதர்! சென்னை, கிண்டி பாம்புப் பண்ணையும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பண்ணையும் இந்த அமெரிக்கர் உருவாக்கியவை. கிட்டத்தட்ட அழிந்தேவிட்ட சில அரிய வகை முதலைகளும் பாம்புகளும் உயிரோடு இருப்பது இவருடைய பண்ணைகளில்தான். ஆக்ரோஷமான முதலைகளிடம் அத்தனை பரிவு காட்டும் இவருக்கு மனிதர்கள் மீதுதான் கொஞ்சம் கோபம்! முதலைகள் பற்றி உங்கள் தாத்தா பாட்டியிடம் கேட்டுப் பாருங்கள். அவ்வளவு கதை சொல்வார்கள். ஆனால், நாமோ மிருகக்காட்சிச் சாலைகளில்தான் முதலைகளைப் பார்க்கிறோம். இன்று ஆறுகளில் முதலைகளே இல்லை என்று சொல்லலாம். மனிதனுக்கும் முதலைகளுக்கும் நடந்தயார் பெரியவன்?’ போட்டியில் முதலைகள் பாவம், தோற்றுப் போய்விட்டன. மீன்களையே சாப்பிடும் மீன்கள் இருக்கின்றன. அந்த மீன்களை மட்டும்தான் முதலைகள் சாப்பிடும். முதலைகள் அழிக்கப்பட்டதால் மீன்களைச் சாப்பிடுகிற மீன்கள் அதிகமாகிவிட்டன.எனவே, மற்ற மீன் இனங்கள் குறைந்துவிட்டன. இயற்கையின் சங்கிலித் தொடரில் ஒரு கண்ணியை உருவினாலும் பாதிப்பு எல்லோருக்கும்தான்!

வட இந்திய ஆறுகளில் மட்டுமே வாழ்ந்தகரியால்இன முதலைகள் அவற்றின் தோலுக்காக மிச்ச சொச்சம் இல்லாமல் வேட்டையாடப்பட்டன. தென்னிந்தியாவில் முதலைகளின் முக்கியத்துவம் தெரியாமல், அவை பயங்கரமானவை என்ற காரணத்துக்காகவே அழிக்கப்பட்டுவிட்டன. ‘பயங்கரமானதுஎன்று வர்ணிக்கப்படும் எந்தவொரு உயிரினமும் உண்மையில் பயங்கரமானது அல்ல. தன்னைத் தற்காத்துக்கொள்ளவே தாக்குகின்றன. முதலை அற்புதமான குணம்கொண்டது. மனிதர்களைப் போல் தாய்மை குணமுள்ள உயிரினம் அது. முட்டையிடும் சமயத்தில் அதை நெருங் கவே முடியாது. தன் முட்டையை யாராவது களவாடுகிறார்கள்என்று தெரிந்துவிட்டால், எவ்வளவு வேக மாகப் போனாலும் துரத்தி வந்து பிடித்துவிடும்.

மீன்களின் பெருக்கத்துக்குக் காரணமாக இருப்பதால் முதலைகள், மீனவர்களின் நண்பன். அதுபோல பாம்புகள், விவசாயிகளுக்கு நண்பன். விளைவதில் சரிபாதி விளைபொருள்களை வீணாக்கும் அத்தனை எலிகளையும் நம்மால் ஒழிக்க முடியாது. வயல்வெளி எலிகளை ஒழிக்க அரசாங்கம் எத்த னையோ கோடிகளைக் கொட்டிக் கொடுக்கிறது. ஆனால், பாம்புகள் சர்வசாதாரணமாக ஆயிரக்கணக்கான எலிகளை ஒழித்துவிடும். நாம் அதனைச் சீண்டாதவரை அது நம்மை எந்தவிதத்திலும் துன்புறுத்தாது. ஆனால், அந்தப் பண்பு நம்மிடம் இல்லையே!

பாம்புகளிலேயே மிக மிக சுவாரஸ்யமானது ராஜ நாகம். 13 அடி அழகான ராட்சசன்! பாம்புகளிலேயே ராஜ நாகம் மட்டும்தான் கூடு கட்டி முட்டைகளை வைக்கும். மலைக் காடுகளில்தான் வசிக்கும். மேற்கு வங்காளத்தில் இருக்கும் சுந்தர வனக் காடுகள், மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் என இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே ராஜ நாகங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்போது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் ராஜ நாகங்கள் பற்றி ஒரு ஆவணப் படம் எடுத்துக்கொண்டு இருக்கிறேன்.” இதுவரை எந்தப் பாம்பும் உங்களைக் கடித்ததில்லையாஎன்று கேட்டால், தன் வலது ஆள் காட்டி விரலைத் தடவிக்கொண்டு சிரிக்கிறார். ”இருபது வயதில் அமெரிக்க பாலைவனத்தில் வாழக்கூடியராட்டல் ஸ்னேக்பற்றிய ஆராய்ச் சிக்காகப் போயிருந்தேன். கொஞ்சம் அலட்சியமாக ஒரு பாம்பைப் பிடித்துவிட்டேன். அது தன்னை தற்காத்துக்கொள்ள என் வலது கை ஆள்காட்டி விரலைக் கடித்துவிட்டது. அந்த விரலில் நரம்புகள் துண்டிக்கப்பட்டு, உணர்ச்சியே இல்லாமல் போய்விட்டது. அந்த பாம்பு மேல தப்பு இல்லை. தப்பு என் மேல்தான்!” என்பவர் தொடர்ந்துநான் பிறந்தது நியூயார்க். ஏழு வயதில் அம்மாவோடு இந்தியா வந்தேன். பாம்பு பிடிக்க ஆரம் பித்தது நான்கு வயதில். என் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு பாம்புகள் பற்றிய புத்தகங்களைப் படிக்கக் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார் அம்மா. பாம்பு, முதலைகளைத் தேடி இந்தியா முழுக்கத் திரிந்திருக்கிறேன். தமிழ் நாட்டின் சூழல் எனக்கேற்றது போல இருந்ததால், இங்கேயே தங்கிவிட்டேன். இயற்கை சூழலைக் காப்பாற்றுவது குறித்து எந்த அக்கறையும் நம்மில் பலருக்குக் கிடையாது. முக்கால் பங்கு காடுகள் அழிந்து போய், தொழிற்சாலைகளாகவும் பொறியியல் கல்லூரிகளாகவும் நிற்கின்றன. சுதந்திரப் போராட்டத்துக்கு இந்திய மக்கள் ஒன்று சேர்ந்தது போல, இயற்கையைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மக்கள் ஒன்று சேர வேண்டும். இயற்கையைச் சமநிலைப்படுத்துகிற உயிரினங்களைக் காப்பாற்றினால் போதும்உலகம் சூடாவது பற்றியும் கவலைப்பட வேண்டாம், பசுமைப் புரட்சி செய்ய மண்டையை உடைத்துக்கொள்ளவும் வேண்டாம்!” என்கிறார் ரோமுலஸ், ஆதங்கமும் வருத்தமும் தோய்ந்த குரலில்.

இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை ஜனவரி 8, 2010

Posted by மு.வி.நந்தினி in ஆயுதப் போராட்டம், இன உணர்வு, இலங்கை தமிழர், ஊடகம், சமூகம், சிங்கள ராணுவம், தமிழ், நேபாள மாவோயிஸ்ட்கள், போராட்டம், போர்ச்சூழல்.
Tags: ,
add a comment

மே 1′  2009ல் எழுதி காணாமல் போன ‘இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை’ கட்டுரையின் மறுபிரசுரம் இது…

”குடிக்கத் தண்ணி வேணும்” என்று இறைஞ்சிய அந்தப் பெரியவரின் முகம் இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது. வேகு நேரம் முன்வாசல் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தவருக்கு அந்த வீட்டினர் வேண்டா வெறுப்பாக தண்ணீர் கொடுத்ததற்கும் அவர் சென்று பின் ‘வீட்டை நோட்டம் வீட்டுப்போய் திருட வருவார்கள்’ என தகவல் சொன்னதற்கும் காரணம் இருந்தது. அவர் இலங்கை தமிழர் என்பதுதான் அந்தக்காரணம். சணல் பையை தோல்களில் மாட்டி நிராதரவாதிக்கான அத்தனை தகுதியோடும் முகாமில் அரசாங்கம் தரும் அரிசியை வாங்கக் கிளம்பிக்கொண்டிருந்த இலங்கை தமிழனை ‘திருடன்’ என முத்திரையிட்டது இந்திய(?) தமிழன்..100 சதவீதம் சுத்த தமிழ் ரத்தத்தில் பிறந்த தமிழன்! இது நானே நேரில் கண்டது. இலங்கை அகதிகளாக இங்கே தஞ்சம் புகுந்திருக்கும் தமிழர்கள் குறித்தான கண்ணோட்டம் இப்படித்தான் இருக்கிறது. பல்வேறு ஊடகங்களில் தாங்கள் இம்மண்ணில் பட்ட அவமானங்களை அவமதிப்புகளை அகதி முகாமில் இருக்கும் தமிழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அகதி முகாம்களில் இல்லாது தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கும் சற்றே வசதி படைத்த இலங்கை தமிழர்கள் மீது இந்த கண்ணோட்டம் இல்லை. இலங்கை போரால் மாய்பவர்களும், மாய்வதை மறுத்து அகதியாகவாவது பிழைத்துக் கொள்ளலாம் என திருட்டுப் படகு ஏறுபவர்களும் யார்? விமானத்தில் பறக்க காசில்லாதவர்கள், வறியவர்கள். பொருளாதார பின்புலம் மிக்கவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டு கடைநிலை மக்களாகவேனும் வாழ்க்கையை நடத்துகிற சூழல் வாய்த்திருக்கிறது, சில ஆண்டுகள் உழைத்தால் வசதிகள், மதிப்புகளும் தேடிவருகின்றன. ஆனால் வறியவர்களின் நிலை என்ன? உறவுகளையும் உடைமைகளையும் இழந்து ஏதுமற்றமற்றவர்களாக இறுதிவரை போரிட்டு உங்களுக்கு தனி ஈழம் பெற்றுத்தருவார்கள் நீங்கள் தமிழர் என்று சொல்லிக்கொண்டு, இந்தியாவிலும் புலம் பெயர்ந்த இடங்களிலும் கேக் வெட்டிக் கொண்டாடுவீர்கள்? இலங்கை தமிழருக்கு ஆதரவு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு புழக்கடை வழியாக பண உதவி செய்துகொண்டு புலம்பெயர் நாடுகளில் வாழம் எத்தனைப் பேர் தங்கள் வாரிசுகளை ஆயுதம் தூக்கிப் போராட அனுப்பி வைப்பீர்கள்? வாய்க்கிழிய வீர வசனம் பேசுகிற இந்திய தமிழர்களாகிய நீங்கள், திருட்டுப் படகு ஏறிப்போய் இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேர் போரிட வேண்டியதுதானே? இவ்வளவு பேசுகிற நீங்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வரும் இலங்கைத் தமிழரை எப்படி நடத்துகிறீர்கள்? போர்ச்சூழலில் கணவனை இழந்து கைம்பெண்களாகவும் பெற்றோரை இழந்து அநாதைகளாய் நிற்கும் குழந்தைகளை நீங்கள் நினைத்துப்பார்த்ததுண்டா? குறைந்தபட்சம் அகதி முகாம்களுக்காவது சென்றதுண்டா? இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் போர் நூற்றாண்டை எட்டினாலும்கூட பரவாயில்லை என்னும் தோணியில் வெளிப்படும் சிலரின் கருத்துகள் ஆழ்மன வன்மைத்தான் காட்டுகின்றன. இதற்கு தமிழ் இன உணர்வு என முலாம் பூசுவது வறியர்களை சுரண்டிப் பிழைக்கும் ஈனச் செயலன்றி வேறில்லை. 37 முத்துக்குமாரர்களின் தற்கொலைக்கு காரணமானதும் இதுதான். சிங்கள அரசியல்வாதிகள்தான் இனவெறியர்களாக தமிழர்களை கொன்று குவிக்கிறார்கள் எனில் தமிழன் இன்னொரு தமிழனை கொல்வதை எந்த வகையில் சேர்ப்பது? அப்பாவித் தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்துவதும், மீறிச் செல்பவர்களை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்வதும் இன சுத்திகரிப்புச் செயலா? இதையெல்லாம் மறைத்துவிட்டு நீங்கள் யாருக்காக போரை நிறுத்து என்று கூவிக்கொண்டிருக்கிறீர்கள்? தமிழ் ஊடகங்களில் இத்தகைய வமர்சனங்கள் வெளிவற வாய்ப்பே இல்லை. புலிகள் ஆதரவு இணைய தளங்கள் கொடுக்கும் செய்திதான் இவர்களுடைய செய்தி மூலங்கள். பிறகு எப்படி நியாயமான செய்திகள் தெரிய வரும்? ‘நேற்று நடந்த சண்டையில் 50 புலிகள் இறந்துவிட்டனர்’ என்கிற செய்தி பலரை தூக்கி வாரிப்போடுகிறது. உடனே செய்தி வெளியிட்ட ஊடகத்திடம் எப்படி நீங்கள் இந்த செய்தியை வெளியிடலாம் என்கிறார்கள். சமீபத்தில் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு அமைதிப்பேச்சுக்கு வரவேண்டும் என்று அமெரிக்கா விட்டிருந்த அறிக்கையை வெளியிட்டதற்காக குறிப்பிட்ட அந்த ஊடகத்திற்கு தமிழகத்தின் மூத்த புலிகள் ஆதரவாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு போயிருக்கிறது. இந்த ஆதரவாளர்களின் நிலையெல்லாம் புலிகள் பலியாகிறார்களே என்கிற கரிசனம் அல்ல.. புலிகள் இல்லையென்றால் ஒட்டுமொத்த போராட்டமே இல்லை, புலிகள் எந்த நிலையிலும் தங்கள் நிலையை விட்டு கீழிறங்கி வரக்கூடாது என்று இவர்களாக கட்டமைக்கும் ஹீரோயிசம்தான் பின்னணி காரணங்கள். இலங்கையில் ஆயுதம் தாங்கிய போராட்டம் 1970க்கு முன்பிருந்தே நடந்துகொண்டிருக்கிறது. 1970களுக்குப் பிறகு பெரிய அளவில் பரவியது என ஈழப்போராட்த்தின் முன்னோடிகளில் ஒருவரான, மறைந்த சி.புஷ்பராஜா பதிவு செய்திருக்கிறார். சக போராளிக்குழுக்களை எப்படி திட்டமிட்டு விடுதலைப் புலிகள் அழித்தார்கள் என்பதையும் சி.புஷ்பராஜா தன்னுடைய ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலில் விரிவாகவே பேசியிருக்கிறார். என்னுடைய நோக்கம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதல்ல, அதற்கான நேரமும் இதுவல்ல என்று எனக்குத் தெரியும். வெறுமனே போர் நிறுத்தத்தை மட்டுமே எத்தனை காலத்துக்கு பேசுவீர்கள் என்ற ஆதங்கத்தின் அடிப்படையிலே நிரந்தர அமைதிக்கான வழிகள் குறித்து பேசுங்கள் என எழுதினேன். உலகில் நடக்கும் எந்தவொரு போராட்டத்தையும் மற்றொரு போராட்டத்துடன் ஒப்பிட முடியாது. நேளாப சூழலுடன் இலங்கை சூழலை ஒப்பிடவில்லை. அதிலிருந்து கற்க விஷயங்கள் உண்டு என்பதையே வலியுறுத்துகிறேன். புதிய புத்தகம் பேசுது இதழுக்கு அளித்த நேர்காணலில் அ.மார்க்ஸ் இதை தெளிவாக சொல்லியிருக்கிறார். கீற்றுவில் வெளியான அவருடைய நேர்காணலைப் படிக்க இங்கே சொடுக்கவும். ஈழத்தமிழர் போராட்டத்தையும் இன்னல்களையும் மலிவான அரசியலுக்காகப் பயன்படுத்தும் தமிழக அரசியல்வாதிகளைப்போல சாகச மனநிலையில் அணுகும் பெருங்கும்பல்கள் தமிழகத்திலும் புலம்பெயர்ந்த இடங்களில் இருக்கிறது என்ற ஷோபா சக்தியின் கூற்றை இங்கே நினைவுபடுத்துகிறேன் . உங்கள் சாகச மனோநிலைக்கு இன்னும் பல அப்பாவிகளை பலியாக்க விரும்புகிறீர்கள். ஈழத்தமிழர்களின் அடிப்படை மனிதாபிமான பிரச்சினைகளை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்? இனப்படுகொலையைவிட இதுதான் கொடியது! இறுதியாக…எனக்கும் போதாமைகள் இருக்கலாம். ஆனால் அடிப்படைக்கூட தெரியாமல் எழுத எப்போதும் நான் முயற்சித்தது கிடையாது. தெரியாத விஷயங்களை எழுதுவதும் கிடையாது. தமிழனாக அல்லது இலங்கை தமிழனாக பிறந்து வாழந்தால் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேச தகுதியாக நீங்கள் வரையறுத்து வைத்திருக்கலாம். ஆனால் பேசுவது மனிதாபிமான அடிப்படையில். அதற்கு மனிதன் என்பதைவிட வேறு எந்த தகுதிகளும் தேவையில்லை!

இலங்கை இப்போது… December 17, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், இன உணர்வு, இலங்கை தமிழர், சமூகம், சூரியகதிர், தீட்சண்யா, புதுவிசை, போராட்டம்.
5 comments

தமிழ் இலக்கிய சூழலில் சமூகத்தின் மீது அக்கறையும் கரிசனமும் கொண்டு எழுதிவரும் படைப்பாளிகளில் முக்கியமானவர் ஆதவன் தீட்சண்யா. அதிகார வர்க்கத்தின் மீது தயங்காமல் விமர்சனம் வைக்கக்கூடியவர். சிறுகதை, கவிதை, கட்டுரை என இயங்கிவரும் ஆதவன், புதுவிசை என்கிற கலாச்சாரக் காலண்டிதழின் ஆசிரியராகவும் செயல்படுகிறார். இவர் எழுதி பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம், தந்துகி என இரு கவிதை நூல்களும் எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள், இரவாகிவிடுவாதலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை என இரு சிறுகதை நூல்களும் வெளியாகியுள்ளன. மலையக மற்றும் இலங்கை தமிழர்களின் வாழ்நிலை குறித்து அறிய சமீபத்தில் இலங்கை சென்று வந்திருக்கிறார் ஆதவன். சூரியகதிர் மாதமிருமுறை இதழுக்காக மின்னஞ்சலில் அனுப்பிய கேள்விகளுக்கு ஆதவனின் பதில்

 
# இலங்கை பயணத்தின் நோக்கம் என்ன?  
நமது நேரடிச் சொந்தங்களான மலையகத்தமிழரை சந்திப்பது, இலங்கைத் தமிழர்களின் வடபகுதிக்குச் செல்வது- விடுதலைப்புலிகளை ஒடுக்குவதாகச் சொல்லிக்கொண்டு அந்த அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நிகழ்த்தி முடித்திருக்கும் அட்டூழியங்கள், அத்துமீறல்கள், படுகொலைகள் குறித்து நேரடியாக அறிவது, இன்றைய சூழலை விளங்கிக்கொள்வது, வாய்ப்பிருந்தால் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள வவுனியா முகாம்களுக்கு சென்று நிலைமையை நேரில் அறிவது என்பவைதான் எனது பயணத்திட்டம். அக்டோபர் 8 முதல் 15 வரை கண்டி, மாத்தளை, ஹட்டன் ஆகிய மலையக நகரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றிய தோட்டங்கள். 16-18 கொழும்பு. 19-21 யாழ்ப்பாணம். 22 மாலை நாடுதிரும்பினேன். குழு விவாதங்கள். அந்தனி ஜீவா, ஜோதிகுமார், ரங்கன் போன்ற தோழர்கள் ஏற்பாட்டில் சிறியதும் பெரியதுமாக நடந்த 11 நிகழ்வுகளில் பங்கெடுத்தேன்.

 
# போருக்குப் பின் இலங்கை எப்படி இருக்கிறது? பாதுகாப்பு கெடுபிடிகள், மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை, அரசியல், ராணுவரீதியான போக்குகள்?
 நாட்டின் எந்த மூலையிலும் துண்டுத்துக்காணி இடத்திலும் மணல்மூட்டைகளுக்குப் பின்னால் தயார்நிலையில் குமிந்திருக்கிறது ராணுவம். போர் உக்கிரமாக நடந்துகொண்டிருப்பதான பீதியே நிலவுகிறது. குண்டுதுளைத்து பாழடைந்த கட்டிடங்கள், கைவிடப்பட்ட வீடுகள், அடர்ந்த புதர்கள் என்று எங்கு பார்த்தாலும் ஒரு துப்பாக்கிக்குழல் துருத்திக் கொண்டுள்ளது. எந்நேரமும் நம்மை கண்காணிக்கிறது ஒரு ராணுவக்கண். தினசரி ஒருமுறையாவது ராணுவச் சோதனைக்கு உட்படாமல் பொதுஇடங்களில் நடமாடும் சுதந்திரம் அங்கு ஒருவருக்கும் வாய்க்கவில்லை. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் 40 நிமிட விமானப்பயணம். ஆனால் பறப்பதற்கு முன்னும் பின்னுமாக ஒருவர் 6 மணிநேரம் ஆர்மிக்காரர் முன் கைகளை பக்கவாட்டில் விரித்துக்கொண்டு சோதனைக்கு நின்றாக வேண்டும். -9 பாதைவழியே கொழும்பு திரும்புவதற்கும் இதே பாடுதான். பயணிகளை மூட்டை முடிச்சுகளோடு இறக்கி சோதனையிடுவதும், அரசாங்க கட்டிடங்களுக்குள் நுழைகிறவர்களை அங்குலம் அங்குலமாக சோதிப்பதுடன் அவர்களின் செல்போன் காமிரா போன்றவை பறித்துவைத்துக் கொள்ளப்படுவதும், உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரால் முள்வேலிகளால் தடுத்துவைக்கப்பட்ட பிரதேசங்களும் ஆட்சியாளர்களின் அச்சத்தையும் சந்தேகப்புத்தியையும் அம்பலப்படுத்துகின்றன. பிடிபடாமல் தப்பித்துவிட்ட புலிகள் என்ற சந்தேகத்துடனேயே பொதுமக்களை அரசாங்கமும் ராணுவமும் அணுகுகின்றன.
 முன்பேனும் ராணுவத்திற்கு புலிகள் என்ற திட்டவட்டமான கண்ணுக்குத் தெரிந்த எதிரிகள் இருந்தார்கள். இப்போது எதிரி யாரென்றே தெரியாத நிலை. ஆனால் எவரொருவராலும் எந்தநேரத்திலும் தன் நாட்டுக்கு ஆபத்து வரக்கூடும் என்கிற தன்முனைப்பை விரைத்துநிற்கிற ஒவ்வொரு ராணுவச்சிப்பாயிடமும் பார்க்கமுடிகிறது. இந்த தன்முனைப்பு, வெறுமனே ஒரு ராணுவத்தானுக்கு உரியதல்ல. அது, நீ சிங்களவன், இது உன்னுடைய- உனக்கே உனக்கான நாடு- அதை பத்திரமாக பார்த்துக் கொள்வது உனது பொறுப்பு என்று இனவெறியேற்றப்பட்டவனின் மனநிலையிலிருந்து பிறக்கிறது. எனவே தன்னை கடந்துபோகிற ஒருவரை உயிரோடு அனுப்புவதோ தன் நாட்டுக்கு ஆபத்தானவர் என்று சுட்டுத்தள்ளுவதோ அந்த கணத்திலான அந்த சிப்பாயின் கருணையின்பாற்பட்டதாக இருக்கிறது. அவ்வாறு சுட்டுத்தள்ளினாலும் அதற்காக அவர் யாரிடமும் பதில்சொல்ல வேண்டிய கடப்பாடு ஒன்றுமில்லை. அத்துமீறல்களை எதிர்க்கும் ஆற்றல்கொண்ட மக்களோ அமைப்புகளோ அங்கு இல்லை. மனிதசமூகத்தின் மேன்மைக்கு மகத்தான பங்களிப்பு செய்யவேண்டிய இளைஞர்சக்தி சீருடையணிந்த ஒரு இனவெறிப் பட்டாளமாக திசை மாற்றப்பட்டுள்ளது. எதிரியை வேட்டையாடும் வன்மத்தையும் கனத்த ஆயுதங்களையும் சுமந்துகொண்டு தினமும் விரைப்பாக தயாராகி குறுக்கும் நெடுக்கும் உலாத்திக் கொண்டிருக்கிற அந்த சிப்பாய்களின் மனநிலையில் ஏற்படும் சிதைவுகள் அந்த சமூகத்தை என்னவாக்கப் போகிறது என்பது வெறுமனே உளவியல் பிரச்னை அல்ல. நம்மூரில் நடிகர்களுக்கும் தலைவர்களுக்கும் ஊதாரித்தனமாக வைக்கப்படுவதை விடவும் பலமடங்குப் பெரியதான கட்அவுட்களில் ராணுவத்தினரின் மூர்க்கமான முகங்கள் அச்சமூட்டுகின்றன. ராஜபக்ஷே கட்அவுட்களில்கூட தனியாய் நிற்பதில்லை, ராணுவத்தினர் புடைசூழவே காட்சி தருகிறார். அரசாங்க விளம்பரங்களில்கூட ராணுவச் சிப்பாய்களின் படங்களே பெருமிதத்தோடு இடம் பெறுகின்றன. ராணுவத்தினரை கதாநாயகர்களாகக் கொண்டாடுவது அவர்களது வீரதீரச் செயல்களுக்காக அல்ல. அவர்கள் வெளிப்படுத்திய சிங்கள இனவாதத்திற்காகத்தான் என்பதை புரிந்துகொள்வது கடினமான விசயமல்ல. போரின் வெற்றியைக் கொண்டாடுவது என்ற பெயரால் ராணுவத்தை முன்னிறுத்தி சிங்களப் பெருமிதம் தொடர்ந்து விசிறிவிடப்படுகிறது. ராணுவத்தின் மீதான மக்களின் இந்த ஈர்ப்பை யார் அறுவடை செய்வது என்கிற போட்டியின் வெளிப்பாடுதான் இப்போது ராஜபக்ஷேவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையே முட்டித் தெறிக்கிறது. அந்த நாட்டில் இன்றுவரை நாடாளுமன்ற ஜனநாயகம் நீடித்திருப்பதாக அலட்டிக்கொண்டாலும் உண்மையில் அங்கு ராணுவம்தான் சமூகத்தை கட்டியாள்கிறது.
 யாழ்ப்பாணத்திற்குள் ஒருவர் நுழைவதோ அல்லது அங்கிருந்து வெளியேறுவதோ பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியைப் பெற்றால் மட்டுமே சாத்தியம். ( இந்த நிபந்தனை கடந்தவாரம் தளர்த்தப்பட்டிருப்பதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது) யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு செல்கிற பேருந்துகளில் உங்களது இருக்கை எண்ணை ஒதுக்குவதும்கூட ஒரு சிப்பாய்தான் என்பதே நிலைமையை விளங்கிக்கொள்ளப் போதுமானது. வவுனியா செல்லும் பேருந்துகள் புறப்படும் இடம்கூட ராணுவத்திடம்தான் உள்ளது. 8.30க்கு புறப்படும் பேருந்தில் செல்கிறவர், அங்கு அதிகாலை 5.30 மணிக்கே சோதனைக்காக வரிசையில் நின்றாக வேண்டும். அங்குள்ள கழிப்பறைகளில்கூட தண்ணீர் கிடையாது. தமிழருக்கு தண்ணீர் ஒரு கேடா என்ற நினைப்பாயிருக்கும். ராணுவச் செலவுக்கான நிதிஒதுக்கீட்டை அதிகரிப்பது, ராணுவத்தினரின் எண்ணிக்கையை இப்போதுள்ளதுபோல் இரட்டிப்பாக்குவது என்ற ஆட்சியாளர்களின் முடிவுகள் தமிழர்களுக்கு மட்டுமல்ல, வாழ்வியல் நெருக்கடி தாளாமல் ஒருவேளை சிங்களவர்கள் போராடத் தொடங்கினால் அவர்களுக்கும் எதிரானதுதான். மக்களைப் பொறுத்தவரை, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க சிலர் கொடிய விஷப்பாம்புகளுடன் கண்ணாடி கூண்டுக்குள் வாழ்கிற சாகசத்தைப் போல இந்த ராணுவ கெடுபிடிக்குள் வாழப்பழகிவிட்டார்கள். முதல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் யாழ்ப்பாணம் இருக்கிறது. இப்போது தமிழர்களின் முழுப்பகுதியையும் ராணுவம் கைப்பற்றியிருக்கிறது. 9 பாதையில் பயணிக்கிறபோது ஆனையிறவு தொடங்கி ஓமந்தைவரைக்கும் ஒரேயொரு சிவிலியனைக்கூட காணமுடியவில்லை. அந்த நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் இருந்த எல்லா சிற்றூர்களும் கிளிநொச்சி போன்ற நகரங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. கோயில்கள், தேவாலயங்கள், கல்விக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், தண்ணீர் தொட்டி எதுவும் மிஞ்சவில்லை. எத்தனையோ தலைமுறை தாண்டி பலன் கொடுக்கும் பனைமரங்கள் தலைவெட்டப்பட்டு மொட்டைமொட்டையாக ஆயிரக்கணக்கில் நிற்பதும் மனித நடமாட்டமற்ற பகுதிகளில் மாடுகள் கேட்பாரற்று அநாதைகளாக சுற்றியலைவதும் நெஞ்சையறுக்கும் காட்சிகள். ஆளரவமற்ற அந்த பாதை நெடுகிலும் நிறுத்தப்பட்டிருக்கும் சிப்பாய்களுக்கு இன்னும் எதிரிகள் தேவைப்படுகிறார்கள். அதேவேளையில் மக்களின் நண்பர்கள் என்று காட்டிக்கொள்கிற பகட்டுக்கும் குறைவில்லை. இழவுவீட்டாருக்கு நெருங்கிய உறவினர்கள் சாப்பாடு செய்து பகிர்வதுபோல, பொன்னாலைக்கட்டியான் என்ற தமிழர்கிராமத்தில் ஒரு இழவுவீட்டிற்கு ராணுவமுகாமிலிருந்து சாப்பாடு செய்து அனுப்பட்டதாம். முகாமிலிருந்து விடுவிக்கப்படுபவர்களுக்காக கட்டப்படவிருக்கிற அடுக்குமாடி குடியிருப்புகளில் சிங்களவர்களும் குடியமர்த்தப்படலாம் என்கிற அச்சம் இப்போதே உலவுகிறது. -9 பாதையின் இருமருங்கும் காட்டை அழித்து உருவாக்கப்பட்டுள்ள வெற்றிடங்களில் ராணுவ முகாம்கள் அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் தமிழரல்லாதாரை குடியேற்றும் திட்டமும் அரசிடம் இருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளது. குண்டுசத்தமும் ஷெல்லடியும் ஓய்ந்திருக்கும் இன்றைய நிலை அமைதிக்கு பதிலாக ஒரு உறைந்த திகிலூட்டும் மௌனத்தையே கொண்டு வந்திருக்கிறது. மக்கள் இறுகிய மௌனத்தின் வழியாக எல்லாத்துயரங்களையும் கடக்க எத்தனிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் எஞ்சியிருக்கும் விதவைகளையும் அங்கவீனர்களையும் மனநிலைப் பிறழ்ந்தவர்களையும் பார்த்துப் பார்த்து மருகிப் போய் உறைந்து நிற்கும் அவர்கள் மனம் திறந்து பேச இன்னும் கனகாலம் செல்லும். இந்தப் போரை உசுப்பேற்றி கொன்றதில் நமக்கும் பங்கிருக்கிறது என்ற குற்றவுணர்வில் நாம் காத்திருக்க வேண்டியதுதான். அங்கிருந்து தமிழர்கள் வெளியிடும் சஞ்சிகைகள் எதிலும் ஈழப்போராட்டம், அல்லது ராணுவத்தின் அட்டூழியங்கள், முகாம்களில் வதைபடும் மக்களின் துயரம் என்று எதையும் பேரளவில் காணமுடியவில்லை. தணிக்கையும் சுயதணிக்கையும் அவர்களின் எழுத்துச் சுதந்திரத்தை அந்தளவுக்கு கட்டுப்படுத்தியிருக்கிறது. நாளிதழ்களில் ஓரளவுக்கு இதுகுறித்த செய்திகளைப் பார்க்க முடிந்தது.

# முகாம்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததா?

 யாழ்ப்பாணம் செல்வதே எனக்கு பெரும்பாடாகிவிட்டது. யாழ்ப்பாணத்திற்கு முதல்முறையாக செல்பவர் விமானத்தில்தான் சென்றாக வேண்டும். விமான டிக்கெட் பெறவேண்டுமானால் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அனுமதிக் கடிதம் இருந்தால் மட்டுமே சாத்தியம். இந்த ஏற்பாடுகளை தோழர்கள் ரங்கனும் அந்தனிஜீவாவும் செய்துகொடுத்தபோதும், எனக்கு 19ம் தேதிதான் டிக்கெட் கிடைத்தது. 22ம் தேதி நாடு திரும்பவேண்டிய நிலையிலிருந்ததால் முகாம் எதற்கும் செல்ல முடியவில்லை. ஆனால் முகாம்களில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டவர்கள் சிலரை சந்தித்து அவர்களது துயரங்களை கேட்டறிய முடிந்தது. நான் தங்கியிருந்த விடுதியின் சமையல்காரரின் குடும்பம் 1996ல் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு குடிபெயர்ந்திருக்கிறது. மீன்பிடித்தொழில் அவர்களுக்கு. போர் உக்கிரமடைந்த நிலையில் காடுகளுக்குப் போகிறார்கள் புலிகளோடு. நிலவறைகளில் பதுக்கம். ராணுவம் அழித்து நொறுக்கி வரவர இவர்கள் மூட்டைமுடிச்சுகளோடு பத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஓடியோடிப்போய் பதுங்க வேண்டியிருந்திருக்கிறது. நடந்துவர முடியாத நோயாளிகள் வயோதிகர்கள் அங்கவீனர்களை அப்படியப்படியே பங்கருக்குள் கைவிட்டுவிட்டு ஓடியுள்ளனர். கைவிடப்படப்பட்ட அந்த பங்கர்களுக்குள் ஒருவேளை யாராவது உயிர் பிழைத்திருந்தாலும் கூட ஒருவருக்கும் தெரியப்போவதில்லை. இனி புலிகளை நம்பி உயிரையும் போக்கிக்கொள்வதில் அர்த்தமில்லை. எனவே படகேறித் தப்பித்து நேவியிடம் சரண். பின் முகாமில் வதிந்து ஆகஸ்டில் விடுவிப்பு. இப்போது அவர்களின் பிரச்னை, வீடு. வன்னிக்குப் போன அவர்களின் ஒரு குடும்பம் இப்போது ஐந்தாக பெருகி யாழ்ப்பாணம் திரும்பி நடுத்தெருவில் நிற்கிறது. தொழிலுக்குச் செல்ல படகோ வலையோ இல்லை. பணம் நகை எதுவும் மிஞ்சவில்லை. அவற்றை விற்றுத்தான் கடைசிநாட்களில் சீவித்திருக்கிறார்கள். எல்லாமும் தோற்றாகிவிட்டது. தெரிந்த தொழிலுக்கு அவர்களால் திரும்ப முடியவில்லை. நீர்மேலிருந்தவர் நெருப்புக்குள் கரிபடுகிறார். முகாம்களிலிருந்து விடுவிக்கப்படுகிறவர்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை. முப்பது ரூபாய்கு ஒரு டீ விற்கிற நாட்டில், அரசு கொடுக்கிற சிறுதொகையை வைத்துக்கொண்டு அந்த மக்கள் எப்படி மீண்டெழ முடியும்?

 # இலங்கை தமிழர்களின் நிச்சயமான வாழ்வாதாரம் குறித்து பேசாதநிலை தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்வாதாரம் குறித்து ஏதேனும் முன்னெடுப்புகள் இலங்கையில் (அரசு அல்லாத) புலம்பெயர்ந்த இடங்களில் நடக்கிறதா?

 .) ஐரோப்பா அல்லது பிறநாடுகளில் அடைக்கலம் புகுந்த இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலோர் ஐந்தாறு ஆண்டுகளில் அங்கு பொதுசமூகத்தோடு இணைந்து வாழவும் குடியுரிமை பெறவும் முடிகிறது. ஆனால் கால்நூற்றாண்டு காலமாய் தமிழ்நாட்டின் அகதிகள் முகாமில் வதியும் இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் அகதிகள்தான் என்பதை எமது புதுவிசையில் தொடர்ந்து எழுப்பிவந்தோம். வவுனியா முகாமைப் பார்க்கப்போன நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனைபேர் தமிழ்நாட்டிலுள்ள முகாம்களுக்கு சென்றிருப்பார்கள் என்பது தெரியவில்லை. அண்டி வந்தவர்களையே ஆதரிக்காத இந்த தமிழ்நாட்டு சமூகம் இலங்கைக்குப் போய் என்னத்த கிழிக்கப்போகிறது? கழுத்துநரம்பு புடைக்க ராஜபக்சேவையும் சிங்களவர்களையும் இங்கு வசைபாடித் திரிவதால் அங்குள்ள தமிழர்களுக்கு நன்மையேதும் விளையப் போவதில்லை.

) புலம்பெயர் நாடுகளின் புலி ஆதரவாளர்களைப் பொறுத்தவரை மாற்றுக்கருத்தாளர்கள் எல்லோரையும் சிறுமைப்படுத்துவதன் மூலம் இலங்கையில் அமைக்கமுடியாத தனி ஈழத்தை இணையத்திலாவது அமைத்தே தீர்வோம் என்று மும்முரமாய் பாடுபட்டுக் கொண்டுள்ளனர். ஒரு இருபதாண்டுகள் கழித்து தனிஈழப் போராட்டம் பற்றி அறிந்துகொள்ளும் தரவுகளை இணையத்தில் தேடும் ஒருவருக்கு அங்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், தோல்விகள் எதற்கும் புலிகள் அமைப்போ தலைமையோ பொறுப்பல்ல என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கும் அதிரடியான அறிக்கைகளையும் இட்டுக்கட்டப்பட்ட ஆவணங்களையும் இணையத்தில் உலவவிடுவதோடு இவர்கள் பணி நிறைவு பெறுகிறது. எனவே இவங்கையில் தமிழர்கள் படும் துயரங்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஏனெனில் அவர்கள் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை எட்டிவிட்டவர்களாக இருக்கிறார்கள்.

.) யாழ்ப்பாணத்தில் பெரியபெரிய பதாகைகளையும் கொடிகளையும் கட்டிக்கொண்டு தொண்டு நிறுவனங்கள் என்கிற ஃபண்டு நிறுவனங்களின் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் பறக்கின்றன. மாளிகை போன்ற பெரிய வீடுகள்தான் அவற்றின் அலுவலகங்கள். அரசியல்ரீதியான பிரச்னைகளை இந்த அமைப்புகள் கொடுக்கும் சோற்றுருண்டைகள் தீர்த்துவைக்க முடியாது. ஒருசில அமைப்புகளைத் தவிர மற்றவற்றுக்கு சுனாமி கொள்ளை போல இதுவும் ஈழமக்களின் பெயரால் கொள்ளையடிக்கும் வாய்ப்புதான்.

) புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் கொழும்பிலும் வாழக்கூடிய பொன்னாலைக்கட்டியான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்து நிதிதிரட்டி போரினால் முற்றிலும் அழிந்துபோன தங்கள் ஊரை மீள கட்டியெழுப்புவதாக அந்த குழுவின் நிர்வாகி மருத்துவர்.ஞானகுமரன் தெரிவித்தார். இம்மாதிரியான முயற்சிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கின்றன.

) புலம்பெயர்ந்தவர்களில் ஒரு சிறுகுழு இப்போதைய சூழலைப் புரிந்துகொண்டு செயலாற்றவேண்டிய தளங்களை கண்டறிய முயற்சிக்கிறது. ராணுவரீதியில் பலவீனமாக இருந்த பல்வேறு நேரங்களில் அரசியல் தீர்வு, சமஸ்டிமுறை என்றெல்லாம் புலிகள் பேசியதைதான் இவர்களும் முன்வைக்கிறார்கள். அதற்காக துரோகிகள், அரசாங்கத்தின் கைக்கூலிகள் என்று தூற்றப்படுகிறார்கள். எனினும் அரசியல் உரிமைகளை அடையும் சக்திகள் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலிருந்துதான் உருவாக முடியும் என்பதை உணர்ந்து அதற்கான தொடர்புகளை மேற்கொண்டுள்ள இந்த சிறுபகுதியினர் நம்பிக்கையளிக்கின்றனர்.

 # விடுதலைப் புலிகள் இனிவிடுதலைப் புலிகள் குறித்து இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை என்ன-? அடுத்தக்கட்ட போருக்கு தயாராவோம் என்று இங்கிருந்து கிளம்பும் கோஷங்களுக்கு இலங்கை வாழ் தமிழர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கு

 பிரபாகரன் மீண்டும் வருவாராமே என்று அங்குள்ளவர்களிடம் கேட்டால், வரட்டுமே.. வந்து என்ன செய்யப் போகிறார்இத்தனை ஆயிரம் போராளிகளையும் இவ்வளவு ஆயுதங்களையும் பெருந்தொகையான பணத்தையும் வைத்துக்கொண்டே ஒன்றும் செய்ய ஏலாதவர் இனி வந்து என்ன செய்யப் போகிறார் என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள். ஒருவேளை வந்தால் அவரும் ஒரு இணையதளத்தையோ பிளாக்கையோ அமைத்துக்கொண்டு அட்டைக்கத்திதான் வீசமுடியமேயன்றி ஆயுதத்தை தூக்கமுடியாது என்கிறார்கள்.யாழ்ப்பாணம் நாவலர் அரங்கில் நடைபெற்ற சந்திப்பின்போது ஒரு அன்பர் சொன்னார்- தமிழர்கள் மானஸ்தர்கள், ஆளப்பிறந்தவர்கள், அவர்கள் தனித்துவமானவர்கள், பிற இனத்தோடு சேர்ந்து வாழ முடியாதவர்கள், தனிநாட்டுக்கு குறைவான எதிலும் அவர்கள் திருப்தி கொள்ள முடியாது என்றெல்லாம் உங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்கள் பேசுவது உண்மையென்றால், தனி தமிழ்நாட்டுக்காக போராட வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு இவர்களது வீராப்புக்கும் வெத்துச் சவடாலுக்கும் ஏன் எங்கள் உயிரையும் வாழ்வையும் பணயம் வைக்கிறார்கள்? என்று.வவுனியா முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு வந்துகொண்டிருக்கும் 1280 பேரை அழைத்துப்போக யாழ்ப்பாண நூலகத்தினருகில் உள்ள துரையப்பா ஸ்டேடியத்தின் வாயிலில் காத்திருந்த ஒரு கூட்டத்திடம் உரையாடிக் கொண்டிருந்தோம். ஒரு மீனவப்பெண் சொன்னார்- எத்தனை இம்சைஇன்னொரு தடவை ஆயுதம் போராட்டம்னு எவனாச்சும் சொன்னா தும்புக்கட்டையாலயே ( துடைப்பம்) அடிச்சு சாத்திப்புடுவேன். போரை எதிர்கொண்ட எளிய மக்களின் மனநிலை இதுதான்.

 # இலங்கை தமிழர்கள் வாழ்வுரிமைக்காக நம்மைப் போன்ற வெளியில் இருக்கும் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? (அல்லது) இலங்கை தமிழர்கள் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்கள்?

வாயை மூடிக்கொண்டிருந்தால் போதும், அதுவே நீங்கள் செய்யும் பேருதவி என்பதுதான் அவர்கள் நமக்கு விடுக்கும் வேண்டுகோள். காடு அதிர்கிறது மீண்டும் எழுகிறது என்றெல்லாம் வீராவேசமாக இங்குள்ள பத்திரிகைகள் வெளியிடும் பரபரப்பு செய்திகள் கண்டு அவர்கள் பதறுகின்றனர். இப்படியான செய்திகள், தனது ராணுவ கெடுபிடிகளை நீட்டித்துக்கொள்ள அரசாங்கத்துக்கு உதவும் என்று கண்டிக்கின்றனர். ஒருவேளை அரசாங்கத்துக்கு இப்படி மறைமுகமாக உதவுவதுதான் இவர்களது உள்நோக்கமோ என்றும் சந்தேகிக்கிறார்கள். ஏற்கனவே இணையதளங்களிலும் யூடியூப்களிலும் வெளியிடப்பட்ட வீரதீர புகைப்படங்களையும் வீடியோக்காட்சிகளையும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு தமிழனையும் உற்றுஉற்று பார்த்து சந்தேகிக்கும் ராணுவத்தாருக்கு உதவும் பொறுப்பற்ற பேச்சுகளையும் அறிக்கைகளையும் நிறுத்தச் சொல்லுங்கள் என்ற அவர்களது வேண்டுகோள் நம் தமிழ்த்தேச தலைவர்களின் இதயங்களை தைக்கவேயில்லை. இந்திய அரசாங்கம் ஏன் தமிழர்களை ஆதரிக்கவில்லை? இலங்கையின் ஒடும் வாகனங்கள் டாடாவும் லேலண்டும். இருசக்கர வாகனமென்றால் பஜாஜ், ஹீரோ ஹோண்டா, டி.வி.எஸ். தொலைத்தொடர்பில் ரிலையன்சும் ஏர்டெல்லும். நாடு முழுதும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் பெட்ரோல் நிலையங்கள். அங்கிருந்த பெரிய சிமெண்ட் ஆலை இப்போது பிர்லாவிடம். நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்கு வகிக்கும் தேயிலைத் தோட்டங்கள் இந்தியருக்கு சொந்தம். இவையன்றி இலங்கையின் அன்றாடப் பயன்பாட்டில் புழங்கும் பொருட்களில் 90 சதமானவை இந்திய தயாரிப்புகள். தமிழர்கள் என்ற சிறுபான்மையினரை ஆதரித்து இலங்கை என்கிற இவ்வளவு பெரிய சந்தையை இழக்க இந்திய முதலாளிகளும் வர்த்தக நிறுவனங்களும் தயாரில்லை. இவர்களது சந்தை நலனுக்கு பாதிப்பில்லாத ஒரு அணுகுமுறையைதான் சோனியா, வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதா என்று யார் ஆண்டாலும் கடைபிடிப்பார்கள்.

# மலையகத்தமிழர்கள் வாழ்நிலை என்னவாக உள்ளது?

இலங்கைக்குப் போய் திரும்பியிருக்கிறேன் என்றதும் எல்லோரும் யாழ்ப்பாண தமிழர்களைப் பற்றிதான் விசாரிக்கிறார்கள். ஆனால் இலங்கையில் ரயில்பாதை அமைக்கவும் பாலங்கள் கட்டவும் துறைமுகம் தோண்டவும் காப்பி தேயிலைப் போன்ற பெருந்தோட்டங்களில் வேலைசெய்யவும் 19 ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் தமிழ்நாட்டிலிருந்து பிரிட்டிஷ்காரர்களால் பிடித்துச் செல்லப்பட்டு இன்று மலையகத்தமிழர் என்றழைக்கப்படும் நமது முன்னோர்களைப் பற்றி ஒருவரும் விசாரிப்பதேயில்லை. அவர்களும் தமிழர்கள். அவர்களது பூர்வீகம் என்ற இந்த தமிழ்நாட்டில் அவர்களுக்காக ஒரு கைப்பிடி மண்ணும் இல்லை. இருநூறாண்டுகளாக எஸ்டேட்டுகள் என்ற திறந்தவெளி சிறைச்சாலைக்குள்ளும் அனேக இடங்களில் முள்வேலிக்குள்ளும் அடைக்கப்பட்ட வாழ்க்கைதான் அவர்களுடையது. கடும் உழைப்புச் சுரண்டலுக்கு இன்றளவுக்கும் ஆளாகியிருப்பவர்கள். 83 வன்செயலின்போது சிங்களவர்களாலும் ராணுவத்தாலும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள். பல்லாயிரக்கணக்கான அடி உயரத்திலுள்ள மலைகளுக்கு தாங்களே பாதையமைத்து மேலேறிப் போனவர்களில் பலர் இன்னும் சமதளத்திற்கு இறங்கவேயில்லை. உயரங்களிலும் சிகரங்களிலும் வசித்தாலும் அவர்களது வாழ்க்கை அதலபாதாளத்தில்தான். ஒருவேளை மலையகத்தமிழர்களில் 87 சதமானவர்கள் தலித்துகள் என்பதோ, டாலரும் பவுண்ட்சும் இல்லாத கூலித்தமிழர்கள் என்பதோ அல்லது பரபரப்பாக கவனிக்கப்படாது என்பதாலோ அவர்களைப் பற்றி தமிழ்த்தேசியவாதிகளோ, இனமானக் காவலர்களோ, ஊடகங்களோ பேசுவதேயில்லை. இலங்கையின் மலையகத்தமிழர் பற்றி மட்டுமல்ல, உலகம் முழுவதும் தமது காலனிகளாயிருந்த 40 நாடுகளுக்கு பிரிட்டிஷ், பிரான்ஸ் ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டு மக்களை பிடித்துப்போயிருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியர் அழைத்துச் செல்லப்பட்டதன் (?) 150வது ஆண்டு விழாவை வெட்கங்கெட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிற இந்த நேரத்திலாவது 40 நாடுகளுக்கும் புலம் பெயர்த்து கொண்டுபோகப்பட்ட தமிழர் நலன் குறித்த விவாதம் தொடங்கப்பட வேண்டும். இல்லையானால் ஈழத்தமிழருக்காக வடிக்கப்படும் கண்ணீரை கபடம் நிறைந்ததென்றே வரலாறு குறித்துக் கொள்ளும்.

நன்றி : சூரியகதிர் 

நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை! April 27, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், ஆயுதப் போராட்டம், இன உணர்வு, இலங்கை தமிழர், ஊடகம், சமூகம், செப்டம்பர் 11, நேபாள மாவோயிஸ்ட்கள், புதுவை சுகுமாறன், போராட்டம், போர்ச்சூழல், விடுதலைப் புலிகள்.
Tags: , , , , , ,
49 comments

nepal-maoist-postersற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து என்ன பேசினாலும் நம்முடைய சார்பு நிலையில் எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது. அதாவது புலிகளுக்கு ஆதரவு-இலங்கை தமிழருக்கு ஆதரவு அல்லது புலிகளுக்கு எதிர்ப்பு-இலங்கை அரசுக்கு ஆதரவு. இவை இரண்டைத்தவிர மற்றொரு நிலைப்பாடும் இருக்கக்கூடும், தேவையாக இருக்கிறது என்பதை பலரும் சிந்திக்கக்கூட மறுக்கிறார்கள். அரசியல் கட்சிகள் முதல்கொண்டு ஊடகங்கள் வரை தங்கள் ஆதாயத்துக்குகேற்றபடி நிலைப்பாட்டினை எடுக்கின்றன. பொதுபுத்தியில் படிந்துபோயுள்ள தமிழர் என்கிற இனவுணர்வைத் தூண்டி ஆதாயம் பெறப்பார்க்கின்றன. அறிவுஜீவிகள் என்று மார்தட்டிக் கொள்கிறவர்களின் செயல்பாடும் இப்படித்தான் உள்ளது. சாதி உணர்வு, மத உணர்வு எந்த அளவுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமோ அதே அளவுக்கு கண்மூடித்தனமான இன உணர்வும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதே.

இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் உணர்ச்சி வசப்படுவதை விட்டுவிட்டு அடுத்த நகர்வு குறித்து யோசிப்பதுதான். இன்னும் பல தசாப்தங்களுக்கு போரை நடத்திக்கொண்டிருப்பதா? போர் முடிவுக்கு வரும்பட்சத்தில் தமிழர், இலங்கையில் நிலையான அமைதியோடு வாழ வழிவகை என்ன? நம்முன் இருக்கும் கேள்விகள்

நேபாளத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி ஆயுத ஏந்திய மாவோயிஸ்டுகளின் அணுகுமுறையை இலங்கை பிரச்சினையில் புலிகள் ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? நேபாளத்தில் மன்னராட்சியும் நிலப்பிரபுத்துவமும் பிரச்சினைகள் என்றால் இலங்கையில் இருப்பது இனப்பிரச்சினை என்று மேலோட்டமாகப்பார்த்து தள்ளிவைக்காமல் இது குறித்து சிந்தனையும் விவாதமும் செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு நேபாள அரசியல் நிர்ணநய சபைக்கான தேர்தலுக்குப் பார்வையாளராக சென்று வந்திருந்த புதுவை சுகுமாறனிடம் நான் கண்ட நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இது. நான் பணியாற்றிய வார இதழில் வெளியானது . சூழ்நிலை கருதி மீள்பிரசுரம் செய்கிறேன்.

மக்கள் ஆட்சியா, மன்னர் ஆட்சியா என்று புயல் வீசிக்கொண்டு இருந்த நேபாளத்தில் இப்போது ஜனநாயகக் காற்று! பத்தாண்டுகளாக நடந்த ஆயுதப் போராட்டத்தின் முடிவில், மாவோயிஸ்ட்கள் தலைமையிலான ஆட்சி அமைந்திருக்கிறது. நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தலின் பார்வையாளராகச் சென்று வந்த மனித உரிமை ஆர்வலர் புதுவை கோ.சுகுமாறனுடன் ஒரு சந்திப்பு

”ஆயுதம் தாங்கிய போராட்ட அமைப்பான மாவோயிஸ்ட்கள் நேபாளத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எப்படி இது சாத்தியமாயிற்று?”

”நேபாள மக்களின் ஒரே வருமானம் சுற்றுலாதான். காட்மாண்டு நகரம், இரண்டு மலைகளுக்கு நடுவே கோடையிலும் கொப்பளிக்கும் நாராயணி ஆறு. இந்த இரண்டும் கொள்ளை அழகுடையவை. இருந்தாலும், ஏழ்மையும் வறுமையும்தான் நேபாளத்தின் உண்மையான முகம். விவசாயம் நொடித் துப்போன பல லட்சம் பேர் கூர்க்காக்களாக, இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் கிளம்பிவிடுகிறார்கள். கடந்த 240 ஆண்டுகளாக மன்னரைக் கடவுளாக நினைத்து, அவர் தங்களுக்கு நல்லது செய்வார் என்று நம்பிக்கொண்டு இருந்தவர்கள் நேபாள மக்கள். 1996ல் மன்னர் குடும்பத்துக்குள்ளேயே நடந்த படுகொலைகள் அந்த நம்பிக்கையை முதன்முறையாகத் தகர்த்தன. அதன் பிறகுதான் கட்சிகளின் மேல் மக்கள் நம்பிக்கை வைக்கத் தொடங்கினார்கள். மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள் மாவோயிஸ்ட்கள். கடந்த பத்தாண்டுகளாக நடந்த போராட்டத்தில் இரண்டு தரப்பிலும் சேர்த்து 12 ஆயிரம் பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு, மூன்றாவது முறையாக அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் இப்போது நடந்தது. மாவோயிஸ்ட்கள் இதில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து வென்றதற்கு அரசியல்ரீதியாக நிறைய காரணங்கள் இருந்தாலும் அடித்தட்டு மக்களை ஒன்றிணைத்ததுதான் முக்கியமான காரணம்! தேர்தல் மிக அமைதியாக நடந்தது. கிட்டத்தட்ட 85 சதவிகித ஓட்டுப்பதிவு நடந்தது. ரொம்பவும் சாதாரணமாக மரத்தடியில் ஓட்டுப் பெட்டியை வைத்திருந்தார்கள். ஓட்டு எண்ணுவதும்கூட அதீத பாதுகாப்பு இல்லாமல் எளிமையாக, நேர்மையாக நடந்தது. இந்தத் தேர்தல் வெற்றி என்பது, நேபாள மக்களின் அமைதிக்குக் கிடைத்த வெற்றி!”

”ஆயுதங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு ஜனநாயகத்துக்குத் திரும்பியிருக்கும் மாவோயிஸ்ட்கள், இதே நிலையைத் தொடர்வார்களா?”

”செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு, ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்கள் அனைத்தையும் தீவிரவாத அமைப்புகளாக அறிவித்தது அமெரிக்கா. இதனால், விடுதலைப் புலிகள் உள்பட பல போராட்டக் குழுக்கள் அந்தந்த நாடுகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. பெரும்பாலும் அவை தோல்வியிலேயே முடிந்தன. நேபாள மாவோயிஸ்ட்கள் மட்டுமே இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டவிடம், ‘ஜனநாயகப் பாதையில் நீடிப்பீர்களா?’ என்று கேட்டோம். ”ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில்தான் ஆயுதம் தூக்கினோம். இனி, அது தேவைப்படாது. ஆயுதம் ஏந்திய போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் மூன்றாவது உலக நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளுக்கு நாங்கள் முன்னுதாரணமாக இருப்போம்” என்றார்.”

”நேபாளத்தில் ஜனநாயகம் மலர்ந்திருப்பதை இந்தியா எப்படிப் பார்க்கிறது?”

”ஒருவகையில் இது இந்தியாவுக்குக் கிடைத்த அடிதான். மாவோயிஸ்ட்கள் தலைமையில் ஆட்சி அமைவதை ஒருவித படபடப்புடன்தான் பார்க்கிறது இந்தியா. நேபாளத்தில் செல்வாக்கான கட்சியான மாதேஸி கட்சி, ஆரம்பத்தில் இந்தத் தேர்தலில் பங்கேற்க மறுத்து வந்தது. இதன் பின்னணியில் இந்திய உளவுத் துறை இருப்பதாகச் சொல்கிறார்கள். அரண்மனையிலிருந்து வெளியேறப்போகும் நேபாள மன்னரை இந்தியாவில் தங்கவைக்க இந்திய அரசு விரும்புவதாகச் சொல்கிறார்கள். அதை மாவோயிஸ்ட்கள் விரும்பவில்லை. இதுவரை சீனா வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், அது மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என்கிறார்கள். இந்தியா என்ன செய்யப்போகிறது என்று பார்க்கலாம்!”

”நேபாள மாவோயிஸ்ட்களின் இந்த வெற்றி, மற்ற ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு வழிகாட்டுமா?”

”நிச்சயமாக! 1983லிருந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் புலிகளால் இதுவரை அமைதியை எட்ட முடியவில்லை. காரணம், மாவோயிஸ்ட்களைப் போல நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை. விடுதலைப்புலிகள் இந்த முன்னுதாரணத்தைப் பரிசீலிக்கச் செய்ய வேண்டிய நேரம் இது!”

14-5-08

“அடித்து துரத்தும் வரலாறு இடதுசாரிகளுக்கு புதிதல்ல…” April 4, 2009

Posted by மு.வி.நந்தினி in 18785444, அமிதவ் கோஷ், இடதுசாரிகள், சமூகம், சிங்கூர், சுற்றுச்சூழல், தஸ்லிமா நஸ்ரின், நந்திகிராம், போராட்டம், விருது.
Tags: , ,
3 comments

amitav1

ஒரு எழுத்தாளர் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமானால் அவருடைய எழுத்தை நிச்சயமாகப் படித்தாக வேண்டும். எழுத்தாளர் குறித்து மற்றவர்கள் தரும் விமர்சனம், மேலதிக தகவல்கள் அந்த எழுத்தாளரின் அறிமுகத்தை தருமேயன்றி அவையே இறுதியான மதிப்பீடுகளாக முடியாது. நம்முடைய சுய அனுபவத்தின் மூலமாகவே எழுத்தாளர் குறித்த மதிப்பீட்டினை பெற முடியும் என்பது என் கருத்து. குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு இது மிகவும் அவசியம். தமிழில் எழுதும் எழுத்தாளர்களை நேர்காணல் செய்யும் அவர்கள் எழுதிய குறைந்தது இரண்டு புத்தகங்களையாவது படித்துவிட்டுத்தான் பேசுவது என்கிற வழக்கத்தை வைத்திருக்கிறேன். (வெகுஜன ஊடகங்களில் விரிவான நேர்காணலுக்கு சாத்தியம் இல்லை என்பதால் இந்த அளவுகோல்) அமிதவ் கோஷ் தன்னுடைய SEA OF POPPIES’ நாவலின் சென்னை வெளியீட்டுக்காக வந்திருப்பதாக பென்குயின் பதிப்பகத்தின் சென்னை பொறுப்பாளர் என்னை அழைத்திருந்தார். அவர் சொல்லித்தான் அமிதவ் கோஷ் என்கிற எழுத்தாளர் இருக்கிறார் என்பதே தெரியும். அமிதவ் குறித்த தகவல்களை இணையத்தின் மூலம் அறிந்துகொண்டபோது அவர் இந்திய - ஆங்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த ஆளுமை என்பது புரிந்தது. அவருடைய எழுத்துகளை படிக்க ஆர்வம் கொண்டபோதும் என்னுடைய ஆங்கில போதாமையின் காரணமாக குறைந்த கால அவகாசமே இருந்த நிலையில் SEA OF POPPIES’ நாவலில் ஆசிரியர் குறிப்பும் மதிப்புரையுமே படிக்க முடிந்தது. அதனாலேயே நாவல் குறித்து அதிகம் கேட்காமல் நந்திகிராம், சிங்கூர் பிரச்சினை, மகாஸ்சுவேதா தேவி என்று வேறுவேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் தயாரித்துக்கொண்டேன். அமிதவ் உடனான பேட்டி என்னளவில் திருப்தி கொடுத்தது, அவருடனான சந்திப்பு பிரமிப்பை அளித்தது. அவருடைய படைப்புகளை படிக்க முயன்று கொண்டிருக்கிறேன். அமிதவ் கோஷின் டிரைலாஜி நாவலான SEA OF POPPIES’ புக்கர் பரிசுக்கு இறுதிப் பட்டியல் வரை தேர்வானது. இந்த ஆண்டு புக்கர் பரிசு அமிதவுக்குத்தான் என்று எழுத்தாளர் வட்டாரங்களில் எதிர்பார்ப்பும் இருந்தது. இறுதி நிமிடத்தில் அர்விந்த் அடிகாவுக்கு புக்கர் கிடைத்தது. கடந்த ஜூலையில் பதிவு செய்த பேட்டி இது. சுருக்கமாகவே நான் பணியாற்றிய இதழில் வெளியானது. அவர் பேசியபோது எடுத்த குறிப்புகள் எதுவும் என்னிடம் இல்லை என்பதால் இதழில் வெளியான பேட்டியையே இங்கு கொடுத்திருக்கிறேன். நந்திகிராம் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இடதுசாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து அமிதவ்விடம் கேட்டபோது மக்களை அடித்து துரத்துவது இடதுசாரிகள் ஏற்கனவே செய்ததுதான் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. ஒரு வரலாற்று உண்மையை சொன்னதற்காகவே அமிதவ் கோஷின் இந்த பேட்டியை மீள் பிரசுரம் செய்கிறேன்.அமிதவ் கோஷ்வங்காளம் உருவாக்கிய இந்தியாவின் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர். மனதில் நினைப்பதைப் பளிச் என்று பேசுகிற படைப்பாளி. அமிதவ் கோஷின் ஒரு புத்தகத்துக்காக பதிப்பகங்கள் தரும் தொகை கிட்டத்தட்ட அரைக் கோடி! அமெரிக்காவில் வசிக்கும் அமிதவ், பென்குயின் பதிப் பகம் பதிப்பித்திருக்கும்சீ ஆஃப் பாப்பிஸ்‘ (Sea of poppies) என்ற புதிய நாவலின் வெளியீட்டுக்காக சென்னை வந்து இருந்தார்.

”வங்காள விரிகுடாவின் கடற்கரையிலிருந்து சைனாவுக்கு ஓபியம் கொண்டுசெல்வதுதான் பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில் கொடிகட்டிப் பறந்த கடல் வாணிபமாக இருந்தது. பீகாரின் பல பகுதிகளில் இதற்காகவே கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் ஓபியம் செடிகள் வளர்க்கப்பட்டன. ஓபியம் செடிகளிலிருந்து பூக்கும் பூக்கள்தான் பாப்பி! நீல நிறத்தில் பூத்துக்கிடக்கும் இந்த பூக்களைப் பார்க்கும்போது நிலத்தில் கடல் முளைத்தது போல இருக்கும். அங்கிருந்துதான் ‘சீ ஆஃப் பாப்பிஸ்’ என்ற தலைப்பு கிடைத்தது” வார்த்தைகளை நிதானமாக, அழுத்தமாகப் பேசுகிறார் அமிதவ்.

”மேற்கு வங்கத்தில் நடக்கும் பிரச்னைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? இடதுசாரி அரசு நடந்துகொள்ளும் விதம் சரிதானா?”

”கோவாவில் எனக்கு வீடு இருக்கிறது. கொல்கத்தாவில் உள்ளதைப் போல கோவாவிலும் சில பிரச்னைகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆனால், அரசின் அணுகுமுறையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதே ‘செஸ்’ விவகாரத்தை கோவாவில் பள்ளி ஆசிரியர்களாகவும் சாதாரண கூலிகளாகவும் இருப்பவர்கள் கையில் எடுத்துப் போராடுகிறார்கள். அங்கே மக்கள் போராட்டம் வென்றிருக்கிறது. நிலங்களைக் கையகப் படுத்தும் திட்டம் கை விடப்பட்டு இருக்கிறது. மேற்கு வங்க அரசு தன்னுடைய கொள்கை களை மக்கள் மேல் திணிக்கப் பார்க்கிறது. சிங்கூர், நந்திகிராம் பகுதிகளில் நடக்கும் போராட்டத்தால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகிக்கொண்டு இருக்கின்றன. மாநிலத்தின் வளர்ச்சியைத் தவறான முறையில் செயல்படுத்தப் பார்க்கிறது வங்க அரசு. வங்கப் போர் நடந்த காலத்தில் அகதிகளாக சுந்தரவனக் காடுகளில் குடியேறினார்கள் வங்க தேச மக்கள். சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற காரணம் சொல்லி, இதே வழிமுறையில் அவர்களை அடித்துத் துரத்தியே கொன்று குவித்த வரலாறு இடதுசாரி அரசுக்கு உண்டு!”

”எழுத்தாளரும் சமூகப் போராளியுமான மகாஸ்வேதா தேவி, ‘நரேந்திர மோடியைவிட மோசமானவர் புத்ததேவ்’என்று சொல்லி இருக்கிறார். இது குறித்து உங்களுடைய பதில் என்ன?”

”மகாஸ்வேதாதேவி மூத்த எழுத்தாளர். அவர் இப்படியரு கருத்தைச் சொல்லும்போது நிறைய சிந்தித்திருக்க வேண்டும். இந்திய வரலாற்றில் மிகவும்மோச மான மத தாக்குதலை நிகழ்த்தியவர் நரேந்திர மோடி. அவரோடு புத்ததேவை ஒப்பிடுவது சரியல்ல. மேற்கு வங்கத்துக்குப் பொருந்தாத முன்னேற்றக் கொள்கையை எடுத்ததுதான் புத்ததேவ் அரசு செய்த மாபெரும் தவறு. முப்பது ஆண்டு காலமாக ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதன் விளைவுதான் இது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நினைத்ததை எல்லாம் சொல்லக் கூடாது. கருத்துச் சொல்வதிலும் சில கட்டுப்பாடுகள் தேவை. மகாஸ்வேதா தேவியைப் போல தஸ்லிமா நஸ்ரினுக்கும் இது பொருந்தும். சொல்லத் தேவை இல்லாத சில கருத்துக்களைச் சொல்லி, இப்போது ஐரோப்பிய கலாசாரத்துக்கு பொருந்திப்போக முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார் தஸ்லிமா!”

16/7/08

புலிகளுக்காக ஒரு பயணம்… பெப்ரவரி 13, 2009

Posted by மு.வி.நந்தினி in ஊடகம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சுற்றுலா, தெப்பக்காடு, பந்திப்பூர், பழங்குடிகள், புலிகள் சரணாலயம், போராட்டம், மசினிகுடி, முதுமலை, யானைகள் சரணாலயம்.
2 comments

முதுமலை/புலிமேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்கிற ஆவல் நெடுநாட்களாக இருந்தது. வெறுமனே பொழுதை போக்கிவிட்டு வரவும் ஆர்வம் இல்லை. நேரமும் சரிவர ஒத்துழைக்கவில்லை. நேரம் கனிந்து வந்தபோது, முதுமலையை  சுற்றியுள்ள பகுதிகளை புலிகள் சரணாயமாக அறிவித்ததை ஒட்டி அப்பகுதிகளில் வாழும் மக்கள் (பழங்குடிகள்) எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்தி வெளியானது.

காட்டுயிர்/சுற்றுச்சூழல்  பாதுகாப்பு சார்ந்து இயங்கும் நண்பர்களிடம் விசாரித்தபோது “நீங்களே நேரில் சென்று பாருங்கள்” என்று பீடிகை போட்டது முதுமலைக்குச் செல்லும் ஆவலுக்கு தூபம் இட்டது.
சமீப காலமாக மனிதனுக்கு கானக உயிர்களுக்குமான இருப்பு சார்ந்த போராட்டம் வலுத்து வரும் சூழலை ஒட்டி ஒரு ஆவணப்படத்தை உருவாக்கும் முயற்சி குறித்து நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். அதற்கான களஆய்வுப் பணிகளைத் தொடங்க இது சரியான தருணமென முதுமலைக்குச் செல்லும் பயணப்பணிகளைத் தொடங்கினோம். எல்லோருக்கும் ஒரே நேரத்தில் விடுப்பு கிடைக்காத சூழ்நிலையில் நானும் லிசியும் மைசூர் வழியாக கடந்த திங்கள் முதுமலைக்கு பயணப்பட்டோம்.

மைசூரிலிருந்து ஊட்டி செல்லும் சாலையில் 90 கி.மீட்டரில் இருக்கிறது முதுமலை யானைகள் சரணாலயம். அருகிலேயே பந்திப்பூர் புலிகள் சரணாலயம். இரண்டும் ஒரே காடுதான், முன்னது தமிழகப்பகுதியிலும் பின்னது கர்நாடகப்பகுதியிலும் இருக்கிறது. பந்திப்பூரை புலிகள் சரணாலயமாக அறிவித்தது 1973ல். நமக்கு இப்போதுதான் புலிகளின் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது. அதற்கும் எதிர்ப்புகள்…
முதுமலை தெப்பக்காட்டிலிருந்து 10 கி.மீ தொலைவில் மசினிகுடி என்ற ஊர். அவ்வூர் மக்கள்தான் புலிகள் சரணாலயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்கள். காட்டுப்பகுதியை கடந்து செல்லும்போது அதன் வனப்பு எங்களை லயிக்க வைத்தது. கூடவே நகரத்தை விஞ்சும் வகையில் நொடிக்கு ஒருதரம் கடந்து போன வாகனங்களைப் பார்க்க சாவு மணி அடிப்பதைப்போன்றதொரு உணர்வுதான் ஏற்பட்டது.

மூன்று நாட்கள் முதுமலையின் சில கிராமங்களைக் கண்டோம். முடிநதமட்டும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தோம். 20,30 ஆண்டுகளுக்கு முன் பிழைப்புக்காக அப்பகுதிகளில் குடியேறி அம்மண்ணின் வளத்தை உறிஞ்சி,இன்று சகல வசதிகளுடனும் வாழும் ஒரு சிலரின் எதிர்ப்புதான் ஊடகங்களால் பழங்குடிகளின் போராட்டமாக திரிக்கப்பட்டுள்ளது (அல்லது) ஊடகங்களுக்கு திரித்து சொல்லப்பட்டுள்ளது. புலிகள் சரணாலயம் ஆக்கப்பட்டால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், அதனால் சுற்றுலாவை நம்பிருக்கும் தங்களுடைய சுரண்டல் தொழில் பாதிக்கப்படும் என்பதுதான் இந்தப்போராட்டங்களின் காரணம்.

பழங்குடி பெண்களுடன் லிசி
ஆனால் இப்போதும் யானை கலக்கிவிட்டுச் சென்ற குட்டை நீரையே குடிநீராக குடித்து வாழும் பழங்குடிகளின் மன்றாடல் என்னவோ யானையும் புலியுமாவது அதனுடைய உரிமையை அனுபவிக்கட்டும் எங்களை வேறு இடங்களில் குடியமர்த்துங்கள் என்பதாக இருக்கிறது…

விரிவாக சொல்ல வேண்டிய விஷயமிது, சுருக்கமாக தந்திருக்கிறேன்.

Follow

Get every new post delivered to your Inbox.