வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா? பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி!

பரமார்த்த குரு கதை:முன்னோடி முயற்சியாகுமா? என்ற தலைப்பில் எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய கட்டுரையை அவருடைய வலைத்தளத்தில் படித்தேன். பெருமாள்முருகன் எழுதிய கட்டுரையை ஒட்டி சில விளக்கங்களையும் சில வினாக்களையும் முன்வைக்கிறேன். இந்தக் கட்டுரையின் ஊடாக வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் தமிழின் முன்னோடி முயற்சியில்லை என்று பெருமாள்முருகன் நிறுவ முயல்வது தெரிகிறது.

”வரலாற்றில் இவ்விதம் வைக்கப்படும் அளவுக்கான நூல்தானா அது?அப்படியானால் அது எங்கே கிடைக்கிறது? நூலகங்களில் பார்க்க முடியுமா?நூலில் மொத்தம் எத்தனை கதைகள் உள்ளன? பரமார்த்த குரு கதை என்னும் பெயரில் பாட நூல்களில் காணப்படும் கதைகள் வீரமா முனிவர் எழுதியவையா? நூல்களாக வெளியிடப்பட்டு இன்று புத்தகச் சந்தையில் கிடைப்பவை நம்பகமானவையா? இத்தகைய ஐயங்களுக்குப் பதில் சொல்வது என்பது வருத்தப்படுவதாகவே அமையும்.

  மூன்று நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட அந்நூலைப் பற்றி விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. இது தொடர்ந்து அச்சில் இல்லாமைக்கான காரணம் பற்றியும் ஆராய வேண்டும். சிறுவர் கதை நூலாக அதன் தளம் சுருங்கிவிட்ட வரலாறும் பேசப்பட வேண்டும். பரமார்த்த குரு கதை பற்றிய அடிப்படைத் தகவல்கள்கூடப் போதுமான அளவு இல்லை. இக்கதை தழுவல் என்றும் இலத்தீன் – தமிழ் அகராதியின் பின்னிணைப்பாக அவரால் வெளியிடப்பட்டது என்றும் 1728ஆம் ஆண்டு புதுச்சேரியில் அச்சிடப்பட்டது என்றும் கிடைக்கும் தகவல்கள் போதுமானவையாக இல்லை.” என்கிறார் பெருமாள்முருகன் அந்தக்கட்டுரையில்.
தமிழ் இலக்கியம் பயின்றவரான பெருமாள்முருகன், பரமார்த்த குரு கதைகளை முழுமையாக படிக்காமலேயே, இதுதான் பரமார்த்த குரு கதைகள் என்பதில்கூட அவருக்கு நிறைய சந்தேகம் இருக்கும் நிலையில் ஒரு கருத்தை நிறுவ முயல்வது எவ்வகையான ஆய்வுத்தன்மை என்கிற கேள்வி எழுகிறது.
paramartha guru kathaigal
1800களில் வெளியான பரமார்த்த குரு கதைகள் என்ற நூல் தமிழ் மரபு அறக்கட்டளையால் பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய பெஞ்சமின் பபிங்டன் என்பவர் முன்னுரையுடன் இதை பதிப்பித்திருக்கிறார். பெஞ்சமின் குறுகிய காலமே அன்றைய மெட்ராஸ் ராஜதானியில் பணியாற்றியிருக்கிறார். பிறகு, இங்கிலாந்து சென்று மருத்துவம் பயின்றிருக்கிறார். இவர் இங்கிருந்த 1812லிருந்து 1830வரையான காலகட்டத்திலேயே இந்த நூல் வெளியாகியிருக்க வேண்டும் என்று அனுமானிக்கிறேன். இவர் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையை முக்கியமான ஆவணம் என்பேன். இதில் வீரமாமுனிவர் குறித்தும் பரமார்த்த குரு கதைகள் குறித்தும் இந்த கதைகள் எழுதப்பட்ட தமிழ்மொழி குறித்தும் எழுதியிருக்கிறார். இந்த நூலின் முகப்பில் இருக்கும் தமிழ் மொழியில் ஒரு கதை என்கிற வரிகள், இந்தக் கதைகள் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதல்ல என்கிற கருத்துக்கு வலுசேர்க்கின்றன. இந்த நூலில் மொத்தம் எட்டுக் கதைகள் மட்டுமே உள்ளன. வீரமாமுனிவர் இவற்றை மட்டும் தான் எழுதினாரா, இன்னும் சிலவற்றையும் எழுதியிருக்கிறாரா என்பதில் மேற்கொண்டு ஆய்வுகள் தேவை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது, பின்னாளில் வந்த கதைசொல்லிகள் வீரமாமுனிவரின் அடியொற்றி பரமார்த்த குரு கதைகளை விரிவாக்கியிருக்கிறார்கள். வீரமாமுனிவரின் மொத்த கதைகளும் கிடைக்கும்பட்சத்தில் இந்த மாதிரிகளை இனம்கண்டுவிடலாம்.
1720களில் எழுதப்பட்ட பரமார்த்த குரு கதைகள், கிட்டத்தட்ட 1820வரைக்கும்கூட பேசப்பட்ட படைப்பாக இருந்திருக்கிறது என்பதை பெஞ்சமினின் முன்னுரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். கா.சிவத்தம்பியும் இரா.தண்டாயுதமும் சொன்னதுபோல இது தமிழ் படைப்பிலக்கியத்துக்கு அடிக்கல் இட்ட படைப்பாக இது இருப்பதற்கு சாத்தியப்பாடுகள் அதிகமாகவே உள்ளன. ஆகவே  பெருமாள்முருகனின் கருத்தை பரிசீலிக்க வேண்டியுள்ளது.

நம் முற்றத்து குருவிகள்!

DSCN0088

ஆண்குருவி

சூழலியல் பாதுகாப்பு என்று பேச ஆரம்பித்தாலே பலர் கவலைப்படுவது காணாமல்போன சிட்டுக்குருவிகள் பற்றித்தான். ஏனெனில் சிட்டுக்குருவிகள் நம்மோடு தன் வாழ்விடத்தைப் பகிர்ந்துகொண்ட உயிரினம். நாம் அதை செல்லப்பிராணியாக வளர்க்கவில்லை என்றாலும் நம் வீட்டின் ஒரு பகுதியிலேயே அதுவும் குடியிருக்கும், நம் உண்ணும்போது இடும் உணவுப் பருக்கைகளை ஆர்வத்தோடு கொத்தித் திண்ணும், நம்மோடு விளையாடும். இதெல்லாம் 15 வருடங்களுக்கு முந்தைய நிலை. இன்று சிட்டுக்குருவிகள் நம்முடனான உறவை துண்டித்துக்கொண்டன. நம்முடன் இருக்கும் சிலவற்றையும் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது. நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களில்கூட இதே நிலைதான். என் குழந்தைப் பருவத்தில் சிட்டுக்குருவிகளை கூட்டாமாகத்தான் பார்த்திருக்கிறேன். இணைகளாகத் திரியும், ஆனால் நிறைய இணைகளை ஒரே இடத்தில் காணமுடியும். இப்போது ஒரு இணையை மட்டுமே பார்க்கிறேன். சிட்டுக்குருவிகள் பற்றிய செய்திகளைப் படிக்கும்போதெல்லாம் நான் வாழும் இடங்களில் அவற்றைத் தேடிப் பார்ப்பதுண்டு. நெருக்கடி மிகுந்த சென்னை சூளைமேடு பகுதியில் சில சிட்டுக்குருவிகளைப் பார்த்திருக்கிறேன். என் வீட்டின் அருகே இருக்கிறதா என்று நோக்கும்போது ஒரு இணை சிட்டுக்குருவிகள் என் கண்களில் பட்டன. சிட்டுக்குருவிகளின் கீச்சொலி காலை நேரங்களில் கேட்கும். என் வசிப்பிடத்தை குறுக்கும் நெடுக்குமாக அவை கடந்து போகும். சாலையை ஒட்டியுள்ள தெருமுனையில் அவை மாலை நேரங்களில் மேய்ந்துகொண்டிருக்கும். அவற்றின் கூடுகள் நெரிசல்மிக்க அந்த கட்டடப் பகுதியில் எங்கு அமைந்திருக்கிறது என கண்டறியமுடியவில்லை. அவ்வவ்போது முருங்கை மரத்திற்கு அவை வந்துபோகும், வெயில் நேரங்களில் கொய்யா மரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். இவற்றைத் தவிர நிற குறைபாடுடன் உள்ள ஒரு சிட்டுக்குருவியையும் சமீபத்தில் பார்த்தேன்.

DSCN0089

இணை குருவிகள்

நம்மோடு வாழ்ந்த சிட்டுக்குருவி காணாமல் போக என்ன காரணம் என பல கோணங்களில் விதாவதங்களும் ஆய்வுகளும் நடந்துவருகின்றன. செல்போன் கோபுரங்களால் வெளியிடப்படும் மின்காந்த அலைகளே சிட்டுக்குருவிகள் அழியக்காரணம் என்றார்கள். சிலர் சிறுதானியங்களை நாம் பயன்படுத்துவதை நிறுத்தியதன் விளைவே, அவற்றை உண்ட சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு வழிகோலியது என்றார்கள். மனிதப்பெருக்கத்தின் விளைவாக, நாட்டில் இருந்த சிட்டுக்குருவிகள் எல்லாம் காட்டுக்குத் திரும்பிவிட்டன என்கிறார் காட்டுயிர் எழுத்தாளர் ச. முகமது அலி. காலச்சூழலுக்கு ஏற்ப தன் வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டன சிட்டுக்குருவிகள் என்கிறார் அவர்.
வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ், 1758ம் ஆண்டு வெளியிட்ட முதல் பட்டியலில் இடம் பிடித்த உயிரினங்களில் சிட்டுக்குருவியும் ஒன்று.

DSCN1083

பெண்குருவி

அறிவியல் பெயர்: Passer domesticus
ஆங்கிலப் பெயர்:  House Sparrow
உணவு : தானியங்கள், புழு பூச்சிகள்
வாழிடம்: புல் நிறைந்த இடங்கள், விவசாய நிலங்கள், மனிதர்களின் வசிப்பிடங்கள்
ஆண்-பெண் உருவ வேறுபாடு: ஆண் குருவிக்கு மேல் சிறகில் அடர் பழுப்பு மற்றும் கருமையான பட்டைகள் இருக்கும், பெண் குருவி, வெளிர் பழுப்பு நிற சிறகுகளை மேல்புறத்தில் கொண்டிருக்கும்.
உடலமைப்பு: எடை – 24லிருந்து 38 கிராம்.

’’நினைச்சவுடனேயே அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு?’’

தற்காலச்சூழலில் பெண்ணியம், தமிழ் நாடக வெளியில் இயங்கிவரும் ஆளுமை அ. மங்கை. குங்குமம் இதழில் வெளிவந்த நான் தொடருக்காக அவரைச் சந்தித்து எழுதிய தன்அறிமுகம் இது.

”ஒரு பொண்ணுன்னா இப்படியிருக்கணும், அப்படியிருக்கணும்னு ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள். உட்கார்றது, நடக்கிறது, சிரிக்கிறதுன்னு பெண்ணை உடல்சார்ந்து ஒடுக்கி, தட்டி, கொட்டி வெச்சிருக்காங்க. அப்படிப்பட்ட பெண்ணை கையை வீசி, சுதந்திரமா நடக்க வைக்கிற இடமா மேடை இருக்கு. வளைஞ்சி, நெளிஞ்சி, குனிஞ்சி கிடக்கிற பெண்களைக் குறைந்தபட்சம் தங்களுக்கும் முதுகெலும்பு இருக்குன்னு உணர்த்துகிற வெளியா நாடகம் இருக்கு. யாராவது பார்த்தா தலையை குளிஞ்சிக்கணும்னு பெண்ணுக்குச் சொல்லித்தர்ற சமூகத்துல, நாலு பேரை தலை நிமிர்ந்து பார்த்து பேச வைக்கிற இடம்தான் நாடக மேடை. பெண் விடுதலைக்கான சாத்தியமா நான் மேடையைப் பார்க்கிறேன். நான் நாடகத்தை எனக்கான கலையா ஆக்கிக்கிட்டதுக்கும் இதுதான் காரணமா அமைஞ்சது.
பாரம்பரியமா இருக்கிற கலைகள் எல்லாம் எத்தனை தூரம் பெண்களைப் பங்கெடுக்க வெச்சிருக்குங்கிறதை நாம ஆராய வேண்டியிருக்கு. பெண்கள் கூத்தாடக் கூடாதுன்னு ஒரு மரபே இருந்துக்கிட்டு இருக்கு. அப்போ கற்பனையா சொல்லப்படற கலைகள்லேயும் ஏற்றத்தாழ்வு இருக்குன்னுதானே அர்த்தமாகுது. கலைகள் கலாசாரத்தோட வெளிப்பாடுன்னு சொன்னா, நம்மோட கலாசாரமே ஏற்றத்தாழ்வோட இருக்கான்னு கேள்வி எழுது.
தமிழ் கற்பு, தமிழ் சார்ந்த வாழ்க்கைன்னு அதிகமாக பேசப்படுது. சங்க இலக்கியம் சொல்ற கற்பை நாம எப்படி புரிஞ்சி வெச்சிருக்கோம்? கற்புங்கிறது சொல் திரும்பாமைன்னு சங்க பாடல்கள்ல அவ்வை வெளிப்படையா சொல்லியிருக்காங்க. கற்புங்கிறது அறவியல் சார்ந்த சொல், அதுல எப்படி பெண் சம்பந்தப்பட்டாங்கிறது ஆய்வுக்குரிய விஷயம். இவ்வளவு சொன்ன அவ்வையை நாம எப்படி உருவகப்படுத்துறோம்…எந்த ஆதாரமும் இல்லாம மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டமாதிரி, சங்க இலக்கியத்துல வாழ்ந்த அவ்வையும் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அவ்வையும் ஒண்ணுங்கிறோம். ஆனா, அந்த காலத்திலயே தனியா வாழ்ந்த ஒரு பெண்ணா அவ்வை இருந்திருக்கா. கள் குடிச்சிருக்கா. அதியமானுடன் நல்ல பகிர்தலுக்குரிய நட்போட இருந்திருக்கா, புலால் சாப்டிருக்கா. பின்னாடி வந்த நாம என்ன பண்ணியிருக்கோம்? தமிழ் நாகாரிகம், பண்பாடுங்கிற பேர்ல குமரியா இருந்தவளை, கிழவியாக்கிட்டோம்.

பெண்ணோட பார்வையை, இருப்பைக் கேள்வி கேட்கிற நாடகங்களைத்தான் நான் மேடையில கொண்டுவர்றேன்.எவ்வளவு தூரம் இதையெல்லாம் நாடகத்துல செய்ய முடியும்னு தெரியலை. சுயத்தை கேள்வி கேட்காத, வீட்டுல வளர்க்கிற வளர்ப்பு பிராணிமாதிரிதானே பெண்களை வெச்சிருக்கோம். பிராமணீயம் உண்டாக்கின சாதி வேறுபாடுகளை எதிர்க்கிற நாம, அது முன்நிறுத்துகிற பெண் அடிமைத்தனத்தை மட்டும் ஏத்துகிறது முரண்பாடா தெரியுது. இதையெல்லாம் பேசினா ஆண்களுக்கு எதிரானவங்க நினைக்கிறாங்க. கவுரவம், அந்தஸ்துங்கிற பேர்ல சம்பாதிக்கிற மெஷினா ஆண்கள். காலம் முழுக்க அவங்க உழைப்பை உறிஞ்சுகிற அட்டைப் பூச்சிகளா பெண்கள் இருக்காங்க. நினைச்சவுடனேயே வெட்கப்படாம அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு? பொதுஇடத்துல அப்படி வெட்கப்படாம தன் உணர்ச்சியைக் கொட்ற ஒருத்தனை நான் உண்மையான ஆண்மகன், வீரத் திருமகன்னு ஒத்துக்கிறேன். ஆணோ, பெண்ணோ, திருநங்கையோ அவங்கவங்க சுயத்தோட இருக்கணும். அடிப்படையான மனிததேவையும் அதுதான். இதையெல்லாம் சொல்றதால நீங்க பெண்ணியவாதியான்னு கேட்கலாம். பெண்ணியவாதின்னு சொன்னாதான் உங்களுக்குப் புரியும்னா, என்னை பெண்ணியவாதின்னு சொல்லிக்கிறதுல எந்த தயக்கமும் இல்லை.

mangai
ஒரு வழக்கமான குடும்பத்துலதான் நான் பிறந்தது. சின்ன வயசிலேயே படிக்கிறதுக்காக வீட்டை விட்டு வந்துட்டேன். அந்த வீட்டுக்குரிய பழக்க வழக்கங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அதுக்கு பிறகு நானா எனக்கான வாழ்க்கையை அமைச்சுக்கிட்டேன். யாரை திருமணம் செய்துக்கணும், தாலி கட்டிக்கணுமா வேண்டாமா, எப்போ குழந்தை பெத்துக்கணும், எப்படி வளர்க்கணுங்கிறதை நானே தேர்ந்தெடுக்கிட்டேன்.
கணவர் அரசுக்கும் எனக்குமான உறவு ரொம்ப இணக்கமானதுன்னு சொல்லிக்க விரும்பலை. எல்லா குடும்பங்கள்ல இருக்கிறதுபோல நெருடல்களும் கருத்து மோதல்களும் எங்களுக்குள்லேயும் வந்ததுண்டு. நிச்சயம், இந்த இடத்துல என்னுடைய மாமியருங்கிற உறவைப் பத்தி சொல்லியாகணும். அவங்க கிராமத்துல பிறந்து, வாழ்ந்தவங்க.நான் செய்ற சில உணர்வுப்பூர்வமான செயல்களுக்கு அவங்கதான் எனக்கு பக்கபலமா இருந்திருக்காங்க. என்னோட நாடகத்துக்கு அவங்கதான் முதல் பார்வையாளரா இருந்தாங்க. நான் ஏதோ பொறுப்பான செயல்ல இருக்கேன்னு அவங்க நம்பினாங்க. அவங்களோட இருப்பு எனக்கு மிகப்பெரிய பலமா இருந்துச்சு.
அரசியல் பின்னணியோ, கலை பின்னணியோ எனக்குக் கிடையாது. 70களின் மத்தியில் எமர்ஜென்ஸி, வங்கப்போர்னு அரசியல் கொந்தளிப்பு இருந்த சமயம். கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் ரொம்ப சீரியசான பகிர்தல் இருந்தது. அந்தப் பகிர்தல் பல மாணவர்களை அரசியலுக்குக் கொண்டு வந்தது. திராவிட கட்சிகளிலும் இடதுசாரி கட்சிகளிலும் இணைந்து பணியாற்றினாங்க. அப்படித்தான் எனக்கும் ஆர்வம் வந்தது. அரசியல் தெளிவோடதான் நாங்க செயல்பட்டோம்னு சொல்ல முடியாது. பின்னால அமைப்புரீதியா செயல்பட ஆரம்பிச்சப்போ நிறைய தெளிவு கிடைச்சது. அப்புறம் நாடகங்கள் மீது ஈடுபாடு. ஆரம்பத்துல நடிக்கவும் செஞ்சேன். பிறகு நெறியாள்கை செய்றது மனசுக்குப் பிடிச்ச வேலையா இருந்தது.
சென்னையை ஒப்பிடும்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்கள்ல நாடகங்களுக்கு இருக்கிற மரியாதை அதிகம். நாடகத்தைச் சினிமாவும் டி.வி.யும் அழிச்சிருச்சின்னு சொல்லவே முடியாது. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இருக்கிற அளவுக்கு டி.வி.யும் சினிமாவும் இங்கே வளர்ந்துடலை. ஆனா, அங்க நாடகத்துக்குப் போறதை இன்னமும் முக்கியமான பழக்கமா வெச்சிக்கிட்டு இருக்காங்க. சரியான நாடக அரங்கங்கள், நாடக ஒத்திகைக்கான இடம், நடிகர்களுக்குக் குறைந்தபட்சம் போக்குவரத்து செலவைக்கூட கொடுக்க முடியாத சூழல்னு நிறைய வருத்தங்கள் தமிழ் நாடகத்துறையில இருக்கு. ஒண்ணும் தராத வேலைதான், ஆனாலும் தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கோம்.’’

27-9-2007 அன்று வெளியானது. நான் என்ற பெயரில் குங்குமம் இதழில் வெளியான இந்தத் தொடர் பின்னர் புத்தகமாகவும் வெளிவந்தது. காவ்யா பதிப்பகம் இதை வெளியிட்டது.

DSCN0267

இந்த மல்லியின் பெயர் என்ன?

DSCN0928

சிறு செடியாக

ஆறு மாதங்களுக்கு முன் இந்த காக்கடாம் பூ செடியை வாங்கினேன். தற்போது புதர்போல வளர்ந்துவிட்டது. சிறுசெடியாக வாங்கியபோதே இரண்டு பூக்கள் பூத்திருந்தன. தற்போது புதர்ச்செடியாக வளர்ந்து நிற்கிறது. கடந்த வார மழைக்குப் பிறகு, நேற்று இது பூ பூத்தது. மொட்டு இளங்சிவப்பு நிறத்திலும் பூ வெண்மையாகவும் இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிறைய இடங்களில் இந்த மலர் சாகுபடி நடக்கிறது. எனக்கு இது பழக்கப்பட்ட பூ, எனக்குத் தெரிந்தவரை இதை காக்கடாம் பூ என்பார்கள். மல்லிகை குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனம் இது. பூக்கும்போது மட்டும் வாசனையாக இருக்கும். அடுத்த நாள் காலை வரையில் வாடாமல் (இது வாடாமல்லி அல்ல, வாடாமல்லி மல்லிகை குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் அல்ல) இருக்கும்.

DSCN0209

வெண்மையான பூ

 

DSCN0211

செடியின் கிளைகள்

 

மேலதிக தகவல்களுக்கு இணையத்தில் தேடினேன். இதன் உயிரியல், தமிழ்ப்பெயர்களை சரியாக அடையாளம் காண முடியவில்லை.

Jasminum multiflorum என்ற அறிவியல் பெயர்தான் இதைக் குறிக்குமா என விவரம் தெரிந்தவர் சொல்லவும். தமிழில் வேறுபெயர்கள் இருக்கிறதா?