சென்ற மாதம் என் பூர்விக கிராமமான தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆதனூருக்குச் சென்றிருந்தேன். தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்துகொண்டிருந்தது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் மேட்டூர் அணை நிரம்பி, அதிகப்படியான நீரை திறந்துவிட்டிருப்பதாகவும் அறிந்தேன். காவிரி அழகு முகமான ஓகேனக்கல்லில் புதுநீர் பாய்ந்தோடியதை தொலைக்காட்சியில் பார்த்தேன். மழை உற்சாக மனநிலையைக் கொடுத்தது. அதே மனநிலையுடன் எங்கள் ஊரும் மழையால் செழித்திருக்கும் என்று கனவுகளோடு சென்றேன். வானம் பார்த்த பூமியான எங்களூர் வறண்டு கிடந்தது. சிறு மழையை நம்பி விதைக்கப்பட்டிருந்த கேழ்வரகு, கம்பு, சோளம்,அவரை, துவரை, எள், காராமணி செடிகள் முளைத்து வளர போதிய தண்ணீர் இல்லாமல் வாடிக்கிடந்தன.
தமிழக அளவிலான சிறுதானிய உற்பத்தியில் 40% தருமபுரி மாவட்டத்தில்தான் உற்பத்தியாகிறது. கிணறுகளிலும் நீர் இல்லை. தென்னைமரங்கள் காய்ந்துபோய், பட்டுப்போகும் நிலையில் இருந்தன. காலம்காலமாக இங்கே குடிநீர் பிரச்னை, காலை 6 மணிக்கு பொதுக்குழாயில் வரும் தண்ணீருக்காக, நாலரை, ஐந்து மணிக்கெல்லாம் காலி குடங்களுடன் காத்திருக்கிறார்கள். இந்த பொதுக்குழாய்கூட ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்துதான். அதற்கு முன்பு கையடி பம்புகளில்தான் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நீர் குடிப்பதற்கு ரொம்பவும் உவர்ப்பாக(ஃப்ளோரைடு அதிகம்) இருக்கும்.
நூறாண்டுகாலமாக இந்த மாவட்ட மக்களின் குறைந்தபட்ச குடிநீர் தேவையைக்கூட இதுவரை ஆண்ட அரசாங்கங்களால் நிறைவேற்ற முடியவில்லை. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 145 கி.மீ.தொலைவுக்கு 6755 குடும்பங்களின் தண்ணீர் தேவையை தீர்க்கும் வகையில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் இன்னும் முழுமையாக முடிந்தபாடில்லை. திட்டத்தை இன்றைய முதல்வர் ஜெயலலிதா இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கிவைத்தார். தண்ணீரே வராத குழாய்களை எதற்காக அவர் இவ்வளவு அவசரத்துடன் திறந்துவைத்தார் என்று தெரியவில்லை. வறட்சிக்குப் பெயர் போன தருமபுரி மாவட்டத்தில்தான் காவிரி பொங்கிவழிகிறது!
தமிழகத்தின் தெலுங்கானா?
படங்களைப் பார்க்கும் போதே எங்களுக்கு மனம் வாடுகிறது. உங்கள் சொந்த ஊரின் நிலை உங்களுக்கு நிச்சயம் மன வருத்தத்தைக் கொடுக்கும். மனிதர்கள் செய்யாததை இறைவன் செய்யட்டும். விரைவில் மழை வரட்டும். வாடிய பயிர்கள் செழித்து வளரட்டும்!
பொங்கிவழியும் காவிரி கொண்ட
தருமபுரி மாவட்டத்தில்
வறட்சி குடியிருப்பதா?
தங்கள் பதிவில்
தருமபுரி மக்களின் வாழ்க்கை
வெளிப்படுகிறதே!
சிறந்த பகிர்வு!