பெண்கள் இதழில் பணியாற்றிய அனுபவத்தை இந்தப் பதிவில் எழுதியிருந்தேன். அந்த பதிவிற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக பதிவுலகில் இயங்கும் பெண்கள். நான் எதிர்பாராதது இது. நான் யூகித்த விஷயத்தை சரி என்று சொல்வதுபோல் இருந்தது இந்த பெண்களுடைய கருத்துக்கள். அந்தப் பதிவின் தொடர்ச்சியாக பெண்களுக்கான ஒரு இதழ் எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்ததில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நான் பணியாற்றிய பெண்கள் இதழில் என்னை சலிப்பு தட்ட வைத்த விஷயங்களே இதை எழுதத் தூண்டின.
2011ன் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் கிட்டத்தட்ட 2 கோடியே 38 லட்சம் படித்த பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் இதழ்கள் இதுவரை சென்றடைந்தது இரண்டரை லட்சம் பெண் வாசகர்களை மட்டும்தான். மேலே சொன்ன புள்ளிவிவரத்துடன் ஒப்பிடும்போது இது மிகமிகக் குறைவான எண்ணிக்கை. இதன் பின்னணியில் ஏராளமான காரணங்கள் இருக்கலாம், அதில் ஒன்று பெண்கள் இதழ்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளே அடைபட்டிருப்பது.
’நாங்கள் அரசியல் பேசுவோம்’
சென்ற நூற்றாண்டில் ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்று சொல்லி பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டிவைத்ததைப் போன்றதே, இன்றைய பெண்களுக்கு அரசியல் தேவையில்லை என்று சொல்வதும். வாக்காளர்களில் சரிக்குப் பாதியாய் (2.5 கோடி பெண் வாக்காளர்கள்) இருக்கும் பெண்களுக்கு அரசியல் வேண்டாம் என்று பெண்கள் இதழ்கள் நிராகரிப்பது பெண்களின் வளர்ச்சியை முடக்கிப்போடக்கூடியது. அரசால் இயற்றப்படும் சட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்குமானவை. ஆண்களால் முன்மொழியப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தும் சட்டதிட்டங்களை அறியும் உரிமைக்கூடவா பெண்களுக்குக் கிடையாது? மக்களாட்சியின் நான்காவது தூணாக சொல்லப்படும் பத்திரிகைகள், முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு செய்யும் துரோகமாகவே இதுபடுகிறது. அரசியலின் தூய்மை காக்கப்பட வேண்டுமானால் பெண்களின் அரசியல் பங்களிப்பு அதிகப்பட வேண்டும். அதற்கொரு தூண்டுகோளாக, அரசியல் குறித்த நேர்மறையான பார்வையை பெண்களுக்கு இந்த இதழ்கள் தரவேண்டும்.
பணிபுரியும் பெண்கள்
படித்த, படிக்காத என அனைத்து தரப்பு பெண்களும் இன்று பணிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பணிபுரிவதன் மூலம் கட்டுப்பெட்டியான வாழ்க்கைச் சூழலிலிருந்து பெண்கள் விடுதலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். குடும்ப அமைப்பிலும், குடும்பத்தை அடுத்துள்ள சமூகத்திலும் பணிபுரியும் பெண்களுக்கு பல சவால்கள் முன்நிற்கின்றன. குடும்ப பொறுப்புகளை நிர்வகிப்பது, அலுவலகச் சூழலில் தன் திறமையை நிரூபிப்பது என இருவகையான நெருக்குதல்களை இன்றைய பெண்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இதுவரை ஆண்கள்தான் அதிகார மையமாக இருந்தார்கள், இப்போது அதிகாரம் பெண்களின் கைகளுக்கும் கிடைத்திருக்கிறது. பணிபுரியும் இடத்தில் தனக்கு மேலதிகாரியாக ஒரு பெண் வரும்போது கலாசார ரீதியாக ஆணாதிக்கம் கொண்ட ஒரு சமூகத்தில் அது சலசலப்புகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கிவிடுகிறது. குடும்பத்திலும் அது எதிரொலிக்கிறது. மேலதிகாரியாக இருக்கும் பெண்ணுக்கு மட்டுமல்ல, அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும் இதேநிலைதான். இது குறித்த சொல்லாடல்களை, தீர்வுகளை, புரிதல்களை, ஆலோசனைகளை சொல்வது பெண்கள் இதழ்களிம் கடமை. பணிபுரியும் பெண்களை பெரும்பாலான வாசகர்களாகக் கொண்டிருக்கும் பெண்கள் பத்திரிகைகள் ஏன் இவர்களை கண்டுகொள்வதில்லை? ஒரு கணிப் பொறியாளரும் ஒரு பள்ளி ஆசிரியரும் சமையல் குறிப்பை மட்டுமா எதிர்பார்ப்பார்கள்? அவர்களிடம் பகிர்ந்து கொள்ள, கேள்வி கேட்க நிறைய விஷயங்கள் உண்டு.
இலக்கியம்
தமிழ் இதழ்கள், நவீன இலக்கியங்களை ஏன் புறந்தள்ளுகின்றன என்கிற கேள்வி ஆய்வுக்குரியது. ஒரு மொழியை அடுத்தக்கட்ட வளர்ச்சி நோக்கி இட்டுச் செல்பவை இலக்கியங்கள். இலக்கியத்தை புறக்கணித்தது இன்றைக்கு தாய்மொழியின் சொற்பிரயோகத்தை குறைத்து, வேற்றுமொழி கலப்பை அதிகமாக்கிவிட்டது. மொழிக்காகவும் செழுமையான இலக்கியங்கியங்களை வாசகர்களுக்கு தரவும் நவீன இலக்கியங்களுக்கு இடமளிக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் சிறு பத்திரிகை அளவிலே முடங்கிப் போய்விட்ட இலக்கியப் பெண்களை பொதுவாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
சொல்வளம் மிக்க நம் இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள், வெறுமனே பேப்பர் கட்டுகளாக பல்கலைக்கழகங்களின் வெளிச்சம் நுழையா அறைகளில் அடைந்துகிடக்கின்றன. ரசிப்பிற்கும் விவாதத்திற்கும் உரிய ஆய்வுகளை வெளியிடுவது இன்றைய தலைமுறை பெண்களுக்கு தொன்மையான நம் இலக்கியங்கள் குறித்து மதிப்பான பார்வையை ஏற்படுத்தும். அதோடு, இலக்கியங்கள் ஊடாக சொல்லப்படும் கருத்துக்களை விவாதத்திற்கு உட்படுத்தவும் செய்யலாம். அதுபோல பெண்கள் இதழ்கள் எவற்றிலும் புத்தக விமர்சனங்கள் இருப்பதில்லை, புத்தக அறிமுகங்கள்கூட வருவதில்லை. பெண்கள் புத்தகங்களையே விரும்புவதில்லையா? இது உண்மையென்றால் பெரும்பாலான பதிப்பகங்களுக்கு மூடுவிழா நடத்தவேண்டியிருக்கும். அப்படியானால் ஏன் பெண்கள் இதழ்கள் புத்தகவிமர்சனங்களை வெளியிடுவதில்லை? அறியாமை என மீண்டும் ஒருமுறை சொல்லவேண்டியிருக்கிறது.
சுற்றுச்சூழல்
நாளைய தலைமுறையை உருவாக்கும் பொறுப்பில் உள்ள பெண்களுக்கு சூழலியல் அறிவு தேவை. அதை நுட்பமான திட்டமிடலுடன் நாம் செய்ய வேண்டும். காக்கை குருவிகளுடன் நாம் இந்த புவியை பகிர்ந்துகொண்டு வாழ்கிறோம் என்கிற உண்மையை பெண்களுக்கு உணர்த்த வேண்டும். தற்சார்பு பொருளாதாரத்தின் ஒரு படியாக தங்கள் தேவைகளுக்கு தாங்களே உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்ளும் வாழ்க்கைமுறைக்கு அவர்களை தூண்ட வேண்டும்.
உணவு
உணவின்றி அமையாது உலகு. பெண்கள் சமையல் கட்டிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று சொல்வதன் பொருள், பெண்கள் இனி சமைக்கவே கூடாது என்பதல்ல. உணவு எப்படி ஆண்,பெண் இருவருக்கும் பொதுவானதோ, அதுபோலவே சமைப்பதும் பொதுவானதாக ஆக்கப்பட வேண்டும். இன்னும் சில பத்தாண்டுகளில் இது நம் இல்லங்களில் சாத்தியப்படும். மாற்றத்தின் துவக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில் சமையலை,பெண்களுக்கும் பெண்களைச் சார்ந்திருக்கும் ஆண்களுக்குமாய் சொல்லித் தருவோம்.
ஓர் ஆணித்தரமான உண்மை, இன்றைய பெண்கள் இதழ்களின் விற்பனை சமையல் குறிப்புகளை மட்டுமே நம்பியிருக்கிறது. சமையல் குறிப்புகளைத் தாங்கிவரும் 32 பக்க இணைப்புகள் தருவதை நிறுத்தினால் பெண்கள் இதழ்களின் விற்பனை அதளபாதாளத்துக்குச் சென்றுவிடும். இதழின் விற்பனையே சமையல் குறிப்புகளால்தான் நடக்கிறது எனும்போது அதையாவது இந்த இதழ்கள் துல்லியத்தன்மையோடு, புதுமையான முறையில் தரலாம். இதழ்களில் வெளியாகும் சமையல் குறிப்புகள் அனைத்தும் ஏற்கனவே வெளியான அதே இதழிலிருந்து எடுக்கப்பட்டதாகவோ, அல்லது வேறு இதழ்களிலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கின்றன. இது இதழாசியர்களுக்கும் வெளிப்படையாகத் தெரிந்தே நடக்கிறது. அளவீடுகள் துல்லியமாக இல்லாத, சமைப்பதற்கு கால கணக்கீடு சொல்லப்படாத இந்தச் செய்முறை குறிப்புகளை வைத்துக்கொண்டு, யூகமான சமையலைத்தான் செய்ய முடியும்.
அடுத்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட உணவுப் பழக்கம் உண்டு. அந்தப் பகுதியில் கிடைக்கும் விளைப்பொருட்கள், தட்பவெப்பம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது இந்த உணவுப் பழக்கம். அவற்றைப் பற்றிய ஆய்வோ, அறிவோ இல்லாமல் எல்லோருக்கும் ஒரு பொதுவான உணவுப் பழக்கத்தை பரிந்துரைக்கின்றன இந்த இதழ்கள். இதனால் பாரம்பாரியமான உணவுக் குறிப்புகள் அழிவதோடு, நம் மண்ணின் தானியங்களும் அழிவைச் சந்திக்கின்றன. நம்முடைய உடலும் உணவு சார்ந்த பலவகை நோய்களுக்கு ஆளாகிறது.
நிதி மேலாண்மை
பெண்கள் சிக்கனமானவர்கள், வீட்டு பட்ஜெட் போடுவதில் சிறந்தவர்கள் என்கிற பொதுக்கருத்துகள் இங்கே உண்டு. வீட்டின் தலைவனான ஆண், அன்றாட செலவுகளுக்கு தரும் பணத்தை சிக்கனமான, திட்டமிட்டு பயன்படுத்தக்கூடியவர்கள் என்பதாக இந்த பொதுக்கருத்துகள் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி இவர்களை பொருளாதார அறிவு மிக்கவர்களாக கொள்ள முடியாது. ஒரு வீட்டின் வசதிகளைப் பெருக்கும் செலவுகள், எதிர்கால பொருளாதார தேவைகள் என பெரிய அளவிலான, முக்கியமான நிதி திட்டமிடல் ஆண்களாலேயே செய்யப்படுகின்றன. இன்றைய பெண்கள் பணமீட்டுபவர்களாக இருக்கிறார்கள். தேவைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து இன்றைய பெண்களுக்கு விசாலமான பார்வை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நிதி மேலாண்மையில் நிறைய கற்றல் தேவைப்படுகிறது.
நடைமுறைச் செய்திகளையொட்டிய கட்டுரைகள்
பத்திரிகைகள் காலத்தின் கண்ணாடி என்று சொல்வதுண்டு. ஆனால் பெண்களுக்கான இதழ்கள் சமூக பொருளாதார மாற்றங்கள் குறித்த எந்த பதிவுகளையும் செய்வதில்லை. உதாரணத்துக்கு, இப்போது மீண்டும் பெண்சிசுக்கொலை அதிகரித்துவருகிறது. இந்த செய்தி பெண்கள் இதழ்களின் கரிசனத்துக்கும் பார்வைக்கும் படாமலேயே இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதாக புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. இன்றைய தலைமுறைக்காக இயங்கும் ஒரு இதழ் பெண்களின் வாழ்வியலை கேள்விக்குட்படுத்தும் விஷயங்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டும்.
நுகர்வு வழிகாட்டி
அளவுக்கதிகமாக நுகர்வது இன்றைக்கு மேட்டிமைக்குரிய வாழ்வியலாகிவிட்டது. பெண்களை கண்மூடித்தனமாக நுகரத் தூண்டுவதில் பெண்கள் இதழ்களின் பங்கு அதிகம். நுகர்வு தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டபோது, நுகர்வின் அளவைச் சொல்வது சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஓர் ஊடகத்தின் பணி. உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை, உறங்கும் உறைவிடம், அதை அலங்கரிக்கும் பொருட்கள் என எது நல்ல நுகர்வு என்பதை சொல்ல வேண்டும்.
கலை
ஓவியம், சிற்பம், சினிமா, நாடகம், நடனம், இசை, நாட்டுப்புற கலை என கலைத்தொழில் செய்யும் பெண்கள் விருதுபெறும்போது மட்டுமே இங்கே கவனிக்கப்படுகிறார்கள். இதில் சினிமா கலைஞர்களைத் தவிர மற்ற கலைஞர்கள் பற்றி செய்திகள் நான்கு வரிகளோடு முடிந்துவிடுகின்றன. விருதுபெற்றவர்கள்தான் திறமைசாலிகள் என்கிற கருத்து வலுக்கட்டாயமாக இந்த இதழ்களால் திணிக்கப்படுகிறது. அதோடு விருது பெறாத திறமையான பல கலைஞர்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் போகிறது.
மருத்துவம்
பெண்கள் இதழ்களில் வரும் பெரும்பாலான மருத்துவ கட்டுரைகள் பீதியை உண்டாக்குபவையாக இருக்கின்றன. சில சமயம் மூடநம்பிக்கையை வளர்ப்பவையாகவும் உள்ளன. நவீன மருத்துவத்தை ஆதாரமே இல்லாமல் எதிர்ப்பதும் பாரம்பரிய மருத்துவத்துவ முறைகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் தற்போது பெண்கள் இதழ்களின் டிரெண்டாக இருக்கிறது. எந்தவித ஆய்வுத்தன்மையும் இவ்வகையான கட்டுரைகளில் இருப்பதில்லை. மாறிவரும் வாழ்க்கைமுறையில் நம் உடலின் தன்மையும் மாறுபடுகிறது, நோய்களும் புதிது புதிதாக உருவாகின்றன. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு மருத்துவமுறையால், நவீன காலத்து நோய் குணமாகிறதென்றால் அதற்கான ஆதாரம், ஆய்வுமுறை உள்ளிட்டவைகளோடு கூடிய மருத்துவ ஆவணமாகத்தான் கட்டுரை எழுதப்பட வேண்டும். நவீன மருத்துவம் குறித்த கட்டுரைகளில், மருந்துகள் நோயைக் கட்டுப்படுத்தக்கூடியவையா அல்லது நோயை முழுமையாக குணமாக்கக்கூடியவையா என்கிற விவரங்கள் இடம்பெற வேண்டும்.
அறிவியல், தொழிற்நுட்பம்
அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் வளரும் ஒரு இந்தியப் பெண்ணால் புதுமையாக சிந்திக்கவும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் முடிகிறது. இங்கே இருக்கும் பெண்களால் சிந்தனை அளவில்கூட செயல்பட முடிவதில்லை. பெரும்பாலும் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளாவே இருக்கிறார்கள். இந்நிலைக்கு அறிவியல் பார்வை இல்லாத சமூக அமைப்பு முதன்மையான காரணம். நம்முடைய ஊடகங்களும் இதில் அடக்கம். அறிவியலில் புரிதல், ஆர்வம் ஏற்படாதவரை புதிய புதிய கண்டுபிடிப்புகளை நகலெடுப்பவர்களாகவே நாம் இருப்போம்.
வரலாறு
உலகெங்கிலும் இதுவரை எழுதப்பட்ட 90 சதவிகித வரலாறு ஆண்களால், ஆண்களைப் பற்றி எழுதப்பட்டவை. ஒடுக்கப்பட்ட பெண் சமூகத்தின் வரலாறும் மறக்கடிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் 10 சதவிகித வரலாற்றில் பெரும்பாலும் அரசிகள் பற்றி மிகைச் சித்திரங்களாகவே உள்ளன. வரலாற்றின் மூலைமுடுக்குகளில் தேடினால் சாதாரண பெண்ணின் வரலாறும் அகப்படலாம். இதன் மூலம் புதிய வரலாறு எழுதப்படலாம். வரலாற்றுப் பெண்களின் வாழ்க்கையிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள இன்றைய பெண்களுக்கு ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தித்தரலாம்.
குழந்தை வளர்ப்பு
மனிதக் குழந்தைகள் தாயின் அரவணைப்பில் வளரும்போது சிறந்த செயல்திறனோடு வளர்கிறார்கள் (அதனால் ஆண்களுக்கு குழந்தை வளர்ப்பில் பங்கில்லை என்பது இதன் பொருள் அல்ல.) என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. பெண்கள் இதழ்கள் சொல்லும் மேலோட்டமான குழந்தை வளர்ப்பு முறைகளால் நல்ல அம்மாக்களையோ, அவர்கள் மூலமாக நல்ல குழந்தைகளையோ உருவாக்க முடியாது. இன்றைய நடைமுறைக்கு ஏற்றபடி, நிபுணர்களைக் கொண்டு சிறந்த செயல்திட்டத்தை உருவாக்கி அதை நம் இதழின் வாயிலாக சொல்லித் தரவேண்டும். பள்ளி வகுப்புகள் முடிந்து வீட்டிற்குத் திரும்பும் பிள்ளைகளுக்கு மீண்டும் பள்ளிப் பாடங்களைத்தான் பெரும்பாலான பெற்றோர் சொல்லித்தருகிறார்கள். கதைகள், பாடல்கள் மூலமாக அறத்தை போதிக்கும் குழந்தை வளர்ப்பு முறை இன்று காணாமல் போய்விட்டது. பெற்றோரைவிட மேம்பட்டவர்களாக உள்ள இன்றைய குழந்தைகளின் திறமைகள் மதிப்பெண்களுக்குள் குறுக்கப்படுகின்றன. மேம்பட்ட குழந்தைகளை வளர்க்க மேம்பட்ட முறை தேவைப்படுகிறது.
90களில் கூட்டுக்குடும்பமாக வசிப்பது பிரச்னைக்குரியதாக இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் தனிக்குடும்பங்கள் விருப்பத்திற்குரிய தேர்வாக இருந்தன. அன்று பெரும்பாலான பெண்கள் பணிக்குச் செல்லவில்லை. அதனால் குழந்தைகளை வளர்ப்பதில் பெரிதாக பிரச்னைகள் எதுவும் இல்லை. இன்று ஒரு குடும்பத்தில் உள்ள ஆணும் பெண்ணும் பணிக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளை வளர்ப்பது சிக்கலான விஷயமாகிவிட்டது. இந்த சிக்கலை தீர்த்து வைக்கக்கூடிய ஆலோசனைகளை இதழ் முன்வைக்க வேண்டும்.
உறவு மேம்பாடு
ஒரு குடும்பத்தின் ஆதாரமாக இருக்கும் பெண்ணைச் சுற்றிய எல்லா உறவுகளும் இங்கே சொல்லப்படுகின்றன. இன்றைய சூழல் முந்தைய நூற்றாண்டில் இருந்த மாமியார், நாத்தனார் பிரச்னைகளை ஓரங்கட்டிவிட்டது. இன்றைய பெண்களுக்கு ஏற்படும் உறவு சிக்கல் தன் துணையுடனானது. தவறாக புரிந்துகொள்ளப்பட்ட சுதந்திரத்தன்மை அல்லது இன்னமும் கலாசாரத்தால் பிணைக்கப்பட்ட அடிமைத்தன்மை இந்த இரண்டும் இன்றைய பெண்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றன. இதுவரை பெண்கள் இதழ்கள் முன்வைத்த ஆண், பெண் உறவு மேம்பாடு படுக்கையறை தொடர்புடையதாகவே இருந்திருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பெண்களின் வாழ்வியலுக்கு இது மிகவும் பொருந்திப்போகும். இன்றைய பெண்கள் அறிவில் மேம்பட்டவர்கள். தன் துணையிடம் தனக்கு என்ன தேவையிருக்கிறது என்று அவர்களுக்கு வெளிப்படையாகவே கேட்கத் தெரியும். இன்றைய பெண்களின் பிரச்னை அவர்களுடைய உளவியல் சார்ந்ததாகவே இருக்கிறது. அதை சுட்டிக்காட்டி, அதன் மூலம் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் உறவை மேம்படுத்த வேண்டும்.
பராமரிப்பு குறிப்புகள்
பெண்கள் இதழ்களின் மொழியில் பராமரிப்பு என்பது அலங்கரிப்பது, தூய்மையாக்குவது என்பதாக இருக்கிறது. மற்றபடி வீட்டின் மேம்பட்ட வேலைகளான கணிப்பொறி,குளிர்சாதனங்கள் உள்ளிட்ட இயந்திரங்களை பராமரிப்பது ஆண்களுடையதாகிறது. அதாவது இவற்றைப் பராமரிப்பது பெண்களின் அறிவுக்கு எட்டாத செயலாகவும் மேம்பட்ட விஷயங்களுக்காக ஆண்களையே நம்பியிருக்க வேண்டும் என்று சொல்வதுபோலவும் இருக்கிறது. இதை உடைத்து வீடு முதல் அலுவலகம் வரை பராமரிப்பு தொடர்பான அத்தனை தகவல்களையும் சொல்லித்தர வேண்டும்.
சட்டம்
பெண்கள் இதழ்களால் கையாளப்படும் சட்டப் பக்கங்கள் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்ற ஊடகங்களால் பிரபலமாக்கப்பட்ட சில சட்டங்களைப் பற்றியே திரும்ப திரும்ப நிரப்பப்படுகின்றன. வீட்டைத்தாண்டிய வெளியில் தேவைப்படும் சட்டபாதுகாப்பு குறித்து இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. சமஉரிமையை நிலைநாட்டவும் அதிகபட்ச பாதுகாப்பை வழங்கவுமான சட்டங்கள் பற்றி பெண்கள் அறிய வேண்டும்.
ஆன்மிகம்
பொதுவாக எல்லா மதங்களுமே அறத்துடன் வாழுங்கள் என்பதைத்தான் சொல்கின்றன. நேரடியாக இதைச் சொல்லாமல் பூஜைகள், நோன்புகள் வழியாக இதை வலியுறுத்தின. ஆனால் இன்றைய பெண்களுக்கு தேவைப்படுவது இன்ஸ்டன்ட் ஆன்மிகம். சுற்றிவளைத்து இது செய்தால் இது விளையும் என்று சொல்வதைவிட நேரடியான முறையிலே அறத்தைச் சொல்லிக்கொடுப்போம். அறத்தோடு செயல்படுபவர்களால் ஆன்மவொளியைப் பெற முடியும். அதைத்தான் நம் இதழின் ஆன்மிகமாகச் சொல்ல வேண்டும். மதம்சார்பற்ற ஆன்மிகமாக இது இருக்கும். இன்றைய தலைமுறை விரும்புவதும் அதுதான்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...