ஆம் ஆத்மி, தினமணி, தி இந்து…

கருத்துக் கணிப்புகள் சொன்னதை விட ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றிருக்கிறது. 70க்கு 70 பெற்றாலும் பெறலாம். ஒரு சாதாரண மனிதனின் வெற்றியாக டெல்லி மக்கள் கொண்டாடுகிறார்கள். ஊடகங்கள் கொண்டாடிய மோடிக்கும் அவருடைய  8 மாத ஆட்சிக்கும்  மிகப் பெரிய  பரிசை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் . மாய்ந்து மாய்ந்து மோடி-அமித் ஷா மாயாஜாலம் டெல்லியிலும் பலிக்கும் என்று எழுதிய ஊடகங்களை பின்நோக்கிப் பார்க்கிறேன்.

தி இந்துவின் ஆசிரியராக மாலினி பார்த்தசாரதி பொறுப்பேற்றுக் கொண்ட அடுத்த நாளின்  கார்ட்டூன் பகுதியில் அரவிந்த கெஜ்ரிவால் எதிர் கட்சி வரிசையில் அமரப் போவதாக சித்திரம் வெளியானது. மோடி பிரதமராக ஆட்சிக்கு வந்தவுடன் மாலினி பார்த்தசாரதி அவரைச் சந்தித்து கைகுலுக்கினார். தன் ட்விட்டர் பக்கத்தில் மோடி என்னமா இங்கிலீஷ் பேசறார் என டிவி சீரியல் பார்த்து வியக்கும் ஒரு குடும்பத் தலைவியின் வியப்பைக் காட்டியிருந்தார். மோடியிடம் வியப்பதற்கு அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்! போகட்டும்… சாதாரண விஷயத்துக்கே வியப்பை வெளிப்படுத்தும் இப்படிப்பட்ட மோடி அபிமானி ஒரு பத்திரிகையின் ஆசிரியரானால் எப்படிப்பட்ட நடுநிலை செய்திகள் வெளியாகும் என்பது என் போன்ற வாசகரின் கேள்வி. (தி இந்துவின் வரலாற்றில் ஒரு பெண் ஆசிரியராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. அதற்காக அவருக்கு வாழ்த்து சொல்லலாம்தான். ஆனால் தாத்தாவின் நிறுவனத்தில் பேத்தி ஆசிரியராக பொறுப்பேற்பதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என்றும் தோன்றுகிறது!) டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்று இந்த ஊடகவியலாளர்கள் தெரிந்து வைத்திருந்தாலும் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பிரசாரம் செய்தன. தினமணியில் ஒரு செய்தி, அதில் பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி என்பதற்கு பதிலாக பாஜக முதல்வர் கிரண்பேடி என்று எழுதி தன் எஜமானர்களுக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டது தினமணி.

காலையில் ஆம் ஆத்மி முன்னிலை என்று செய்தி எழுதினாலும் பாஜக பின்னடைவு என்றோ, கிரண்பேடி ஆரம்பம் முதலே பின்னடைவில் இருக்கிறார் என்றோ  வராமல் தணிக்கையுடன் செய்தி வெளியிடுகிறது தினமணி.

இவர்கள் மட்டுமல்ல பெரும்பாலான ஊடகங்கள் இப்படியான ஒரு தலைபட்சமான, தணிக்கை செய்யப்பட்ட செய்திகளைத்தான் வெளியிட்டு வருகின்றன. ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு வாக்கியத்திற்கும் இடையே அவர்களின் சார்பை வெளிப்படுத்துகிறார்கள். குறிப்பாக  நடுநிலை ஊடகமாக போக்குக் காட்டிக் கொண்டிருக்கும் புதிய தலைமுறையை சுட்டிக் காட்டித்தான் ஆக வேண்டும். ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்கு உறுதிகளைக்கூட இவர்கள் வெளியிடவில்லை.

என்னுடைய பதிவின் நோக்கம் ஊடகங்களின் ஒரு சார்பை சுட்டிக்காடுவதே அன்றி, ஆம் ஆத்மி மேல் அபிமானம் காட்டுவதல்ல, நான் அபிமானியும் அல்ல.  இந்திய கட்சிகளில் ஆம் ஆத்மி எவ்வகையில் மேம்பட்டதாக இருக்கப்போகிறது என்பதை பார்வையாளராக இருந்து பார்க்கப் போகிறேன். இந்திய ஆட்சியாளர்களின் மேல் நம்பிக்கை இழந்த ஒரு சாமானிய பெண்ணுக்கு உண்டான எதிர்பார்ப்பில் நானும் மாற்றத்தை எதிர்நோக்குகிறேன். ஆனால் அந்த மாற்றம் ஆம் ஆத்மியால் நடக்கும் என்று தோன்றவில்லை!!

4 thoughts on “ஆம் ஆத்மி, தினமணி, தி இந்து…

  1. பிங்குபாக்: ஊழல் அரசுடன் ஊடகங்களின் கூட்டு; 2015திலும் ஏமாறுவோம் மக்களே! | மு.வி.நந்தினி

  2. “ஆனால் அந்த மாற்றம் ஆம் ஆத்மியால் நடக்கும் என்று தோன்றவில்லை!!”.

    என்ன என்னவோ நம்பி ஏமாந்து இருக்கிறோம். இவங்கள நம்பி ஒரு சந்தர்ப்பம் தருவதில் என்ன தவறு?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.