ஊழல் அரசுடன் ஊடகங்களின் கூட்டு; 2015திலும் ஏமாறுவோம் மக்களே!

ஜெயலலிதா அரசின் ஊழல் புகார்களை திரட்டி(இவர்களாக கண்டுபிடித்து அல்ல) அவ்வவ்போது அறிக்கையாக வெளியிட்டு ‘ஊழலுக்கு எதிரான’ இமேஜை கட்டியமைத்துக் கொண்டிருக்கிறது பாமக. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாள் பாமகவினர் தமிழக ஆளுநரை சந்தித்து ஊழல் பட்டியலை அளிப்பது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்க முடியாது. இடைத்தேர்தலில் நிற்காவிட்டாலும் ஆளுநரிடம் அளித்த பட்டியலை தங்கள் கூட்டணியில் உள்ள (இன்னமும் கூட்டணியில்தான் இருக்கிறார்களாம்) பாஜகவினருக்கு கொடுத்திருக்கலாம். அல்லது இடைத்தேர்தல் நேரத்தின்போதாவது அறிக்கையாக வெளியிட்டிருக்கலாம்.

மக்களவையில் அன்புமணி வெற்றி பாமகவுக்கு புது தெம்பைக் கொடுத்திருக்கிறது. அதற்குப் பிறகான பாமகவின் நகர்வுகள் ஒவ்வொன்றும் திட்டமிடப்படுகின்றன. ஆம் ஆத்மியின் டெல்லி வெற்றி மேலும் அவர்களுக்கு உற்சாகமூட்டியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டுகள் உள்ள நிலையில்,  சேலம் மாநாட்டில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கும் அறிவிப்புக்குக் காரணம் டெல்லியின் உற்சாகமே.  அறிவித்த கையோடு ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருக்கிறது பாமக.

ஜெயலலிதா அரசின் ஊழல் வெளிவந்தது பாமகவால் அல்ல, ஆனால் அதை தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்கிறது பாமக. ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகளாக பாமக வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு வாய்ப்பையும் மக்கள் பல முறை அளித்துவிட்டார்கள். இவர்களால் என்ன மாற்றத்தை மக்கள் அடைந்தார்கள் என்பதற்கும் வழமையாக மற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என்ன செய்தார்களோ அதைத்தான் செய்தார்கள் என்பதே பதில்.

‘ஊழலுக்கு எதிரானவர்கள்’, திராவிட கட்சிகளுக்கு மாற்று என்பதெல்லாம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மாயையான வார்த்தைகள்தான். பாமகவின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் மறந்துவிடமாட்டார்கள். முக்கியமாக ஒரு சாதிக் கட்சியாக உள்ள பாமகவுக்கு எப்படி தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை அரசியல் அதிகாரத்துக்கு திட்டமிடும் கட்சியின் தலைமை சிந்திப்பதாகத் தெரியவில்லை. தலித்துகள் மீது நேரடியான வன்மத்துடன் அறிக்கை வெளியிட்ட பாமக, இன்று வாக்குக்கு கையேந்தி ‘ஊழலுக்கு எதிரானவன்’ என்ற நல்லவனை முன்னிறுத்துகிறது. ஊழல் பெரியதா, உயிர் பெரியதா என்கிற நிலையில் காலம்காலமாக ஒடுக்கப்பட்ட சாமானியனுக்கு உயிரோடு இருப்பதே பெரியது!

மூன்றே ஆண்டுகளில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கிறது, நம்மால் முடியவில்லையே என்கிற ஆதங்கம் மக்களை சாதிய ரீதியாக துண்டாட நினைக்கும் ஒரு சாதிக் கட்சிக்கு வரக்கூடாது. இதை ஆதங்கம் என்று சொல்வதைவிட அரசியல் அதிகாரத்திற்கான ஆசை என்று கூறலாம். இந்த ஆசை காரணமாக பாமக தன் வலதுசாரி ஊடகங்களின் ஆதரவை இழந்துவருவதை இனி உணரக்கூடும். வலதுசாரி ஊடகங்களின் ஏகபோக முதன்மையாளரான ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த செய்தியும் வெளியிடப்படக்கூடாது என்று தங்களுக்குள் எழுதப்படாத விதியுடன் இவை செயல்படுகின்றன. சாலை சரியில்லை என்பது தொடர்பாக ஏதோ வழமையான மனுவை பாமக அளித்தது போன்றே தமிழக அரசுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணை மனு குறித்த செய்தியும் இரண்டு வரிகளில் வெளியாகியுள்ளது.  அதிலும் தினமணி தமிழக அரசின் ஊழல்கள் என்பதற்கு பதிலாக, ‘தமிழக அரசு மீதான  புகார்களை’ என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறது. தினத்தந்தி மட்டும் பாமகவின் முழு அறிக்கையில், எடிட் செய்யப்பட்ட பகுதியை வெளியிட்டிருக்கிறது. இணைய ஊடகங்களில்கூட முழு அறிக்கையும் வெளியாகவில்லை. ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த இந்திய கருப்பு முதலாளிகளின் பட்டியலை வெளியிட்ட எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்துதான் தமிழக அரசின் ஊழல் தொடர்பான செய்திகளைக்கூட வெளியிடக் கூடாது என்கிற கொள்கையை வைத்திருக்கும் தினமணியும் வெளிவருகிறது!

இத்தனை காலமும்(பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல்) பாமகவின் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள், முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்குப் பின், மிகுந்த கவனத்துடன் பாமகவை தவிர்க்கின்றன, அல்லது அறிக்கைகளை மட்டுப்படுத்துகின்றன. பாமகவும் ஊழலுக்கு எதிரானது அல்ல, வலதுசாரி தமிழ் ஊடகங்களும் ஊழலுக்கு எதிரானவை அல்ல. உண்மையில் தமிழக மக்கள் மாறி மாறி ஊழல் அரசுகளால் ஆளப்பட்ட இந்த ஊடகங்கள்தான் காரணம். இவர்கள் கட்டியெழுப்பும் பிம்பங்களே மாறிமாறி ஆண்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் முதலில் புறக்கணிக்க வேண்டியது இந்த ஊடகங்களைத்தான். வாக்குக்கு கையூட்டு வாங்குவதை நியாயப்படுத்துவதும், மக்களை ஊழலுக்கு பழக்குவதும் இந்த ஊடகங்கள்தாம்.  ஆகவே நாம் 2015திலும் ஏமாறுவோம் என்பதில் மாற்று இருக்க முடியாது!

(நண்பர் ஒருவர் தினமலரை ஏன் குறிப்பிடவில்லை என இந்தப் பதிவில் கேட்டிருந்தார்.  இரண்டாம் தரமான மொழி நடையில் எழுதப்படும் பிரபல தினசரிகளை நான் படிப்பதில்லை. முக்கியமாக பெண்கள் தொடர்பான செய்திகளை இவர்கள் எழுதும்விதம் அருவருக்கத்தக்கது. அதனால் மலர், தந்திகளை நான் படிப்பதில்லை. ஒரு வகையில் தினமணி எனக்கு தமிழைக் கற்றுக் கொடுத்த இதழ், என்றாலும் அதன் வலதுசாரி தனத்தை என்னால் இனம்காண முடியும். தினமணியுடன் தி இந்து தமிழை சில ஊடகவியலாளர்கள்கூட ஒப்பிட்டு சொல்கிறார்கள். நிச்சயம், தினமணியின் தமிழ் நடையுடன் தி இந்துவை ஒப்பிட முடியாது. தி இந்து, ஆ.வி. பாணி தமிழின் தினசரி வடிவம் என்பதே சரி)

 

7 thoughts on “ஊழல் அரசுடன் ஊடகங்களின் கூட்டு; 2015திலும் ஏமாறுவோம் மக்களே!

  1. ஊடகங்களின் உண்மையை தோலுரிக்கும் நல்ல நேர்மையான கட்டுரை. அதே சமயம் நீங்கள் பாமக-வை பற்றி நேர்மையான எழுதவில்லையோ என தோன்றுகிறது.

    ஊழலை மறைக்கும் அதே ஊடகங்கள் தான் பாமக-வை தலித் எதிரியாக சித்தரித்தது என்பது எனது கண்ணோட்டம். இன்றைய நிலை அல்லது தேவை என்பது அதிமுக ஆட்சிக்கு வந்தபின் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு எல்லா துறைகளிலும் ஊழல் மிக பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. இதை இரண்டு பேர் மட்டும் தான் தட்டி கேட்க முடியும். ஒன்று ஊடகங்கள், மற்றொன்று எதிர்கட்சிகள். இந்த நிலையில் பார்க்கும் போது இதுவரை எந்த ஊடகங்களும் (ஜூனியர் விகடன் சற்று விழித்துள்ளது, தினமலம் தேவைற்கேற்ப) பெரிய அளவில் மக்களிடம் ஊழல் பிரச்னையை கொண்டு செல்லவில்லை. எதிர்கட்சிகள் என்று பார்த்தால் இதுவரை துணிச்சலாக தொடர்ந்து குரல் கொடுப்பது பாமக மட்டுமே. அவர்களின் அரசியல் நிலைப்பாட்டில் எனக்கு ஒத்த கருத்து இல்லையென்றாலும், அவர்களின் ஊழலுக்கு எதிரான நிலைபாடு பாராட்டுக்குரியதே.

    “ஜெயலலிதா மீது பாமக பட்டியலிடும் பரபரப்புப் புகார்” என்ற தலைப்பில் சவுக்கு எழுதியுள்ள கட்டுரையை படித்தால் உண்மை உங்களுக்கு புரியும்.

  2. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாள் பாமகவினர் தமிழக ஆளுநரை சந்தித்து ஊழல் பட்டியலை அளிப்பது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்க முடியாது. //

    ஜூனியர் விகடன் இதற்கு இப்படி பதில் அளிக்கிறது..

    … இந்தப் புகார் பட்டியல் விவகாரத்தைவிட கவர்னரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவதற்கு நடந்த மூவ்தான் அதைவிட சுவாரஸ்யம். முதலில் அதைச் சொல்லிவிடுகிறேன்.”

    ”ஓஹோ”

    ”கடந்த ஜனவரி மாத இறுதியில், முறைகேடுகள் புகார் பட்டியலை நேரில் தருவதற்காக கவர்னர் ரோசய்யாவிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்டு பா.ம.க கடிதம் கொடுத்தது. ரோசய்யாவும் பிப்ரவரி 4-ம் தேதி பகல் 11 மணிக்கு நேரம் ஒதுக்கிக்கொடுத்தாராம்.. டாக்டர் ராமதாஸ், அன்புமணி முன்னிலையில் அவசரக் கூட்டம் போட்டு, புகார் ஃபைல் ரெடி செய்தார்களாம். மொத்தம் 18 குற்றச்சாட்டுகள் கொண்ட அந்தப் பட்டியல் 206 பக்கங்கள் போகிறது. திடீரென ராஜ்பவனில் இருந்து தொடர்புகொண்டு, அன்றைய தேதிக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டனர். குழம்பிப்போனார் டாக்டர் ராமதாஸ். பிறகு எப்போது நேரம் ஒதுக்கி இருக்கிறீர்கள் என்கிற கேள்விக்கும் தெளிவான பதில் இல்லையாம்!

    ”ஏன் கேன்சல் செய்யப்பட்டதாம்?’

    ”கொடுத்த முதல் அப்பாயின்ட்மென்ட்டை கவர்னர் கேன்சல் செய்ததற்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். ‘இப்படி ஒரு பட்டியல் கொடுப்பதற்கு கவர்னரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிய விஷயத்தை அ.தி.மு.க அரசு மோப்பம் பிடித்துவிட்டது. 13-ம் தேதி ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. அந்த நேரத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் புகார் பட்டியல் கொடுத்தால் அது தேர்தலில் விவாதப் பொருளாகிவிடும் என்பதால் அப்பாயின்ட்மென்ட் தேதியை தேர்தலுக்குப் பிறகு கொடுங்கள் என கவர்னரிடம் சொல்லிவிட்டார்கள். அதனால்தான் தேதி தராமல் இழுத்தடிக்கப்பட்டது’ என்று சொல்கிறார்கள். இந்தத் தகவலை தனது சோர்ஸ்கள் மூலமாக டெல்லி பி.ஜே.பி தலைமைக்கு அன்புமணி கொண்டு போயுள்ளார். ‘நீங்கள் இதுபற்றி ஜனாதிபதியிடம் சொல்லுங்கள். அவர் பார்த்துக்கொள்வார்’ என்று கைகாட்டினார்களாம் டெல்லியில். ‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட கவர்னர்களில் பலருக்கும் தற்போதைய பி.ஜே.பி அரசு கல்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டது. தமிழக கவர்னர் ரோசய்யா பதவி நூலிழையில் தப்பியது. டெல்லியில் இவர் கொடுத்துவந்த உத்தரவாத பேச்சையடுத்து, விட்டுவைத்தனர். ஆனால், அவர் தற்போது அ.தி.மு.க அரசுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார்’ என்று பா.ம.க தரப்பினர் டெல்லியின் காதில் போட்டார்கள். இந்தத் தகவல்கள் டெல்லியில் பரவிய சூழ்நிலையில் கடும் யோசனையில் இருந்தாராம் கவர்னர்!’

    ”அவருக்கு என்ன யோசனை?’

    ”தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர் நடக்கும் சமயம் இது! பிப்ரவரி 17-ம் தேதி சட்டசபையில் கவர்னர் உரையாற்றினார். அந்த நேரத்தில், ஆளும் கட்சியின் சாதனைகளைப் பாராட்டி புகழாரம் சூட்ட வேண்டிவரும். அதற்கு முன்பே, ஆளும் கட்சியின் மீதான புகாரை கவர்னர் வாங்கினால் நல்லாவா இருக்கும். இதுதான் கவர்னருக்கு யோசனை. சட்டபையில் புகழாரம் சூட்டிய பிறகு வேண்டுமானால் பா.ம.க தரப்பைச் சந்திக்கலாம் என்று கவர்னர் தரப்பு நினைத்ததாகச் சொல்கிறார்கள். இதை கணக்குப்போட்டுத்தான் கவர்னர் ரோசய்யா காலதாமதம் செய்வதாக பா.ம.க தரப்பு குற்றம்சாட்டியது.’

    ”இறுதியில் எப்படித்தான் கவர்னர் அப்பாயின்ட்மென்டுக்கு நேரம் ஒதுக்கினார்?’

    ”ஸ்ரீரங்கம் தேர்தல் ரிசல்ட் வந்த அடுத்த நாள் சட்டசபை கூடும் என சொல்லி​யிருந்தார் கவர்னர். அதற்கிடையே பா.ம.க தரப்பின் டெல்லி மூவ் பற்றி ரோசய்யா எதிர்பார்க்கவில்லை. அதைவிட, இது​மாதிரி ஏதாவது புகார் ரோசய்யா மீது கிளம்பட்டும் என்றுதான் பி.ஜே.பி அரசு காத்திருந்ததாகச் சொல்கிறார்கள். தனக்கு எதிராக டெல்லியில் காய் நகர்த்தப்படுவதைத் தெரிந்துகொண்ட கவர்னர் அதிர்ந்துபோனார். வேறு வழியில்லாமல்தான் ஆளுநர் உரை நடந்த அன்று பா.ம.கவுக்கு அப்பாயின்ட்மென்ட் தரப்பட்டது. காலையில் சட்டசபையில் ஆளுநர் உரை ஆற்றிவிட்டு வந்த ரோசய்யா மாலையில் பா.ம.கவிடம் இருந்து புகார் பட்டியலை வாங்கியது முரண்பாட்டின் உச்சம்!”

  3. பாட்டாளி மக்கள் கட்சி ஜாதிக்கட்சி என்று மக்களோ, கட்சியின் உறுப்பினர்களோ, தலைவர்களோ யாரும் அறிவிக்கவில்லை. ஆனால் ஊடகங்களான நீங்கள் தான் பா.ம.க வின் நிலைப்பாட்டை மக்களிடம் மறைத்து அதனை வேறு பிம்பமாக மாற்றி மக்களிடம் காட்டுகிறீர்கள்.

  4. பிங்குபாக்: பாமக சாதி சார்ந்து அரசியல் நடத்தவில்லையா?! | மு.வி.நந்தினி

  5. பிங்குபாக்: பாமக சாதி அரசியல் நடத்தவில்லையா?! | மு.வி.நந்தினி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.