இளவேனிற் காலம் தொடங்கப் போவதை அறிவிக்கும் அழைப்பிதழைத் தருகின்றன இம் மஞ்சள் மலர்கள்! பெருங்கொன்றை (Peltophorum pterocarpum) மலர்கள் இவை. தெற்காசிய மண்ணின் மரம் இது. நிழல் தரும் மரங்கள் பட்டியலில் முதன்மையான இடம் பிடிக்கும் இம் மலர்களை சாலையோரங்களில் காணலாம்…
Monthly Archives: மார்ச் 2015
கற்பழிப்பு நியூஸ் எழுதுவது எப்படி?
கற்பழிப்பு என்கிற சொல் பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பி, சில ஊடகங்கள் அந்தச் சொல்லை பாலியல் வல்லுறவு, பாலியல் வன்செயல் என மாற்றுச் சொற்களோடு பயன்படுத்தி வருகின்றன. ஆனால் தமிழ் மக்கள் அதிகம் படிப்பதாக சொல்லப்படும் தினத்தந்தி, தினமலர் போன்றவை இன்னமும் கற்பழிப்பு என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றன. கற்பழிப்பு என்ற சொல்லில் இவர்கள் கொண்டுள்ள தனிப்பட்ட ஈர்ப்பை புரிந்து கொள்ள, இவர்கள் எழுதும் கற்பழிப்பு செய்திகளை படிப்பது அவசியம். இன்றைய தினத் தந்தியில் நாமக்கல்லில் ஒரு மாணவி பாலியல் வன்செயலுக்கு உள்ளாக்கப் பட்டு கொல்லப்பட்ட செய்தி வந்துள்ளது. செய்தியின் தொடக்கத்தில் மூன்று பேர் அந்தப் பெண்ணை பாலியல் வன்செயலுக்கு உட்படுத்தி கொன்றதாக எழுதப்பட்டுள்ளது. செய்தியின் அடுத்தடுத்த பத்திகளில் மாணவியின் காதலன் குற்றத்தில் ஈடுபடாததும் மற்ற இருவருமே குற்றவாளிகள் என்பதும் தெரிகிறது. மாணவியுடன் பேசிக் கொண்டிருந்த அவள் காதலனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய நிருபரின் இதழியல் தர்மம் இங்கே சுட்டிக் காட்ட வேண்டிய ஒன்று.
மாணவியும் காதலனும் ஜாலியாக இருந்தார்கள் என்று எழுதுகிறது தந்தி. அதாவது இவர்களின் இதழியல் தர்மத்தில் தமிழ் அல்லது இந்திய கலாச்சாரத்துக்கு மாறாக ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன் உறவு கொள்வதற்குப் பெயர் ஜாலியாக இருப்பது! இது இதழியல் தர்மமா? இந்து தர்மமா?
டெல்லியில் கூட்டு பாலியல் வன்செயலுக்கு உள்ளாகி, இறந்துபோன அந்தப் பெண்ணின் அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்று ‘நிர்பயா’ எனப் பெயர் சூட்டி, உலக பரப்பில் முக்காடு போட்டி தங்கள் மானத்தை காப்பாற்றிக் கொண்டது இந்து அரசாங்கம், அதை காப்பாற்றின இந்து ஊடகங்கள். ஆனால் தமிழகத்தில் பாலியல் வன்செயலுக்கு உள்ளான ஒரு பெண்ணின் பெயர், முகவரி, புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கின்றன தினத்தந்தி குழும ஊடகங்கள். இது என்ன ஊடக தர்மம்? ஊருக்கு ஊர் ஒரு நியாயமா அல்லது தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா? ஏன் எந்த தமிழக பெண்ணியவாதியும் இதைப் பற்றி கேள்வி எழுப்புவதில்லை?
செய்தி எழுதும்போதே ஒரு ஃபோர்னோ படத்துக்குரிய திரைக்கதையுடன் செய்தி எழுதும் போக்கை இந்த ஊடகக்காரர்கள் எப்போது மாற்றிக் கொள்வார்கள். சமீபத்தில் இந்தியாவின் மகள் கட்டுரையில் எழுத்தாளர் ஜெயமோகன், இந்தியாவின் மகன்களின் மனநிலையை தெளிவாகச் சொல்லியிருந்தார். அதாவது இந்திய ஆண் மகன்கள் பாலியல் வன்செயல்களில் ஈடுபடுவது இயல்பான செயல் என்று உளவியல் ரீதியாக விளக்கியிருந்தார். தந்தி வகையறா செய்திகளைப் படிக்கும் எந்தவொரு இந்திய, தமிழக மகனும் நிச்சயம் பாலியல் வன்செயல் செய்ய நேரம் பார்த்துக் கொண்டிருப்பான் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை!
பிரதமர் நரேந்திர மோடி கோயில் இல்லாத நாட்டுக்கோ, மாநிலத்துக்கோ செல்ல மாட்டார்!
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிற முதுமொழியை இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியோ கோயில் இல்லாத ஊருக்குச் செல்ல வேண்டாம் என்கிற புதுமொழியை தனது பயண திட்ட மொழியாக வைத்திருக்கிறார். அன்றாட வாழ்க்கைப் பாடுகளில் இருந்து தங்களுளைக் காப்பாற்றி மிகப் பெரும் புரட்சியை செய்துவிடுவார் என வாக்களித்த மக்கள் அவரது திருக்கோயில் தரிசனங்களை தினசரிகளின் முதல் பக்கத்திலும் தொலைக்காட்சிகளில் முதன்மை செய்திகளாகவும் படித்தும் பார்த்தும் வருகிறார்கள்.
இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட தமிழின மக்கள் வாழும் இடங்களைப் பார்வையிட்டு தமிழரின் துயர் தீர்ப்பார் என இங்கிருந்து அறிக்கைவிட்ட அரசியல்வாதிகள், குறிப்பாக பெரியார் வழி வந்த மு. கருணாநிதியின் அறிக்கை கண்முன் வந்து போகிறது. மோடி நாகுலேஸ்வரன் கோயிலுக்கு சென்று இலங்கை தமிழரின் துயர் தீர்க்க இறைவனிடம் வேண்டி வந்ததாக தமிழிசையும் பொன்.ராதாகிருஷ்ணனும் அறிக்கை விடக்கூடும்.
முதன்முறையாக இந்துத்துவத்தை நேரடியாக முன்வைத்து ஆட்சியை பிடித்திருக்கும் மோடி உலகெங்கும் உள்ள இந்துக்களை இந்துக் கோயில்களுக்குச் செல்வதன் மூலம் இணைக்கிறார், இந்துத்துவத்தை பரப்புகிறார் என்று வாக்களித்த பெரும்பான்மை மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள். மோடி ஆஸ்திரேலியாவுக்கு அதானிக்காக செல்கிறார், டாடாவுக்காக ஸ்ரீலங்கா செல்கிறார் என்பதை அவர்கள் எப்போதும் அறியப் போவதில்லை.
லலித்கலா அகாடமியில் ஒரு மதிய பொழுது…
சென்னை எழும்பூரில் இருக்கும் லலித் கலா அகாடமி எனக்குப் பிடித்த இடங்களில் ஒன்று. அதன் அமைதியான சூழல், அங்கிருக்கும் மரங்கள் மீது பிரியம் அதிகம். சில மாதங்கள் நான் க்ரீம்ஸ் சாலையில் இருந்த பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றியபோது அந்த வழியாகத்தான் சாலையிலுள்ள மரங்களை ரசித்தபடி நடந்து செல்வேன். நான் தனிமை விரும்பி, பணிகளற்ற நேரத்தில் லலித்கலா அகாடமி மர நிழலில், சில சமயம் காட்சி கூடத்தில் இருப்பேன்.
சில வருட இடைவெளிக்குப் பிறகு இந்தோ கொரியன் கலைஞர்களின் செராமிக் கலைப் பொருட்களை காணும் பொருட்டு லலித் கலா அகாடமிக்குச் சென்றேன். வெயில் மண்டையைப் பிளந்த நேரம் ஜெமினி பாலத்திலிருந்து க்ரீம்ஸ் சாலைக்கு நடக்க வேண்டி இருந்தது. முன்பு போல என்னால் இருந்து, உணர்ந்து ரசிப்பதற்கெல்லாம் நேரமில்லை. இங்கு வர நேரம் கிடைத்ததே பெரிய விஷயமாயிற்றே…காட்சிக் கூடத்துக்குள் நுழைந்ததும் கேமராவைக் கையில் எடுத்து புகைப்படங்கள் வழியே கலைப் பொருட்களை பதிவு செய்ய ஆரம்பித்தேன். மதிய வேளை காட்சிக்கூடத்துக்குள் ஒரு ஈ கூட இல்லாதது வசதியாக இருந்தது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள், ரசித்து எடுத்தேன், புகைப்படங்கள் இருப்பதால் இப்போதும் ரசிக்க முடிகிறது.
சாவித்ரிபாய் புலெ – இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண்ணிய போராளி!
மேட்டுக்குடியில் பிறந்த சீமாட்டிகளின் பொழுதுபோக்குகள் புரட்சிகளாக இந்திய வரலாற்றில் தொடர்ந்து எழுதப்படுகின்றன. அவர்கள்தான் புனித பிம்பங்களாக ஒளிவட்டங்களுடன் ஆட்சியாளர்களால் சிலை வடிக்கப்படுகின்றனர். இவர்களுக்குக் கிடையே இருக்கும் மெல்லிய இழை பொதுப்பார்வைக்குத் தெரியாது. துதிக்கப்படுகிறவர்கள், வணங்கப்படுபவர்கள், புரட்சியாளர்கள், மகாத்மாக்கள், கல்வியாளர்கள், சீர்திருத்தவாதிகள் என எல்லோரும் நம்மவர்களாக இருக்க வேண்டும் என்பதே அந்த இழையை இணைப்பது. இல்லையெனில் பிற்போக்குத்தனமான சிந்தனையுடன் அரசியல்வாதியாகவும் மேட்டுக்குடியினரின் சிநேகிதனாகவும் கல்விக்கென எவ்வித முன்னெடுத்தலையும் செய்யாத சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுவதின் நோக்கம் என்னவாக இருக்கும்? இந்திய வரலாற்றில் கொண்டாட்டத்திற்குரிய ஒரு ஆசிரியர் உண்டெனில் அவர், சாவித்ரிபாய் புலெ ஒருவராகத்தான் இருக்க முடியும். அவரே கல்வி சார்ந்த அனைத்துக்கும் முன்னோடி. என்னுடைய 30 ஆண்டு கால வாழ்நாளில் நேற்றுதான் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. இது என் அறியாமை அல்ல, எனக்கு சொல்லித்தந்த புரட்சியாளர்கள் வரிசையில் சாவித்ரிபாயின் பெயர் என்றுமே இருந்ததில்லை. அவர் ஏன் மறைக்கப்பட்டார்? ஏனெனில், அவர் வீட்டுக்குள்ளே பெண்கள் பூட்டிக்கிடந்த காலத்தில் முதல் பெண் ஆசிரியை ஆனார், மேட்டிக்குடி ஆண்களால் கல்லடி, சொல்லடி பட்டு முதன் முதலில் பெண்களுக்கான கல்விக்கூடத்தை நடத்தினார். முதன் முதலில் முதியோருக்கு கல்விக் கற்றுக் கொடுத்தார், முதன் முதலில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வர்க்கத்துக்கு கல்வி போதித்தார். இப்போது சொல்லுங்கள் யாருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று!
1831ஆம் ஆண்டு, ஜனவரி 3ம் நாள் மகாராஷ்டிர மாநிலத்தில் நய்கொன் என்ற ஊரில் பிறந்தவர் சாவித்ரிபாய். தன்னுடைய 9 வயதில் மகாத்மா ஜோதிபா புலெவின் துணைவியானார். ஜோதிபா புலெதான் சாவித்ரிக்கு ஆசிரியர். அடிப்படை கல்வியை தன் கணவரிடம் கற்ற சாவித்ரி, பிறகு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஆசிரியை ஆனார். முதல் பெண்களுக்கான பள்ளியை 1848ல் தொடங்கினார். பெண்களுக்காக மட்டுமல்லாமல் முந்தைய பத்தியில் சொன்னதுபோல அனைவருக்கும் கல்வி கிடைக்க பாடுபட்டார். (அந்தக் காலக்கட்டத்தில் பார்ப்பனர்கள் நடத்திய பள்ளிகளில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன்!)
கல்விக்காக மட்டுமல்லாமல் நவீன இந்திய பெண்ணிய இயக்கத்தின் முன்னோடியாக சாவித்ரிபாய் புலெவை சொல்லலாம். 1800களில் வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடிப்பது, பிறகு முடி வளர்ந்தாலும் தொடர்ந்து மொட்டையடிப்பது மேட்டிக்குடியினரிடம் வழக்கத்தில் இருந்த ஒரு மூடப்பழக்கம். இதை எதிர்த்து சாவித்ரி, தன் இயக்கத்தின் மூலம் போராடினார். மொட்டையடிக்கும் தொழிலில் இருந்தவர்களுடன் பேசி, இந்த மூடப்பழக்கத்துக்கு துணைபோகாமல் இருக்கும்படி கைவிடச் செய்தார்.
கணவனை இழந்த இளம்பெண்களை மேட்டுக்குடி ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வது அந்தக் காலத்தில் சமூக அங்கீகாரம் பெற்ற கொடூரங்களில் ஒன்று. சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கைம்பெண்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதும் நடந்தது. இப்படி பாலியல் சுரண்டல்களால் சில பெண்கள் கருவுற்று, அது வெளியே தெரியவந்தால் என்னவாகும் என பயந்து தற்கொலை செய்வதும் அதிகமாக இருந்தது. இப்படி பாதிக்கப்பட்ட ஒரு பிராமணப் பெண்ணை தற்கொலையிலிருந்து மீட்டு அவருடைய குழந்தையை தத்தெடுத்துக் கொண்டனர். முதன் முதலில் இப்படி பிறக்கும் சிசுக்களுக்கென்று தனி இல்லத்தையும் புலே தம்பதி ஆரம்பித்தனர்.
இதோடு, சாவித்ரி நவீன பெண்ணிய கவிதைகளின் முன்னோடியாகவும் கருதப்படுபவர். இன்னும் இவரைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. பெண்கள் தினத்தில் ஒரு உண்மையான பெண்ணிய போராளியைப் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.
சரி…இத்தனை சமூக மாற்றங்களுக்கு முதன்மையானவராக முன்னோடியாக இருந்தவரை ஏன் இந்திய வரலாறு மறைக்கிறது? ஏனெனில் இந்திய வரலாறு மேட்டிக்குடி ஆண்களால் எழுதப்படுகிறது. அதில், பெண்களுக்கு கல்வி வேண்டும், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வேண்டும், பாலியல் சுரண்டல்களிலிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும், கட்டுப்பெட்டித்தனமான பழங்கலாச்சாரத்திலிருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்று இறுதிகாலம்வரை குரல் கொடுத்த சாவித்ரிபாயின் வரலாறு மறைக்கப்படுவதில் ஆச்சரியமில்லை. இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.. அவர் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திலிருந்து வந்த விடிவெள்ளி என்பதே அது!