சாய் பல்லவி முகத்தில் முகப்பரு இருந்தால் உங்களுக்கென்ன?

12065891_1104001052978542_7584848522139956459_n

தன் மனைவி, மகள், அம்மா, சகோதரி,காதலி என பெண் எந்த உறவில் இருந்தாலும் அவள் ஆணுக்குக் கட்டுப்பட்டவளாக, ஆணின் விருப்பப்படி நடப்பவளாக இருக்க வேண்டும். தனக்கு நெருக்கமான பெண்கள் மட்டுமல்ல, தன் கண்ணெதிரே நிற்கும் அத்தனை பெண்களும் விருப்பத்திற்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும் என்பதை சமூக மனநிலையாகவே கொண்டிருக்கிறார்கள் ஆண்கள்.

கடந்த மாதம் வார இதழ் ஒன்று பெண்கள் லெகிங்ஸ் அணிவது பற்றி கீழ்த்தரமாக எழுதியிருந்தது. எப்படி உடுத்த வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்கிற கட்டளை-கண்காணிப்பு சமூகத்தில் தன்னுடைய அதிகாரம் மிக்க இடம் விட்டுப் போய்விடக்கூடாது என்று திரும்பத் திரும்ப வலியுறுத்துவதற்காகவே செய்யப்படுகிறது.

ஊடகங்கள் மட்டுமல்ல, தனிநபர்களும் சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில் பெண்ணுக்குரிய கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டே போகிறார்கள். ஒரு நடிகையின் முகத்தில் முகப்பரு இருப்பது பலருக்கு வெறுப்பூட்டுகிறது. சொரியாஸிஸ் வந்ததுபோல என்று எழுதுகிறார் ஒருவர். இதைப் போயா ரசித்தோம் என்று சொல்லி தன்னுடைய கீழ்த்தரமான புத்தியை வெளிக்காட்டுகிறார் இன்னொருவர்.

pimples

முகப்பரு என்பது குறிப்பிட்ட பருவத்தில் இயற்கையாக எல்லோருக்கும் வரக்கூடியது. சிலருக்கு ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருந்தால் முகப்பரு அதிகமாக வரத்தான் செய்யும். காலப்போக்கில் இது தானாக சரியாகிவிடும். இந்த அறிவியல் ரீதியான உண்மையை மறைத்து பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் விதவிதமான க்ரீம்களை பெண்களின் தலையில் கட்டுகின்றன. பெண்கள் இவற்றை விரும்பித்தான் வாங்கிப் போடுகிறார்களா என்றால் அதற்கும் முக்கிய காரணகர்த்தாக்களாக இருப்பது ஆணாதிக்க சிந்தனையுள்ள சமூகம்தான்.

கருப்பாக இருப்பவர்களை ஒதுக்குவது, முகப்பரு இருப்பவர்களை கேலி செய்வது, முக்கியமாக திருமணச் சந்தையில் இதையெல்லாம் சொல்லி பெண்ணை நிராகரிப்பது இந்த ஆண் சமூகமே. அதனால்தான் இந்திய ஃபேர்னஸ் க்ரீம் சந்தை பல ஆயிரம் கோடிகளுக்கு விரிந்திருக்கிறது.

ஒரு நடிகை மெழுகு சிலைபோல இருக்கவேண்டும் என்று யார் நிர்ணயித்தது? தொன்றுதொட்டு வரும் இந்திய கலைகளின் நீட்சியாக இந்திய சினிமாவும் பால் உணர்வுகளைத் தூண்டுவதாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்களின் பால் உணர்வுகளுக்கு வடிகாலாகத்தான் சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன. நடிகைகள் ஆண்களின் விருப்பத்திற்கேற்ப சினிமாக்களில் வடிவமைக்கப்படுகிறார்கள். ஒருசில இயக்குநர்கள் மட்டுமே அதிலிருந்து விலகி கண்ணியமான முயற்சிகளைச் செய்கிறார்கள்.

சாய் பல்லவி
சாய் பல்லவி

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய‘ப்ரேமம்’ படத்தின் நாயகிகளில் ஒருவராக மலர் கதாபாத்திரத்தில் வரும் சாய் பல்லவி தமிழ்ப் பெண். சுருள் முடியும் கன்னங்களில் இருக்கும் முகப்பரு தழும்புகளும் அவர் ஏற்று நடித்த மலர் கதாபாத்திரத்துக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. சினிமா ரசிகர்களும் அவரைக் கொண்டாடினார்கள்.

நடிப்புக்காக நடிகையை ரசிக்காமல் அவளைப் பாலியல் உணர்வுகளோடு பொருத்திப் பார்ப்பது நாகரிக சமூகத்துக்கு நல்லதல்ல. “நான் பள்ளி நாட்களில் வெளியே வரவே பயப்படுவேன். காரணம் என் முகத்தில் உள்ள முகப்பருக்களைப் பார்த்து பையன்கள் கேலி செய்வார்கள் என்பதே” என்று தன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைச் சொல்கிறார் சாய் பல்லவி.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பெண்களை கேலிக்குரியவளாக, இச்சைக்குரியவளாகவே ஆண் சமூகம் பார்க்கும் என்ற வெறுமையான கேள்வி நமக்கு மிஞ்சுகிறது.

 

 

ஊடகக்காரர்களை தாக்கிய யுனிலிவர்

unilever

இந்திய நுகர்வோர் சந்தையை பெருமளவில் கைப்பற்றி வைத்திருக்கும் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம், கொடைக்கானல் மலையில் தான் விட்டுச் சென்ற பாதரச கழிவுகளை 14 ஆண்டுகளாக அகற்றாமல் விட்டு வைத்திருக்கிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடந்த 2001ஆம் ஆண்டு, யுனிலிவரின் தெர்மாமீட்டர் தயாரிப்பு தொழிற்சாலை சுற்றுச்சூழல் விதிகளை மீறி கழிவுகளை கொட்டுகிறது எனக் கூறி மூடியது. திர்வயம் என்ற இடத்தில் 7.5 டன் பாதரசத்துடன் கூடிய உடைந்த தெர்மாமீட்டர்களை கொட்டியது யுனிலிவர். ஆனால் இதுவரை அதை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையிலும் யுனிலிவர் நிறுவனம் ஈடுபடவில்லை. மூளை நரம்புகளை அதுசார்ந்த செயல்பாடுகளையும் பாதிக்கும் பாதரசக் கழிவால் இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் என இங்கு களப்பணி செய்த பல சூழலியல் தொண்டு நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக கொடைக்கானல் மலைப்பகுதியில் யுனிலிவர் நிறுவனம் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து செய்தி சேகரிக்கவும் புகைப்படங்கள் எடுக்கவும் ஊடகங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி, யுனிலிவரின் தெர்மாமீட்டர் நிறுவனத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக அனுப்பட்டிருந்த குழுவினருடன் செல்ல முயன்ற ஊடகக்காரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீறிச் சென்ற ஊடகக்காரர்களை தாக்கியுள்ளார், யுனிலிவர் நிறுவனத்தின் மேனேஜர் ஜான் ஜார்ஜ்.

“ஊடகங்களுக்காக பல கோடிகளை செலவழிக்கும் யுனிலிவர், ஊடகக்காரர்களை நடத்தும்விதம் இதுதான். யுனிலிவர் நிறுவனத்துக்குள்ளே வெளிவராத பல ரகசியங்கள் இருப்பதையே இது காட்டுகிறது. இங்கு வேலைப்பார்த்த ஊழியர்கள் மெர்க்குரி கழிவுகள் நிறுவன வளாகத்துக்குள்ளே பல இடங்களில் புதைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்” என்கிறார் யுனிலிவருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் நித்யானந்த் ஜெயராமன்.

யுனிலிவர் நிறுவனம் அதிகாரத்தில் உள்ளவர்களை விலைபேசி, மிகப் பெரிய பாதகத்தை தமிழக மக்களுக்குச் செய்துகொண்டிருக்கிறதோ என்கிற பயம் தோன்றுகிறது. போபால் ஏற்படுத்திய பேரழிவுகள் நம் கண்முன் வந்துபோகின்றன.

வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாக செயல்படும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்தத் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன என்பதும் நம் கவலையை அதிகப்படுத்துகிறது.

 

ராமஜெயம் கொலை வழக்கு என்ன ஆனது?

திருச்சி மாநகரின் ஒரு அதிகாலைப் பொழுதில் நடந்த அந்தக் கொலையின் மர்ம முடிச்சுகள் மூன்று ஆண்டுகள் கடந்த பின்னும் அவிழ்க்கப்படவேயில்லை. 2012-ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி படுகொலை செய்யப்​பட்டார் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி, கே.என்.ராமஜெயம். ரியல் எஸ்டேட்,கல்குவாரி கான்ட்ராக்ட், கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்பட பல்வேறு‘தொழில்’களைச் செய்து வந்தவர் இவர். அதோடு ‘அழகிரி பாணி’ அரசியலில் ராமஜெயம் கைதேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள்.சம்பவம் நடந்த அன்று காலை 5.30 மணிக்கு நடைப்பயிற்சி சென்றவர் 8.30 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரைத் தேட ஆரம்பித்தனர். அடுத்த சில மணி நேரங்களில், கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில், ராமஜெயத்தின் உடல் ஸ்ரீரங்கம் பகுதியில் கிடப்பதைக் கண்டுபிடித்தது போலீஸ்.

திருச்சி மாவட்டத் தி.மு.க.வின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் கே.என்.ராமஜெயம். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் முதுகெலும்பே ராமஜெயம்தான். திருச்சியில் திமுகவின் மூன்று மாநில மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியது, கட்சிக்குச் சொந்தமாக அறிவாலயம் கட்டியது என்று பிரம்மாண்​டங்களை அரங்கேற்றுவதில் கைதேர்ந்தவர். அதேநேரம், தீவிர அரசியலில் நேரடியாக இறங்காமல், ‘தொழில்’கள் செய்வதில்தான் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். ஆந்திராவில் சுரங்கத் தொழில், இந்தோ​னேஷி​யாவில் நிலக்கரி குவாரி, புதுக்​கோட்டை எல்லையோரம் கிரானைட் குவாரி, ஜனனி குரூப் ஆஃப் கம்பெனிகள், உயர் கல்வி நிறுவனங்கள் என்று மிகப்பெரிய தொழில் அதிபராக வலம் வந்தவர். அதனால், ராமஜெயத்தை ‘எம்.டி’ என்று மரியாதையுடன் திருச்சிவாசிகள் அழைப்பார்களாம்.

1996-2001ஆம் வரையான திமுக ஆட்சியின்போதுதான், ராமஜெயம் முழுநேர அரசியல்வாதி ஆனார். அடுத்து வந்த 2006 -2011 திமுக ஆட்சியின்போது மளமளவென வளர்ந்தது இவருடைய அரசியல் வாழ்வு. இவரின் தீவிர அரசியல் பற்றி நேருவின் கவனத்துக்குப் போனபோது, ராமஜெயத்தை அழைத்துக் கண்டித்ததாகவும் இதற்கிடையில், ராமஜெயத்தின் ஆதரவாளர்கள் அவரை நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூரில் போட்டியிடும்படி தூபம் போட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு நேரு சம்மதிக்கவில்லை. நடிகர் நெப்போலியனை நேரு முன்னிறுத்தினார். இதனால், அண்ணன் நேருவுடன் ராமஜெயத்துக்கு அரசியல்ரீதியான மோதல் வெடித்தது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு வழக்குகள் இவர் மீது போடப்பட்டன. இதனால் ராமஜெயம் தலைமறைவு ஆனார். கொச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு தப்ப முயன்றபோது இமிகிரேஷன் அதிகாரிகள் பிடித்து திருச்சிக் காவல் துறை வசம் ஒப்படைத்தனர். சில நாட்கள் பாளையங்கோட்டை சிறையில் இருந்த பின்னர், அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்று வெளியில் வந்திருக்கிறார்.

2007-ல் திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜும் அவரது கார் டிரைவர் சக்திவேலும் காரில் வைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். அதேதினத்தில், துரைராஜின் சகோதரர் தங்கவேலுவும் மர்மமான முறையில் இறந்தார். இந்த இரண்டு வழக்கில், ராஜெயத்தின் தலையீடு உள்ளதாக காவல்துறை சந்தேகித்தது. இந்நிலையில்தான் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்து வழக்கை விரைந்து முடித்து நீதி வழங்க வேண்டும் என துரைராஜ் குடும்பத்தினர் கோரிக்கை வைத்ததாகவும் அதன்பிறகும், வழக்கில் முன்னேற்றம் இல்லை என்பதால் துரைராஜின் ஆதரவாளர்கள்தான் ராமஜெயம் கொலையை கூலிப்படையை ஏவி நடத்தி இருக்க வேண்டும் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்தனர்.

திருச்சியில் பிரபல ரௌடி ஒருவர் திமுக ஆட்சியில் என்கவுன்டர் செய்யப்பட்டார். அதற்குப் பின்னணியில் இருந்து தூண்டியது ராமஜெயம். அந்த ரௌடியின் ஆதரவாளர்கள் இதனைச் செய்திருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. ‘ராமஜெயத்தின் உடல் இருந்த நிலையைப் பார்த்தால் அவர் கைதேர்ந்த தொழில் முறை கொலையாளிகளால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருப்பதைப் போல் தெரிகிறது. அதனால், வெளிமாநிலத் தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்குமா என்றும் அலசப்பட்டது. ஆனால் மூன்று ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில் சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கில் குற்றவாளி யாரும் சிக்கவில்லை.

தனது கணவர் கொலை வழக்கை சிபிசிஐடி சரியாக விசாரிக்கவில்லை. அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளிகளைக் கண்டறிய அக்டோபர் 28ந் தேதி வரை காவல் துறை அதிகாரிகளுக்கு அவகாசம் கொடுத்திருந்தனர்.

ராமஜெயத்துக்கு நெருக்கமான மூன்று நபர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களைத் தருவதால் அவர்களை உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்த சிபிஐ உதவி கேட்டிருந்தது சிபிசிஐடி போலீஸ். இந்நிலையில் புதன்கிழமை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸ், ராமஜெயம் கொலையின் முடிச்சுகளை அவிழ்க்குமா? அல்லது நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமா? என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் கிளம்பியிருக்கிறது.

வித்யா பாலனுக்கு என்னாச்சு?

vidhya balan

சினிமா நடிகர்களை சமூகத்தின் தலைவர்களாக ஏற்றி வைத்திருக்கும் சமூகம் இது. ஆனால், நடிகர் எல்லோரும் தலைவர்களாவதில்லை. குறைந்தபட்சம் சமூக உணர்வு உள்ளவர்களாகக்கூட நடந்துகொள்வதில்லை. புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் நாட்டில் அதிகரித்துவரும் மதவன்முறைகளைக் கண்டித்தும் புதன்கிழமை ஒரே நாளில் எட்டு இயக்குநர்கள் தங்களுடைய தேசிய விருதை திரும்பத் தருவதாக அறிவித்தனர்.

இதுகுறித்து தேசிய விருதுபெற்ற நடிகை வித்யா பாலனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இது இந்த நாடு கொடுத்தது, அரசாங்கம் கொடுத்ததல்ல” என்று பதில் கூறியிருக்கிறார். கூடவே, அவர் இந்நாட்டு சாமானிய மக்கள் உணவுக்காகவும் கருத்துச் சுதந்திரத்துக்காகவும் உயிர்விட்டதற்கு கண்டனமோ, எதிர்ப்போ தெரிவித்திருக்கலாம். ஆனால் அவர் ஒற்றை வாக்கியத்தோடு முடித்துக்கொண்டார்.

நாட்டு மக்களைவிட விருதுக்கு முக்கியத்துவம் தரக்கூடியவர்கள், தங்கள் விருதுகளுக்கு முட்டுக் கொடுக்க அந்த நாட்டு மக்களை நிறுத்துவது வாடிக்கையாக உள்ளது. அதைத்தான் வித்யா பாலனும் செய்திருக்கிறார். மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ் எழுத்தாளர்களைப் போல வித்யா பாலனும் யோசிப்பது வியப்புக்குரியதல்ல. வித்யாவும் தமிழ்ப் பெண் தானே?!

வித்யாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் புகழ்பெற்ற வித்யா பாலன், தமிழ் சினிமாவின் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட ‘டர்ட்டி பிக்சர்’ படத்துக்காக தேசிய விருது பெற்றார்.

 

 

தேர்தல் நேரத்தில் மாற்றப்படும் தேர்தல் ஆணையர்கள்…ஏன்?

தேர்தலில் வெற்றி பெற கட்சிகளுடையே கூட்டணி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் ‘ஒத்துழைப்பும்’ மிக முக்கியம் என்ற எழுதப்படாத விதி இந்திய தேர்தல் நடைமுறைகளில் உள்ளது.

தற்சமயம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக உள்ள சந்தீப் சக்சேனா, தேர்தல் ஆணையத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்திப் சக்சேனா, டெல்லிக்கு மாற்றம் கோரி விண்ணப்பித்ததாகவும் அதன் பேரிலே அவரை விடுவித்துள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு தமிழக முதன்மை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட சந்தீப் சக்சேனா ஸ்ரீரங்கம், ஆர். கே.நகர் இடைத் தேர்தல்களில் ஆளும் அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று கூறி அவரை மாற்ற வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்து வந்தன.

“தேர்தலில் வன்முறை என்பது இந்தியாவெங்கும் ஒரு வழக்கமாக இருந்துவருகிறது. சமீப காலங்களில், கிட்டத்தட்ட இந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் தேர்தல் முறைகேடு அதிக அளவில் நடந்துள்ளது. முறைகேடுகளில் அரசியல்வாதிகள் ஈடுபடும் காலம் போய் வாக்காளர்களே வாக்குக்குப் பணம் பெற்றுக்கொள்ளும் முறைகேட்டில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். பீகார் தேர்தல் வன்முறைக்கு பெயர்பெற்றது. தமிழகத் தேர்தல் முறைகேடுகளுக்கு பெயர் பெற்றிருக்கிறது” என்கிறார் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆர். முத்துக்குமார்.

2009-ஆம் ஆண்டு திருமங்கலத்தில் நடந்த இடைத் தேர்தலின் போது அப்போதைய திமுக அரசு வாக்களர்களுக்கு பெருமளவில் பணம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி கண்டதால் ‘திருமங்கலம் ஃபார்முலா’ என சிறப்புப் பெயரையும் அந்தத் தேர்தல் பெற்றது. அப்போது தமிழக தேர்தல் ஆணையராக இருந்தவர் நரேஷ் குப்தா. நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர் என்றாலும் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு முன் அவருடைய அதிகாரத்தால் வலுவாகப் போராட முடியவில்லை.

“இந்திய சுதந்திரம் அடைந்து முதல் தேர்தல் நடந்தபோது தேர்தல் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்றார் ஜவஹர்லால் நேரு. ஆனால் இப்போது தேர்தல் ஆணையர் என்றாலே ஆளும் அரசுக்கு ஆதரவாகத்தான் இருப்பார் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது” என்கிற முத்துக்குமார், தேர்தல் ஜனநாயகத்தை மீட்டெடுக்க தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் தேவை என்கிறார்.

“தேர்தல் ஜனநாயகத்தில் மாற்றம்கொண்டுவர வலுவான ஆயுதம் தேவை. சில சமயம் இந்த ஆயுதங்களே ஜனநாயகத்தை சீர்குலைத்திருப்பது கடந்தகால வரலாறு. இனியும் அப்படி நடக்காமல் தேர்தல் ஆணையம் தன்னுடைய சுதந்திரத்தன்மையை நிலைநிறுத்த முயல வேண்டும். கடந்த காலங்களில் தமிழக தேர்தல்களில் தேர்தல் ஆணையம் மீது விழுந்த மோசமான பிம்பத்தைக் களைய நேர்மையான, வலுவான தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்” என்கிறார் ஆர். முத்துக்குமார்.

இந்நிலையில், சுற்றுலாத் துறை செயலாளராக உள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹர்சகாய் மீனா தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்புக்கு நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த முதன்மைச் செயலாளர்கள் சிலரது பெயரும் பட்டியலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.