சாகித்ய அகாடமியை துறக்க தமிழ் எழுத்தாளர்கள் ஏன் முன்வரவில்லை?

Shashi Deshpande

பகுத்தறிவுவாதிகள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோரும் தாத்ரியில் முகமது அக்லாக்கும் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தனது சாகித்ய அகாடமி விருதை திரும்ப ஒப்படைத்தார் பிரபல எழுத்தாளர் நயன்தாரா செகல். இதேபோன்று கவிஞர் அசோக் பாஜ்பாயியும் விருதினை திருப்பி அளித்தார்.

பகுத்தறிவாளர் கல்புர்கி கொலை உண்டதை அடுத்து, இதன் பின்னணியில் இருக்கும் இந்துத்துவ அரசியலைக் கண்டித்து, கர்நாடகாவில் ஆறு எழுத்தாளர்கள் மாநில அரசு தங்களுக்குக் கொடுத்த விருதினை திருப்பி அளித்திருக்கிறார்கள்.

பகுத்தறிவுக்குப் பெயர்போன தமிழகத்தில் சாதியமும், மத சகிப்பின்மையும், உணவு அரசியலும் அதிகரித்துவரும் வேளையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களும் தங்களுடைய எதிர்ப்பை மத்திய அரசுக்குக் காட்டுவார்களா? என்கிற விவாதம் சமூக வலைத்தளங்களில் எழுந்திருக்கிறது.

மோடியின் முகத்தில் இந்த விருதை விட்டெறியும் எழுத்தாளர்களுக்கு, அந்த விருதுடன் தரப்படும் பணத்தை தாங்கள் உண்டியல் ஏந்தி வசூலித்துத் தருவதாக அறிவித்திருக்கிறார்கள் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த கருணாவும்.

“தமிழ்நாட்டில் நேரடி படைப்புக்காகவும் மொழிபெயர்ப்புக்காகவும் 12 பேருக்கும் மேல் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார்கள். மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் உணவு உரிமைக்குள் உள்ள தலையீட்டைக் கண்டித்தும் அறவுணர்வோடு நியாயமான கோபத்தை, எதிர்ப்பை இவர்கள் விருதை திருப்பித் தருவதன் மூலம் காட்டலாம்” என்கிறார் ஆதவன் தீட்சண்யா.

இந்நிலையில் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி தன்னுடைய முகப்புத்தகத்தில், “மோடி அரசின் மதவெறி ஆதரவைக் கண்டித்து நயன்தாராவும் அசோக் பாஜ்பாயியும் சாகித்ய அகாதமி விருதுகளை திருப்பித் தந்ததைப் பாராட்டும் தமிழக முற்போக்குத் தோழர்கள் பாராட்டுவது போதாது. தமிழக இடதுசாரி எழுத்தாளர்கள் சு.வெங்கடேசன் முதலானோரையும் விருதைத் திருப்பித்தரச் சொல்லவேண்டும்” என்று எழுதியிருக்கிறார்.

இதுகுறித்து, முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ச. தமிழ்ச்செல்வனிடம் பேசியது.

“சாகித்ய அகாடமி விருதை இந்த எழுத்தாளர்கள் திருப்பித் தந்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், நாங்கள் இதை ஒரு போராட்ட வடிவமாகப் பார்க்கவில்லை. வகுப்புவாதத்துக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். சாதியத்தால் தாக்குதலுக்குள்ளான எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக வழக்குத் தொடுத்து போராடியதும் நாங்கள்தான். அத்தனை போராட்ட வடிவங்களிலும் நாங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறோம். இந்தப் போராட்ட வடிவங்களில் தங்கள் எதிர்ப்பைக் காட்ட முடியாதவர்கள், விருதைத் திருப்பித் தந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

கல்புர்கி படுகொலை தொடர்பாக கிட்டத்தட்ட 100 இடங்களில் தெருமுனை கூட்டம் நடத்தியிருக்கிறது தமுஎச. அதனால் அமைப்பு ரீதியாக விருதைத் திருப்பித் தரும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதில்லை. சாகித்ய அகாடமி மட்டுமல்ல, மத்திய அரசின் விருதுகள் அனைத்து துறையினருக்கும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் எழுத்தாளர்களை மட்டும் திருப்பித் தர வலியுறுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை, ஏனென்றால் நாங்கள் இந்த விஷயங்களுக்காக எப்போதுமே போராடிக்கொண்டுதானே இருக்கிறோம். ஒருவேளை எங்கள் அமைப்பைச் சேர்ந்த, சாகித்ய அகாடமி விருது பெற்ற மூவரும் விருதைத் திருப்பித் தர முன்வந்தால் வரவேற்போம். அவர்களால் பணமுடிப்பை திருப்பித் தர இயலாதபட்சத்தில் அந்த பணத்தை நாங்கள் தரவும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற சில எழுத்தாளர்களை இதுகுறித்து கருத்து கேட்க அணுகியது. சிலர் இதுப்பற்றி வேண்டாமே என்று சொன்னார்கள். சிலர், பிறகு நானே கூப்பிடுகிறேனே என சொல்லி அழைப்பைத் துண்டித்தார்கள்.