அமீர்கான் நீக்கம் களங்கத்தைத் துடைக்குமா?

நாட்டில் நிலவிவரும் சகிப்புத்தன்மையற்ற சூழ்லுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுகளை திருப்பி அளிக்கும் போராட்டத்தில் அறிவுஜீவிகள் ஈடுபட்டிருந்த நேரத்தில், பாலிவுட் நடிகர் அமீர்கானும் அதில் இணைந்துகொண்டார். விருதைத் திருப்பி அளிப்பதில் நம்பிக்கை இல்லை என்றபோதும், நாட்டில் நிலவரும் அசாதார சூழல் தன் குடும்பத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசினார். பாலிவுட் நடிகர் ஷாரூக் கானும் இதே கருத்தை சொல்லியிருந்தார். ஆனால் அமீர்கான் அடுத்ததாக சொன்னதுதான் சர்ச்சையைக் கிளப்பியது. சகிப்புத்தன்மையற்ற சூழலைக் கருதி நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா என தன் மனைவி தன்னிடம் ஆலோசித்ததாக சொன்னார் அமீர்கான்.
சமூக ஊடகங்களில் உள்ள மோடி பக்தர்கள், இந்த வரிகளைப் பிடித்துக்கொண்டு அவரை ஓடஓட விரட்டியடித்தார்கள். அமீர்கான் தேசப்பற்றில்லாதவர் என வழக்கமான முத்திரையை அவர் மேல் குத்தினார்கள். அமீர்கான் தனது தேசப்பற்றை நிரூபிக்க, சீதையைப் போல நெருப்பில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சகிப்புத்தன்மை இல்லை என்று சொன்னது தனக்கே நடக்கிறது என நொந்துகொண்டார் அமீர்கான்.
இந்தச் சம்பவங்கள் நடந்து ஒரு மாதங்களுக்கும் மேலான நிலையில்,  பாஜக அரசு முக்கியமான முடிவை அறிவித்திருக்கிறது. இந்தியா சுற்றுலாத் துறையில் விளம்பரத் தூதராக இருந்த அமீர்கான் நீக்கப்பட்டுள்ளார். சகிப்பின்மை நிலவுவதாக பேசியதை அடுத்தே அவர் நீக்கப்பட்டதாக வட இந்திய ஊடகங்கள் பரபரத்தன. ஆனால் இதை மறுத்திருக்கிறார் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா. அமீர்கானை ஒப்பந்தம் செய்தது விளம்பர ஏஜென்ஸிதான், அந்த ஏஜென்ஸியின் ஒப்பந்தம்தான் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அமீர்கான் போன்ற  மக்களின் நம்பிக்கைக்குரிய முன்னணி நடிகர் வேண்டும் என்கிற அடிப்படையில்தான் இந்திய சுற்றுலாத் துறை அமீர்கானைத் தேர்ந்தெடுத்தது. ஏதோ ஒரு மாடல் விளம்பரத் தூதராக இருந்தால் போதும் என்ற அடிப்படையில் தூதர் தேர்வு நடந்திருந்தால் அமைச்சர் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால், நோக்கத்தோடு தேர்ந்தெடுத்துவிட்டு, அரசியல் காரணங்களுக்காக அவரை நீக்குவதை நியாயப்படுத்துகிறது மத்திய அரசு.
வழக்கமாக அரசியல் எதிரிகளைத்தான் ஆட்சிக்கு வந்ததும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு ஈடுபடும். ஆனால், மோடி அரசு தன்னை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தயவு தாட்சண்யமின்றி பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. அதேசமயத்தில் தனக்கு வேண்டியவர் என்றால் தகுதியே இல்லையென்றாலும், எதிர்ப்பையும் மீறி பணியில் அமர்த்துகிறது. இதற்கு உதாரணமாக புனே திரைப்படக் கல்லூரி தலைவராக புராண தொலைக்காட்சி நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதைச் சொல்லலாம்.
தற்போது இந்தியாவின் சுற்றுலாத் துறை விளம்பரத் தூதராக நடிகர் அமிதாப் பச்சனை நியமிக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன. மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அம்மாநில சுற்றுலா தூதராக 10களுக்கு மேலாக இருந்தவர் அமிதாப் பச்சன். அந்த ‘நட்பு’ காரணமாக பிரதமர் அலுவலகத்தின் பரிந்துரையின் பேரில் அமிதாப் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
உலகைக் கவர இந்தியா யாரை விளம்பரத் தூதராக நியமித்தாலும் உலக அரங்கில் கடந்த ஆண்டு ஏற்பட்ட களங்கம் மாறப்போவதில்லை. அமெரிக்காவில் இங்கிலாந்தில் மோடிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களே இதற்கு சாட்சி!

தினச்செய்தி நாளிதழில் வெளியானது.