தேர்தல் நேர காளான்கள்!

அனைத்திந்திய எம் ஜி ஆர் கட்சி, அனைத்திந்திய திராவிடர் சமத்துவ கழகம், அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம், அனைத்து மக்கள் முன்னேற்ற கழகம், அன்பு உதயம்  கட்சி, அப்பாம்மா மக்கள் கழகம், பாரத சமத்துவ மக்கள் கழகம், பாரத மக்கள் காங்கிரஸ், பாரதிய திராவிட மக்கள் கட்சி, பாரதிய டெமாக்ரடிக் தள், தேச மக்கள் முன்னேற்ற கழகம்…
இப்படி ஆங்கில எழுத்து ஏயில் ஆரம்பித்து இஸட் வரை நாம் கேள்விப்படாத புது புது பெயர்களைத் தாங்கிக் கொண்டிருக்கும்  180க்கும் மேற்பட்ட கட்சிகள் இப்போதை(2014ன் படி)க்கு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொண்டுள்ள கட்சிகள், ஆணையத்தின் அங்கீகாரத்துக்கு காத்திருக்கும் கட்சிகள்.

மதத்தின் பெயரால் தொடங்கப்பட்ட கட்சிகள், சாதியை பெயரில் தாங்கியிருக்கும் கட்சிகள், கொள்கைகளை பெயராக கொண்ட கட்சிகள், கொள்கைகளே இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் என தேர்தல் நேரத்தில், மழை நேர காளான்களைப் போல கட்சிகள் புதிதுபுதிதாக முளைக்க ஆரம்பிக்கின்றன.

குறிப்பிட்ட பகுதியில் பிரபலமாக இருப்பவர், சாதித் தலைவர்கள், பொருளாதார செல்வாக்கு இருக்கிறவர் இதில் எதுமே இல்லையென்றால் எனக்கு பத்து பேரைத் தெரியும் என்பவர்கூட ஒரு பெயரை வைத்துக்கொண்டு கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட முடியும். ஆனால், ஆங்கீகாரம் பெறுவது அவ்வளவு எளிதானதல்ல.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டுமானால் சில பல சட்ட திட்டங்கள் உண்டு. அதில் ஒன்று முந்தைய தேர்தல்களில் கட்சி 6% வாக்குகளையாவது பெற்றிருக்க வேண்டும். நீண்ட திட்டத்துடன் அரசியலில் களம் இறங்கிறவர்களுக்குத்தான் இந்தக் கவலை. காளான்கள் இதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். பெரும்பாலான காளான் கட்சிகளின் நோக்கம் குறுகியது.

அதாவது ‘எங்களிடம் இத்தனை ஆதரவாளர்கள் இருக்கிறார்கள், அவை எல்லாம் ஓட்டுகள் ’என்று பெரிய கட்சிகளிடம் பணம் பறிப்பது அல்லது அதிகாரத்தின் நிழலில் ஒதுங்கிக் கொள்ளும் நோக்கத்தில் தான்  இவர்கள் கட்சி தொடங்குகிறார்கள். அணு உலை எதிர்ப்பு போராளி சுப. உதயகுமாரன் தொடங்கியிருக்கும் பச்சைத் தமிழகம் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் கட்சி. ஆனால், இவர் போன்றோரைப் பொருத்தவரை வெகுமக்களின் ஆதரவு பெற முடியுமா என்பதே பிரச்சினை. எந்தவொரு கட்சியும் ஆரம்பிக்கப்படும் போது சிறிய அளவிலான வெற்றிகளையே பெருகிறது. தாக்குப் பிடிக்கும் திறன், அரசியல் செய்யும் பாங்கு இவற்றின் அடிப்படையில்தான் அது முன்னோக்கிச் செல்ல முடியும்.

திராவிட கட்சிகளின் எழுச்சி, காங்கிரஸின் வீழ்ச்சியில் ஆரம்பித்தது. திராவிட கட்சிகளின் வீழ்ச்சிக்கான காலம் நெருங்கிவிட்டது; மக்கள் புதிய அலை கட்சிக்காக ஏங்குகிறார்கள் என சில அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். திராவிட கட்சிகள் சரிவை சந்தித்திருப்பது உண்மைதான். ஆனால் அதுவும் சித்தாந்த அடிப்படையில். இந்த இரண்டு கட்சிகளையும் திட்டிக்கொண்டே, ரெண்டில் ஒன்றைத் தொடுகிற மனப்பான்மையில்தான் வெகுமக்கள் இருக்கிறார்கள். திடீர் என்று ஒரு கட்சி தோன்றி தமிழ் தேசியத்தையோ, மதவாதத்தையோ முன்வைத்து ஆட்சியை பிடித்துவிட முடியும் என்கிற கனவு இன்றைய தமிழக சூழலில் கனவாகத்தான் இருக்க முடியும்.

தலைமுறைகளும் வாழ்க்கைச் சூழலும் மாறிக்கொண்டிருக்கும் சூழலில் பழையன கழிதலும் புதியன வருதலும் இயல்பே. இருக்கிற கட்சிகள் தங்களை புதுப்பித்துக் கொள்ளாத வரை, புதிய கட்சிகளின் எழுச்சி நடந்தே தீரும். அது எதன் அடிப்படையில் அமையும் என்பது காலத்தின் புதிர்!

பின்குறிப்பு: மாற்றம் முன்னேற்றத்தை முன்னெடுக்கும் பாமகவும் கூட்டணி ஆட்சிக்கு அடித்தளம் அமைக்கப்போவதாகக் கூறும் மதிமுகவும் விடுதலை சிறுத்தைகளும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள்.

தினச்செய்தி நாளிதழுக்காக எழுதியது.

வேட்பாளர் நேர்காணல் என்பது ஏமாற்று வித்தையா?

இன்னும் கூட்டணி குழப்பமே முடிவுக்கு வரவில்லை; அதற்குள் சில கட்சிகள் மும்முரமாக வேட்பாளர் விண்ணப்பங்களை விநியோகித்து, நேர்காணலையும் நடத்த ஆரம்பித்துள்ளன. மேலோட்டமாகப் பார்த்தால், உள்கட்சி ஜனநாயகம் தழைத்தோங்குவதாகப் பார்க்கலாம். தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் தாமாகவே முன்வந்து விருப்பத்தை தெரிவிப்பதும் அவர் தகுதியான வேட்பாளர்தானா என கட்சித் தலைமை முடிவெடுத்து அவரை கட்சியின் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிட வைப்பதும் பாராட்டப் பட வேண்டிய நடைமுறைகள்தான். உண்மையில் அப்படித்தானா?
பெரிய கட்சிகள் முதல் இப்போது தொடங்கிய கட்சிகள் வரை வேட்பாளர் விண்ணப்பிக்கும்போது பொதுத் தொகுதிகளுக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் தனித் தொகுதிகளுக்கு ரூ. 2500 முதல் ரூ. 15 ஆயிரம் வரையிலும் செலுத்த வேண்டும் என நிர்ணயித்திருக்கிறார்கள்.
ஒரு தொகுதியில் 20 பேர் போட்டியிட விண்ணப்பித்து, அவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் மற்றவர்களின் பணம் திரும்ப அளிக்கப்படமாட்டாது. போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருக்கும் தொகுதி, கூட்டணி கட்சிக்குப் போகும்பட்சத்தில் மட்டுமே, விண்ணப்பித்தவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும். இதை பொருட்களை விற்கும் நிறுவனங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று அறிவிப்பார்களே அதுபோல, கட்சிகளும் முன்பே சொல்லிவிடுகின்றன.
இது என்ன மோசடியாக இருக்கிறதே? என்று கோபப்படுவர்களுக்கு கட்சிகள் சொல்லும் விளக்கம், ‘தேர்தல் செலவுகளை கட்சி தானே செய்கிறது; அதை கட்சிக்கு அளிக்கும் தேர்தல் நிதியாகத்தான் கருத வேண்டும்’. அப்படியென்றால் தேர்தல் நிதி வசூல் என்ற பெயரிலேயே ஒன்று திரட்டப்படுகிறது அது என்ன? திராவிட கட்சிகள் உருவாக்கிவைத்திருக்கும் கட்சி நிதி கொள்ளை வழிகளில் இதுவும் ஒன்று. அதை நாங்கள் மாற்று என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகளும் பின்பாற்றுகின்றன என்பதை அழுத்திச் சொல்ல வேண்டும்.
சரி, இடதுசாரிகளின் வேட்பாளர் தேர்வு ஜனநாயக முறையில் நடக்கிறதா என்று பார்ப்போம். இடதுசாரி கட்சிகளில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வேண்டுமென்றால், அவர் படிப்படியாக கட்சியில் உயர்ந்தவராக இருக்க வேண்டும். போராட்டங்களில் பங்கேற்றவராக, மக்களின் செல்வாக்கைப் பெற்றவராக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாவட்ட பிரதிநிதிகள் தயாரித்துக் கொடுக்கும் முதல் கட்ட பெயர் பட்டியலை உயர்மட்டக் குழு இறுது செய்யும். வேட்பாளர் படிவ விண்ணப்பம், நேர்காணல் இந்த வழிமுறையெல்லாம் இல்லை. ஆனால் இவர்கள் மீதும் வேட்பாளர்களை முன்கூட்டியே தேர்வு செய்துவிட்டு ஒப்புக்கு மாவட்ட பிரநிதிகளிடம் பரிந்துரை கேட்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு.
சிறு கட்சிகளைப் பொறுத்தவரை  எத்தனை தொகுதியில் போட்டியிடப் போகிறோம் என்பதே தெரியாத நிலையில், 234 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தப்படுகிறது. எதன் அடிப்படையில் இப்படியான முடிவு என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
ஆக, தெளிவாகப் புரிவது இவைதான். பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள், திராவிட கட்சிகள், கம்யூனிஸ்டுகள் என எல்லோரும் வேட்பாளர் தேர்வை மேலிடத்தின் முடிவுக்கே விட்டுவிட்டு, வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் நேர்காணல் என ஜனநாயக சக்திகளாக வேஷம் கட்டுகின்றன.

தினச்செய்தி(23-02-2016)நாளிதழில் வெளியானது.

நுகர்வு காதல் என்ன செய்தது?

பிப்ரவரி என்பது காதல் மாதமாக நுகர்வு கலாச்சாரம் உருவாக்கிவிட்டது. இந்த நுகர்வின் வழி இளைஞய வயதுக்கே உரிய பால் உணர்வுகள் புனித பிம்பத்துக்குள் அடைக்கப்பட்ட ‘காதலாக’ நம் இளைஞர்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புனித பிம்பத்தின் பெயரால் தற்கொலைகளும் கொலைகளும் நடந்தேறிவிடுகின்றன.  இந்தப் புனித காதலின் பெயரால்தான் ஆதிகாலம் முதல் பெண்கள் சுரண்டப்பட்டு வருகிறார்கள். தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்ல, மனித சமூகம் அனைத்திலும் புனிதப்படுத்தப்பட்ட காதல் பெண்களைத்தான் பலியிட்டுருக்கிறது. ஆசிட் வீச்சுகளும் கழுத்தழுக்கும் மரணங்களும் பெண்களைத்தான் குறிவைக்கின்றன.

‘தாஜ்மஹாலை ஒரு பெண் மீதான ஆணின் காதல்தான் கட்டவைத்தது; ஆனால் ஏங்கேயாவது ஒரு பெண், ஆணுக்காக எதையாவது கட்டியிருப்பாளா?’ என்று பொதுபுத்தி இன்றைய வாட்ஸப் வரை, காதல் உணர்வு என்னமோ ஆண்களுக்கானது என்பதாக உருகிக் கொண்டிருக்கிறது. தொன்மையான இலக்கியம் முதல் நேற்று வந்த சினிமா வரை சமூகத்தை பிரதிபலிக்கும் ஊடகங்கள் அத்தனையிலும் ஆணுக்குத்தான் காதல் உரியதென்றும் ஆண் தான் பெண்ணிடம் காதலைச் சொல்பவனாகவும் சித்தரிக்கின்றன. இதில், விதிவிலக்குகள் இருந்தாலும் பொதுவாக காதல் செய்கிற உரிமையே பெண்களுக்கு இல்லை என்கிறபோது, தன் காதலனுக்காக கட்டடம் எழுப்பும் உரிமை எங்கிருந்து பெண்களுக்கு கிடைத்திருக்கும்? கிடைக்கும்?

இதே பின்னணியை சற்றே சாதிய கண்ணோட்டத்துடன் காதல் எப்படி பார்க்கப்படுகிறது என்று பார்க்கலாம். இன்னமும் கிராமங்களில் ஒரு ஆதிக்க சாதி ஆண், ஒரு தலித் பெண்ணை காதல் வயப்பட்டு சட்டப்படி திருமணம் செய்தாலுமே எப்படி சொல்வார்கள் தெரியுமா? ‘அவளைச் சேர்த்துக்கொண்டிருக்கிறான்’ என்றுதான். அதாவது ஆதிக்க சாதி ஆணுக்கு ‘கீழ்சாதி’ பெண்ணைச் சேர்த்துக் கொள்ளும் உரிமையும் வேண்டாம் என்றால் ‘கழித்துவிட்டு’ தங்கள் சாதிப் பெண்ணைத் ‘திருமணம்’ செய்துகொள்ளும் உரிமையும் உண்டு. இதே ஆதிக்க சாதி பெண், தலித் ஆணைக் காதலித்தாலோ திருமணம் செய்துகொண்டாலோ ஒன்று அவள் ஆணவக் கொலை செய்யப்படுவாள்; இல்லையேல் அந்த ஆண் கொல்லப்படுவான்.

விரும்பிய ஆணை, விரும்பிய பெண்ணை காதலித்தால் அவர்களை சாதியின் பெயரால் வதைப்பதும் கொல்வதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதே காலக்கட்டத்தில்தான் ‘காதல்’ என்கிற புனிதம் ஒருபக்கம் வளர்ந்துகொண்டிருக்கிறது.  பன்னாட்டு வியாபாரிகளும் உள்நாட்டு வியாபாரிகளும் வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த புனித காதலால் சமூகத்துக்கு இம்மியளவும் அளவும் பயனில்லை என்பதே நிதர்சன உண்மை.

இயற்கையான பால் உணர்வுகளுக்கு புனித பிம்பம் கொடுக்காமல், அறம் சார்ந்து அதை அணுகும்போது மட்டுமே காதல் என்பது மதிப்பிற்குரியதாக இருக்கும். சாதியை தூக்கிப் போடும் துணிச்சலும் காதலில் பெண்ணுக்குரிய சுதந்திரம்(காதலை ஏற்கவோ மறுக்கவோ, சொல்லவோ) நிலைநாட்டப்படுவதும் காதலின் அறமாக இங்கே கொள்ளப்பட வேண்டும்.  இதை முன்வைத்து இன்றைய இளைஞர்கள்  ‘காதல்’ குறித்த உரையாடலைத் தொடங்க வேண்டும்.

இனிய உதயம் இதழுக்காக எழுதியது.

மோடி ஃபார்முலாவில் சமூக ஊடகங்களில் தமிழகக் கட்சிகளின் பிரச்சாரம்!

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார உத்தியில் தெரு முனைக் கூட்டங்கள் எல்லாம் பழங்கதைகளாகிக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்களில் பிரச்சாரம்தான் இனி தங்களுடைய வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போகின்றன என்பதை தமிழக கட்சிகளும் உணர ஆரம்பித்துவிட்டன. 2014-ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலின் போது இந்த டிரெண்டை இந்தியாவில் தொடங்கி வைத்த பெருமைக் குரியவர் நரேந்திர மோடி.  பாஜக பெரும்பான்மை இடங்களைப் பெற சமூக ஊடங்களின் பங்களிப்பு முக்கியமானது. மோடியின் வெற்றிக்காக சமூக ஊடக உழைக்க வைத்தது ஒரு நிறுவனம். மேலை நாடுகளில் பிரபலமான தகவல் தொடர்பு நிறுவனங்கள் நடத்தி தரும் தேர்தல் போல, மோடியும் நடத்திக் காட்டினார். அதில் வெற்றியும் பெற்றார்.

மோடி ஃபார்முலா என்று உருவாகிவிட்ட அதைத்தான் இந்திய அரசியல்வாதிகள் பலரும் பின்பற்ற நினைக்கிறார்கள். நிதிஷ்-லாலு-காங்கிரஸின் மெகா கூட்டணி வெற்றி பெற கிஷோர் என்ற தகவல் தொடர்பு நிபுணரின் உதவி முக்கியமானது என்று ஆங்கில ஊடகங்கள் எழுதின. கிஷோர் மோடிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தவர். இந்தியாவில் இந்த ஆண்டு வரவிருக்கிற தேர்தலுக்காக கிஷோரை வலைவீசி பல மாநில அரசியல்வாதிகள் காத்துக்கொண்டிருக்கிறார்களாம். அதில், திமுகவும் அதிமுகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டின் தேர்தலின் வெற்றி தோல்வியை இளம் வாக்காளர்கள்தான் நிர்ணயிக்க இருக்கிறார்கள் என்பதால் தமிழகத்தின் கட்சிகள் அவர்களை குறிவைத்து சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கின்றன. இந்த பிரச்சாரத்தை முதலில் தொடங்கியது பாமக. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த கையோடு, சமூக ஊடக பிரச்சாரத்தையும் தொடங்கியது பாமக. இந்த பிரச்சாரத்தை கவனித்துக் கொள்ள தனி பிரிவே இருக்கிறது.

அடுத்து, திமுக ’நமக்கு நாமே’ பயணத்தை மு.க. ஸ்டாலின் தொடங்கிய வேளையில் தனி வலைத்தளம், ஃபேஸ்புக், ட்விட்டரில் ஸ்டாலின் பயணம் பற்றிய தகவல்கள் உடனடியாக பதியப்பட்டன. திமுக தலைவர் கருணாநிதிக்கென்றும் தனி வலைத்தளம் திறக்கப்பட்டது. அதிமுகவும் தன்னுடைய சமூக ஊடக பிரச்சாரத்துக்கென்று தனி பிரிவை அமைத்திருக்கிறது. அதிமுக அரசின் விடியோக்கள், ஆடியோக்கள் என வெளியிட்டு தாங்களும் கடமையாற்றுகிறார்கள்.

மக்கள் நலக் கூட்டணி சளைத்ததா என்ன? மதிமுகவுக்கு என்று தனி வலைத்தளம் இருக்கிறது. மக்கள் நலக் கூட்டணிக்கு பிரத்யேகமாக வலைத்தளம் அமைத்திருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், ஃபேஸ்புக்கில் ஆர்வமாக பங்கெடுக்கிறார். இவர் திங்கள்கிழமை பதிவிட்ட மக்கள் நலக் கூட்டணி செல்ஃபி வைரல் ஆனது! மதுரை மாநாட்டுக்குப் பிறகு, மக்கள் நலக் கூட்டணிக்கு மவுசு கூடியிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதற்கு முன்பு வரை ஜி. ராமகிருஷ்ணன் பக்கத்தை கட்சித் தோழர்கள் மட்டும்தான் பார்த்து வந்தார்கள். இன்று அவர் போடும் ஒவ்வொரு பதிவும் பலரால் பகிரப்படுகிறது.

இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக உள்ள அரசியல்வாதி கருணாநிதிதான். ஃபேஸ்புக்கில் தினமும் பதிவிடக்கூடியவராகவும் அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்பவராகவும் கருணாநிதி இருக்கிறார்.

இளைஞர்களுக்காக அரசியல்வாதிகளும் தங்களை நவீனப்படுத்திக் கொண்டது சரிதான். ஆனால், கொள்கைகள் இளைஞர்களைக் கவரும் விதமாக இருக்க வேண்டுமே!

தினச்செய்தி(10-02-2016) நாளிதழில் வெளியானது.

போராட்டங்களை கொச்சைப்படுத்துகிறதா நியூஸ் 7 தமிழ்?

THE TIMES TAMIL

போராட்டம் என்பது மக்கள் குறைகளை அரசுக்கு சுட்டிக்காட்டும் ஒரு வடிவம். அரசின் எல்லா அதிகாரக் கதவுகளையும் தட்டிவிட்டுத்தான் இறுதியாகப் போராட்டத்தை மக்கள் கையில் எடுக்கிறார்கள். இவ்வகையில் ஊடகங்கள் போராட்டங்களை இன்னும் விரிவாக அனைத்து தரப்பினரை(அரசு தரப்பு உள்பட)யும் சேரும் பணிகளைச் செய்பவை. செய்ய வேண்டும். அதுதான் ஜனநாயக அமைப்பை தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறையாக இருக்கும். அதைவிடுத்து “தினந்தோறும் 20 போராட்டங்கள்: நிம்மதி இழந்து தவிக்கும் போலீசார்” என்று தலைப்பிட்டு செய்தி எழுதுவது போராட்டங்களை மழுங்கடித்து, போராட்டங்களை விரும்பாத சர்வாதிகாரத் தன்மையை நிலைநாட்டுவதற்கு உதவி புரிவததாகத்தான் தோன்றும்.

போராட்டத்தைக் கண்காணிப்பதும், அன்றாட நடவடிக்கைகளை பாதிக்காமல் போராட்டத்தை கட்டுப்படுத்துவதுதான் காவல்துறையின் பணி. அரசுக்கே போராட்டங்களை முடக்கும் எண்ணம் இல்லை எனும்போது, ஊடகங்கள் ஏன் போராட்டங்கள் என்றால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்ற கோணத்திலே செய்தி வெளியிடுவது ஏன்?

பொது மக்கள் என்பவர் யார்? தண்ணீர் வரவில்லை என்னும் போது அதிகாரத்தின் அனைத்து கதவுகளையும் தட்டிவிட்டு இறுதியாக சாலையில் இறங்கி போராடுகிறார்கள். இப்படிப் போராடுகிறவர்கள் மக்கள் இல்லையா? சாலையில் இந்தப் போராட்டத்தால் அதிகபட்சம் அரைமணி நேரத்தை இழக்கும் பொது மக்களின் துயரம்தான் இங்கே முக்கியமானதா? அல்லது மாதக் கணக்கில் வருடக்கணக்கில் பாதிக்கப்பட்டு போராட்டத்தில் இறங்கியிருக்கும் மக்களின் துயரம் முக்கியமானதா?

நியூஸ் 7 தமிழ் பல நல்ல விவாதங்களை முன்னெடுக்கிறது. ஆனால், போராட்டங்களைக் கொச்சைப் படுத்தும் இத்தகைய செய்திகள் யாரைத் திருப்திப் படுத்த என்கிற…

View original post 139 more words