நாங்கள் எந்த ஊடக அறத்தோடும் செயல்படவில்லை..!

 
ஒரு ஊடகத்துக்கு எல்லாமே செய்திதான்; வெல்வெட் கேக் செய்தி, செய்தியாகட்டும், பத்திரிகையாளர் சுந்தரவல்லி தொடர்பான செய்தியாகட்டும். சமூக ஊடகங்களில் நடப்பதை அப்படியே தருகிறோம். சில நேரங்களில் எடிட் செய்கிறோம்.
 
தமிழ் ஊடகங்களில் சாதி பெயரைச் சொல்லக்கூடாது, சில சொற்களை சொல்லக்கூடாது என்று எழுதப்படாத அறம் இருக்கிறது. ஆங்கில ஊடங்களில் அப்படி இல்லை. ஒரே ஊடகத்தின் தமிழ் பதிப்பு வேறு மாதிரியும் ஆங்கில பதிப்பு வேறு மாதிரி செய்தி வரும். அப்போ யார் அறத்தை மீறுகிறார்கள் என்கிற கேள்வியை யாரும் எழுப்புவதில்லை.
 
தினத்தந்தி தமிழகத்தின் நம்பர் ஒன் நாளிதழ், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் செய்தியை நீதிமன்ற அறிவுறுத்தலுக்குப் பிறகு கற்பழிப்பு என்ற சொல் போட்டுதான் எழுதுகிறது. அவர்கள் மீது எந்த கேள்விக்கணையும் பாய்வதில்லை. அவர்கள் ஊடக அறம் குறித்து கைடு போட்டவர்கள்.
 
ஒரு அத்துமீறலை, சமூக ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்துகிற பதிவுகளில் உள்ள வார்த்தைகளை தாக்கத்திற்காக அப்படியே பயன்படுத்தினால் அதுகுறித்து நண்பர்கள் இதெல்லாம் அறமா என கேள்வி எழுப்புகிறார்கள்.
 
தனியார் பள்ளிகள் தனியார் கல்லூரி, தனியார் மருத்துவமனை என எழுதி இந்தத் தனியார்களின் குற்றங்களை மூடிமறைக்க சதா ஊடக அறம் பேசித் திரியும் இவர்கள்தான் எம்மைப் போன்றவர்களுக்கு அற வகுப்பு எடுக்கிறார்கள்.
 
எங்களைப் பொறுத்தவரை இந்தக் கோடுகளை உடைப்பதையே அறமாக வைத்திருக்கிறோம். அதனால் வருங்காலத்திலும் இப்படியெல்லாமா தலைப்பு வைப்பாங்க எனும்படியான தலைப்புகளோடும் இதெல்லாம் செய்தியாக்கலாமா என்று உங்கள் ஊடக அறைகளில் விவாதம் நடத்தும்படியான பதிவுகளையும் இடுவோம் என்பதை அறிவித்துக் கொள்கிறோம்.
 
எனிவே லவ் யூ ஃபிரெண்ட்ஸ்..நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை! 🙂

கருத்து கணிப்புகள் நம்பக்கூடியவையா?

தேர்தல் காலத்தில் கருத்து கணிப்புகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்துள்ளன. தங்களுக்கு சாதகமாக இருந்தால் கொண்டாடுவதும், எதிராக இருந்தால் வெளியிட்ட ஊடகங்கள் மீது சேற்றை வாரிப் பூசுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. கருத்து கணிப்புகள் நடைபெற இருக்கும் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை செலுத்தப் போகின்றன? கருத்து கணிப்புகள் மெய்யாகின்றனவா? என்பதை பேசும் முன் கருத்து கணிப்பு குறித்து இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றின் சமீபத்திய அனுபவத்தைப் பார்ப்போம்.
“உலகளாவிய அளவில் கருத்து கணிப்புகள் பொய்த்து வருகின்றன. கிரீஸ், துருக்கி, பிரிட்டன் என சமீபத்தில் தேர்தல் நடந்த நாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் தவறாகியிருக்கின்றன. கருத்து கணிப்பும் தேர்தல் முடிவும் தொடர்பில்லாமல் வந்திருக்கிறது. நாங்கள் செய்த கருத்து கணிப்பும் இப்படியான எதிர் முடிவை எட்டியிருக்கிறது. அதற்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம்” என்று அறிவித்தார் இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர்.
அவர் வேறு யாருமல்ல, என் டி டீவியின் பிரணாய் ராய். அவர் மன்னிப்புக் கேட்டது, சென்ற ஆண்டு நடந்த பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் கருத்து கணிப்பும் முடிவும் முற்றிலும் வேறாக இருந்தது என்ற காரணத்துக்காக.
பீகார் தேர்தல் மட்டுமல்ல, கடந்த மக்களவைத் தேர்தல் கருத்து கணிப்புகளும் கூட முடிவுகளுடன் ஒப்பிடும் போது முரண்பட்டவையாகவே இருந்தன.  பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் சொல்லவில்லை. பாஜகவை தீவிரமாக ஆதரித்த ஒரு சில ஊடகங்களும் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்றுதான் கூறின.
இந்தப் பின்னணியில்தான் நாம் வரவிருக்கிற தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் கணிப்புகளையும் பார்க்க வேண்டும். சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி, மூன்று செய்தித் தொலைக்காட்சிகளும் அரசியல் வார இதழ்களும் சில ஊடக அமைப்புகளும் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒருவகையில் மாறுபடுகின்றன. எல்லா கருத்து கணிப்புகளுக்கும் உள்நோக்கம் இருக்கிறது என குற்றம்சாட்ட முடியாது. அதேவகையில் எல்லா கருத்து கணிப்புகளும் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்றும் சொல்லிவிட முடியாது.
கருத்து கணிப்புகளை வெளியிடும் நபர்களின் நிறுவனங்களின் பின்னணிகளை மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே, உண்மையில்லாத ஒன்றைச் சொன்னால், எளிதாக அவற்றை மக்கள் நிராகரித்துவிடுவார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மக்களின் நம்பகத்தன்மையை இழப்பார்கள்.
கருத்து கணிப்புகளை வெளியிடுபவர்களின் பின்னணி வெளிப்பட்டாலும் கருத்து கணிப்புகள் என்பவை எதன் அடிப்படையில், எத்தகைய அறிவியல்பூர்வமான நடைமுறைகளில் எடுக்கப்படுகின்றன? கோடிக்கணக்கான வாக்காளர்களின் பிரதிபலிப்புகளாக எப்படி 5 ஆயிரம் பேர் இருப்பார்கள்? எப்போதோ எழுதி வைத்த ஜோதிட கட்டங்களைப் பார்த்து, இன்று பிறந்த குழந்தையின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று சொல்வதுபோலத்தான், இந்தக் கருத்து கணிப்புகளும். உங்கள் மகள் ஐடி படித்து அமெரிக்க போவாள் என்று சொன்ன ஜோதிடத்தை நம்பி ஐடி படிக்க அனுப்பப்பட்ட எத்தனை பேருக்கு குறைந்தபட்சம் உள்நாட்டிலாவது வேலை கிடைத்தது? அதுபோலத்தான் தேர்தல் கருத்து கணிப்புகளும். ஒரு வேளை நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம்.
தேர்தல் முடியும்வரை ஊடகங்கள் தேர்தல் கால சுவாரஸ்யமாக கருத்து கணிப்புகளை வெளியிடும், அவற்றின் சாதக பாதகங்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ளும் கட்சிகள் கூடுதலாக உழைத்தால் வெற்றிக்கனியைப் பறிப்பார்கள். இதில் மக்களுக்கான பயன், நல்ல பொழுதுபோக்கு என்பது மட்டும்தான்!