நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….

நீண்ட நாட்களுக்குப் பிறகு, (சில மாதங்களுக்குப் பிறகு) வலைப்பதிவு  எழுதுகிறேன்.  எப்போதும் எழுதிக்கொண்டே இருப்பதாகவே கருதிக்கொள்வேன். வார்த்தைகளை, வாக்கியங்களை, பதிவுக்கான அல்லது கட்டுரைக்கான தலைப்பை…எழுதுவதற்காக எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பேன்.  காலவோட்டத்தில் அனைத்தும் எழுத்தாவதில்லை. எனக்கு வருத்தம்தான். எழுதிக்கொண்டே இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அல்லது நாமாக உருவாக்கிக்கொள்ள வேண்டும். நான் முயற்சிக்கிறேன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத முனைந்திருக்கும் நான், மகிழ்வான செய்தியை நிச்சயம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஏதோவொரு வகையில் ஒன்றாக பயணிக்கிறோம். என்னுடைய (எங்களுடைய) புதிய முயற்சி குறித்து சொல்ல விரும்புகிறேன். கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாக கைவினைப் பொருட்கள் செய்முறைக்கென பிரத்யேகமாக இதழ் ஒன்றை தொடங்க வேண்டும் என்பது என்னுடைய கனவு.  அதை பெரிய அளவில் செயல்படுத்தும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. அதற்கான முயற்சியிலும் இறங்கவில்லை.

கைவினைப் பொருட்கள் செய்வதில் எனக்கு இருந்த ஆர்வத்தை ‘நான்கு பெண்கள்’ மூலம் வெளியே கொண்டுவந்தேன். கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணனை சந்தித்தேன். யூ ட்யூப்பில் வீடியோவாகவும் நான்கு பெண்கள் தளத்தில் எழுத்திலும் கடந்த மூன்று ஆண்டுகளாக கிட்டத்தட்ட 80க்கும் அதிகமான கைவினைப் பொருட்கள் செய்முறை விளக்கினார் ஜெயஸ்ரீ. நானும் அவருமே கூட கைவினைப் பொருட்களின் செய்முறைக்கென புத்தகங்கள் கொண்டுவருவது குறித்து பேசியிருக்கிறோம். ஆனால் முனைந்து செய்யவில்லை.

2012-ஆம் ஆண்டு என்னுடை முழு நேர பணியை விட்டேன்.  கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு எந்தவித பணியும் இல்லாமல்தான் இருந்தேன். அதன் பிறகு பத்திரிகை துறை சார்ந்து சிறு சிறு வேலைகள். அதிலிருந்து கிடைத்த வருமானம்….போதுமானதாக இல்லையெனினும் எனக்கு அதில் மகிழ்ச்சிதான்.  ஆடம்பர தேவைகளை குறைத்துக்கொண்டேன்.  படோபடங்கள் இல்லாமல் வாழ்வதும் சிறப்பானதாகவே இருக்கிறது.  உறவினர்கள், ஒரே துறையைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள் என என்னைச் சுற்றியுள்ள பலரும் என்னை ஏற இறங்க பார்ப்பது குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால் சில நேரங்களில் இத்தகைய பார்வைகள் வருத்தம் தறுவதையும் நான் மறுக்கவில்லை. இதற்கிடையே என்னுடைய அடிப்படை தேவைகளை, என்னுடைய தேடல்களை பூர்த்தி செய்யும் வகையில் வீடியோக்கள் எடுத்தேன்; இணையத்தில் தொடர்ச்சியாக இயங்கினேன்.

அது எனக்கு பலவற்றையும் கற்றுத்தந்தது. இதுதான் எதிர்காலம் என உணர்ந்த நேரத்தில் அரசியல்-சமூகம்- செய்தி சார்ந்த இணையதளம் நடத்தலாம் என்கிற யோசனையை முன்வைத்தார் கவிதா. சில மாதங்கள் ஒரு இணையதளத்தில் பணியாற்றிவிட்டு, திரும்பியிருந்த எனக்கு அது சரியென பட்டது. த டைம்ஸ் தமிழ் இணையதளத்தை தொடங்கினோம். ஓராண்டு முடிந்திருக்கிற நிலையில் எங்களுக்கு அது மிகப் பெரும் நம்பிக்கையை கொடுத்தது. தளம் பரவலாக அறியப்பட்டது, சிலர் தூற்றினார்கள், பலர் பாராட்டினார்கள்.  த டைம்ஸ் தமிழ் எதிர்காலத்தில்  பல லட்சம் தமிழர்கள் விரும்பும் இணையதளமாக மாறும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையுண்டு. எங்களுக்கு பல லட்சம் பேரை சென்றடைவதற்கான ஃபார்மூலா தெரியும். எங்களுக்கு பொருளாதார பலமில்லை. அதனாலேயே பல முயற்சிகளை செய்ய முடியவில்லை.

தற்போதைய தளத்தை மேம்படுத்தி முழுமையான இணையதளமாக மாற்ற வேண்டும் என்பது ஓராண்டு முடிவில் நாங்கள் செய்ய நினைத்திருந்த திட்டம். அதற்காக சேமித்திருந்த பணம், திடீர் சிக்கல்களால் காணாமல் போனது. இதற்கிடையே சில நண்பர்கள் பண உதவி செய்ய முன்வந்தார்கள். ஒரு நண்பர் வேண்டாம் என மறுத்தும் ரூ. 5 ஆயிரத்தும் மேல் அனுப்பி வைத்தார்.  பண உதவி கேட்பது எனக்கு மிகப் பெரும் சங்கடத்துக்குரிய விடயம். இதுதான் என்னுடைய முழு நேர பணி, என்னால் எனக்கான கூலியை சம்பாதித்துக்கொள்ள முடியும்…இதைதான் சேவையாகவெல்லாம் செய்யவில்லை எனும்போது உதவுங்கள் எனக் கேட்பது சரியாக இருக்காது என்பது என் எண்ணம். விளம்பரங்கள் வேண்டாம் என்கிற எண்ணம் முதலில் இருந்தது. ஆனால் நான் இதை தொழிலாகத்தான் செய்ய விரும்புகிறேன்…சாரிட்டியாகவோ, ஒரு இயக்கமாகவோ அல்ல!  ஆனால், எனக்கென்று, எங்களுக்கென்று சில அறங்களை வைத்துள்ளோம். அந்த வகையில் நாங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட விரும்புகிறோம்.

இத்தகையதொரு சூழ்நிலையில், ‘செய்து பாருங்கள்’ இதழ் ஆரம்பிக்கும் எண்ணம் துளிர்விட்டது. அதை நீண்ட நாளுக்கு நீர் ஊற்றி நீர் ஊற்றி வேர் அழுக வைக்க விரும்பவில்லை. உடனடியாக செயலில் இறங்கினேன்.  என்னால்  செய்ய முடியும் என நம்பிக்கை ஏற்படுத்தியது த டைம்ஸ் தமிழ்.  அதுபோல கவிதாவின் நம்பிக்கை வார்த்தைகளும்.  என்னிடமிருந்த சேமிப்பும் ஜெயஸ்ரீயின் உதவியும் முதல் இதழைக் கொண்டு வர உதவியது. இதோ இதழ் வந்துவிட்டது…

என்னுடைய நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் மிகவும் தீவிரமான அரசியல்-இலக்கிய-சமூக பார்வை கொண்டவர்கள். கைவினைப் பொருட்கள் செய்முறைக்கென இதழை கொண்டிவந்திருப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இதுவும் நந்தினிதான். அதில் எனக்கு பெருமையும்கூட… என்னால் அரசியலையும் எழுத முடியும் சமயல் குறிப்பையும் செய்முறை குறிப்பையும் எழுத முடியும்… நான் ஒரு ப்ராட்டகானிஸ்ட்.

‘செய்து பாருங்கள்’ இதழ் இப்போதைக்கு ஆன் லைன் மூலமாகத்தான் விற்பனை  செய்யவிருக்கிறோம்.  எம்பிராய்டரி, ஃபேப்ரிக் பெயிண்டிங், குரோஷா, சோப் மேக்கிங், சாக்லேட் மேக்கிங், ஃபேஷன் ஜுவல்லரி, ஒரிகாமி என பல பிரிவுகளில் 20க்கும் அதிகமான கைவினைப் பொருட்கள் செய்முறை குறிப்புகள் விளக்கமாக தரப்பட்டுள்ளது. இந்த துறை சார்ந்தவ விருப்பமுள்ளவர்களை நிச்சயம் இதழ் ஏமாற்றாது. இதழின் விலை ரூ. 150. காலாண்டிதழ்.

இதழ் தேவைப்படுகிறவர்கள்
S. Nandhini
A/C NO: 602263423 (Indian Bank)
IFS Code IDIB000K071
என்ற கணக்கில் ரூ. 150ஐச் செலுத்தி, mvnandhini84@gmail.com மற்றும் contactt3life@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம்.  நேரடியாக வாசகர்களுக்கு இதழை தருவதால் தபால் செலவை நாங்களே ஏற்கிறோம்.
எங்களுக்கு நம்பிக்கையளியுங்கள், அதே நம்பிக்கையை உங்களுக்கும் தருகிறோம்…!