குங்குமம் பேட்டி

Kunkumam interview about our web portal www.thetimestamil.com.

இந்த பேட்டி, கடந்த ஜனவரி மாதம் வந்தது. அப்போது எங்கள் வீட்டில் இழவு விழுந்த நேரம் பகிரும் மனநிலை இல்லை. கவிதா இல்லாமல் இணைய தளம் தொடங்கும் யோசனை விரைவடைந்திருக்காது. கவிதாவின் ஊக்கமும் பங்களிப்பும் என்னை உற்சாகமாக இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. குங்குமம் ஆசிரியர் கே.என். சிவராமன், குமுதம் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகிக்குப் பிறகு என்னை ஊக்குவித்து, வாய்ப்பளித்த நல் உள்ளம் கொண்டவர். எங்களுடைய இந்த முயற்சிக்கு நான் பணியாற்றி, எனக்கு பெயர் பெற்றுக்கொடுத்த அதே பத்திரிகையில் பேட்டி வெளியிட்டு இப்போதும் ஊக்கமளித்திருக்கிறார். இவர்களைப் போல என்னைச் சுற்றியிருக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை சொல்கிறேன். காலம் தாழ்ந்தாலும் நன்றிக்கடனை சொல்லிவிடவேண்டும்.

Gone Girl

இரண்டு மாத அலுவலக குப்பைகளை நேற்று எதிர்பாராத விதமாக சுத்தம் செய்ய நேரிட்டது. இரவு 10.30 வரை இடைவிட்டு இடைவிட்டு பணி. அயற்சியில் தூக்கம் வரும் என்று பார்த்தால் ம்ஹூம்.. சேனல் மாற்றிக்கொண்டிருந்தபோது Gone Girl படம் துவங்கியிருந்தது. கேள்விப்பட்ட படம். டேவிட் ஃபின்சர் இயக்கியது. The Social Network, The Girl with the Dragon Tattoo படங்களின் இயக்குநர். எனக்கு இரண்டு படங்களும் பிடித்திருந்தது. Gone Girl ஐ அவருக்காகப் பார்த்தேன்.

ஐந்து வருட திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கும் இடையே விரிசல். மனைவி ஒரு நாள் காணாமல் போகிறார். செயவதறியாது தவிக்கும் கணவர் அவராகவே காவலர்களிடம் செல்கிறார். துப்பறிவாளர்கள் விசாரிக்கிறார்கள். கணவரே மனைவியை கொன்றிருக்கலாம் என்கிற கோணத்தில் அவர்களுக்கு துப்பு கிடைக்கிறது. மனைவி ஒரு எழுத்தாளர். திருமணத்துக்கு முன் நிறைய எழுதிக்கொண்டிருந்தவர். சிறார் இலக்கியத்தில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர். திருமணத்துக்குப் பிறகு, நிறைய படிக்கிறார்; எழுதவில்லை. ஆனால் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து எழுதி வைக்கிறார். ஐந்தாண்டு காலத்தில் தங்களுக்குள் இருந்த காதல் எப்படி மெல்ல மெல்ல காணாமல் போகிறது என்பதை எழுதுகிறார். அந்த டைரியை, கணவரின் அப்பாவுக்குச் சொந்தமான வீட்டில் ஒரு ரகசிய இடத்தில் துப்பறிவாளர்கள் கண்டெடுக்கிறார்கள். தன்னை கணவர் எப்போது வேண்டுமானாலும் கொல்லலாம் என எழுதியதோடு டைரியின் கடைசி குறிப்பு முடிகிறது. டைரியை ஆதாரமாகக் கொண்டு கணவர் கைது செய்யப்படுகிறார்.

இதற்கிடையே கணவர் தன் மாணவி ஒருத்தியுடன் ரகசிய உறவில் இருப்பதும் அம்பலமாகிறது. தொலைக்காட்சிகள் கொடூர கணவர் என தீர்ப்பு எழுதுகின்றன. காவல்துறை கொலையான மனைவியின் சடலத்தை தேடிக்கொண்டிருக்க மனைவி, காரில் எங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய சுதந்திரத்தை, செல்வாக்கான வாழ்க்கையை இழக்கக் காரணமாக இருந்தவன், தனக்கு துரோகம் இழைத்தவனுக்கு தான் தக்க தண்டனை கொடுத்துவிட்டதாக சொல்கிறாள் அவள். கணவனை கொலை வழக்கில் சிக்க வைக்க தானே அனைத்து திட்டங்களையும் தீட்டியதையும் நினைத்துப் பார்க்கிறாள். துரோகம் இழைத்த கணவனுக்கு மனைவி கற்பித்த பாடம் என முடிகிறது போல நினைத்தால் படத்தின் ஒருபாதி தான் இது. (டேவிட் ஃபின்சரின் The Girl with the Dragon Tattoo படத்திலும் இப்படி முடிவது போன்று முடிந்து கதை நீளும்)

எந்தவொன்றும் இன்னொரு கோணம் இருக்குமல்லவா? அதுபோல படத்தின் அடுத்த பாதி இன்னொரு கோணத்தின் கதையை சொல்கிறது. இரண்டாம் பாதி விஷுவலாக செதுக்கப்பட்டிருக்கிறது. மனைவியாக நடித்த ரோஸ்மண்ட் பைக்கின் உடல்மொழி, பார்வையாளர்களை ஒன்றி இழுக்க வைக்கக்கூடியது. (சிறந்த நடிகைக்கான ஆஸ்கருக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது) வெகுநேரம் இந்த கதாபாத்திரத்தின் தாக்கம் எனக்குள் இருந்தது.

புனையும் திறனுள்ள ஒரு பெண், எப்படி தன்னை சுற்றியுள்ளவர்களையும் உலகத்தையும் ஒட்டுமொத்தமாக நம்பவைக்க முடிகிறது என்பதே மீதிக்கதை. படத்தை பார்க்கும்போது அது பிடிபடும். அவள் ஏன் அப்படி செய்கிறாள்? குழந்தை பருவத்தை பிடிங்கிக்கொண்ட வளர்ப்பு ஒரு காரணம். தன் சுயத்தை பிடிங்கிக்கொண்டு துரோகம் இழைக்கும் கணவன், மிக இக்கட்டான நிலையிலும் தன்னை வெறும் உடலாகப் பார்க்கும் காதலன் என அந்தப் பெண்ணை தேர்ந்த கிரிமனலாக மாற்றக் காரணங்கள் இருக்கின்றன. இறுதியில் அவள் தனக்கான நீதியை தானே தேடிக்கொள்கிறாள். அவளை சுற்றியுள்ளவர்கள் தண்டனை பெறுகிறார்கள். பார்க்கவேண்டிய படம்தான்!

ஒரு இல்லத்தரசியின் முகநூல் குறிப்பு!

குளிர்ச்சியான மலைப்பிரதேசங்கள், பசுமையான காடுகள், சுழித்து ஓடும் நீரோடைகள் அல்லது நள்ளிரவு அமைதி…தங்களுக்கு கற்பனை வளம் பெருக்கெடுத்தும் ஓடும் சூழல்களாக பிரபல எழுத்தாளர்கள் நேர்காணலில் சொல்லிக் கொள்வார்கள். நான் பிரபல எழுத்தாளரும் அல்ல, சொல்லப்போனால் நான்கு வரிகளுக்கு மேல் என் முகநூல் பக்கத்தில் எழுதியதில்லை. ஆனால் எனக்கு பாத்திரங்கள் துலக்கும்போது கற்பனை வளம் பெருக்கெடுத்து ஓடும். ஆம், சமையல் பாத்திரங்கள் தாம்! நான் ஒரு இல்லத்தரசிதானே, ஒரு நாளைக்கு மூன்று வேளை கட்டாயமாக பாத்திரம் துலக்கிவிடுவேன். நடுநடுவே மாமியார் – மாமனார் குடிக்கும் காபி தம்பளர்களை துலக்கி வைப்பேன். காபி தம்பளர்களை சேர்த்து வைத்து கழுவுவது அவர்களுக்குப் பிடிக்காது.

என் கற்பனை வளம் பெருக்கெடுக்கும் விஷயத்தை சொல்கிறேன். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பாத்திரங்களை துலக்க செலவிடுவேன். மற்ற பெண்களைப் போலத்தான் திருமணம் ஆகும்வரை பாத்திரங்களை துலக்கியதில்லை. திருமணத்திற்குப் பிறகு, சமைப்பதும் துலக்குவது துவைப்பதும் கட்டாயமாக்கப்பட்டது. இந்திய குடும்ப சாசனத்தில் பெண்கள் கட்டாயம் செய்யவேண்டிய கடமைகள் இவை. வாரத்தின் ஏழு நாட்களும் மாதத்தில் 30 நாட்களும் வருடத்தின் 365 நாட்களும் செய்ய வேண்டிய கடமை இது. திருமணமான 15 ஆண்டுகளில் அம்மா வீட்டுக்குச் சென்ற நாட்களைத் தவிர, ஓயாமல் இந்தக் கடமையைச் செய்துகொண்டிருக்கிறேன். ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் ஓய்வு கிடைக்குமே என்றெல்லாம் சலுகை எதிர்பார்க்க முடியாது. உடல்நலன் தேறியவுடன் வேலை இருமடங்காகி இருக்கும். சுயகழிவிரக்கும் கொள்கிறோனோ? இல்லையில்லை, பணிக்கு வெளியே செல்லும் கணவருக்கு பொருளாதார ரீதியாக உதவுகிறேன். பாத்திரம் துலக்க குறைந்தபட்சம் ரூ. ஆயிரம் சம்பளம் தரவேண்டியிருக்கும். பெருநகர வாழ்க்கையில் கூடுதல் சுமைதான். வீட்டில் சும்மா தானே இருக்கிறேன், ஏதாவது வேலை செய்ய வேண்டும் இல்லையா?

இப்படி பாத்திரம் துலக்குவதை கடமையாகக் கருதி செய்ய ஆரம்பித்து, அதையே என் கற்பனை வளத்துக்கான திறப்பாக ஆக்கிக் கொண்டிருக்கிறேன். மலைகளுக்கு பயணம் போகத் தேவையில்லை; நதிகளில் கால் நனைத்தபடியே வானத்து மேகங்களை அன்னார்ந்து பார்த்து கற்பனையை தட்டி தட்டி விடவேண்டியதில்லை. பாத்திரங்களில் ஒட்டியுள்ள எண்ணெய் பிசுக்குள்ள குழம்பை வழித்தெடுக்கும்போதே என் கற்பனை வீறுகொண்டு எழுந்துவிடும். குக்கரில் ஒட்டியுள்ள காய்ந்த சோற்று பருக்கைகளை அழுத்தி தேய்க்கும்போது என் கற்பனைக்கான விஷயம் ஒரு நிலையை எட்டியிருக்கும். பாத்திரத்தில் ஒட்டியுள்ள சோப்புக் கரைசலை சலசலக்கும் தண்ணீரில் கழும்போது வார்த்தைகளும் வாக்கியங்களும் வந்து விழும்.

ஆனால், எது குறித்து எழுத நினைத்து வார்த்தைகளை கோர்த்தேனோ அதை எழுதியதில்லை. நான் ஒரு இல்லத்தரசி; எழுத்தாளரில்லை. ஸ்மார்ட் போனில் ‘ஹாய் ஃபிரண்ட்ஸ் குட் மார்னிங்!’ என்று எழுதுவதே அதிகபட்சம். ஆஃப் ட்ரால் நானொரு இல்லத்தரசி. நான் எழுத வேண்டும், எழுத்தாளராகப் போகிறேன் என்று வீட்டில் சொன்னால் ஆவி பிடித்தவளைப் போல என்னைப் பார்ப்பார்கள்.

நான் புத்தகங்கள் படிப்பேன். முகநூலில் பிரபல எழுத்தாளர்களை பின்தொடர்கிறேன். அவர்கள் எல்லோரும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்…நாவல் எழுதுகிறார்கள்; சிறுகதை எழுதுகிறார்கள், கவிதை எழுதுகிறார்கள், கட்டுரை எழுதுகிறார்கள், முகநூலில் எல்லாவற்றைப் பற்றியும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்…அவர்களைப்போல நானும் எழுதிக்குவிக்க வேண்டும். ஒருவேளை நான் ஆணாகப் பிறந்திருந்தால் எழுதிக் குவித்திருப்பேன். என் மனைவி என் இல்லத்துக்கு அரசியாக எல்லாப் பணிகளையும் செய்துகொண்டிருப்பாள். நானும் சுரண்டியிருப்பேன்.

சுரண்டல் என்றதும் சிட்னி போலக்கின் The way we were படத்தின் நாயகி காதாபாத்திரமான கேத்தி நினைவுக்கு வருகிறாள். நான் பார்த்ததிலேயே கம்யூனிஸ்டுகளை உயர்வாகக் காட்டிய படம் இதுதான். நீங்கள் அமேசிங் ஸ்பைடர் மேன் படத்தை பார்த்திருக்கிறீர்களா? அந்தப் படத்தின் முதல் காட்சியில் தோன்றும் ரஷிய வில்லன், காலில் அரிவாள் சுத்தியலை பச்சை குத்தியிருப்பான். சரி..கேத்தியின் கதையை சொல்கிறேன், அவள் ஒரு முற்போக்கான பெண்; கம்யூனிஸ்ட் மாணவர் இயக்கத்தில் செயல்படுகிறவள். நேர் எதிர் கருத்துகளைக் கொண்ட நாயகனை விரும்புகிறாள். தன்னுடைய கொள்கைகளை தூக்கி வைத்துவிட்டு, தன்னை நாயகனுக்குரியவளாகக் காட்ட அவனுடைய துணிகளை துவைத்து சலவை செய்து தருகிறாள். முரண்களுக்கிடையே இருவரும் இணைகிறார்கள்; பிரிகிறார்கள். நாயகன்தான் அவளை, அவளுடைய அரசியல் செயல்பாடுகளுக்காக ஒதுக்குகிறான், துரோகம் இழைக்கிறான். குழந்தையுடன் கேத்தி ஒதுங்கிக்கொள்கிறாள். மறுமணம் செய்துகொண்டு தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடர்கிறாள் கேத்தி. 70களில் வந்த படம். காதல் படம் என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். இது ஒரு பெண்ணின் அரசியல் பற்றிய படம்.

பெண்களுக்கு அரசியல் பிடிக்குமா? என சமீபத்தில் முகநூல் நண்பர் ஒருவர் எழுதியது நினைவுக்கு வருகிறது. பெண்கள் வாக்களிக்க வேண்டுமா என கேட்பதுபோல இருந்தது. எனக்கு அரசியல் பிடிக்கும். கேத்தியைப் போல எனக்கும் அரசியல் நிலைப்பாடு உண்டு. என்னுடைய கணவரின் குடும்பம் தீவிர திமுக விசுவாசிகளைக் கொண்டது. தன்னுடைய இளம் வயதில் திமுக தலைவர் கருணாநிதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் காட்டி பெருமையோடு கதை சொல்வார் என் மாமனார். என் கணவர் எந்த சூழ்நிலையிலும் உதயசூரியனுக்கன்றி வேறெந்த சின்னத்திலும் வாக்களித்ததில்லை என்பார். ஆனால் அவருக்கு அரசியலில் ஒன்றும் தெரியாது. எனக்கு அரசியல் பிடிக்கும், நான் வாக்களிக்க மறுத்தபோது என்னைக் குடும்பமே திட்டிதீர்த்தது.

கேடிவியில் ”ஒரு பொண்ணுன்னா எப்படியிருக்கணும் தெரியுமா?” வசனங்களுடன் ஒளிபரப்பாகும் திரைப்படத்தை கணவரும் இரண்டு மகன்களும் சேர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது நான் அரசியல் விவாதங்களை பார்க்கத் துடிப்பேன். பெரும்பாலும் விளம்பர இடைவெளிகளில் அந்த வாய்ப்பு கிட்டும்.

எப்படியாயினும் நான் ஒரு இல்லதரசி. என்னால் எழுத முடியாது; அரசியல் பேசக்கூடாது. கேத்தியை போல நானும் சமரசம் செய்துகொண்டிருக்கிறேன். கேத்தியிடம் தீர்க்கமான அரசியல் இருந்தது. என்னிடம் என்ன இருக்கிறது என பாத்திரங்களை துலக்கிக்கொண்டே சிந்திக்கிறேன். அழுக்குப் பாத்திரங்களில் சத்தங்களில் கிளர்தெழும் சொற்களாக, வாக்கியங்களாக அவை இருக்கலாம். சொற்களை, வாக்கியங்களை சேகரித்து உருவம் தருவேன். நான் மட்டும் பார்க்கும்படியாக முகநூலில் அந்த உருவத்தை பதிவு செய்வேன். ரகசியமாக அவ்வப்போது படித்துக்கொள்வேன். ஏனெனில் நானொரு இல்லத்தரசி ரகசியங்களை ஒளித்து வைத்து வாழ்பவள்.

பின்குறிப்பு: புனைவில் வரும் அத்தனையும் கற்பனையே. எவரையும் மறைமுகவாகவோ நேரடியாகவோ சுட்டுவன அல்ல.

படம் நன்றி: டிசைன் பப்ளிக் டாட் இன்