தற்கொலை அரசியல்!

எந்தவொரு நாகரிக சமூகமும் ‘தற்கொலை’யை ஆயுதமாக எடுக்காது. தலைவனின் கட்டளைக்காக கண்மூடித்தனமாக கழுத்தறுக்கொள்ளும் காட்டுமிராண்டியின் செயல் ‘தற்கொலை’. வாழ்க்கையை நேர்கொள்ளும் திராணியற்றவர்கள் தற்கொலையை புனிதப்படுத்தும், கொண்டாடும் வேலையை செய்துவருகிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதை விட்டுவிட்டு, அதிமுக எம்பிக்கள் ‘தற்கொலை’ நாடகம் ஆடுகிறார்கள். ஒருகாலத்தில் இந்த தற்கொலை நாடகம், நிஜமாகப்போவதில்லை. உணர்வுகளைத் தூண்டி அப்பாவிகள் எவராவது தற்கொலை செய்துகொள்ள வேண்டும், அதை வைத்து பிண அரசியல் நடத்தக்கூடும் என நான் சந்தேகிக்கிறேன். அப்பட்டமான திசைதிருப்பல் இது.

போதாக்குறைக்கு அய்யாக்கண்ணு, தற்கொலை செய்வோம் என்கிறார். தயவுசெய்து இவர்களை நம்பாதீர்கள். கடந்தகால தற்கொலைகளால் எதுவும் நடந்துவிடவில்லை, தற்கொலையைத் தவிர, பிற அத்தனை வழிகளையும் சிந்தியுங்கள்.

அரசுகள் நம்மை ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஏமாற்றுகிறவர்களிடம் தற்கொலையை ஆயுதமாக பயன்படுத்த முடியுமா? அவர்களிடம் குறைந்தபட்ச இரக்கத்தையாவது பெற முடியுமா? காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்… அவர்களின் தற்கொலைகளுக்கு நீதி கிடைத்துவிட்டதா?

ஏலியன்…இலுமினாட்டி… பாரிசாலன்..

ஹிஸ்டரி சேனலில் ‘ஏன்சியன்ட் ஏலியன்ஸ்’ என்றொரு இலுமினாட்டி நிகழ்ச்சி. மனிதர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை, எல்லாவற்றையும் ஏலியன்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்பதை நிறுவுவதே நிகழ்ச்சியின் நோக்கம்.

நம்மவூர் பாரிசாலன் டைப் ஆட்கள் வளர்ந்த நாடுகளில், பெஸ்ட் செல்லர் புத்தகம் எழுதி விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை பேச விட்டு, 20 நிமிட நிகழ்ச்சி ‘சுவாரஸ்யமாக’ போகும். அத்தனை எபிஸோடுகளையும் பார்த்திருக்கிறேன். எனது பகுத்தறிவை சோதிக்க கிடைத்த நிகழ்ச்சி அது.

இலுமினாட்டிகள் எப்படி உருவாகிறார் என இங்கே படிக்கலாம்…

இரா. முருகவேளின் ‘செம்புலம்’

தமிழ் நாவல்கள் பெரும்பாலும் எடிட் செய்யப்படாமல்தான் வெளியாகின்றன. (சில சமயம் எழுத்துப் பிழைகளைக்கூட பதிப்பகங்கள் திருத்துவதில்லை. 🙂 ) என்னைக் கேட்டால் நிச்சயம் நாவல் எடிட் செய்யப்பட வேண்டும். எழுத்தாளரின் ‘சுயம்’ எப்படி வெளியே வரும்? என்பதெல்லாம் வாசகருக்கு ஒரு பொருட்டே அல்ல. வாசகருக்கு என்ன வேண்டும்? நிச்சயம் நல்லதொரு வாசிப்பனுபவத்தை பெற வேண்டும். அந்த வகையில் எழுத்தாளர் இரா. முருகவேளின் நாவல்களை வாசகர்கள் வரவேற்கிறார்கள் என நினைக்கிறேன். நாவல் மொழி, அவருக்கு சிறப்பாக கைவந்திருக்கிறது என்பதற்கு ‘செம்புலம்’ மீண்டுமொரு உதாரணம். அவர் ஒரு பெஸ்ட் செல்லர் எழுத்தாளர்.

செம்புலம்’ நாவலை கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் வாங்கலாம்.

http://imojo.in/esr4j2

பெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா?

‘த பியானோ டீச்சர்’ குறித்து ஒரு பிரபல(பெயரைச் சொல்ல விரும்பவில்லை) எழுத்தாளர் எழுதிய கட்டுரை ஒன்றை சிறுபத்திரிகையில் படித்திருக்கிறேன். ஒரு ஆண், ஒரு பெண்ணிய படைப்பு குறித்து எழுதினால் எப்படியிருக்கும்? பெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா? அதுவும் இந்திய ஆண்களால்? ஃபெனிமிஸ்ட் ஆண்கள் என எவரும் இங்கே இல்லை… என்னிடம் சண்டைக்கு வரக்கூடாது, ஃபெனிஸ்ட் என சொல்லிக்கொள்கிறவர்கள் தங்களை தாங்களே சீர்தூக்கிப் பார்க்கலாம். விஷயத்திற்கு வருகிறேன். பாலியலை கொண்டாடக்கூடிய படமாக ‘பியானோ டீச்சர்’ குறித்து அந்த எழுத்தாளர் எழுதியிருந்தார். போர்னோகிராபியை கொண்டாடுகிற தாராளவாத பார்வை முற்போக்காளர்கள் பலருக்கும் உண்டு.

ஆனால், இது போர்னோகிராபி அல்ல, அதற்கு எதிரானது என்கிறார் இந்தப் பிரதியை எழுதிய எல்ஃபிரீட் ஜெனிலிக். 2004-ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் பரிசு வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. எனக்கு கூட்டத்தைப் பார்த்தால் பேச்சுவராது(அது ஒரு போபியா) என செய்தி அனுப்பினார். ஆனால் அது மட்டும் காரணமாக இருந்திருக்க முடியாது. எல்ஃபிரீட் தீவிர இடதுசாரி ஆதரவாளர். ஆஸ்திரிய இடதுசாரி கட்சியில் இணைந்து செயல்பட்டவர். அமெரிக்க-இங்கிலாந்து நாடுகளின் படையெடுப்புகளை கடுமையாக விமர்சித்தவர். இவருடைய எழுத்து போர்னோகிராபி என சொல்லி நோபல் விருது தேர்வு குழுவில் இருந்த ஒருவர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேற்குலகின் ஊடகங்கள், தாராளவாத அறிவுஜீவிகள் எல்ஃபிரீட்டை அதிகமாக விமர்சித்திருக்கின்றனர். இவர்கள் சொல்லும் இதே காரணங்கள் தாராளவாத பெண்ணிய எழுத்தாளர்களுக்கு மாறுபடும். இடதுசாரி என்ற காரணத்துக்காகவே எல்ஃபிரீட் விமர்சிக்கப்படுகிறார். பெண்களை முதலாளித்துவ சமூகம், நிலவுடைமை சமூகத்திலிருந்ததைக் காட்டிலும் அதிகமாக சுரண்டிக்கொண்டிருக்கிறது என்பதும் அதற்காக எதிர்வினைகள் எப்படி இருக்கின்றன என்பதுமே எல்ஃபிரீட் எழுத்து.

சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் என பலவடிங்களில் எழுதிவரும் எல்ஃபிரிட்டை நேர்மறையான முறையில் புரிந்துகொள்ள இந்த நேர்காணல் உதவும் என நினைக்கிறேன்.

”என் எழுத்து நிதர்சனத்தின் பேரச்சத்தை வெளிப்படுத்துவது; போர்னோகிராபி அல்ல”: ’த பியானோ டீச்சர்’ நாவலாசிரியர் எல்ஃபீரிட் ஜெலினீக் நேர்காணல்