தத்தளிக்கும் காங்கிரசை கரை சேர்ப்பது யார்?

கடந்த ஒருவாரமாக மகாராஷ்டிரத்தில் அரங்கேறிக்கொண்டிருந்த அரசியல் த்ரில்லர் நாடகம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பதன் மூலம், தாராளவாத ஜனநாயகவாதிகளின் வாழ்த்துக்களை பெற்றுவருகிறது சிவ சேனா என்னும் பாசிச மதவாத, பிரிவினை வாத கட்சி. ஜனநாயகத்தின் யாரும் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்கிற ஃபார்முலா படி, சரத் பவார்தான் இந்த அரசியல் த்ரில்லரின் இயக்குநர் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள். எனில், காங்கிரசின் இடம் என்னவாக உள்ளது என்கிற முக்கியமான கேள்வி எழுகிறது. சிவ சேனாவுக்கு ஆதரவா இல்லையா என்கிற முடிவெடுக்கவோ துணிந்து களத்தில் இறங்கவோ காங்கிரஸ் மேலிடம் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போன நிலையில் பாஜக முந்திக்கொண்டு ஆட்சியமைக்க முயன்றது.

மாலுமி இல்லாத கப்பலைப் போல காங்கிரஸ் இந்திய அரசியல் களத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது என்பதையே மகாராஷ்டிரத்தில் நடந்தவை சுட்டிக்காட்டுகின்றன. பொது நோக்கத்துக்காக இயங்கும் ஒரு அமைப்புக்கு தலைவர் வேண்டும் அல்லது உறுதியான ஒரு சித்தாந்தம் வழிநடத்த வேண்டும். பாஜகவை வலதுசாரி சித்தாந்தம் வழிநடத்துகிறது. கம்யூனிஸ்டுகளை இடதுசாரி சித்தாந்தம் வழிநடத்துகிறது. ஆனால், காங்கிரஸ் தனது சித்தாந்தம் குறித்த தெளிவற்ற நிலையில், ஒரு தலைமையை மட்டுமே நம்பியுள்ளது. அந்தத் தலைமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள காங்கிரசில் யாருமில்லை. அல்லது காங்கிரசின் வாரிசு தலைமை அந்தப் பொறுப்பை மற்றவர்களுக்கு விட்டுத்தர தயாராக இல்லை.

2014-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்த நேரத்தில் அவருக்குத் தெரியாமலேயே காங்கிரசின் இரண்டாம் கட்ட தலைவர்கள் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என அறிவித்தார்கள். காங்கிரஸ் துணை தலைவராகவும் எம்.பி. யாகவும் இருந்த ராகுல் காந்தியை முதன்மைப்படுத்தி 2014-ஆம் ஆண்டின் பிரச்சாரங்கள் இருந்தன. ஆனால், ஐ.மு.கூ. ஆட்சியின் மீது இருந்த பல்வேறு ஊழல் புகார்கள், பாஜக முன்வைத்த ‘வளர்ச்சி’ என்கிற முழக்கம் காரணமாக காங்கிரஸ் வெறும் 44 இடங்களை மட்டுமே வெல்லும் நிலைமைக்குச் சென்றது.

‘மோடி’ அலை காரணமாகவே இந்த வீழ்ச்சி என காங்கிரசார் சொல்லிக்கொண்டார்கள். தோல்விக்கான காரணங்களை கூட்டாகவோ, தனிப்பட்ட முறையிலோ அவர்கள் அலசவில்லை. பதவியில்லை; சற்று ஓய்வெடுக்கலாம் என்கிற மனநிலையே காங்கிரசாரிடம் இருந்தது. இந்த ஓய்வு மனநிலையில், எல்லாம் தலைமை பார்த்துக்கொள்ளும் என ராஜீவ் குடும்பத்திடம் பொறுப்புகளை தள்ளிவிட்டார்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள். சோனியா காந்தி உடல்நிலை காரணங்களால் அரசியலில் முழுமையாக ஈடுபட முடியாத நிலையில், ராகுல் காந்தி தலைவர் பதவியில் அமரவைக்கப்பட்டார்.

ராகுல் காந்தியை அரசியல் வாரிசாக அந்தப் பதவியில் அமர்ந்தாலும், அத்தனை எளிதாக அவருடைய முயற்சிகளை புறம்தள்ளிவிட முடியாது. தங்களுடைய கடந்த கால அரசியல் தவறுகளுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதாகட்டும், மதவாத அரசியலை கடுமையான நிலைப்பாட்டுடன் எதிர்ப்பதாகட்டும் அவர் நேருவிய மதப்பீடுகளை சற்றேனும் உள்வாங்கியவராகத்தான் தெரிந்தார். தன்னளவில் அவர் உறுதியாக இருந்ததுபோல, தன் கட்சியினர் முக்கியமாக இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களுக்கு இந்த உறுதியை வலியுறுத்தவில்லை என்கிற அளவில் ராகுலின் தலைமைப் பண்பு கேள்விக்குறியாகிறது.

உதாரணத்துக்கு, திரிபுரா மாநிலத்தை எடுத்துக்கொள்வோம். இடது முன்னணி 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது காங்கிரஸ். அம்மாநிலத்தில் தனது இருப்பை தக்க வைக்கவோ, ஆட்சியைப் பிடிப்பதற்கோ காங்கிரஸ் மேலிடம் வழிமுறைகளை வகுத்து தந்திருக்க வேண்டும். தனது மாநிலங்களை நழுவவிட்டதைப் போல, திரிபுராவையும் கைகழுவியது காங்கிரசின் டெல்லி மேலிடம். காங்கிரசிலிருந்து திரிணாமூல் காங்கிரசுக்குத் தாவிய எட்டு எம்.எல்.ஏக்கள், 2018 சட்டப் பேரவை தேர்தலுக்கு முன், பாஜக-வில் இணைந்தார்கள். சுவடே இல்லாத பாஜக, ஒரே தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது! காங்கிரஸ் தலைமை மறைமுகமாக அதற்கு உதவியது! 10 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த காங்கிரசின் சுவடுகூட திரிபுராவில் இல்லை.

அதுபோல, சோனியாவுக்கும் – ஜெகன் மோகனுக்கும் – சந்திரசேகரராவுக்குமான ஈகோ யுத்தம் காரணமாக ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் சுவடில்லாமல் அழிந்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். கர்நாடகத்தில் இன்று பாஜக தலைமை ஆள்கிறதென்றால் அதற்குக் காரணமும் விலைபோன காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்தான். சமீபத்திய உதாரணமான மகாராஷ்டிர மாநிலத்தில்கூட இரண்டு தேர்தல்களுக்கு முன்னால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இன்று வெறும் 44 எம்.எல்.ஏக்களுடன் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.

அதாவது, தனிநபராக ராகுல் காந்தி, தாராளவாத ஜனநாயகவாதியாக மதவாதத்தை எதிர்ப்பவராக இருந்தாலும், அதை தனது கட்சியினருக்கு கடத்தும் அளவுக்கும் ஆளுமை உள்ளவராக வளரவில்லை. இதை உணர்ந்ததாலோ என்னவோ தானாகவே 2019 தேர்தல் முடிவுகளை ஏற்று பதவி விலகியிருக்கிறார். தனது போதாமைகளை அவர் உணர்ந்திருக்கலாம். ஆனால், காங்கிரசின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ராஜீவ் குடும்பத்திடமிருந்து தலைமை பொறுப்பை வேறு ஒருவருக்கு போவதை பிரயத்தனத்துடன் தடுத்துக்கொண்டிருக்கிறது. சோனியாவும் ராகுலுமே தங்களுடைய பதவிகளை விட்டுத்தருவதாக வெளிப்படையாக அறிவித்தாலும் அதை செயல்படுத்துவோர் யாரும் இல்லை.

மாநிலங்களில் காங்கிரசின் தலைமை பதவிகளில் பெரும்பாலும் கட்சி தலைவர்களின் வாரிசுகளே அலங்கரிக்கும் நிலையில், டெல்லி தலைமையில் வாரிசு அல்லாதவர்கள் வந்தால், எங்கே தங்களுடைய வாரிசுகளின் பதவிகளும் பறிபோய்விடுமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள். கட்சி எப்படி போனாலும்சரி, நாடு எப்படி போனாலும்சரி நம்முடைய பதவி தப்ப வேண்டும் என்கிற மானப்பான்மை காங்கிரசாரின் பொதுவான குணமாகியுள்ளது.

அண்மையில் மத்திய பிரதேச காங்கிரசின் வாரிசு இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்திய, தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி குறிப்பில் காங்கிரஸ்காரர் என்ற பதத்தை நீக்கினார். முன்னதாக, பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறியிருந்த நிலையில், இது பரபரப்பாக பேசப்பட்டது. பாஜகவுக்கு தாவப்போகிறாரா என்றெல்லாம் வதந்திகள் வந்த நிலையில், வதந்திகளைவிட அவர் அளித்த விளக்கம் மோசமானதாக இருந்தது; காங்கிரசின் பரிதாப நிலையைக் காட்டுவதாகவும் இருந்தது. அதாவது, தன்னைப் பற்றிய முக்கியமானவற்றைப் பற்றி மட்டும் கூறிக்கொண்டதாகவும், நீளமாக இருந்ததால் காங்கிரஸ்காரர் என்பதை வெட்டி விட்டதாகவும் விளக்கம் கொடுத்தார்.

பாரம்பரியமாக காங்கிரஸ்காரர்கள் குடும்பத்திலிருந்து வரும் வாரிசு இளம் தலைவர் காங்கிரசை எவ்வளவு துட்சமாக மதிக்கிறார் என்பதை சுட்டிக்காட்டியது அவருடைய விளக்கம். அயோத்தி தீர்ப்பை ஒரு சில காங்கிரசார் விமர்சிக்கிறார்கள்; பலர் வரவேற்கிறார்கள். இதுபோல பாஜகவின் மதவாத அரசியலுக்கு ஆதரவான கருத்துக்களை காங்கிரசார் சொல்வது அவ்வவ்போது பரபரப்புக்குரிய செய்தியாகிறது. இத்தகையவர்களை வைத்துக்கொண்டு காங்கிரஸ் எப்படி இந்தியாவை இறுகப் பற்றியிருக்கும் மதவாத அரசியலை வேரறுக்க முடியும்? திறந்த மனதுடன் தற்போதிருக்கும் தலைமை ஒரு தலைவரை, ராஜீவ் குடும்பத்தைச் சாராத ஒருவரை (தனது போதாமைகளை வளர்த்துக்கொள்ள ராகுலுக்கு கால அவகாசத்தை கொடுத்துவிட்டு) அனுமதிக்குமா?

“நாம் அனைவரும், நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சம உரிமை, சலுகைகள் மற்றும் கடமைகளைக் கொண்ட இந்தியாவின் குழந்தைகள். வகுப்புவாதத்தையோ அல்லது குறுகிய மனப்பான்மையையோ நாம் ஊக்குவிக்க முடியாது, ஏனென்றால் சிந்தனையிலோ அல்லது செயலிலோ குறுகிய மக்களைக் கொண்ட எந்தவொரு நாடும் சிறந்த நாடாக இருக்க முடியாது”.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு ஆற்றிய முதல் உரையில் இடம்பெற்ற முழக்கம் இது. நேரு முதல் பிரதமர் மட்டுமல்ல, மதசார்பின்மையை என்னும் பாதையை வலுவாக போட்டு, இந்தியாவை கட்டமைத்த தலைவர்களில் ஒருவர். காங்கிரஸ்காரராக அதைச் செய்தார். இன்றைய காங்கிரஸ் தலைமை அவர் காட்டிய வழியில் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்குமா? அல்லது தனது சுயநலனுக்காக நாட்டையும் அதன் பாரம்பரியத்தை மதவாதத்திடம் அடகு வைக்குமா?

நாம் எதிரெதிராக நிற்க வேண்டியவர்கள்தானா?

அண்மைக்காலமாக தமிழகத்தில் தலைவர்கள் சிலைகள் சேதப்படுத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக அம்பேத்கர், பெரியார் போன்ற சாதி ஒழிப்பு பேசியவர்களை, பார்ப்பனியத்தை விமர்சித்தவர்களை தாக்குவது அதிகரித்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கரின் சிலை பார்ப்பனிய சாதிவெறி ஏற்றப்பட்ட கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அதை முன்வைத்து சமூக ஊடகங்களில் பெரும்பாலான தமிழக மக்கள் சாதிவெறியர்களின் கொடுஞ்செயலைக் கண்டித்தனர். மறுநாள் அதிகாலையில் அதே இடத்தில் அண்ணலின் சிலை மீண்டும் நிறுவப்பட்டது. வடமாவட்டம் ஒன்றில் பெரியார் சிலை உடைக்கப்பட்டபோதும், உடனடியாக மீண்டும் பெரியார் அதே இடத்தில் அமர்த்தப்பட்டார். பெரியோர்களின் சிலை உடைக்கப்படுவதும் நிறுவப்படுவது தொடர்ந்து நிகழும் சம்பவங்களாகிவிட்டன. சில இடங்களில் தலைவர்கள் கம்பி வளைக்குள் நிறுத்தப்படுவதும் நடந்துகொண்டிருக்கிறது.

சிலை உடைப்பு சம்பவங்களுக்கும் அதற்குப் பிறகான முற்போக்கு சமூகத்தின் கொந்தளிப்புகளுக்கும் சாதி வெறி கூச்சல்களுக்கும் சாதி ஒழிப்பு யோசனைகளுக்கும் அப்பால் நாம் சிந்திக்க வேண்டியவை ஏராளமாக உள்ளன. அடையாள அரசியல் பேசும் பலர் இதை பேசுவதில்லை. சாதிக்கு ஒரு தலைவர் தேவைப்படுகிறார். அரசியல்வாதிகளுக்கு அது போதும். ஆனால், சமூக யதார்த்தம் வேறுமாதிரியாக உள்ளது.

பட்டியின மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வர்க்கப் பின்னணி என்ன? சமூகப் பிண்ணனி என்ன? ‘இந்து மதம்’ என இவர்களையெல்லாம் ஒன்றிணைக்கிற மதம் இவர்களை எத்தகைய சமூக சூழலில் வைத்துள்ளது? அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ன? அரசு நிர்வாகத்தில் முடிவெடுக்கக்கூடிய இடத்தில் உள்ள சாதி எது? இவர்களுடைய கலாச்சாரம் என்ன? உணவுப் பழக்கம் என்ன? இத்தனை கேள்விகளுக்கு விடை தேடினால், சமூக யதார்த்தம் நம் கண்முன் வந்து நிற்கும். அது தலித்-பகுஜன் சமூகங்களின் ஒற்றுமையை பறைசாற்றி நிற்கும்.

பார்ப்பனியத்தின் சாதி படிநிலையை ஆங்கிலேயர்கள் ‘இந்து’ மதமாக்கியதாக பிரபல கன்னட தலித்திய எழுத்தாளர் தேவனூர மகாதேவா எழுதியிருப்பார். நூற்றுக்கணக்கான இந்திய ஒடுக்கப்பட்ட சாதிகளை, நான்கு வர்ண அமைப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களை ‘தலித்’ என்ற வார்த்தையால் அழைத்தவர் மகாத்மா ஜோதிபா பூலே. அதை பிரபலமாக்கியவர் அண்ணல் அம்பேத்கர். பார்ப்பனிய மதம் தீண்டத்தகாதவர்களாகவும் சூத்திரர்களாகவும் ஒதுக்கியவர்கள்தான் இன்று எதிரெதிராக நின்று சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சிலையின் தலையை துண்டாக்கும் சூத்திரர்களுக்கும் சேர்த்துதான் அம்பேத்கர் பேசினார். ஜோதிபா பூலேயும் பெரியாரும் இயக்கங்களை நடத்தினார்கள். இத்தனைப் போராட்டங்களுக்குப் பிறகும், முற்போக்கு மரபைக் கொண்டிருக்கும் தமிழகத்திலும் ஏன் பிற்படுத்தப்படுத்த சமூகம், தலித்துகளுக்கு எதிராக நிற்கிறது?

தலித் பகுஜன் ஒற்றுமையை வலியுறுத்திவரும் எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா இதற்கு பதில் சொல்கிறார்…“ஒவ்வொரு தனிநபர் மற்றும் சமூகத்துக்கு மதம் என்பது முக்கியமானது. நான் ஏன் இந்துவல்ல என சொல்லியிருக்கிறேன். அதுபோல, சூத்திரர்களும் அதாவது பிற்படுத்தப்பட்ட மக்களும் படிக்கவோ, பரப்பவோ ஒரு அமைப்பாக்கப்பட்ட மத வாழ்க்கையை கொண்டிராதவர்கள். இந்துயிசத்தில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. உற்பத்தி அல்லாத நல்ல வாழ்க்கையை வாழும் பனியாக்களும் சத்திரியர்களும் பார்ப்பனியத்துடன் சேர்ந்துகொள்வார்கள். ஆனால் தலித்துகளுக்கும் சூத்திரர்களுக்கும் ஆன்மிக எழுத்துக்களை படிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை. தலித்துகள் இதைப் புரிந்துகொண்டு பவுத்தத்திற்கும் கிறித்துவத்திற்கும் மாறினார்கள். தங்களுடைய வழிபடும் உரிமையை அவர்கள் பெற்றார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அவர்களுடைய வாழ்க்கை சூழல் மாறுகிறது. ஆனால் பார்ப்பனியத்தை தலித்துகள் கேள்வி எழுப்பியதைப் போல சூத்திரர்கள் எதிர்க்கவில்லை. இதுதான் பிற்படுத்தப்பட்ட மக்களை பல நூற்றாண்டுகளுக்கு முடக்கி வைத்துவிட்டது” என்கிறார்.

காஞ்சா அய்லய்யா, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக ஆய்வாளர். இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் அவருடைய எழுத்துக்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. காஞ்சா அய்லய்யா சொன்னதன் சாரத்தை, வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் எழுதிய சிலர் முன்வைத்தனர். சிலையை உடைத்தவர்கள் தங்களுடைய சமூக படிநிலையை உயர்த்திக்கொண்டார்களா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

பார்ப்பனிய இந்து மதத்தின் ஒற்றை கொள்கையை நாடு முழுவதும் பரப்ப முயற்சி நடந்துகொண்டிருக்கும் வேளையில், தன்னுடைய நிலையை மறந்து, சாதி பெருமையை தூக்கி சுமக்க தமிழகத்தில் பலர் தயாராக உள்ளனர். கிட்டத்தட்ட பார்ப்பனியத்துக்கு அடியாள் வேலை பார்ப்பது போன்றது இது.

மிகச் சமீபத்தில் தருமபுரி அருகே ஒரு கிராமத்தில் இருந்த முனியப்பன் சாமி சிலைக்கு கயவர்கள் சிலர் வன்முறையை தூண்டும் நோக்கத்தில் செருப்பு மாலை அணிவித்திருக்கின்றனர். ஊரில் நடந்த விசாரணையின்போது, மதத்தின் பெயரால இயங்கும் ஒரு அமைப்பைச் சேர்ந்த சிலர் முனியப்பன் சாமி சிலை அருகே ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டுள்ளனர். முனியப்பனுக்கும் ஜெய் ஸ்ரீராமுக்கும் என்ன தொடர்பு? பெரும்பான்மையினரின் சாமி எது? எது இறக்குமதி செய்யப்பட்ட சாமி? எந்த மதத்துக்காக சொந்த சாமிக்கே அவர்கள் செருப்பு மாலை அணிவித்திருக்கிறார்கள்? இந்தக் கேள்விகளை சாதி பெருமிதம் பேசி, தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொள்கிறவர்கள் அலச வேண்டும்.

மேலாதிக்கம் மிக்க ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரின் மதத்தை, கலாச்சாரத்தை தனது மதமாக, கலாச்சாரமாக சொல்லிக்கொள்வதில் எந்தப் பெருமையும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, நம்முடைய பண்பாட்டை, கலாச்சாரத்தை, நமது ஆன்மீகத்தைத்தான் நாம் இழந்து நிற்கிறோம். அந்த வகையில் அய்லய்யா குறிப்பிடுவதைப் போல தலித்-பகுஜன் கலாச்சாரமும் வாழ்நிலையும் ஒன்றே. அவர் உனது தலைவர், இவர் எனது தலைவர் என பிரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் எதிரிகளாக நிற்பது, நம்மை ஆதிக்கம் செய்வோருக்குத்தான் சாதகமாக அமைகிறது. எதற்காக இதைச் செய்கிறோம் என தெரியாமல்கூட வெற்று ஆதாயங்களுக்காக நாம் எதிரெதிராக நிற்கத்தான் வேண்டுமா?

சாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன?

விரைவில் நடைபெற இருக்கும் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ‘வீர’ சாவர்க்கருக்கு இந்தியாவின் மதிப்பிற்குரிய விருதான பாரத ரத்னா அளிக்கப்பட வேண்டும் என்கிறது பாரதிய ஜனதா கட்சி.

இந்தி பேசும் பசு வளைய மாநிலங்களில் சாவர்க்கர், ஒரு தேச பக்தர்; சுதந்திரத்துக்காக போராடிய வீரர். மகாராஷ்டிரத்தைப் பூர்வீகமாகக் கொண்டபடியால் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக, சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ கோருவதன் மூலம் மக்களின் வாக்குகளை அள்ள முடியும் என நம்புகிறது.

சாவர்க்கருடன் மேலும் இருவர் பாரத் ரத்னா விருது பட்டியலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னமும் இந்த விருதுகள் அளிக்கப்படவில்லை என்பது விருதுக்கான அவமானம். கல்லடிபட்டு, சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி புகட்டிய, முதல் பெண்கள் பள்ளியைத் தொடங்கிய ஜோதிராவ் புலே, சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கும் சேர்த்து ‘பாரத ரத்னா’ அளிக்கக் கேட்டிருக்கிறது பாஜக.

ஒரே கல்லில் பல மாங்காய் என்பதுபோல, சாவர்க்கரை பரிந்துரைப்பதன் மூலம் சங்க பரிவார சார்புள்ளவர்களை திருப்திபடுத்தவும் அதே சமயம் ஒடுக்கப்பட்ட – இடை சாதியினரின் வணக்கத்துக்குரிய புலே தம்பதியை பரிந்துரைப்பதன் மூலம் இந்த சமூகங்களை கவரவும் பாஜக வாக்கு வங்கி அரசியல் செய்திருக்கிறது.

புலே தம்பதியின் சமூகப்பணி என்றுமே கேள்விக்குள்ளானதில்லை; பல காலமாக மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. அவர்களுக்கு உயரிய கவுரவங்கள் அளிக்கப்படுவதை எந்தப் பிரிவினரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், சாவர்க்கர் எப்படிப் பட்டவர்? பாரத ரத்னா விருது ஆட்சியாளர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்றாலும், பாஜக சொல்லிக்கொள்ளும் சாவர்க்கர் ஈடுபட்ட சுதந்திர போராட்டத்தின் உண்மையான வரலாறு என்ன?

ஆம்…சாவர்க்கர் ஒரு காலத்தில் புரட்சியாளராக இருந்தார். இந்திய சுதந்திரத்துக்காக ஆட்களை திரட்டினார். 1906-ஆம் ஆண்டு சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றபோது, ‘ஃப்ரீ இந்தியா சொசைட்டி’ என்ற பெயரில் அங்கிருந்த இந்திய மாணவர்களை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காகத் திரட்டினார். அப்போது அவர் சொன்னார்:

“நாம் பிரிட்டீஷ் அதிகாரிகளை குறை சொல்வதை நிறுத்த வேண்டும். அதுபோலவே அவர்களுடைய சட்டங்களை குறை சொல்வதையும் நிறுத்த வேண்டும். நம்முடைய இயக்கம் குறிப்பிட்ட எந்தவொரு சட்டத்தோடு நின்றுவிடக்கூடாது. ஆனால், அது சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தைப் பெறுவதற்காக இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நமக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும்”.

ஆனால் சாவர்க்கரின் ‘இந்திய’பற்று மிகக் குறுகிய காலத்திலேயே ‘ஆங்கிலேயே’பற்றாக மாறிவிட்டது. அதுவும் மூன்றே ஆண்டு இடைவெளியில்…

1909-ஆம் ஆண்டில் நாசிக்கின் அப்போதைய கலெக்டர் ஜாக்சனை கொல்வதற்காக அபினவ் பாரத் சொசைட்டியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் துப்பாக்கியை தந்த குற்றத்துக்காக சாவர்க்கருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தது பிரிட்டீஷ் அரசாங்கம்.

சுதந்திர போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கென்ற உருவாக்கப்பட்ட அந்தமானின் செல்லுலர் சிறையில் அடைக்கப்பட்டார் சாவர்க்கர். சிறை கொட்டடி வீரர்களை புடம் போடும் என்பார்கள். ஆனால், ‘வீர’ சாவர்க்கருக்கு செல்லுலர் சிறை புதிய திறப்பைக் கொடுத்தது.

பிரிட்டீஷ் அரசாங்கத்துக்கு 1911-ஆம் ஆண்டு முதல் மன்னிப்புக் கடிதம் எழுதினார் சாவர்க்கர். அது நிராகரிப்பட்டது. 1913-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இரண்டாவது கடிதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. (நல்லவேளை அந்தக் கடிதங்கள் வரலாற்று ஆவணங்களாக பல்வேறு நூல்களில் பதிவாக்கப்பட்டுவிட்டன. இல்லையேல், சங்க பரிவாரங்களால் வரலாறு எப்போதோ மாற்றப்பட்டிருக்கும்).

சிறையில் தன்னுடன் கைதானவர்களுக்குக் கிடைத்த ‘சிறப்பு’ சலுகைகள் தனக்குக் கிடைக்கவில்லை எனத் தொடங்குகிறது அந்தக் கடிதம். சரியாக நடத்தப்படவில்லை; அதிக வேலை தருகிறார்கள், சிறப்பு கைதிகளுக்கான உணவு தராமல் சாதாரண கைதிகளுக்கான உணவு தரப்படுகிறது இப்படி தன்னுடைய ‘குறைகளை’ச் சொல்கிறார் சாவர்க்கர்.

“என்னை இந்த சிறைச்சாலையில் நிரந்தரமாக அடைப்பது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை சாத்தியமற்றதாக்குகிறது. ஆயுள் தண்டனை குற்றவாளிகளின் நிலை வேறு. ஆனால், ஐயா, 50 ஆண்டுகள் சிறை தண்டனை என்னை வெறித்து பார்க்கிறது. என்னுடன் இருக்கும் பயங்கரமான குற்றவாளிகள் பெற்ற சலுகைகள் எனக்கு மறுக்கப்படும்போது நான் எப்படி தார்மீக பலத்தை பெற முடியும். தயை கூர்ந்து, என்னை இந்திய சிறைக்கு அனுப்புங்கள்” என அடுத்த பத்திகளில் கெஞ்சத் தொடங்குகிறார் சாவர்க்கர்.

அடுத்தடுத்த பத்திகளில் பிரிட்டீஷ் அரசாங்கள், திடீரென நல்லாட்சி தருவதை உணர்ந்தவராய் இப்படி எழுதுகிறார்…

“1906-1907 -ம் ஆண்டில் இந்தியாவின் நம்பிக்கையற்ற சூழல் எங்களை கரடுமுரடான பாதைகளுக்கு தள்ளியது. ஆனால் இன்று இந்தியாவின் மீது அக்கறை கொண்ட மனிதாபிமான எந்த மனிதனும் கண்மூடித்தனமாக அதில் அடியெடுத்து வைக்க மாட்டான்.

ஆங்கில அரசாங்கம் கருணையுடன் என்னை விடுவித்தால், அரசியலமைப்பு முன்னேற்றத்திற்கு உறுதியாக பாடுபடுவதுடன் அரசாங்கத்திற்கும் நம்பகமாக நடந்து கொள்வேன்.”

கிட்டத்தட்ட பிரிட்டீஷ் அரசாங்கத்தின் தீவிர விசுவாசியாகவே மாறிவிட்ட சாவர்க்கரை அதில் காணலாம். இந்த விசுவாசத்தை எதிர்காலத்தின் காட்டுவேன் என முத்தாய்ப்பாய் இப்படி முடிக்கிறார்.

“அரசாங்கத்திற்கு உண்மையானவனாக நான் மாறியிருப்பதால் என்னை முன்பு வழிகாட்டியாக எண்ணி தவறான பாதைக்கு சென்ற இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இளைஞர்கள் அனைவரும் மாறிவிடுவார்கள். என்னுடைய மாற்றம் சொந்த விருப்பத்தின் பேரில் இருப்பதால் அரசாங்கம் விரும்பும் எதையும் எதிர்காலத்திலும் கூட செய்ய நான் தயாராக இருக்கிறேன்.”

பல மன்னிப்புக் கடிதங்களுக்குப் பின், பத்தாண்டு சிறை தண்டனைக்குப் பின் 1921-ஆம் ஆண்டு அந்தமானிலிருந்து ரத்னகிரி சிறைக்கு மாற்றப்பட்டு, 1924-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை ஆனார் சாவர்க்கர்.

அதற்குப் பிறகு, சாவர்க்கர் கையில் எடுத்ததுதான் பிரிவினைவாத அரசியல். பிரிட்டீசாரை எதிரியாகக் கொண்டு புரட்சி செய்ய கிளம்பியபோது, சதி கொடுமையை தடை செய்தல், கல்விக்கூடங்களை நிறுவுதல் போன்ற சீர்திருத்தங்களை கிறித்துவ மதத்தைப் பரப்பவே அவர்களை எதிர்த்தார். இந்துக்கள், முகமதியர்களின் கலாச்சாரத்தை அழிக்க பிரிட்டீசார் முயல்வதாக குற்றம்சாட்டினார்.

சிறையிலிருந்து வெளிவந்த சாவர்க்கர், முற்றிலும் வேறொரு நிலையை எடுத்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைந்த இந்து-முசுலீம் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் ‘இந்துத்துவ’ அரசியலை முன்வைத்தார் அவர். ‘இந்துத்துவம்’ என்ற சொல்லாடலை உருவாக்கியவரும் அவரே. ஆங்கிலேயர்களுக்கு தன்னுடைய மன்னிப்புக் கடிதத்தில் கூறியிருந்தபடியே விசுவாசியாக நடந்துகொண்டார்.

காந்தி சாத்தியாகிரக போராட்டத்தைத் தொடங்கியபோது, இரண்டாம் உலகப் போரில் பங்கேற்க பிரிட்டீஷ் படையில் சேரும்படி பள்ளி, கல்லூரி மாணவர்களைத் திரட்டிக்கொண்டிருந்தார் சாவர்க்கர்! 1941-ஆம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்க்க ஜப்பானுடன் கூட்டு வைத்து படைகளைத் திரட்டினார் சுபாஷ் சந்திர போஸ், இந்த காலக்கட்டத்தில் ‘வங்காளம் மற்றும் அசாமை சேர்ந்த இந்துக்களே உடனடியாக ஒரு நொடியையும் வீணாக்காமல் ஜப்பானை எதிர்க்க, பிரிட்டீஷ் இராணுவத்தில் சேருங்கள்’ என பேசினார். சாவர்க்கரின் பங்களிப்புக்காக பிரிட்டீஷ் கமாண்டர் பாராட்டு தெரிவித்தார் என இந்து மகா சபையின் ஆவணங்களே கூறுகின்றன.

ஒத்துழையாமை இயக்கத்தின் போதும், பிரிட்டீஷ் ஆட்சியில் பணியாற்றும் இந்துக்களை அந்தப் பதவிகளிலேயே தொடருங்கள் என வலியுறுத்திய ‘போராட்ட வரலாறு’ சாவர்க்கருடையது!

இவை அனைத்தையும்விட காந்தி படுகொலையில் சாவர்க்கரின் பங்கை வரலாறு புறம்தள்ளிவிடாது. காந்தி படுகொலையில் கோட்சேவுடன் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சாவர்க்கரும் உண்டு. போதிய சாட்சியங்கள் இல்லையெனக் கூறி அவர் விடுவிக்கப்பட்டார். இதுவரையான வரலாறு மட்டுமே அனைவரும் அறிந்தது.

ஆனால், அதன்பின் சாவர்க்கரின் பங்கு குறித்து மீண்டும் விசாரிக்க, நீதிபதி ஜிவன்லால் கபூர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் அறிக்கை, சாவர்க்கர் மற்றும் குழுவினரால் படுகொலை சதித்திட்டம் தீட்டப்பட்டதற்கான முகாந்திரம் உள்ளது எனக் கூறியது. ஆனால், அறிக்கை வெளியான ஆண்டு, 1969. மூன்றாண்டுகளுக்கு முன்பே சாவர்க்கர் இறந்துபோயிருந்தார். சங்க பரிவாரங்கள் இதைப் பேச துணிவதில்லை.

அண்மையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி பக்த் சிங் சிலையுடன் சாவர்க்கரின் சிலையையும் சேர்த்து இரவோடு இரவாக வளாகத்துக்குள் நிருவியது. பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் இறுதிவரை மண்டியிடாத, தூக்குக் கயிற்றை முத்தமிட்ட வீரர் பகத் சிங்கும், பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் விசுவாசியா இருந்த பிரிவினையாளர் சாவர்க்கரும் ஒரே சிலையாக வடிக்கப்பட்டிருந்தனர்.

அதாவது, பகத் சிங் என்னும் வீரருடன் சேர்ந்து சாவர்க்கரும் சுதந்திர போராட்ட வீரராகிவிடுவார் என சங்க பரிவாரங்கள் ‘புதிய’ வரலாற்றை திணிக்கப் பார்க்கிறார்கள் என்பதையே அந்த சிலை காட்டியது. இதன் அடுத்தக்கட்ட நகர்வுதான் சாவர்க்கருக்கு பாரத ரத்னா என்னும் முழக்கம். நடந்துகொண்டிருப்பது சாவர்க்கரின் சித்தாந்தத்தில் நடக்கும் ஆட்சி, நிச்சயம் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படலாம். அதில் சந்தேகமில்லை.

ஆனால், எப்படி இந்தத் திணிப்புகளை சகித்துக் கொண்டீர்கள் என்கிற கேள்வியை மக்களாகிய நம்மிடம் வரலாறு எழுப்பிக் கொண்டே இருக்கும்.

நன்றி: தின செய்தி.

காஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்?

இந்திய சுதந்திரத்தின் போது இணைக்கப்பட்ட ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு தரப்பட்டிருந்த சிறந்த அந்தஸ்த்தை மோடி அரசாங்கம் நீக்கி நாற்பது நாட்களாகிவிட்டன. இந்திய அரசியலமைப்பு பிரிவு 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் மற்ற இந்திய மாநிலங்களுக்கு இல்லாத சிறப்பை காஷ்மீருக்கு அளித்திருந்தன. காஷ்மீர் இந்தியாவின் ஆளுகைக்குள் இருந்த தனிநாடாகவே செயல்பட்டுவந்தது. காஷ்மீர் மக்களின் விருப்பமும் இந்திய அரசின் விருப்பமும் வேறு வேறாக இருந்ததால் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்னும் அம்மாநில மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாமலேயே இருந்தது.

பிரச்சினையின் மையப்புள்ளி இந்திய அரசு, காஷ்மீர் முழுவதையும் தனதாகக் கருதியதே. ஆனால், அம்மக்களின் விருப்பம் அது இல்லை. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான பட்டேலிடம் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்துக்கொள்ளலாம் என பரிந்துரைத்தார். 1950-ஆம் ஆண்டு மவுண்ட் பேட்டனின் கூற்றை நினைவு படுத்தி கடிதம் எழுதிய பட்டேல், அவர் சொன்னது எத்தனை தீர்க்கதரிசனமானது என்பதை நிகழும் சம்பவங்கள் எடுத்துரைப்பதாக கூறினார்.

வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுவதுபோல், 370வது பிரிவை நீக்கி காஷ்மீரை இந்திய அரசு தனதாக்கிக் கொண்ட பிறகு பிரச்சினை ஓய்ந்தபாடில்லை; ஓயப்போவதும் இல்லை.

பிரிவு 370வது நீக்கப்பட்ட பின் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பிரதமர் சொல்லும் பாதுகாப்பு எப்படிப்பட்டது? கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரின் நான்கு வீடுகளுக்கு ஒரு வீரர் என்ற அளவில் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். முன்னாள் முதலமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்கள், அரசியல்வாதிகள், கிளர்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள் என பலர் வீட்டுச் சிறையிலும் விடுதிகளிலும் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்துக்கும் மேலாக ‘கல்லெறிகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பதின்பருவ, பள்ளி மாணவர்களை பாதுகாப்புப் படை கைது செய்து சிறையில் அடைக்கிறது. அதுவும் பொது அமைதி பாதுகாப்பு சட்டப்பிரிவின் கீழ் கைது செய்கிறது. விசாரணை இல்லாமலேயே இந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறவர்களை ஆறு மாதம் வரையில் சிறையில் வைத்திருக்க முடியும்.

இப்படி கைதாகும் சிறுவர்களில் பலர், தாங்கள் செய்யாத குற்றத்துக்காகவே கைதாகிறார்கள். ஸ்ரீநகரின் மத்திய சிறைச்சாலை முன்பு காத்திருக்கும் குடும்பத்தினர், தங்கள் மகன் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை அல்லா அறிவார் என கதறிக்கொண்டிருக்கிறார்கள். நள்ளிரவு ரோந்துகளின்போது கைதான பலரைப் பற்றிய தகவலைக்கூட அளிக்க மறுக்கிறது போலீசு. ‘முன்பு கல்லெறிதலில் ஈடுபட்டதற்காக முன்னெச்சரிக்கையுடன் கைது செய்யப்பட்டிருக்கும் சிறுவர்கள், வெளி மாநில சிறைகளுக்கு அனுப்பப்படுவார்கள்’ பகிரங்கமாக அறிவிக்கிறது காவல்துறை.

கைது, ஆறு மாத காலை விசாரணை இல்லாத கட்டாய சிறை ஆகியவை மட்டும்தானா? பிபிசி, வாஷிங்டன் போஸ்ட் போன்ற சர்வதே ஊடகங்கள் இந்திய படைகள் காஷ்மீரிகளை கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாக்குவதாக ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுவருகின்றன.

“அவர்கள் ஓயாமல் மூன்று மணி நேரம் என் பின்புறத்தின் தாக்கினார்கள்; மின்சார அதிர்ச்சி கொடுத்தார்கள். எங்களை கொன்றுவிடுங்கள் என கெஞ்சினோம். அப்போதும் அவர்கள் விடவில்லை. அழுக்கையும், சாக்கடை நீரையும் குடிக்க வைத்தார்கள்” என காஷ்மீரைச் சேர்ந்த பஷீர் அகமது கூறியதாக செய்தி நிறுவனமான ஏபி பதிவு செய்துள்ளது. கிளர்ச்சியாளர்களுடன் அவர்கள் சேர்ந்துவிட்டதாக சந்தேகப்பட்டு அவர்களை இப்படி சித்ரவதை செய்துள்ளது பாதுகாப்புப் படை. இதேபோன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாங்கள் சித்ரவதைக்குள்ளானதை கூறியுள்ளனர்.
.
அதுபோல, கடுமையான பாதுகாப்பையும் மீறி தங்கள் உரிமை பறிப்பை எதிர்த்து வெறும் முழக்கம் எழுப்பி போராடும் மக்கள் மீது பெல்லட் குண்டுகளால் தாக்குவதையும் பாதுகாப்புப் படை செய்துவருகிறது. இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட காரணத்துக்காக அரசியல் செயல்பாட்டாளர் ஷெஹ்லா ரசீது மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றம் சென்ற அவர் கைது நடவடிக்கைக்கு தடை வாங்கியிருக்கிறார்.

தகவல் தொடர்புகள் ஒரு மாதமாக முடக்கப்பட்டிருந்த நிலையில் ஆங்காங்கே மீண்டும் இணைக்கப்பட்ட பிறகு, முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் காஷ்மீர் குறித்து எழுதுவதற்கு தடை செய்துள்ளது அரசாங்கம்.

பிரதமர் தனது சுதந்திர தின உரையில் களிபொங்க கூறிய ‘காஷ்மீரிகளின் பாதுகாப்பு’ மேற்கண்ட நிலையிலேயே உள்ளது. பாதுகாப்பு ஆலோசகர் ஒருபடி மேலே போய், காஷ்மீரிகள் மத்திய அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாக கூறினார். காஷ்மீரிகள் முடிவை வரவேற்கிறார்கள் எனில், ஏன் இத்தனை பாதுகாப்பு? இத்தனை சித்ரவதைகள்? கைதுகள்? இந்திய அரசுக்கு ஆதரவாக இதுநாள்வரை செயல்பட்ட காஷ்மீர் அரசியல்வாதிகள் ஏன் இன்னமும் விடுவிக்கப்படவில்லை? ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவதும், சுதந்திரமாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் முடக்கப்படுவதும் ஏன்?

‘தேசபக்தி’யின் பெயரால் இந்தக் கேள்விகளுக்கான விடையை அளிக்க மறுக்கிறது அரசாங்கம். ‘நாடு பிடிக்கும் போட்டியினென’ வீழ்ந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்தைப் பற்றிய கவலை கொள்ளாமல் பொது சமூகம் ‘காஷ்மீரை பிடித்துவிட்டோம்’ என குதூகலிக்கிறது. பக்கத்துவீட்டுக்காரரின் விருப்பம் இல்லாமல் அடாவடியாக அவருடைய வீட்டை பிடிங்கிக் கொள்வது போன்றது ‘காஷ்மீரை பிடித்துவிட்டோம்’ என குதூகலிப்பது.

காஷ்மீரில் வசிக்கும் பெரும்பான்மை முசுலீம் மக்களால் தங்களுடைய பண்டிகையைக் கூட கொண்டாட முடியவில்லை. பக்ரீத்தில் தொடங்கிய அதிர்ச்சி, மிலாது நபி வரை தொடர்ந்தது. இந்திய அரசியலமைப்பு வழிபடுதலை அடிப்பை உரிமை என்கிறது. அதையும்கூட பறித்துக்கொண்டு தொழுகைக்காக கூடுவதையும் குற்றம் என்கிறது மத்திய அரசாங்கத்தின் கெடுபிடி.

இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது உறுதியளிக்கப்பட்ட அரசியலமைப்பு உரிமையை மீறி எதேச்சதிகாரமாக நடந்துகொண்டிருக்கும் மத்திய அரசாங்கள் கிட்டத்தட்ட அனைத்து உரிமைகளையும் முடக்கி வைத்துள்ளது. ‘காஷ்மீரிகளுக்கு விடுதலை’ என்ற பெயரில் காஷ்மீரை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கடுமையாக எழுதுகிறார்கள். சமீப ஆண்டுகளில் இல்லாத இத்தகைய கடுமையான முடக்கம் இன்னும் 20 -25 நாட்களுக்கு தொடரும் என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

விஜயகாந்த் படங்களில் வருவதுபோல, காஷ்மீரிகள் தீவிரவாதிகளும் அல்ல, இந்தியர்கள் அவர்களை ஒழிக்க வந்த ஆபத்பாந்தவர்களும் அல்ல. பொதுபுத்தியில் உருவாகியிருக்கும் இத்தகைய கருத்துக்கள் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். காஷ்மீரிகள் தங்கள் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களுடைய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.

இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் காஷ்மீர் விவகாரம் குறித்து இந்திய மக்கள் என்ன எதிர்வினை ஆற்றுகிறார்களோ அதைப் பொருத்துதான் அமையும் என பத்திரிகையாளர் ஜோ அதிலே கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார். அரசியலமைப்பு கொடுத்த உறுதி மீறப்படுகிறது எனில் அங்கே ஜனநாயகமும் சோதனைக்குள்ளாவதாகத்தான் பொருள். காஷ்மீரிகள் போராட்டத்தோடு வாழ்பவர்கள். அவர்கள் ஒடுக்குமுறையை 70 ஆண்டுகாலம் எதிர்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆழ்ந்த அமைதி நிலவுகிறதென்றால், அங்கே பெருவெடிப்பு காத்திருக்கிறது என்பது மற்றொரு பொருள்.

அனைத்துக்கும் மேலாக, பொது சமூகமாகிய நாம் ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படும்போது மவுனம் காத்தால், நமது அடிப்படை உரிமைகளையும் இழந்து குரலற்றவர்களாகிவிடுவோம். பெரும்பான்மைவாதத்துக்கு ஜனநாயக நெறிமுறைகள் மட்டும் வேண்டாதவையல்ல, அடிப்படை உரிமைகளை கேட்கும் குரல்களும் வேண்டாதவைதான்.

தினச்செய்தி (13-09-2019) நாளிதழில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை.

தற்கொலை அரசியல்!

எந்தவொரு நாகரிக சமூகமும் ‘தற்கொலை’யை ஆயுதமாக எடுக்காது. தலைவனின் கட்டளைக்காக கண்மூடித்தனமாக கழுத்தறுக்கொள்ளும் காட்டுமிராண்டியின் செயல் ‘தற்கொலை’. வாழ்க்கையை நேர்கொள்ளும் திராணியற்றவர்கள் தற்கொலையை புனிதப்படுத்தும், கொண்டாடும் வேலையை செய்துவருகிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதை விட்டுவிட்டு, அதிமுக எம்பிக்கள் ‘தற்கொலை’ நாடகம் ஆடுகிறார்கள். ஒருகாலத்தில் இந்த தற்கொலை நாடகம், நிஜமாகப்போவதில்லை. உணர்வுகளைத் தூண்டி அப்பாவிகள் எவராவது தற்கொலை செய்துகொள்ள வேண்டும், அதை வைத்து பிண அரசியல் நடத்தக்கூடும் என நான் சந்தேகிக்கிறேன். அப்பட்டமான திசைதிருப்பல் இது.

போதாக்குறைக்கு அய்யாக்கண்ணு, தற்கொலை செய்வோம் என்கிறார். தயவுசெய்து இவர்களை நம்பாதீர்கள். கடந்தகால தற்கொலைகளால் எதுவும் நடந்துவிடவில்லை, தற்கொலையைத் தவிர, பிற அத்தனை வழிகளையும் சிந்தியுங்கள்.

அரசுகள் நம்மை ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஏமாற்றுகிறவர்களிடம் தற்கொலையை ஆயுதமாக பயன்படுத்த முடியுமா? அவர்களிடம் குறைந்தபட்ச இரக்கத்தையாவது பெற முடியுமா? காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்… அவர்களின் தற்கொலைகளுக்கு நீதி கிடைத்துவிட்டதா?