’ஐ’யும் ஷங்கரின் மூழ்கிக் கொண்டிருக்கும் கோலிவுட் மசாலா கப்பலும்

90களின் இடையில் கிராமத்து பஞ்சாயத்து, தீவிரவாதி-அரசியல்வாதி-நேர்மையான கதாநாயக படங்கள் ட்ரெண்டாகி தமிழக மக்களை மாவாக்கிக் கொண்டிருந்த நிலையில் ஜெண்டில்மேன் படத்தின் மூலம் மசாலா படங்களுக்கு வித்யாச முலாம் பூசி அறிமுகமானார் இயக்குநர் ஷங்கர். 6 பாட்டு, 6 சண்டைதான். ஆனால், அதில் பிரமாண்ட செலவிருக்கும், திருடப்பட்ட ஹாலிவுட் கதையிருக்கும். இதுதான் ஷங்கரின் மசாலா படத்துக்கு தேவையானவை. இந்த மசாலா பாணி அவர் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் கை கொடுத்தது. ஆனால் வரலாற்றில் தொடர் வெற்றியாளர் என்று யாரும் இல்லையே! முதல் சருக்கல் பாய்ஸ். அதைப் பற்றி ஏராளமானவர் பேசிவிட்டார்கள், ஏசிவிட்டார்கள். அடுத்தது பலத்த அடி…வசூல் மன்னனை வைத்து கொடுத்த எந்திரன். அதிலிருந்தாவது பாடம் கற்றுக் கொண்டு நமக்கு சரக்கு தீர்ந்துவிட்டது என படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கியிருக்கலாம். அடுத்து ஒரு ரீமேக் படத்தை இயக்கினார். அதுபோல ரீமேக்கிங்கிலாவது கவனம் செலுத்தலாம். அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மிகுந்த பில்ட் அப்பில் ஐ படத்தை இயக்கி உலவ விட்டிருக்கிறார்.

ஐ படத்தில் கதை, திரைக்கதை நேர்த்தி, பிரமாண்ட பொருட்செலவு குறித்தெல்லாம் நான் பேச வேண்டிய தேவையில்லை. நான் விமர்சகர் இல்லை. ஆனால் அந்த சினிமாவைப் பார்த்த ஒரு பார்வையாளராக என்னில் தோன்றியதை பகிர்கிறேன். சமீபத்தில் ஷங்கர் தயாரித்த, இயக்கிய படங்களைப் பார்த்தேன். முதலில் ஐ…

ஷங்கர் என்னும் அறிவாளி, தன்னைச் சுற்றிலும் மெத்தப் படித்தவர்களை வைத்துக்கொண்டுள்ள ஒருவர், முட்டாள்களுக்குப் படம் இயக்குகிறார். மெட்ராஸ் இளைஞனை தமிழகத்தின் கடைக்கோடி சினிமா ரசிகன்கூட நன்றாக அறிவான். உங்கள் சினிமாப் படி பார்த்தால் லிங்கேசன் (கதாநாயகன்) எங்கோ பிறந்து கூவத்து கரை பக்கம் தத்துக்கொடுக்கப்பட்டவனாகத் தெரிகிறான். மெட்ராஸில் வசிக்கும் ஒருவனைக் காட்ட அவனை ’இன்னாமா’ என்று பேச வைத்தால் போதும் என்பது பாலச்சந்தர் கால பழைய ஃபார்முலா. கதை சுடுவதில் உள்ள மெனக்கெடலை இதற்கும் சற்று பயன்படுத்தியிருக்கலாம்.

எனக்குத் தெரிந்த மெட்ராஸ் பையன் திருநங்கைகளோடு நட்பு பாராட்டித்தான் பார்த்திருக்கிறேன். வெறுமனே வசைச் சொற்களாக மட்டுமே ‘பொட்டை’ என்பது இங்கே பயன்படுத்தப்படுகிறது. பாலினம் மாறிய ஒருவரைப்பார்த்த சில நொடிகளிலேயே மிகக் கேவலமாக (மூன்றாம் தர ரசிகர்களை குஷிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு) ஊரோரம் புளிய மரம் பாட்டை பாடும் அளவுக்கு கேவலமான மெட்ராஸ்காரனை நான் பார்த்ததில்லை. அவனைத்தான் ஷங்கர் தன் படத்தில் காட்டியிருக்கிறார். நாட்டிலே திறமையான ஒருவரைப் பார்த்த உடனே அவர் திருநங்கை என்பதாலேயே அவரை மலினமாக கதாநாயகனும் அவனது தோழனும் அவமானப் படுத்துவதாக காட்சி வைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். படத்துக்கு தேவையே இல்லாத இந்தக் காட்சி அமைப்பின் மூலம் மெட்ராஸ் இளைஞர்களை திருநங்கைகளையும் என்னைப் போன்ற பார்வையாளர்களையும் அவமதித்திருக்கிறார். இது அப்பட்டமான மனித உரிமை மீறல்.

ஒரு திருநங்கை காதல் வயப்படக்கூடாதா? தெரிந்தோ, தெரியாமலோ சில காட்சி அமைப்புகள் மூலம் கதாநாயகியின் காதலைவிட அவருடைய காதல்தான் எனக்கு உயர்வானதாக பட்டது. கதாநாயகனால் அவருடைய காதல் நிராகரிக்கப்படும்போது அவரது துக்கத்தை உணர்ந்தேன். எப்படியோ சாமான்ய ரசிகனுக்கு ஒரு திருநங்கையின் காதலும் அதனால் உண்டான வலியும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

எனக்குத் தெரிந்து ஒன்போது என்று சொல்லிக்கொண்டிருந்த பலரும் இன்று திருநங்கைகள் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார். திருநங்கைகள் மீதான சமூக கண்ணோட்டம் நேர்மறையாக உருமாறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சமூகத்தின் ஆழம் வரை சென்று பாயும் கோலிவுட் மசாலாக்கள் சட்டென்று எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிடுகின்றன. இந்தப் படத்துக்கு எதிராக திருநங்கைகள் போராட்டம் முக்கியமானது. இனி இப்படிப்பட்ட காட்சிகளை வைப்பதற்கு கோலிவுட் கனவான்கள் யோசிப்பார்கள்.

மேக்கப் வித்யாசம் காட்ட வேண்டும் என்று எடுக்கப்பட்ட படத்தில் எதற்காக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தை கேவலமாக சித்தரிக்க வேண்டும்? இதனால்தான் சொல்கிறேன் ஷங்கரிடம் மசாலா சரக்கு தீர்ந்துவிட்டது என்று.  படம் இயக்குவதில் மட்டும் அல்ல, படம் தயாரிப்பதிலும் இவரிடம் சரக்கு இல்லை. இவர் தயாரித்த கப்பல், கீழ்த்தரமான படம். பால் இச்சைக்காக அலையும் இளைஞர்கள்தான் கதைக்குரியவர்கள். இதையும் நாளை தமிழக தொலைக்காட்சி வரலாற்றீலேயே முதன்முறையாக காட்டும்போது தமிழர் குடும்பங்கள் பார்க்கத்தான் போகின்றன.

எனவே, என்னுடைய முடிவுரைக்கு வருகிறேன். திரு. ஷங்கர் அவர்களே இனி இயக்குவதை விட்டுவிடுங்கள், தயாரிப்பதையும்தான்! நீங்கள் நிறைய சம்பாதித்து சாதித்துவிட்டீர்கள். தமிழில் நல்ல படங்கள் வரவேண்டியிருக்கிறது. அவற்றுக்கு வழிவிடுங்கள்!

தொடரும் ஊடகப் பெண்களின் அவலங்கள்!

ஊடகங்களில் பெண்கள் பணிபுரிவதற்கு இன்னமும் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது. பதவியின் பெயரால் ஊடகங்களில் கடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை வசதியாக ஊடகங்களே மறைத்துவிடுகின்றன. ‘நாமெல்லாம் ஒண்ணுதானே’ என்று எல்லோரும் சுற்றறிக்கை போட்டு செயல்படுவதுபோல ஒரு ஊடகத்தில் நடக்கும் குற்றம் இன்னொரு ஊடகத்தில் வெளிவருவதே இல்லை. பதவி சுகம் பார்த்த பெருச்சாளிகளுக்கு நம்மை கேள்வி கேட்க யாருமே இல்லை என்று தங்களுடைய அராஜகங்களைத் தொடர இதுவே மிகப்பெரும் துணையாக இருக்கிறது. நடக்காத விஷயத்துக்கெல்லாம் வாய்ப்பிளக்கும் மீடியாக்கள், வெளிவர வேண்டிய விஷயங்களில் வாயை பசை போட்டு இறுக பொத்திக் கொள்கின்றன. வாழ்க நான்காவது தூண்!

ஊடகங்களில் பெண்கள் எப்படியெல்லாம் பாலியல் ரீதியாகவும் வேலை ரீதியாகவும் சுரண்டப்படுகிறார்கள் என்பதைப் பற்றி ஐந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய பதிவு இது. இதில் எழுதியிருக்கும் விஷயங்கள் இப்போதும் பொருந்திப் போகின்றன. காலம், பெயர்கள் மட்டும் மாறியிருக்கலாம் சம்பவங்கள் என்னவோ ஒன்றுபோலத்தான். அதனால் மீள் பிரசுரம் செய்கிறேன்.

ஊடகப்பெண்களை சமையலறைக்கு துரத்தும் அராஜக ஆணாதிக்க கும்பல்!

சமீபத்தில் ஐந்தாண்டுகள் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவமுள்ள ஒரு பெண் பத்திரிகையாளர், தன்னுடைய பணியினை ராஜினாமா செய்யும் பொருட்டு மும்முரமாக இருந்தார். இன்னொரு நிறுவனத்திலிருந்து தற்சமயம் பணியாற்றிக்கொண்டிருந்த நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாதங்களே கழிந்திருந்த நிலையில்,அவருடைய ராஜினாமா சக ஊழியர்கள் மத்தியில் துப்பறிவதற்கும் விவாதிப்பதற்கும் உரிய விஷயமாக இருந்தது.
“என்னுடைய வருங்கால கணவருக்கு நான் வேலைக்குப் போவது பிடிக்கவில்லை” என்று தன்னுடைய நிலையை அவர் கூறியபோது ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது என்னவோ உண்மைதான். அதற்கு பின்னணியில் இருக்கும் நிதர்சனத்தை உணர்ந்தபோது அவர் எடுத்த முடிவும் சரி என்று தோன்றியது. தீர்க்கமான சிந்தனையோடு செயல்பட்டவராக இல்லாதபோதும், நேர்மையானவராகவும் பணியில் அக்கறை காட்டுபவராகவும் இருந்த அவருடைய இருப்பு முக்கியமானதாகவே கருதமுடியும். அவர் பத்திரிகையாளராக தொடர்ந்து இயங்கியிருக்கும் வேளையில், காலம் அவரது சிந்தனையையும் செயலையும் கூர்த்தீட்டியிருக்கலாம்.
ஆனால் அவர் ஒரு பெண் என்பதாலேயே பணியிடங்களில் அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களும் நிலை குலையச் செய்த கிசுகிசுக்களும் அவரை திருமணத்தின் பெயரில் பத்திரிகை துறையிலிருந்தே வெளியேறும் முடிவை நோக்கி தள்ளியிருக்கின்றன. இன்று அவர் பத்திரிகை துறையிலிருந்தே ஒதுங்கிப்போய் விட்டார். இது ஏதோ தனிப்பட்ட ஒருவரைச் சார்ந்த நிகழ்வாக நினைத்து ஒதுக்கிவிட முடியாது. கனவுகளோடும் நம்பிக்கையோடும் ஊடகத்துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் பல பெண்கள் அவநம்பிக்கையோடு வெளியேறியதன் பின்னணியை விவாதத்திற்கு உட்படுத்துவதும் பதிவு செய்வதும் உடனடியாக செய்தாக வேண்டிய பணியாகும். பத்திரிகையாளராக ஐந்தாண்டு கால அனுபவத்திலும் தமிழ் ஊடகங்களில் சகபணியாளர்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான அவதூறுகளை அத்துமீறல்களை எழுதுவது மற்ற எல்லாவற்றையும்விட அவசியமானதாகவே கருதுகிறேன்.

ஒரு பெண் பத்திரிகையாளர் மாற்றுச் சிந்தனையும் அரசியல் ரீதியிலான புரிதலும் உள்ளவராக இருந்தாலும் தமிழ் ஊடகங்களில் சமையல் குறிப்பு எழுதுவதற்கும் நடிகைகளின் ஆடை,அணிகலங்களை சிலாகிப்பதற்கும்தான் பணிக்கப்படுவார். அதிகபட்சமாக அரசியல்வாதிகளின் மனைவிகளை பேட்டி காணும் வாய்ப்பு கிட்டலாம்! பெண்ணின் பணிகளாக ஆணாதிக்கத்தால் உருவான இச்சமூகம் ஆண்டாண்டு காலமாக சொல்லிவரும் சமையல், வீட்டுப்பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றின் மெருகேற்றப்பட்ட வடிவங்கள் இவை. சமூகம் எப்படி இதையெல்லாம் மீறி வரக்கூடாது என்கிறதோ, அதையேதான் ஆணாதிக்க சிந்தனை பீடித்த ஊடகவாதிகளும் (அரசியல்-புலனாய்வு இதழ்களில் “பாதுகாப்பு” என்ற காரணம் காட்டி பெண்கள் அத்தகைய இதழ்களில் பணியாற்ற மறுக்கப்படுவதை இந்த பின்னணியில் வைத்துப்பார்க்க வேண்டும்) ஊடக பெண்களிடம் எதிர்ப்பார்க்கிறார்கள். இதை எதிர்க்கும் பெண் ஆசிரியர் குழுவால் திட்டமிட்டு ஒதுக்கப்படுவார். ஒருகட்டத்தில் மனஉளைச்சலுக்கு ஆளாகி பத்திரிகை துறையிலிருந்து ஒதுங்கிவிடுவார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் ஊட்டும்படியான மாற்றுச்சிந்தனையோடு ஒன்றிரண்டு கட்டுரைகளோடு காணாமல்போன பத்திரிகையாளர்கள் குடும்பம் என்னும் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போயிருப்பதை கண்கூடாகப்பார்க்க முடிகிறது.
இது ஒருபுறம் இருக்க சுயசிந்தனையும் ஊடகம் குறித்த புரிதலும் இல்லாத பெண்களுக்கு தமிழ் ஊடகங்களில் சிறப்பான வரவேற்பு கிடைப்பதையும் பார்க்க முடிகிறது. ஆண்களைப்போல சிந்திப்பதற்கும் ஆண்களின் ரசனைக்கேற்ப தங்களுடைய எழுத்தை வடிவமைத்துக்கொள்ளவும் இந்தப் பெண்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். சராசரி வாசகனும்கூட எழுதியவர் ஒருபால் விருப்பம் கொண்டவரோ என்று நினைக்கும் அளவுக்கு பெண் உடல் குறித்த கிளர்ச்சியூட்டும் வர்ணனைகள் வரும்படி அவர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள். தமிழ் மாத,வார,நாளிதழ்களைப் படிக்கும் எவருக்கும் இந்த முரண்பாடு தெளிவாகவே புரியும்.
குடும்பம், அரசியல் உள்ளிட்ட சமூகத்தின் மற்ற தளங்களில் பெண் எப்படி, ஆணின் சிந்தனைகளை உள்வாங்கி அதை செயல்படுத்தும் கருவியாக இருக்கிறாளோ அதைப்போலவே ஊடகப்பெண்ணும் செயல்படுகிறாள். அவளை அப்படியே வைத்திருப்பதில்தான் ஆணாதிக்கத்தின் இடம் தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. இப்படி சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட பெண்களே பாலியல் ரீதியிலான சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள். அறிவையும் உணர்வையும் அடிப்படையாகக் கொண்ட பணியில் உடல் முன்னிறுத்தப்படுகிறது. வழமையாக பெண்ணின் உடல் முன்னிறுத்தப்படும்போது கட்டமைக்கப்படும் அதிகாரம் இங்கேயும் நிகழ்கிறது. உடல் அதிகாரத்தை கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் ஆணின் செயல்பாடு ஒரு பெண்ணோடு நின்று விடுவதில்லை. அது ஒரு தொடர்கதை.

குறுஞ்செய்தியோடு ஆரம்பிக்கும்,பிறகு உடல் சமிக்ஞைகள், இரட்டை பொருள்தரும் பேச்சு, தான் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்று அதிகாரத்தை காட்டுவது எதற்கும் வளையவில்லை எனில் பிரச்சினை ஆரம்பிக்கும். அடிமையைவிட கேவலமாக நடத்துவார்கள், அல்லது அலுவலக மேசையைப்போல அசையாத பொருளாக வைத்திருப்பார்கள். வளைந்து கொடுத்தால் பதவி உயர்வுகளும் இன்னபிற அங்கீகாரங்களும் தேடிவரும். அதிகாரத்தை கை கொண்டவனின் வழி இதுவெனில் இயலாமையில் துடித்துக்கொண்டிருக்கும் அவனுக்கு கீழ உள்ளவர்களின் பணி சுற்றி உள்ள பெண்கள் குறித்து அவதூறுகள் சொல்வதும் கிசுகிசுக்களை புனைவதும்தான். ஊடகங்களில் தங்களை ப்ரோ பெமினிஸ்டு(Pro-Femenist)களாக காட்டிக்கொள்ளும் பலரது முழு நேர பணியே இதுதான்.
இத்தகைய சுரண்டலையும் அவதூறுகளையும் சகிக்க முடியாத எந்த பெண்ணும், அவள் அறிவு ரீதியாக பலமானவளாக இருந்தபோதும் அவளது முடிவு ஊடகத்தை விட்டு ஒதுங்குவதாகத்தான் இருக்கும். ஒதுங்குதலும் ஒதுக்குதலும் இயல்பாக நடந்தேறியபின் ஆணாதிக்கம் எக்காளமிட்டுச் சிரிக்கும்!

ஆசிட் வீச்சால் கண்கள் பறிக்கப்பட்ட விநோதினிக்கு உதவுங்கள்!

விநோதினி தன் எதிர்காலம் குறித்து எத்தனை கனவுகள் கண்டிருப்பார் என்று தெரியாது. ஆனால் இன்று அவருடைய அத்தனை கனவுகளும் அமிலக் கரைசலில் கரைந்துபோய் இருண்ட வெளியில் தவித்துக் கொண்டிருக்கின்றன.

படம்

காரைக்காலில் சமீபத்தில் 23 வயதே ஆன விநோதினியின் மீது நடந்த ஆசிட் வீச்சு பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். தன் அப்பாவுடன் சென்று கொண்டிருந்த விநோதினியின் மீது தன்னை காதலிக்க மறுத்ததாகச் சொல்லி சுரேஷ் என்பவன் பாட்டில் ஆசிட்டை வீசியிருக்கிறான். அடுத்த நொடியே முகம் முழுக்க சிதைந்துபோனது. அமில சிதைவுகளோடு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப் பட்ட விநோதினியை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு கண்ணிலும் பார்வை பரிபோய்விட்டதைச் சொன்னார்கள். ஆரம்பகட்ட மருத்துவத்துக்கே லட்சங்கள் செலவாகியிருக்கிறது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த விநோதினியின் பெற்றோரால் அடுத்த கட்ட மருத்துவ சிகிச்சைக்கு பணம் திரட்ட முடியவில்லை.
இப்போது முழுக்க சிதைந்துவிட்ட கண்களின் தோற்றத்தை உருவாக்கும் அறுலை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. அதற்காக விநோதினியின் நண்பர்கள் நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். விநோதினிக்கு உதவ விரும்புகிறவர்கள் இந்த இணைய தளத்தின் மூலமாக உதவாலாம். உதவி செய்ய நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இருந்த இடத்திலிருந்தே உதவி செய்யலாம்.  http://www.orangestreet.in/projects/vinodhini இங்கே க்ளிக்குங்கள். உங்களில் ஒருத்தியாக உதவி கேட்டு நிற்கும் விநோதினிக்கு உதவுங்கள்-.
விநோதினி பற்றிய விடியோ இணைப்பு

கருவிலிருந்து கல்லறை வரை பெண்ணுடலை சிதைக்க காத்திருக்கும் காமுகர்களின் சமூகம்!

Copy of Photo-0008_1

‘நெய்வேலில ஒரு ஆஸ்பிட்டல் இருக்குது. அங்க போன ஸ்கேன் பண்ணி, ஆம்பளையா பொம்பளையான்னு சொல்லிடுவாங்க. எங்கூருல நெறைய பேர் அங்க போய் பாத்து ஸ்கேன் பண்ணி பொம்பளையா இருந்தா அபார்ஷன் பண்ணிடுவாங்க’

வறட்சியால் துவண்டு கிடக்கும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப் போனதில் மெட்ரோ பாலிடன் சென்னையைத் தேடி வரும் ஆயிரக்கணக்கானவர்களில் அந்தப் பெண்ணும் ஒருவர். விழுப்புரம் மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமம் என்று சொன்னார். 3 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை அவருக்கு. இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட, ஆரம்பத்தில் விவசாயம் பார்த்து வாழ்ந்திருக்கிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன் நகரத்து கட்டட வேலைகளுக்கு விவசாயிகள் வரத் தொடங்கிய நேரத்தில் இவரும் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். சித்தாளாக 15 ஆண்டுகள் கல், மண் சுமந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, எல்லோருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார். தற்போதும் இங்கேயே வசிக்கிறார்.

சமீபத்தில் இவருடன் பேசியபோது இயல்பாக இவர் சொன்ன அந்த விஷயம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மருமகள் இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருப்பதாக சொன்னவர், இந்த முறை ஆண்தான் என்று உறுதியாக தெரிந்துவிட்டது என்றார்.

‘எப்படி?’
‘நெய்வேலில ஒரு ஆஸ்பிட்டல் இருக்குது. அங்க போன ஸ்கேன் பண்ணி, ஆம்பளையா பொம்பளையான்னு சொல்லிடுவாங்க. எங்கூருல நெறைய பேர் அங்க போய் பாத்து ஸ்கேன் பண்ணி பொம்பளையா இருந்தா அபார்ஷன் பண்ணிடுவாங்க’

‘எந்த ஆஸ்பிட்டல்? பேர் என்னா?’

‘பேர் தெரியலமா, ஆயிரபா குடுத்தா ஸ்கேன் பண்ணி சொல்லிர்றாங்க. எம் மருமவ அங்கதான் போய் பாத்துட்டு வந்துருக்குது. ஆம்பளை புள்ளன்னு சொல்லிட்டாங்களாம்.’

‘ஹாஸ்பிட்டல் பேர் தெரியலையா?’

‘தெரில…என்னான்னு. இப்படி ஸ்கேன் பண்ணி சொல்றாங்கன்னு தெரிஞ்சி கெவர்மெண்ட்ல சீல் வச்சிட்டாங்களாம். பூட்டு போட்டிருந்தாகூட பின் பக்கமா போயி வந்துகுனுதான் இருக்காங்க.’

அதற்கு மேல் அவரிடமிருந்து தகவல்களைப் பெற முடியவில்லை. அரசாங்கம் சீல் வைத்த பிறகும் ஒரு மருத்துவமனை இயங்குகிறது என்றால், அதற்கு பொதுமக்கள் தரும் ஒத்துழைப்பு முதன்மையான காரணம். அடுத்த காரணம் தவறை கண்டுகொள்ளலாம் இருக்கும் அதிகாரிகள்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள என் பூர்விக கிராமத்துக்குச் சென்றிருந்தபோது இதேபோல் இன்னொரு சம்பவத்தையும் கேள்விப்பட்டேன். என்னுடன் படித்த பெண் அவர், அவருக்கு ரெண்டு பெண் குழந்தைகள், மூன்றாவதாக கர்ப்பமானதாகவும் 5 மாதத்தில் அது பெண் என்று தெரிந்துவிட்டதால் கலைத்துவிட்டதாகவும் சொன்னார்.

‘அப்பாடா பெண் சிசுக்கொலைகளை ஒழித்துவிட்டோம். தொட்டில் குழந்தை திட்டம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது’ அரசுகள் ஒருபுறம் கூவிக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் பெண் சிசுக்கொலைகள் நவீன வசதிகளோடு உலா வந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஆரம்ப கட்ட சமூக சீர்திருத்தத்தைக் கூட செய்ய முடியாத அரசாங்கம் காமுகர்களிடமிருந்து எப்படி பெண்களைக் காப்பாற்றும்?

அப்படியே கருவிலிருந்து தப்பி வந்தாலும் 3 வயதில், 12 வயதில், 22 வயதில், 38 வயதில், 50 வயதில் ஏன் 70 வயதில்கூட காமுகர்கள் விடமாட்டார்கள். கருவிலிருந்து கல்லறை போகும்வரை பெண்ணை சிதைக்க காத்துக்கொண்டிருக்கிறது இந்த கேடுகெட்ட சமூகம்!

ஆண்கள் சமைத்தால் வேகாதா என்ன?”

”வாசிக்க வாசிக்க, எழுத்து மறைந்து, அதில் சொல்லப்பட்டு இருக்கும் வாழ்க்கை மட்டுமே மனதில் நிற்க வேண்டும். அதுதான் உண்மையான எழுத்து. உணர்வுமயமான எழுத்துதான் என்னை வசீகரிக்கிறது. நான் நெகிழ்ச்சியானவனாக இருப்பதால் என் எழுத்தும் நெகிழ்ச்சியானதாகவே இருக்கிறது!” என்கிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்.
மதுரகவி பாஸ்கரதாஸின் பேரன். சிறந்த சிறுகதை ஆசிரியர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக, சமூகம், கலை, பண்பாடு குறித்துத் தீவிரமாகச் செயல்படுபவர்…

”இலக்கியத்தில் இயங்குபவர்களுக்கு அரசியல் பார்வை இருக்கா? பெரும்பாலான பிரச்னைகளில் எழுத்தாளர்கள் மௌனம் சாதிக்கிறார்களே, ஏன்?”

”அரசியல் இல்லாமல் இந்தப் பூமியில் எதுவும் இல்லை. எனக்கு அரசியல் வாடையே ஆகாது என்று சொல்வதே ஒரு அரசியல்தான்! 1940களில் தஞ்சாவூர் பகுதியிலிருந்து மிகப் பெரிய எழுத்தாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். அதே காலகட்டத்தில் தஞ்சாவூர் பகுதிகளில் விவசாயக் கூலிகள் செய்கிற சிறு தவறுக்குக்கூட சாட்டை அடியும் சாணிப்பாலை வாயில் ஊற்றுகிற கொடுமைகளும் நடந்திருக்கின்றன. அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாமல், ஆண்பெண்ணுக்கு இடையில் உள்ள காதலை நுட்பமாக விவரிக்கிற எழுத்தையே அந்த மிகப் பெரிய எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். நடக்கிற அநியாயங்களைப் பார்த்து அமைதியாக இருப்பதும் அரசியல்தான். பெண்ணுடல் பற்றியும் காதலைப் பற்றியும் எந்தக் காலத்தில், எந்தச் சந்தர்ப்பத்தில் எழுதுகிறோம் என்பதிலும் அரசியல் இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனும் ஒகேனக்கல் பிரச்னைக்கு அறிக்கைவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதைச் சக மனிதர்களின் ஜீவாதாரப் பிரச்னையாக, அவலமாகத் தனது எழுத்தில் பதிவு செய்ய வேண்டிய தார்மிகப் பொறுப்பு இருக்கிறது!”

”அறிவொளி இயக்கத்தில் தீவிரமாக இயங்கியவர் நீங்கள். பாலியல் கல்வி, மாற்றுக் கல்வியின் அவசியங்கள் குறித்த விவாதங்கள், ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்குமா..?”

”நம் சமூகம் ஆணாதிக்கச் சமூகம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதை மாற்றி சமத்துவமான சமூகத்தை உருவாக்க, ஒரு கோடி விஷயங்கள் செய்ய வேண்டியிருக் கிறது. அதில் ஒரு சிறு முயற்சிதான் பாலியல் கல்வி!
ஆண் குழந்தைகள் 12 வயது வரை அம்மாவின் நெருக்கமான அரவணைப்பில் வளர்கிறார்கள். அதன் பிறகு, திருமணமாகி மனைவி வரும்போதுதான் அவனுக்குப் பெண்ணின் அரவணைப்பு கிடைக்கிறது. 12க்கும் 25க்கும் இடைப்பட்ட இந்த வருடங்களில்தான் ஒருவன் மனிதனாக மாறுகிறான். இந்தக் காலத்தில் ஆண், பெண் உறவு குறித்துச் சரியான புரிதல்கள் நம்மிடையே ஏற்படுவதில்லை. ஆண், பெண் உறவு குறித்த உரையாடல்களை மறுக்கிற சமூகமாக நம் சமூகம் இருக்கிறது. இயல்பாக ஓர் ஆணும் பெண்ணும் பேசுவது சாத்தியமற்றதாக இருக்கிறது. உடல்ரீதியான மாற்றங்கள் ஏற்படும் இந்தக் காலகட்டத்தில் ஆண்பெண் உடல் குறித்துத் தெளிவு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதைச் சொல்லாமல் விடும்போதுதான் பாலியல் குறித்த வக்கிரமான சிந்தனைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. வக்கிரமான சிந்தனை கள் பதிவான பிறகுதான், நாம் பாலியல் குறித்துப் பாடப் புத்தகங்கள் மூலம் சொல்லித் தருகிறோம். இது தவறான வழிமுறை. சிறு வயதிலேயே பாலியல் கல்வியைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதுதான் சமூகத்தை ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி நகர்த்தும்.
குழந்தைகளின் மூளைகளை காலியான பாட்டில்களாக நினைத்துக்கொண்டு இருக்கிறது நமது கல்வி முறை. அந்த பாட்டில்களை நிரப்பி அனுப்பும் வேலையையே பள்ளி, கல்லூரிகள் செய்கின்றன. ஆனால், உண்மையில் ஒரு நாளின் 24 மணி நேரமும் குழந்தைகள் ஏதோ ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆள்பவர்களுக்குத் தேவையான அலுவலர்களையும் அதிகாரிகளையும் உருவாக்குவதையே நோக்கமாகக்கொண்டு இருக்கிறது நமது கல்வி முறை. குழந்தைகளின் தனித் திறன்கள் அடையாளம் காணப்பட வேண்டும். மாற்றுக் கல்வி முறை அதற்கு வழி செய்யும்!”

”ஒருவழியாக உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது… ‘க்ரீமிலேயர்’ நிபந்தனையோடு! இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

”வருட வருமானம் இரண்டரை லட்சம் உள்ளவர்களைத்தான் ‘க்ரீமிலேயர்’ என்கிறார்கள். சாதாரணமாக ‘ஐ.ஐ.டி’, ‘ஐ.ஐ.எம்’ நுழைவுத் தேர்வுப் பயிற்சிகளுக்கே 80 ஆயிரம் வரைக்கும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. 20 ஆயிரம் சம்பளம் வாங்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால்கூட இவ்வளவு தொகை செலவழிக்க முடியாது. ‘க்ரீமிலேயர்’ என்பது ஏமாற்று வேலை!
உயர் கல்வியிலும் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பது கொள்கை ரீதியாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், அதற்குள் ஏராளமான ஓட்டைகள் இருக்கின்றன. 27 சதவிகிதத்தையும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டவர்களை மட்டுமே வைத்து நிரப்ப முடியாது. எனவே, மீதமிருப்பவற்றையும் பிற்படுத்தப்படுத்தப்பட்டவர்களுக்கே வழங்க வேண்டும், பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லக் கூடாது என்பதுதான் எங்கள் நிலை.”

”ஆண்களும் சமையல் கட்டுக்குப் போக வேண்டும் என்று நீண்ட காலமாகச் சொல்லிவருகிறீர்களே… நம் சமூகத்தில் இது சாத்தியமா?”

”சமைப்பது பெண்களுக்கு மட்டுமேயானது என்பதைக் கேள்விக்குள்ளாக்கத்தான் ‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’ என்ற புத்தகத்தை எழுதினேன். உலகிலேயே சமைப்பதுதான் அதிமுக்கியமான வேலை. கவனம், உடல் உழைப்பு, தொழில் நுட்பம், அக்கறை எல்லாம் சேர்ந்தது சமையல் வேலை. இப்படி பெரும்சுமையான வேலையை ஆயிரம் ஆண்டுகாலமாக பெண்கள் தலையிலேயே சுமக்க வைத்துக்கொண்டு இருக்கிறோம்.
‘நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறாமல் மனித குல விடுதலை சாத்தியமில்லை’ என்றார் லெனின். வீட்டு வேலை செய்து பார்த்தால்தான் அவர் சொன்னதன் அர்த்தம் தெரியும். வியாபார ரீதியான எல்லா இடங்களிலும் ஆண்கள்தான் சமைக்கிறார்கள். வீட்டில் சமைத்தால் மட்டும் வேகாதா என்ன?”

”எழுத்தாளர் என்பதையும் தாண்டி பண்பாட்டுத் தளத்திலும் செயல்பட்டு வருகிறீர்கள். பண்பாட்டுத் தளத்தில் செயல்படுவதற்கான தேவை இங்கே இருக்கிறதா?”

”அரசியல், பொருளாதாரம், பண்பாடு என மூன்று தளங்களில் இயங்குகிறது சமூகம். அரசியல், பொருளாதாரத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பண்பாட்டுத் தளத்திலிருந்துதான் தொடங்குகின்றன. ஆனால், அந்த மாற்றங்கள் பற்றிய அக்கறையே இல்லாத சமூகமாக இருக்கிறோம்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் மதச் சார்புள்ள விஷயங்கள் பயங்கரமாக வளர்ந்திருக்கின்றன. மக்களை மதவாதிகளிடம் சுலபமாகத் தள்ளுவதற்கான சூழல் இங்கே உருவாகியிருக்கிறது. இதைத் தடுக்க பண்பாட்டுத் தளத்தில் நாம் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. இல்லையென்றால், நாளை தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது!”
நன்றி: ஆனந்த விகடன்