கலப்பின விதைகள் விநியோகம்: தமிழக வேளாண் துறையின் அக்கறை மக்கள் மீதா? விதை கம்பெனிகள் மீதா?

விதைகளே பேராயுதம்
– இயற்கை உழவாண்மை முன்னாடி கோ.நம்மாழ்வார்

மாடித்தோட்டம் போடுவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறை, சென்னையில் மலிவுவிலையில் தோட்டப் பொருட்களை விற்பனை செய்தது. முற்றிலும் இயற்கை சார்ந்த உரங்கள்,வளர்ச்சி ஊக்கிகள் என இயற்கை வழியில் வீட்டுத் தோட்டம் அமைக்கும் வகையில் பொருட்களை ஒரு தொகுப்பாக விற்பனை செய்தது. ஆனால் இந்தத் தொகுப்பில் தரப்பட்ட கீரை, காய்கறி விதைகள் குறித்து பெரும் சர்ச்சை சமூக ஊடகங்களில் உருவானது.

காய்கறி விதை பாக்கெட்டுகளில் விஷமேற்றப்பட்ட விதைகள் ஜாக்கிரதை என்கிற வாசகம் பலரை இந்த விதைகள் எத்தகையவை என்ற கேள்வியை எழுப்பின. விற்கப்பட்டவை மரபணு மாற்றப்பட்ட விதைகளா? என்கிற ரீதியிலும் விவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்கள் அரசு தரப்பில் எட்டவே, அவர்கள் இந்த விதைகள் மரபணு மாற்றப்பட்ட விதைகள் அல்ல, ஹைபீரிட் விதைகள் எனப்படும் கலப்பின விதைகள் என்று விளக்கம் கொடுத்தார்கள்.

மரபணு மாற்றப்பட்ட விதைக்கும் கலப்பின விதைக்கும் என்ன வேறுபாடு? தக்காளியின் மரபணுவுடன் தவளையின் மரபணுவை  சேர்த்து ‘புஷ்டி’யான தக்காளியை உருவாக்குவது மரபணு மாற்றம். சிவப்பான தக்காளி வகையுடன் சதைப்பற்றான தக்காளி வகையைச் சேர்த்து சிவப்பான, சதைப்பற்றான தக்காளி இனத்தை உருவாக்குவது கலப்பினம். இவை இரண்டுமே செயற்கையாக உருவாக்கப்படுபவை.

பசுமைப் புரட்சியின் போது, ரசாயன உரங்களுக்கு அடுத்தபடியாக, கலப்பின விதைகள்தான் இந்திய விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய பாரம்பரிய விவசாயத்தை, பாரம்பரியம் மிக்க பயிர்களை எப்படி ரசாயனங்கள் அழித்தனவோ, அதே அளவுக்கு கலப்பின விதைகளும் அழித்தன. இயற்கை விவசாயத்தை முன்னெடுத்த நம்மாழ்வார், மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் போன்றோரின் பிரச்சாரமும் களப்பணியும் இவற்றை முன்வைத்தே அமைந்தன.

சென்ற தலைமுறை வரை, ருசியான அரிசியை பக்கத்து ஊரிலோ, பக்கத்து வீட்டினரின் விளைச்சலிலோ வாங்கி ருசித்திருப்போம். ஆனால், இன்று எந்த விவசாயியும் தான் விளைவித்த அரிசியை தனக்காகப் பயன்படுத்துவதில்லை. அது ஒரு வணிகமாக மாற்றப்பட்டுவிட்டது. சத்தில்லாத, ருசியில்லாத அரிசியைத்தான் இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். சீரக சம்பாவும் பொன்னியும் விளைந்த காலம் போய், ’ஏதோ ஒன்னு விளையுது’ என்று விவசாயிகளே சலித்துக்கொள்ளும் வகையில் பாரம்பரியம் அழிக்கப்பட்டுவிட்டது. காரணம் கலப்பின விதைகள்.

ஐ.ஆர். 8, ஐ.ஆர்.20, ஐ.ஆர்.50 என இந்திய வேளாண் அமைச்சகம் வனொலி, தொலைக்காட்சி வழியாக கூவிக் கூவி கலப்பின நெல் ரகங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தியது.  இந்திய நெல் ரகத்தோடு, ஜப்பானின் குட்டை ரக நெல் ரகத்தை இணைத்து உருவாக்கப்பட்ட நெல் ரகங்கள் இவை. அதிக விளைச்சல், பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிக்கும் திறன், குறைந்த நீர் இருந்தால் போதும் என கவர்ச்சியான வார்த்தைகள் போட்டு இந்திய விவசாயிகளிடம் திணிக்கப்பட்டன.

நெல்லுக்கு நடந்ததுதான் காய்கறி, பழவகைகள், கீரை வரை கலப்பின ரகங்கள் புகுத்தப்பட்டன. இந்திய விவசாயப் பல்கலைக்கழகங்கள் இந்த கலப்பின ரகங்களை, செயற்கை உரங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவே பயன்பட்டவே தவிர, பாரம்பரிய விவசாயத்தையும், தொழிற்நுட்பத்தைக் காப்பாற்றவும் அதை மேம்படுத்தவும் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இயற்கை விவசாய விஞ்ஞானிகளால் கடுமையாக வைக்கப்படுகிறது.

பாரம்பரியமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் அழிந்ததை பொறுக்கமுடியாமல்தான் நம்மாழ்வார் இனி விதைகளே பேராயுதமாக மாற வேண்டும் என முழங்கினார். நாட்டு ரக பயிர்களின் விதைகளை சேமித்து அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்றார்.

கலப்பின விதைகள், செயற்கை உரங்கள் இந்திய விவசாயிகளை எத்தகைய இக்கட்டான நிலைக்குத் தள்ளியிருக்கின்றன என்பதை விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைகளை வைத்து அறிந்துகொள்ளலாம். எங்கெல்லாம் விவசாயிகள் தற்கொலை நடக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் கலப்பின விதைகள் – செயற்கை விதைகள் கொடுத்த ஏமாற்றம் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை ஊடகவியலாளரும் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து தொடர் பதிவுகளை செய்பவருமான பி.சாய்நாத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். இந்தியாவில் அதிகமாக தற்கொலைகள் நடக்கும் விதர்பாவில் மட்டுமல்ல, சென்ற ஆண்டு ஆகஸ்டில் தற்கொலை செய்துகொண்ட திருச்சி விவசாயி பயிரிட்டதும் மரபணு மாற்றப்பட்ட பருத்தியால்தான்.

விவசாயிகளின் இத்தகைய முடிவுகளும் செயற்கை உரங்கள் இட்ட வளர்த்த உணவுகளை உண்பதால் அதிகரித்துவரும் உடல் நோய்களும் மக்களை இயற்கையின் பால் திருப்பின. இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது. அரசாங்கமே இயற்கை வழி விவசாயத்தை ஏற்றுக்கொண்டது. அதன் விளைவே வேளாண் பல்கலைக்கழகம் மக்களுக்கு இயற்கை வழி, வேளாண் பொருட்களை வழங்குவதும் இயற்கை வழி வேளாண்மை குறித்த பயிற்சிகளை தருவதுமான செயல்பாடுகள்.

பக்கத்து மாநிலமான கேரளம், தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படும் காய்கறிகளை தவிர்க்கச் சொல்லி வீட்டிலேயே காய்கறிகளை இயற்கை வழியில் வளர்த்துக்கொள்ளுங்கள் என்று வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்து வீட்டுத் தோட்டத்தினை ஊக்கப்படுத்தி வருகிறது.

தமிழக வேளாண் துறையும் இயற்கை வழி வேளாண்மையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இயற்கை வழி வேளாண் பயிலரங்கங்களை தோட்டக்கலைத் துறை நகர்ப் புறங்களில் முனைப்பாகச் செய்துவருகிறது. மண்புழு வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், இயற்கை பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு என இந்தத் துறை மூலம் பலர் பயன்பெற்று தொழில் தொடங்கியும் இருக்கிறார்கள்.

ஆனால், தமிழக வேளாண் பல்கலைக் கழகம் சொல்வது ஒன்று செயல்படுவது ஒன்றாக இருக்கிறது என்பதே இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது.  இயற்கை உரங்கள், இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், இயற்கை பூச்சிகள் என கொடுத்துவிட்டு விதைகள் மட்டும் கலப்பின விதைகளாகக் கொடுப்பது எந்த வகையில் இயற்கை வழி வேளாண்மை ஆகும் என்பதே இவர்களுடைய கேள்வி. கலப்பின விதைகள் என்றால் மலட்டு விதைகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு முறை இந்த விதைகளை விதைத்தால், செடி வளர்ந்து, காய்த்து, அதோடு தன் இனத்தையே முடித்துக்கொள்ளும். இந்த விதைகளை சேகரித்து மீண்டும் வளர்த்தால் அவை பூத்தாலும் காய்க்காது. மீண்டும் விளைச்சலுக்கு அந்த குறிப்பிட்ட விதையை விற்ற நிறுவனத்திடம்தான் போய் நிற்க வேண்டும்.

சுருக்கமாக, விதை வியாபாரம் என்று புரிந்துகொள்க. கலப்பின விதையை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு கர்நாடகத்தின் பெங்களூரு, இந்திய அளவில் புகழ்பெற்ற இடம்.  வேளாண் விதை உற்பத்தி நிலையமாகட்டும் தனியார் நர்சரிகளாகட்டும் அனைத்திலும் இந்த விதைகள் மட்டுமே விற்கப்படுகின்றன. இந்த விதைகளின் விதைகள் காய்க்காது என்பதைப் போல, இந்த விதைகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதைத்துவிட வேண்டும் என்கிற காலக்கெடு வைத்தே விதைகள் விற்கப்படுகின்றன.

இத்தகைய ‘சிக்கல்’களுக்கிடையேதான் வீட்டிலேயே ரசாயன பூச்சிக்கொல்லி அற்ற, இயற்கை வழியில் காய்கறிகளை விளைவித்துக்கொள்ளுங்கள் என்ற விளம்பரத்துடன் ‘பழைய சரக்கை’ புதிய அடையாளத்துடன் தந்துகொண்டிருக்கிறது தமிழக வேளாண் துறை. உண்மையில் இவர்களுக்கு யார் மீது அக்கறை… மக்கள் மீதா? விதை கம்பெனிகள் மீதா? என்பதைத்தான் சமூக ஊடகங்களில் மக்கள் விவாதம் ஆக்கி வருகிறார்கள்.

இந்தக் கட்டுரையின் ‘எடிட்’ செய்யப்பட்ட வடிவம் தினச்செய்தி(30-01-2016) நாளிதழில் வெளியாகியுள்ளது.

எண்ணூர் கழிமுகப்பகுதியை விழுங்கும் காமராஜர் துறைமுகம்: வடசென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை ஒட்டியிருக்கும் எண்ணூர் கழிமுகப் பகுதி மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி மரங்கள் உள்ள பகுதி. புயல், கடும் மழைக் காலங்களில் எழும் ஆக்ரோஷ அலைகளை அடக்கி, சாந்தப்படுத்தும் குணம் இந்த மரங்களுக்கு உண்டு. அலையாத்தி மரங்கள் நிறைந்த கழிமுகக் காடு பலவித உயிரினங்களுக்கும் வாழிடமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இறால்கள் சகதி நிறைந்த இந்த மண்ணில் செழிப்பாக உற்பத்தியாகும். இறால்கள், மீன்கள், நண்டுகள், சிறு புழுக்கள் என இந்த மண்ணில் வாழும் உயிரினங்களை உண்பதற்காக பறவைகள் வலசை வரும் காலத்தில் சில வகையான வெளிநாட்டுப் பறவைகளும் இங்கே வருகின்றன.

வட ஆற்காட்டிலிருந்து உற்பத்தியாகிவரும் கொசஸ்தலையாறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதி இது. இந்த முகத்துவாரப் பகுதியின் மற்றொரு புறம் பழவேற்காடு ஏரியும் இணைகிறது. இந்தப் பகுதியை எண்ணூர் துறைமுக நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார் சூழலியல் களப்பணியாளர் நித்தியானந்த் ஜெயராமன்.

“இரண்டு வருடங்களுக்கு முன் எண்ணூர் கழிமுகப் பகுதியில் ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். அந்த அறிவிப்பு இந்த இடம் காமராஜர் துறைமுக நிறுவனத்துக்கு சொந்தமானப் பகுதி என சொன்னது. அந்த பலகை நின்றிருந்த இடத்தைச் சுற்றிலும் நிலம் இல்லை. அது சேரும் நீரும் நிறைந்த கழிமுகப் பகுதி. கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் அந்த இடத்தை கவனித்தேன். அந்த இடத்தில் மண் நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.

2011-ஆம் ஆண்டு மத்திய அரசு இந்தப் பகுதியை பல்லுயிர்ச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவித்துள்ளது. அதுபோல, இந்திய நில அளவைத் துறையும் இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த இடத்தில் மண்நிரப்புவது குறித்து மேற்கண்ட அமைப்புகளுக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் கடிதம் எழுதினோம். எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அதற்குப் பிறகு பணியை மெதுவாக்கினார்கள்” என்றவர், எண்ணூர் துறைமுகத்திற்கான சரக்கு பெட்டக மையத்தை அமைப்பதற்காக இங்கிருக்கும் நீர்நிலைகள், மாங்குரோவ் காடுகள் ஆகியவற்றை அழித்து, இங்கு நிலம் உருவாக்கப்பட்டுவருவதாகக் கூறுகிறார்.

“சூழல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில், பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் என இரண்டு மிகப் பெரிய அனல் மின் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.

இந்த அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் இந்தப் பகுதியில் நேரடியாகக் கொட்டப்படாவிட்டாலும், அதனைக் கொண்டு செல்லும் குழாய்களில் இருக்கும் பழுதின் காரணமாக, அப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவுக்கு சாம்பல் படிந்து காணப்படுகிறது.

எண்ணூரை ஒட்டியுள்ள பகுதியில் மழை நீர் வேகமாக வடிவதற்கு கழிமுகப்பகுதி வடிகாலாகப் பயன்படுகிறது. இந்நிலையில் துறைமுகம் இந்தப் பகுதியில் மண்ணைப் போட்டு மூடி புதிய நிலப்பகுதியை உருவாக்கிவருகிறது. பள்ளிக்கரணையில் நடந்த ஆக்கிரமிப்புகள் எப்படி தென் சென்னை மூழ்கக் காரணமாக அமைந்ததோ அதேபோல எதிர்காலத்தில் வட சென்னையில் வெள்ள சேதம் ஏற்படுவதற்கு இது வழிவகுக்கும்” என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை வளமான மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எண்ணூர் துறைமுகம் இப்படி ஒரு கட்டுமானப் பகுதியை ஏற்படுத்துவதற்கு தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருப்பதாகவும் அனுமதி இதுவரை கிடைக்காத நிலையிலேயே இந்தப் பணிகளை துறைமுக நிர்வாகம் மேற்கொண்டுவருவதாகவும் இவர் குற்றம்சாட்டுகிறார்.

படங்கள்: அமிர்தராஜ் ஸ்டீபன்

காய்கறித் தேவையை தீர்த்துவைக்கும் வீட்டுத்தோட்டம்

DSCN0954

மழைக்காலத்தில் காய்கறித் தேவையை தீர்த்துவைக்கும் வீட்டுத்தோட்டம் போடலாம். ஆலோசனை தருகிறார் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில்…

வடகிழக்குப் பருவமழை ஆரம்பமாகிவிட்டது. வறண்டு போயிருந்த நிலமெங்கும் பச்சை வண்ணம் போர்த்த ஆரம்பிக்கும். இந்தக் காலமே வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைக்க ஏற்ற காலம். சத்துமிக்க மழைநீர் செடிகளின் வளரும் திறனை ஊக்குவிக்கும். பருவநிலையில் செடிகளின் வளர்ச்சியைப் பராமரிக்கும். இதற்குப் பிறகு வரும் நான்கு மாதங்கள்தான் சென்னை போன்ற நகரங்களில் காலநிலைக்கு செடிகளை வளர்க்கக்கூடியதாக இருக்கிறது. கொளுத்தும் வெயில் நேரங்களில் செடிகளின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படுகிறது, பசுமை குடில்கள் அமைத்துதான் பாதுகாக்கப்பட வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, பருவம் பார்த்து பயிர் செய் என்பதற்கேற்ப இந்தக் காலக்கட்டத்தை வீட்டுத்தோட்டம் அமைப்பது அதன் மூலம் சிறிய காலக்கட்டத்திற்காவது ரசாயனங்கள் அற்ற காய்கறிகளை விளைவித்து உண்ணலாம்.

வீட்டுத்தோட்டம் போடும் முன் இது அவசியம்!

வீட்டைச் சுற்றியிருக்கும் நிலத்திலேயோ அல்லது மாடியில் தொட்டிகள் அமைத்தோ தோட்டம் அமைக்கலாம். இரண்டில் எது செய்வதனாலும் நிலத்தைவிட அரை அடி அளவுக்கு உயரத்தை உயர்த்தி அதன்மேல் தோட்டம் அமைக்க வேண்டும்.

மாடியில் செங்கல்லை அடுக்கி அதன் மேல் தொட்டிகள் அமைக்க வேண்டும். அதுபோல தரையில் மேல் மண்ணை நன்றாகக் கொத்திவிட்டு, அதை மேடாக அமைத்து பாத்தி போல உருவாக்க வேண்டும்.

விதைகள் நடும் முன் கட்டாயம் இதைச் செய்யுங்கள்!

விதைகள் அல்லது செடியை நடும் முன் தொட்டி மண்ணிலும் தரை மண்ணிலும் எருவைக் கலந்து வைக்க வேண்டும். மண்புழு உரம் அல்லது இயற்கை உரங்களை பயன்படுத்துவதே நலம். வீட்டுத் தோட்டம் அமைப்பதன் நோக்கமும் அதுதானே. அடுத்து, விதைகள் அல்லது செடி நடும் முன் நடவேண்டிய இடத்தில் சிறிதளவு சாம்பல் போடுவது நலம். சாம்பல் கிடைக்காதவர்கள் கடைகளில் கிடைக்கும் வறட்டியை எரித்து சாம்பலாக்கி பயன்படுத்தலாம். சாம்பலில் பொட்டாசியம், நைட்ரஜன் சத்துக்கள் அதிகம். இவை செடிகளின் முதல் கட்ட வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.

மூடாக்குப் போடுங்கள்!

காய்ந்த இலை, தழைகளை நட்ட விதைகளின் மேல் மூடாக்காகப் போடுங்கள். இந்த சருகுகள் மக்கி மண்ணில் நுண்ணுயிர்களை அதிகப்படுத்தும். நுண்ணுயிர்கள் மண் வளத்துக்கு அவசியமானவை. மண் வளமாக இருந்தால் செடியும் வளமாக வளரும்.

வீட்டிலேயே பயிர் வளர்ச்சி ஊக்கி தயாரிக்கலாம்

இப்போது பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இயற்கை முறையில் பயிர் வளர்ச்சி ஊக்கிகளை தயாரிக்கலாம். வீட்டில் பழுத்து வீணான பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது நன்கு பழுத்த பழங்களையும் எடுத்துக்கொள்ளலாம். அதில் சம அளவு வெல்லத்தைச் சேர்த்து நன்றாகக் கரைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கரைசலை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு 15 நாட்களுக்கு அடைத்து வையுங்கள். இந்தக் கரைசல் நுரைத்து வாயு வெளியேறும் அதனால் அவ்வவ்போது திறந்து மூடி வையுங்கள். 15 நாட்களுக்குப் பிறகு தெளிந்த கரைசல் உருவாகியிருக்கும். இந்தக் கரைசலை தேவையான நேரங்களில் சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலந்து செடிகளுக்குத் தெளிக்க வேண்டும். இதைப்போல தூக்கி எறியும் வீணான மீன் பாகங்களை வைத்து, இதேபோல் மீன் அமினோ கரைசல் தயாரிக்கலாம்.

தோட்டத்தில் என்னென்ன செடிகள் நடலாம்?

அடிக்கடி வீட்டில் உபயோகப்படுத்தும் தக்காளி, மிளகாய் போன்ற செடிகளை நடலாம். கத்தரி, வெண்டை, சுண்டைக்காய் போன்ற செடிகளை நடலாம்.

பூச்சிகள் வந்தால் என்ன செய்வது?

சத்துக்கள் கொடுத்தாகிவிட்டது; செடியும் வளர்ந்தாகிவிட்டது; பூச்சிகள் வந்தால் என்ன செய்வது? வேப்ப எண்ணெய்யுடன் சோப்பு கலந்தால் வெண்மையான கரைசல் உருவாகும். நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்… இந்தக் கரைசலை நீரில் கலந்துதான் செடிகள் மேல் தெளிக்க வேண்டும். செடிகள் மேல் தெளிப்பதற்கு முன் ஒன்றிரண்டு இலைகளில் அடித்து நான்கைந்து மணிநேரம் காத்திருங்கள். இலைகள் கருகாமல் இருந்தால் செடிகளுக்குத் தெளிக்கலாம். கருகினால் மேற்கொண்டு அந்தக் கரைசலில் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும்.

நரபலி பின்னணி என்ன?

கிரானைட் முறைகேடு விசாரணையில் சகாயம் தலைமையிலான சட்ட ஆணையம், பிஆர்பி நிறுவனத்தால் நரபலி கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் கீழவளவு கிராமத்தில் ஒரு குழந்தை உள்பட மூவரின் மண்டை ஓடு, எலும்புகளைத் தோண்டி எடுத்தது. கிரானைட் முறைகேட்டில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ள இந்த நரபலி விவகாரத்தில் 175க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார் சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த முகிலன். இதுகுறித்து அவர் இப்போது.காமுக்கு அளித்த நேர்காணல்…

தமிழில் உயிரியல் புத்தகங்கள் உண்டா?

சமீபகாலமாக சூழலியல் சார்ந்தும் புத்தகங்கள் வருகின்றன. பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றன. மொழிபெயர்ப்புகள் வருவதில்லை தவறு ஏதும் இல்லை. ஆனால் நம்முடைய சூழல் சார்ந்து, நம்முடைய வாழிடம் சார்ந்த அனுபவங்களை ஒட்டிய சூழலியல் பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே சூழலியல் எழுத்தாளர்கள் இங்கே எழுதுகிறார்கள்.  அப்படியெனில் இங்கே சூழலியல் சார்ந்து குறைவானவர்கள்தான் இயங்குகிறார்களா என்கிற கேள்வி எழலாம். ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்… சூழலியல் சார்ந்து இயங்கும் உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், ஆர்வலர்கள் போன்றோர் ஆங்கிலத்தின் ஊடாகவே எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள்.  அவர்கள் பயன்படுத்தும் ஆய்வு மாதிரிகள், கையேடு, மூலங்கள் என அனைத்தையும் ஆங்கிலத்தின் வழியாக பெறுகிறார்கள் . அந்தப் பாதையை ஒட்டியே ஆங்கிலத்தின் வழியாகவே தங்கள் பதிவுகளை செய்கிறார்கள். இறுதியில் பாடப் புத்தகங்களில் மட்டுமே மதிப்பெண்களுக்காக தாவரவியலையும் விலங்கியலையும் படிக்கிறோம். நம் வாழ்வியலை விட்டு அகன்றுவிடும் எதுவுமே இப்படி வழக்கொழிந்துதான் போகும். சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட சூழலியலின் தொடர்ச்சி எப்போது அறுபட்டது என்கிற கேள்வி இப்போது எனக்குத் தோன்றுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யும் நேரத்தில் இரண்டு சூழலியல் கட்டுரைகளை தமிழில் எழுதிவிடலாம் என்பதால் இதைக் கைவிடுவதே உசிதம்.

சமீபத்தில் ஒரு நண்பகல் வேளையில் எங்கள் வீட்டின் தொட்டிச் செடியில் வழக்கத்துக்கு மாறான சிலந்தியைக் கண்டேன்.  வெள்ளை உடலின் பழுப்பு ரேகை ஓடிய தடம் அந்தச் சிலந்தியை மிக அழகான சிலந்தியாகக் காட்டியது. அதை தொந்திரவுக்கு உள்ளாக்காமல் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு நண்பகல் வேளையில் அதே இடத்தில் அதே வகையான சிலந்தியைக் கண்டேன். அங்கே இதே வடிவத்தை ஒத்த, முழு உடலும் பழுப்பில் அமைந்த வேறொரு சிலந்தியைக் கண்டேன். அதியும் புகைப்படங்களில் பதிவு செய்து கொண்டேன்.

இந்த சிலந்திகள் வீட்டில், ஏற்கனவே தோட்டத்தில் பார்த்த சிலந்திகளைப் போன்று இல்லை என்பதால் அவற்றைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினேன். இணையத்தின் வழியாக தகவல்களைப் பெற முடியவில்லை. ஆங்கிலத்தில்கூட இந்திய சிலந்திகள் பற்றி போதிய பதிவுகள் இல்லை என தெரிந்தது. இதுவரை இந்திய சிலந்திகள் பற்றி ஒரே ஒரு புத்தகம்தான் வந்துள்ளது. அதுவும் 2009ல் தான் வெளியாகியிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் Spiders of India. இதற்கு முன் தொகுப்பு நூல்களில் சிலந்திகள் இடம்பெற்றிருந்திருக்கலாம். சிலந்தி பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றன, ஆனால் சிலந்திகள் பற்றிய முழுமையான நூல் இது ஒன்றுதான். நான் தேடியவரை இது ஒன்றுதான். இந்தப் புத்தகமும் அதைத்தான் சொல்கிறது.

spider of India

கொச்சின் சேக்ரட் ஹார்ட் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் P.A. Sebastian மற்றும் கேரள வேளாண்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் K.V. Peter எழுதிய இந்த நூல் இந்திய சிலந்திகள் குறித்த முழுமையான தகவல்களைத் தருகிறது. மொத்தம் 734 பக்கங்கள். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1520 வகையான சிலந்திகளின் விவரங்கள் இதில் பெறலாம். விவரங்கள் முழுமையானவை அல்ல, இந்திய சிலந்திகள் பற்றிய ஆரம்ப நூல் என்பதால் எல்லா விவரங்களையும் எதிர்பார்க்க முடியாதுதான். பின் இணைப்பில் பல சிலந்தி வகைகளின் வண்ணப்படங்கள் தரப்பட்டுள்ளன. சிலந்திகளின் பரிணாம வளர்ச்சியிலிருந்து சிலந்தி வலைப் பின்னல் அமைப்பு, சிலந்தி வலை நூலின் தொழிற்நுட்பம், உடல் அமைப்பு என அடிப்படைத் தகவல்களை இந்த நூலில் பெறலாம்.  சிலந்திகள் பற்றிய ஆய்வில் இருப்பவர்கள், ஆர்வலர்களுக்கு உகந்த நூல். விலை ரூ. 1000லிருந்து ரூ. 1500க்குள் அமேசானில் வாங்கலாம்.

DSCN2046

Oxyopes lineatipes

 

DSCN2098

Oxyopes shweta

 

நான் கண்ட சிலந்திகளின் பெயர்கள் Oxyopes shweta, Oxyopes sunandae, Oxyopes lineatipes. புல்வெளிகள், சிறிய புதர்களில் வாழும் இவை. இவற்றில் ஆணைவிட பெண் இனங்கள் சற்று பெரிதானவை. இந்தியா, சீனாவை வாழிடமாகக் கொண்டவை. இதில் Oxyopes sunandae  இந்தியாவை மட்டும் வாழிடமாகக் கொண்டது, அழிந்துவரும் உயிரினமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உடல் பகுதி வெளிர் பச்சை நிறத்தி அமைந்த Oxyopes lineatipes சிலந்தி இந்தியா, சீனாவிலிருந்து பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமத்ரா வரை பரவியுள்ளன என்கிறது இந்த நூல். ஒரு கிளையை அல்லது இலையை சுற்றி மெல்லிய வலைகளைப் பின்னி, தங்களுடைய இரைகளை இவை பிடிக்கின்றன. பகல் வேளைகளில் இந்த சிலந்திகள் இரை தேடும், அதனால் அந்த நேரங்களில் இவற்றைக் காணலாம்.

அழிந்துவரும் உயிரினம் ஒன்று எனக்கு அருகிலேயே உள்ளதை தெரிவித்தது இந்தப் புத்தகம். ஒரு சில தொட்டிச் செடிகள் இவற்றை வாழ வைத்திருக்கின்றன. செடிகள் வெட்டி, ஒழுங்கு செய்யும்போது இனி இவைகளைப் பற்றியும் கவனம் கொள்வேன்.