கருவிலிருந்து கல்லறை வரை பெண்ணுடலை சிதைக்க காத்திருக்கும் காமுகர்களின் சமூகம்!

Copy of Photo-0008_1

‘நெய்வேலில ஒரு ஆஸ்பிட்டல் இருக்குது. அங்க போன ஸ்கேன் பண்ணி, ஆம்பளையா பொம்பளையான்னு சொல்லிடுவாங்க. எங்கூருல நெறைய பேர் அங்க போய் பாத்து ஸ்கேன் பண்ணி பொம்பளையா இருந்தா அபார்ஷன் பண்ணிடுவாங்க’

வறட்சியால் துவண்டு கிடக்கும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப் போனதில் மெட்ரோ பாலிடன் சென்னையைத் தேடி வரும் ஆயிரக்கணக்கானவர்களில் அந்தப் பெண்ணும் ஒருவர். விழுப்புரம் மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமம் என்று சொன்னார். 3 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை அவருக்கு. இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட, ஆரம்பத்தில் விவசாயம் பார்த்து வாழ்ந்திருக்கிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன் நகரத்து கட்டட வேலைகளுக்கு விவசாயிகள் வரத் தொடங்கிய நேரத்தில் இவரும் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். சித்தாளாக 15 ஆண்டுகள் கல், மண் சுமந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, எல்லோருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார். தற்போதும் இங்கேயே வசிக்கிறார்.

சமீபத்தில் இவருடன் பேசியபோது இயல்பாக இவர் சொன்ன அந்த விஷயம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மருமகள் இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருப்பதாக சொன்னவர், இந்த முறை ஆண்தான் என்று உறுதியாக தெரிந்துவிட்டது என்றார்.

‘எப்படி?’
‘நெய்வேலில ஒரு ஆஸ்பிட்டல் இருக்குது. அங்க போன ஸ்கேன் பண்ணி, ஆம்பளையா பொம்பளையான்னு சொல்லிடுவாங்க. எங்கூருல நெறைய பேர் அங்க போய் பாத்து ஸ்கேன் பண்ணி பொம்பளையா இருந்தா அபார்ஷன் பண்ணிடுவாங்க’

‘எந்த ஆஸ்பிட்டல்? பேர் என்னா?’

‘பேர் தெரியலமா, ஆயிரபா குடுத்தா ஸ்கேன் பண்ணி சொல்லிர்றாங்க. எம் மருமவ அங்கதான் போய் பாத்துட்டு வந்துருக்குது. ஆம்பளை புள்ளன்னு சொல்லிட்டாங்களாம்.’

‘ஹாஸ்பிட்டல் பேர் தெரியலையா?’

‘தெரில…என்னான்னு. இப்படி ஸ்கேன் பண்ணி சொல்றாங்கன்னு தெரிஞ்சி கெவர்மெண்ட்ல சீல் வச்சிட்டாங்களாம். பூட்டு போட்டிருந்தாகூட பின் பக்கமா போயி வந்துகுனுதான் இருக்காங்க.’

அதற்கு மேல் அவரிடமிருந்து தகவல்களைப் பெற முடியவில்லை. அரசாங்கம் சீல் வைத்த பிறகும் ஒரு மருத்துவமனை இயங்குகிறது என்றால், அதற்கு பொதுமக்கள் தரும் ஒத்துழைப்பு முதன்மையான காரணம். அடுத்த காரணம் தவறை கண்டுகொள்ளலாம் இருக்கும் அதிகாரிகள்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள என் பூர்விக கிராமத்துக்குச் சென்றிருந்தபோது இதேபோல் இன்னொரு சம்பவத்தையும் கேள்விப்பட்டேன். என்னுடன் படித்த பெண் அவர், அவருக்கு ரெண்டு பெண் குழந்தைகள், மூன்றாவதாக கர்ப்பமானதாகவும் 5 மாதத்தில் அது பெண் என்று தெரிந்துவிட்டதால் கலைத்துவிட்டதாகவும் சொன்னார்.

‘அப்பாடா பெண் சிசுக்கொலைகளை ஒழித்துவிட்டோம். தொட்டில் குழந்தை திட்டம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது’ அரசுகள் ஒருபுறம் கூவிக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் பெண் சிசுக்கொலைகள் நவீன வசதிகளோடு உலா வந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஆரம்ப கட்ட சமூக சீர்திருத்தத்தைக் கூட செய்ய முடியாத அரசாங்கம் காமுகர்களிடமிருந்து எப்படி பெண்களைக் காப்பாற்றும்?

அப்படியே கருவிலிருந்து தப்பி வந்தாலும் 3 வயதில், 12 வயதில், 22 வயதில், 38 வயதில், 50 வயதில் ஏன் 70 வயதில்கூட காமுகர்கள் விடமாட்டார்கள். கருவிலிருந்து கல்லறை போகும்வரை பெண்ணை சிதைக்க காத்துக்கொண்டிருக்கிறது இந்த கேடுகெட்ட சமூகம்!

அம்மாவின் டைரி-2

எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்போதாவது என் கணவர் திருந்துவார் என்று நினைத்திருந்தேன். அவர் மேலும் அதிகமாக செலவு செய்ய ஆரம்பித்தார். என்னுடைய 3 மாத பிரசவ கால விடுப்பு முடிந்து வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது கைக் குழந்தையை வைத்திருக்கிறேனே என்றுகூட பார்க்காமல் எங்களை விட்டுவிட்டு ஊர்ஊராக சீட்டாடிக்கொண்டு திரிந்தார். நான் என்னுடைய 3 மாத கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து வேலைக்குப் போவேன். அப்போது பட்ட கஷ்டங்களை அளவிட முடியாது. ஆனால் என்னுடைய குழந்தையைப் பார்த்து சந்தோஷப்படுவேன்.
நான் வேலை பார்த்து வந்தது கன்னடம், தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் பகுதியில். அங்கு தமிழ் பள்ளிக்கூடம் இல்லை. நாங்கள் வசித்த கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மற்றொரு கிராமத்தில் இருந்த ஆரம்ப பள்ளியில்தான் என் மகளை சேர்த்து படிக்க வைத்தேன். தினமும் காலையில் என்னுடைய குழந்தையை விட்டுவிட்டு, மாலை 4 மணிக்கு போய் அழைத்து வருவேன்.
நான் வேலை செய்த கிராமத்து மக்கள் மிகவும் நல்லவர்கள். எனக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தனர். இந்த நேரத்தில் என்னுடைய பள்ளி ஆயாக்களை குறிப்பிட்டு சொல்கிறேன்.
என்னுடைய வேலைகளை சரியாக செய்து ஊர் மக்களுக்கு பல நன்மைகளைச் செய்தேன். அந்த ஊர் மக்களுக்கு தமிழ் பேச தெரியாது. தமிழ் படித்தவர்களும் கிடையாது. அதனால் நான் கஷ்டம் எதுவும் பார்க்காமல் அந்த ஊரைச் சேர்ந்த படிக்கிற பிள்ளைகளுக்கு தமிழ் பேச, எழுத கற்றுக் கொடுத்தேன். அதனால் அந்த ஊர் மக்கள் என் மீது பாசமாக இருந்தனர். அந்த ஊரில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும் என்னை அழைத்துச் செல்வார்கள். இப்படி 16 வருஷங்கள் அந்த ஊரில் வேலை செய்தபிறகு, எனக்கு பதவி உயர்வு கிடைத்தது.
அங்கன்வாடி டீச்சராக இருந்து, மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றேன். பயிற்சிக்காக கோயம்புத்தூர் சென்றபோதுதான் என்னுடைய கணவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது.

(தொடரும்)

இலங்கை தமிழர் பிரச்சினையும் சுரணையற்ற மனிதர்களை உற்பத்தி செய்யும் கல்விக்கூடங்களும்!

20071112503903012க பத்திரிகையாளரும் என்னுடைய தோழியுமான சுகிதா,இரண்டு வாரங்களுக்கு முன் நண்பர்கள் எல்லோரையும் தன் மகள் தீட்சண்யாவின் பள்ளி ஆண்டுவிழாவைக் காண வருமாறு அழைத்திருந்தார். மழலையர் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் இரண்டரை வயது தீட்சண்யா மறுவேடப்போட்டியில் கலந்துகொள்ளப்போவதாகக் கூறி,நேரில் வந்து அவளை உற்சாகப்படுத்தும்படி சொல்லியிருந்தார். சுகிதா இது போன்ற போட்டிகளிலெல்லாம் விருப்பம் அற்றவர். மாறுவேடப்போட்டி என்று பெயரிருந்தாலும் கலந்துகொள்ளும் அனைத்து குழந்தைகளும் வெற்றிப்பெற்றவர்களாகவே கருதப்படுவர் என பள்ளியின் நிர்வாகத்தரப்பு உறுதியாகச் சொன்னதன் பேரில் தீட்சண்யாவின் பெயரை பதிவு செய்திருக்கிறார். மாறுவேடப்போட்டி என்றதும் தங்களுடைய குழந்தைகளை திருவள்ளுவர், விவேகானந்தர் போன்று வேடமிட்டு மழலைத் தத்துவங்களை உளற வைப்பதிலும் கடவுளர் வேடமிட்டு மத விஷத்தை பிஞ்சிலே ஆழப்பதிய வைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், சுகி ரொம்பே விலகி நின்று சிந்தித்து விட்டார்.போர்ச்சூழல் குழந்தைகளை எவ்வகையில் பாதிக்கிறது என்பதை சக பெற்றோருக்கும் விழா பார்வையாளர்களுக்கும் உணர்த்த, தன் குழந்தையை இலங்கை போரில் பாதிக்கப்பட்ட குழந்தையைப்போன்று வேடமிடப்போவதாக எங்களிடன் சொல்லியிருந்தார். அவருடைய முயற்சிக்குநேரில் வாழ்த்துக்கூற நண்பர்கள் கிளம்பினோம். சாலிக்கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆண்டுவிழா களைகட்டியிருந்தது. சரியாக நாங்கள் உள்ளே நுழைந்த நேரம் தீட்சண்யா மேடையை விட்டு இறங்கிக் கொண்டிருந்தார். எப்போதும் உற்சாகத்தோடு பார்த்து பழகிய சுகியின் முகத்தில் அன்றுதான் முதல்முறையாக சோர்வைக் கண்டேன். தீட்சண்யா மேடையேறியதைக் காணாவிட்டாலும் மற்ற குழந்தைகளின் மழலைப்பேச்சுக்களை சிறுது நேரம் கேட்டுக்கொண்டிருந்தோம். வழக்கம்போல ஓளவையார்,திருவள்ளுவர்,விவேகானந்தர்,முருகன்,சிவன்,கூடவே உலக அழகி வேடமிடப்பட்ட குழந்தைகள்…அதற்கு மேல் எங்களுக்கு பொறுமையில்லை. எல்லோருக்கும் பரிசுஎன்று சொல்லியிருந்த .பள்ளி நிர்வாகம் 6 குறளை ஒப்பித்த ஒரு குழுந்தைக்கு முதல் பரிசு என்று அறிவித்தது. அடுத்தடுத்த பரிசுகளும் இப்படியாக நீதிபோதனை,ஆன்மிக குப்பைகளை ஒப்பித்த குழந்தைகளுக்கு அறிவித்துக்கொண்டிருந்தபோது தோழியின் வீட்டுக்குப்போக நாங்கள் ஆட்டோ பிடித்துக்கொண்டிருந்தோம்.தோழியின் முக வாட்டத்திற்கான காரணமும் எங்களுக்கு புரிந்துபோனது.

நடந்ததை சொல்ல ஆரம்பித்தார் சுகி…விழா நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருந்த தொகுப்பாரிடம் இலங்கையில் நடக்கும் பிரச்சினை குறித்து இரண்டு வரி அறிமுகத்தை தமிழில் பேசுமாறு சொல்லியிருக்கிறார் தோழி.மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் அவர் ஆங்கிலத்திலேயே பேசியிருக்கிறார். நிர்வாகத் தரப்பில் கூறப்பட்ட காரணம் ,அடுத்து இலங்கை தமிழர் மீதான தாக்குதலை,குழந்தைகள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்று எழுதிக்கொண்டு போயிருந்த பதாகையை மேடையில் வைக்க அனுமதி மறுத்திருக்கிறது கல்விச் சான்றோர்கள் நிரம்பிய அந்த மேடை!இதுகுறித்து விழாவுக்கு வந்திருந்த “தமிழ்” பெற்றோர் எவருக்கும் எந்த புகாரும் இல்லை,வருத்தமுமில்லை. தோழி தனி ஒருவராக மன்றாடிவிட்டு எதுவும் நிகழாத சூழலில் குழந்தையோடு மேடையிலிருந்து இறங்கியிருக்கிறார்.

கல்விக்கூடங்கள் எனும் மூளை மழுங்கடிக்கப்பட்ட மனித உற்பத்தி சாலைகளில் இதுபோன்ற முற்போக்கான சிந்தனைகளுக்கு ஆதரவை எதிர்ப்பார்ப்பது நம் தவறுதான். ஒருபுறம் இலங்கை தமிழருக்காக இங்கிருந்து குரல்கொடுக்கும் தமிழர்களையும் இன்னொரு புறம் எங்கே எது நடந்தால் என்ன என் குழந்தை தங்கிலீஷ் படித்து அமெரிக்கா போனால் சரியென்று கிடக்கிற தமிழர்களையும் ஒருசேர பார்க்க முடிகிறது. இதில் யாரைக்குற்றம் சொல்லியும் பலனில்லை. ஏற்கனவே சமுதாயத்தில் ஊன்றப்பட்டு வேறோடியிருக்கிற ஒரு பிரச்சினைக்கு ஒருவரியில் தீர்ப்பு சொல்லிவி்ட முடியாது. ஆனாலும் குறைந்தபட்ச சமூக சிந்தனைகூட நம் கல்விக்கூடங்களுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது என்கிற கேள்வியும் நம்முன் எழத்தான் செய்கிறது…