தப்பிய வடகிழக்கு பருவமழை – இடம் மாறிய பூநாரைகள்!

படம்

நளினமும் அழகும் மிக்க பறவையினங்களில் ஒன்று பூநாரை! சென்னைக்கு அடுத்துள்ள பழவேற்காடு பகுதி பூநாரைகளுக்கு ரொம்பவும் பிடித்த இடம்.  இது ஒரு சூழலியல் சுற்றுலா தளமும்கூட. கடலை ஒட்டியிருக்கும் கழிமுகப் பகுதிகளில் கிடைக்கும் பாசியும் இறாலும் அதிகப்படியாக கிடைப்பதால் இந்தப் பகுதியில் சீசனின்போது ஆயிரக்கணக்கான பூநாரைகளின் அணிவகுப்பைப் பார்க்கலாம்.
பொதுவாக பூநாரைகளின் சீசன் ஏப்ரல் மாதத்துக்கு மேல்தான் ஆரம்பிக்கும். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே பூநாரைகள் வரத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார் சூழுலியல் செயல்பாட்டாளர் திருநாரணன். தி நேச்சர் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பை நிறுவி பல்வேறு சூழலியல் சார்ந்த பணிகளைச் செய்துவரும் இவர், அதன் ஒரு பகுதியாக பழவேற்காடு போன்ற பகுதிகளில் களஆய்வு மேற்கொள்கிறார்.
‘‘வருடா வருடம் பழவேற்காடு பகுதிகளில் எங்கள் அமைப்பு சார்பாக களஆய்வு செய்து வருகிறோம். இந்த ஆண்டு நாங்கள் ஆய்வில் கவனித்த விஷயம்…ஜனவரியிலேயே பூநாரைகளை அதிக அளவு பார்க்க முடிந்ததுதான். பழவேற்காடு ஆந்திர_தமிழக எல்லையில் அமைந்திருக்கும் பகுதி. வழக்கமாக நவம்பரில் வரத்தொடங்கும் பூநாரைகள் ஆந்திர மாநில எல்லைகளான சூலூர்பேட்டை, தடா பகுதிகளில் இருக்கும். அங்கு தண்ணீர் வற்றத் தொடங்கியது. தமிழகத்தின் அண்ணாமலைச் சேரி, பொன்னேரி பகுதிகளுக்கு வரத்தொடங்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் ஆந்திர எல்லையோர நீர்நிலைகள் வற்றிப்போய், இப்போதே தமிழக பகுதிகளுக்குள் வர ஆரம்பித்துவிட்டன.

படம்

இப்படி மழை தவறி பெய்வது அல்லது சரியான மழை பொழியாதது தொடர்ந்தால் வரும் காலங்களில் பூநாரைகள் இந்தப் பகுதிகளுக்கு வருவதை நிறுத்திவிடும் வாய்ப்பும் இருக்கிறது’’ என்நு எச்சரிக்கை மணி அடிக்கிறார் திருநாரணன்.

படங்கள் : தி நேச்சர் டிரஸ்ட்

 

தொடர்புடைய பதிவுகள்

வெளிர் சிவப்பு ஓவியம்!

சிலந்திகளின் படையெடுப்பு பருநிலை

மாற்றத்தின் அறிகுறி?!

சிலந்திகளின் படையெடுப்பு பருவநிலை மாற்றத்தின் அறிகுறி?!

பருவநிலை மாற்றத்தை இயற்கை நமக்கு சமீபகாலமாக பல்வேறு விஷயங்கள் வழியாக உணர்த்திக் கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு இந்த வருடம் பருவமழை தப்பியது, அடுத்த உதாரணம் அதிகப்படியான பனிப்பொழிவு. இவையெல்லாம் நம்மில் பெரும்பாலனவர்களின் பார்வைக்கு வருபவை. ஆனால் பருவநிலை மாற்றம் இயற்கையின்

IMG_0743

வேரடி மண்ணில் அசாத்தியமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
சென்ற மாதம் சென்னை பழவேற்காடு பகுதிக்கு வரும் பறவைகளின் இயல்புகளை படிப்பதற்காக சென்ற சூழலியல் செயல்பாட்டாளர்கள் ஒரு  அறிகுறியை அங்கே கண்டிருக்கிறார்கள். பழவேற்காடு சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சிலந்தி வலையாக இருந்திருக்கிறது.

IMG_0713

‘‘அப்படியொரு காட்சியை இத்தனை வருடங்களில் நாங்கள் பார்த்ததே இல்லை. மரங்கள், புதர்கள், நெல் வயல்கள், தரைப் பகுதிகளில்கூட சிலந்தி வலைகளைப் பார்த்தோம். சிலந்திகளை சாப்பிடும் உயிர்கள் அந்தப் பகுதியில் குறைந்திருக்கலாம். இயற்கையின் உணவுச் சங்கிலியில் ஏதோ மாற்றம் நிகழ்ந்திருப்பதே இப்படி சிலந்திகள் பெறுகியதற்குக் காரணம். எந்தவொரு உயிரனமும் அதிகப்படியாக இருந்தால் அது சூழலியலுக்கு ஆபத்தாகத்தான் முடியும்’’ என்கிறார் சூழலியல் செயல்பாட்டாளர் திருநாரணன்.

IMG_0724

ஆபத்தின் அறிகுறியாக இதை கருதி, அரசு அதிகாரிகள் இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

படங்கள்: நேச்சர் டிரஸ்ட்.

பனிவிழும் அதிகாலை பொழுதில் ஒரு ஜோடி பறவைகளின் கீச்சுக்குரல்!

DSC_0229

சென்னையின் கான்கீரிட் காடுகளிலிருந்து தப்பித்து, புத்துணர்வு பெற நீங்கள் ஊட்டி, கொடைக்கானல் செல்ல வேண்டியதில்லை. இதோ இங்கேயே இருக்கிறது ஒரு இடம். சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கிறது கழிமுகத்துவாரமான கழிவெளி. நன்னீரும் கடல் நீரும் சேரும் இந்த இடத்தில் பல வகைப்பட்ட பறவையினங்கள், ஊர்வன, புல் வகைகள், மீன் வகைகள் என பல்லுயிர்ச்சூழல் நிரம்பி காணப்படுகிறது.

DSC_0168 copy

முதலை பண்ணை செல்பவர்கள் பல்லுயிர்ச்சூழல் நிறைந்த இந்த இடத்திற்கும் சென்று பாருங்கள். நிச்சயம் இது புது அனுபவமாக இருக்கும். இன்னொரு விஷயத்தையும் நினைவில் கொள்ளுங்கள். இது வீக் எண்ட் பார்ட்டி கொண்டாடுவதற்கான இடமல்ல, நம் சூழலை காப்பதன் முக்கியத்துவத்தை அனுபவித்து உணர்வதற்கான இடம்.

DSC_0227 2 copy

பனி நிறைந்த ஒரு அதிகாலைப் பொழுதில் அமைதியாக அமர்ந்து, கூட்டிலிருந்து வெளியே வரும் பறவையின் கீச்சுக்குரலை கேளுங்கள். அதுவொரு இனிய அனுபவமாக இருக்கும்!

புலி உறுமல் கேட்குமா?

புலிகளை வீரத்தின் அடையாளமாகக் கருதி கொண்டாடிய சமூகம் நம்முடையது. இன்று அதே சமூகத்தின் சந்ததிகள்தான் புலிகள் எங்கே இருக்கின்றன? என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் நம் தேசிய விலங்கான புலிகள் எஞ்சியிருப்பது வெறும் 1411 மட்டுமே.

புலி ஒரு காட்டுயிர் மட்டுமல்ல, வளமான காட்டின் அடையாளம். அதாவது நாமும் நமக்குப் பின்னால் வரும் சந்ததிகளும் சிறப்பான வாழ்வை வாழப்போகிறோம் என்பதற்கான குறியீடு. அடர்ந்து வளர்ந்த மரங்களும் புல்லும் புதரும் நிறைந்த காட்டில் அதை உணவாக உண்ணும் முயல், மான், மாடு, காட்டுப் பன்றி, குரங்கு போன்ற உயிரினங்கள் வாழும். இவற்றின் எண்ணிக்கை கூடும்போது புலி, சிறுத்தை, நரி, ஓநாய் உயிரினங்களின் உணவுத் தேவை தீர்ந்து அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. இந்த மூன்றும் சங்கிலித்தொடராக தொடரும்போதுதான் காடு தன் இயல்பைத் தொலைக்காமல் இருக்கிறது. பருவ மழை சரியான பருவத்தில் பொழிந்து ஆறு பெருகி மக்களின் தேவைகளை நிறைவேற்றுகிறது. எல்லாமே ஒன்றொடொன்று தொடர்புடையவை. சென்னையில் இருக்கும் நான், மேற்கு தொடர்ச்சி மலையின் ஏதோ ஒரு சரணாயத்தில் வாழும் புலிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என ஏன் கவலைப்பட வேண்டும் என கேட்டுவிட முடியாது! நம் ஒவ்வொருவரின் கவனத்துக்கும் அக்கறைக்கும் உரியவை புலிகள். காடுகள் வேகமாக அழிக்கப்படுவதாலும் தோலுக்காக வேட்டையாடப்படுவதாலும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அழிவின் விளிம்பில் இருக்கும் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அரசும் தன்னார்வர்லர்களும் முழுமூச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த செயல்பாடுகளால் புலிகளின் எண்ணிக்கையும் சக இரையுண்ணிகள், அவற்றின் இரைகள், தாவர வளம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக வருடந்தோறும் மத்திய வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
கடந்த ஒன்பது வருடங்களாக வனவிலங்குகள் கணக்கெடுப்பில் பங்கேற்று வருகிறார் சென்னையிலிருந்து இயங்கிவரும் நேச்சர் டிரஸ்ட் அமைப்பைச் சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் திருநாரணன்.
“தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள வனங்களில் நடந்த கணக்கெடுப்பில் பங்கேற்று வருகிறேன். இந்த வருடம் ஆனைமலை பகுதியில் கணக்கெடு எடுத்தோம். புலிகள் கணக்கெடுப்பு என்று பெயர் இருந்தாலும் காட்டில் உள்ள அதாவது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட எல்லைக்குள் இருக்கும் மரம், செடி, விலங்குகள், பறவைகள் என அத்தனையையும் கணக்கெடுக்க வேண்டும். இதுதான் செயல்முறை. இதை வைத்துதான் புலிகளின் எண்ணிக்கையும் வாழ்வாதாரமும் கணிக்கப்படும்.

அந்த வகையில் ஆனைமலை சரகம் வளமோடு இருக்கிறது என்பதை நேரிடையாக பார்க்க முடிந்தது.
இவ்வளவு உயிரினங்கள் இருக்கின்றன என்று ஆறே நாட்களில் கணக்கிட்டு சொல்லிவிட முடியாது. புலி, சிறுத்தை போன்றவற்றை நேரிடையாக பார்ப்பதும் அரிதான விஷயம். அதனால் அவற்றின் கால்தடங்கள், கழிவுகள், மரங்களின் மேல் அவை ஏற்படுத்திச் சென்ற உராய்வுகள் இவற்றை வைத்து கணக்கெடுப்பு செய்கிறோம். மான் இனத்தில் பல்வேறு வகைகள் உண்டு. அவற்றின் கழிவு பொருட்களை வைத்துதான் அவை இந்த வகையைச் சேர்ந்தவை என்று குறித்துக்கொள்கிறோம். நீர் நிலைகளில் விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். அங்கு அவை விட்டுச்சென்ற அடையாளங்களையும் சேகரிப்போம். நீர்நிலைகளை வைத்து யானைகளின் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ள முடியும். இதெல்லாம் மறைமுக கணக்கெடுப்பில் வருபவை. பெரும்பாலும் காட்டுயிர் கணக்கெடுப்பில் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது. » » » »

பல காலமாக பின்பற்றிவரும் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கூறமுடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு சொல்லும் வகையில் ஹைதராபாத்தில் உள்ள செல்லுலர் மற்றும் மாலிக்குலர் மையம் (Centre for cellular and Molecular Biology) புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது புலிகள் விட்டுச்சென்ற தடயங்களிலிருந்து அவற்றின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து அவற்றின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதே இந்த முறை. உயிரினம் ஒவ்வொன்றுக்கும் டிஎன்ஏ அமைப்பு வேறுபட்டு இருக்கும். இதை வைத்து துல்லியமாக புலிகளின் எண்ணிக்கை சொல்ல முடியும் என்கிறது இந்த ஆராய்ச்சி நிறுவனம். முதுமலை வனசரணாலயத்தில் இந்த கணக்கெடுப்பு முறை சோதனை செய்து பார்க்கப்பட்டிருக்கிறது. இது ஆராய்ச்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டால் அனைத்து சரணாலயங்களிலும் இந்த முறை செயல்படுத்தப்படும் என்கிறது இந்நிறுவனம்.

« « « காட்டுயிர் வளத்தை மட்டுமல்ல, காட்டை நம்பி, அவற்றை சுற்றி வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறையை கவனிப்பதும் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற வகையில் முக்கியமான பணி. இந்த வருடம் ஆனைமலையில் வசிக்கும் முதுவர் பழங்குடி மக்களை சந்திக்க முடிந்தது. காட்டின் நடுவே உடுவம்பாறை, சங்கரன்குடி, பரமன்குடி போன்ற வசிப்பிடங்களில் அவர்களைப் பார்த்தோம். காடு, வனஉயிரினங்கள் குறித்த அவர்களின் அறிவு வியத்தலுக்குரியது. பழங்குடி இன மக்களைத்தான் வேட்டை தடுப்பு நடவடிக்கைக்காக அரசு பயன்படுத்திவருகிறது. காடு குறித்த அறிவுச்செல்வம் மிக்க இந்த மக்கள் வாழ்வாதாரத்தில் மிகவும் கீழ்நிலையில் இருக்கிறார்கள். இவர்களின் அறிவை பயன்படுத்திக் கொள்ளும் அரசு, அதற்குரிய வேலை உள்ளிட்ட பொருளாதார தேவைகளை செய்துகொடுக்க வேண்டும்” என்ற திருநாரணன்…» » » »

அடர் காடுகளில் மட்டுமே புலிகள் வசிக்கும். கடலும் ஆறு சேரும் முகத்துவாரப் பகுதியில் வசிப்பதால் வங்காளப் புலிகள் தனிச்சிறப்பானவை. அலையாத்தி(மாங்குரோவ்) மரங்கள் நிறைந்த சுந்தரவனக்காடுகளில் வாழும் வங்காளப் புலிகள், இன்னும் 60 வருடங்களில் அழிந்து விடும் என எச்சரித்துள்ளது உலக காட்டுயிர் பாதுகாப்புக்கான நிதியம்.

« « « “ஆனைமலை சரகத்தில் காட்டுவளம் நல்லநிலையில் இருந்தாலும் காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் தலையீடு அதிகமாகவே இருக்கிறது. புதிதாக முளைத்திருக்கும் தேயிலை தோட்டங்களும் அதை ஒட்டி எழுந்துள்ள குடியிருப்புகளும் காட்டுயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடியவை. இப்படி காட்டின் பகுதிகளை அபகரித்துக்கொண்டு, பின் நாளில் புலிகள் வேட்டையாடுகின்றன, யானைகள் அட்டகாசம் செய்கின்றன என்று கூச்சலிடுவதில் எந்த நியாயமும் இல்லை!” என்று முடித்தார்.


நாடு முழுவதும் நடந்த கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு காட்டுயிர் ஆர்வலர்களுக்கு இது ஆறுதலுக்குரிய செய்திதான் என்றாலும் இந்த வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு இன்னும் நிறைவே செய்யவேண்டியிருக்கிறது.

வெளிர் சிவப்பு ஓவியம்!

அண்ணாமலைச்சேரி…! சென்னை பழவேற்காடு சாலையோரம், கடல் நீர் கால் தழுவும் கழிமுகப் பகுதி. காடு, நிலம், கடல், கழிமுக நீர் என நாலா பக்கமும் விதவிதமாக விரிந்துகிடக்கிறது இயற்கை. குட்டிக் குட்டி மணல் திட்டுகள் நிறைந்த நீர்ப்பரப்பு இதன் சிறப்பு. இதுதான் பூநாரைகளைக் கூட்டம்கூட்டமாக வசீகரித்து வரவழைக்கிறது. அமாவாசை, பௌர்ணமி நேரங்கள் தவிர்த்து கழிமுகப் பகுதிக்குக் கடல் நீர் குறைவாக வரும் நேரங்களில் பூநாரைகள் நூற்றுக்கணக்கில் இரை தேடுவதைப் பார்க்கலாம்.

வெள்ளை கேன்வாஸில் வெளிர் சிவப்பு நிறத்தில் வரைந்த ஓவியத்தில், திருஷ்டிக்காகக் கறுப்பு மை இட்டது போல அத்தனை அழகாக இருக்கிறது ஃபிளெமிங்கோ எனப்படும் பூநாரை!

தமிழகத்துக்கு ஏப்ரல் மாத விருந்தாளிகள் இந்தப் பூநாரைகள். ”இங்கே வரக்கூடிய பறவைகளிலேயே ரொம்ப அழகானது பூநாரைகள்தான். மொத்தம் ஐந்து வகையான இனங்கள் இருக்கு. நம்ம ஊருக்கு கிரேட்டர், லெஸ்ஸர்னு இரண்டு இனங்கள் வரும்.

பரிணாம வளர்ச்சியில் நாரைக்கும் வாத்துக்கும் இடைப்பட்ட இனம் இது. நாலரை அடி வரைக்கும் வளரும். ஒரே இரவில் 600 கி.மீ தூரம் பயணப்படும். இன்னொரு சுவாரஸ்யமான சங்கதிமனிதர்களுக்கு முன்பே பூமியில பிறந்தவை பூநாரைகள். அதாவது, 50 மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில இருப்பவை!” என பூநாரைப் பற்றிய தகவல்களை அடுக்கிக்கொண்டே போகிறார் திருநாரணன். சூழலியல் ஆர்வலரான இவர், சென்னைக்கு வருகை தரும் பறவைகளைத் தொடர்ந்து கவனித்து வருபவர்.பெரும்பாலும் உப்புநீர் உள்ள பகுதிகளில்தான் பூநாரைகள் வசிக்கும். குஜராத்திலிருந்து குளிர் காலத்தில் கிளம்பி வரும் பறவைகள், வெயில் காலம் முடியும் நேரத்தில் முட்டை வைப்பதற்காக மீண்டும் குஜராத் போகும். களிமண்ணில் உருளையான கூடு செய்து, அதில்தான் முட்டை வைக்கும். அதிகபட்சம் ரெண்டு முட்டைகள் வைக்கும். குஞ்சு பொரித்து, வளர்ந்து, பறக்க ஆரம்பிக்கிற நேரத்தில் அங்கேயிருந்து கிளம்பிடும். தமிழ்நாட்டில் பழவேற்காடு, கழிவெளி, கோடியக்கரை, சாத்தான்குளம், செய்யூர் போன்ற பகுதிகளில் பூநாரைகளைப் பார்க்கலாம்.பறக்கத் துவங்கும் காலத்தில் வெள்ளையும் கறுப்புமாக இருக்கும். வளர வளரத்தான் வெளிர் சிவப்பு நிறமாக மாறும். ‘பீடா கரோட்டின்உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதுதான் இதன் வெளிர் சிவப்பு நிறத்துக்குக் காரணம். பாசி, இறாலை விரும்பிச் சாப்பிடும். குச்சிக் கால்களுடன் ஆழம் குறைவான இடத்தில் மணிக்கணக்காக நின்று இரை தேடும். எப்போதும் கூட்டமாகத்தான் இருக்கும். ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு வரிசையாக அத்தனை அழகாக நடந்து போகும். இவை கூட்டமாகப் பறப்பதைப் பார்த்தால், வானத்தில் கோலம் போட்டது மாதிரியே இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு வரை லட்சக்கணக்கில் வந்து கொண்டு இருந்த பூநாரைகள் இப் போது பத்தாயிரமாகக் குறைந்து விட்டதாக சொல்கிறார்கள். இந்தப் பகுதியில் விற்பனைக்காக இறால் பிடிப்பது அதிகரித்து வருகிறது. அளவுக்கு மீறி பூநாரைகளின் உணவில் நாம் கை வைக்கிறோம். பகிர்ந்து உண்ணுதல் வேண்டும் என்று சொல்கிற நாமே இப்படிச் செய்தால் என்ன நியாயம்?” என்கிறார் திரு நாரணன்.புலிகள் இருக்கும் காடுதான் நல்ல வளமான காட்டின் அடையாளம் என்று சொல்வதைப் போல, பூநாரைகள் வசிக்கும் இடத்தை வளமான கழிமுகப்பகுதிக்கு அடையாளமாகச் சொல்கிறார்கள் சூழலியல் அறிஞர்கள். பூநாரைகள் வசிக்கும் இடத்தில் மற்ற பறவையினங்களும் அதிகமாக இருக்குமாம். அண்ணாமலைச்சேரி பகுதியில் இருநூறுக்கும் அதிகமான பறவையினங்கள் இருப்பதாகப் பதிவு செய்திருக்கிறது மும்பை இயற்கை வரலாறு அறக்கட்டளை. நீர்க்காகம், கூழைக்கடா, நத்தைகொத்தி நாரை, கடல் ஆலா, அரிவாள் மூக்கன், உப்பு உல்லான், நாரை, கொக்கு இனங்கள் என நிறைய வகைகளை இங்கே பார்க்க முடிகிறது. பழவேற்காட்டிலிருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கிறது அண்ணாமலைச்சேரி. அங்கிருந்து படகுப் போக்குவரத்து வசதி உள்ளது. சில இடங்களில் மட்டுமே ஆழம் அதிகமாக இருக்கும். ஆழம் குறைவான இடங்களில் படகிலிருந்து இறங்கி, பறவைகள் உள்ள இடத்தின் அருகில் சென்றும் பார்க்கலாம். சித்திரை வெயிலைத் தவிர்க்க அதி காலையிலேயே விசிட் அடிப்பது நல்லது.

பறவைகளே! எங்கு இருக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்குஇங்கே இருக்கிறோம்!’ என்று கோரஸாகப் பதில் சொல்கின்றன இந்தப் பறவைகள். அண்ணாமலைச்சேரிக்கு ஒரு தடவைபறந்துதான் பாருங்களேன்!