செங்காந்தள் மலரும் மரகதப் புறாவும்

மருதாணிப் பூசிச் சிவந்த கைவிரல்கள் காட்டும் நாட்டிய முத்திரைப்போல அழகுடைய பூ செங்காந்தள்! தமிழ்நாட்டின் மலர். இன்றைய தலைமுறையில் பலர் இந்தப் பூவைப் பார்த்திருக்கமாட்டார்கள்; கேள்விப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கூட ஏரிக்கரைகளில் புதர்மண்டிய இடங்களில் செங்காந்தள் கொடி படர்ந்திருக்கும், அதில் ஆங்காங்கே சிவந்த பூக்கள் பூத்திருக்கும். அதை ரசிக்காமல் யாரும் அதைத் தாண்டிச் சென்றிருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை தாம்பரம், சோழிங்கநல்லூர் போன்ற சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் இந்தச் செடிகளைப் பார்த்திருக்கிறேன். இப்போது எங்கும் கான்கீரிட் மயம். வனங்களுக்குப் போகும்போதுதான் செங்காந்தளை ரசிக்க முடிகிறது.

செங்காந்தள் கிழங்கு மருத்துவ குணமுடையது என்பதால் சில விவசாயிகள், அதைப் பயிர் செய்கிறார்கள். வீட்டித் தோட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மலர்ச்செடிகள் வளர்ப்பதை பலர் பெருமையாக நினைக்கின்றனர். இப்படி இறக்குமதியான பல தோட்டச் செடிகள் களைகளாக வனத்துக்குள் புகுந்து இம்மண்ணுக்கே உரிய செடிவகைகளை, உயிர்ச்சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றன.

kanthal

உயிர்ச்சூழல் ஒரு வலைப்பின்னல் போன்றது. நம் மண்ணுக்குரிய செடிகளை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று கேட்கலாம். இந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் வளரும் இந்தச் செடிகளை நம்பி பூச்சிகள், இந்தப் பூக்களில் தேனெடுக்க வரும் வண்டுகள், சிட்டுகள் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. செடிகள் இல்லாமல் போகும்போது அவற்றின் உணவுச் சங்கிலி தடை படுகிறது. நேரடியாக இது மனிதனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், சூழலியலில் இது எதிர்மறை மாற்றத்தை உண்டாக்கும். செங்காந்தள் போன்ற அழகு நிறைந்த, நம் சூழலுக்கு ஏற்ற நம் மண்ணின் செடிகளை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்க மக்கள் முன்வர வேண்டும்.

மரகதப் புறா

பச்சைப் புறாக்கள் என்று குறிப்பிடப்படும் மரகதப் புறாக்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊர்ப்புறங்களில் காணக் கிடைத்தன. இன்று அடர் வனங்களில் மட்டுமே இவை வாழ்கின்றன. கட்டுக்கடங்காமல் வேட்டையாடப்பட்டதுதான் இவை இல்லாமல் போகக் காரணம்.

நீலகிரி வரையாடு

இதுபோல நீலகிரி வரையாடும் அதிகளவில் வேட்டையாடப்பட்டதாலேயே இன்று அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இமயமலை மலைத்தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மட்டுமே வரையாடுகள் உள்ளன. செங்குத்தான மலைகளே இவற்றின் வசிப்பிடங்கள். நீலகிரி மலைகளில் வசிப்பதால் இந்த வரையாடு, நீலகிரி வரையாடு என சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை இந்திய காட்டுயிர் வாரம் கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் சூழலியல், காட்டுயிர் சார்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல கருத்தரங்கங்கள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாம் இந்த ஆண்டின் காட்டியிர் வார விழாவில் நம் தமிழ்நாட்டின் மலரான செங்காந்தள், மாநில பறவையான மரகதப் புறா, மாநில விலங்கான நீலகிரி வரையாடு போன்றவற்றை நினைவு கூர்வோம். நம் மண்ணுக்கே உரிய சிறப்பான இந்த காட்டுயிர்களை நினைவுக் கொண்டு இந்த ஆண்டின் காட்டுயிர் வாரத்தைக் கொண்டாடுவோம்!

காட்டுயிர் செயற்பாட்டாளர் திருநாரணனின் உதவியுடன் இணையதளம் ஒன்றுக்காக எழுதப்பட்ட பத்தி. மீள் பிரசுரம்.

முகப்புப் படம்: திருநாரணன்

திருநாரணன் தொடர்புக்கு:

KVRK THIRUNARANAN
FOUNDER
THE NATURE TRUST
G-3, KRISH VIEW APPTS.,

PLOT NO 45-A, VALMIKI ST.,
EAST TAMBARAM
CHENNAI-600059.

044 22393959
9444477358
9176893949

 

 

கலப்பின விதைகள் விநியோகம்: தமிழக வேளாண் துறையின் அக்கறை மக்கள் மீதா? விதை கம்பெனிகள் மீதா?

விதைகளே பேராயுதம்
– இயற்கை உழவாண்மை முன்னாடி கோ.நம்மாழ்வார்

மாடித்தோட்டம் போடுவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறை, சென்னையில் மலிவுவிலையில் தோட்டப் பொருட்களை விற்பனை செய்தது. முற்றிலும் இயற்கை சார்ந்த உரங்கள்,வளர்ச்சி ஊக்கிகள் என இயற்கை வழியில் வீட்டுத் தோட்டம் அமைக்கும் வகையில் பொருட்களை ஒரு தொகுப்பாக விற்பனை செய்தது. ஆனால் இந்தத் தொகுப்பில் தரப்பட்ட கீரை, காய்கறி விதைகள் குறித்து பெரும் சர்ச்சை சமூக ஊடகங்களில் உருவானது.

காய்கறி விதை பாக்கெட்டுகளில் விஷமேற்றப்பட்ட விதைகள் ஜாக்கிரதை என்கிற வாசகம் பலரை இந்த விதைகள் எத்தகையவை என்ற கேள்வியை எழுப்பின. விற்கப்பட்டவை மரபணு மாற்றப்பட்ட விதைகளா? என்கிற ரீதியிலும் விவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்கள் அரசு தரப்பில் எட்டவே, அவர்கள் இந்த விதைகள் மரபணு மாற்றப்பட்ட விதைகள் அல்ல, ஹைபீரிட் விதைகள் எனப்படும் கலப்பின விதைகள் என்று விளக்கம் கொடுத்தார்கள்.

மரபணு மாற்றப்பட்ட விதைக்கும் கலப்பின விதைக்கும் என்ன வேறுபாடு? தக்காளியின் மரபணுவுடன் தவளையின் மரபணுவை  சேர்த்து ‘புஷ்டி’யான தக்காளியை உருவாக்குவது மரபணு மாற்றம். சிவப்பான தக்காளி வகையுடன் சதைப்பற்றான தக்காளி வகையைச் சேர்த்து சிவப்பான, சதைப்பற்றான தக்காளி இனத்தை உருவாக்குவது கலப்பினம். இவை இரண்டுமே செயற்கையாக உருவாக்கப்படுபவை.

பசுமைப் புரட்சியின் போது, ரசாயன உரங்களுக்கு அடுத்தபடியாக, கலப்பின விதைகள்தான் இந்திய விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய பாரம்பரிய விவசாயத்தை, பாரம்பரியம் மிக்க பயிர்களை எப்படி ரசாயனங்கள் அழித்தனவோ, அதே அளவுக்கு கலப்பின விதைகளும் அழித்தன. இயற்கை விவசாயத்தை முன்னெடுத்த நம்மாழ்வார், மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் போன்றோரின் பிரச்சாரமும் களப்பணியும் இவற்றை முன்வைத்தே அமைந்தன.

சென்ற தலைமுறை வரை, ருசியான அரிசியை பக்கத்து ஊரிலோ, பக்கத்து வீட்டினரின் விளைச்சலிலோ வாங்கி ருசித்திருப்போம். ஆனால், இன்று எந்த விவசாயியும் தான் விளைவித்த அரிசியை தனக்காகப் பயன்படுத்துவதில்லை. அது ஒரு வணிகமாக மாற்றப்பட்டுவிட்டது. சத்தில்லாத, ருசியில்லாத அரிசியைத்தான் இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். சீரக சம்பாவும் பொன்னியும் விளைந்த காலம் போய், ’ஏதோ ஒன்னு விளையுது’ என்று விவசாயிகளே சலித்துக்கொள்ளும் வகையில் பாரம்பரியம் அழிக்கப்பட்டுவிட்டது. காரணம் கலப்பின விதைகள்.

ஐ.ஆர். 8, ஐ.ஆர்.20, ஐ.ஆர்.50 என இந்திய வேளாண் அமைச்சகம் வனொலி, தொலைக்காட்சி வழியாக கூவிக் கூவி கலப்பின நெல் ரகங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தியது.  இந்திய நெல் ரகத்தோடு, ஜப்பானின் குட்டை ரக நெல் ரகத்தை இணைத்து உருவாக்கப்பட்ட நெல் ரகங்கள் இவை. அதிக விளைச்சல், பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிக்கும் திறன், குறைந்த நீர் இருந்தால் போதும் என கவர்ச்சியான வார்த்தைகள் போட்டு இந்திய விவசாயிகளிடம் திணிக்கப்பட்டன.

நெல்லுக்கு நடந்ததுதான் காய்கறி, பழவகைகள், கீரை வரை கலப்பின ரகங்கள் புகுத்தப்பட்டன. இந்திய விவசாயப் பல்கலைக்கழகங்கள் இந்த கலப்பின ரகங்களை, செயற்கை உரங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவே பயன்பட்டவே தவிர, பாரம்பரிய விவசாயத்தையும், தொழிற்நுட்பத்தைக் காப்பாற்றவும் அதை மேம்படுத்தவும் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இயற்கை விவசாய விஞ்ஞானிகளால் கடுமையாக வைக்கப்படுகிறது.

பாரம்பரியமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் அழிந்ததை பொறுக்கமுடியாமல்தான் நம்மாழ்வார் இனி விதைகளே பேராயுதமாக மாற வேண்டும் என முழங்கினார். நாட்டு ரக பயிர்களின் விதைகளை சேமித்து அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்றார்.

கலப்பின விதைகள், செயற்கை உரங்கள் இந்திய விவசாயிகளை எத்தகைய இக்கட்டான நிலைக்குத் தள்ளியிருக்கின்றன என்பதை விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைகளை வைத்து அறிந்துகொள்ளலாம். எங்கெல்லாம் விவசாயிகள் தற்கொலை நடக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் கலப்பின விதைகள் – செயற்கை விதைகள் கொடுத்த ஏமாற்றம் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை ஊடகவியலாளரும் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து தொடர் பதிவுகளை செய்பவருமான பி.சாய்நாத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். இந்தியாவில் அதிகமாக தற்கொலைகள் நடக்கும் விதர்பாவில் மட்டுமல்ல, சென்ற ஆண்டு ஆகஸ்டில் தற்கொலை செய்துகொண்ட திருச்சி விவசாயி பயிரிட்டதும் மரபணு மாற்றப்பட்ட பருத்தியால்தான்.

விவசாயிகளின் இத்தகைய முடிவுகளும் செயற்கை உரங்கள் இட்ட வளர்த்த உணவுகளை உண்பதால் அதிகரித்துவரும் உடல் நோய்களும் மக்களை இயற்கையின் பால் திருப்பின. இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது. அரசாங்கமே இயற்கை வழி விவசாயத்தை ஏற்றுக்கொண்டது. அதன் விளைவே வேளாண் பல்கலைக்கழகம் மக்களுக்கு இயற்கை வழி, வேளாண் பொருட்களை வழங்குவதும் இயற்கை வழி வேளாண்மை குறித்த பயிற்சிகளை தருவதுமான செயல்பாடுகள்.

பக்கத்து மாநிலமான கேரளம், தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படும் காய்கறிகளை தவிர்க்கச் சொல்லி வீட்டிலேயே காய்கறிகளை இயற்கை வழியில் வளர்த்துக்கொள்ளுங்கள் என்று வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்து வீட்டுத் தோட்டத்தினை ஊக்கப்படுத்தி வருகிறது.

தமிழக வேளாண் துறையும் இயற்கை வழி வேளாண்மையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இயற்கை வழி வேளாண் பயிலரங்கங்களை தோட்டக்கலைத் துறை நகர்ப் புறங்களில் முனைப்பாகச் செய்துவருகிறது. மண்புழு வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், இயற்கை பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு என இந்தத் துறை மூலம் பலர் பயன்பெற்று தொழில் தொடங்கியும் இருக்கிறார்கள்.

ஆனால், தமிழக வேளாண் பல்கலைக் கழகம் சொல்வது ஒன்று செயல்படுவது ஒன்றாக இருக்கிறது என்பதே இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது.  இயற்கை உரங்கள், இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், இயற்கை பூச்சிகள் என கொடுத்துவிட்டு விதைகள் மட்டும் கலப்பின விதைகளாகக் கொடுப்பது எந்த வகையில் இயற்கை வழி வேளாண்மை ஆகும் என்பதே இவர்களுடைய கேள்வி. கலப்பின விதைகள் என்றால் மலட்டு விதைகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு முறை இந்த விதைகளை விதைத்தால், செடி வளர்ந்து, காய்த்து, அதோடு தன் இனத்தையே முடித்துக்கொள்ளும். இந்த விதைகளை சேகரித்து மீண்டும் வளர்த்தால் அவை பூத்தாலும் காய்க்காது. மீண்டும் விளைச்சலுக்கு அந்த குறிப்பிட்ட விதையை விற்ற நிறுவனத்திடம்தான் போய் நிற்க வேண்டும்.

சுருக்கமாக, விதை வியாபாரம் என்று புரிந்துகொள்க. கலப்பின விதையை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு கர்நாடகத்தின் பெங்களூரு, இந்திய அளவில் புகழ்பெற்ற இடம்.  வேளாண் விதை உற்பத்தி நிலையமாகட்டும் தனியார் நர்சரிகளாகட்டும் அனைத்திலும் இந்த விதைகள் மட்டுமே விற்கப்படுகின்றன. இந்த விதைகளின் விதைகள் காய்க்காது என்பதைப் போல, இந்த விதைகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதைத்துவிட வேண்டும் என்கிற காலக்கெடு வைத்தே விதைகள் விற்கப்படுகின்றன.

இத்தகைய ‘சிக்கல்’களுக்கிடையேதான் வீட்டிலேயே ரசாயன பூச்சிக்கொல்லி அற்ற, இயற்கை வழியில் காய்கறிகளை விளைவித்துக்கொள்ளுங்கள் என்ற விளம்பரத்துடன் ‘பழைய சரக்கை’ புதிய அடையாளத்துடன் தந்துகொண்டிருக்கிறது தமிழக வேளாண் துறை. உண்மையில் இவர்களுக்கு யார் மீது அக்கறை… மக்கள் மீதா? விதை கம்பெனிகள் மீதா? என்பதைத்தான் சமூக ஊடகங்களில் மக்கள் விவாதம் ஆக்கி வருகிறார்கள்.

இந்தக் கட்டுரையின் ‘எடிட்’ செய்யப்பட்ட வடிவம் தினச்செய்தி(30-01-2016) நாளிதழில் வெளியாகியுள்ளது.

வெள்ள நீரில் நடந்த ராகுல்!

“மோடியும், ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்கள். எங்கள் ராகுல் வெள்ளத்தில் இறங்கி பாதிப்புகளைப் பார்க்கிறார்” என மெச்சிக் கொண்டிருக்கிறார் ராகுல் பக்தர்கள் ட்விட்ட்ரில். ஆனால் ரகுலோ வெள்ள விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்கிறார். சென்னை, புதுச்சேரி, கடலூரில் வெள்ள பாதிப்புகளை செவ்வாய்கிழமை பார்வையிட்டு, வெள்ள நிவாரண உதவிகளை வழங்கியிருக்கிறார் ராகுல். வெள்ளம் புகுந்த எங்கள் பகுதியான வில்லிவாக்கம் சிட்கோ நகருக்கும் வந்திருக்கிறார்; படங்கள் இங்கே…

Rahul in Villivakkam rahul (1) rahul (3)

வெள்ளம் விட்டுச் சென்ற துயரம் எல்லோருக்குமானது

வெள்ளம் சூழ்ந்த வசிப்பிடம், கையில் பொருளில்லை, சரியான உணவில்லை, மின்சாரம் இல்லை, தொலைத் தொடர்புகள் இல்லை…மழை விட்டுச் சென்ற அசாதாரண சூழ்நிலை, வாழ்வின் துயரங்களோடு கூட்டுச் சேர்ந்துவிட்டது.  ஆனால் நம்மின் நிலைமை மேல் என்பதே நேரில் கண்ட வெள்ளத் துயரங்கள் உணர்த்தின.

எங்களுக்கு உணவளித்த உள்ளங்கள்

எங்களுக்கு உணவளித்த உள்ளங்கள்

அலுவலகம் செல்லலாம் என்று கடந்த வியாழன் அன்று மகனுடன் தி.நகர் புறப்பட்டேன். பேருந்து நடத்துனர் டிக்கெட் தரும்போதே வள்ளுவர் கோட்டம் வரைதான் பேருந்து செல்லும், அதற்கு மேல் செல்லாது எனச் சொல்லி விட்டார். வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது; சரி அங்கிருந்து ஆட்டோவில் அலுவலகம் சென்று விடலாம் எனக் கிளம்பினோம். மழை தூறல் ஆரம்பித்தது.

This slideshow requires JavaScript.

அண்ணாநகர் சாந்தி காலனியை அடுத்த பிரிவரி சாலையை ஒட்டி ஓடும் கூவம் ஆறு பாலத்தைத் தொட்டு ஓடியது. பிரிவரி சாலை முழுவதும் மூழ்கியிருந்தது.  ஆற்றின் இருபுறமும் இருந்த குடிசைகளின் கூரைகள் மட்டுமே தெரிந்தன.  இருப்பிடங்களை விட்டு வெளிறிய மக்கள் சாலைகளில் அகதிகளாக குவிந்திருந்தனர்.  ஒரு சிறுவன் தெருவில் தேங்கிய வெள்ளத்தில் நீந்தி வந்துக்கொண்டிருந்தான்.

அண்ணா வளைவு சாலையிலும், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் வீடுகளை விட்டு வெளியேறிய அமைந்தகரை மக்கள் நிரம்பியிருந்தனர்.  சூளைமேட்டை தொட்டுச் செல்லும் கூவம் ஆறு ஆக்ரோஷமாகப் பாய்ந்துக் கொண்டிருந்தது பயத்தைக் கொடுத்தது.

சூளைமேட்டில் கரை தொட்ட கூவம் ஆறு

சூளைமேட்டில் கரை தொட்ட கூவம் ஆறு

சிறு வயதில் குட்டை நீரைக் கண்டால்கூட அலறுவேன். கிருஷ்கிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் மழைக்காலத்தில் ஏரிகள் பெருக்கெடுத்து ஓடும். எங்கும் வெள்ளம் புரண்டுகொண்டிருக்கும்.  ஏரிக்கரைகளில் அமைக்கப்பட்ட சாலைகளை பேருந்து கடக்கும்போது நான் கண்களை மூடிக் கொள்வேன். இப்போது தேவலாம்.

கரையைத் தொட்டு ஓடிய கூவம் ஆறு என்னுடைய சிறு வயது பயத்தைக் கிளறிவிட்டது.  சூளைமேட்டின் வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள், ரயில்வே பாலத்தை ஒட்டியிருந்த அரசு நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். நல்ல உள்ளத்துடன் அவர்களுக்கு சிலர் உணவளித்துக் கொண்டிருந்தார்கள்.

பேருந்து வள்ளூவர் கோட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பயணிகள் ஒவ்வொருவராய் இறங்கிக் கொண்டிருந்தார். நடத்துனர் தி. நகர் முழுதும் வெள்ளம் என்றார். என் மகனை இருகப் பற்றிக் கொண்டு வீடு திரும்ப முடிவு செய்தேன்.

எண்ணூர் கழிமுகப்பகுதியை விழுங்கும் காமராஜர் துறைமுகம்: வடசென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை ஒட்டியிருக்கும் எண்ணூர் கழிமுகப் பகுதி மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி மரங்கள் உள்ள பகுதி. புயல், கடும் மழைக் காலங்களில் எழும் ஆக்ரோஷ அலைகளை அடக்கி, சாந்தப்படுத்தும் குணம் இந்த மரங்களுக்கு உண்டு. அலையாத்தி மரங்கள் நிறைந்த கழிமுகக் காடு பலவித உயிரினங்களுக்கும் வாழிடமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இறால்கள் சகதி நிறைந்த இந்த மண்ணில் செழிப்பாக உற்பத்தியாகும். இறால்கள், மீன்கள், நண்டுகள், சிறு புழுக்கள் என இந்த மண்ணில் வாழும் உயிரினங்களை உண்பதற்காக பறவைகள் வலசை வரும் காலத்தில் சில வகையான வெளிநாட்டுப் பறவைகளும் இங்கே வருகின்றன.

வட ஆற்காட்டிலிருந்து உற்பத்தியாகிவரும் கொசஸ்தலையாறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதி இது. இந்த முகத்துவாரப் பகுதியின் மற்றொரு புறம் பழவேற்காடு ஏரியும் இணைகிறது. இந்தப் பகுதியை எண்ணூர் துறைமுக நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார் சூழலியல் களப்பணியாளர் நித்தியானந்த் ஜெயராமன்.

“இரண்டு வருடங்களுக்கு முன் எண்ணூர் கழிமுகப் பகுதியில் ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். அந்த அறிவிப்பு இந்த இடம் காமராஜர் துறைமுக நிறுவனத்துக்கு சொந்தமானப் பகுதி என சொன்னது. அந்த பலகை நின்றிருந்த இடத்தைச் சுற்றிலும் நிலம் இல்லை. அது சேரும் நீரும் நிறைந்த கழிமுகப் பகுதி. கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் அந்த இடத்தை கவனித்தேன். அந்த இடத்தில் மண் நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.

2011-ஆம் ஆண்டு மத்திய அரசு இந்தப் பகுதியை பல்லுயிர்ச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவித்துள்ளது. அதுபோல, இந்திய நில அளவைத் துறையும் இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த இடத்தில் மண்நிரப்புவது குறித்து மேற்கண்ட அமைப்புகளுக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் கடிதம் எழுதினோம். எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அதற்குப் பிறகு பணியை மெதுவாக்கினார்கள்” என்றவர், எண்ணூர் துறைமுகத்திற்கான சரக்கு பெட்டக மையத்தை அமைப்பதற்காக இங்கிருக்கும் நீர்நிலைகள், மாங்குரோவ் காடுகள் ஆகியவற்றை அழித்து, இங்கு நிலம் உருவாக்கப்பட்டுவருவதாகக் கூறுகிறார்.

“சூழல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில், பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் என இரண்டு மிகப் பெரிய அனல் மின் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.

இந்த அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் இந்தப் பகுதியில் நேரடியாகக் கொட்டப்படாவிட்டாலும், அதனைக் கொண்டு செல்லும் குழாய்களில் இருக்கும் பழுதின் காரணமாக, அப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவுக்கு சாம்பல் படிந்து காணப்படுகிறது.

எண்ணூரை ஒட்டியுள்ள பகுதியில் மழை நீர் வேகமாக வடிவதற்கு கழிமுகப்பகுதி வடிகாலாகப் பயன்படுகிறது. இந்நிலையில் துறைமுகம் இந்தப் பகுதியில் மண்ணைப் போட்டு மூடி புதிய நிலப்பகுதியை உருவாக்கிவருகிறது. பள்ளிக்கரணையில் நடந்த ஆக்கிரமிப்புகள் எப்படி தென் சென்னை மூழ்கக் காரணமாக அமைந்ததோ அதேபோல எதிர்காலத்தில் வட சென்னையில் வெள்ள சேதம் ஏற்படுவதற்கு இது வழிவகுக்கும்” என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை வளமான மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எண்ணூர் துறைமுகம் இப்படி ஒரு கட்டுமானப் பகுதியை ஏற்படுத்துவதற்கு தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருப்பதாகவும் அனுமதி இதுவரை கிடைக்காத நிலையிலேயே இந்தப் பணிகளை துறைமுக நிர்வாகம் மேற்கொண்டுவருவதாகவும் இவர் குற்றம்சாட்டுகிறார்.

படங்கள்: அமிர்தராஜ் ஸ்டீபன்