ஒரு கூடு, இரண்டு பறவைகள்!

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ காதல் கவிதை(பிப்ரவரி மாதம் ஆயிற்றே)க்கான தலைப்பென்று நினைக்கலாம். இல்லை, இது இரண்டு பறவைகளின் இருப்பிடப் பிரச்னை குறித்து! கடந்த பொங்கலின் போது கிராமத்து வீட்டருகே உள்ள தோட்டத்தில் கண்ட இந்தக் காட்சிகளை படம் பிடித்தோம். ஒரு பட்டுப்போன தென்னை மரத்தில் இருந்த பொந்தில் கூடமைத்து தங்கியிருந்த மைனாவின் வீட்டை ஆக்ரமித்துக் கொண்டது ஒரு கிளி. முதல் அதிகாலையில் பார்த்தபோது சில மைனாக்கள் இருந்த அந்த கூட்டில் சற்றே வளர்ந்திருந்த மைனா குஞ்சு ஒன்றும் இருந்தது. அந்த மைனா பெற்றோர் இல்லாத சமயத்தில், பகல் நேரங்களில் வெளியே வந்து அருகில் இருக்கும் மரக் கிளைகளில் அமர்ந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் அந்தக் கூட்டை ஆக்ரமித்துக் கொண்டது கிளி ஒன்று. கூடு பறிபோனதைப் பார்த்த மைனா குஞ்சு, கிளியிடம் போராடிப் பார்த்தது, கிளி விடுவதாக இல்லை. கிளி முட்டையிடும் காலத்தில் இருந்திருக்கலாம், கூட்டை வெகு நாட்கள் நோட்டம் விட்டு, சமயத்தில் கூட்டைப் பிடித்துக் கொண்டது. மைனா செய்வதறியாது அருகில் இருந்த தென்னை மரக் கிளையில் அமர்ந்து கொண்டிருந்தது. கிளி, மைனா இல்லாத நேரத்தில் கூட்டை விட்டுப் பறந்து அருகில் இருந்த வயலில் காய்ந்த சோளத்தை தின்றுவிட்டு மீண்டும் கூட்டுக்குள் அடங்கியது. கூடு, அருகிலேயே உணவுக்கு வசதி என கிளியின் தேர்வு எனக்கு வியப்பைத் தருகிறது. அடுத்தடுத்த நாட்களில் மைனா குடும்பம் தன் வீட்டைக் கைப்பற்ற முயற்சித்தும் இறுதிவரை கிளி விட்டுத் தருவதாக இல்லை. உண்மையில் கிளிகள்தான் அந்த பட்டுப்போன தென்னையில் முதன்முதலாக குடியேறி இருந்தன. எனவே கிளி ஆக்ரமித்தது என்று சொல்வதைவிட மீண்டும் தன் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது என சொல்லலாம். மைனா குஞ்சும் தனியே வாழும் அளவில் வளர்ந்திருந்தது, எனவே அது ஒரு புது வீட்டை தேடிக் கொண்டிருக்கும்!

DSCN0265

DSCN0436

DSCN0508

DSCN0509

DSCN0439

DSCN0559படங்கள்: சண்முகசுந்தரம், நந்தினி

 

சிட்டுக்குருவிகளுக்கு நன்றி

DSCN2547

நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் பறவை சிட்டுக்குருவி. நூறாண்டு பழமையான அரை உருளை ஓடுகள் வேயப்பட்ட நாங்கள் வசித்த வீட்டின் வாசலருகே மெல்லிய புற்களால் கூடு கட்டியிருந்தன அந்தக் குருவிகள். அந்தத் தெருவில் இருந்த அத்தனை வீட்டிக்குள்ளும் சிட்டுக்குருவிகளின் கீச்கீச் சத்தம் ஏதோ ஒரு வேளையில் கேட்டுக்கொண்டிருக்கும். குழந்தைகளான எங்களோடு அவையும் கூக்குரல் இட்டு விளையாடிக் கொண்டிருக்கும். அவற்றை நாங்கள் ஒருபோதும் துன்புறுத்தும் நோக்கத்தில் அணுகியதில்லை. அவற்றின் உணவுக்கு குறையே வந்ததில்லை. கேழ்வரகு, கம்பு, சோளம்தான் அந்நிலத்தின் பிரதான பயிர்களாக இருந்தன. நிலத்தில், வீடுகளில் சிதறிய ஏன் மாடுகள் உண்டு சிதறிய கேழ்வரகு, சோள தட்டைகளிலிருக்கும் தானியங்களையும் கொத்தித் தின்னும் சிட்டுக்குருவிகள்.

பிறகு, வெவ்வேறு ஊர்களுக்கு பயணப்பட்டோம். கிராமத்தை விட்டு பேரூரில் குடியேறினோம். பள்ளிக்குச் செல்லும்போது தேன்கனிக்கோட்டை பேருந்து நிலைய நடைபாதைகளில் சில சிட்டுக்குருவிகளைப் பார்த்ததாக நினைவு. பெரிய ஊரின் வாழ்க்கை கவனத்தை வெவ்வேறு திசைகளில் திருப்பி விடுகிறது. கட்டடங்களினூடே மக்கள் நிறைந்திருந்த அந்த ஊரிலும் சிட்டுக்குருவிகள் ஜீவித்திருக்கும், நான்தான் அவற்றை கவனத்தில் நிறுத்தும் சூழலில் இல்லை.

பிறகு சேலத்திற்கு குடிபெயர்ந்தபோது தோட்டத்தை ஒட்டியிருந்த அந்த ஓட்டு வீட்டினுள் சிட்டுக்குருவிகள் கூடு கட்டியிருந்தன. ஒற்றை அறையான அதில் எங்களுடன் சில காலம் இருந்தன. பிறகு பென்னாகரம் சந்தை வெளியில் சிதறிய தானியங்களை தின்று கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை கடந்து போயிருக்கிறேன். சென்னையின் கல்லூரி நாட்களில் கான்கிரீட் காடாக மாற்றப்படாத சோளிங்கநல்லூரில் ஹாஸ்டல் பால்கனியில் சிட்டுக்குருவிகள் வந்ததுண்டு.

பணியில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் முழுக்க பணியிலே இருந்தது கவனம். பிறகு வெறுமை சூழ்ந்திருந்த அந்த நாட்களில் சூளைமேட்டின் சந்தடிமிக்க தெருவில் சிட்டுக்குருவிகள் மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். எனக்கென ஒரு குடும்பம் அமைந்துவிட்ட பிறகு, இப்போது சிட்டுக்குருவிகளும் அதில். தினம் தினம் என்னோடும் என் குழந்தையோடும் அவை உறவாடுகின்றன. ஒரே ஒரு முருங்கை மரம் காணாமல் போன சிட்டுக்குருவிகளை வரவழைத்திருக்கிறது. என் இனிமையான நாட்களை திரும்பிருக்கின்றன. சிட்டுக்குருவிகளுக்கு நன்றி. இன்று உங்களை நினைவுகூரும் நாள், சிட்டுக்குருவிகள் நாள்!

‘‘இலக்கியவாதிகளுக்கு சூழலியல் பற்றி எதுவும் தெரியாது!’’

ச.முகமதுஅலி

ச.முகமதுஅலி

உலகம் சூடாகிறது என்று சொன்னாலும் சொன்னார்கள் சுற்றுச்சூழல் பற்றி பேசுவது இன்று பலருக்கு ஃபேஷனாகிவிட்டது. இயற்கைப் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் சரியாக புரிந்து கொண்டு பேசுபவர்கள் இங்கே ரொம்பவும் குறைவு. இயற்கையியலாளர் ச. முகமது அலி அப்படிப்பட்டவர்களுள் ஒருவர். இவர் பேச ஆரம்பித்தால் நாம் எவ்வளவு தூரம் இயற்கையைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம் என்று பொட்டில் அடித்தமாதிரி தெரிகிறது. மேட்டுப்பாளையத்தில் உள்ள அவருடைய வீட்டில் அவரைச் சந்தித்தேன். கிட்டத்தட்ட 4 மணி நேரம் பேசினார். அதிலிருந்து சில துளிகளைத் தொகுத்திருக்கிறேன்.
‘‘வெறுமனே மரம் நடறது மட்டும்தான் இயற்கையைக் காப்பாத்தறதுக்கான ஒரே வழிங்கறமாதிரி இப்போ நிறையபேர் செயல்பட்டுட்டு இருக்காங்க. அதுல எத்தனைபேர் மரம் நட்ட பிறகு அது வளர்ந்திருக்கான்னு பார்ப்பாங்கன்னு தெரியாது. எனக்கு தெரிஞ்சி பல செடிகள் நட்ட உயரத்திலேயே காணாமல் போயிருக்கு.
இயற்கையை போற்றி அதோட பின்னிப் பிணைந்திருந்த பாரம்பரியம் நம்மோடது. ஆனா, தமிழ் பாரம்பரியங்கற பேர்ல எதை எதையோ பேசிக்கிட்டிருக்கோம். 400, 500 வருஷமா அந்த பாரம்பரியத்தை தொலைச்சிட்டு நிற்கிறோம். வெளிநாட்டுக்காரன் ‘குளோபல் வார்மிங்’ பத்தி சொன்னாதான் நமக்கு சுற்றுச்சூழல் காப்பாத்தறது பத்தி நினைப்பு வருது.
பெரிய பெரிய இலக்கியவாதிகளிலிருந்து உலகமெல்லாம் சுத்திவந்த அரசியல்வாதி வரைக்கும் ‘ஆண்சிங்கம்’ங்கிற அடைமொழி கொடுக்கிறோம். உண்மையில் பெண் சிங்கம்தான் வேட்டைக்குப் போகும். ஆண்சிங்கம் இயற்கையிலேயே சோம்பேறியான உயிரி. அது அதோட இயல்பு. அதேபோல ஆண் குயிலுக்குத்தான் இனிமையான குரல் உண்டு. ஆனா பெண் பாடகிகளுக்கு ‘இசை குயில்’னு அடைமொழி கொடுக்கிறோம்.
நம்முடைய எழுத்தாள மெதாவிகளுக்கு உயிரினங்கள் பற்றி  எந்த அறிவும் கிடையாது. பெயர் தெரியாது. வகையும் தெரியாது. பொதுமக்கள் மத்தியில் வனஉயிரினங்களைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்புறதில இவங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. ‘பயங்கரமான காடு’, ‘சூழ்ச்சி செய்யும் நரி’னு எவ்வளவோ தவறான உதாரணங்களை தந்துகிட்டு இருக்காங்க.

குயில் குடும்பத்துல மட்டும் 127 வகைகள் இருக்கு. அன்னப்பறவை இந்தியாவிலேயே இல்லை. வானம்பாடின்னு ஒரு பறவையே கிடையாது. 250 வகை இந்திய பாம்புகள்ல 3 வகை பாம்புகளுக்கு மட்டுமே விஷம் இருக்கு. இப்படி அடிப்படையான விஷயங்கள் தெரியாம எதிர்கால சந்ததிகளுக்கு இந்த எழுத்தாளர்கள் தவறான தகவல்களைத்தான் தந்துகிட்டு இருக்காங்க. இந்த நிலையில எப்படி இயற்கை சூழல் காப்பாத்தப்படும்?
சங்க இலக்கியங்கள்ல பறவைகள், விலங்குகள் பற்றி நுணுக்கமான விஷயத்தைகூட பதிவு பண்ணியிருக்காங்க. அத்தனைக்கும் அழகான தமிழ்பெயர் வச்சிருக்காங்க. எல்லாத்தையும் மறந்துட்டு இன்னைக்கு ஆங்கிலப் பெயர்களை அப்படியே தமிழ்ல எழுதற வேலையைச் செய்துட்டு இருக்கோம். குரங்குக்கும் மந்திக்கும் நமக்கு வித்தியாசம் தெரியறதில்லை. யானையைத் தொட்டு பார்த்த குரங்கு கதையாத்தான் நாம இயற்கையைப் புரிஞ்சிவச்சிருக்கோம்.’’அனலாக வார்த்தைகள் வந்து விழுந்தாலும், இவருடைய அக்கறை இயற்கையை காப்பதற்காக மட்டுமே. 20 ஆண்டுகளாக இவர் ‘காட்டுயிர்’ என்ற பத்திரிகையை நடத்தி வருகிறார். பொள்ளாச்சியில் இயற்கை வரலாற்று அறக்கட்டளையை நிறுவி, சூழலில் காப்பதன் அவசியத்தை மக்களுக்கு சொல்லிவருகிறார்.

Untitled-7

‘‘நமக்கு பயன்படக்கூடிய உயிரினங்கள் மட்டும் இந்த உலகத்துல இருந்தா போதாதாங்கிற கேள்வி பலருக்கு வர்றதுண்டு. உண்மையில் இயற்கைளோட ஒவ்வொண்ணும் பிணைந்துதான் இருக்கு. உதாரணத்துக்கு நீலகிரி மலையில வசிக்கிற இருவாசிப் பறவை அழிஞ்சதுன்னா அதோட தொடர்புடைய பத்து வகையான மரங்களும் அழிஞ்சிடும். காரணம், இருவாசிப் பறவை சாப்பிட்டு வெளியேற்றுகிற விதைகளுக்குத்தான் முளைக்கும் திறன் இருக்கு.அதனாலதான் மரங்கள் செழித்து வளருது. இப்படி நம்மைச் சுற்றியிருக்கி பல்லுயிர்களும் செழிப்பா இருந்தாதான் நாமும் செழிப்பா இருக்கமுடியும்’’ என்கிற ச.முகமதுஅலி, ‘யானைகள் அழியும் பேருயிர்கள்’ ‘நெருப்புக் குழியில் குருவி’ ‘பறவையியலாளர் சாலிம் அலி’ போன்ற தமிழில் வந்திருக்கும் முக்கியமான சூழலியல் நூல்களின் ஆரியரும் கூட.

சிலந்திகளின் படையெடுப்பு பருவநிலை மாற்றத்தின் அறிகுறி?!

பருவநிலை மாற்றத்தை இயற்கை நமக்கு சமீபகாலமாக பல்வேறு விஷயங்கள் வழியாக உணர்த்திக் கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு இந்த வருடம் பருவமழை தப்பியது, அடுத்த உதாரணம் அதிகப்படியான பனிப்பொழிவு. இவையெல்லாம் நம்மில் பெரும்பாலனவர்களின் பார்வைக்கு வருபவை. ஆனால் பருவநிலை மாற்றம் இயற்கையின்

IMG_0743

வேரடி மண்ணில் அசாத்தியமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
சென்ற மாதம் சென்னை பழவேற்காடு பகுதிக்கு வரும் பறவைகளின் இயல்புகளை படிப்பதற்காக சென்ற சூழலியல் செயல்பாட்டாளர்கள் ஒரு  அறிகுறியை அங்கே கண்டிருக்கிறார்கள். பழவேற்காடு சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சிலந்தி வலையாக இருந்திருக்கிறது.

IMG_0713

‘‘அப்படியொரு காட்சியை இத்தனை வருடங்களில் நாங்கள் பார்த்ததே இல்லை. மரங்கள், புதர்கள், நெல் வயல்கள், தரைப் பகுதிகளில்கூட சிலந்தி வலைகளைப் பார்த்தோம். சிலந்திகளை சாப்பிடும் உயிர்கள் அந்தப் பகுதியில் குறைந்திருக்கலாம். இயற்கையின் உணவுச் சங்கிலியில் ஏதோ மாற்றம் நிகழ்ந்திருப்பதே இப்படி சிலந்திகள் பெறுகியதற்குக் காரணம். எந்தவொரு உயிரனமும் அதிகப்படியாக இருந்தால் அது சூழலியலுக்கு ஆபத்தாகத்தான் முடியும்’’ என்கிறார் சூழலியல் செயல்பாட்டாளர் திருநாரணன்.

IMG_0724

ஆபத்தின் அறிகுறியாக இதை கருதி, அரசு அதிகாரிகள் இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

படங்கள்: நேச்சர் டிரஸ்ட்.

பூமியின் இசை!

”வெளியே சொல்லமுடியாத ஆழ்மன விருப்பங்கள் நமக்குள்ளே நிறைய புதைந்திருக்கிறது. பெயரிட்டு வெளிப்படுத்த முடியாத அந்த விருப்பங்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிஜ வாழ்க்கையில் நடந்துவிடுகின்றன. ‘டிஜிருடு’ வாசிக்கக் கிடைத்ததை அப்படியொரு விருப்பமாகத்தான் உணர்கிறேன்!’’ பாம்பு தோல் போர்த்தியிருக்கும் அந்த மூங்கில் கருவியை வருடியபடி பேசுகிறார் குமார் அம்பாயிரம்.

நவீன இலக்கியத்தின் இளம் படைப்பாளியான குமார் அம்பாயிரம், ஆஸ்திரேலிய பழங்குடிகளின் ‘டிஜிருடு’ என்ற இசைக்கருவியை வாசிப்பதில் தேர்ந்தவர். டிஜிருடு இசைக்கருவியை தானே வாசிக்கக் கற்றுக்கொண்டு, தனியாக இசை நிகழ்ச்சிகளையும் செய்து வருகிறார் குமார் அம்பாயிரம்.
‘‘ஹம்பிக்கு செல்லும் வழியில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த நாடோடி இசைக்கலைஞன் ஒருவரைச் சந்தித்தேன். அவர் கையில் வைத்திருந்த இசைக்கருவியை வாசித்துக் காட்டியபோதுதான், அது எனக்குள் இருந்த இசையாக இருப்பதை உணர்ந்தேன். மனித நடமாட்டம் இல்லாத காற்றும் மலையும் மரங்களும் நிறைந்த இடத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு மெல்லிய சப்தம் இசையாக வழியுமே… அதுபோல இருந்தது இந்த இசை! அதை அவர் ‘டிஜிருடு’ என்றார். அதன் மேல் ஈர்ப்பு கொண்டு, அதை வாசிக்கக் கற்றுக்கொண்டேன். நானாக ‘டிஜிருடு’ கருவியை உருவாக்கினேன்.
ஆஸ்திரேலியாவின் 5000 ஆண்டுகள் நீண்ட பழமையுடைய பூர்வகுடி மக்களான அபார்ஜினல் மக்களின் பொக்கிஷம் டிஜிருடு. பூர்வகுடிகள் என்றாலே அடிமைகள் என்ற நினைப்புதான் நமக்கு இருக்கிறது. அபார்ஜினல் மக்கள் சுதந்திரமானவர்கள். அவர்களின் கட்டற்ற சுதந்திரத்தைச் சொல்கிறது டிஜிருடு. ராகம், தாளம் போன்ற எந்த கட்டமைப்பையும் கொண்டிராமல் முடிவும் தொடக்கமும் அற்றது டிஜிருடுவின் இசை. ‘பூமியின் இசை’ என்றே இதைச் சொல்கிறார்கள்.

அடர்ந்த காடும் அதில் அசையும் மரங்களும் நடமாடும் விலங்குகளும் அவற்றின் நடுவே பதுங்கி, பதுங்கி காலெடுத்து வைக்கும் ஆதிவாசியின் காலடிச் சத்தமும்தான் டிஜிருடு வாசிக்கும்போது மனதுக்குள் கொண்டுவர வேண்டிய இசைக்குறிப்புகள்.

ஆஸ்திரேலிய காடுகளில் வண்டு துளைத்துவிட்டுப்போன யூகலிப்டஸ் மரங்களைக் கண்டுபிடித்து, அதை சீர்படுத்தி, பாரம்பரிய ஓவியத்தை அதன் மீது வரைந்து இந்த இசைக்கருவியை உருவாக்குகிறார்கள். அந்த மண்ணிற்கே உரித்தான பிரத்யேக தன்மை இங்கே கிடையாது. அதனால் அந்தத் தன்மையோடு ஓரளவு ஒத்துப்போகும் மூங்கிலால் டிஜிருடுவை நான் வடிவமைத்தேன். இரண்டிலிருந்தும் வெளிப்படும் இசையில் எந்த வித்யாசமும் இல்லை.
பெரும்பாலும் இலக்கியம் தொடர்பான கூட்டங்களில் டிஜிருடுவை வாசிக்கிறேன். நவீன நாடகங்களுக்கும் குறும்படங்களும் இந்த இசையை வாசித்திருக்கிறேன். கேட்பவர்களுக்கு கற்றுத் தருகிறேன். எழுத்துக்கூட வரையறுக்கப்பட்ட எல்லை இருக்கிறது. ஆனால் எல்லைகளோ, முடிவுற்ற தன்மையோ இல்லாதது இசை! இசை மீதான என்னுடைய ஆர்வத்துக்குக் காரணம் இதுதான்.
டிஜிருடுவைப் போல இந்த பூமியில் மனித காதுகளுக்கு எட்டாத இசை கோடிக்கணக்கில் இருக்கிறது. அதில் சிலதையாவது நான் கேட்க வேண்டும் என்கிற ஆவலை டிஜிருடு எழுப்பிவிட்டிருக்கிறது!’’ என டிஜிருடுவிலிருந்து வழிந்தோடும் முடிவில்லாத இசையைப் பெருக்கியபடி முடித்தார் குமார் அம்பாயிரம்.

இது நான் பணியாற்றிய ஒரு வார இதழுக்காக 2008ல் சென்னை பிரஞ்சு கலாராச மையத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த இதழிலிருந்து வெளியேறியதால் அப்போது பிரசுரமாகவில்லை. பத்திரப்படுத்தி வைத்திருந்ததை சுவாரஸ்யம் கருதி இப்போது பிரசுரிக்கிறேன்.