நான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்?

பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளை, அச்சுறுத்தல்களை, உடல் ரீதியான துன்புறுத்தலை வெளியே கொண்டுவரப்பட்டதற்காக தொடங்கப்பட்டதே மீ டூ இயக்கம். உலகம் முழுக்க பல்வேறு துறைகளில் ஆண்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்கள் மீ டூ இயக்கத்தின் மூலம், தொடர்புடைய சம்பவங்கள் நடந்து பல ஆண்கள் ஆனது போதும் இப்போது வெளியே சொன்னார்கள். தனியாக ஒலிக்கும் குரலுக்கு இத்தனை வீரியம் இருந்திருக்காது; கூட்டுக்குரலாக ஒலிக்கும்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இது வெறுமனே பாலியல் சுரண்டலுக்கு எதிரான குரலாக மட்டுமே பார்த்து, ‘எனக்கு நடக்கவில்லை’ அல்லது ‘எங்கள் குடும்பத்தில் யாருக்கும் நடக்கவில்லை’ என பலர் ஒதுங்கிப் போகக்கூடும். பாடகர் சின்மயி மூலம் தமிழகத்தில் பேசுபொருளாகியிருக்கும் மீ டூ இயக்கத்தின் மூலம், பல முகம் காட்ட விரும்பாத பெண்கள், பொதுவெளியில் தங்களுக்கு நேர்ந்த அச்சுறுத்தல்களை முன்வைத்திருக்கிறார்கள். இது வெறுமனே சின்மயி-வைரமுத்து போன்ற சினிமா பிரபலங்களுக்குள் நடக்கும் பிரச்சினை அல்ல என்பதை நாம் உணர வேண்டும். நம் வீட்டுப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை.

பெரும்பாலும் முதல்தலைமுறையாக பெண்கள் பணிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கும் சூழலில் 90 சதவீதம் பெண்கள் இத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். சில பெண்கள் தங்களுக்குள்ளாகவே இத்தகைய ஒடுக்குமுறைகள் பேசி கடந்துவிடுகிறார்கள். சிலர் கூட்டாக இணைந்து அத்துமீறல் செய்யும் ஆண்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்கிறார்கள். சில வேலைக்குச் செல்வதே வேண்டாம் என முழுக்குப் போடவும் செய்கிறார்கள். இறுதியில் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கும் ஆண்கள் தொடர்ந்து இதையே அடுத்து வருகிற பெண்களுக்கும் செய்ய துணிகிறார்கள். மீ டூ இயக்கத்தில் பேசப்பட்ட இத்தகைய ஒடுக்குமுறை விஷயங்கள் எவை எவை?

Abuse – துன்புறுத்தல்: ஒரு நபர் இன்னொருவர் மீது உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, உளவியல்ரீதியாகவோ, பொருளாதாரரீதியாகவோ துன்புறுத்துவது. உதாரணத்துக்கு, அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஆண், ஒரு பெண்ணை அவருடைய விருப்பத்துக்கு மாறாக இணங்க வற்புறுத்தி அதை அந்தப் பெண் மறுக்கும்போது, அவளுடைய இன்கிரிமெண்ட், ப்ரோமோஷனில் கை வைப்பதுகூட துன்புறுத்தல் வகையைச் சேர்ந்ததுதான்.

Boys’ club – பணியிடத்தில் ஆண்கள் மட்டும் ஒரு குழுவாக இயங்குவது. பெரும்பாலான பணியிடச்சூழலில் இது நடக்கும். இவர்கள் சேர்ந்து அலுவலக பெண்கள் கிண்டலடிப்பார்கள், அவர்களுக்குள் பாலியல் ஜோக்கடித்து உரக்க சிரிப்பார்கள், பெண்களை மோசமாக பேசுவார்கள். அதாவது, பெண்களை ஒரு பொருட்டாக மதிக்காது; எல்லா இடமும் ஆணுக்கானதுதான் என நிறுவ முயல்வதும் ஒடுக்குமுறையே!

Male entitlement- வேறு எந்த தகுதியும் தேவையில்லை, ஆண் என்ற தகுதியே சமூக அந்தஸ்துகளை பெற போதுமானது என கருதுவது. பணியிடங்களில் ஒரு குறிப்பிட்ட பணியை ஆணால் மட்டுமே செய்ய முடியும் என சொல்வார்கள். குறிப்பாக தமிழ் ஊடகங்களில் புலனாய்வு நிருபர் பணிக்கு பெண்களை சேர்த்துக்கொள்ளாமல் இருப்பதை சொல்லலாம்.

Mansplaining – ஆண்களுக்கு எல்லாம் தெரியும்: தனக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போல சில ஆண்கள் தேவைப்படுமா இல்லையா என்பதைக்கூட அறிய முற்படாமல் அறிவுரைகளை கூறுவார்கள். பொதுவாக, பெண்களை நெருங்குவதற்காக ஆண்கள் இதை செய்வார்கள்.

Molesting – விருப்பமில்லாமல் அழைத்தல்: ஒரு பெண்ணை அவளுடைய விருப்பம் இல்லாமல் அல்லது அவளால் நிராகரிப்புக்கு ஆளான பின்னும் பாலியல் உறவுக்கு அழைப்பது.

Negative questioning – எதிர்மறையாக கேட்பது: இதை நிறைய பெண்கள் எதிர்கொண்டிருக்கலாம். அதாவது இரட்டை அர்த்தத்தில் பேசிவிட்டு, தாங்கள் எதிர்பார்க்கும் பதிலை எதிர்ப்பார்ப்பார்கள்.

Negging – உணர்வுரீதியான துன்புறுத்தல்: ஒருவரின் தன்னம்பிக்கையை குறைக்கும் வகையில் எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டிருப்பது.

Policing – கண்காணித்தல்: ஒரு நபரின் செயல்பாடுகளில் விருப்பம் இல்லாமல் ஒரு பெண் ஒதுங்கி தன்னுடைய பணிகளை செய்ய விரும்பினாலும் அந்த நபர் விடாது அந்தப் பெண்ணை கண்காணித்துக்கொண்டே இருப்பது. இதை செய், அது கூடாது என அந்தப் பெண்ணை கட்டுப்படுத்த நினைப்பது.

ஆண்களின் இயல்பே இதுதானா?

பெண்களின் மீது ஈர்ப்பு கொள்வது ஆண்களின் இயல்பு. எனவே, பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலின ஒடுக்குமுறைகள் நிகழத்தான் செய்யும் என வாதிடுகிறார்கள். இதில் முதல் பாதி மட்டுமே உண்மை. ஆண்கள் மீது ஈர்ப்பு கொள்வது பெண்களுக்கும்கூட இயல்பாக நிகழக்கூடியது. அதை பெண்கள் எப்படி கையாள்கிறார்கள். ஆண்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். உணர்வுகளை கட்டுப்படுத்தி, பண்படுத்திக்கொள்ளும் கண்ணியமான ஆண்களும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், பாலின ஒடுக்குமுறை என்பது ஆணுக்கு கிடைக்கும் அளவற்ற அதிகாரத்தின் விளைவாக நடப்பது. இதை தொடர்புடைய ஆண்கள் அவமானமாக கருத வேண்டும் என்பதாலேயே மீ டூ இயக்கத்தை ‘பெயர்களை சொல்லுதல் -அவமானம் கொள்ளச் செய்தல்’ என அழைக்கிறார்கள்.

தனக்காக, தன் குடும்பத்துக்காக பணிபுரிய வருகிற ஆணுக்கு இருக்கும் அதே நிர்பந்தமும் லட்சியமும் பெண்ணுக்கும் இருக்கும். பஞ்சாலைக்கு தின சம்பளத்துக்கு செல்கிற பெண்ணுக்கும் அல்லது ஐடி நிறுவனத்தில் மாதச் சம்பளம் வாங்கும் பெண்ணுக்கும் அவரவர்க்குண்டான வாழ்வியல் நிர்பந்தங்கள் இருக்கும். அதை அதிகாரத்தால் சிதைக்க நினைப்பதே ஆணாதிக்கம். இந்த ஆணாதிக்க சூழலை மாற்ற முனைந்திருக்கும் கூட்டுக்குரல் மீ டூ. நமக்கு அல்லது நமது வீட்டினருக்கு அல்லது நமக்கு தெரிந்தவர்களுக்கு இந்த ஒடுக்குமுறைகள் நடந்திருக்கலாம். சினிமா ஆட்களின் பெயர்கள் அடிபடுவதால் ஏதோ கிசுகிசு போல எண்ணி நகர்ந்துவிடாமல், இந்த இயக்கத்தை ஆதரிப்பது நமது கடமை. ஏனெனில், பணியிடங்களில் பாலியல் சமத்துவம் என்பது நமக்கு பின்னால் வருகிற அடுத்தடுத்த தலைமுறை பெண்களுக்கு நாம் பெற்றுத்தர வேண்டிய உரிமை.

வினவு தளத்தில் வெளியானது எனது கட்டுரை.

தமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்?

metoo இயக்கத்தை பலரும் வெவ்வேறு விதமாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் எழுதும் பலரின் புரிதல் அதிகாரம் உள்ள ஆண், ஒரு பெண்ணை உடல்ரீதியாக துன்புறுத்துவது என்பதாக உள்ளது. இன்னும் சிலர் இதை ஆண்கள் பெண்களை வளைத்த கதையாக எழுதுகிறார்கள். பெயரை குறிப்பிடுதல் – அவமானப்படுத்துதல் என்பதைத் தாண்டியும் metoo இயக்கம், பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கான சம உரிமையை நிலை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். 2004-மே மாதம் முதல் ஊடகங்களில் பணியாற்றி வருகிறேன். உண்மையில் உடல்ரீதியிலான பாலியல் அத்துமீறல்களை எதையும் நானோ, என் உடன் பணியாற்றிய பெண்களோ எதிர்கொள்ளவில்லை. ஆனால், அதைவிட கொடுமையான மனரீதியான ஒடுக்குமுறைகளை நானும் உடன் பணியாற்றிய பெண்களும் எதிர்கொண்டிருக்கிறோம். இந்த ஒடுக்குமுறை சூழல் மாற வேண்டும் என்கிற சிந்தனையில்தான் தொடர்ந்து இதுகுறித்து எழுதிவருகிறேன். metoo இயக்கம் உருவாகும் முன்பே ஒடுக்குமுறைகளை சந்திக்கும்போதெல்லாம் துணிச்சலாக எழுதி வருகிறேன். அதற்கான விளைவுகளையும் சந்தித்து வருகிறேன். என்வழியாக ஊடகங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசி, தீர்வு காண முற்படுகிறேன்.

என்னுடைய அம்மா சத்துணவு மேற்பார்வையாளராக இருந்தவர்; அப்பா பேருந்து நடத்துனராக இருந்து, உடல்நிலை காரணமாக அந்த பணியை விட்டவர். என் அம்மாதான் குடும்பத்தின் ஆதாரம். விவசாய குடும்பப் பின்னணியில் பெண்ணை படிக்க வைப்பதில் எங்கள் உறவினர்கள் எவருக்கும் பிடிக்கவில்லை. என் அம்மா, என்னை கல்லூரிக்கு அனுப்புவதில் உறுதியாக இருந்தார். அம்மாவுக்கு என்னை ஆசிரியர் அல்லது ஏதேனும் அரசு வேலைக்கு அனுப்புவதில் விருப்பம் இருந்தது. எனக்கு சினிமா இயக்குநராக வேண்டும் என்கிற விருப்பம். ஒரு பெண் சினிமா துறையில் பணியாற்றப்போகிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. எனவே, விஸ்காம் படித்துவிட்டு விளம்பரம் அல்லது கிராபிக்ஸ் துறையில் பணியாற்றலாம் என அம்மாவை சமாதானம் செய்துவிட்டு சென்னை வந்தேன்.

முதல் இரண்டு ஆண்டுகள் ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். மூன்றாம் ஆண்டு வீட்டில் பொருளாதார நெருக்கடி. நீண்ட தூரம் பயணிக்க முடியவில்லை என்கிற காரணத்தால் சென்னையின் மையப்பகுதியில் இருந்து சோழிங்கநல்லூர் கல்லூரி ஹாஸ்டலில் தங்கியிருந்தார் சீனியர் அக்கா ஒருவர். அவர் மீண்டும் வீட்டிலிருந்தே கல்லூரிக்கு வரப்போவதாக சொன்னார், என்னையும் அவருடன் தங்கிக்கொள்ள அழைத்தார். என்னுடைய பொருளாதார சூழலை அறிந்த அவர், மூன்றாம் ஆண்டு படித்து முடிக்கும்வரை அவருடைய அறையில் என்னை அனுமதித்தார். அவருடைய வீட்டாரும் என்னை பெருந்தன்மையோடு அனுமதித்தனர்.

மூன்றாம் ஆண்டு இறுதி தேர்வு எழுதியதும் வேலைத் தேட ஆரம்பித்தேன். சினிமா உதவி இயக்குநராகும் முயற்சியும் செய்தேன். சினிமா துறையில் பெண்களுக்கு இருந்த பிரச்சினைகள் என்னை பயமுறுத்தின. எப்படி, யாரை அணுகுவது என்கிற தெளிவில்லாத பாதையாக அது எனக்குப் பட்டது. எனக்கு எழுத வரும், பத்திரிகை பணி செய்யலாம் என முடிவெடுத்தேன். நான்கைந்து பத்திரிகை அலுவலகங்களில் பயிற்சியாளர் வாய்ப்பு கேட்டு அலைந்தேன். பணிமுடித்தபின், அம்மாவிடமிருந்து நிச்சயம் எந்தவித பொருளாதார உதவியும் கேட்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அடுத்த மாத செலவுக்கு என்ன செய்ய என்கிற சூழலில், அண்ணாநகரில் ஒரு ஸ்டுடியோவில் வேலை கிடைத்தது. போட்டோஷாப் வேலை என்றுதான் விளம்பரத்தில் அழைத்திருந்தார்கள். ஆனால், நாள் முழுக்க ரிசப்ஷனில் நின்று வருகிறவர்களிடம் கேமராக்களை விற்பது, விளக்கம் சொல்வது என்றபடியாக அந்த வேலை போனது. அயற்சியான பணி. காலையில் சாப்பிட மாட்டேன். மதியம், இரவு மட்டும்தான் உணவு. எப்படி நாள் முழுக்க நின்றுகொண்டு வேலை பார்க்க முடியும்? எப்போது தப்புவோம் என இருந்தது. நல்லவேளையாக தினமணி நாளிதழில் இண்டன்ஷிப் கிடைத்தது. அப்போது அங்கு என்னைப் போல இண்டன்ஷிப் வந்திருந்த எழுத்தாளர் ஜா. தீபா, நான் தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருந்ததை அறிந்து குமுதம் சிநேகிதியில் பணி வாய்ப்பு இருப்பதை சொன்னார்.

குமுதல் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி, என்னுடைய எழுத்தைப் பார்த்து எனக்கு வாய்ப்புக்கொடுத்தார். அடுத்த மாதமே நான் பணிக்குச் சேர்ந்தேன். என்னைப் போல எளிய பின்னணியில் வந்தவர் அவர், என் ஆர்வத்தை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. என்னை ஊக்கப்படுத்தினார், வளர்த்தெடுத்தார். இரண்டு ஆண்டுகளில் உதவி ஆசிரியர் ஆனேன். பெண்கள் பத்திரிகை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக ஒரு குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் பேசுகிறது. எனக்கு அதையும் கடந்து எழுதும் விருப்பமும் தேடலும் இருந்தது. அரசியல்-சமூகம் குறித்து எழுதுவதில் எப்போதும் தீவிரமான ஆர்வம் இருந்தது. ஆனால், வேறு வேலை தேடாமல் இந்தப் பணியை விட்டுவிட்டேன். பணி கிடைக்க ஐந்து மாதங்கள் ஆனாது.

‘குங்குமம்’ இதழில் நிருபராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பு என்னை பலவிதங்களிலும் மேம்படுத்தியது. சூழலியல், இலக்கியம், சமூகம் சார்ந்து எழுதினேன். வடதமிழகத்தின் பல பகுதிகளுக்கு பயணித்து கட்டுரைகள் எழுதினேன். அப்போது தினகரன் இணைப்பிதழின் ஆசிரியராக இருந்த கே. என். சிவராமன், என்னை ஊக்கப்படுத்தினார். என்னுடைய கட்டுரைகள் பார்த்துதான் ஆனந்த விகடன் இதழிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. முதலில் ஆனந்த விகடன் உதவி ஆசிரியர் பேசிவிட்டு, பிறகு ஆசிரியரிடம் பேசச் சொன்னார். ஆசிரியர், ‘நம்மைப் போல பிந்தங்கிய சூழலில் இருந்து வருகிறவர்கள் வெற்றி பெறுவது முக்கியம்’ என்கிற அர்த்தத்தில் பேசினார். அந்தப் பேச்சு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. அதோடு, ஆனந்த விகடன் இதழில் (உள்குத்துகளை தெரியாதவரை) பணியாற்ற யாருக்குத்தான் விருப்பம் இருக்காது?

தொடக்கத்தில் எல்லாமே மிகச் சிறப்பாகத்தான் இருந்தது. அரசியல் பேட்டிகள் எடுக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள். இதற்காகத்தானே இத்தனை நாளும் காத்திருந்தோம் என விரும்பிச் செய்தேன். ஆனால் ஆனந்த விகடன் குழு ஒரு Boys’ club போலத்தான் செயல்பட்டது. எங்கள் குழுவில் மற்றொரு பெண் நிருபர் இருந்தார். அவர் பெரும்பாலும் வெளி அசைன்மெண்டுக்குச் சென்றுவிடுவார். மற்றவர்கள் இயல்பாக பேசமாட்டார்கள், அதிகார தொனியிலேயே நடந்துகொள்வார்கள். அவர்கள் அப்படி இருக்கவே ஆசிரியரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். ஆசிரியரின் அதிகாரத் தொனியை அலுவலகம் அறிந்தது. அரசனைப் போல அல்லது அதிகாரம் மிக்க குடும்பத்தலைவனைப் போல. தலைமையில் இருப்பவர் அதிகார தொனியில் இயங்கினால் எப்படி அங்கே இயல்பாக பணிபுரிய முடியும்? அருகில் இருந்தாலும்கூட நேரடியாக ஆசிரியர் பேசமாட்டார், உதவி ஆசிரியரை விட்டுத்தான் கேட்க வைப்பார். இதைத்தான் ஆண்-அதிகார திமிர் என்கிறார்கள்.

இந்த Boys’ club சொற்றொடருக்கு ஓர் உதாரண சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். நான் தமிழ் வழியில் படித்தவள். அப்போது ஆங்கிலத்தை ஓரளவில் புரிந்துகொள்ள முடியும். பேச வராது. ஆனாலும் பிரபல எழுத்தாளர்கள் அமிதவ் கோஷ், ஷோபா டே நேர்காணல்களை எடுத்தேன். இதுகுறித்து ஆசிரியர் குழுவில் இருந்தவர்களுக்கு பலத்த சந்தேகம். குறிப்பாக, மூத்த சினிமா நிருபருக்கு ஆங்கிலம் தெரியாத நான் எப்படி பேட்டியெடுத்திருக்க முடியும் என சந்தேகம். பல முறை கூடிப்பேசி சிரித்த பின், நேரடியாக என்னிடமே கேட்டார். அலுவலகத்தில் இருந்த நண்பரின் உதவியுடன் ஆங்கில கேள்விகளை தயாரித்து கேட்டேன், என்னுடைய பேட்டியை பதிவு செய்திருக்கிறேன், கேட்கிறீர்களா என்றவுடன் அமைதியானார். அந்த அலுவலகத்தில் தமிழ் வழியில் படித்து வந்தவர்கள் ஏராளமாக இருந்தார்கள். ஆனால், ஒரு பெண் தமிழ் வழியில் படித்து கொஞ்சம் அறிவுப்பூர்வமாக செயல்பட்டால் ஆண்கள் மனம் தாங்குவதில்லை.

ஆனந்த விகடன் இதழில் நான் மற்றொரு எதிர்கொண்ட பிரச்சினை. வேலை நேரம். ஆசிரியர் குழு நண்பகல் 12 மணிக்கு மேல்தான் பணியாற்றத் தொடங்கும். இரவு எட்டு மணிக்கு மேல் தான் இறுதிகட்டப் பணிகள் தொடங்கும். குமுதம் சிநேகிதி இதழில் இரவு 11 மணி மரைக்கும்கூட பணியாற்றிவிட்டு திரும்பியிருக்கிறேன். அது உதவி ஆசிரியரின் பணி தன்மை அப்படி. ஆனால், இங்கே நான் நிருபர். இதழ் முடிக்கும் நேரங்களில் காலையில் 9.30 மணிக்கு வந்து, இரவு 9, 10 மணி வரைக்கும் கட்டாயம் இருந்ததாக வேண்டிய நிர்பந்தம் இல்லை. ஆனால், நிர்பந்தித்தார்கள். ஆனந்த விகடன் இதழின் வடிவமைப்பு மாற்றப்பட்டபோது, இரவு முழுக்க அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழல். விடியகாலை 3 மணிக்கு எங்களுடைய கட்டுரை திருத்தம் செய்யப்பட்டு அச்சுக்கு போகும் அதுவரை அங்கேயே இருக்க வேண்டும். இடையில் நமக்கு வேறு எந்த வேலையும் இருக்காது. சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும். Boys’ club-க்கு மிகச் சிறந்த உதாரணம்.

இத்தகைய பணிச்சூழலுக்கிடையே தொடர்ந்தபோதும், என்னுடைய கட்டுரைகள் கவர் ஸ்டோரியாக வந்தபோதும் என்னுடைய ப்ரோபேஷன் காலம் நீட்டிக்கப்பட்டது. எனக்கு பணி நிரந்தரம் தரப்படவில்லை. சில வாரங்களில் என்னுடைய கட்டுரைகள் அச்சேறுவது குறைக்கப்பட்டது. இரவு 10 மணி வரை அலுவலகத்தில் இருந்து பணியாற்றியபோது, அடுத்த நாள் காலை அலுவலக நேரத்துக்கு சரியாக வந்துவிட வேண்டும் என்கிற கண்டிப்பு எனக்கு மட்டும் இருந்தது. ஒருவிதமான ஒதுக்கல் சூழல் ஆசிரியர் குழு மூலம் செய்யப்பட்டது. என்னுடைய ஒதுக்கலை தாங்க முடியாமல் வெடித்து அழும்போது, ஆறுதல் பார்வையைக்கூட அந்த ஆசிரியர் குழு பார்க்கவில்லை. அவர்கள் எப்போது தங்களை ஆண்களாகவே நினைத்தார்கள். அடுத்த சில நாட்களில் ஆசிரியர் என்னை பணியிலிருந்து நீக்கத் திட்டமிட்டிருப்பதும், அதற்கு நான் தனி தீவாக இருக்கிறேன் என்கிற காரணத்தை நிர்வாகத்திடம் சொன்னதும் தெரியவந்தது. அங்கேயே இருந்து போராடுவதெல்லாம் முடியாத காரியம். ஆண்-அதிகாரத்தை இயல்பாக கருதுகிற ஒரு பணிச்சூழலில் நிச்சயம் என்னால் பணியாற்ற முடியாது என்கிற தீர்மானத்துடன் நானே ராஜினாமா கடித்தத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

“நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள், நம்மைப் போன்ற முதல் தலைமுறையாக படித்து பணிபுரிய வருகிறவர்கள் வெற்றி பெற வேண்டும்” என சொன்ன அதே ஆசிரியர், என்னை ஒரே நாளில் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்தார். தனி தீவாக இயங்குவது என்பது என்ன பொருளில் சொல்லப்பட்டது எனத் தெரியவில்லை. பத்திரிகை துறைக்கு வந்திருக்கும் நான் எப்படி தனி தீவாக இயங்க முடியும்? வெளியூர்களுக்கு பயணித்து கட்டுரைகள் எழுதும் பெண், ரிசர்வ் டைப்-ஆக இருக்க முடியுமா? ஏற்கனவே இரண்டு இடங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ள பெண், தனி தீவாக எப்படி இயங்க முடியும்? யாருக்கு அட்டியூட் பிரச்சினை? எனக்கா ஆசிரியருக்கா? அல்லது ஆசிரியர் என்னிடம் எதிர்ப்பார்த்தது என்ன? சமீபத்தில் அந்த ஆசிரியர் பணியிலிருந்து விடுபட்டார். அவருக்கு பல பத்திரிகையாளர் சமூக ஊடகங்களில் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு நன்றி சொன்னார்கள். பல சினிமா பிரபலங்களை, எழுத்தாளர்களை, ஊடகவியலாளர்களை ‘தூக்கி’விட்ட அந்த ஆசிரியருக்கு ஏன் ஒரே ஒரு பெண்ணிடமிருந்துகூட இப்படியொரு நெகிழ்ச்சியான பதிவு வரவில்லை? இப்போது ஓய்வில் இருக்கும் ஆசிரியர் இதற்கான பதிலை அசை போடட்டும்.

இரண்டு மாத இடைவெளியில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் சிறப்பு நிருபர் பணிக்குச் சேர்ந்தேன். சிறப்பு நிருபர் என்றால், சிறப்பு செய்தி தொகுப்புகளை செய்வார்கள். ஆனால், பணியாற்றிய ஒரு வருடத்தில் ஒரு முறைகூட அந்த வேலை செய்யவில்லை. என்னுடைய பத்திரிகை அனுபவத்தில் மிக மிக கசப்பான அனுபவம் இங்கேதான் ஏற்பட்டது. சிறப்பு நிருபராக பணியில் சேர்க்கப்பட்ட நான், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பணியே தரப்படாமல் உட்கார வைக்கப்பட்டேன். சும்மா உட்கார்ந்திருக்கிறோமே என்கிற ஆதங்கத்தில் நானாக ஏதேனும் செய்தி எழுதி கொண்டுபோனால் அந்த ஆசிரியர் அந்த தாளை வாங்கி ஓரமாக வைத்துவிடுவார். பிற சிறப்பு நிருபர்களுக்கு சிறப்பு செய்திகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுப்பேன். அதை ஆசிரியரும் பார்ப்பார். அது தொலைக்காட்சியிலும் வரும். ஆனால், எனக்கு அப்படியொரு வாய்ப்பு தரப்படாது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஸ்க்ராலிங் எழுத பணிக்கப்பட்டேன். அதுவும்கூட ஃபிளாஷ் நியூஸ் எழுத விடமாட்டார். அவர் எதையோ எதிர்பார்த்தார் என்று மட்டும் புரிந்தது. அவருடைய சமிக்ஞைகளை என்னால் புரிந்தகொள்ள முடியாதபடியால் என்னை எழுதவே வராத, தண்டச் சம்பளம் வாங்கும் பெண் என்பதைப்போலவே ஆசிரியர் அறையில் அவமானப்படுத்துவார். நான் எழுதிய கவர் ஸ்டோரி ஒன்று பெயர் போடாமல், ஆனந்தவிகடனில் பணியிலிருந்து விலகியபின் வெளியாகியிருந்தது. சிறுபிள்ளைத்தனமாக ஆசிரியரிடம் ‘சார், இந்த கட்டுரையை எழுதியது நான்” என காட்டினேன். திரும்பவும் என்னை எதற்கும் லாயக்கில்லாதவள் போலவே பார்த்தார். என்னுடைய கனவுகள் தேய்ந்து, எதற்கும் லாயக்கில்லாதவள் என்கிற எண்ணம் எனக்குள்ளே ஓட ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகால பத்திரிகை சூழலில் எனக்குக் கிடைத்த வாய்ப்பில் சிறப்பாகவே எழுதியிருக்கிறேன். ஆனால், இங்கே இப்படி இருக்கிறோமே என்கிற எண்ணம் என்னை அலைகழித்தது.

என்னைப்போல, அவருடைய விருப்பத்துக்கு இணங்காத பெண்களை அவர் இப்படித்தால் அலைகழிக்க வைத்தார். பணியிடங்களில் நான் பார்த்த செக்ஸிஸ்ட் ஆண்கள் மிக மோசமானவர் அவர். அங்கிருந்து விலகிய சில ஆண்டுகளில் அவர் மீது ஒரு பெண் செய்தி வாசிப்பாளர் பாலியல் புகார் கொடுத்தார். கைதாகி சிறை சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து பணிக்கு அழைத்துக்கொண்டது சன் நிர்வாகம். metoo குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்களை பணிநீக்கம் செய்வதும் அவர்களுடம் பணிபுரிய மாட்டோம் என அறிவிப்பதும் உலகம் முழுக்க முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்ச்சூழலில் அதெல்லாம் நிகழ வாய்ப்பில்லை.

பெண்கள் படிக்கிறார்கள்; பணிபுரியும் கனவும் லட்சியமும் அவர்களிடம் இருக்கிறது. சிறு நகரங்களிலிருந்து கிராமங்களிலிருந்து பெருநகரை நோக்கி வருகிறார்கள். பெரும்பாலும் முதல் தலைமுறையாக முன்னேறி வருகிறது, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள்…இவர்களை ஆணாதிக்க பணிச்சூழல் பெரும்பாலும் விழுங்கிவிடுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகை பணிச்சூழலில் ஆணாதிக்க சூழலை தகர்த்திருந்தாலும் தமிழ் ஊடகங்களின் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. பின்புலத்துடன் இருக்கிறவர்கள் மட்டுமே ஊடகங்களில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்கிற சூழல் இருக்கிறது. பெண்களைப் பொறுத்தவரை திறமை என்பது இரண்டாம் பட்சமானது. பணியைப் பொறுத்தவரை 25 வயது வரைக்குமுள்ள பெண்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். தமிழ் ஊடகங்களில் பெண்கள் என சர்வே எடுத்தால் ஊடகங்களில் செக்ஸிஸ்ட் தன்மை வெட்ட வெளிச்சமாகத் தெரியும். வேளாண் பத்திரிகையில் பெண்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்காது. புலனாய்வு இதழ்களில் பணி வாய்ப்பு கிடைக்காது. ‘ஆண்பால்-பெண்பால்’ என தலைப்பிட்டு பெண் உரிமை பேசிய விகடன் குழுமத்தில்தான் இந்த நிலை. இன்னும் சொல்லப்போனால் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ‘அவள் விகடன்’ இதழின் ஆசிரியர் ‘ஸ்ரீ’ என்ற முகமூடியுடன் இயங்கும் ஒரு ஆண். இது எத்தனை பெரிய அயோக்கியத்தனம். விகடன் விருதுக்காக வாயைப் பிளக்கு எத்தனை பெண்ணுரிமை போராளிகள் இதைப் பற்றி கேள்வி எழுப்புவார்கள்?

ஆனந்த விகடன், சன் நியூஸ் தொலைக்காட்சியில் எனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையிலிருந்து மீண்டு வர எனக்கு காலம் பிடித்தது. குங்குமம் இதழில் எழுதிய கட்டுரைகள் குறித்து இப்போதும் நினைவு கூரும் நண்பர்கள் இருக்கிறார்கள். முகம் தெரியாதபோதும்கூட நீங்கள் எழுதுங்கள் என வாய்ப்பு தருகிறவர்கள் இருக்கிறார்கள். அவநம்பிக்கைகளின் ஊடாக நம்பிக்கையை வெளிப்படுத்தியபடி எப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இது எத்தனை பெண்களுக்கு சாத்தியமாகக்கூடும். பணியிட ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய கனவுகள் நசுக்கப்படுவதை எப்படி தடுத்து நிறுத்துவது? பெண் என்பதாலேயே எங்களுக்கு எந்தவித லட்சியங்களும் இருக்கக்கூடாதா? இத்தகைய சூழலில் metoo இயக்கம் பாலின சமத்துவம் கோரலில் ஒரு புதிய உரையாடலை தொடங்கியிருக்கிறது. அதனால்தான் அதை நான் நிபந்தனை இல்லாமல் ஆதரிக்கிறேன்.

கருப்பு இணையதளத்தில் வெளியான எனது கட்டுரை.

#metoo: இதுவரை என்ன நடந்தது? ஒரு முழுமையான அறிக்கை!

இந்தியாவில் மீ டூ இயக்கம் கடந்த மூன்று வாரங்களாக பேசுபொருளாகியிருக்கிறது. இதுவரை பேசத்துணியாத பல துறைகளைச் சேர்ந்த பெண்கள் கூட்டுக்குரலாக பணியிடங்களில் ஆண்களால் எதிர்க்கொண்ட ஒடுக்குமுறை, பாலியல் வன்முறைகளைப் பேசினர். இதில் மோடி அரசின் பங்குபெற்றிருந்த அமைச்சர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டும் அடக்கம்.

பாதிக்கப்பட்ட பெண்களின் அனுபவ பகிர்வுகளிலிருந்து அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையேதான் பணியாற்றி வந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இந்த இயக்கம் பெண் பணியாளர்களின் உரிமைகள் குறித்த உரையாடலை உண்டாக்கியது. ஒடுக்குமுறை, வன்முறையற்ற, பாதுகாப்பான பணியிடத்தை பெண் பணியாளர்களுக்கு உருவாக்கித்தர வேண்டும் என்கிற பேச்சுக்களையும் அது உருவாக்கியது. சட்ட ரீதியாக அணுகுவது உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெறுவது குறித்தும் பேசப்பட்டது. இன்னொரு பக்கம், பெயர் சொல்லப்படாமல் வெளிவரும் புகார்களை கையாள்வது எப்படி எனவும் பேசினார்கள். தலித், ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களின் குரல்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.

இந்த இயக்கத்தின் மிகப் பெரிய வெளிப்பாடாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பரின் பதவி விலகலைச் சொல்லலாம். 1980களிலிருந்து 1990களின் தொடக்கம் வரை 16க்கும் மேற்பட்ட பெண்கள் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டினர். பாஜகவில் இணையும் முன் டெல்லியில் பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது நடந்த சம்பவங்கள் இவை. முதன்முதலில் இவர் பெயரைச் சொன்ன பத்திரிகையாளர் ப்ரியா ரமானி மீது இவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

மீ டூ இயக்கம் செப்டம்பர் 25-ஆம் தேதி வேகமெடுத்தது. பாலிவுட் நடிகர் தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா பட்டேகர் மீது பாலியல் வன்கொடுமை புகார் சொன்னார். இந்த சம்பவம் 10 ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்பு தளத்தில் நடந்ததாக அவர் கூறினார். அதன்பின், அக்டோபர் 4-ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த மஹிமா குக்ரேஜா என்ற இளம் நகைச்சுவை நடிகர், தன் சக நகைச்சுவை நடிகரான உத்சவ் சக்ரவர்த்தி மீது பாலியல் ஒடுக்குமுறை கூறினார். உத்சவ் மீது மேலும் ஒரு பெண் குற்றம்சாட்டினார். அடுத்த நாள் பெங்களூருவைச் சேர்ந்த பகுதி நேர பத்திரிகையாளர் சந்தியா மேனன், மூன்று வெவ்வேறு பத்திரிகைகளில் தனக்கு நேர்ந்த பாலியல் ஒடுக்குமுறைகள் குறித்து எழுதினார். த வயரில் பணியாற்றும் அனு பூயான், வேறொரு பத்திரிகையில் தனக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

அரசியல், ஊடகம், பொழுதுபோக்கு, கலை, சட்டம், விளையாட்டு, கல்வி, தொழில்துறை உள்ளிட்ட 14 துறைகளைச் சார்ந்த வெளியான மீ டூ குற்றச்சாட்டுக்களின் தொகுப்பு இங்கே…

பத்திரிகை துறை:

மீ டூ இயக்கத்தின் வாயிலாக வெளியான பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களின் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய, பழமையான ஆங்கில செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை இழந்துள்ளனர். அதோடு, பலர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு, நிறுவனத்துக்குள்ளே அல்லது வெளியே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

டி.என்.ஏ-வின் முன்னாள் ஆசிரியரும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஆசிரியராக பணியாற்றியவருமான கவுதம் அதிகாரி, US think-tank Centre for American Progress (CAP) என்ற அமைப்பிலிருந்து வெளியேறினார். இவர் மீது மூன்று பெண்கள், விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார் என குற்றம்சாட்டியிருந்தனர்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஹைதராபாத் பதிப்பின் ஆசிரியரான கே. ஆர். ஸ்ரீனிவாஸ் மீது பத்திரிகையாளர் சந்தியா மேனன் உள்ளிட்ட ஆறு பெண்கள் அவருடைய தலைமையகத்தில் புகார் அனுப்பினர்.

த வயரில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது, நிஷ்தா ஜெயின் என்ற திரை இயக்குநர் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் வினோத் துவாவின் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நிஷ்தா ஜெயின் அளித்த புகாரை விசாரிக்க தனி குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.

ஹிந்துஸ்தான் டைம்ஸின் மூத்த பத்திரிகையாளர் பிரசாந்த் ஜா தன்னுடைய பதவியை விட்டு விலகினார். இவர் மீது வழக்கறிஞராக உள்ள அவந்திகா மேத்தா புகார் கூறியிருந்தார். இவர்கள் இருவருக்கிடையே நடந்த குறுஞ்செய்தி பறிமாற்றங்கள் பொதுவெளியில் வெளியானபோது, தார்மீக அறத்தின் அடிப்படையில் பதவி விலகுவதாக பிரசாந்த் ஜா அப்போது கூறினார்.

பிஸினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையின் நிருபர் மானக் ஜெயின் மீது தனது மறுப்பை தெரிவித்தபோதுமம் பாலியல் உறவுக்கு அழைத்ததாக த வயரின் அனு பூயான் குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். இதனால் மானக் ஜெயின் பதவி விலகினார்.

தி இந்துவின் கவுரிதாசன் நாயர், யாமினி நாயர் மற்றும் சிலர் பாலியல் ரீதியாக தவறாக நடந்ததாக குற்றம்சாட்டியிருந்தனர். இதனால் இவரை அலுவலக விடுப்பில் அனுப்பியது தி இந்து.

என்டிடீவி தன்னுடைய பணியாளர் ஒருவருக்கு எதிரான பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டை விசாரிப்பதாக உறுதியளித்தது.

ஹஃபிங்டன் போஸ்ட் தன்னுடைய முன்னாள் பணியாளர்கள் அனுராக் வர்மா, உத்சவ் சக்ரவர்த்தி மீதான புகார்களை விசாரிக்க உள்விசாரணைக்குழு அமைத்திருப்பதாக கூறியது.

க்விண்ட் இணையதளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர், தன் சக பெண் பத்திரிகையாளரிடம் முறை தவறி நடந்துகொண்டதற்காக மன்னிப்புக் கேட்டார். மேக்நாத் போஸ் என்ற பத்திரிகையாளர் மீது ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரியில் உடன் படித்த பெண் அளித்த பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டின் காரணமாக நிர்வாக விடுப்பில் அனுப்பப்பட்டார்.

நியூஸ் லாண்ட்ரி இணையத்தளத்தின் பணியாற்றும் அலுவலர் மீது எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க உள் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலர்கள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா மீ டூ குற்றச்சாட்டுக்களை முக்கியத்துவம் கொடுத்து கவனிப்பதாக அறிக்கை வெளியிட்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் பணியிடங்களில் பாலியல் ஒடுக்குமுறை குறித்த சிறப்பு பயிற்சி பட்டறைகளை நடத்துவதாக அறிவித்தது.

டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியது. எடிட்டர்ஸ் கில்டு செய்தியறைகளில் நடக்கும் பாலியல் ஒடுக்குமுறை குறித்து அறிக்கை வெளியிட்டது.

மும்பை பத்திரிகையாளர் மன்றமும் ஊடக பெண்கள் நெட்வொர்க்கும் இணைந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிப்பதாக அளிக்கை வெளியிட்டன. பாலியல் ஒடுக்குமுறை தொடர்பான சட்டங்கள் குறித்த விவாதம் ஒன்றையும் நடத்தின. இந்திய பத்திரிகையாளர் மன்றம், பெண் பத்திரிகையாளர் அமைப்பு, தெற்காசிய பெண் ஊடவியலாளர்கள் அமைப்பு ஆகியவை இணைந்து பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டங்கள் பணியிடங்களில் அமல்படுத்தப் படாததற்கு கண்டனம் தெரிவித்தன. ஃபர்ஸ்போஸ்ட் இணையதளம் மீடூ உரையாடல் என்ற பெயரில் மீ டூ இயக்கத்தில் வெளியான பாலியல் ஒடுக்குமுறைகள் குறித்த நிகழ்ச்சியொன்றை நடத்தி வருகிறது. இந்திய செய்தி அறைகளில் நடக்கும் பாலியல் ஒடுக்குமுறைகள் குறித்த சர்வே ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறது ஊடக பெண்கள் நெட்வொர்க்.

அடித்தளத்தில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர்களின் ‘கபார் லஹரியா’ என்ற அமைப்பைச் சேர்ந்த பெண் நிருபர்கள் பிந்தங்கிய, கிராமப்புறங்களில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படையாக எழுதியிருந்தனர். இப்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் விழிப்புணர்வு காரணமாக போர்னோ வீடியோக்கள், பாலியல் நகைச்சுவை துணுக்குகள் அனுப்பிக்கொண்டிருந்த ஆண்கள், அதை நிறுத்தியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

அரசியல்

ஏசியன் ஏஜ் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம்.ஜே. அக்பர் மீது இதுவரை 16 பெண்கள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களை சொல்லியிருக்கிறார்கள். வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்த அவர், இந்த குற்றச்சாட்டுக்களின் காரணமாக ராஜினாமா செய்தார். பத்திரிகையாளர் ப்ரியா ரமானி மீது அக்பர் தொடுத்திருக்கும் அவதூறு வழக்கை திரும்பப் பெற எடிட்டர் கில்டு கோரியிருந்தது. மிண்ட் பத்திரிகையின் வாராந்திர இணைப்பான லாங்க்’ இல் ப்ரியா ரமானி பத்தி எழுதிவருகிறார். ப்ரியாவுக்கு தங்களுடைய ஆதரவை தரும் பொருட்டு, பத்தி எதுவும் வெளியிடாமல் அந்த இடத்தில் ‘நாங்கள் ப்ரியாவுடன் இருக்கிறோம்’ என்ற ஹேஷ் டேக் மட்டும் பிரசுரித்திருந்தது மிண்ட்.

பத்திரிகையாளர் அமைப்புகள் அனைத்தும் அமைச்சருக்கு எதிராக நின்றன. மணி கண்ட்ரோல் என்ற இணையதளத்தின் ஆசிரியர் சுசித்தா தலால் மற்றும் பத்திரிகையாளர் ஹரீந்தர் பவேஜா ஆகியோர் ப்ரியாவின் வழக்கு செலவுகளுக்காக நிதி திரட்டி தருவதாக அறிவித்தனர்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அக்பரின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பாவிட்டாலும் பாலியல் ஒடுக்குமுறைகளை குறித்து பேசும் பெண்களின் மன உறுதியை பாராட்டினார். அதே சமயம் பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் மீ டூ இயக்கம் வக்கிரபுத்தி உள்ளவர்களின் செயல்பாடு என்றார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி, இந்த இயக்கத்தை அதரித்தார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அரசு பாலியல் ஒடுக்குமுறைகளை எதிர்க்கொள்ள சட்ட மற்றும் அமைப்பு ரீதியிலான குழு ஒன்றை அமைத்தது. மேனகா காந்தி பாலியல் ஒடுக்குமுறையில்லாத பணியிடத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மூத்த நீதிபதி மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். ஊடக நிறுவனங்கள் மற்றும் மாநில, தேசிய கட்சிகள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களை விசாரிக்க உள்விசாரணைக்குழு அமைக்க வேண்டும் எனவும் கோரினார்.

தேசிய பெண்கள் ஆணையம் பணியிடத்தில் பாலியல் ஒடுக்குமுறை குறித்து விசாரிக்க சிறப்பு மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டது. மின்னணு புகார் பெட்டி ஒன்றை அமைத்ததோடு, புகார் பதியப்பட்டவுடன் தொடர்புள்ள துறைக்கு அந்த புகாரை தானாகவே அனுப்பும் முறையையும் அறிமுகப்படுத்தியது.

டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டவர்களை விசாரிக்க தனி விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதோடு டெல்லி பெண்கள் ஆணையமும் மீ டூ புகார்களை அளிக்க தனி மின்னஞ்சல் முகவரியை ஏற்படுத்தியது.

அரசியல் தலைவர்கள் பலர் மீ டூ இயக்கத்தை பொதுப்படையாக ஆதரித்தாலும் வழக்கம்போல மோடி தனது வாயைத் திறக்கவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற வக்கிர புத்தி கொண்ட அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பெண்களை வக்கிரபுத்தி படைத்தவர்கள் என குற்றமசாட்டினார்கள்.

இளைஞர் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஃபெரோஸ் கான் என்பவர் பதவி விலகினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சச்சின் பைலட், சல்மான் குர்ஷித், விவேக் தன்ஹா, கபில் சிபல், ஸ்ரீனிவாஸ் பி.வி., சசி தரூர் போன்றோர் மீ டூ இயக்கத்தை வரவேற்றனர்.

மத்திய அமைச்சர் உமா பாரதி, இந்த இயக்கம் பணியிடத்தில் பெண்களுக்கு நல்லதொரு மாற்றத்தை உண்டாக்கும் என தெரிவித்தார். பாஜக எம்பிக்கள் மீனாட்சி லேகி மற்றும் பூனம் மஹாஜன் ஆகியோரு வரவேற்றனர்.

திமுக எம்.பி. கனிமொழி தனது ஆதரவை தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களை நம்ப வேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். மலையாள நடிகரும் சிபிஎம் எம்.எல்.ஏவுமான முகேஷ் குமாருக்கு எதிராக டெஸ் ஜோசப் என்பவர் சொன்ன குற்றச்சாட்டின் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என கோரப்பட்டது.

பாலிவுட்டில் மீ டூ!

தனுஸ்ரீ தத்தா, நானா பட்டேகர் மீது சொன்ன குற்றச்சாட்டு இந்தியாவின் ஹார்வி ஹெயின்ஸ்டீன் தருணம் என பலரும் கூறுகிறார்கள். 2008-ஆம் ஆண்டு இதே குற்றச்சாட்டுக்களை தனுஸ்ரீ சொன்னபோது, எவரும் கண்டுகொள்ளவில்லை. இம்முறை ஊடகங்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டன.

’ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பின்போது நானா பட்டேகர் பாலியல் ஒடுக்குமுறையில் ஈடுபட்டதாக தனுஸ்ரீ குற்றம்சாட்டினார். இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி (அறிவுஜீவிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்களை அர்பன் நக்ஸல் என்ற முத்திரை குத்திய நபர்-அதே பெயரில் நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்) மீது இழிவாக பேசுதல், ஒடுக்குமுறை புகாரை தனுஸ்ரீ கூறியிருந்தார்.

மகாராஷ்டிர பெண்கள் ஆணையம் நானா பட்டேகர், படத்தின் இயக்குநர் ராகேஷ் சாரங் மற்றும் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இவர் மூவர் மீதும் தயாரிப்பாளர் சாமீ சித்திக் மீதும் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இவர்கள் நால்வரும் தனுஸ்ரீ மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

சினிமா பெண்களுக்கான அமைப்பு தனுஸ்ரீக்கு ஆதரவளித்தது. சினிமா மற்றும் டிவி நடிகர்கள் சங்கம் 2008-ஆம் ஆண்டு தனுஸ்ரீ கொடுத்த புகாரை பதிய மறுத்ததற்காக மன்னிப்பு கோரியது. நானா பட்டேகர் மீதான போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்திழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த போராட்டக்குழுவினர் தனுஸ்ரீக்கு ஆதரவளித்தது.

அடுத்து பாலிவுட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் பிரபல நடிகர் அலோக் நாத். எழுத்தாளர்-இயக்குநர்- தயாரிப்பாளர் வினிதா நந்தா இவர் மீது பாலியல் வல்லுறவு புகார் கூறியதோடு, காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்தார். நடிகர்கள் சந்தியா மிருதுள், தீபிகா அமீன் ஆகியோர் அலோக் நாத் மீது பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டைக்கூறினர். திரை எழுத்தாளர்கள் அமைப்பு, வினிதாவுக்கு ஆதரவளித்தது. விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தியது. பிரதமர் நரேந்திர மோடிக்கு, வினிதா எழுதிய கடிதத்தில் நீதியை நிலைநாட்ட இந்தப் பிரச்சினையில் தலையிடுமாறு கோரியிருந்தார். (மோடியின் மவுனம் இன்னமும் களையவில்லை.)

பாலிவுட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளான மூன்றாவது பெரிய பெயர், இயக்குநர் சஜீத் கான். பத்திரிகையாளர் கரிஷ்மா உபாத்யாய், நடிகர்கள் ரேச்சர் ஒயிட், சிம்ரன் சூரி உள்ளிட்ட பலர் இவர் மீது குற்றம்சாட்டினர். இந்திய சினிமா இயக்குநர்கள் சங்கள், இந்த புகார்கள் குறித்து விளக்கம் அளிக்கும்படி சஜீத் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ஹவுஸ்ஃபுல்-4 படத்தின் இயக்குநராக பணியாற்ற இருந்த சஜீத் நீக்கப்பட்டார். நானா பட்டேகரும் இந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான அக்‌ஷய் குமார் இவர்கள் மீதான குற்றச்சாட்டு காரணமாக இவர்களை நீக்கினார்.

நான்காவது நபர், இயக்குநர் விகாஸ் பால். ஹஃபிங்டங் போஸ்ட் வெளியிட்ட விசாரணையில் ‘குவின்’ படப்பிடிப்பின்போது ஒரு பெண்ணை எத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கினார் என தெரியவந்தது. இந்தப் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கங்கணா ரணவத், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவளித்தார். விகாஸ் தன்னிடம்கூட முறை தவறி நடந்ததாக கங்கணா பேசினார். அமேசான் பிரைம்-க்காக தயாரிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியிலிருந்து விகாஸ் நீக்கப்பட்டார். அனுராக் காஷ்யப், விக்ரமாதித்ய மோட்வானி, மது மண்டேனா, விகாஸ் பால் ஆகியோர் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனத்திலிருந்து விகாஸ் நீக்கப்பட்டார். நடிகர் ஹிரிதிக் ரோஷன், விகாஸ் இயக்கவிருந்த படத்திலிருந்து அவரை நீக்குமாறு தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டார்.

பாலிவுட்டைச் சேர்ந்த பலர் மீது இப்படிப்பட்ட புகார்கள் குவிந்தன. நடிகர் ரஜத் கபூர் மீதான புகார் காரணமாக அவர் நடிக்கவிருந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார். தன்னுடைய செயலுக்காக அவர் மன்னிப்பு கேட்டார்.

யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் வர்த்தக தலைவர் ஆசிஸ் பட்டேல் மீதான குற்றச்சாட்டின் காரணமாக அவர் நிர்வாக விடுவிப்பில் அனுப்பப்பட்டார். ஃபாஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், இயக்குநர் முகேஷ் சப்ராவை தங்களுடைய தயாரிப்பிலிருந்து நீக்கியது. நான்கு பெண்கள் புகார் அளித்ததன் காரணமாக திரை விமர்சகர் சிபாஜி ராய்சவுத்ரியின் ஒப்பந்ததை ரத்து செய்தது டைம்ஸ் நவ். இயக்குநர் ஈரே கவுடா மீதான குற்றச்சாட்டின் காரணமாக ‘பாலேகெம்பா’என்ற படத்தை திரை விழாக்களில் திரையிடப்போவதில்லை என அறிவித்தது அந்தப் பட தயாரிப்பு நிறுவனம்.

தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவளிக்க மறுத்த அபிதாப் பச்சன், கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பொத்தாம் பொதுவாக எந்த பெண்களும் பாதிக்கப்படக்கூடாது என அறிக்கை வெளியிட்டார். நடிகர் அமீர்கானும் இயக்குநர் கிரண் ராவும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் பெயர் குறிப்பிடாத ஒரு சகபணியாளருடன் இனி ஒருபோதும் பணிபுரியப்போவதில்லை என தெரிவித்தனர். இவர்கள் அடுத்து தயாரிக்க விருந்த படத்தை சுபாஷ் கபூர் இயக்கவிருந்தார். அவர் மீது பலர் புகார் கூறியிருந்தனர். இதுபோல பூஷன் குமார், ஏக்தா கபூர் ஆகியோரும் சுபாஷ் கபூரை தங்களுடைய தயாரிப்புகளிலிருந்து நீக்கினர்.

பாலிவுட் நடிகர்கள் எம்ரான் ஹாஸ்மி, ராதிகா ஆப்தே, ஃபர்ஹான் அக்தர், பிரியங்கா சோப்ரா, எழுத்தாளர் சோபா டே ஆகியோர் மீ டூ இயக்கத்தை ஆதரித்தனர். ஸ்டார் டிவி குழுமம் இந்த இயக்கத்தை ஆதரித்தது. கொங்கனா சென் சர்மா, நந்திதா தாஸ், கவுரி ஷிண்டே, சோனாலி போஸ், கிரண் ராவ், ஸோயா அக்தர் உள்ளிட்ட 11 பெண் இயக்குநர், குற்றம்சாட்டு நிரூபிக்கப்பட்ட நபர்களுடன் பணிபுரியப் போவதில்லை என அறிக்கை வெளியிட்டனர். நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து இந்தத் துறையில் உள்ள பாலியல் புகார்களை விசாரிக்க சிறப்புக்குழு அமைக்க ஒப்புக்கொண்டன.

தென்னிந்திய சினிமாவில் மீடூ!

2017-ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட குற்றச்சாட்டில் நடிகர் திலீப் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’விலிருந்து விலகினார். இவருடைய விலகலை தலைவராக உள்ள மோகன்லால் ஏற்றுக்கொண்டார். ஆனால் நடிகர் சங்கம் திலீப்புக்கு ஆதரவாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இதன்காரணமாக ‘அம்மா’விலிருந்து பலர் விலகினர். மலையாள சினிமாவில் பணியாற்றும் பெண்கள் இணைந்து பெண்கள் அமைப்பொன்றை தொடங்கினர். இந்த அமைப்பு திலீப்புக்கு ஆதரவாக அம்மா செயல்படுவதாக குற்றம்சாட்டியது. பணியிடங்களில் பாலியல் ஒடுக்குமுறைகளை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தில் சினிமா பெண்கள் அமைப்பு வழக்கு ஒன்றையும் கேரள உயர்நீதிமன்றத்தில் தொடுத்தது.

தெலுங்கு திரைப்பட உலகம், பெண்கள் தங்களுடைய புகார்களை தெரிவிக்க தொடர்புகொள்ள வேண்டியவர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டது. தெலுகு ஃபிலிம் சேம்பர், ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திலும் புகார்களை பெற குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.

கன்னட நடிகர், இயக்குநர், தொழிற்நுட்ப கலைஞர்களைக் கொண்ட சுதந்திர அமைப்பொன்றை கன்னட சினிமா துறை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு இந்தத் துறை சார்ந்த பாலியல் ஒடுக்குமுறை புகார்களை பதிவு செய்து விசாரிக்கும்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் தலைவராக உள்ள விஷால், பாலியல் ஒடுக்குமுறை புகார்களை விசாரிக்க மூன்று நபர்கள் அடங்கிய குழு அமைத்துள்ளதாக அறிவித்தார். பாடகர் சின்மயி மற்றும் லீனா மணிமேகலைக்கு ஆதரவளிக்கும் வகையில் தென்னிந்திய சினிமா பெண்கள் அமைப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. சின்மயி -உடன் மேலும் இரண்டு பெண்கள் கவிஞர் வைரமூத்து மீது குற்றம்சாட்டியிருந்தனர். லீனா மணிமேகலை இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டை கூறியிருந்தார். நடிகர் அமலா பால், லீனாவுக்கு ஆதரவளித்ததோடு, சுசு கணேசன் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

பொழுதுபோக்கு துறை

சிறுமிகள் உள்பட பல பெண்கள் ஸ்டேண்ட் அப் காமெடியன் உத்சவ் சக்ரவர்த்தி மீது குற்றம்சாட்டியிருந்தனர். தன்னுடைய செயலுக்காக உத்சவ் மன்னிப்புக்கேட்டார். நகைச்சுவையாளர்கள் குழுமத்தின் நிறுவனராக உள்ள தன்மய் பட், உத்சவ் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அந்த குற்றச்சாட்டுக்களை கண்டுகொள்ளாமல் உத்சவு-க்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதாக விமர்சிக்கப்பட்டார்.
இந்த அமைப்பின் நிகழ்ச்சியை ஹாட் ஸ்டார் ரத்து செய்தது. பழைய நிகழ்ச்சிகளையும் நீக்கியது. சக பெண் நகைச்சுவையாளரிடம் முறை தவறி நடந்துகொண்டதற்காக அதிதி மிட்டல் மன்னிப்புக்கேட்டார்.

குறும்பட தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் சிந்தன் ரூப்ரேல் தன் மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக பதவி விலகினார்.

இசைத்துறை

ஒளிப்படக்கலைஞர் நடாஷா ஹேம்ராஜ் , பாடகர்கள் சோனா மஹோபாத்ரா ஆகியோர் தெரிவித்த பாலியல் புகாரின் காரணமாக பாடகர் கைலாஷ் கெர் மன்னிப்புக் கேட்டார்.
பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டின் காரணமாக சோனி டிவி இந்தியன் ஐடல் நிகழ்ச்சியிலிருந்து இசையமைப்பாளர் அனு மாலிக்கை நீக்கியது

மீ டூ இயக்கத்தை ஆதரித்து ஏ. ஆர். ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். மியூசிக் அகாடமி குற்றச்சாட்டுக்கு உள்ளான கர்நாடக இசை துறையைச் சேர்ந்த என். ரவிக்கிரண், ஓ. எஸ். தியாகராஜன், மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமூசம் வி. ராஜாராவ், நாகை ஸ்ரீராம், ஆர். ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோரை இந்த ஆண்டு தன்னுடைய சபா நிகழ்ச்சியிலிருந்து நீக்குவதாக தெரிவித்தது. கர்நாடக இசை கலைஞர்கள் கூட்டாக பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் மீ டூ!

வீடியோ தன்னார்வலர் என்ற அமைப்பின் நிறுவனர் ஸ்டாலின் கே. பத்மா மீது பல பெண்கள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டை கூறியிருந்தனர். இதனால் இவர் பதவி விலகினார். இந்த அமைப்பிலிருந்து தங்களுடைய உறவை துண்டித்துக் கொள்வதாக டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசியல் ஸ்டடீஸ் மற்றும் ஸ்கூல் ஆஃப் மீடியா அண்ட் கல்ச்சர் நிறுவனங்கள் முடிவெடுத்தனர். டீச் பார் இந்தியா என்ற நிறுவனம் தனது ஊழியர் மூவரை விடுப்பில் அனுப்பியது, அவர்கள் மீதான புகாரையும் நிறுவனம் விசாரிக்கிறது. மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குனர் மேத்யூ ஜேக்கப், பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகினார்.

தீபிகா படுகோனே-வின் லிவ் லவ் லாஃப் பவுண்டேஷன் தனது ட்ரஸ்டீ ஒருவரை பாலியல் ஒடுக்குமுறை புகார் காரணமாக பதவி விலகியதாக தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுடைய அமைப்பு ஆதரவாக இருக்கும் எனவும் அறிவித்தது.

கலைத்துறை மீ டூ!

பிரபல ஓவியர் ஜதின் தாஸ் மீது நான்கு பெண்கள் புகார் கூறியிருந்தனர். இதற்காக இவர் பிறகு மன்னிப்பும் கேட்டார்.
ஓவியர் ரியாஸ் கோமு மீதான புகார் காரணமாக கொச்சி முசிறி பினாலே விழாக்குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இவரும் மன்னிப்புக்கேட்டார். மீ டூ இயக்கத்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

மும்பையைச் சேர்ந்த கலைக்கூடமான ‘டார்க்’, ஒளிப்படக் கலைஞர் ஷாகித் தத்தாவாலா மீதான புகார் காரணமாக அவருடைய காட்சியை ரத்து செய்தது.

இலக்கியத்தில் மீ டூ!

மீ டூ இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் எழுத்தாளர் ரஜினி ஜார்ஜ் குழு ஒன்றை தொடங்கினார். இந்தக் குழுவில் இதுவரை 500 முன்னணி ஓவியர்கள், எழுத்தாளர்கள் இணைந்துள்ளனர். மீ டூ இயக்கத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான எழுத்தாளர், பிரபலங்கள் எவரும் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு அழைக்கப்படவில்லை.

எழுத்தாளர் சச்சின் கார்க், முறைதவறி நடந்துகொண்டதற்காக ஒரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார். பெங்களூரு இலக்கிய விழாவின் நிறுவனரான சுபோத் சங்கர், பாலியல் புகாருக்கு உள்ளான எவருக்கும் வாய்ப்பளிக்கப்படாது என அறிவித்துள்ளார்.

சட்ட துறையில்!

சட்ட துறையைச் சேர்ந்த பல நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீ டூ இயக்கத்துக்கு ஆதரவளித்துள்ளனர். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் பட்டேல் ஆதரவளித்திருக்கிறார். சட்ட மாணவர் கோஷிகா கிருஷ்ணா என்பவர் மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சரவையில் பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவினரின் பெயரை நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் வெளியிட வலியுறுத்த வேண்டும் என மனு ஒன்றை அளித்திருக்கிறார். மாற்று சட்ட கருத்துக்களம் (Alternative Law Forum) பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி செய்வதாக அறிவித்துள்ளது. வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நீதிக்காக போராடிய தாலிப் உசைனுக்காக வழக்காடப் போவதில்லை என தெரிவித்திருக்கிறார். தாலிப் உசைன் மீது பாலியன் வல்லுறவு புகார் எழுந்த நிலையில் அவர் இப்படி அறிவித்திருக்கிறார்.

வர்த்தகம் மற்றும் விளம்பரத்துறை மீ டூ!

விளம்பர துறையைச் சேர்ந்த சுகைல் சேத் மீது பல பெண்கள் புகார் அளித்த நிலையில் குளோபல் மெண்டோர்ஷிப் பிளாட்ஃபார்ம், வேர்ல்டு உமன் ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் சுகைல் சேத் -உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன. டாடா குழுமம், கோககோலா, மகேந்திரா குழுமம் ஆகியவையும் உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளன.
விளம்பரத்துறையைச் சேர்ந்த கார்த்திக் ஐயர், பிரவீன் தா, போதிசத்வா தாஸ்குப்தா, தினேஷ் சுவாமி ஆகியோர் பாலியல் ஒடுக்குமுறையை தவறான நடத்தை குற்றச்சாட்டின் காரணமாக பதவி விலகியுள்ளனர்.

முத்ரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்யூனிகேஷன் அகமதாபாத், அதன் இயக்குனர் பிரவீன் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க முன்வந்துள்ளது.

டிடிபி முத்ரா குழுமம் தன்னுடைய ஊழியர் மூவருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கிறது.
பாலிசி இந்தியா நிறுவனம் அதன் க்ரியேட்டிவ் இயக்குநர் இஷ்ரத் நவாஸ் மீதான குற்றச்சாட்டு காரணமாக அவரை நீக்கியுள்ளது. உடோப்பியா கம்யூனிகேஷன் இணை நிறுவனர், பாலியல் நடத்தை குற்றச்சாட்டு காரணமாக விடுப்பில் அனுப்பப்பட்டிருக்கிறார்.

விளம்பரம், வடிவமைப்பு மற்றும் ஊடக பெண்கள் அமைப்பு இந்தத் துறையில் உள்ள பாலியல் ஒடுக்குமுறை புகார்கள் மீது ஒருமுகப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பில் விளம்பர ஊடக துறையைச் சேர்ந்த பிரபல பெண்கள் பலர் கையெழுத்திட்டுள்ளனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் ரங்கராஜ், பாலியல் ஒடுக்குமுறை புகார் காரணமாக விடுப்பில் அனுப்பப் பட்டிருக்கிறார். அவர் மீதான புகாரும் விசாரிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அஜித் தாக்கூர் பதவி விலகியிருக்கிறார். விபூ சர்மா என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அவர் பணிபுரியும் நிறுவனம் பெண்கள் மட்டுமே உள்ள விசாரணைக்குழு அமைத்துள்ளது.

ஐடிசி நிறுவனம் தன்னுடைய அனைத்து கிளைகளிலும் பாலியல் ஒடுக்குமுறைகளை விசாரிக்க குழு அமைத்துள்ளது.

விளையாட்டு துறையில்…

டென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஷ் பூபதி மீ டூ இயக்கத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். பிசிசிஐ செயல் இயக்குநர் ராகுல் ஜோக்ரி மீது பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டு வெளியான நிலையில், அவர் விடுவிப்பில் அனுப்பப் பட்டிருக்கிறார்.

கல்வி துறையில் மீ டூ!

கல்வி துறையில் புகார்கள் பெருகிவருவதன் காரணமாக, கல்வி அமைப்புகளில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஐஐஎஸ்.சி பெங்களூருவைச் சேர்ந்த மூத்த கல்வியாளர் ஒருவர் மீது பிஎச்டி மாணவி ஒருவர் குற்றம்சாட்டினார். திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் பிஎஸ்ஸி மாணவி ஒருவர், பேராசிரியர் ஒருவர் மீது குற்றம்சாட்டியிருந்தார். அவரை நிர்வாகம் நீக்கியிருக்கிறது. அசோகா பல்கலையைச் சேர்ந்த மாணவி ஒருவர், பாலியல் ஒடுக்குமுறை செய்யும் பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் காப்பாற்றுவது நிறுத்த வலியுறுத்தி கையெழுத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். சிம்பாலிஸிஸ் செண்டர் பார் மீடியா அண்ட் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குனர் அனுபம் சித்தார்தா குற்றச்சாட்டு காரணமாக விடுவிப்பில் அனுப்பப்பட்டிருக்கிறார். பல கல்வி நிறுவனங்கள் கல்விக்கூடங்களில் பாலியல் ஒடுக்குமுறை குறித்த விவாதத்தை துவக்கியுள்ளன. ஜம்மு காஷ்மீர் பள்ளி கல்வித்துறை மாவட்ட வாரியாக பாலியல் ஒடுக்குமுறைகளை விசாரிக்கும் கமிட்டி அமைக்க முடிவு செய்துள்ளது. ஹைதராபாத் உயர்நீதிமன்றம், பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தெலுங்கானா அரசிடம் தெரிவித்துள்ளது.

பொது சமூகத்தின் முன்னெடுப்புகள்!

சிறு சிறு குழுக்களாக பொது சமூகம் மீ டூ இயக்கத்தை ஆதரித்து வருகிறது. ‘ஐ வில் கோ அவுட்’, ஏஜெண்ட்ஸ் ஆப் இஸ்க் போன்ற அமைப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வையும் ஆதரவையும் அளித்து வருகின்றன. டெல்லி ஆக்ஸ்போர்டு புத்தநிலையம் மீ டூ இயக்கம் குறித்தும் தண்டனைக்குரிய குற்றம் குறித்து உரையாடல் நிகழ்வை நடத்தியது.

பெண்ணிய அமைப்பான ‘ஷிரோஸ்’ பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டுவந்த கதைகளை கேட்க உதவி எண்களை ஏற்படுத்தியுள்ளது. TheLifeofScience.com இணையதளம் அறிவியல் துறையில் உள்ள ஒடுக்குமுறைகளை பதிவு செய்ய விண்ணப்பங்களை உருவாக்கியுள்ளது.

தலித் வுமன் ஃபைட் என்ற அமைப்பு மீ டூ இயக்கத்தை ஆதரித்துள்ளது. காஷ்மீர் பெண்கள் அமைப்பு பாலியல் ஒடுக்குமுறைக்கு உள்ளானர்களின் பட்டியலை தயாரித்துள்ளது. பாலியல் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டு மீண்டவர் #MeTooK12 என்ற ஹேஷ்டேக்கின் மூலமாக இளம் தலைமுறையினருக்கு பாலியல் ஒடுக்குமுறை குறித்த விழிப்புணர்வையும் உரையாடலையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

கத்தோலிக் திருச்சபையைச் சேர்ந்த மேகாலயா கிறித்துவ அமைப்பு, தன் உறுப்பினர் ஒருவர் மீதான பாலியல் வன்முறை புகாரை விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

மீ டூ இயக்கத்தின் மீது தமிழகத்தில் ஒரு எதிர்மறையான உணர்வே உள்ளது. இருவேறு நபர்களிக்கிடையேயான பிரச்சினையாக திரிக்கும் அயோக்கியத்தனத்தை பலரும் தொடக்கம் முதலே செய்து வருகிறார்கள். இந்த நீண்ட பதிவை வாசித்த பிறகாவது இது இருவர் தொடர்பான பிரச்சினையல்ல, மீ டூ இயக்கம் பணிபுரியும் இடத்தில் பாலியல் சமத்துவத்துக்கான ஒரு போராட்டம் என்பதை புரிந்துகொள்வார்கள் என நம்பலாம். வரலாற்று காலம் தொட்டு பெண்ணுரிமைப் போராட்டங்கள் அவ்வளவு எளிதானதாக இருந்ததில்லை.

நன்றி: த வயர், வினவு

சாதி இந்திய சமூகத்தின் இயல்பான மனநோய்!

ஆதவன் தீட்சண்யாவின்  ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை முன்வைத்து…

சமீபத்தில் மகாத்மா புலேவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் படித்தேன். 19ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் இந்திய சமூகத்தில் வேறோடிப் போயிருக்கும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து, கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் விமர்சனப் போக்கில் எழுதியிருப்பார். அந்த நேரத்தில் சாதி ஒடுக்குமுறைகளை குறித்து ஆட்சியாளர்களுக்கு அறிவிக்கும்பொருட்டும் ஒடுங்கிக் கொண்டிருந்த மக்களின் உரிமைகளை உணர்த்தும் பொருட்டும் சமூக நீதிக்கான பாதையை வகுத்துக் கொடுத்தது அவர் எழுத்து.  புலேவின் தொடர்ச்சியாக ஆதவன் தீட்சண்யாவின் எழுத்தைப் பார்க்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து பலரும் எழுதுகிறார்கள், அவையெல்லாம் இந்த மக்களின் அவலங்கள், பாடுகள் குறித்துதான் அதிகம் பேசுகின்றன. இத்தகைய அவலங்கள், பாடுகளுக்கான சமூக காரணிகளை இவை பேசுவதில்லை.
ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’  முன் அட்டையில் தொடங்கி பின் அட்டை வரை நந்தஜோதி பீம்தாஸ் என்கிற எழுத்தாளர் வழியாக, சமகால சமூக அரசியல் சார்ந்து தனித் தனி களங்களுக்கு படிப்பவரை இட்டுச் செல்கிறது.

Adhavan the novel

மகாத்மா புலே, அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார் என நம் புரட்சியாளர்கள் சாதி குறித்த பெருமிதங்களை உடைத்தெறிந்துவிட்டார்கள். நூறாண்டுகளாக தொடரும் இந்த சாதி வேரை பிடிங்கி எறியும் பனி இன்னமும் முடிவு பெறும் கட்டத்தை அடையவில்லை. இன்றைய கட்சி அரசியல் சூழல் சாதிக்கு குளிர் நீரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் ரத்தத்தையும் சத்தாக அளிக்கிறது. புரட்சியாளர்கள் சடங்குக்குரிய கற்சிலைகளாக மட்டும் இன்று நினைக்கப்படுகிறார்கள். சாதி இல்லை, சாதியெல்லாம் இப்ப யாரு பார்க்கிறா? போன்ற பேச்சுக்கள் அதிகபட்சம் 1% க்கும் கீழே உள்ள மெட்ரோவில் வசிக்கும் மேல்தட்டு வர்க்கம் கோபித்துக் கொள்கிறது. 1%த்துக்கும் குறைவான இந்த மக்கள் சாதியை விட்டொழித்தவர்கள் என்று எண்ணி விடுவதற்கு வாய்ப்பு உண்டு, உண்மையில் இவர்களை சாதியைக் கண்டு கொள்ளாதவர்கள் என வகைப்படுத்தலாம். எனக்கென்ன, எனக்கொன்றும் சாதியால் பாதிப்பில்லை என்பது இவர்களுடைய மனோபாவம். இந்த 1%த்தினரில் தலித் இருக்கலாம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பார்ப்பனர் என எந்த சாதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். இவர்கள் ஒன்று படுவது வர்க்க அடிப்படையில், அதாவது மேல்தட்டு வர்க்கம் என்ற அடிப்படையில்.

இந்த 1 சதவீதத்தினர் குறித்து நாம் ஏன் இவ்வளவு ஆராய வேண்டி இருக்கிறது என்றால், இவர்கள்தான் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள், கொள்கைகள், திட்டங்கள் போடுபவர்களாக இருக்கிறார்கள், இவர்களின்றி அதிகாரத்தின் ஓர் அணுவும் அசையாது! இவர்கள் கண்ணைக் மூடிக்கொண்டு சதா வசதிகளில் திளைத்துக்கொண்டு எல்லாம் நல்லதாகவே நடக்கிறது, நல்லதாகவே நடக்கும் என்று மந்திர வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அம்பேத்கர் பாடலை ரிங் டோனாக வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக ஒரு தலித் இளைஞன், ‘சாதி’ இந்துக்களால் அடித்து, நொறுக்கப்பட்டு, நெடுஞ்சாலைகளில் வாகனங்களால் மீண்டும் மீண்டும் நசுக்கப்படும் விபத்துக்குள்ளான ஒரு பிராணியைப் போல, ‘சாதி’ இந்துக்களின் இரு சக்கர வாகனங்களால் நசுக்கப்பட்டு கொல்லப்படுகிறான். இப்படியான கொடூரத்திலும் கொடூர மனநிலை, மனநோய் இந்திய சாதிய சமூகத்தின் இயல்பான குணங்களாக இன்று வரைக்கும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

சுதந்திர போராட்ட காலகட்டத்தில் பேசப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் சுதந்திரத்திற்குப் பிறகு, கட்சிகளின் அரசியல் அதிகார போதையில் மறக்கடிக்கப்பட்டன.   சுதந்திர இந்தியாவின் ‘வளர்ச்சி’ திட்டங்களுக்கிடையே திறந்துவிடப்பட்ட முதலாளித்துவ கதவுகள், உலகமயமாக்கலின் நவீன வசதி வாய்ப்புகள் சமூக சீர்திருத்தங்களிலிருந்து பெரும்பான்மை மக்களை தள்ளி வைத்துவிட்டன. தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் மீதான ஒடுக்குதல்கள் சுதந்திரத்துக்கு முன் இருந்த இந்தியாவின் நிலையைப் போல இன்றும் ஒத்துப் போகின்றன. இன்னமும் கிராமங்களில் சேரிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ‘சட்டப்படி’ தடை செய்யப்பட்ட பலதார மணமுறை இன்னமும் வட இந்திய பகுதிகளில் கோலுச்சுகிறது. நீர்குடங்கள் சுமப்பதற்காகவே இரண்டு, மூன்று ‘தண்ணீர்’மனைவிகள் ஒரு ஆணுக்குத் தேவைப்படுகிறார்கள். அமைச்சர்கள் பாலியல் வன்கொடுமைகள் பரஸ்பர ஒப்புதலுடனே நடப்பதாக அறிவிக்கிறார்கள். (பாலியல் வன்கொடுமை செய்வதை பொழுதுபோக்காக கொண்ட அந்த கால ஜமீன் மைனர்களின் வாரிசுகள்) பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும் அனுபவத்தின் வாயிலாகத்தான் இத்தகைய முடிவுகளுக்கு வரமுடியும். அக்ரஹாரங்களில் நுழைவதற்கே தகுதி வேண்டும் என்பதைப் போல ஐஐடி போன்ற இந்தியாவின்  உயர்ந்த கல்வி நிறுவனங்கள் நவீன அக்ரஹாரங்களாக உள்ளன.  அக்ரஹாரத்தில் கீழ்சாதிகள் நுழைவது தடை செய்யப்பட்டதைப்போல அம்பேத்கரும் பெரியாரும் இன்று தடை செய்யப்படுகிறார்கள். ஆக, சுதந்திரம் யாருக்கு வந்தது என்பது குறித்தும் எது சுதந்திரம் என்பது குறித்தும் நிறையவே எண்ணத் தோன்றுகிறது.

கடத்தப்பட்டும் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பிக்கவும் இலங்கைக்குச் சென்ற தலித்துகளின் அசாதாரண மரணங்கள், இன்று உலகம் முழுக்கவும் அகதிகளாக பயணிக்கும் மக்கள் படும் துயரங்களுடன் ஒத்துப்போகிறது. உதாரணமாக மியான்மரின் ரொஹியாங்கா முஸ்லீம்களின் நிலை, நாவலில் சொல்லப்படும் மலையகத் தமிழர்களுடம் பொருந்திப் போகிறது.

தலித்துகளின் மீதான வன்முறைகள், சாதிய படிநிலைகளை தீவிரமாக்கும் போக்கு,  ஒடுக்கப்பட்ட மக்கள்  அடிப்படை வாழ்வாதாரத்துக்காக  சந்திக்கும் நெருக்கடிகள் சமீப காலங்களில் அபாய நிலையை எட்டியுள்ளன. சமூக செயல்பாட்டாளர்கள் தீவிரமாக செயல்பட்டாக வேண்டிய நேரத்தில், அதற்கொரு முன்னுரையை அமைத்துக் கொடுத்திருக்கிறது இந்நாவல்.

ஒரு புனைவு உங்களுக்கு சமூகத்தின் பல்வேறு இடர்பாடுகளை அழுத்தங்களை அடக்குமுறைகளை  இனம் காட்டுகிறதென்றால் அது புனைவு என்கிற வரையறைத் தாண்டி வேறொன்றை அடைகிறது. . ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை வாசித்த பிறகு அதை சீர்திருத்த எழுத்து என்று வரையறை செய்கிறேன். ‘இஸங்கள்’ ‘கூறுகள்’ பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது, நான் ஒரு வாசகி, நான் வாசிக்கின்ற ஒன்று எத்தகையது என்று கருத்து சொல்லும் உரிமை எனக்குள்ளதாக நினைக்கிறேன்.

நாவலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ஆன் லைனில் வாங்கலாம்..

சாவித்ரிபாய் புலெ – இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண்ணிய போராளி!

மேட்டுக்குடியில் பிறந்த சீமாட்டிகளின் பொழுதுபோக்குகள் புரட்சிகளாக இந்திய வரலாற்றில் தொடர்ந்து எழுதப்படுகின்றன. அவர்கள்தான் புனித பிம்பங்களாக ஒளிவட்டங்களுடன் ஆட்சியாளர்களால் சிலை வடிக்கப்படுகின்றனர். இவர்களுக்குக் கிடையே இருக்கும் மெல்லிய இழை பொதுப்பார்வைக்குத் தெரியாது. துதிக்கப்படுகிறவர்கள், வணங்கப்படுபவர்கள், புரட்சியாளர்கள், மகாத்மாக்கள், கல்வியாளர்கள், சீர்திருத்தவாதிகள் என எல்லோரும் நம்மவர்களாக இருக்க வேண்டும் என்பதே அந்த இழையை இணைப்பது. இல்லையெனில் பிற்போக்குத்தனமான சிந்தனையுடன் அரசியல்வாதியாகவும் மேட்டுக்குடியினரின் சிநேகிதனாகவும் கல்விக்கென எவ்வித முன்னெடுத்தலையும் செய்யாத சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுவதின் நோக்கம் என்னவாக இருக்கும்? Savitribai Phule இந்திய வரலாற்றில் கொண்டாட்டத்திற்குரிய ஒரு ஆசிரியர் உண்டெனில் அவர், சாவித்ரிபாய் புலெ ஒருவராகத்தான் இருக்க முடியும். அவரே கல்வி சார்ந்த அனைத்துக்கும் முன்னோடி. என்னுடைய 30 ஆண்டு கால வாழ்நாளில் நேற்றுதான் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. இது என் அறியாமை அல்ல, எனக்கு சொல்லித்தந்த புரட்சியாளர்கள் வரிசையில் சாவித்ரிபாயின் பெயர் என்றுமே இருந்ததில்லை. அவர் ஏன் மறைக்கப்பட்டார்? ஏனெனில், அவர் வீட்டுக்குள்ளே பெண்கள் பூட்டிக்கிடந்த காலத்தில் முதல் பெண் ஆசிரியை ஆனார், மேட்டிக்குடி ஆண்களால் கல்லடி, சொல்லடி பட்டு முதன் முதலில் பெண்களுக்கான கல்விக்கூடத்தை நடத்தினார். முதன் முதலில் முதியோருக்கு கல்விக் கற்றுக் கொடுத்தார், முதன் முதலில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வர்க்கத்துக்கு கல்வி போதித்தார்.  இப்போது சொல்லுங்கள் யாருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று!

1831ஆம் ஆண்டு, ஜனவரி 3ம் நாள் மகாராஷ்டிர மாநிலத்தில் நய்கொன் என்ற ஊரில் பிறந்தவர் சாவித்ரிபாய். தன்னுடைய 9 வயதில் மகாத்மா ஜோதிபா புலெவின் துணைவியானார். ஜோதிபா புலெதான் சாவித்ரிக்கு ஆசிரியர். அடிப்படை கல்வியை தன் கணவரிடம் கற்ற சாவித்ரி, பிறகு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஆசிரியை ஆனார். முதல் பெண்களுக்கான பள்ளியை 1848ல் தொடங்கினார். பெண்களுக்காக மட்டுமல்லாமல் முந்தைய பத்தியில் சொன்னதுபோல அனைவருக்கும் கல்வி கிடைக்க பாடுபட்டார். (அந்தக் காலக்கட்டத்தில் பார்ப்பனர்கள் நடத்திய பள்ளிகளில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன்!)

கல்விக்காக மட்டுமல்லாமல் நவீன இந்திய பெண்ணிய இயக்கத்தின் முன்னோடியாக சாவித்ரிபாய் புலெவை சொல்லலாம். 1800களில் வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடிப்பது, பிறகு முடி வளர்ந்தாலும் தொடர்ந்து மொட்டையடிப்பது மேட்டிக்குடியினரிடம் வழக்கத்தில் இருந்த ஒரு மூடப்பழக்கம். இதை எதிர்த்து சாவித்ரி, தன் இயக்கத்தின் மூலம் போராடினார். மொட்டையடிக்கும் தொழிலில் இருந்தவர்களுடன் பேசி, இந்த மூடப்பழக்கத்துக்கு துணைபோகாமல் இருக்கும்படி கைவிடச் செய்தார்.

கணவனை இழந்த இளம்பெண்களை மேட்டுக்குடி ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வது அந்தக் காலத்தில் சமூக அங்கீகாரம் பெற்ற கொடூரங்களில் ஒன்று. சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கைம்பெண்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதும் நடந்தது.  இப்படி பாலியல் சுரண்டல்களால் சில பெண்கள் கருவுற்று, அது வெளியே தெரியவந்தால் என்னவாகும் என பயந்து தற்கொலை செய்வதும் அதிகமாக இருந்தது.  இப்படி பாதிக்கப்பட்ட ஒரு பிராமணப் பெண்ணை தற்கொலையிலிருந்து மீட்டு அவருடைய குழந்தையை தத்தெடுத்துக் கொண்டனர். முதன் முதலில் இப்படி பிறக்கும் சிசுக்களுக்கென்று தனி இல்லத்தையும் புலே தம்பதி ஆரம்பித்தனர்.

இதோடு, சாவித்ரி நவீன பெண்ணிய கவிதைகளின்  முன்னோடியாகவும் கருதப்படுபவர். இன்னும் இவரைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. பெண்கள் தினத்தில் ஒரு உண்மையான பெண்ணிய போராளியைப் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.

சரி…இத்தனை சமூக மாற்றங்களுக்கு முதன்மையானவராக முன்னோடியாக இருந்தவரை ஏன் இந்திய வரலாறு மறைக்கிறது? ஏனெனில் இந்திய வரலாறு மேட்டிக்குடி ஆண்களால் எழுதப்படுகிறது. அதில், பெண்களுக்கு கல்வி வேண்டும், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வேண்டும், பாலியல் சுரண்டல்களிலிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும், கட்டுப்பெட்டித்தனமான பழங்கலாச்சாரத்திலிருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்று இறுதிகாலம்வரை குரல் கொடுத்த சாவித்ரிபாயின் வரலாறு மறைக்கப்படுவதில் ஆச்சரியமில்லை. இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.. அவர் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திலிருந்து வந்த விடிவெள்ளி என்பதே அது!