”கச்சத்தீவை மீட்போம் என்று கூச்சலிடும்போதெல்லாம் கடலில் இருக்கிறவனுக்கு மரண அடி விழுகிறது!”

  

இதுவரைக்கும் வந்த தமிழ் நாவல்களில் மீனவர்களின் வாழ்க்கை பின்னணியில் ஜோ டி குருஸ் எழுதிய ஆழி சூழ் உலகு நாவலுக்கு தனித்த இடம் உண்டு. மீனவ சமூகத்தின் சிக்கல்கள், அவலங்களை அவர்களுடைய மொழியிலேயே வெளிப்படுத்தியது இந்நாவலின் தனித்துவத்துக்கு காரணம் என்பது விமர்சகர்களின் கருத்து. கொற்கை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தின் பின்னணியில் அடுத்த நாவலை தந்திருக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குருஸ். புத்தக காட்சியை ஒட்டி வெளியான கொற்கை நாவல்(காலச்சுவடு பதிப்பக வெளியீடு) வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கொற்கையை முன்வைத்து ஜோ டி குருஸுடன் இந்த நேர்காணல்..

கொற்கை நாவல் எதைப்பற்றி பேசுகிறது?

”ஆழிசூழ் உலகு நாவலில் அடித்தள மீனவ மக்களின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை சொல்லியிருந்தேன். பரதவர்கள், மீன் பிடிக்கிறவர்கள் மட்டுமல்ல கடல்வழி வாணிபத்தின் முன்னோடிகள் என்பதை கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டில் கொற்கை செழித்து விளங்கிய துறைமுகம். பாண்டிய நாடு வளமுடைத்து என்ற வாக்கு உருவானதே கொற்கை துறைமுகத்தை வைத்துதான். கொற்கையில் கிடைத்த நன்முத்துக்கள் பாண்டிய நாட்டை வளமுள்ளதாக ஆக்கியிருந்தது. கொற்கையில் கிடைத்த முத்துக்கள் அந்நூற்றாண்டுகளிலேயே பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இதனால் கடல்வழி வாணிபம் சிறந்திருக்கிறது. சில்க் ரூட், பெப்பர் ரூட் என்று சொல்வதைப்போல கொற்கைக்கு பெர்ல் ரூட் இருந்திருக்கிறது. முத்துக்களுக்காக கிரேக்கர்கள், அரேபியர்கள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், வெள்ளையர்கள் கொற்கையைத் தேடி வந்திருக்கிறார்கள். ஆனால் இது எதுவுமே வரலாற்றில் சரியாக பதிவாகவில்லை. ஏராளமான கடல் வளமுடைய மிகப்பெரிய துறைமுகமான கொற்கை பரதவர்களால் ஆனது, ஆளப்பட்டது. வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு அந்த சந்ததிகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து வரலாறு இல்லை. வணிகமும் கலாச்சாரமும் சிறந்து விளங்கிய கொற்கையை பார்த்து ரசித்து வெள்ளையன் உள்ளே வந்திருக்கிறான். இதுபற்றிய குறிப்புகள் நம்மிடம் இல்லை. வெள்ளையர்கள் பார்த்து, ரசித்து உள்ளே வருகிறான். இப்படி வளம்பெற்ற கொற்கை கடந்துவந்த நூறு ஆண்டுகளின் கதையைத்தான் கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த சமூக, பொருளாதார கலாச்சார மாற்றங்களை பேசுகிறது நாவல். போர்த்துக்கீசியர்கள், வெள்ளையர்கள் வெளியேறி சுதேசி அரசாங்கம் வந்த பிறகு கொற்கையில் வாழ்ந்த பரதவர்கள் சமூகம் எப்படி மாறியது என்பதையும் பரதவர்களின் பல்வேறு பிரிவுகளுக்குக்கிடையேயான சமூக சிக்கல்கள், அதை அவர்கள் கையாண்ட விதம் இதெல்லாம் தான் நாவலாக்கியிருக்கிறேன். இதை வரலாற்று ஆவணம் என்று சொல்லமுடியாது. நாவலுக்குள் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களால் இது வரலாற்று ஆவணமாகலாம்.”

மீண்டும் மீனவ சமூகத்தின் பின்னணியில் நாவல் எழுதக் காரணம்?

”சங்கப் பாடல்களில்கூட அம்மூவனார் போன்றவர்கள் நெய்தல் கரையைப் பற்றி பாடினார்களே தவிர, நெய்தல் நில மக்களின் சுக துக்கங்களை பாடவில்லை. நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் இதுகுறித்து எனக்கு நிறையவே ஆதங்கம் உண்டு. நெய்தலின் மீதும் நெய்தல் மக்களின் மீதும் உள்ள பாசத்தின் வெளிப்பாடுதான் என் எழுத்து முயற்சி. வருமானத்துக்காக ஒரு வேலையில் இருக்கிறேன், ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்.

என் சமூகத்தில் உள்ள அவலங்களை கோளாறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாக படுகிறது. ஆழி சூழ் உலகு நாவல் வெளிவந்த பிறகு, ஊரில் நிறைய எதிர்ப்பு வந்தது, வந்துக்கொண்டிருக்கிறது. நிலைக்கண்ணாடி போல ஒரு சமூகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும். மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் சமூக குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். ஆடி போல சமூகத்தைக் காட்ட வேண்டும். அதனால் மேற்படியான எதிர்ப்புகள் பற்றி கவலைப்படுவதில்லை!

நாவலில் சொல்லவந்ததை ஒரு கட்டுரையிலேயே கூட சொல்லி முடித்திருக்கலாம். ஆனால் அதை அப்படி சொல்ல விரும்பவில்லை. வாழ்வாக சொல்ல விரும்பினேன். ஆழி சூழ் உலகு எழுதி முடித்த உடனே கொற்கையை எழுத உட்கார்ந்தேன். 2005 தொடங்கி 2009 ஆண்டு முடிய நாவலுக்காக உழைத்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்து எனக்குள் போன செய்திகளை மெருகுபடுத்தி சேர்த்திருக்கிறேன். வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்கள், ஆண்களை சந்தித்து பேசி தகவல்களை திரட்டினேன். நாவலை எழுதி முடித்தவுடன் ஒருவித அயற்சி ஏற்பட்டது. எழுதி முடித்த பக்கங்களை தூக்கி பரணில் போட்டதைப் பார்த்த என் மனைவி பதறிக்கொண்டு ஐந்து வருட உழைப்பை வீணாக்கலாமா? என்றார். பிறகுதான் எழுதியதை பதிப்பகத்திடம் கொடுக்கும் முடிவுக்கு வந்தேன். நாவல் எழுதி முடித்தபோது ஏற்பட்ட அயற்சிக்குக் காரணம், முன்னோடியாக இருக்க வேண்டிய சமூகம் இப்படி முடங்கிக் கிடக்கிறதே என்கிற ஆதங்கம் தான்! என் சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்கிற கேள்வி என்னை சதா துளைத்துக்கொண்டே இருக்கிறது”

எழுதுவதைத் தாண்டி மீனவர்களின் இன்னல்களை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறீர்கள். குறிப்பாக இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் தமிழக மீனவர்கள் பற்றி ஆவணப்படங்கள் எடுத்ததன் பின்னணி என்ன?

”காலம்காலமாக தமிழக மீனவர்கள், வடமேற்கு இலங்கை நோக்கி மீன் பிடிக்கப்போவதுதான் வழக்கம். 1983ல் இலங்கை யாழ்பாணத்தில் நூலகம் எரிப்பு என்கிற நிகழ்வுக்குப்பிறகு, விடுதலைப்புலிகளின் எழுச்சி தொடங்கியபோதுதான் தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தின் தாக்குதல் அரங்கேற்றம் பெற்றது. தமிழக மீனவர்கள் மூலமாக விடுதலைப்புலிகளுக்கு உதவிகள் கிடைப்பதாக கருதியே இலங்கை அரசு இத்தகைய தாக்குதல்களை ஊக்குவித்தது. இன்று ஈழம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஈழப் போராட்டத்தின் பின்னணியில் தென் தமிழக மீனவர்களின் இரத்தமும் கலந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தமிழினம் என்கிற காரணம் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு இன்னும் ஏராளமான கோர முகங்கள் உண்டு. மீனவர்கள் பிடித்த மீன்கள் பிடிங்கிக் கொண்டு வளையை அறுத்துவிடுவதிலிருந்து காதில் இருக்கிற கடுக்கணை பிடிங்கிக் கொள்வது வரையான கடற்கொள்ளையர்களைப் போன்ற செயல்களையும் அவர்கள் செய்கிறார்கள். பச்சை மீனை திண்ணச் சொல்வது, ஐஸ்கட்டியில் நிர்வாணமாக படுக்கவைப்பது, கடலில் தள்ளிவிட்டு இரண்டு, மூன்று மணி நேரம் நீந்தவிட்டு களைத்துப்போகும்போது ஹெலிகாப்டரிலிருந்து சுட்டுப் பழகுவது, இதையெல்லாவற்றையும்விட அப்பன்-மகன் என்று தெரிந்த பின்னும் உறவு கொள்ள கட்டாயப்படுத்துவது கொடுமையின் உச்சம்! கச்சத்தீவை மீட்போம் என்று நாட்டில் கூச்சலிடும்போதெல்லாம் கடலில் இருக்கிறவனுக்கு மரண அடி விழுகிறது.

மீனவர்கள் நாதியில்லாதவர், அவர்களுக்கென்று அமைப்புகள் கிடையாது, ஒருங்கிணைந்த குரல் கிடையாது. இதுதான் காரணமேயில்லாமல் இத்தனை பேரின் இறப்புக்கும் பல இழப்புகளுக்கும் காரணம். நம்முடைய அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எல்லைகளில் வாழ்கிறவர்கள் தானே என்கிற விட்டேத்தி மனோபாவம். இருபது வருடங்களுக்கும் மேலாக மீனவர்களிடையே பணியாற்றுவதாக சொல்லிக்கொள்ளும் தொண்டு நிறுவனங்களிடம்கூட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றுவதற்கான எந்தவித திட்டமும் இல்லை. குறைகளை கணக்கெடுத்திருப்பதுதான் தொண்டு நிறுவனங்கள் செய்திருக்கும் மிகப்பெரிய சேவை!

இதெல்லாம்தான் ‘விடியாத பொழுதுகள்’ என்ற முதல் ஆவணப்படம் எடுக்க தூண்டுதலாக அமைந்தது. அவலங்களை மட்டும் சொன்னால் எனக்கும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அதனாலேயே பிழைப்புக்காக எல்லைத் தாண்ட நேரிடும் மீனவர்களுக்கு மாற்று வழியைச் சொல்லும் நோக்கில் விடியலை நோக்கி என்ற ஆவணப்படத்தை எடுத்தேன். மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள மூக்கையூர் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்வு. மூக்கையூர் பகுதியில் வீணாகிக்கொண்டிருக்கும் ஆழ் கடல் வளத்தை பயன்படுத்த வாய்ப்பாகவும் இந்தத் தீர்வு அமையும். பரவலாக கவனம் பெற்ற இந்த ஆவணப்படத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விருது கொடுத்திருக்கிறது. விருது பெறுவது, கவனம் பெறுவது என்பதைவிட என் மக்களின் துயரம் அறியப்படவேண்டும் என்பதுதான் என் நோக்கம். மீனவ சமூகத்திலிருந்து வந்த எனக்கு, என் சமூகத்தின் வலி நன்றாகவே தெரியும். ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலே அலறுகிறார்கள் எம் மக்கள். கைநிறைய சம்பளமும் வசதி குறைவில்லாத வாழ்க்கையும் எனக்கு நிறைவை தந்துவிடாது. எம் மக்களின் வாழ்வுக்காக எதையாவது நான் செய்துகொண்டே இருப்பேன். ஏனெனில் மூச்சு விடுவது மட்டுமே வாழ்க்கையில்லை!”

நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை!

nepal-maoist-postersற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து என்ன பேசினாலும் நம்முடைய சார்பு நிலையில் எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது. அதாவது புலிகளுக்கு ஆதரவுஇலங்கை தமிழருக்கு ஆதரவு அல்லது புலிகளுக்கு எதிர்ப்புஇலங்கை அரசுக்கு ஆதரவு. இவை இரண்டைத்தவிர மற்றொரு நிலைப்பாடும் இருக்கக்கூடும், தேவையாக இருக்கிறது என்பதை பலரும் சிந்திக்கக்கூட மறுக்கிறார்கள். அரசியல் கட்சிகள் முதல்கொண்டு ஊடகங்கள் வரை தங்கள் ஆதாயத்துக்குகேற்றபடி நிலைப்பாட்டினை எடுக்கின்றன. பொதுபுத்தியில் படிந்துபோயுள்ள தமிழர் என்கிற இனவுணர்வைத் தூண்டி ஆதாயம் பெறப்பார்க்கின்றன. அறிவுஜீவிகள் என்று மார்தட்டிக் கொள்கிறவர்களின் செயல்பாடும் இப்படித்தான் உள்ளது. சாதி உணர்வு, மத உணர்வு எந்த அளவுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமோ அதே அளவுக்கு கண்மூடித்தனமான இன உணர்வும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதே.

இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் உணர்ச்சி வசப்படுவதை விட்டுவிட்டு அடுத்த நகர்வு குறித்து யோசிப்பதுதான். இன்னும் பல தசாப்தங்களுக்கு போரை நடத்திக்கொண்டிருப்பதா? போர் முடிவுக்கு வரும்பட்சத்தில் தமிழர், இலங்கையில் நிலையான அமைதியோடு வாழ வழிவகை என்ன? நம்முன் இருக்கும் கேள்விகள்

நேபாளத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி ஆயுத ஏந்திய மாவோயிஸ்டுகளின் அணுகுமுறையை இலங்கை பிரச்சினையில் புலிகள் ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? நேபாளத்தில் மன்னராட்சியும் நிலப்பிரபுத்துவமும் பிரச்சினைகள் என்றால் இலங்கையில் இருப்பது இனப்பிரச்சினை என்று மேலோட்டமாகப்பார்த்து தள்ளிவைக்காமல் இது குறித்து சிந்தனையும் விவாதமும் செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு நேபாள அரசியல் நிர்ணநய சபைக்கான தேர்தலுக்குப் பார்வையாளராக சென்று வந்திருந்த புதுவை சுகுமாறனிடம் நான் கண்ட நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இது. நான் பணியாற்றிய வார இதழில் வெளியானது . சூழ்நிலை கருதி மீள்பிரசுரம் செய்கிறேன்.

மக்கள் ஆட்சியா, மன்னர் ஆட்சியா என்று புயல் வீசிக்கொண்டு இருந்த நேபாளத்தில் இப்போது ஜனநாயகக் காற்று! பத்தாண்டுகளாக நடந்த ஆயுதப் போராட்டத்தின் முடிவில், மாவோயிஸ்ட்கள் தலைமையிலான ஆட்சி அமைந்திருக்கிறது. நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தலின் பார்வையாளராகச் சென்று வந்த மனித உரிமை ஆர்வலர் புதுவை கோ.சுகுமாறனுடன் ஒரு சந்திப்பு

”ஆயுதம் தாங்கிய போராட்ட அமைப்பான மாவோயிஸ்ட்கள் நேபாளத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எப்படி இது சாத்தியமாயிற்று?”

”நேபாள மக்களின் ஒரே வருமானம் சுற்றுலாதான். காட்மாண்டு நகரம், இரண்டு மலைகளுக்கு நடுவே கோடையிலும் கொப்பளிக்கும் நாராயணி ஆறு. இந்த இரண்டும் கொள்ளை அழகுடையவை. இருந்தாலும், ஏழ்மையும் வறுமையும்தான் நேபாளத்தின் உண்மையான முகம். விவசாயம் நொடித் துப்போன பல லட்சம் பேர் கூர்க்காக்களாக, இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் கிளம்பிவிடுகிறார்கள். கடந்த 240 ஆண்டுகளாக மன்னரைக் கடவுளாக நினைத்து, அவர் தங்களுக்கு நல்லது செய்வார் என்று நம்பிக்கொண்டு இருந்தவர்கள் நேபாள மக்கள். 1996ல் மன்னர் குடும்பத்துக்குள்ளேயே நடந்த படுகொலைகள் அந்த நம்பிக்கையை முதன்முறையாகத் தகர்த்தன. அதன் பிறகுதான் கட்சிகளின் மேல் மக்கள் நம்பிக்கை வைக்கத் தொடங்கினார்கள். மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள் மாவோயிஸ்ட்கள். கடந்த பத்தாண்டுகளாக நடந்த போராட்டத்தில் இரண்டு தரப்பிலும் சேர்த்து 12 ஆயிரம் பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு, மூன்றாவது முறையாக அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் இப்போது நடந்தது. மாவோயிஸ்ட்கள் இதில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து வென்றதற்கு அரசியல்ரீதியாக நிறைய காரணங்கள் இருந்தாலும் அடித்தட்டு மக்களை ஒன்றிணைத்ததுதான் முக்கியமான காரணம்! தேர்தல் மிக அமைதியாக நடந்தது. கிட்டத்தட்ட 85 சதவிகித ஓட்டுப்பதிவு நடந்தது. ரொம்பவும் சாதாரணமாக மரத்தடியில் ஓட்டுப் பெட்டியை வைத்திருந்தார்கள். ஓட்டு எண்ணுவதும்கூட அதீத பாதுகாப்பு இல்லாமல் எளிமையாக, நேர்மையாக நடந்தது. இந்தத் தேர்தல் வெற்றி என்பது, நேபாள மக்களின் அமைதிக்குக் கிடைத்த வெற்றி!”

”ஆயுதங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு ஜனநாயகத்துக்குத் திரும்பியிருக்கும் மாவோயிஸ்ட்கள், இதே நிலையைத் தொடர்வார்களா?”

”செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு, ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்கள் அனைத்தையும் தீவிரவாத அமைப்புகளாக அறிவித்தது அமெரிக்கா. இதனால், விடுதலைப் புலிகள் உள்பட பல போராட்டக் குழுக்கள் அந்தந்த நாடுகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. பெரும்பாலும் அவை தோல்வியிலேயே முடிந்தன. நேபாள மாவோயிஸ்ட்கள் மட்டுமே இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டவிடம், ‘ஜனநாயகப் பாதையில் நீடிப்பீர்களா?’ என்று கேட்டோம். ”ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில்தான் ஆயுதம் தூக்கினோம். இனி, அது தேவைப்படாது. ஆயுதம் ஏந்திய போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் மூன்றாவது உலக நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளுக்கு நாங்கள் முன்னுதாரணமாக இருப்போம்” என்றார்.”

”நேபாளத்தில் ஜனநாயகம் மலர்ந்திருப்பதை இந்தியா எப்படிப் பார்க்கிறது?”

”ஒருவகையில் இது இந்தியாவுக்குக் கிடைத்த அடிதான். மாவோயிஸ்ட்கள் தலைமையில் ஆட்சி அமைவதை ஒருவித படபடப்புடன்தான் பார்க்கிறது இந்தியா. நேபாளத்தில் செல்வாக்கான கட்சியான மாதேஸி கட்சி, ஆரம்பத்தில் இந்தத் தேர்தலில் பங்கேற்க மறுத்து வந்தது. இதன் பின்னணியில் இந்திய உளவுத் துறை இருப்பதாகச் சொல்கிறார்கள். அரண்மனையிலிருந்து வெளியேறப்போகும் நேபாள மன்னரை இந்தியாவில் தங்கவைக்க இந்திய அரசு விரும்புவதாகச் சொல்கிறார்கள். அதை மாவோயிஸ்ட்கள் விரும்பவில்லை. இதுவரை சீனா வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், அது மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என்கிறார்கள். இந்தியா என்ன செய்யப்போகிறது என்று பார்க்கலாம்!”

”நேபாள மாவோயிஸ்ட்களின் இந்த வெற்றி, மற்ற ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு வழிகாட்டுமா?”

”நிச்சயமாக! 1983லிருந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் புலிகளால் இதுவரை அமைதியை எட்ட முடியவில்லை. காரணம், மாவோயிஸ்ட்களைப் போல நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை. விடுதலைப்புலிகள் இந்த முன்னுதாரணத்தைப் பரிசீலிக்கச் செய்ய வேண்டிய நேரம் இது!”

14-5-08