இது இறுதி அறுவடை!

DSCN1881

எல்லோருக்குமான கவலை நதிகள் பாய்ந்து வளப்படுத்தும் விவசாய நிலங்கள் பற்றியதாக இருக்கிறது. நதி வழி விவசாயம் இன்று மேட்டிமைதனத்தோடு யாரோ உழைத்து யாருக்காகவோ விளைவிப்பதாக மாறிவிட்டது. சம்பா அரிசி விளைவிக்கும் விவசாயி, ரேஷன் அரிசியை உண்பதுதான் யதார்த்தம். இந்த சம்பா அரிசி நாளை இல்லாமல் போய்விடுமே என்கிற ஆதங்கம்தான் இதை உண்பவர்களுக்கு இந்த விவசாயிகளின் மேல் அதீத அக்கறையை ஏற்படுத்துகிறது. ஊடகங்களை அணுக முடியும் இவர்களால் அவர்களுக்காக குரல் கொடுக்க முடிகிறது. அல்லது குரல் கொடுப்பதாக பாவ்லா காட்ட முடிகிறது. இவர்கள் இருக்கட்டும், வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து, தன் வயிற்றுக்கு பருப்பையும் திணையையும் விளைவிக்கும் விவசாயிகளும் இங்கே பெருமளவில் இருக்கிறார்கள். தமிழகம் என்ன திரும்பிய பக்கமெல்லாம் நதிபாயும் வெனீஸா என்ன? இல்லை, வறண்ட பூமியும் இங்கே உண்டு.  ஆனால் இன்றைய மக்களின் சொத்து குவிக்கும் ஆர்வம் மானாவாரி நிலங்களை கூறுபோட்டு வீட்டு மனைகளாக மாற்றிவிட்டது. எல்லா ஊர்களில் மானாவாரி விவசாய நிலங்கள் கூறுபோடுவது கண்மூடித்தனமாக நடந்துவருகிறது.

DSCN1891

DSCN1941
சமீபத்தில் என் ஊருக்குச் சென்றிருந்தபோது இந்த அதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டேன். எங்கள் வீட்டருகே இருந்த விவசாய நிலம் கூறுபோடப்பட இருக்கிறதாம். இதுதான் கடைசி அறுவடை என்று தெரிவித்தார் அந்த நிலத்தில் விவசாயம் செய்யும் அந்தப் பாட்டி. மகனின் கடன்களை அடைக்க நிலத்தை கூறுபோடப் போவதாக சொன்னாள் பாட்டி. அந்த நிலத்தின் மீது எங்கள் குடும்பத்திற்கு இருந்த பிணைப்பு நெடியது. மழைக்காலங்களில் காளானையும் கீரைகளை எங்களுக்கு தந்தது அந்த நிலம். மாடுகள் இருந்தபோது அந்த நிலத்தில் வரும் புல்லும் எங்களுக்கு பயன்பட்டது. அதைவிட மகிழ்ச்சி நிலம் பூ, காயுமாக நிறைந்திருப்பதை காணும்போது கிடைக்கும். இதை நம்பி வரும் கரிச்சான், மைனா, அக்காக் குருவி, தவிட்டுக்குருவியை காண்பதும் இனிது. இனி எதைக் காண்போம் என்று தெரியவில்லை!

சிலந்திகளின் படையெடுப்பு பருவநிலை மாற்றத்தின் அறிகுறி?!

பருவநிலை மாற்றத்தை இயற்கை நமக்கு சமீபகாலமாக பல்வேறு விஷயங்கள் வழியாக உணர்த்திக் கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு இந்த வருடம் பருவமழை தப்பியது, அடுத்த உதாரணம் அதிகப்படியான பனிப்பொழிவு. இவையெல்லாம் நம்மில் பெரும்பாலனவர்களின் பார்வைக்கு வருபவை. ஆனால் பருவநிலை மாற்றம் இயற்கையின்

IMG_0743

வேரடி மண்ணில் அசாத்தியமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
சென்ற மாதம் சென்னை பழவேற்காடு பகுதிக்கு வரும் பறவைகளின் இயல்புகளை படிப்பதற்காக சென்ற சூழலியல் செயல்பாட்டாளர்கள் ஒரு  அறிகுறியை அங்கே கண்டிருக்கிறார்கள். பழவேற்காடு சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சிலந்தி வலையாக இருந்திருக்கிறது.

IMG_0713

‘‘அப்படியொரு காட்சியை இத்தனை வருடங்களில் நாங்கள் பார்த்ததே இல்லை. மரங்கள், புதர்கள், நெல் வயல்கள், தரைப் பகுதிகளில்கூட சிலந்தி வலைகளைப் பார்த்தோம். சிலந்திகளை சாப்பிடும் உயிர்கள் அந்தப் பகுதியில் குறைந்திருக்கலாம். இயற்கையின் உணவுச் சங்கிலியில் ஏதோ மாற்றம் நிகழ்ந்திருப்பதே இப்படி சிலந்திகள் பெறுகியதற்குக் காரணம். எந்தவொரு உயிரனமும் அதிகப்படியாக இருந்தால் அது சூழலியலுக்கு ஆபத்தாகத்தான் முடியும்’’ என்கிறார் சூழலியல் செயல்பாட்டாளர் திருநாரணன்.

IMG_0724

ஆபத்தின் அறிகுறியாக இதை கருதி, அரசு அதிகாரிகள் இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

படங்கள்: நேச்சர் டிரஸ்ட்.

கருவிலிருந்து கல்லறை வரை பெண்ணுடலை சிதைக்க காத்திருக்கும் காமுகர்களின் சமூகம்!

Copy of Photo-0008_1

‘நெய்வேலில ஒரு ஆஸ்பிட்டல் இருக்குது. அங்க போன ஸ்கேன் பண்ணி, ஆம்பளையா பொம்பளையான்னு சொல்லிடுவாங்க. எங்கூருல நெறைய பேர் அங்க போய் பாத்து ஸ்கேன் பண்ணி பொம்பளையா இருந்தா அபார்ஷன் பண்ணிடுவாங்க’

வறட்சியால் துவண்டு கிடக்கும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப் போனதில் மெட்ரோ பாலிடன் சென்னையைத் தேடி வரும் ஆயிரக்கணக்கானவர்களில் அந்தப் பெண்ணும் ஒருவர். விழுப்புரம் மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமம் என்று சொன்னார். 3 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை அவருக்கு. இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட, ஆரம்பத்தில் விவசாயம் பார்த்து வாழ்ந்திருக்கிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன் நகரத்து கட்டட வேலைகளுக்கு விவசாயிகள் வரத் தொடங்கிய நேரத்தில் இவரும் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். சித்தாளாக 15 ஆண்டுகள் கல், மண் சுமந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, எல்லோருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார். தற்போதும் இங்கேயே வசிக்கிறார்.

சமீபத்தில் இவருடன் பேசியபோது இயல்பாக இவர் சொன்ன அந்த விஷயம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மருமகள் இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருப்பதாக சொன்னவர், இந்த முறை ஆண்தான் என்று உறுதியாக தெரிந்துவிட்டது என்றார்.

‘எப்படி?’
‘நெய்வேலில ஒரு ஆஸ்பிட்டல் இருக்குது. அங்க போன ஸ்கேன் பண்ணி, ஆம்பளையா பொம்பளையான்னு சொல்லிடுவாங்க. எங்கூருல நெறைய பேர் அங்க போய் பாத்து ஸ்கேன் பண்ணி பொம்பளையா இருந்தா அபார்ஷன் பண்ணிடுவாங்க’

‘எந்த ஆஸ்பிட்டல்? பேர் என்னா?’

‘பேர் தெரியலமா, ஆயிரபா குடுத்தா ஸ்கேன் பண்ணி சொல்லிர்றாங்க. எம் மருமவ அங்கதான் போய் பாத்துட்டு வந்துருக்குது. ஆம்பளை புள்ளன்னு சொல்லிட்டாங்களாம்.’

‘ஹாஸ்பிட்டல் பேர் தெரியலையா?’

‘தெரில…என்னான்னு. இப்படி ஸ்கேன் பண்ணி சொல்றாங்கன்னு தெரிஞ்சி கெவர்மெண்ட்ல சீல் வச்சிட்டாங்களாம். பூட்டு போட்டிருந்தாகூட பின் பக்கமா போயி வந்துகுனுதான் இருக்காங்க.’

அதற்கு மேல் அவரிடமிருந்து தகவல்களைப் பெற முடியவில்லை. அரசாங்கம் சீல் வைத்த பிறகும் ஒரு மருத்துவமனை இயங்குகிறது என்றால், அதற்கு பொதுமக்கள் தரும் ஒத்துழைப்பு முதன்மையான காரணம். அடுத்த காரணம் தவறை கண்டுகொள்ளலாம் இருக்கும் அதிகாரிகள்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள என் பூர்விக கிராமத்துக்குச் சென்றிருந்தபோது இதேபோல் இன்னொரு சம்பவத்தையும் கேள்விப்பட்டேன். என்னுடன் படித்த பெண் அவர், அவருக்கு ரெண்டு பெண் குழந்தைகள், மூன்றாவதாக கர்ப்பமானதாகவும் 5 மாதத்தில் அது பெண் என்று தெரிந்துவிட்டதால் கலைத்துவிட்டதாகவும் சொன்னார்.

‘அப்பாடா பெண் சிசுக்கொலைகளை ஒழித்துவிட்டோம். தொட்டில் குழந்தை திட்டம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது’ அரசுகள் ஒருபுறம் கூவிக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் பெண் சிசுக்கொலைகள் நவீன வசதிகளோடு உலா வந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஆரம்ப கட்ட சமூக சீர்திருத்தத்தைக் கூட செய்ய முடியாத அரசாங்கம் காமுகர்களிடமிருந்து எப்படி பெண்களைக் காப்பாற்றும்?

அப்படியே கருவிலிருந்து தப்பி வந்தாலும் 3 வயதில், 12 வயதில், 22 வயதில், 38 வயதில், 50 வயதில் ஏன் 70 வயதில்கூட காமுகர்கள் விடமாட்டார்கள். கருவிலிருந்து கல்லறை போகும்வரை பெண்ணை சிதைக்க காத்துக்கொண்டிருக்கிறது இந்த கேடுகெட்ட சமூகம்!