போராட்ட களமாகும் பட்டமளிப்பு விழா மேடைகள்!

“நாங்கள் ஆவணங்களைக் காட்டமாட்டோம். இன்குலாப் ஜிந்தாபாத்!” ஜாதவ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை திருத்த சட்டத்தின் நகலை கிழித்தெழிந்த மாணவி டெப்ஸ்மிதா சவுத்ரி மேடையில் முழங்கிய முழக்கம் இது. இன்று நாடு முழுவதும் மாணவர்கள் முன்னெடுத்திருக்கின்றபோராட்டத்தின் கனல், பட்டமளிப்பு விழா மேடைகளில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. “எனது எதிர்ப்பு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல. மோடி அரசாங்கத்தின் பாரபட்சமான, மாணவர் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும்தான்” எனவும் அவர் அறைகூவல் விடுத்தார்.

கடந்த டிசம்பர் 15 அன்று குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் அமைதியாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை போர்க்களமாக மாற்றியது டெல்லி போலீசு. பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது; வகுப்பறை கண்ணாடி கதவுகள் – ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன; நூலகம் இரத்தத் துளிகளால் நிரம்பியது.

நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் அடங்கும் முன் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் போராடிய மாணவர்கள் மீது அதைக் காட்டிலும் கடுமையான வன்முறை ஏவப்பட்டது. மாணவர்கள் சிலர் முடமாகும் அளவுக்கு கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தங்களுடைய பட்டமளிப்பு விழா மேடையை எதிர்ப்புணர்வை காட்டும் மேடையாக மாற்றினர். தங்க பதக்கம் வென்ற அருண்குமார், கார்த்திகா, மேகலா ஆகியோர் தங்களுடைய எதிர்ப்புணர்வை காட்டும் வகையில் பட்ட விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தனர். அவர்கள் வெளிப்படுத்திய தார்மீக ரீதியிலான கோபம், அரசியல் செயல்பாட்டாளர்களிடம்கூட காணக்கிடைக்காதது.

“மக்களின் குரல்களைக் கருத்தில் கொள்ளாத அரசாங்கத்தால் என்ன பயன்?” என்கிற கார்த்திகா, எம்.எஸ்ஸி. எலக்ட்ரானிக் மீடியா படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர்.

“குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெறுமாறு நான் கோருகிறேன். என்னைப் போன்ற மாணவர்கள் கடினமாக உழைத்து பெற்ற மதிப்புகளை இதற்காக ஏன் விட்டுத்தருகிறோம் என்பதை அரசாங்கம் உணர வேண்டும். ஒரு தனிநபராக, இந்த வழியில் எதிர்ப்பு தெரிவிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. மற்றவர்களை தங்கள் எதிர்ப்பை எந்த வகையிலாவது பதிவு செய்ய நான் அழைக்கிறேன்” என்கிறார் கார்த்திகா.

“அரசாங்கம் சொல்வது அனைத்தையும் கேள்வி கேட்காமல் எப்படி பின்பற்ற முடியும்? இது ஒன்றும் பாசிச நாடு அல்ல, நாம் ஜனநாயக நாடு என்றுதான் அரசியலமைப்பு சொல்கிறது. எங்களுக்கு எது கொடுக்கப்பட்டாலும் அதை அப்படியே தலை வணங்கிய ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வழியிலும் நாம் போராட வேண்டும்” என கார்த்திகாவிடமிருந்து வார்த்தைகள் அத்தனை அரசியல் தெளிவோடு வெளிப்படுகின்றன.

பதக்கத்தை தூக்கி எறிந்த மற்றொரு ஆய்வுப் பட்ட மாணவரான அருண்குமார், “போலீசு தாக்குதலுக்கு ஆளான பல்கலை மாணவர்களுக்காக மட்டுமல்ல, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பு வீதிகளில் போராடுகிறவர்களுக்குமாகவும்தான் எங்களுடைய ஆதரவை தெரிவிக்கிறோம்.” என்கிறார்.

“நான் குடியரசு தலைவரிடமிருந்து பட்டத்தை வாங்க விரும்பவில்லை. அவர் நினைத்திருந்தால் அந்த மசோதாவை மீண்டும் பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்க முடியும். ஆனால், அவர் கையெழுத்திட்டு அதை அமலாக்கினார்” என்கிறார் அவர்.

இன்னொரு மாணவி மேகலா சொன்ன காரணத்தை படியுங்கள்: “மத மற்றும் சமூக அடிப்படையிலான பாகுபாட்டை எந்த இந்திய குடிமகனும் பொருத்துக்கொள்ள முடியாது. இன்று முசுலீம்கள், நாளை கிறித்துவர்களாக இருக்கலாம். அதன்பின் தலித்துகள், பிறகு சிறுபான்மையினர். இது மக்களை பிரிக்கும். அதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்கிறார் அவர்.

“இதனால்தான் நாங்கள் படித்தவர்கள். நாங்கள் படிக்கிறோம், அதனால் காரணம் கண்டுபிடித்து கேள்வி எழுப்புகிறோம். நமக்கு தீங்கு விளைக்கும் எந்தவொரு விசயத்துக்கும் எதிராக குரல் எழுப்பும்போது, அரசு நம்மை ஏன் கொடூரமாக நடத்துகிறது?” என அரசை நோக்கி கேள்வி எழுப்புகிறார் அவர்.

இவர்களின் வழியில் புதுச்சேரி பல்கலை மாணவியான ரபீஹா அப்துரஹீம் தனது பதக்கத்தை விழா மேடையிலே வாங்க மறுத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பல மாதங்கள் கடுமையாக உழைத்து பெற்ற பதக்கங்களை, பாராட்டுக்களை எதிர்காலத்தின் நன்மைக்காக விட்டுக்கொடுத்த இந்த மாணவர்களின் அரசியல் தெளிவு, களத்தில் உள்ள வாக்கு அரசியல் கட்சிகளிடம் இல்லாத ஒன்று.

உண்மையில் எதிர்க்கட்சிகள் செய்வதறியாது, போராட்டத்தின் திசைவழி அறியாது தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், டெல்லியில் மையம் கொண்டு இந்தியா முழுவதும் பரவிய மாணவர்கள் எதிர்க்குரல் ஒட்டுமொத்த இந்திய சமூகத்துக்கும் வழி காட்டுகிறது.

இதை மூத்த அரசியல்வாதியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். அவருடைய வார்த்தைகளில் சொல்வதென்றால்,

“குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட 15 நாட்களில் மாபெரும் புரட்சி, நாடு முழுவதும் நடந்திருக்கிறது. அதற்கு அரசியல் கட்சிகள் காரணமல்ல. இந்தப் போராட்டத்துக்கு மாணவர்களும், இளைஞர்களும் சொந்தக்காரர்கள். நாடு முழுவதும் அவர்களாகவே முன்வந்து போராடுகிறார்கள். அரசியல் சாசனத்தின் அடிப்படை நெறிமுறைகளை காப்பாற்ற திரண்டிருக்கிறார்கள். இதில் அரசியல் கட்சிகள் தோல்வியடைந்து விட்டன.” .

பாஜக தலைமையிலான ஆட்சி மத்தியில் அமர்ந்தவுடன், முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறைகளைக் கண்டித்து சாகித்ய அகாதமி விருதாளர்கள் தங்களுடைய விருதுகளை திரும்ப அனுப்பி தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இது நாடு முழுவதும் பரவியது; உலகத்தின் கவனத்தைப் பெற்றது. ஒரு கட்டத்தில் வேறுவழியில்லாமல் பிரதமர் நரேந்திர மோடி, அடிப்பதென்றால் தன்னை அடிக்கும்படி பேசினார். மதத்தை முன்னிறுத்திய கும்பல் வன்முறையாளர்கள் சற்றே அடங்கினர்.

மாணவர்கள் கையில் எடுத்திருக்கும் போராட்டங்களும் அவர்கள் பட்டமளிப்பு விழா மேடைகளை எதிர்ப்புணர்வைக் காட்டும் மேடைகளாக மாற்றியிருப்பதும் விருதுகள் திரும்ப அளிக்கும் போராட்டங்களைக் காட்டிலும் வீரியமானது. அவசரநிலை காலக்கட்டத்துக்குப் பின், மாணவர் சமூகம் வேறு எந்த பிரச்சினைக்காகவும் இப்படியான போர்க்கோலத்தை பூணவில்லை என்கிறார் சமூக – அரசியல் செயல்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட் .

1974-ஆம் ஆண்டு பீகாரில் மாணவர்களால் தொடங்கப்பட்ட ‘பீகார் இயக்கம்’, பின்னாளில் காந்திய சோசலிசவாதி ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் ‘சம்பூரண கிர்ந்தி (முழுமையான புரட்சி இயக்கம்) அல்லது ஜெ.பி. இயக்கமாக’ பரிணமித்தது. அதுவே, இந்திரா காந்தியின் அவசரநிலை அரசு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தது.

பீகார் மாணவர் அமைப்பில் இருந்தவர்களே லாலு பிரசாத் யாதவ், சுஷில் குமார் ஷிண்டே, ராம்விலாஸ் பஸ்வான் போன்ற இந்நாளைய தலைவர்கள். ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த சீதாராம் யெட்சூரி அந்நாளில் எமர்ஜென்ஸியை எதிர்த்து போராடியவர்கள். இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி குஜராத்தின் நவநிர்மாண் இயக்கத்தில் மாணவராக இருந்த காலத்தில் பங்கெடுத்தவர். எமர்ஜென்ஸியை எதிர்த்த இயக்கங்களில் மாணவர்களின் நவநிர்மாண் இயக்கமும் முதன்மையான பங்காற்றியது.

வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது. ஆட்சி அதிகாரத்துக்கு வரும் எந்தவொரு கட்சியுமே போராட்டங்களை ஒடுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன. ஆனால் இப்போதையே நிலைமை அவசர காலக்கட்டத்தையும் விட மோசமானது.

அவசர காலக்கட்டத்தின் அரசாங்கத்தை எதிர்த்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டார்கள்; ஊடகங்கள் முடக்கப்பட்டன. இப்போது அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிராக நிற்கிறது. உலகின் மிகச்சிறந்த அரசியலமைப்பான இந்திய அரசியலமைப்பின் மிக முக்கியமான முழக்கமான ‘மதச்சார்பின்மை’ இன்று கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இதுவரை கட்டிக்காக்கப்பட்ட இந்தியா என்கிற கருத்தாக்கத்தை மாற்றியமைக்கு முயற்சியில் இருக்கிறது ஆளும் அரசாங்கம்.

சென்ற தலைமுறை இதைக் கடந்து செல்ல முயற்சிக்கிறது அல்லது கண்டுகொள்ள மறுக்கிறது. இந்தத் தலைமுறை தனது உரிமைகளுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காக இந்தியா என்கிற மதச்சார்பற்ற நாட்டை காப்பாற்றத் துடிக்கிறது; வீதியில் இறங்கிப் போராடுகிறது. தனக்கு வாய்க்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தனது நாட்டின் ஆன்மாவைக் காப்பாற்ற நினைக்கிறது. பாராட்டு மேடைகளை போராட்ட மேடைகளாக மாற்றுகிறது. அடக்குமுறைகளைக் கடந்து வீரியத்துடன் நிற்கும் மாணவர் பட்டாளம், பொது சமூகத்துக்கு போராட்ட அரசியலைக் கற்றுத்தருகிறது.

அரசு மூடிய அத்தனை கதவுகளையும் தனது போராட்ட வலிமையால் இந்த மாணவர்கள் திறக்க வைப்பார்கள் என்கிற நம்பிக்கையும் பிறக்கிறது.

– மு.வி. நந்தினி.

ஊர் திரும்புதல்…

டந்த ஒரு வாரமாக சென்னையின் தட்ப வெப்ப சூழல் சற்றே இதமானதாக உள்ளது. கோடையில் கருகிவிட்ட தொட்டிச் செடிகளில் உயிர் பிழைத்தவை, பசுமையாக பளிச்சென்று காட்சியளிக்கின்றன. கோடையின் கொடும் வெப்பத்தால் வாடி வதங்கி, நுனி இலைகள் கருகி, இலை உதிர்ந்து கிடந்த ராமேஸ்வரம் மல்லி பூத்திருக்கிறது. அதற்கே உரிய பிரத்யேக மணம், அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் காற்றில் மிதந்து வருகிறது. பால்யத்தை நினைவு படுத்துகிறது அந்த மணம்.

பத்து வயது வரை நாங்கள் வாழ்ந்த அந்தக் கிராமத்தின் வீடுகளில் புழைக்கடை தோட்டங்களில் ராமேஸ்வரம் மல்லிச்செடி ஆக்கிரமித்திருக்கும். டிசம்பர் பூச் செடிகள், டெரியா பூக்கள், பீன்ஸ் செடிகள், மிளகாய் செடிகள் என புழைக்கடை தோட்டத்தில் பலவகையான செடிகள் இருந்தாலும் மணத்தால் ஆக்கிரமித்திருந்தது ராமேஸ்வரம் மல்லியே..

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னோக்கி போகச் சொன்னால், நான் அந்தக் காலக்கட்டத்துக்குத்தான் போவேன். பத்து வயதில் அந்த ஊரை விட்டு வந்ததோடு சரி, மீண்டும் செல்லும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை. ஆனால், அந்த ஊரைப் பற்றிய நினைவு மட்டும் என்னை விட்டுப் போனதேயில்லை.

கோடையில் கடுமையான தண்ணீர் வறட்சி இருக்கும் ஊர். கோடையைத் தவிர மற்ற நேரங்களில் எங்கு பார்த்தாலும் நீர் நிலைகள் நிரம்பி வழியும். சிறு வயதில் Aquaphobia என்கிற நீரைக்கண்டால் அலறுகிற பிரச்சினை இருந்தது. குட்டை அளவு நீரைப் பார்த்தாலும் கண்களை மூடிக்கொள்வேன்.

அந்த கிராமத்திலிருந்து எங்கு சென்றாலும் ஏரி அல்லது குளம், குட்டை, நீரோடைகளைக் கடந்துதான் செல்ல வேண்டியிருக்கும். என் அம்மாவை இறுகப் பற்றிக்கொண்டு, நீர்நிலைகளை ஒட்டிய ஒற்றையடிப்பாதைகளைக் கடந்து செல்வேன். அதுபோல, பேருந்து பயணத்தின் போது, நிரம்பி வழியும் நான்கைந்து ஏரிகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். பேருந்து ஏரியில் கவிழ்ந்துவிடுமோ என்கிற பயம், ஏரியைக் கடக்கும் வரை இருந்துகொண்டே இருக்கும்.

கிராமத்திலிருக்கும் குழந்தைகள் நான்கைந்து வயதுகளில் நீச்சல் பழகிக்கொள்வார்கள். நான் மட்டும் நீர் பயம் காரணமாக பழகவேயில்லை. ஒருமுறை என் அண்ணன் கடுப்பாகி, கிணற்றின் மேலிருந்து உள்ளே தூக்கிப் போட்டான். அப்போதும் நீரின் மீதான பயம் காரணமாக நீச்சல் கற்கவில்லை. என் வயதுள்ள நண்பர்கள் கிணற்றில் குளிப்பார்கள். நான் மட்டும் கால்வாயில் குளிப்பேன்.

பிறகு, வெவ்வேறு ஊர்களில் குடியிருந்து சென்னை வரை வந்தாகிவிட்டது. முதன்முதலாக கடலை பார்த்தபோது பயம் வரவில்லை. நீர் மீதான பயம் விட்டுப்போய்விட்டது தெரிந்தது..

……………………………………………………………………………………………………………………
சென்னை வந்து கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக கோடையின் கடுமை, இந்த நகரத்தை விட்டுப் போய்விடலாமா என்கிற எண்ணத்தை அதிகப்படுத்திவிட்டது. கிட்டத்தட்ட போய்விடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்.

கோசிகனுக்குமேகூட சென்னையை பிடிக்கவில்லை. ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறை எங்களுடைய பூர்வீக கிராமத்துக்கு சென்றாலும், அதுதான் அவனைப் பொறுத்தவரையில் சொந்த ஊர்.

ஊரைப் பற்றிய பேச்சு எடுத்ததும், “காலையில சில்லுன்னு காத்து வரும்..ஏசியே போட்டுக்க தேவையில்லை. அப்புறம் ஆறு மணிக்கெல்லாம் குருவிங்க வந்து எழுப்பிவிடும். பயங்கரமாக மின்னல் அடிக்கும், நிறைய மழை பெய்யும்…” என கண்கள் விரிய வர்ணிப்பான்.

இத்தனைக்கும் அங்கிருக்கும் வீட்டில், இங்கிருப்பதைப் போன்ற எவ்வித வசதிகளும் கிடையாது. ஆனாலும், கிராமத்து வீட்டின் மீது அவனுக்கு இயல்பான ஈர்ப்பிருக்கிறது. முடிவெடுப்பதில் எனக்கு இது உதவியாக இருந்தது. எதிர்காலத்தில் அங்கேதான் வாழப்போகிறோம் என்கிற எண்ணமிருந்தபோதும், எப்போது என தீர்க்கமாக முடிவெடுக்க முடியவில்லை. அது இப்போது முடிந்திருக்கிறது.

ஊரில் வெறுமையாக உள்ள வீட்டை, வாழும் வீடாக மாற்ற வேண்டும். சில நேரங்களில் ஒன்றுமில்லாத வெறுமை, மன உளைச்சலை ஏற்படுத்தியதுண்டு. முதலில் புத்தகங்களும் சில மரச் சாமான்களும் செல்கின்றன. அடுத்த கோடைக்குள் ‘வாழ்வதற்கான வீட்டை’ உருவாக்கிவிட வேண்டும். அதில் பல சிக்கல்களும் சவால்களும் இருந்தாலும், இந்த முறை முடியும் என்றுதான் தோன்றுகிறது.

“தோற்பது எப்படி?”

கோசிகன் படிக்கும் பள்ளியில் ‘அம்மாவை பார்த்தே ஆக வேண்டும்’ என கடந்த வெள்ளிக்கிழமை கட்டாய அழைப்பு விடுத்திருந்தார்கள். திங்கள் காலையில் செல்ல முடியவில்லை. மாலைதான் சென்றேன்.

இரண்டாண்டுகளாக உள்ள குற்றச்சாட்டுத்தான். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே சொல்ல அழைத்திருக்கிறார்கள்..

“உங்க பையன் அறிவா இருக்கான்; கிளாஸ்ல நல்லா பதில் சொல்றான். ஆனா, எழுதவே மாட்டேன்கிறான். ஒரு மாசமா எழுதவேயில்லை… கடைசியா கட்டாயப்படுத்தி உட்காரவெச்சி எழுத வெச்சோம்… பெரிய தலைவலியா இருக்கான்னு எல்லா மிஸ்சும் சொல்றாங்க” என மென்மையான குரலில் வேகமாக பேசி முடித்தார் துணை தலைமை ஆசிரியர்.

“எதையும் எழுதிப் போடலைன்னு சொன்னான் மேம்.. வீட்லேர்ந்த நோட்டையே நான்தான் பையில் வெச்சு அனுப்பினேன்” நானும் வேகமாக சொல்லிவிட்டு,

அருகே நின்றிருந்த கோசியைப் பார்த்தேன். இருவரையும் மாறிமாறிப் பார்த்து “நோ மிஸ்…நோ மிஸ்” என்றான்.

“கோசி, ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் ல ஒரு டிராமா நடிச்சான் அதிலேர்ந்து அவனை பிடிச்சுபோச்சு..such a talented boy…

போன வருசம் complaint பண்ணப்போ, நான் பெரிசா எடுத்துக்கலை… இந்த வருசம் நானே அனுபவிக்கிறேன்… என்னால முடியல…” என்றார் ஆசிரியர் அவனைப் பார்த்து.

நானும் ‘என்னால முடியலை’ என்றேன்.

“இனி நீதான் திருத்திக்கணும்பா” என பஞ்சாயத்தை ஒருவழியாக முடித்து வைத்தார் ஆசிரியர்.

நான்காவது படிக்கிறான். இரண்டாவதில் இருந்து இதே குற்றச்சாட்டு; இதே பாராட்டு… இந்தப் பிரச்சினையை யாரிடமாவது சொன்னால் கற்றலில் குறைபாடு போன்ற பிரச்சினையாக இருக்குமோ எனக் கேட்பார்கள். அப்படியெதுவும் இல்லை.

சோம்பேறித்தனம்… நன்றாக (சொற்பொழிவே நடக்கும்) பேசுவான். குழந்தைகளுக்கே உரிய திக்கிப்பேசும் மழலை மொழியில் அல்லாமல் மிகச் சிறப்பாகவே உச்சரிப்பான். படிக்கவும் செய்வான். தூங்கும் முன் தினமும் புதுப்புது கதைகளை சொல்வான்.

எழுதுவதில் மட்டும் அத்தனை மெத்தனம். இரண்டு பக்கங்களை எழுத வைப்பதற்குள் நெஞ்சுலி வந்துடும். போன வருடம் நடந்த தேர்வுகளில் அனைத்து பதில்களும் தெரிந்திருந்தும்கூட ஒரே ஒரு விடையை மட்டும் தாளில் எழுதி வைத்திருந்தான்.

பள்ளிகளில் எழுதுவதை குறைத்து கொடுக்கலாம். ஆனால் பள்ளிக் கல்வி முறை அப்படியில்லை. பக்கம் பக்கமா எழுதியே ஆக வேண்டிய கல்வி முறை. எழுதியே ஆக வேண்டும். இந்த ஆண்டு சற்றே வேகம் கூடியிருக்கிறது.

“ஃபர்ஸ்ட் மார்க் வாங்கலாம், ஆனா நீ பாஸ் வாங்கினா போதும்” என பள்ளியிலிருந்து வரும்போது மென்மையாகவே சொன்னேன். தலையை ஆட்டினான்.

வகுப்பு ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் அவனைப் பற்றி புகார் சொல்லத்தான் அழைத்திருந்தார்கள். ஆனால், அவனைப் புகழ்ந்தார்கள். எனக்கு புகார் பற்றிய கவலை இல்லை; புகழ்ச்சி குறித்து மகிழ்ந்தேன்.

நான் எப்போது கடிந்துகொள்வேனோ என்கிற அச்சம் அவனிடம் இருந்தது. திங்கள் இரவு இரவு முதல் காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி எனக்கு. சுத்தமாக பேசவே முடியவில்லை. பேச முயற்சித்தபோது, “அம்மா, ப்ளீஸ் உன்னால பேச முடியலை..பேசதம்மா… ஏன் கஷ்டப்படற”. சிரித்துக்கொண்டே நக்கலாகச் சொன்னான். அவனுடைய கவலை அவனுக்கு. ஆனால், ஒரு நாள் விடுமுறை எடுத்து, என்னைப் பார்த்துக்கொண்டான். நன்றி மகனே… 🙂

………………………………………………………………………………………………………………………….

இரண்டு வாரங்களுக்கு முன் முகநூலிலிருந்து விலகிவிட்டேன். குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. சில நேரங்களில் நான் எழுதுவது பலருக்கு மனவருத்தத்தைக் கொடுக்கிறது, கோபத்தை உண்டாக்குகிறது. வினை…எதிர்வினை…விவாதம்… சலிப்பாக உணர்ந்ததால் விலகிவிட்டேன்.

செய்தியாளராக முகநூலிலிருந்து விலகியிருப்பது இழப்புதான். ஆனால், இப்போதைக்கு இந்த விலகல் தேவையாக உள்ளது.

……………………………………………………………………………………………………………………..

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் செயல்பாட்டாளர் முகிலனுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமூக ஊடகங்களில் எழுதிய பதிவுகளை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். சூழலியல் தொடர்பான பல பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த முகிலனுக்கு ஆதரவாகவே நிறைய பேர் எழுதியிருந்தனர்.

‘மீறல்கள்’ நிகழக்கூடிய சாத்தியங்கள், சந்தர்ப்பங்கள் எல்லோருக்குமே வர வாய்ப்பிருக்கிறது. அது இயல்பானதுதான். ஆனால், மீறல் நிகழ்ந்துவிட்டபின் என்ன நடக்கும் என்பது குறித்து பலர் சிந்திப்பதில்லை. உணர்ச்சிகளின் உந்துதலில் நடக்கும் மீறல்களுக்கான பலனை தொடர்புடையவர்கள் அனுபவிக்கத்தான் நேரிடும். அது உண்டாக்கும் தொடர் சங்கிலி நிகழ்வுகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

அதோடு, ஆண்மய சமூகத்தில் ‘கட்டிக்கிட்டது ஒன்னு; வெச்சிக்கிட்டது ஒன்னு’ என்கிற வாய்ப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறைந்தபட்ச அறம் குறித்த உணர்வை தள்ளி வைத்து விடுகின்றன. தன்னுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை எனில் முகிலன் அதிலிருந்து வெளியேறியிருக்கலாம்; ‘காதலித்த’ பெண்ணை திருமணம் செய்துகொண்டிருக்கலாம். விவாகரத்தை நிகழக்கூடாத விசயமாகக் கருதும் சமூக உணர்வு, திருமண மீறல்களை மறைமுகமாக ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது.

…………………………………………………………………………………………………………………

’தோற்பது எப்படி?’ என்கிற ஒலிபரப்பு நிகழ்ச்சி குறித்து அண்மையில் அறிந்தேன். வெற்றியாளர்களின் தோல்வி அனுபவங்களை மட்டும் பகிர்வதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. பத்திரிகையாளர் எலிசபெத் டே தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சிகளை இங்கே கேட்கலாம்.

இப்படியொரு நிகழ்ச்சியை உருவாக்க பின்னணி காரணங்கள் குறித்து எலிசபெத் டே எழுதிய இந்தக் கட்டுரை Why we should learn to embrace failure. எனக்குப் பிடித்திருந்தது.

சமீப காலமாக சற்றே ஆழமாக விசயங்களை அணுகிப்பார்த்து எழுதும் யோசனை வந்துகொண்டிருக்கிறது. எலிசபெத்தின் கட்டுரை அகத்தூண்டலை உண்டாக்கியிருக்கிறது. அப்படியேதும் முயற்சித்தால் இங்கேயேதான் எழுதவிருக்கிறேன்.

………………………………………………………………………………………………………………..

கடந்த மாதம் நெருக்கடி காரணமாக மீண்டும் ஊடகங்களில் பணிவாய்ப்புத் தேடினோம்; நண்பர்களும் உதவினார்கள். ஆனால், நேர்மறையான எந்த பதிலும் கிட்டவில்லை. இது எதிர்ப்பார்த்ததுதான். உண்மையில், பணிதேடிவது எனக்கே பிடிக்கவில்லை. மனதளவில் தயார்ப்படுத்திக்கொண்டுதான் தேடினேன். அமையவில்லை. உண்மையாகவே மகிழ்ச்சி.

அந்த அமைப்பை குறை சொல்லிக்கொண்டே அதே அமைப்பில் 12 மணி நேரம் பணியாற்ற நேர்வது கொடுமையாகவே இருக்கும். 12 மணி நேர கொடுமையை தாங்குவதற்கு நான்கைந்து மணி நேர கொடுமையை தாங்கிக் கொள்ளலாம். அல்லது வேறு வழியைக் கண்டுபிடிக்கலாம்.

……………………………………………………………………………………………………………….

சில ஆண்டுகளாக எனக்கு PMDD (premenstrual dysphoric disorder) பிரச்சினை உள்ளது. பெண்களுக்குள்ள (20 பேரில் ஒருவருக்கு) பொதுவான பிரச்சினை இது. மாதவிடாய் காலத்துக்கு முன்பு கோபம், எரிச்சல், கவனக்குறைவு, இனம்புரியாத வருத்தம், காரணமே இல்லாத அழுகை, விரக்தி போன்ற உணர்வு உருவாகும். இதுதான் PMDD. சில நேரங்களில் மாதவிடாய் முடியும்வரைகூட தொடரும். ஹார்மோன் சமநிலை குலைவதால் இந்தப் பிரச்சினை வரலாம் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். முழுமையான காரணமும், மருந்துகளும் இல்லை.

ஆபத்தாக, தற்கொலை உணர்வுகூட சிலருக்கு வரலாம். சில நேரங்களில் எனக்கும்கூட அப்படித் தோன்றுவதுண்டு. ஆனால், தற்கொலையைக் காட்டிலும் எனக்கு மன உறுதி அதிகம். என் நண்பர் ஒருவர், இந்தப் பிரச்சினை உள்ளவர். அவருக்கும் இந்த உணர்வு உள்ளதென்று கூறினார். இந்த உணர்வு நிலையிலிருந்து வெளியேற உடற்பயிற்சி செய்வேன் என்றார். பிரச்சினை உணர்ந்தவர்களுக்கு பிரச்சினை இல்லை. பிரச்சினையை கைகொள்வது அவர்களால் முடிகிறது. இப்படியொரு பிரச்சினையை அறியாத பெண்களும் இருக்கிறார்கள். பல சமூக அழுதத்தங்களின் காரணமாக அவர்களுக்கு மேலும் மன அழுத்தம் அதிகமாகவே வாய்ப்புகள் அதிகம்.

பெரும்பாலும் இந்த சமயத்தில் அமைதியைக் கடைப்பிடிப்பேன். பிரச்சினைகள் வலிய வந்தாலும் சுரணையில்லாமல் நடந்துகொள்வேன். விரக்தியாக எண்ணங்கள் வரும்போது அடுத்த வாரம் சரியாகிவிடும் என சொல்லிக்கொள்வேன்.

மோசமான முடிவுகளை எடுக்க மனம் உந்தித்தள்ளும், அப்போது அதன் பேச்சைக் கேட்கவே கூடாது. அழும் உணர்வு வந்தால், தனிமையில் அழலாம்.

குடும்பத்தில் உள்ளவர்களிடம் இந்தப் பிரச்சினையை சொல்லி, ஒத்துழைக்கக் கேட்கலாம். அதிகப்படியான கோபத்தை குறும்பு செய்யும் மகனிடம் காட்ட வேண்டியிருக்கும், தாமதிக்காமல் அவனிடம் மன்னிப்பு கேட்டு விடுவேன். பிரச்சினை முடிந்தது.

யாரும் இல்லையென்றாலும் பிரச்சினை இல்லை, உங்களுக்குப் பிடித்த விசயங்களை அந்த சமயத்தில் செய்யுங்கள். படம் பார்க்கலாம், படிக்கலாம், எழுதலாம். நான் கொரிய சீரியல்களைப் பார்ப்பேன். 🙂

PMDD காரணமாக ஏராளமான சண்டை- சச்சரவுகளும் வந்துள்ளன. அந்தக் காலத்தை கடந்துவிட்ட பிறகு, இதற்கெல்லாம் இப்படி வினையாற்றியிருக்கத் தேவையில்லை எனத் தோன்றும். அதே சமயம் சில நல்லவைகளும் நடக்கலாம். எனக்கு நடந்திருக்கிறது.

PMDD ஒரு மோசமான பிரச்சினைதான். ஆனால், அதை கடக்க பழக்கப்படுத்திக்கொள்ள முடியும்.

செய்து பாருங்கள் இரண்டாவது…

‘செய்து பாருங்கள்’ இதழ் ஜுவல்லரி மேக்கிங் இதழாக வந்துள்ளது.

இதழ் குறித்த அறிமுகத்தை வீடியோவில் காணலாம்.

இதழைப் பெற…

http://www.seithupaarungal.com இணையதளத்தை பார்க்கவும்.

கபாலி புரட்டிப்போடும் சாதி சர்ச்சைகள்!

இன்றைக்கு சமூக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக மாறிப்போயிருக்கிறது சாதி. சாதி ஒழிப்பு பிரச்சாரம் நடந்த மண்ணில் சாதியை பின் ஒட்டாக வைத்து முகநூல் குழுக்கள் தோன்றுகின்றன.  அவை சாதி பெருமையைப் பேசுவதோடு நின்றுவிடுவதில்லை; வன்மத்தை கக்கும் குழுக்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அரசியல் வாழ்க்கைக்கு சாதியே பிரதானமாகிவிட்டச் சூழலில் இத்தகைய குழுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் அரசுகள் எடுப்பதில்லை.  சமூக ஊடகங்கள்  சாதிய சமூகத்தின் கண்ணாடிகளாக மாறிப்போயிருக்கும் இந்தச் சூழலில் இன்னொரு குறிப்பிடத் தகுந்த தகவல் ஒன்றையும் சொல்ல வேண்டும். இணைய தேடு பொறிகளில் தமிழில் தேடப்படும் விஷயங்களில் நடிகர்களின் சாதி எது என்பது குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்திருக்கிறது.

தங்களுக்குப் பிடித்த அல்லது பிடிக்காத நடிகர்களின் சாதியைத் தெரிந்துகொள்ள இணையவாசிகள் ஏன் விரும்புகிறார்கள்? சாதிய சமூகம் ஒரு காரணம் என்றாலும் வெகுஜென கலைவடிவமான சினிமா மீது சாதிய கண்ணோட்டத்தை  ஏற்படுத்தியது இதே கலைத்துறைச் சார்ந்தவர்கள்தான். நடிகர் கமல்ஹாசனின் தேவர் மகனிலிருந்து பாரதிராஜாவின் தேவர் பெருமை பேசும் இடைக்காலப் படங்களிலிருந்து கே. எஸ். ரவிக்குமார், உதயகுமார் ஆகியோரின் கவுண்டர் பெருமை பேசும் படங்களிலிருந்து சாதிய நிழல் சினிமா மீது  படர்ந்தது எனச் சொல்லலாம். இவர்களின் அடிகளை பின்பற்றி நூறு படங்களாவது வந்திருக்கும்.

சமகாலத்தில் தேவர் சாதியினரின் பங்களிப்பு அதிகமாக இருப்பதாலோ என்னவோ, தேவர் சாதி பெருமை பேசும் சினிமாக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. சாதிய கொலைகளும் சாதி பெண்கள் மீது செலுத்து வன்முறையும் பெருமைக்குரிய, வீரம் செறிந்த கதைகளாகப் பதிவு செய்யப்படுகின்றன. தேவர் மகனில் வந்த ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்ற பாடல் சாதி வெறியேற்றும் வகையில் ஆதிக்க சாதிகளின் விழாக்களின் ஒலிக்க வைக்கப்படுகின்றன. இந்த வரிசையில் கொம்பன், சுந்தர பாண்டியன் இன்னும் பல படங்களின் பாடல்கள், சாதி கலவரத்தைத் தூண்டும்வகையில் தலித் சாதியினரை உசுப்பேற்றும் வகையில் ஒலிக்க வைக்கப்படுவதாக பல பதிவுகள் ஆங்கில செய்தி ஊடகங்களில் பதிவாகியுள்ளன.

இத்தகையதொரு சூழலில் தலித் என்கிற அடையாளத்துடன் பா. ரஞ்சித் திரைப்படத்துறைக்கு வருகிறார்; முதல் படமாக ‘அட்டைக்கத்தி’ காதலைப் பற்றிப் பேசினாலும் அது தலித் வாழ்வியலின் அடித்தளத்தில் அமைந்திருந்தது. திணிப்பாக இல்லாமல் மிக இயல்பாக அதை பா. ரஞ்சித் செய்திருந்தார். அவருக்கு அதில் வெற்றியும் கிடைத்தது. வெற்றி என்பது அனைத்து ‘சாதி’யைச் சார்ந்த ரசிகர்கள் கொடுத்தது தானே? பா. ரஞ்சித்தின் தலித் அடையாளம் அட்டகத்தியின் வெற்றிக்குப் பிறகுதான் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது. ‘மெட்ராஸ்’ படத்துக்குப் பின் சமூக ஊடகங்களில் தலித் மக்கள், தங்கள் சமூகத்தின் வெற்றி முகமாக ரஞ்சித்தை கொண்டாடினார்கள்.

ஆயிரம் ஆண்டுகாலமாக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்த ஒருவர் வெற்றியாளராக நிற்கும்போது அவரை, அவர் சார்ந்த சமூகம் கொண்டாட நினைப்பது இயல்பான ஒன்றே. தங்களை ஒடுக்க நினைக்கும் போதெல்லாம், தங்களுக்குக் கெதிரான வன்முறைகளைக்  கட்டவிழ்க்கும் போதெல்லாம் சாதிய சினிமாப் பாடல்களை ஒலிக்கவிடும் ஆதிக்க சாதியினரின் செயல்கள், தங்களுக்காகவும் தங்களை பிரதிநிதிப்படுத்தவும் ஒருவர் வந்திருக்கிறார் என உவகை கொள்வது இயல்பாக நடக்கக் கூடிய ஒன்றுதான். நமக்காக ஒருவர்,  என்கிற நினைப்புக்கும் நாம்தான் எல்லாம் என்கிற நினைப்புக்கு பாரதூர வித்தியாசம் இருக்கிறது. ஒடுக்கும் சாதியின் பெருமையை பதிவு செய்யும் சினிமாவுக்கும் ஒடுக்கப்படும் சாதியின் வாழ்வியலை பேசும் சினிமாவுக்குமான வித்தியாசமாக அதைச் சொல்லலாம்.

ஆனால், இங்கே நடப்பது என்ன? தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகர், அவருக்காக திரையுலகமே ஏங்கிக் காத்துக்கிடக்கும், நடிகர் ரஜின்காந்தை வைத்து ‘தலித்’ இயக்குநர் பா. ரஞ்சித் படம் இயக்குகிறார். முந்தைய படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக வாழ்வியலையும் அரசியலையும் காட்சிப் படுத்திய ரஞ்சித், இந்தப் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லா மட்டங்களிலும் இருக்கத்தான் செய்தது. ட்ரெய்லர் வந்தது, ‘கபாலின்னா முறுக்கு மீசை, மச்சத்தை வெச்சிக்கிட்டு, கூப்ட உடனே சொல்லுங்க எஜமான்னு வந்து நிப்பேன்னு நினைச்சியா? கபாலிடா’ என்ற வசனங்கள் அனலைக் கிளப்பின.  சமூக ஊடகங்களில் அறிவுஜீவிகள் கபாலியின் குறியீட்டைப் பற்றி பேசி சிலாகித்தார்கள். இதுஒரு கொண்டாட்ட மனநிலைதான். அதுவே முகநூலில் இயங்கும் சாதிய குழுக்களை கிளப்பிவிட்டிருக்கலாம்.

கபாலி பாடல்கள் வெளியானபோது ஒரு பாடலில் ஒலித்த ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என்று வருவதை வைத்து மிகப் பெரிய சர்ச்சை முகநூலில் எழுந்தது. இந்த வரியை வைத்து பா. ரஞ்சித்தின் சாதியுடன் பிணைத்து வன்மமாக எழுதினார்கள். ‘பற’ என ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புது பொருள் தந்தார்கள். அவர் சார்ந்த சாதி மக்களின் தொழிலுடன் தொடர்பு படுத்தி இவரும் அந்த வேலைகளுக்குத்தான் லாயக்கு என்று எழுதினார்கள். வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அத்தனை தகுதியும் இந்தப் பதிவுகளை எழுதியவர்கள் கொண்டிருந்தார்கள். சில நடுநிலைமைவாதிகள் ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என இவர்களும் வன்முறைப் பாதையை கையில் எடுப்பதா என்றார்கள். ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெப்போம்’ என அடிமைத்தனத்தை பெருமிதத்துடன் சொன்ன பாடல்களையெல்லாம் நீங்கள் ரசிக்கவில்லையா? ஆண்டைகளின் கதை முடிப்பான் என்ற வரிகள் ஏன் உங்களை கதி கலங்க வைக்கின்றன என்று முற்போக்குவாதிகள் சிலர் பா. ரஞ்சித்தின் தரப்பில் பேசினார்கள்.

இப்படியாக விவாதங்கள் கனன்று கொண்டிருக்கும் வேளையில், நமக்கு ஒரு அடிப்படையான கேள்வி எழுகிறது? நாம் எப்போது கலைஞர்களிடம் சாதி பார்க்க ஆரம்பித்தோம்? நம்முடைய பொழுதுகளை இனிமையாக்கும், நம் துயரங்களை தங்கள் திறமையால் சில மணிநேரங்கள் மறக்க வைக்கும் சினிமா கலைஞர்களுக்கு சாதி சாயம் பூசுவது சரியானதுதானா? உங்கள் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் உங்களுக்கு எதிரான சமூகத்தின் பெருமை பேசினார்/ பேசுகிறார் என்பதற்காக, அவரை ஒதுக்கினீர்களா/ஒதுக்குவீர்களா? அப்படித்தான் பா. ரஞ்சித்தையும் ஒரு கலைஞனாகப் பாருங்கள், அவருடைய சாதியைப் பார்க்காதீர்கள்!

ஜூன் மாதம் இதழ் ஒன்றில் எழுதியது.