வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா? பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி!

பரமார்த்த குரு கதை:முன்னோடி முயற்சியாகுமா? என்ற தலைப்பில் எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய கட்டுரையை அவருடைய வலைத்தளத்தில் படித்தேன். பெருமாள்முருகன் எழுதிய கட்டுரையை ஒட்டி சில விளக்கங்களையும் சில வினாக்களையும் முன்வைக்கிறேன். இந்தக் கட்டுரையின் ஊடாக வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் தமிழின் முன்னோடி முயற்சியில்லை என்று பெருமாள்முருகன் நிறுவ முயல்வது தெரிகிறது.

”வரலாற்றில் இவ்விதம் வைக்கப்படும் அளவுக்கான நூல்தானா அது?அப்படியானால் அது எங்கே கிடைக்கிறது? நூலகங்களில் பார்க்க முடியுமா?நூலில் மொத்தம் எத்தனை கதைகள் உள்ளன? பரமார்த்த குரு கதை என்னும் பெயரில் பாட நூல்களில் காணப்படும் கதைகள் வீரமா முனிவர் எழுதியவையா? நூல்களாக வெளியிடப்பட்டு இன்று புத்தகச் சந்தையில் கிடைப்பவை நம்பகமானவையா? இத்தகைய ஐயங்களுக்குப் பதில் சொல்வது என்பது வருத்தப்படுவதாகவே அமையும்.

  மூன்று நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட அந்நூலைப் பற்றி விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. இது தொடர்ந்து அச்சில் இல்லாமைக்கான காரணம் பற்றியும் ஆராய வேண்டும். சிறுவர் கதை நூலாக அதன் தளம் சுருங்கிவிட்ட வரலாறும் பேசப்பட வேண்டும். பரமார்த்த குரு கதை பற்றிய அடிப்படைத் தகவல்கள்கூடப் போதுமான அளவு இல்லை. இக்கதை தழுவல் என்றும் இலத்தீன் – தமிழ் அகராதியின் பின்னிணைப்பாக அவரால் வெளியிடப்பட்டது என்றும் 1728ஆம் ஆண்டு புதுச்சேரியில் அச்சிடப்பட்டது என்றும் கிடைக்கும் தகவல்கள் போதுமானவையாக இல்லை.” என்கிறார் பெருமாள்முருகன் அந்தக்கட்டுரையில்.
தமிழ் இலக்கியம் பயின்றவரான பெருமாள்முருகன், பரமார்த்த குரு கதைகளை முழுமையாக படிக்காமலேயே, இதுதான் பரமார்த்த குரு கதைகள் என்பதில்கூட அவருக்கு நிறைய சந்தேகம் இருக்கும் நிலையில் ஒரு கருத்தை நிறுவ முயல்வது எவ்வகையான ஆய்வுத்தன்மை என்கிற கேள்வி எழுகிறது.
paramartha guru kathaigal
1800களில் வெளியான பரமார்த்த குரு கதைகள் என்ற நூல் தமிழ் மரபு அறக்கட்டளையால் பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய பெஞ்சமின் பபிங்டன் என்பவர் முன்னுரையுடன் இதை பதிப்பித்திருக்கிறார். பெஞ்சமின் குறுகிய காலமே அன்றைய மெட்ராஸ் ராஜதானியில் பணியாற்றியிருக்கிறார். பிறகு, இங்கிலாந்து சென்று மருத்துவம் பயின்றிருக்கிறார். இவர் இங்கிருந்த 1812லிருந்து 1830வரையான காலகட்டத்திலேயே இந்த நூல் வெளியாகியிருக்க வேண்டும் என்று அனுமானிக்கிறேன். இவர் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையை முக்கியமான ஆவணம் என்பேன். இதில் வீரமாமுனிவர் குறித்தும் பரமார்த்த குரு கதைகள் குறித்தும் இந்த கதைகள் எழுதப்பட்ட தமிழ்மொழி குறித்தும் எழுதியிருக்கிறார். இந்த நூலின் முகப்பில் இருக்கும் தமிழ் மொழியில் ஒரு கதை என்கிற வரிகள், இந்தக் கதைகள் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதல்ல என்கிற கருத்துக்கு வலுசேர்க்கின்றன. இந்த நூலில் மொத்தம் எட்டுக் கதைகள் மட்டுமே உள்ளன. வீரமாமுனிவர் இவற்றை மட்டும் தான் எழுதினாரா, இன்னும் சிலவற்றையும் எழுதியிருக்கிறாரா என்பதில் மேற்கொண்டு ஆய்வுகள் தேவை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது, பின்னாளில் வந்த கதைசொல்லிகள் வீரமாமுனிவரின் அடியொற்றி பரமார்த்த குரு கதைகளை விரிவாக்கியிருக்கிறார்கள். வீரமாமுனிவரின் மொத்த கதைகளும் கிடைக்கும்பட்சத்தில் இந்த மாதிரிகளை இனம்கண்டுவிடலாம்.
1720களில் எழுதப்பட்ட பரமார்த்த குரு கதைகள், கிட்டத்தட்ட 1820வரைக்கும்கூட பேசப்பட்ட படைப்பாக இருந்திருக்கிறது என்பதை பெஞ்சமினின் முன்னுரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். கா.சிவத்தம்பியும் இரா.தண்டாயுதமும் சொன்னதுபோல இது தமிழ் படைப்பிலக்கியத்துக்கு அடிக்கல் இட்ட படைப்பாக இது இருப்பதற்கு சாத்தியப்பாடுகள் அதிகமாகவே உள்ளன. ஆகவே  பெருமாள்முருகனின் கருத்தை பரிசீலிக்க வேண்டியுள்ளது.

தமிழகத்தில் 1500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள்

‘‘ஓவியங்கள்னு சொன்னாலே அது மேற்கத்திய பாணி ஓவியங்கள்தான் ஆயிடுச்சு. பல ஆயிரம் காலத்து பாரம்பர்யத்தை மறந்துட்டு அதைத்தான் நாமும் எந்த கேள்வியும் கேக்காம ஏத்துக்கிட்டிருக்கோம். இனி வரப்போற தலைமுறையாவது நம்மோட கலை பண்பாட்டை தெரிஞ்சிக்கணும்தான் நாங்க காடுகளையும் மலைகளையும் தேடி பயணப்பட்டுக்கொண்டிருக்கோம்’’ என்கிறார் பழங்கால பாறை ஓவிய கண்டுபிடிப்பாளரான காந்திராஜன்.

test 2
சென்னை எழும்பூர் அரசு கவின் கலை கல்லூரியில் பகுதி நேரமாக ஓவியக்கலையைச் சொல்லித்தரும் காந்திராஜனுக்கு பழங்கால ஓவிய மரபுகளைத் தேடி போவதுதான் முழுநேர வேலை. தன்னைப்போலவே ஆர்வமுள்ள முன்னாள், இன்னாள் கவின் கலை மாணவர்களுடன் சேர்ந்து மரமான கலைகளைத் தேடி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர் அப்படியொரு பயணத்தில் பொள்ளாச்சி ஆழியாறு அருகில் 1500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். வீடியோ இணைப்பு இங்கே

ஓவியங்களை பிரதியெடுக்கிறார் காந்திராஜன்

ஓவியங்களை பிரதியெடுக்கிறார் காந்திராஜன்

‘‘பழங்குடி இன குழந்தைகளுக்கு அடிப்படையான சில ஓவிய பயிற்சிகள் கொடுக்கிறதுக்காக நாங்க ஆழியாறு பக்கத்துல இருக்கிற சின்ன வாய்க்காமேடுங்கிற இடத்துக்குப் போயிருந்தோம். பயிற்சி வகுப்புகளுக்கு நடுவே பழங்கால ஓவிய மாதிரிகள் சிலதை காட்டி, இதுமாதிரியான ஓவியங்களை பார்த்திருக்கீங்களா?ன்னு கேட்டோம். அதுல ஒரு பொண்ணு அவங்க ஊர் காட்டுல ஏதோ ஒரு இடத்துல யானை மாதிரியான ஒரு மிருகத்தை வரைஞ்சிருக்கிறதை பார்த்ததா சொன்னாங்க. அப்புறம் அந்தப் பொண்ணோட ஊரான மாவடைப்புக்கு போய் விசாரிச்சி இந்த இடத்தை கண்டுபிடிச்சோம்.

ரொம்பவும் அடர்ந்த காட்டுப் பகுதியில இருக்கிற குன்று அது. அந்த குன்றை கொப்பத்து மலைன்னு சொல்றாங்க. சாதாரணமா கைக்கு எட்டின தூரம் மட்டும் வரையாம அந்த காலத்திலேயே சிரமப்பட்டு ஏணிமாதிரியான பொருளை பயன்படுத்தி வரைஞ்சிருக்காங்க. பொதுவா பழங்காலத்து ஓவியங்கள்ல வரையப்பட்ட வேட்டையாடற காட்சிகளைத்தான் இவங்களும் வரைஞ்சிருக்காங்க.

DSCN5337

ஒரு ஓவியத்துல மேய்ஞ்சுகிட்டிருக்கிற மாடுகளை புலி ஒண்ணு வேட்டையாட பார்த்துக்கிட்டிருக்கு, அதுக்கு கீழே ஒரு வட்டம், அதுக்குள்ள சில மனிதர்களையும் வட்டத்துக்கு வெளியே சில மனிதர்களையும் வரைஞ்சிருக்காங்க. தங்களோட சேர்ந்தவங்கன்னு காட்டறதுக்காக மனிதர்களை வட்டம் போட்டு காட்டியிருக்காங்க. இப்படி ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களை கவனிச்சு வரைந்தவர்கள் நிச்சயம் திறமைசாலிகளாகத்தான் இருப்பார்கள்.
ஆஸ்திரேலியாவுல இருக்கிற பழங்குடிகள் பாறைகள்ல வரைஞ்சிக்கிட்டிருந்த ஓவியங்களை துணிகள்ல வரைய ஆரம்பிச்சு தங்களோட பாரம்பரியத்தை காப்பாத்திட்டாங்க. ஆனா, நம்ம நாட்டுல அப்படிப்பட்ட மாற்றங்கள் ஏன் வரலைன்னு அக்கறை உள்ளவங்க யோசிக்கணும்!’’ என்கிறார் காந்திராஜன். இவர்கள் கண்டுபிடித்த சில இடங்களை தமிழக தொல்லியல் துறை பாதுகாக்க முனைந்துள்ளது.