போராட்ட களமாகும் பட்டமளிப்பு விழா மேடைகள்!

“நாங்கள் ஆவணங்களைக் காட்டமாட்டோம். இன்குலாப் ஜிந்தாபாத்!” ஜாதவ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை திருத்த சட்டத்தின் நகலை கிழித்தெழிந்த மாணவி டெப்ஸ்மிதா சவுத்ரி மேடையில் முழங்கிய முழக்கம் இது. இன்று நாடு முழுவதும் மாணவர்கள் முன்னெடுத்திருக்கின்றபோராட்டத்தின் கனல், பட்டமளிப்பு விழா மேடைகளில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. “எனது எதிர்ப்பு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல. மோடி அரசாங்கத்தின் பாரபட்சமான, மாணவர் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும்தான்” எனவும் அவர் அறைகூவல் விடுத்தார்.

கடந்த டிசம்பர் 15 அன்று குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் அமைதியாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை போர்க்களமாக மாற்றியது டெல்லி போலீசு. பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது; வகுப்பறை கண்ணாடி கதவுகள் – ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன; நூலகம் இரத்தத் துளிகளால் நிரம்பியது.

நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் அடங்கும் முன் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் போராடிய மாணவர்கள் மீது அதைக் காட்டிலும் கடுமையான வன்முறை ஏவப்பட்டது. மாணவர்கள் சிலர் முடமாகும் அளவுக்கு கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தங்களுடைய பட்டமளிப்பு விழா மேடையை எதிர்ப்புணர்வை காட்டும் மேடையாக மாற்றினர். தங்க பதக்கம் வென்ற அருண்குமார், கார்த்திகா, மேகலா ஆகியோர் தங்களுடைய எதிர்ப்புணர்வை காட்டும் வகையில் பட்ட விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தனர். அவர்கள் வெளிப்படுத்திய தார்மீக ரீதியிலான கோபம், அரசியல் செயல்பாட்டாளர்களிடம்கூட காணக்கிடைக்காதது.

“மக்களின் குரல்களைக் கருத்தில் கொள்ளாத அரசாங்கத்தால் என்ன பயன்?” என்கிற கார்த்திகா, எம்.எஸ்ஸி. எலக்ட்ரானிக் மீடியா படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர்.

“குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெறுமாறு நான் கோருகிறேன். என்னைப் போன்ற மாணவர்கள் கடினமாக உழைத்து பெற்ற மதிப்புகளை இதற்காக ஏன் விட்டுத்தருகிறோம் என்பதை அரசாங்கம் உணர வேண்டும். ஒரு தனிநபராக, இந்த வழியில் எதிர்ப்பு தெரிவிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. மற்றவர்களை தங்கள் எதிர்ப்பை எந்த வகையிலாவது பதிவு செய்ய நான் அழைக்கிறேன்” என்கிறார் கார்த்திகா.

“அரசாங்கம் சொல்வது அனைத்தையும் கேள்வி கேட்காமல் எப்படி பின்பற்ற முடியும்? இது ஒன்றும் பாசிச நாடு அல்ல, நாம் ஜனநாயக நாடு என்றுதான் அரசியலமைப்பு சொல்கிறது. எங்களுக்கு எது கொடுக்கப்பட்டாலும் அதை அப்படியே தலை வணங்கிய ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வழியிலும் நாம் போராட வேண்டும்” என கார்த்திகாவிடமிருந்து வார்த்தைகள் அத்தனை அரசியல் தெளிவோடு வெளிப்படுகின்றன.

பதக்கத்தை தூக்கி எறிந்த மற்றொரு ஆய்வுப் பட்ட மாணவரான அருண்குமார், “போலீசு தாக்குதலுக்கு ஆளான பல்கலை மாணவர்களுக்காக மட்டுமல்ல, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பு வீதிகளில் போராடுகிறவர்களுக்குமாகவும்தான் எங்களுடைய ஆதரவை தெரிவிக்கிறோம்.” என்கிறார்.

“நான் குடியரசு தலைவரிடமிருந்து பட்டத்தை வாங்க விரும்பவில்லை. அவர் நினைத்திருந்தால் அந்த மசோதாவை மீண்டும் பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்க முடியும். ஆனால், அவர் கையெழுத்திட்டு அதை அமலாக்கினார்” என்கிறார் அவர்.

இன்னொரு மாணவி மேகலா சொன்ன காரணத்தை படியுங்கள்: “மத மற்றும் சமூக அடிப்படையிலான பாகுபாட்டை எந்த இந்திய குடிமகனும் பொருத்துக்கொள்ள முடியாது. இன்று முசுலீம்கள், நாளை கிறித்துவர்களாக இருக்கலாம். அதன்பின் தலித்துகள், பிறகு சிறுபான்மையினர். இது மக்களை பிரிக்கும். அதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்கிறார் அவர்.

“இதனால்தான் நாங்கள் படித்தவர்கள். நாங்கள் படிக்கிறோம், அதனால் காரணம் கண்டுபிடித்து கேள்வி எழுப்புகிறோம். நமக்கு தீங்கு விளைக்கும் எந்தவொரு விசயத்துக்கும் எதிராக குரல் எழுப்பும்போது, அரசு நம்மை ஏன் கொடூரமாக நடத்துகிறது?” என அரசை நோக்கி கேள்வி எழுப்புகிறார் அவர்.

இவர்களின் வழியில் புதுச்சேரி பல்கலை மாணவியான ரபீஹா அப்துரஹீம் தனது பதக்கத்தை விழா மேடையிலே வாங்க மறுத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பல மாதங்கள் கடுமையாக உழைத்து பெற்ற பதக்கங்களை, பாராட்டுக்களை எதிர்காலத்தின் நன்மைக்காக விட்டுக்கொடுத்த இந்த மாணவர்களின் அரசியல் தெளிவு, களத்தில் உள்ள வாக்கு அரசியல் கட்சிகளிடம் இல்லாத ஒன்று.

உண்மையில் எதிர்க்கட்சிகள் செய்வதறியாது, போராட்டத்தின் திசைவழி அறியாது தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், டெல்லியில் மையம் கொண்டு இந்தியா முழுவதும் பரவிய மாணவர்கள் எதிர்க்குரல் ஒட்டுமொத்த இந்திய சமூகத்துக்கும் வழி காட்டுகிறது.

இதை மூத்த அரசியல்வாதியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். அவருடைய வார்த்தைகளில் சொல்வதென்றால்,

“குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட 15 நாட்களில் மாபெரும் புரட்சி, நாடு முழுவதும் நடந்திருக்கிறது. அதற்கு அரசியல் கட்சிகள் காரணமல்ல. இந்தப் போராட்டத்துக்கு மாணவர்களும், இளைஞர்களும் சொந்தக்காரர்கள். நாடு முழுவதும் அவர்களாகவே முன்வந்து போராடுகிறார்கள். அரசியல் சாசனத்தின் அடிப்படை நெறிமுறைகளை காப்பாற்ற திரண்டிருக்கிறார்கள். இதில் அரசியல் கட்சிகள் தோல்வியடைந்து விட்டன.” .

பாஜக தலைமையிலான ஆட்சி மத்தியில் அமர்ந்தவுடன், முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறைகளைக் கண்டித்து சாகித்ய அகாதமி விருதாளர்கள் தங்களுடைய விருதுகளை திரும்ப அனுப்பி தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இது நாடு முழுவதும் பரவியது; உலகத்தின் கவனத்தைப் பெற்றது. ஒரு கட்டத்தில் வேறுவழியில்லாமல் பிரதமர் நரேந்திர மோடி, அடிப்பதென்றால் தன்னை அடிக்கும்படி பேசினார். மதத்தை முன்னிறுத்திய கும்பல் வன்முறையாளர்கள் சற்றே அடங்கினர்.

மாணவர்கள் கையில் எடுத்திருக்கும் போராட்டங்களும் அவர்கள் பட்டமளிப்பு விழா மேடைகளை எதிர்ப்புணர்வைக் காட்டும் மேடைகளாக மாற்றியிருப்பதும் விருதுகள் திரும்ப அளிக்கும் போராட்டங்களைக் காட்டிலும் வீரியமானது. அவசரநிலை காலக்கட்டத்துக்குப் பின், மாணவர் சமூகம் வேறு எந்த பிரச்சினைக்காகவும் இப்படியான போர்க்கோலத்தை பூணவில்லை என்கிறார் சமூக – அரசியல் செயல்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட் .

1974-ஆம் ஆண்டு பீகாரில் மாணவர்களால் தொடங்கப்பட்ட ‘பீகார் இயக்கம்’, பின்னாளில் காந்திய சோசலிசவாதி ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் ‘சம்பூரண கிர்ந்தி (முழுமையான புரட்சி இயக்கம்) அல்லது ஜெ.பி. இயக்கமாக’ பரிணமித்தது. அதுவே, இந்திரா காந்தியின் அவசரநிலை அரசு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தது.

பீகார் மாணவர் அமைப்பில் இருந்தவர்களே லாலு பிரசாத் யாதவ், சுஷில் குமார் ஷிண்டே, ராம்விலாஸ் பஸ்வான் போன்ற இந்நாளைய தலைவர்கள். ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த சீதாராம் யெட்சூரி அந்நாளில் எமர்ஜென்ஸியை எதிர்த்து போராடியவர்கள். இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி குஜராத்தின் நவநிர்மாண் இயக்கத்தில் மாணவராக இருந்த காலத்தில் பங்கெடுத்தவர். எமர்ஜென்ஸியை எதிர்த்த இயக்கங்களில் மாணவர்களின் நவநிர்மாண் இயக்கமும் முதன்மையான பங்காற்றியது.

வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது. ஆட்சி அதிகாரத்துக்கு வரும் எந்தவொரு கட்சியுமே போராட்டங்களை ஒடுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன. ஆனால் இப்போதையே நிலைமை அவசர காலக்கட்டத்தையும் விட மோசமானது.

அவசர காலக்கட்டத்தின் அரசாங்கத்தை எதிர்த்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டார்கள்; ஊடகங்கள் முடக்கப்பட்டன. இப்போது அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிராக நிற்கிறது. உலகின் மிகச்சிறந்த அரசியலமைப்பான இந்திய அரசியலமைப்பின் மிக முக்கியமான முழக்கமான ‘மதச்சார்பின்மை’ இன்று கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இதுவரை கட்டிக்காக்கப்பட்ட இந்தியா என்கிற கருத்தாக்கத்தை மாற்றியமைக்கு முயற்சியில் இருக்கிறது ஆளும் அரசாங்கம்.

சென்ற தலைமுறை இதைக் கடந்து செல்ல முயற்சிக்கிறது அல்லது கண்டுகொள்ள மறுக்கிறது. இந்தத் தலைமுறை தனது உரிமைகளுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காக இந்தியா என்கிற மதச்சார்பற்ற நாட்டை காப்பாற்றத் துடிக்கிறது; வீதியில் இறங்கிப் போராடுகிறது. தனக்கு வாய்க்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தனது நாட்டின் ஆன்மாவைக் காப்பாற்ற நினைக்கிறது. பாராட்டு மேடைகளை போராட்ட மேடைகளாக மாற்றுகிறது. அடக்குமுறைகளைக் கடந்து வீரியத்துடன் நிற்கும் மாணவர் பட்டாளம், பொது சமூகத்துக்கு போராட்ட அரசியலைக் கற்றுத்தருகிறது.

அரசு மூடிய அத்தனை கதவுகளையும் தனது போராட்ட வலிமையால் இந்த மாணவர்கள் திறக்க வைப்பார்கள் என்கிற நம்பிக்கையும் பிறக்கிறது.

– மு.வி. நந்தினி.

முசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா?

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் பாஜக தலைவருமான சிவராஜ் சிங் சவுகான், கடந்த திங்கள்கிழமை நடந்துவரும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து கருத்தொன்றை தெரிவித்துள்ளார்.

மத ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இசுலாமியர் அல்லாத மக்களுக்கு மோடி கடவுளைப் போன்றவர் என்றும் 2014, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முசுலீம் நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வந்த இந்து அல்லாதவர்களுக்கும் குடியுரிமை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி சொல்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், முசுலீம் அல்லாத அகதிகளுக்கு மோடி வாழ்க்கையை வழங்கியிருப்பதாகவும் நெகிழ்ந்தார். “நரகத்தைப் போன்ற வாழ்க்கையை வாழ்ந்துவரும் மக்களை காப்பாற்றும் கடவுளாக நரேந்திர மோடி மாறியிருக்கிறார். கடவுள் அவர்களுக்கு வாழ்க்கையை கொடுத்தார். அவர்களுடைய அன்னையர் பிறப்பு கொடுத்தனர். ஆனால், நரேந்திர மோடி அவர்களுக்கு புதிய வாழ்க்கையை கொடுத்திருக்கிறார்” எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பவர்களும் பாஜகவினரும் திரும்பத் திரும்ப பிரதமர் மோடியை ‘ஆபத்பாந்தவராக’ ‘கடவுளுக்கு இணையானவராக’ முன்னிறுத்தி வருகின்றனர். பொதுப்படையாக நல்லதுதானே செய்கிறார் என்கிற தொனியும் மக்களிடைய இவர்கள் கொண்டு சேர்க்கிறார்கள்.

கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் என்றே அனைத்து மதங்களும் சொல்கின்றன. ஆனால், இவர்களுடைய கூற்றுகளில் உள்ள இரு வேறு விசயங்கள் மூலமாக, இவர்களின் ஒருதலைபட்சமான ‘கடவுளை’ இனம் காணலாம்.

முதலாவதாக, முசுலீம் நாடுகளில் மற்ற மதத்தினர் மத ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள் என்ற கூற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வோம். உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும்போது, 1947-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 23% சிறுபான்மையினர் இருந்ததாகவும், அவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டோ அல்லது துரத்தப்பட்டோ அல்லது கொல்லப்பட்டோ தற்போது 3.7 சதவீதமாக குறைந்திருப்பதாகவும் கூறினார்.

அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூறிய இந்த ‘புள்ளிவிவரம்’ பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைக்குள் உலகத்தை அடக்கி விடுகிற இந்தக் காலத்தில் ஒரு கணம்கூட பொய் நிலைத்திருக்காது. பாகிஸ்தான் அரசின் அலுவலர் ரீதியிலான விவரங்களில் 1947-ஆம் ஆண்டு 2.83 சதவீத சிறுபான்மையினர் அங்கு வசித்துள்ளனர். 1972-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது 3.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1981-ஆம் ஆண்டு 3.3 சதவீதமாகவும் 1998-ல் 3.7 சதவீதமாகவும் உயர்ந்திருக்கிறது.

இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் 2017-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் தோராயமாக 4 சதவீத சிறுபான்மையினர் பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள், பாகிஸ்தானின் தென்பகுதியான சிந்து மாகாணத்தில் இவர்கள் வசிக்கிறார்கள்.

மோடி – ஷா திரும்பத் திரும்ப வலியுறுத்திக்கொண்டிருக்கும் முசுலீம் நாடுகளில் ‘பாதுகாப்பில்லாமல் வாழும்’ சிறுபான்மையினருக்கான இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை பாகிஸ்தானில் வாழும் இந்துக்களும் சீக்கியர்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். தங்களுக்கு இப்படியொரு குடியுரிமை தேவையில்லை என அவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அதோடு, முன்னெப்போதையும்விட, பாகிஸ்தான் அரசு சிறுபான்மையினரின் நலனின் அக்கறை செலுத்திவருவதும் செய்தியாக ஊடகங்களில் வெளியாகிக்கொண்டுதான் உள்ளது.

அடுத்து, வங்கதேசத்துக்கு வருவோம். அங்கு சிறுபான்மையினரான இந்துக்கள் 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப் படி 10. 7 சதவீதமாக உள்ளனர். இந்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துதான் காணப்படுகிறது.

வங்கதேசத்தின் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசில் இரண்டு இந்து அமைச்சர்கள் பதவியில் இருக்கிறார்கள். ஒருவர் உணவுத்துறை அமைச்சர் சதன் சந்திர மசூம்தார், இன்னொருவருவர் ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்வபன் பட்டார்சார்ஜி. ஆளும் அவாமி லீக் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களும் உள்ளனர். இவர்களைத் தவிர ஏழு இந்து எம்.பிக்களும் உள்ளனர்.

அரசியல் தவிர, நீதித்துறையிலும் அரசு நிர்வாகத்தில் பல இந்துக்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். கலை – பண்பாடு சார்ந்த துறைகளிலும் பல இந்துக்கள் கோலோச்சி வருகின்றனர்.

இதுநாள்வரை இந்து தேசியவாதிகள் அண்டை முசுலீம் நாடுகள் குறித்து பரப்பி வந்தவை மிகையானவை என கள நிலவரங்கள் சொல்கின்றன. வங்கதேசத்தின் அடிப்படைவாதிகள் அவ்வவ்போது இந்துக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கைகொண்டபோது, வங்க தேச மக்கள் அதை முறியடித்திருக்கிறார்கள்.

அடிப்படையில் வங்கதேசம் ஒரு மக்கள் குடியரசு நாடு. அங்கே மத அடிப்படைவாதம் இருந்தாலும் சிறுபான்மையினருக்கான அதிகார பகிர்வில் தற்போதுள்ள மோடி தலைமையிலான அரசைவிட அது முற்போக்கானது. பாஜக ஒரு முசுலீம் வேட்பாளரைக்கூட நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்கவில்லை. முசுலீம்கள் பெருவாரியாக உள்ள உத்தர பிரதேசத்தில் ஒரு முசுலீம் எம்.எல்.ஏ., எம்.பி.கூட பாஜகவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை. முசுலீம்களை முற்றிலுமாக ஒதுக்குகிறது இந்த அரசு என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

எனவே, அமித் ஷா முசுலீம் நாடுகளில் இந்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதும் சிவராஜ் சிங் சவுகான் மோடி முசுலீம் நாடுகளில் உள்ள சிறுபான்மையினரின் கடவுள் என்பதும் திரிக்கப்பட்டவை; உண்மைக்கு புறம்பானவை.

இரண்டாவதாக, குடியுரிமை பெறப்போகும் முசுலீம் அல்லாத இந்துக்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள், சமணர்களுக்கு என்ன திட்டங்களை இந்திய அரசு வைத்திருக்கிறது என்பதும் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. அண்மையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, குடியுரிமை பெறுகிறவர்கள் எங்கே குடியமர்த்தப்படுவார்கள் எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கும் ஆளும் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமும் தரப்படவில்லை.

அசாமில் ‘சட்டவிரோத குடியேறிகளை’ வெளியேற்றுவதற்காக செயல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்காக அரசு ரூ. 1600 கோடி செலவிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் இந்தப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். குடிமக்கள் அல்லாதவர்களை அடைத்து வைக்கும் ‘தடுப்பு முகாம்’களுக்கு கணிசமான தொகை செலவிடப்படுகிறது. அவர்களை கண்காணித்தல், அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தல், அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புதல் என கூடுதல் செலவினங்களும் உள்ளன.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் அதன் பிறகு நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தவிருப்பதற்கும் இன்னும் ஏராளமான நிதி ஒதுக்கப்பட வேண்டியிருக்கும். எதிர்ப்புகள் தீவிரமாக கிளம்பியுள்ள நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு இப்போது நடைமுறைப்படுத்தப்படாது என அரசு அறிவித்து, குறுக்கு வழியான தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்துக்கு கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது.

இந்த விவகாரங்களால் நாடு பற்றி எரிந்துகொண்டிருக்கும் அதே வேளையில் சர்வதேச கண்காணிப்பு நிதியம், இந்தியாவின் பொருளாதார மந்தநிலை உடனடியாக மேலே எழ முடியாத நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறது.

இத்தகையதொரு நிலையில், எந்தவொரு முடிவையும் உடனடியாக எட்டாத நாட்டு மக்களுக்கு எந்தவகையில் நன்மை தராத ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பின் வெளிப்பாடாக மத்திய அரசு தனது திட்டங்களை அமலாக்கிக் கொண்டிருக்கிறது.

பர்மாவில் பெரும்பான்மை பவுத்த மத அரசால் மிகக் கடுமையாக இன அழிப்புக்கு ஆளான (சர்வதேச சமூகம் இதை இன அழிப்பு என்றே சொல்கிறது) ரோகிங்கியா மூசுலீம்களுக்கு ‘சிறுபான்மையினரின் கடவுளான’ மோடி எந்தவித கரிசனத்தையும் காட்டவில்லை. இனப்படுகொலையிலிருந்து தப்பி வந்த ரோகிங்கியாக்கள், சர்வதேச சட்டங்கள் அனுமதித்துள்ள அடிப்படைவசதிகள்கூட இல்லாமல் இந்திய அகதி முகாம்களில் தங்கியுள்ளனர். ரொகிங்கியாக்கள் பழங்குடியின சமூகம் என்பதால், சர்வதேச முசுலீம் சமூகமும் அவர்களை கண்டுகொள்ளவில்லை என்பதும் துயரமானது.

அவ்வளவுதூரம் போவானேன்… 30 ஆண்டு காலம் பவுத்த பெரும்பான்மைவாதத்தால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு வந்த தமிழ் ‘இந்துக்களை’ ஏன் ‘கடவுள்’ மோடி கரிசனம் காட்டவில்லை. தமிழர் இந்துக்கள் இல்லையா? அல்லது தமிழர்கள் மீது கடவுளுக்கு கருணையில்லையா? சிவராஜ் சிங் சவுகான் புகழ்ந்ததைப் போல, மோடி இவர்களுக்கு மட்டும் ஏன் புதிய வாழ்க்கையை தர மறுக்கிறார்?

முசுலீம் நாடுகளில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகிறார்கள் எனக் கூறி, இங்கிருக்கும் முசுலீம்களை அச்சுறுத்தி, அகற்றும் இந்து தேசியவாதத்தின் திட்டத்தை அமலாக்கிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. எத்தனைதான் பூசி மெழுகினாலும் இவர்களுடைய இனவெறுப்பு திட்டத்தின் உண்மை முகத்தை மூடி மறைக்க முடியாது.

ஆறாண்டுகாலம் இந்து தேசியவாத அரசு விதைத்திருக்கும் முசுலீம்கள் மீதான வெறுப்பின் விதை, இப்போது சட்டமாக்கல் முறைகளால் முளைவிட்டுக்கொண்டிருக்கிறது. இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், மதச்சார்பற்ற நாடு என்கிற அடித்தளத்தில் கட்டப்பட்ட ‘இந்தியா’ காணாமல் போகும். எனவே, இந்தப் பொய்க்கடவுள் பிம்பங்களில் விழுந்துவிடாமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

நன்றி: தின செய்தி. (27-12-2019)

 

காஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்?

இந்திய சுதந்திரத்தின் போது இணைக்கப்பட்ட ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு தரப்பட்டிருந்த சிறந்த அந்தஸ்த்தை மோடி அரசாங்கம் நீக்கி நாற்பது நாட்களாகிவிட்டன. இந்திய அரசியலமைப்பு பிரிவு 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் மற்ற இந்திய மாநிலங்களுக்கு இல்லாத சிறப்பை காஷ்மீருக்கு அளித்திருந்தன. காஷ்மீர் இந்தியாவின் ஆளுகைக்குள் இருந்த தனிநாடாகவே செயல்பட்டுவந்தது. காஷ்மீர் மக்களின் விருப்பமும் இந்திய அரசின் விருப்பமும் வேறு வேறாக இருந்ததால் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்னும் அம்மாநில மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாமலேயே இருந்தது.

பிரச்சினையின் மையப்புள்ளி இந்திய அரசு, காஷ்மீர் முழுவதையும் தனதாகக் கருதியதே. ஆனால், அம்மக்களின் விருப்பம் அது இல்லை. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான பட்டேலிடம் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்துக்கொள்ளலாம் என பரிந்துரைத்தார். 1950-ஆம் ஆண்டு மவுண்ட் பேட்டனின் கூற்றை நினைவு படுத்தி கடிதம் எழுதிய பட்டேல், அவர் சொன்னது எத்தனை தீர்க்கதரிசனமானது என்பதை நிகழும் சம்பவங்கள் எடுத்துரைப்பதாக கூறினார்.

வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுவதுபோல், 370வது பிரிவை நீக்கி காஷ்மீரை இந்திய அரசு தனதாக்கிக் கொண்ட பிறகு பிரச்சினை ஓய்ந்தபாடில்லை; ஓயப்போவதும் இல்லை.

பிரிவு 370வது நீக்கப்பட்ட பின் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பிரதமர் சொல்லும் பாதுகாப்பு எப்படிப்பட்டது? கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரின் நான்கு வீடுகளுக்கு ஒரு வீரர் என்ற அளவில் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். முன்னாள் முதலமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்கள், அரசியல்வாதிகள், கிளர்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள் என பலர் வீட்டுச் சிறையிலும் விடுதிகளிலும் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்துக்கும் மேலாக ‘கல்லெறிகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பதின்பருவ, பள்ளி மாணவர்களை பாதுகாப்புப் படை கைது செய்து சிறையில் அடைக்கிறது. அதுவும் பொது அமைதி பாதுகாப்பு சட்டப்பிரிவின் கீழ் கைது செய்கிறது. விசாரணை இல்லாமலேயே இந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறவர்களை ஆறு மாதம் வரையில் சிறையில் வைத்திருக்க முடியும்.

இப்படி கைதாகும் சிறுவர்களில் பலர், தாங்கள் செய்யாத குற்றத்துக்காகவே கைதாகிறார்கள். ஸ்ரீநகரின் மத்திய சிறைச்சாலை முன்பு காத்திருக்கும் குடும்பத்தினர், தங்கள் மகன் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை அல்லா அறிவார் என கதறிக்கொண்டிருக்கிறார்கள். நள்ளிரவு ரோந்துகளின்போது கைதான பலரைப் பற்றிய தகவலைக்கூட அளிக்க மறுக்கிறது போலீசு. ‘முன்பு கல்லெறிதலில் ஈடுபட்டதற்காக முன்னெச்சரிக்கையுடன் கைது செய்யப்பட்டிருக்கும் சிறுவர்கள், வெளி மாநில சிறைகளுக்கு அனுப்பப்படுவார்கள்’ பகிரங்கமாக அறிவிக்கிறது காவல்துறை.

கைது, ஆறு மாத காலை விசாரணை இல்லாத கட்டாய சிறை ஆகியவை மட்டும்தானா? பிபிசி, வாஷிங்டன் போஸ்ட் போன்ற சர்வதே ஊடகங்கள் இந்திய படைகள் காஷ்மீரிகளை கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாக்குவதாக ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுவருகின்றன.

“அவர்கள் ஓயாமல் மூன்று மணி நேரம் என் பின்புறத்தின் தாக்கினார்கள்; மின்சார அதிர்ச்சி கொடுத்தார்கள். எங்களை கொன்றுவிடுங்கள் என கெஞ்சினோம். அப்போதும் அவர்கள் விடவில்லை. அழுக்கையும், சாக்கடை நீரையும் குடிக்க வைத்தார்கள்” என காஷ்மீரைச் சேர்ந்த பஷீர் அகமது கூறியதாக செய்தி நிறுவனமான ஏபி பதிவு செய்துள்ளது. கிளர்ச்சியாளர்களுடன் அவர்கள் சேர்ந்துவிட்டதாக சந்தேகப்பட்டு அவர்களை இப்படி சித்ரவதை செய்துள்ளது பாதுகாப்புப் படை. இதேபோன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாங்கள் சித்ரவதைக்குள்ளானதை கூறியுள்ளனர்.
.
அதுபோல, கடுமையான பாதுகாப்பையும் மீறி தங்கள் உரிமை பறிப்பை எதிர்த்து வெறும் முழக்கம் எழுப்பி போராடும் மக்கள் மீது பெல்லட் குண்டுகளால் தாக்குவதையும் பாதுகாப்புப் படை செய்துவருகிறது. இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட காரணத்துக்காக அரசியல் செயல்பாட்டாளர் ஷெஹ்லா ரசீது மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றம் சென்ற அவர் கைது நடவடிக்கைக்கு தடை வாங்கியிருக்கிறார்.

தகவல் தொடர்புகள் ஒரு மாதமாக முடக்கப்பட்டிருந்த நிலையில் ஆங்காங்கே மீண்டும் இணைக்கப்பட்ட பிறகு, முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் காஷ்மீர் குறித்து எழுதுவதற்கு தடை செய்துள்ளது அரசாங்கம்.

பிரதமர் தனது சுதந்திர தின உரையில் களிபொங்க கூறிய ‘காஷ்மீரிகளின் பாதுகாப்பு’ மேற்கண்ட நிலையிலேயே உள்ளது. பாதுகாப்பு ஆலோசகர் ஒருபடி மேலே போய், காஷ்மீரிகள் மத்திய அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாக கூறினார். காஷ்மீரிகள் முடிவை வரவேற்கிறார்கள் எனில், ஏன் இத்தனை பாதுகாப்பு? இத்தனை சித்ரவதைகள்? கைதுகள்? இந்திய அரசுக்கு ஆதரவாக இதுநாள்வரை செயல்பட்ட காஷ்மீர் அரசியல்வாதிகள் ஏன் இன்னமும் விடுவிக்கப்படவில்லை? ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவதும், சுதந்திரமாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் முடக்கப்படுவதும் ஏன்?

‘தேசபக்தி’யின் பெயரால் இந்தக் கேள்விகளுக்கான விடையை அளிக்க மறுக்கிறது அரசாங்கம். ‘நாடு பிடிக்கும் போட்டியினென’ வீழ்ந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்தைப் பற்றிய கவலை கொள்ளாமல் பொது சமூகம் ‘காஷ்மீரை பிடித்துவிட்டோம்’ என குதூகலிக்கிறது. பக்கத்துவீட்டுக்காரரின் விருப்பம் இல்லாமல் அடாவடியாக அவருடைய வீட்டை பிடிங்கிக் கொள்வது போன்றது ‘காஷ்மீரை பிடித்துவிட்டோம்’ என குதூகலிப்பது.

காஷ்மீரில் வசிக்கும் பெரும்பான்மை முசுலீம் மக்களால் தங்களுடைய பண்டிகையைக் கூட கொண்டாட முடியவில்லை. பக்ரீத்தில் தொடங்கிய அதிர்ச்சி, மிலாது நபி வரை தொடர்ந்தது. இந்திய அரசியலமைப்பு வழிபடுதலை அடிப்பை உரிமை என்கிறது. அதையும்கூட பறித்துக்கொண்டு தொழுகைக்காக கூடுவதையும் குற்றம் என்கிறது மத்திய அரசாங்கத்தின் கெடுபிடி.

இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது உறுதியளிக்கப்பட்ட அரசியலமைப்பு உரிமையை மீறி எதேச்சதிகாரமாக நடந்துகொண்டிருக்கும் மத்திய அரசாங்கள் கிட்டத்தட்ட அனைத்து உரிமைகளையும் முடக்கி வைத்துள்ளது. ‘காஷ்மீரிகளுக்கு விடுதலை’ என்ற பெயரில் காஷ்மீரை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கடுமையாக எழுதுகிறார்கள். சமீப ஆண்டுகளில் இல்லாத இத்தகைய கடுமையான முடக்கம் இன்னும் 20 -25 நாட்களுக்கு தொடரும் என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

விஜயகாந்த் படங்களில் வருவதுபோல, காஷ்மீரிகள் தீவிரவாதிகளும் அல்ல, இந்தியர்கள் அவர்களை ஒழிக்க வந்த ஆபத்பாந்தவர்களும் அல்ல. பொதுபுத்தியில் உருவாகியிருக்கும் இத்தகைய கருத்துக்கள் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். காஷ்மீரிகள் தங்கள் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களுடைய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.

இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் காஷ்மீர் விவகாரம் குறித்து இந்திய மக்கள் என்ன எதிர்வினை ஆற்றுகிறார்களோ அதைப் பொருத்துதான் அமையும் என பத்திரிகையாளர் ஜோ அதிலே கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார். அரசியலமைப்பு கொடுத்த உறுதி மீறப்படுகிறது எனில் அங்கே ஜனநாயகமும் சோதனைக்குள்ளாவதாகத்தான் பொருள். காஷ்மீரிகள் போராட்டத்தோடு வாழ்பவர்கள். அவர்கள் ஒடுக்குமுறையை 70 ஆண்டுகாலம் எதிர்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆழ்ந்த அமைதி நிலவுகிறதென்றால், அங்கே பெருவெடிப்பு காத்திருக்கிறது என்பது மற்றொரு பொருள்.

அனைத்துக்கும் மேலாக, பொது சமூகமாகிய நாம் ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படும்போது மவுனம் காத்தால், நமது அடிப்படை உரிமைகளையும் இழந்து குரலற்றவர்களாகிவிடுவோம். பெரும்பான்மைவாதத்துக்கு ஜனநாயக நெறிமுறைகள் மட்டும் வேண்டாதவையல்ல, அடிப்படை உரிமைகளை கேட்கும் குரல்களும் வேண்டாதவைதான்.

தினச்செய்தி (13-09-2019) நாளிதழில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை.

“கருத்து வேற்றுமைகளை துப்பாக்கி குண்டுகள் தீர்க்காது”

நீண்ட மவுனம் என்கிற தன்னுடைய படைப்புக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர் கர்நாடகாவைச் சேர்ந்த சசி தேஷ்பாண்டே. சாகித்ய அகாடமியின் பொதுக் குழு உறுப்பினரான இவர், பேராசிரியரும் எழுத்தாளருமான எம். எம். கல்புர்கி கொலையைக் கண்டிக்காமல் சாகித்ய அகாடமி மவுனம் காக்கிறது என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து சாகித்ய அகாடமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “2012-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு என்னை பரிந்துரைத்தபோது, நான் சிறப்பிக்கப்பட்டதாக உணர்ந்தேன். சாகித்ய அகாடமியின் பணியை நான் எப்போதும் மதித்து வந்திருக்கிறேன். இந்தியாவின் பல்வேறு மொழிகளை நிறுவனமாக ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்த பெருமை உடையது அகாடமி.

இன்று, பேராசிரியர் கல்புர்கியின் கொலையில் அகாடமி தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதைக் கண்டு நான் துவண்டுபோயிருக்கிறேன். கல்புர்கி,சாகித்ய அகாடமி விருது வென்றவர். அவர் இறப்பதற்கு சில காலம் முன்புவரைகூட அகாடமியின் பொதுக்குழுவில் இருந்தவர்.

இந்தியாவின் முதன்மை இலக்கிய அமைப்பாக இருக்கும் சாகித்ய அகாடமி, ஒரு எழுத்தாளரின் படுகொலையைக் கண்டிக்காமல் இருப்பது நல்லதல்ல. தன் அமைப்பைச் சேர்ந்தவரின் மரணத்தில் காக்கும் மவுனம், தேசம் முழுவதும் பரவிவரும் சகிப்பின்மையை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?

கருத்துவேற்றுமைகளை துப்பாக்கி குண்டுகளால் தீர்க்க முடியாது. நாகரிக சமூகம், கருத்து வேற்றுமைகளை பேசியும் விவாதித்துமே தீர்த்துக்கொள்ளும். எழுத்தாளர்கள் அறிவுஜீவிகளாக இனி கருதப்படுவதற்கு வாய்ப்பில்லை, அவர்கள் மக்களின் மனசாட்சியாக இருக்க வேண்டும். உண்மையில் எழுத்தாளர்கள் தங்களுடைய குரல்களை உயர்த்திப் பிடிக்க இதுதான் தருணம். ஆனால் இத்தகைய குரல்கள் தனியாக ஒலிப்பதைவிட குழுவாக ஒலிப்பது பலனைத் தரும். எழுத்தாளர்களின் ஒருமித்த குரல்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக சாகித்ய அகாடமி உள்ளது.

ஆனால், அதை அகாடமி செய்யத் தவறியிருக்கிறது. அவநம்பிக்கைக் காரணமாக நான் பதவியிலிருந்து விலகுகிறேன். கூட்டங்களை நடத்துவது, விருதுகளைத் தருவது மட்டும் அகாடமியின் பணியல்ல. எழுத்தாளர்களின் எழுத்து, பேச்சு சுதந்திரம் பாதிப்புக்குள்ளாகும்போது அதற்காக எழுந்துநிற்பதும் அகாடமியின் பணியே” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழில் உயிரியல் புத்தகங்கள் உண்டா?

சமீபகாலமாக சூழலியல் சார்ந்தும் புத்தகங்கள் வருகின்றன. பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றன. மொழிபெயர்ப்புகள் வருவதில்லை தவறு ஏதும் இல்லை. ஆனால் நம்முடைய சூழல் சார்ந்து, நம்முடைய வாழிடம் சார்ந்த அனுபவங்களை ஒட்டிய சூழலியல் பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே சூழலியல் எழுத்தாளர்கள் இங்கே எழுதுகிறார்கள்.  அப்படியெனில் இங்கே சூழலியல் சார்ந்து குறைவானவர்கள்தான் இயங்குகிறார்களா என்கிற கேள்வி எழலாம். ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்… சூழலியல் சார்ந்து இயங்கும் உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், ஆர்வலர்கள் போன்றோர் ஆங்கிலத்தின் ஊடாகவே எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள்.  அவர்கள் பயன்படுத்தும் ஆய்வு மாதிரிகள், கையேடு, மூலங்கள் என அனைத்தையும் ஆங்கிலத்தின் வழியாக பெறுகிறார்கள் . அந்தப் பாதையை ஒட்டியே ஆங்கிலத்தின் வழியாகவே தங்கள் பதிவுகளை செய்கிறார்கள். இறுதியில் பாடப் புத்தகங்களில் மட்டுமே மதிப்பெண்களுக்காக தாவரவியலையும் விலங்கியலையும் படிக்கிறோம். நம் வாழ்வியலை விட்டு அகன்றுவிடும் எதுவுமே இப்படி வழக்கொழிந்துதான் போகும். சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட சூழலியலின் தொடர்ச்சி எப்போது அறுபட்டது என்கிற கேள்வி இப்போது எனக்குத் தோன்றுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யும் நேரத்தில் இரண்டு சூழலியல் கட்டுரைகளை தமிழில் எழுதிவிடலாம் என்பதால் இதைக் கைவிடுவதே உசிதம்.

சமீபத்தில் ஒரு நண்பகல் வேளையில் எங்கள் வீட்டின் தொட்டிச் செடியில் வழக்கத்துக்கு மாறான சிலந்தியைக் கண்டேன்.  வெள்ளை உடலின் பழுப்பு ரேகை ஓடிய தடம் அந்தச் சிலந்தியை மிக அழகான சிலந்தியாகக் காட்டியது. அதை தொந்திரவுக்கு உள்ளாக்காமல் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு நண்பகல் வேளையில் அதே இடத்தில் அதே வகையான சிலந்தியைக் கண்டேன். அங்கே இதே வடிவத்தை ஒத்த, முழு உடலும் பழுப்பில் அமைந்த வேறொரு சிலந்தியைக் கண்டேன். அதியும் புகைப்படங்களில் பதிவு செய்து கொண்டேன்.

இந்த சிலந்திகள் வீட்டில், ஏற்கனவே தோட்டத்தில் பார்த்த சிலந்திகளைப் போன்று இல்லை என்பதால் அவற்றைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினேன். இணையத்தின் வழியாக தகவல்களைப் பெற முடியவில்லை. ஆங்கிலத்தில்கூட இந்திய சிலந்திகள் பற்றி போதிய பதிவுகள் இல்லை என தெரிந்தது. இதுவரை இந்திய சிலந்திகள் பற்றி ஒரே ஒரு புத்தகம்தான் வந்துள்ளது. அதுவும் 2009ல் தான் வெளியாகியிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் Spiders of India. இதற்கு முன் தொகுப்பு நூல்களில் சிலந்திகள் இடம்பெற்றிருந்திருக்கலாம். சிலந்தி பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றன, ஆனால் சிலந்திகள் பற்றிய முழுமையான நூல் இது ஒன்றுதான். நான் தேடியவரை இது ஒன்றுதான். இந்தப் புத்தகமும் அதைத்தான் சொல்கிறது.

spider of India

கொச்சின் சேக்ரட் ஹார்ட் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் P.A. Sebastian மற்றும் கேரள வேளாண்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் K.V. Peter எழுதிய இந்த நூல் இந்திய சிலந்திகள் குறித்த முழுமையான தகவல்களைத் தருகிறது. மொத்தம் 734 பக்கங்கள். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1520 வகையான சிலந்திகளின் விவரங்கள் இதில் பெறலாம். விவரங்கள் முழுமையானவை அல்ல, இந்திய சிலந்திகள் பற்றிய ஆரம்ப நூல் என்பதால் எல்லா விவரங்களையும் எதிர்பார்க்க முடியாதுதான். பின் இணைப்பில் பல சிலந்தி வகைகளின் வண்ணப்படங்கள் தரப்பட்டுள்ளன. சிலந்திகளின் பரிணாம வளர்ச்சியிலிருந்து சிலந்தி வலைப் பின்னல் அமைப்பு, சிலந்தி வலை நூலின் தொழிற்நுட்பம், உடல் அமைப்பு என அடிப்படைத் தகவல்களை இந்த நூலில் பெறலாம்.  சிலந்திகள் பற்றிய ஆய்வில் இருப்பவர்கள், ஆர்வலர்களுக்கு உகந்த நூல். விலை ரூ. 1000லிருந்து ரூ. 1500க்குள் அமேசானில் வாங்கலாம்.

DSCN2046

Oxyopes lineatipes

 

DSCN2098

Oxyopes shweta

 

நான் கண்ட சிலந்திகளின் பெயர்கள் Oxyopes shweta, Oxyopes sunandae, Oxyopes lineatipes. புல்வெளிகள், சிறிய புதர்களில் வாழும் இவை. இவற்றில் ஆணைவிட பெண் இனங்கள் சற்று பெரிதானவை. இந்தியா, சீனாவை வாழிடமாகக் கொண்டவை. இதில் Oxyopes sunandae  இந்தியாவை மட்டும் வாழிடமாகக் கொண்டது, அழிந்துவரும் உயிரினமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உடல் பகுதி வெளிர் பச்சை நிறத்தி அமைந்த Oxyopes lineatipes சிலந்தி இந்தியா, சீனாவிலிருந்து பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமத்ரா வரை பரவியுள்ளன என்கிறது இந்த நூல். ஒரு கிளையை அல்லது இலையை சுற்றி மெல்லிய வலைகளைப் பின்னி, தங்களுடைய இரைகளை இவை பிடிக்கின்றன. பகல் வேளைகளில் இந்த சிலந்திகள் இரை தேடும், அதனால் அந்த நேரங்களில் இவற்றைக் காணலாம்.

அழிந்துவரும் உயிரினம் ஒன்று எனக்கு அருகிலேயே உள்ளதை தெரிவித்தது இந்தப் புத்தகம். ஒரு சில தொட்டிச் செடிகள் இவற்றை வாழ வைத்திருக்கின்றன. செடிகள் வெட்டி, ஒழுங்கு செய்யும்போது இனி இவைகளைப் பற்றியும் கவனம் கொள்வேன்.