தத்தளிக்கும் காங்கிரசை கரை சேர்ப்பது யார்?

கடந்த ஒருவாரமாக மகாராஷ்டிரத்தில் அரங்கேறிக்கொண்டிருந்த அரசியல் த்ரில்லர் நாடகம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பதன் மூலம், தாராளவாத ஜனநாயகவாதிகளின் வாழ்த்துக்களை பெற்றுவருகிறது சிவ சேனா என்னும் பாசிச மதவாத, பிரிவினை வாத கட்சி. ஜனநாயகத்தின் யாரும் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்கிற ஃபார்முலா படி, சரத் பவார்தான் இந்த அரசியல் த்ரில்லரின் இயக்குநர் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள். எனில், காங்கிரசின் இடம் என்னவாக உள்ளது என்கிற முக்கியமான கேள்வி எழுகிறது. சிவ சேனாவுக்கு ஆதரவா இல்லையா என்கிற முடிவெடுக்கவோ துணிந்து களத்தில் இறங்கவோ காங்கிரஸ் மேலிடம் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போன நிலையில் பாஜக முந்திக்கொண்டு ஆட்சியமைக்க முயன்றது.

மாலுமி இல்லாத கப்பலைப் போல காங்கிரஸ் இந்திய அரசியல் களத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது என்பதையே மகாராஷ்டிரத்தில் நடந்தவை சுட்டிக்காட்டுகின்றன. பொது நோக்கத்துக்காக இயங்கும் ஒரு அமைப்புக்கு தலைவர் வேண்டும் அல்லது உறுதியான ஒரு சித்தாந்தம் வழிநடத்த வேண்டும். பாஜகவை வலதுசாரி சித்தாந்தம் வழிநடத்துகிறது. கம்யூனிஸ்டுகளை இடதுசாரி சித்தாந்தம் வழிநடத்துகிறது. ஆனால், காங்கிரஸ் தனது சித்தாந்தம் குறித்த தெளிவற்ற நிலையில், ஒரு தலைமையை மட்டுமே நம்பியுள்ளது. அந்தத் தலைமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள காங்கிரசில் யாருமில்லை. அல்லது காங்கிரசின் வாரிசு தலைமை அந்தப் பொறுப்பை மற்றவர்களுக்கு விட்டுத்தர தயாராக இல்லை.

2014-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்த நேரத்தில் அவருக்குத் தெரியாமலேயே காங்கிரசின் இரண்டாம் கட்ட தலைவர்கள் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என அறிவித்தார்கள். காங்கிரஸ் துணை தலைவராகவும் எம்.பி. யாகவும் இருந்த ராகுல் காந்தியை முதன்மைப்படுத்தி 2014-ஆம் ஆண்டின் பிரச்சாரங்கள் இருந்தன. ஆனால், ஐ.மு.கூ. ஆட்சியின் மீது இருந்த பல்வேறு ஊழல் புகார்கள், பாஜக முன்வைத்த ‘வளர்ச்சி’ என்கிற முழக்கம் காரணமாக காங்கிரஸ் வெறும் 44 இடங்களை மட்டுமே வெல்லும் நிலைமைக்குச் சென்றது.

‘மோடி’ அலை காரணமாகவே இந்த வீழ்ச்சி என காங்கிரசார் சொல்லிக்கொண்டார்கள். தோல்விக்கான காரணங்களை கூட்டாகவோ, தனிப்பட்ட முறையிலோ அவர்கள் அலசவில்லை. பதவியில்லை; சற்று ஓய்வெடுக்கலாம் என்கிற மனநிலையே காங்கிரசாரிடம் இருந்தது. இந்த ஓய்வு மனநிலையில், எல்லாம் தலைமை பார்த்துக்கொள்ளும் என ராஜீவ் குடும்பத்திடம் பொறுப்புகளை தள்ளிவிட்டார்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள். சோனியா காந்தி உடல்நிலை காரணங்களால் அரசியலில் முழுமையாக ஈடுபட முடியாத நிலையில், ராகுல் காந்தி தலைவர் பதவியில் அமரவைக்கப்பட்டார்.

ராகுல் காந்தியை அரசியல் வாரிசாக அந்தப் பதவியில் அமர்ந்தாலும், அத்தனை எளிதாக அவருடைய முயற்சிகளை புறம்தள்ளிவிட முடியாது. தங்களுடைய கடந்த கால அரசியல் தவறுகளுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதாகட்டும், மதவாத அரசியலை கடுமையான நிலைப்பாட்டுடன் எதிர்ப்பதாகட்டும் அவர் நேருவிய மதப்பீடுகளை சற்றேனும் உள்வாங்கியவராகத்தான் தெரிந்தார். தன்னளவில் அவர் உறுதியாக இருந்ததுபோல, தன் கட்சியினர் முக்கியமாக இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களுக்கு இந்த உறுதியை வலியுறுத்தவில்லை என்கிற அளவில் ராகுலின் தலைமைப் பண்பு கேள்விக்குறியாகிறது.

உதாரணத்துக்கு, திரிபுரா மாநிலத்தை எடுத்துக்கொள்வோம். இடது முன்னணி 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது காங்கிரஸ். அம்மாநிலத்தில் தனது இருப்பை தக்க வைக்கவோ, ஆட்சியைப் பிடிப்பதற்கோ காங்கிரஸ் மேலிடம் வழிமுறைகளை வகுத்து தந்திருக்க வேண்டும். தனது மாநிலங்களை நழுவவிட்டதைப் போல, திரிபுராவையும் கைகழுவியது காங்கிரசின் டெல்லி மேலிடம். காங்கிரசிலிருந்து திரிணாமூல் காங்கிரசுக்குத் தாவிய எட்டு எம்.எல்.ஏக்கள், 2018 சட்டப் பேரவை தேர்தலுக்கு முன், பாஜக-வில் இணைந்தார்கள். சுவடே இல்லாத பாஜக, ஒரே தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது! காங்கிரஸ் தலைமை மறைமுகமாக அதற்கு உதவியது! 10 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த காங்கிரசின் சுவடுகூட திரிபுராவில் இல்லை.

அதுபோல, சோனியாவுக்கும் – ஜெகன் மோகனுக்கும் – சந்திரசேகரராவுக்குமான ஈகோ யுத்தம் காரணமாக ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் சுவடில்லாமல் அழிந்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். கர்நாடகத்தில் இன்று பாஜக தலைமை ஆள்கிறதென்றால் அதற்குக் காரணமும் விலைபோன காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்தான். சமீபத்திய உதாரணமான மகாராஷ்டிர மாநிலத்தில்கூட இரண்டு தேர்தல்களுக்கு முன்னால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இன்று வெறும் 44 எம்.எல்.ஏக்களுடன் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.

அதாவது, தனிநபராக ராகுல் காந்தி, தாராளவாத ஜனநாயகவாதியாக மதவாதத்தை எதிர்ப்பவராக இருந்தாலும், அதை தனது கட்சியினருக்கு கடத்தும் அளவுக்கும் ஆளுமை உள்ளவராக வளரவில்லை. இதை உணர்ந்ததாலோ என்னவோ தானாகவே 2019 தேர்தல் முடிவுகளை ஏற்று பதவி விலகியிருக்கிறார். தனது போதாமைகளை அவர் உணர்ந்திருக்கலாம். ஆனால், காங்கிரசின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ராஜீவ் குடும்பத்திடமிருந்து தலைமை பொறுப்பை வேறு ஒருவருக்கு போவதை பிரயத்தனத்துடன் தடுத்துக்கொண்டிருக்கிறது. சோனியாவும் ராகுலுமே தங்களுடைய பதவிகளை விட்டுத்தருவதாக வெளிப்படையாக அறிவித்தாலும் அதை செயல்படுத்துவோர் யாரும் இல்லை.

மாநிலங்களில் காங்கிரசின் தலைமை பதவிகளில் பெரும்பாலும் கட்சி தலைவர்களின் வாரிசுகளே அலங்கரிக்கும் நிலையில், டெல்லி தலைமையில் வாரிசு அல்லாதவர்கள் வந்தால், எங்கே தங்களுடைய வாரிசுகளின் பதவிகளும் பறிபோய்விடுமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள். கட்சி எப்படி போனாலும்சரி, நாடு எப்படி போனாலும்சரி நம்முடைய பதவி தப்ப வேண்டும் என்கிற மானப்பான்மை காங்கிரசாரின் பொதுவான குணமாகியுள்ளது.

அண்மையில் மத்திய பிரதேச காங்கிரசின் வாரிசு இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்திய, தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி குறிப்பில் காங்கிரஸ்காரர் என்ற பதத்தை நீக்கினார். முன்னதாக, பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறியிருந்த நிலையில், இது பரபரப்பாக பேசப்பட்டது. பாஜகவுக்கு தாவப்போகிறாரா என்றெல்லாம் வதந்திகள் வந்த நிலையில், வதந்திகளைவிட அவர் அளித்த விளக்கம் மோசமானதாக இருந்தது; காங்கிரசின் பரிதாப நிலையைக் காட்டுவதாகவும் இருந்தது. அதாவது, தன்னைப் பற்றிய முக்கியமானவற்றைப் பற்றி மட்டும் கூறிக்கொண்டதாகவும், நீளமாக இருந்ததால் காங்கிரஸ்காரர் என்பதை வெட்டி விட்டதாகவும் விளக்கம் கொடுத்தார்.

பாரம்பரியமாக காங்கிரஸ்காரர்கள் குடும்பத்திலிருந்து வரும் வாரிசு இளம் தலைவர் காங்கிரசை எவ்வளவு துட்சமாக மதிக்கிறார் என்பதை சுட்டிக்காட்டியது அவருடைய விளக்கம். அயோத்தி தீர்ப்பை ஒரு சில காங்கிரசார் விமர்சிக்கிறார்கள்; பலர் வரவேற்கிறார்கள். இதுபோல பாஜகவின் மதவாத அரசியலுக்கு ஆதரவான கருத்துக்களை காங்கிரசார் சொல்வது அவ்வவ்போது பரபரப்புக்குரிய செய்தியாகிறது. இத்தகையவர்களை வைத்துக்கொண்டு காங்கிரஸ் எப்படி இந்தியாவை இறுகப் பற்றியிருக்கும் மதவாத அரசியலை வேரறுக்க முடியும்? திறந்த மனதுடன் தற்போதிருக்கும் தலைமை ஒரு தலைவரை, ராஜீவ் குடும்பத்தைச் சாராத ஒருவரை (தனது போதாமைகளை வளர்த்துக்கொள்ள ராகுலுக்கு கால அவகாசத்தை கொடுத்துவிட்டு) அனுமதிக்குமா?

“நாம் அனைவரும், நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சம உரிமை, சலுகைகள் மற்றும் கடமைகளைக் கொண்ட இந்தியாவின் குழந்தைகள். வகுப்புவாதத்தையோ அல்லது குறுகிய மனப்பான்மையையோ நாம் ஊக்குவிக்க முடியாது, ஏனென்றால் சிந்தனையிலோ அல்லது செயலிலோ குறுகிய மக்களைக் கொண்ட எந்தவொரு நாடும் சிறந்த நாடாக இருக்க முடியாது”.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு ஆற்றிய முதல் உரையில் இடம்பெற்ற முழக்கம் இது. நேரு முதல் பிரதமர் மட்டுமல்ல, மதசார்பின்மையை என்னும் பாதையை வலுவாக போட்டு, இந்தியாவை கட்டமைத்த தலைவர்களில் ஒருவர். காங்கிரஸ்காரராக அதைச் செய்தார். இன்றைய காங்கிரஸ் தலைமை அவர் காட்டிய வழியில் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்குமா? அல்லது தனது சுயநலனுக்காக நாட்டையும் அதன் பாரம்பரியத்தை மதவாதத்திடம் அடகு வைக்குமா?

குடியுரிமை சட்ட திருத்தம்: ஹிட்லரின் இன அழிப்பு திட்டங்களுக்கு இணையானது!

நாம் அனைவரும் வரலாற்றை முழுவதுமாக அறிந்தவர்கள் அல்ல. நம்முடைய மறதி அல்லது அறியாமை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மேலும் அதிக பலத்தைக் கொடுக்கிறது. ஹிட்லரை நாம் அறிவோம். அவருடைய இனவெறி நமக்கு மறந்துவிட்டது அல்லது இனவெறி எப்படிப்பட்டது என்பதை நாம் அறியவில்லை. தமிழ் தேசியம் என்னும் பெயரில் ஹிட்லரைக் கொண்டாடும் ஒரு கும்பல் உருவாகியிருக்கிறது. அது ஒரு சிறிய கும்பல்தான் என்றாலும், அது பெரிய பேரரழிவு திட்டத்துடன் களமிறங்கியுள்ள இந்து தேசியம் என்ற இனவெறி – மதவெறி திட்டத்துக்கு நம்மை தயார்படுத்துவதாக உள்ளது. பாசிச அரசு அல்லது மதவெறி அரசு என உண்மையை எழுதுவது பலருக்கு உவப்பாக இல்லை. ஆனபோதும் வரலாற்றின் குறிப்புகளோடு பாசிசத்தின் நடைமுறையாக்கலில் நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என நேர்மையாக பரிசோதித்துக் கொள்வோம்.

நாசி கட்சி (தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி என்பதன் சுருக்கமே ‘நாசி’)யின் தலைவரான அடால்ஃப் ஹிட்லர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தவர். நாசி கட்சிக்கு சித்தாந்த பின்புலம் கொடுத்தது ‘துலே சமூகம்’என்ற ரகசிய அமைப்பு. அதாவது தாங்களே ஆரிய இனத்தின் தூய வாரிசுகள் என அறிவித்துக்கொண்டவர்கள் இவர்கள். கிரேக்க புராண கதையில் வரும் துலே என்ற பிராந்தியத்தில் புனையப்பட்ட ‘ஹைபர்போரியா’ என்ற தலைநகரில் வாழ்ந்த ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் என நாசிக்கள் பரப்பினார்கள். தொடக்கத்தில் ரகசிய அமைப்பாக இருந்தது. பரப்புரை, பத்திரிகை போன்றவற்றின் துணையுடன் ஜெர்மானியர் ஏகபோக ஆதரவு பெற்றது. துலே அமைப்பால் வளர்க்கப்பட்டவர் ஹிட்லர். அதன் பின்னணியிலேயே ஸ்வதிக் முத்திரையை நாசி கட்சியின் கொடியாக அவர் வரைந்தார்.

1920களில் ஜெர்மனியில் மார்க்சிஸ்டுகள் மக்கள் செல்வாக்குடன் இருந்தனர். ஹிட்லரின் எதிரிகளாக மார்க்சியர்களும் யூதர்களுமே இருந்தார்கள். அவர்கள் குறித்து அவதூறான அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலம் மக்களை கவர்ந்தார் ஹிட்லர். தனக்காக கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் செல்வாக்கைக் காட்டி, கட்சியில் இருந்த மூத்தவர்களை பின்னுக்குத்தள்ளி முன்னேறினார். கட்சியில் சேர்ந்த பத்தாண்டுகளில் அக்கட்சியின் தலைவரானார்.

ஹிட்லர் தலைமையிலான நாசி கட்சி, தீவிர தேசியவாதத்தை கொள்கையாக அறிவித்தது. தனது அனைத்து கொள்கை அறிக்கையிலும் யூதர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் கொண்டு வந்து உறுதியுடன் நின்றது. அடுத்த பத்தாண்டுகளில் நாசி கட்சி படிப்படியாக தேர்தலின் மூலமாக முக்கியமான கட்சியாக வளர்ந்தது. பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்து 1933-ஆம் ஆண்டு ஜெர்மன் அதிபராக ஆனார் ஹிட்லர். இதெல்லாம் நடந்தது பெரும்பான்மை மக்களின் ஆதரவுடனே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுவரைக்குமான வரலாறுகூட நமக்கு இந்தியாவில் பதவியில் அமர்ந்திருக்கும் கட்சியை/பதவியில் அமர்ந்திருப்பவரை நினைவூட்டுவதாக இருக்கலாம். பதவியில் அமர்ந்த பிறகு, யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் செய்தவை, சரியாக இந்தியாவில் முசுலீம்களுக்கு என்ன நடந்துக்கொண்டிருக்கிறதை என்பதை அப்படியே காட்டுகின்றன.

அதுவரை ஜெர்மானிய மக்களை பொதுவாகப் பார்த்த அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம், நாடாளுமன்றத்தில் இருந்த அதிகார பலத்தால் ஹிட்லருக்கு கிடைத்தது. யூதர்களின் மத சடங்கு அடிப்படையிலான விலங்குகளை பலியிடும் சடங்குக்கு பல மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டது. ஜெர்மானியர் தூய ரத்தத்தை காக்க, யூதர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கு இனக்கலப்பு அதாவது திருமணம் செய்துகொள்வது தடை செய்யப்பட்டது. மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர் உள்ளிட்ட பணிகளுக்கு யூதர்கள் வருவது தடை செய்யப்பட்டது. பள்ளிகளில் அனைவரும் படிக்கக்கூடாது என்பதற்காக சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பள்ளிகளில் தூய இனவாதத்தை போதிக்கும் பாடங்கள் கொண்டுவரப்பட்டன.

உச்சமாக 1933-ஆம் ஆண்டு குடியுரிமை மற்றும் இயற்கைமயமாக்கல் சட்டம் என்ற பெயரில் யூதர்களை ஜெர்மன் சமூகத்திலிருந்து நீக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே ஒன்றரை லட்சம் யூதர்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. யூதர்கள் விவசாயம் செய்வதைத் தடுக்கவும் சட்டம் கொண்டுவரப்பட்டது. நடிக்கவும் கலாச்சாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடவும்கூட யூதர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதன்பின், ‘நூரெம்பர்க் சட்டங்கள்’ என்ற பெயரில் யூதர்களை முற்றிலுமாக அழிக்கும் சட்டங்களை 1935-ஆம் ஆண்டு கொண்டுவந்தார் ஹிட்லர். இதில் குடியுரிமை சட்டம் முக்கியமானது. ஜெர்மன் ரத்த முறையினர் மட்டுமே குடியுரிமை உள்ளவர்கள். யூதர்களுக்கு முற்றிலுமாக குடியுரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் சொந்த நாட்டிலேயே அவர்கள் ‘வெளிநாட்டினர்’ என அழைக்கப்பட்டனர்.

இனியும் ஹிட்லரின் வரலாறு நமக்குத் தேவையில்லை. இந்திய யதார்த்ததுக்கு வருவோம். இங்கே என்ன நடக்கிறது? மதத்தின் பெயரால், முசுலீம்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்பதற்காகவே பல மாநிலங்களில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டது. மாட்டிறைச்சியின் பெயரால் முசுலீம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள், முசுலீம் சமூகத்தை அச்சுறுத்தின; நடுங்க வைத்தன. தூண்டப்பட்ட கும்பலால் நடந்த படுகொலைகளுக்கு ஒன்றுக்குக்கூட நீதி கிடைக்கவில்லை. லவ் ஜிகாத் என்ற புனைகதை கட்டி, முசுலீம் ஆண்கள் இந்து பெண்களை கவர்ந்து திருமணம் செய்து மதமாற்றம் செய்வதாக பரப்பப்பட்டது. இந்தியாவின் ஒரு பகுதியான அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு செயலாக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கான முசுலீம் மக்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. முசுலீம்களுக்கு முழு உரிமை உள்ளது என்றபோதும், பெரும்பான்மை இந்து மனப்பான்மையின் அடிப்படையில் நாட்டின் உச்சநீதிமன்றமே பாபர் மசூதி உள்ள இடத்தில் கோயில் கட்டலாம் என தீர்ப்பு எழுதியது.

இப்போது முசுலீம்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது ஆளும் அரசு. இச்சட்டப்படி பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, கிறித்தவர், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்தவர்கள், டிச.31, 2014-க்குள் வந்து இந்தியாவில் குடியமர்ந்திருந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இச்சட்டம் பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இசுலாமிய மக்களுக்குப் பொருந்தாது. மேலும் இலங்கையிருந்து வந்த ஈழத் தமிழர்கள், மியான்மரிலிருந்து வந்த ரோகிங்கியா முசுலீம்களுக்கும் பொருந்தாது.

குடியுரிமை சட்ட திருத்ததின் தொடர்ச்சியாக தேசிய அளவில் குடியுரிமை பதிவேடு செயலாக்கவிருக்கிறது அரசு. அசாமில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை பதிவேடு 20 லட்சம் மக்களை சட்டவிரோத குடியேறிகள் என்றது. இவர்களில் 12 லட்சம் மக்கள் இந்துக்கள். நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் குடியிரிமை திருத்தச் சட்டம் சான்றாவணங்கள் இல்லாத அனைத்து மக்களையும் சட்டவிரோத குடியேறிகள் என வகைப்படுத்தி வதை முகாம்களில் அடைக்கும். முசுலீம் மக்களோடு, வர்ணாசிரமத்தின் படிநிலைப்படி சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்களுமே இதனால் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

ஒருவர் பெயர் குடியுரிமை பதிவேட்டில் இல்லாவிட்டால், சம்மந்தப்பட்டவர்தான் இந்தியக் குடிமகன் என தன்னை, குடியுரிமைத் தீர்ப்பாயம் சென்று நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் சாலை ஓரங்களில், நாடோடிகளாக, வெள்ளம், இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப் பட்டவர்களாக, எவ்வித ஆவணங்களும் அற்ற பலகோடி மக்கள் உள்ளனர். இவர்கள் பிறந்த சான்றிதழ், படிப்புச் சான்றிதழ், வங்கி கணக்கிற்கு எங்கே போவார்கள்? ஆக, ஒடுக்கப்பட்ட அம்மக்களும் குடியுரிமையை இழப்பார்கள்.

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் அங்கு சிறுபான்மையினர் என்றால் இலங்கையில் இந்து-தமிழ் மக்களும், மியான்மர்-ரோகிங்கியா முசுலீம் மக்களும் சிறுபான்மையினர்தான். இவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது ஆளும் அரசின் இனவாத நோக்கத்தைக் காட்டுகிறது.

“ஒரு கணம் அரசியலையும், சட்டப்படியான கேள்விகளையும் ஒதுக்கி விடுங்கள். மில்லியன் கணக்கான ஏழை மக்களுக்கு நீங்கள் இரக்கமில்லாமல் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை சிந்தியுங்கள். எந்தவொரு முடிவும் இருப்பதாகத் தெரியாத ஒரு பேரழிவை அரசு எவ்வாறு உருவாக்க முடியும்?” முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் மனித உரிமை செயல்பட்டாளருமான ஹர்ஸ் மந்தர் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து எழுப்பிய கேள்வி இது.

பற்றி எரிந்துக்கொண்டிருக்கும் விசயங்களாக மக்கள் தொகை பெருக்கமும் அதற்கேற்றபோல அடிப்படைவசதிகள் இல்லாதது, ஏழ்மை நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை போன்ற பல விசயங்கள் இருக்கும்போது ஹர்ஸ் மந்தர் கேட்பதுபோல குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவை என்ன நோக்கத்திற்காக, எந்த முடிவுக்காக கொண்டுவரப்படுகின்றன? ‘வளர்ச்சி…வளர்ச்சி..வளர்ச்சி…’என ஓயாமல் முழங்கிய பாஜக சொல்லும் வளர்ச்சி யாருடையது? யாருக்கானது? 30, 40 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்துவந்தாலும் குடியுரிமை இல்லை. ஆனால், அமெரிக்கா உள்பட உலகெங்கும் உள்ள நாடுகளில் குடிபெயர்கிறவர்கள் இந்தியர்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றனர். சமகால நிதர்தனத்தோடு ஆட்சியாளர்கள் உருவாக்கிய முரண்பாடு இது. 72 ஆண்டு காலம் சகோதர – சகோதரிகளாக பழகிய மக்களை மதத்தின் பெயரால் பிரிப்பது மதவெறி அன்றி வேறென்ன?

அரசியலமைப்பு தத்துவத்தை புதைத்துவிட்ட ஆளும் அரசு, மதவாத தத்துவத்தை கையிலெடுத்துள்ளது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. நாம் வரலாற்றிலிருந்து கொஞ்சமேனும் பாடம் கற்கவேண்டியுள்ளது. மேலும் ஒரு இன அழிப்பை நாம் அனுமதித்தால், வரலாறு நம்மை மன்னிக்காது என்பதை பெரும்பான்மை சமூகம் உணர வேண்டும்.

நாம் எதிரெதிராக நிற்க வேண்டியவர்கள்தானா?

அண்மைக்காலமாக தமிழகத்தில் தலைவர்கள் சிலைகள் சேதப்படுத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக அம்பேத்கர், பெரியார் போன்ற சாதி ஒழிப்பு பேசியவர்களை, பார்ப்பனியத்தை விமர்சித்தவர்களை தாக்குவது அதிகரித்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கரின் சிலை பார்ப்பனிய சாதிவெறி ஏற்றப்பட்ட கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அதை முன்வைத்து சமூக ஊடகங்களில் பெரும்பாலான தமிழக மக்கள் சாதிவெறியர்களின் கொடுஞ்செயலைக் கண்டித்தனர். மறுநாள் அதிகாலையில் அதே இடத்தில் அண்ணலின் சிலை மீண்டும் நிறுவப்பட்டது. வடமாவட்டம் ஒன்றில் பெரியார் சிலை உடைக்கப்பட்டபோதும், உடனடியாக மீண்டும் பெரியார் அதே இடத்தில் அமர்த்தப்பட்டார். பெரியோர்களின் சிலை உடைக்கப்படுவதும் நிறுவப்படுவது தொடர்ந்து நிகழும் சம்பவங்களாகிவிட்டன. சில இடங்களில் தலைவர்கள் கம்பி வளைக்குள் நிறுத்தப்படுவதும் நடந்துகொண்டிருக்கிறது.

சிலை உடைப்பு சம்பவங்களுக்கும் அதற்குப் பிறகான முற்போக்கு சமூகத்தின் கொந்தளிப்புகளுக்கும் சாதி வெறி கூச்சல்களுக்கும் சாதி ஒழிப்பு யோசனைகளுக்கும் அப்பால் நாம் சிந்திக்க வேண்டியவை ஏராளமாக உள்ளன. அடையாள அரசியல் பேசும் பலர் இதை பேசுவதில்லை. சாதிக்கு ஒரு தலைவர் தேவைப்படுகிறார். அரசியல்வாதிகளுக்கு அது போதும். ஆனால், சமூக யதார்த்தம் வேறுமாதிரியாக உள்ளது.

பட்டியின மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வர்க்கப் பின்னணி என்ன? சமூகப் பிண்ணனி என்ன? ‘இந்து மதம்’ என இவர்களையெல்லாம் ஒன்றிணைக்கிற மதம் இவர்களை எத்தகைய சமூக சூழலில் வைத்துள்ளது? அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ன? அரசு நிர்வாகத்தில் முடிவெடுக்கக்கூடிய இடத்தில் உள்ள சாதி எது? இவர்களுடைய கலாச்சாரம் என்ன? உணவுப் பழக்கம் என்ன? இத்தனை கேள்விகளுக்கு விடை தேடினால், சமூக யதார்த்தம் நம் கண்முன் வந்து நிற்கும். அது தலித்-பகுஜன் சமூகங்களின் ஒற்றுமையை பறைசாற்றி நிற்கும்.

பார்ப்பனியத்தின் சாதி படிநிலையை ஆங்கிலேயர்கள் ‘இந்து’ மதமாக்கியதாக பிரபல கன்னட தலித்திய எழுத்தாளர் தேவனூர மகாதேவா எழுதியிருப்பார். நூற்றுக்கணக்கான இந்திய ஒடுக்கப்பட்ட சாதிகளை, நான்கு வர்ண அமைப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களை ‘தலித்’ என்ற வார்த்தையால் அழைத்தவர் மகாத்மா ஜோதிபா பூலே. அதை பிரபலமாக்கியவர் அண்ணல் அம்பேத்கர். பார்ப்பனிய மதம் தீண்டத்தகாதவர்களாகவும் சூத்திரர்களாகவும் ஒதுக்கியவர்கள்தான் இன்று எதிரெதிராக நின்று சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சிலையின் தலையை துண்டாக்கும் சூத்திரர்களுக்கும் சேர்த்துதான் அம்பேத்கர் பேசினார். ஜோதிபா பூலேயும் பெரியாரும் இயக்கங்களை நடத்தினார்கள். இத்தனைப் போராட்டங்களுக்குப் பிறகும், முற்போக்கு மரபைக் கொண்டிருக்கும் தமிழகத்திலும் ஏன் பிற்படுத்தப்படுத்த சமூகம், தலித்துகளுக்கு எதிராக நிற்கிறது?

தலித் பகுஜன் ஒற்றுமையை வலியுறுத்திவரும் எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா இதற்கு பதில் சொல்கிறார்…“ஒவ்வொரு தனிநபர் மற்றும் சமூகத்துக்கு மதம் என்பது முக்கியமானது. நான் ஏன் இந்துவல்ல என சொல்லியிருக்கிறேன். அதுபோல, சூத்திரர்களும் அதாவது பிற்படுத்தப்பட்ட மக்களும் படிக்கவோ, பரப்பவோ ஒரு அமைப்பாக்கப்பட்ட மத வாழ்க்கையை கொண்டிராதவர்கள். இந்துயிசத்தில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. உற்பத்தி அல்லாத நல்ல வாழ்க்கையை வாழும் பனியாக்களும் சத்திரியர்களும் பார்ப்பனியத்துடன் சேர்ந்துகொள்வார்கள். ஆனால் தலித்துகளுக்கும் சூத்திரர்களுக்கும் ஆன்மிக எழுத்துக்களை படிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை. தலித்துகள் இதைப் புரிந்துகொண்டு பவுத்தத்திற்கும் கிறித்துவத்திற்கும் மாறினார்கள். தங்களுடைய வழிபடும் உரிமையை அவர்கள் பெற்றார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அவர்களுடைய வாழ்க்கை சூழல் மாறுகிறது. ஆனால் பார்ப்பனியத்தை தலித்துகள் கேள்வி எழுப்பியதைப் போல சூத்திரர்கள் எதிர்க்கவில்லை. இதுதான் பிற்படுத்தப்பட்ட மக்களை பல நூற்றாண்டுகளுக்கு முடக்கி வைத்துவிட்டது” என்கிறார்.

காஞ்சா அய்லய்யா, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக ஆய்வாளர். இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் அவருடைய எழுத்துக்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. காஞ்சா அய்லய்யா சொன்னதன் சாரத்தை, வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் எழுதிய சிலர் முன்வைத்தனர். சிலையை உடைத்தவர்கள் தங்களுடைய சமூக படிநிலையை உயர்த்திக்கொண்டார்களா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

பார்ப்பனிய இந்து மதத்தின் ஒற்றை கொள்கையை நாடு முழுவதும் பரப்ப முயற்சி நடந்துகொண்டிருக்கும் வேளையில், தன்னுடைய நிலையை மறந்து, சாதி பெருமையை தூக்கி சுமக்க தமிழகத்தில் பலர் தயாராக உள்ளனர். கிட்டத்தட்ட பார்ப்பனியத்துக்கு அடியாள் வேலை பார்ப்பது போன்றது இது.

மிகச் சமீபத்தில் தருமபுரி அருகே ஒரு கிராமத்தில் இருந்த முனியப்பன் சாமி சிலைக்கு கயவர்கள் சிலர் வன்முறையை தூண்டும் நோக்கத்தில் செருப்பு மாலை அணிவித்திருக்கின்றனர். ஊரில் நடந்த விசாரணையின்போது, மதத்தின் பெயரால இயங்கும் ஒரு அமைப்பைச் சேர்ந்த சிலர் முனியப்பன் சாமி சிலை அருகே ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டுள்ளனர். முனியப்பனுக்கும் ஜெய் ஸ்ரீராமுக்கும் என்ன தொடர்பு? பெரும்பான்மையினரின் சாமி எது? எது இறக்குமதி செய்யப்பட்ட சாமி? எந்த மதத்துக்காக சொந்த சாமிக்கே அவர்கள் செருப்பு மாலை அணிவித்திருக்கிறார்கள்? இந்தக் கேள்விகளை சாதி பெருமிதம் பேசி, தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொள்கிறவர்கள் அலச வேண்டும்.

மேலாதிக்கம் மிக்க ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரின் மதத்தை, கலாச்சாரத்தை தனது மதமாக, கலாச்சாரமாக சொல்லிக்கொள்வதில் எந்தப் பெருமையும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, நம்முடைய பண்பாட்டை, கலாச்சாரத்தை, நமது ஆன்மீகத்தைத்தான் நாம் இழந்து நிற்கிறோம். அந்த வகையில் அய்லய்யா குறிப்பிடுவதைப் போல தலித்-பகுஜன் கலாச்சாரமும் வாழ்நிலையும் ஒன்றே. அவர் உனது தலைவர், இவர் எனது தலைவர் என பிரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் எதிரிகளாக நிற்பது, நம்மை ஆதிக்கம் செய்வோருக்குத்தான் சாதகமாக அமைகிறது. எதற்காக இதைச் செய்கிறோம் என தெரியாமல்கூட வெற்று ஆதாயங்களுக்காக நாம் எதிரெதிராக நிற்கத்தான் வேண்டுமா?

முசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா?

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் பாஜக தலைவருமான சிவராஜ் சிங் சவுகான், கடந்த திங்கள்கிழமை நடந்துவரும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து கருத்தொன்றை தெரிவித்துள்ளார்.

மத ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இசுலாமியர் அல்லாத மக்களுக்கு மோடி கடவுளைப் போன்றவர் என்றும் 2014, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முசுலீம் நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வந்த இந்து அல்லாதவர்களுக்கும் குடியுரிமை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி சொல்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், முசுலீம் அல்லாத அகதிகளுக்கு மோடி வாழ்க்கையை வழங்கியிருப்பதாகவும் நெகிழ்ந்தார். “நரகத்தைப் போன்ற வாழ்க்கையை வாழ்ந்துவரும் மக்களை காப்பாற்றும் கடவுளாக நரேந்திர மோடி மாறியிருக்கிறார். கடவுள் அவர்களுக்கு வாழ்க்கையை கொடுத்தார். அவர்களுடைய அன்னையர் பிறப்பு கொடுத்தனர். ஆனால், நரேந்திர மோடி அவர்களுக்கு புதிய வாழ்க்கையை கொடுத்திருக்கிறார்” எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பவர்களும் பாஜகவினரும் திரும்பத் திரும்ப பிரதமர் மோடியை ‘ஆபத்பாந்தவராக’ ‘கடவுளுக்கு இணையானவராக’ முன்னிறுத்தி வருகின்றனர். பொதுப்படையாக நல்லதுதானே செய்கிறார் என்கிற தொனியும் மக்களிடைய இவர்கள் கொண்டு சேர்க்கிறார்கள்.

கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் என்றே அனைத்து மதங்களும் சொல்கின்றன. ஆனால், இவர்களுடைய கூற்றுகளில் உள்ள இரு வேறு விசயங்கள் மூலமாக, இவர்களின் ஒருதலைபட்சமான ‘கடவுளை’ இனம் காணலாம்.

முதலாவதாக, முசுலீம் நாடுகளில் மற்ற மதத்தினர் மத ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள் என்ற கூற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வோம். உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும்போது, 1947-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 23% சிறுபான்மையினர் இருந்ததாகவும், அவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டோ அல்லது துரத்தப்பட்டோ அல்லது கொல்லப்பட்டோ தற்போது 3.7 சதவீதமாக குறைந்திருப்பதாகவும் கூறினார்.

அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூறிய இந்த ‘புள்ளிவிவரம்’ பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைக்குள் உலகத்தை அடக்கி விடுகிற இந்தக் காலத்தில் ஒரு கணம்கூட பொய் நிலைத்திருக்காது. பாகிஸ்தான் அரசின் அலுவலர் ரீதியிலான விவரங்களில் 1947-ஆம் ஆண்டு 2.83 சதவீத சிறுபான்மையினர் அங்கு வசித்துள்ளனர். 1972-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது 3.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1981-ஆம் ஆண்டு 3.3 சதவீதமாகவும் 1998-ல் 3.7 சதவீதமாகவும் உயர்ந்திருக்கிறது.

இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் 2017-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் தோராயமாக 4 சதவீத சிறுபான்மையினர் பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள், பாகிஸ்தானின் தென்பகுதியான சிந்து மாகாணத்தில் இவர்கள் வசிக்கிறார்கள்.

மோடி – ஷா திரும்பத் திரும்ப வலியுறுத்திக்கொண்டிருக்கும் முசுலீம் நாடுகளில் ‘பாதுகாப்பில்லாமல் வாழும்’ சிறுபான்மையினருக்கான இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை பாகிஸ்தானில் வாழும் இந்துக்களும் சீக்கியர்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். தங்களுக்கு இப்படியொரு குடியுரிமை தேவையில்லை என அவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அதோடு, முன்னெப்போதையும்விட, பாகிஸ்தான் அரசு சிறுபான்மையினரின் நலனின் அக்கறை செலுத்திவருவதும் செய்தியாக ஊடகங்களில் வெளியாகிக்கொண்டுதான் உள்ளது.

அடுத்து, வங்கதேசத்துக்கு வருவோம். அங்கு சிறுபான்மையினரான இந்துக்கள் 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப் படி 10. 7 சதவீதமாக உள்ளனர். இந்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துதான் காணப்படுகிறது.

வங்கதேசத்தின் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசில் இரண்டு இந்து அமைச்சர்கள் பதவியில் இருக்கிறார்கள். ஒருவர் உணவுத்துறை அமைச்சர் சதன் சந்திர மசூம்தார், இன்னொருவருவர் ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்வபன் பட்டார்சார்ஜி. ஆளும் அவாமி லீக் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களும் உள்ளனர். இவர்களைத் தவிர ஏழு இந்து எம்.பிக்களும் உள்ளனர்.

அரசியல் தவிர, நீதித்துறையிலும் அரசு நிர்வாகத்தில் பல இந்துக்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். கலை – பண்பாடு சார்ந்த துறைகளிலும் பல இந்துக்கள் கோலோச்சி வருகின்றனர்.

இதுநாள்வரை இந்து தேசியவாதிகள் அண்டை முசுலீம் நாடுகள் குறித்து பரப்பி வந்தவை மிகையானவை என கள நிலவரங்கள் சொல்கின்றன. வங்கதேசத்தின் அடிப்படைவாதிகள் அவ்வவ்போது இந்துக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கைகொண்டபோது, வங்க தேச மக்கள் அதை முறியடித்திருக்கிறார்கள்.

அடிப்படையில் வங்கதேசம் ஒரு மக்கள் குடியரசு நாடு. அங்கே மத அடிப்படைவாதம் இருந்தாலும் சிறுபான்மையினருக்கான அதிகார பகிர்வில் தற்போதுள்ள மோடி தலைமையிலான அரசைவிட அது முற்போக்கானது. பாஜக ஒரு முசுலீம் வேட்பாளரைக்கூட நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்கவில்லை. முசுலீம்கள் பெருவாரியாக உள்ள உத்தர பிரதேசத்தில் ஒரு முசுலீம் எம்.எல்.ஏ., எம்.பி.கூட பாஜகவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை. முசுலீம்களை முற்றிலுமாக ஒதுக்குகிறது இந்த அரசு என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

எனவே, அமித் ஷா முசுலீம் நாடுகளில் இந்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதும் சிவராஜ் சிங் சவுகான் மோடி முசுலீம் நாடுகளில் உள்ள சிறுபான்மையினரின் கடவுள் என்பதும் திரிக்கப்பட்டவை; உண்மைக்கு புறம்பானவை.

இரண்டாவதாக, குடியுரிமை பெறப்போகும் முசுலீம் அல்லாத இந்துக்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள், சமணர்களுக்கு என்ன திட்டங்களை இந்திய அரசு வைத்திருக்கிறது என்பதும் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. அண்மையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, குடியுரிமை பெறுகிறவர்கள் எங்கே குடியமர்த்தப்படுவார்கள் எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கும் ஆளும் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமும் தரப்படவில்லை.

அசாமில் ‘சட்டவிரோத குடியேறிகளை’ வெளியேற்றுவதற்காக செயல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்காக அரசு ரூ. 1600 கோடி செலவிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் இந்தப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். குடிமக்கள் அல்லாதவர்களை அடைத்து வைக்கும் ‘தடுப்பு முகாம்’களுக்கு கணிசமான தொகை செலவிடப்படுகிறது. அவர்களை கண்காணித்தல், அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தல், அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புதல் என கூடுதல் செலவினங்களும் உள்ளன.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் அதன் பிறகு நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தவிருப்பதற்கும் இன்னும் ஏராளமான நிதி ஒதுக்கப்பட வேண்டியிருக்கும். எதிர்ப்புகள் தீவிரமாக கிளம்பியுள்ள நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு இப்போது நடைமுறைப்படுத்தப்படாது என அரசு அறிவித்து, குறுக்கு வழியான தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்துக்கு கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது.

இந்த விவகாரங்களால் நாடு பற்றி எரிந்துகொண்டிருக்கும் அதே வேளையில் சர்வதேச கண்காணிப்பு நிதியம், இந்தியாவின் பொருளாதார மந்தநிலை உடனடியாக மேலே எழ முடியாத நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறது.

இத்தகையதொரு நிலையில், எந்தவொரு முடிவையும் உடனடியாக எட்டாத நாட்டு மக்களுக்கு எந்தவகையில் நன்மை தராத ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பின் வெளிப்பாடாக மத்திய அரசு தனது திட்டங்களை அமலாக்கிக் கொண்டிருக்கிறது.

பர்மாவில் பெரும்பான்மை பவுத்த மத அரசால் மிகக் கடுமையாக இன அழிப்புக்கு ஆளான (சர்வதேச சமூகம் இதை இன அழிப்பு என்றே சொல்கிறது) ரோகிங்கியா மூசுலீம்களுக்கு ‘சிறுபான்மையினரின் கடவுளான’ மோடி எந்தவித கரிசனத்தையும் காட்டவில்லை. இனப்படுகொலையிலிருந்து தப்பி வந்த ரோகிங்கியாக்கள், சர்வதேச சட்டங்கள் அனுமதித்துள்ள அடிப்படைவசதிகள்கூட இல்லாமல் இந்திய அகதி முகாம்களில் தங்கியுள்ளனர். ரொகிங்கியாக்கள் பழங்குடியின சமூகம் என்பதால், சர்வதேச முசுலீம் சமூகமும் அவர்களை கண்டுகொள்ளவில்லை என்பதும் துயரமானது.

அவ்வளவுதூரம் போவானேன்… 30 ஆண்டு காலம் பவுத்த பெரும்பான்மைவாதத்தால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு வந்த தமிழ் ‘இந்துக்களை’ ஏன் ‘கடவுள்’ மோடி கரிசனம் காட்டவில்லை. தமிழர் இந்துக்கள் இல்லையா? அல்லது தமிழர்கள் மீது கடவுளுக்கு கருணையில்லையா? சிவராஜ் சிங் சவுகான் புகழ்ந்ததைப் போல, மோடி இவர்களுக்கு மட்டும் ஏன் புதிய வாழ்க்கையை தர மறுக்கிறார்?

முசுலீம் நாடுகளில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகிறார்கள் எனக் கூறி, இங்கிருக்கும் முசுலீம்களை அச்சுறுத்தி, அகற்றும் இந்து தேசியவாதத்தின் திட்டத்தை அமலாக்கிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. எத்தனைதான் பூசி மெழுகினாலும் இவர்களுடைய இனவெறுப்பு திட்டத்தின் உண்மை முகத்தை மூடி மறைக்க முடியாது.

ஆறாண்டுகாலம் இந்து தேசியவாத அரசு விதைத்திருக்கும் முசுலீம்கள் மீதான வெறுப்பின் விதை, இப்போது சட்டமாக்கல் முறைகளால் முளைவிட்டுக்கொண்டிருக்கிறது. இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், மதச்சார்பற்ற நாடு என்கிற அடித்தளத்தில் கட்டப்பட்ட ‘இந்தியா’ காணாமல் போகும். எனவே, இந்தப் பொய்க்கடவுள் பிம்பங்களில் விழுந்துவிடாமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

நன்றி: தின செய்தி. (27-12-2019)

 

சாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன?

விரைவில் நடைபெற இருக்கும் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ‘வீர’ சாவர்க்கருக்கு இந்தியாவின் மதிப்பிற்குரிய விருதான பாரத ரத்னா அளிக்கப்பட வேண்டும் என்கிறது பாரதிய ஜனதா கட்சி.

இந்தி பேசும் பசு வளைய மாநிலங்களில் சாவர்க்கர், ஒரு தேச பக்தர்; சுதந்திரத்துக்காக போராடிய வீரர். மகாராஷ்டிரத்தைப் பூர்வீகமாகக் கொண்டபடியால் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக, சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ கோருவதன் மூலம் மக்களின் வாக்குகளை அள்ள முடியும் என நம்புகிறது.

சாவர்க்கருடன் மேலும் இருவர் பாரத் ரத்னா விருது பட்டியலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னமும் இந்த விருதுகள் அளிக்கப்படவில்லை என்பது விருதுக்கான அவமானம். கல்லடிபட்டு, சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி புகட்டிய, முதல் பெண்கள் பள்ளியைத் தொடங்கிய ஜோதிராவ் புலே, சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கும் சேர்த்து ‘பாரத ரத்னா’ அளிக்கக் கேட்டிருக்கிறது பாஜக.

ஒரே கல்லில் பல மாங்காய் என்பதுபோல, சாவர்க்கரை பரிந்துரைப்பதன் மூலம் சங்க பரிவார சார்புள்ளவர்களை திருப்திபடுத்தவும் அதே சமயம் ஒடுக்கப்பட்ட – இடை சாதியினரின் வணக்கத்துக்குரிய புலே தம்பதியை பரிந்துரைப்பதன் மூலம் இந்த சமூகங்களை கவரவும் பாஜக வாக்கு வங்கி அரசியல் செய்திருக்கிறது.

புலே தம்பதியின் சமூகப்பணி என்றுமே கேள்விக்குள்ளானதில்லை; பல காலமாக மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. அவர்களுக்கு உயரிய கவுரவங்கள் அளிக்கப்படுவதை எந்தப் பிரிவினரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், சாவர்க்கர் எப்படிப் பட்டவர்? பாரத ரத்னா விருது ஆட்சியாளர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்றாலும், பாஜக சொல்லிக்கொள்ளும் சாவர்க்கர் ஈடுபட்ட சுதந்திர போராட்டத்தின் உண்மையான வரலாறு என்ன?

ஆம்…சாவர்க்கர் ஒரு காலத்தில் புரட்சியாளராக இருந்தார். இந்திய சுதந்திரத்துக்காக ஆட்களை திரட்டினார். 1906-ஆம் ஆண்டு சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றபோது, ‘ஃப்ரீ இந்தியா சொசைட்டி’ என்ற பெயரில் அங்கிருந்த இந்திய மாணவர்களை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காகத் திரட்டினார். அப்போது அவர் சொன்னார்:

“நாம் பிரிட்டீஷ் அதிகாரிகளை குறை சொல்வதை நிறுத்த வேண்டும். அதுபோலவே அவர்களுடைய சட்டங்களை குறை சொல்வதையும் நிறுத்த வேண்டும். நம்முடைய இயக்கம் குறிப்பிட்ட எந்தவொரு சட்டத்தோடு நின்றுவிடக்கூடாது. ஆனால், அது சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தைப் பெறுவதற்காக இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நமக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும்”.

ஆனால் சாவர்க்கரின் ‘இந்திய’பற்று மிகக் குறுகிய காலத்திலேயே ‘ஆங்கிலேயே’பற்றாக மாறிவிட்டது. அதுவும் மூன்றே ஆண்டு இடைவெளியில்…

1909-ஆம் ஆண்டில் நாசிக்கின் அப்போதைய கலெக்டர் ஜாக்சனை கொல்வதற்காக அபினவ் பாரத் சொசைட்டியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் துப்பாக்கியை தந்த குற்றத்துக்காக சாவர்க்கருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தது பிரிட்டீஷ் அரசாங்கம்.

சுதந்திர போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கென்ற உருவாக்கப்பட்ட அந்தமானின் செல்லுலர் சிறையில் அடைக்கப்பட்டார் சாவர்க்கர். சிறை கொட்டடி வீரர்களை புடம் போடும் என்பார்கள். ஆனால், ‘வீர’ சாவர்க்கருக்கு செல்லுலர் சிறை புதிய திறப்பைக் கொடுத்தது.

பிரிட்டீஷ் அரசாங்கத்துக்கு 1911-ஆம் ஆண்டு முதல் மன்னிப்புக் கடிதம் எழுதினார் சாவர்க்கர். அது நிராகரிப்பட்டது. 1913-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இரண்டாவது கடிதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. (நல்லவேளை அந்தக் கடிதங்கள் வரலாற்று ஆவணங்களாக பல்வேறு நூல்களில் பதிவாக்கப்பட்டுவிட்டன. இல்லையேல், சங்க பரிவாரங்களால் வரலாறு எப்போதோ மாற்றப்பட்டிருக்கும்).

சிறையில் தன்னுடன் கைதானவர்களுக்குக் கிடைத்த ‘சிறப்பு’ சலுகைகள் தனக்குக் கிடைக்கவில்லை எனத் தொடங்குகிறது அந்தக் கடிதம். சரியாக நடத்தப்படவில்லை; அதிக வேலை தருகிறார்கள், சிறப்பு கைதிகளுக்கான உணவு தராமல் சாதாரண கைதிகளுக்கான உணவு தரப்படுகிறது இப்படி தன்னுடைய ‘குறைகளை’ச் சொல்கிறார் சாவர்க்கர்.

“என்னை இந்த சிறைச்சாலையில் நிரந்தரமாக அடைப்பது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை சாத்தியமற்றதாக்குகிறது. ஆயுள் தண்டனை குற்றவாளிகளின் நிலை வேறு. ஆனால், ஐயா, 50 ஆண்டுகள் சிறை தண்டனை என்னை வெறித்து பார்க்கிறது. என்னுடன் இருக்கும் பயங்கரமான குற்றவாளிகள் பெற்ற சலுகைகள் எனக்கு மறுக்கப்படும்போது நான் எப்படி தார்மீக பலத்தை பெற முடியும். தயை கூர்ந்து, என்னை இந்திய சிறைக்கு அனுப்புங்கள்” என அடுத்த பத்திகளில் கெஞ்சத் தொடங்குகிறார் சாவர்க்கர்.

அடுத்தடுத்த பத்திகளில் பிரிட்டீஷ் அரசாங்கள், திடீரென நல்லாட்சி தருவதை உணர்ந்தவராய் இப்படி எழுதுகிறார்…

“1906-1907 -ம் ஆண்டில் இந்தியாவின் நம்பிக்கையற்ற சூழல் எங்களை கரடுமுரடான பாதைகளுக்கு தள்ளியது. ஆனால் இன்று இந்தியாவின் மீது அக்கறை கொண்ட மனிதாபிமான எந்த மனிதனும் கண்மூடித்தனமாக அதில் அடியெடுத்து வைக்க மாட்டான்.

ஆங்கில அரசாங்கம் கருணையுடன் என்னை விடுவித்தால், அரசியலமைப்பு முன்னேற்றத்திற்கு உறுதியாக பாடுபடுவதுடன் அரசாங்கத்திற்கும் நம்பகமாக நடந்து கொள்வேன்.”

கிட்டத்தட்ட பிரிட்டீஷ் அரசாங்கத்தின் தீவிர விசுவாசியாகவே மாறிவிட்ட சாவர்க்கரை அதில் காணலாம். இந்த விசுவாசத்தை எதிர்காலத்தின் காட்டுவேன் என முத்தாய்ப்பாய் இப்படி முடிக்கிறார்.

“அரசாங்கத்திற்கு உண்மையானவனாக நான் மாறியிருப்பதால் என்னை முன்பு வழிகாட்டியாக எண்ணி தவறான பாதைக்கு சென்ற இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இளைஞர்கள் அனைவரும் மாறிவிடுவார்கள். என்னுடைய மாற்றம் சொந்த விருப்பத்தின் பேரில் இருப்பதால் அரசாங்கம் விரும்பும் எதையும் எதிர்காலத்திலும் கூட செய்ய நான் தயாராக இருக்கிறேன்.”

பல மன்னிப்புக் கடிதங்களுக்குப் பின், பத்தாண்டு சிறை தண்டனைக்குப் பின் 1921-ஆம் ஆண்டு அந்தமானிலிருந்து ரத்னகிரி சிறைக்கு மாற்றப்பட்டு, 1924-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை ஆனார் சாவர்க்கர்.

அதற்குப் பிறகு, சாவர்க்கர் கையில் எடுத்ததுதான் பிரிவினைவாத அரசியல். பிரிட்டீசாரை எதிரியாகக் கொண்டு புரட்சி செய்ய கிளம்பியபோது, சதி கொடுமையை தடை செய்தல், கல்விக்கூடங்களை நிறுவுதல் போன்ற சீர்திருத்தங்களை கிறித்துவ மதத்தைப் பரப்பவே அவர்களை எதிர்த்தார். இந்துக்கள், முகமதியர்களின் கலாச்சாரத்தை அழிக்க பிரிட்டீசார் முயல்வதாக குற்றம்சாட்டினார்.

சிறையிலிருந்து வெளிவந்த சாவர்க்கர், முற்றிலும் வேறொரு நிலையை எடுத்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைந்த இந்து-முசுலீம் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் ‘இந்துத்துவ’ அரசியலை முன்வைத்தார் அவர். ‘இந்துத்துவம்’ என்ற சொல்லாடலை உருவாக்கியவரும் அவரே. ஆங்கிலேயர்களுக்கு தன்னுடைய மன்னிப்புக் கடிதத்தில் கூறியிருந்தபடியே விசுவாசியாக நடந்துகொண்டார்.

காந்தி சாத்தியாகிரக போராட்டத்தைத் தொடங்கியபோது, இரண்டாம் உலகப் போரில் பங்கேற்க பிரிட்டீஷ் படையில் சேரும்படி பள்ளி, கல்லூரி மாணவர்களைத் திரட்டிக்கொண்டிருந்தார் சாவர்க்கர்! 1941-ஆம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்க்க ஜப்பானுடன் கூட்டு வைத்து படைகளைத் திரட்டினார் சுபாஷ் சந்திர போஸ், இந்த காலக்கட்டத்தில் ‘வங்காளம் மற்றும் அசாமை சேர்ந்த இந்துக்களே உடனடியாக ஒரு நொடியையும் வீணாக்காமல் ஜப்பானை எதிர்க்க, பிரிட்டீஷ் இராணுவத்தில் சேருங்கள்’ என பேசினார். சாவர்க்கரின் பங்களிப்புக்காக பிரிட்டீஷ் கமாண்டர் பாராட்டு தெரிவித்தார் என இந்து மகா சபையின் ஆவணங்களே கூறுகின்றன.

ஒத்துழையாமை இயக்கத்தின் போதும், பிரிட்டீஷ் ஆட்சியில் பணியாற்றும் இந்துக்களை அந்தப் பதவிகளிலேயே தொடருங்கள் என வலியுறுத்திய ‘போராட்ட வரலாறு’ சாவர்க்கருடையது!

இவை அனைத்தையும்விட காந்தி படுகொலையில் சாவர்க்கரின் பங்கை வரலாறு புறம்தள்ளிவிடாது. காந்தி படுகொலையில் கோட்சேவுடன் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சாவர்க்கரும் உண்டு. போதிய சாட்சியங்கள் இல்லையெனக் கூறி அவர் விடுவிக்கப்பட்டார். இதுவரையான வரலாறு மட்டுமே அனைவரும் அறிந்தது.

ஆனால், அதன்பின் சாவர்க்கரின் பங்கு குறித்து மீண்டும் விசாரிக்க, நீதிபதி ஜிவன்லால் கபூர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் அறிக்கை, சாவர்க்கர் மற்றும் குழுவினரால் படுகொலை சதித்திட்டம் தீட்டப்பட்டதற்கான முகாந்திரம் உள்ளது எனக் கூறியது. ஆனால், அறிக்கை வெளியான ஆண்டு, 1969. மூன்றாண்டுகளுக்கு முன்பே சாவர்க்கர் இறந்துபோயிருந்தார். சங்க பரிவாரங்கள் இதைப் பேச துணிவதில்லை.

அண்மையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி பக்த் சிங் சிலையுடன் சாவர்க்கரின் சிலையையும் சேர்த்து இரவோடு இரவாக வளாகத்துக்குள் நிருவியது. பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் இறுதிவரை மண்டியிடாத, தூக்குக் கயிற்றை முத்தமிட்ட வீரர் பகத் சிங்கும், பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் விசுவாசியா இருந்த பிரிவினையாளர் சாவர்க்கரும் ஒரே சிலையாக வடிக்கப்பட்டிருந்தனர்.

அதாவது, பகத் சிங் என்னும் வீரருடன் சேர்ந்து சாவர்க்கரும் சுதந்திர போராட்ட வீரராகிவிடுவார் என சங்க பரிவாரங்கள் ‘புதிய’ வரலாற்றை திணிக்கப் பார்க்கிறார்கள் என்பதையே அந்த சிலை காட்டியது. இதன் அடுத்தக்கட்ட நகர்வுதான் சாவர்க்கருக்கு பாரத ரத்னா என்னும் முழக்கம். நடந்துகொண்டிருப்பது சாவர்க்கரின் சித்தாந்தத்தில் நடக்கும் ஆட்சி, நிச்சயம் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படலாம். அதில் சந்தேகமில்லை.

ஆனால், எப்படி இந்தத் திணிப்புகளை சகித்துக் கொண்டீர்கள் என்கிற கேள்வியை மக்களாகிய நம்மிடம் வரலாறு எழுப்பிக் கொண்டே இருக்கும்.

நன்றி: தின செய்தி.