பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கும் தீர்ப்பும் குறித்து நக்கீரன் பதிவு

மோடி ஆட்சி மத்தியில் தொடங்கியதும் மறைமுகமாக இயங்கிக் கொண்டிருந்த இந்துத்துவ அமைப்புகள் வெளிப்படையாக வெறுப்புப் பிரச்சாரத்தை தொடங்கின. தமிழகத்தில் மத அடிப்படைவாதம் வளர வாய்ப்பில்லாத சூழலில் சாதி அடிப்படைவாதத்தை கையில் எடுத்தனர், இந்துத்துவத்தின் பின்னணியில் ஒளிந்துகொண்டவர்கள். மோடி ஆட்சிக்கு முன்பே, பாமகவின் சாதி அரசியல்  தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ் கொலைகளின் பின்னணியில் அதற்கான களத்தை உருவாக்கி வைத்திருந்தது. அந்தக் களத்தில் நடத்தப்பட்ட சோதனைதான் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை தடை செய்யக்கோரிய போராட்டங்கள், கட்டப்பஞ்சாயத்துகள் எல்லாம்!

மாதொருபாகன் ஒரு புனைவு. தங்கள் சாதியை இழிபடுத்துகிறது என்று குற்றம்சாட்டப்பட்ட சம்பவங்களின் விவரிப்பையும் புனைவாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். நூலை எரிப்பது, அதை எழுதியவரை ஊர்விலக்கம் செய்வது, அவர் வீட்டுப் பெண்களை பொதுவெளிக்கு இழுப்பது என சாதி அமைப்புகள் தொடங்கிய ‘அரசியலு’க்கு அதிகார அமைப்புகளும் அரசும் துணை போயின.  உச்சபட்சமாக காவல்துறை மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் சாதியவாதிகள் கலந்துகொண்ட ‘பஞ்சாய’த்தில் பெருமாள் முருகன்  குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். ஒரு படைப்புக்காக, ஒரு எழுத்தாளனும் நேரக்கூடிய நடந்திருக்கக்கூடாத அவமரியாதையான மன உளைச்சலை ஏற்படுத்தும் தருணங்களாக அவை இருந்திருக்கும். இந்த அடிப்படையிலே பெருமாள் முருகன் எனும் எழுத்தாளன் மரணித்துவிட்டதாக எழுதினார் பெருமாள் முருகன். சாதியவாதிகள் ஓய்ந்தார்கள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், பெருமாள் முருகனுக்கு நடந்த அநீதிக்கு நீதி கோரி நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் சாதியவாதிகளின் முகத்தில் அறைந்தாற்போல், இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சாதியவாதிகளின் செயலுக்கு துணைபோன தமிழக அரசுக்கு மிகப்பெரிய அடி இது. வரவேற்கக்கூடியது. ஒரு நூலைப் பிடிக்கவில்லை எனில் தூக்கி எறியுங்கள். அதை வைத்து ஒரு எழுத்தாளனை முடக்க நினைக்காதீர்கள் என்கிறது நீதிமன்றம். சமூகத்தில் ஒளிந்துகிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்து தொடர்ந்து எழுதும்படி நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது. தமிழகத்தின் எழுத்துரிமைக்கும் கருத்துரிமைக்கு கிடைத்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது.

தீர்ப்புக்குப் பிறகு அறிக்கை வெளியிட்டிருக்கும் பெருமாள் முருகன், சற்று கால அவகாசம் எடுத்துக்கொண்டு எழுதுவதாகச் சொல்கிறார். அவர் எழுதுவார் என எதிர்பார்க்கலாம். இந்த முன்மாதிரி தீர்ப்பு இதே போன்ற சாதியவாதிகளின் ஒடுக்குதலுக்கு ஆளான எழுத்தாளர் துரை குணாவுக்கும் வழக்கு அலைகழிப்புகளிலிருந்து விடுதலை தரவேண்டும்.

நன்றி: ஜீவா பாரதி (நக்கீரன்)

குஜராத் படுகொலை தீர்ப்பும் அறிய வேண்டிய உண்மைகளும்

குஜராத் படுகொலைகளில் மிக மோசமான நிகழ்வாகக் கருதப்படுவது அகமதாபாத் குல்பர்க் குடியிருப்பில் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களே. சமூபத்தில் இந்த குடியிருப்பில் நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பையொட்டி ஏராளமான தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது.

குல்பர்க் குடியிருப்பில் கொல்லப்பட்ட முன்னாள் எம்பி இஸான் ஜஃப்ரியின் மகள் நிஸ்ரின் எழுதிய இந்த பதிவு என்னை கண் கலங்க வைத்தது. “காந்தி, நேரு, கார்ல் மார்க்ஸ், தஸ்தாவெஸ்கி, ஆஸ்கர் ஒய்ல்டு சாட்சியாக என் அப்பா கொல்லப்பட்டார்”: இஸான் ஜாஃப்ரி கொலையான அந்த நாள்

இந்தத் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த பார்ஸி பெண் ரூபா பென்னின் இந்த வாக்குமூலத்தையும் படியுங்கள் “உதவி கேட்ட இஸான் ஜஃப்ரியிடம்  நீங்கள் இன்னும் சாகவில்லையா என்று கேட்டார் மோடி”

இந்தப் படுகொலைகளின் பின்னணியில் மோடியின் பங்கு குறித்து பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜனின் பதிவு முக்கியமானது. குஜராத் படுகொலைகளின் பல உண்மைத் தகவல்கள் இதில் இருக்கின்றன.

மேக் இன் இந்தியாவிற்கு முன்பு, குஜராத்தின் அந்த குடியிருப்பு முழுவதும் இல்லாமல் ஆக்கப்பட்டது: சித்தார்த் வரதராஜன்.

மூன்று நாட்களாக குஜராத் படுகொலை நிகழ்வுகள் குறித்து மீண்டும், மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். படுகொலைகளுக்குப் பிறகு மோடி என்னும் நபருக்கு கிடைத்திருக்கும் ‘அங்கீகாரம்’ குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதும், நீதி என்ற ஒன்று இங்கே உண்டா என்கிற கேள்விகளும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.

பிகு: நண்பர் வேகநரிக்கும், இன்னும் சில நண்பர்களுக்கும் உங்கள் அன்புக்கு நன்றி. இனி தொடர்ந்து இங்கே எழுத முயற்சிக்கிறேன். தமிழ்மணத்தில் என் வலைப்பதிவை இணைப்பதில் ஏதோ தொழிற்நுட்ப தடை இருக்கிறது போலும். சரியாக்க முயற்சித்து தோற்றுவிட்டேன்.

 

பெண்குழந்தைகளுக்கு மேனகா காந்தி செய்யும் பாதுகாப்பு இதுதானா?

சுப்ரமணியம் சுவாமி பெண் வடிவாக உருவானவர் மேனகா காந்தி! எதையாவது சர்ச்சைக்குரிய வகையில் சொல்லிக்கொண்டே இருப்பார். அவருக்கு ஏற்ற கட்சியாக பாஜக அமைந்துவிட்டது. கூடுதல் சிறப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சராக பதவியும் இருக்கிறது. இனி சர்ச்சைகளுக்கா பஞ்சம்?! தினம் ஒன்றாக அவிழ்த்துவிடலாம். ஆனால் மேனகா காந்தி, அமைச்சர் பணிக்கு நேரம் ஒதுக்க வேண்டியிருப்பதால் அவ்வவ்போது மட்டுமே சர்ச்சைகளை அவிழ்த்து விடுகிறார்.

இவருடைய லேட்டஸ்ட் சர்ச்சை, பெண்கள் தங்கள் கருவில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை அறிந்துகொள்ளும் உரிமையைத் தரவேண்டும் என்கிறார்.  ராஜஸ்தான் மாநிலத்தில் மத்திய அமைச்சகத்தின் மண்டல இயக்குனர்கள் கருத்தரங்கில் பேசிய மேனகா காந்தி இந்த யோசனையை அங்கே சொல்லியிருக்கிறார். கருவிலே ஆணா பெண்ணா என்பது தெரிந்துவிட்டால், அதை வைத்து கருவை சுமக்கும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாரா என்பதை கண்டுபிடித்துவிட முடியும். இதன்மூலம் பெண்சிசுக் கொலைகளை தடுத்து நிறுத்த இயலும் என்கிறார் அமைச்சர். அதோடு, தான் கருவில் சுமப்பது ஆணா, பெண்ணா என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கு இருக்கிறது என்பது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் சொல்லியிருக்கிறார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருக்கும் மேனகா காந்திக்கு, இந்திய சமூகம் பெண்களுக்கு எவ்வகையான வாழ்க்கையைத் தந்து கொண்டிருக்கிறது என்பதை அவருக்குக் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் மூலம் அறிவார். 2011-ஆம் ஆண்டின் கணக்குப் படி 1000 ஆண்களுக்கு 943 பெண்களே உள்ளனர். பாலின விகிதாச்சாரம் சில மாநிலங்களில் இதைவிட குறைவாக உள்ளது. வரதட்சனை மரணங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறியும் சட்டம் 1994-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. சட்டம் இருந்தும்கூட பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதை தடுக்க முடியவில்லை. சமூகத்திலிருந்து மாற்றம் வரும்வரை கடுமையான சட்டங்கள் போட்டாலும் இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது. இந்த நிலையில், சமூகத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான வழிகளைத் தேடுவதை விடுத்து, அதிரடியாக தலைகிழான யோசனை முன்வைக்கிறார் மேனகா காந்தி. வரதட்சணையை மையப்படுத்தி எடுக்கப்படும் தங்க நகைக்கடை விளம்பரங்களைத் தடுக்க மேனகா காந்தி ஏதாவது சட்டம் இயற்றுவாரா? வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னெடுப்பாரா? இதுதானே பெண்களை பாரமாகக் கருதி சிசுவிலே அவர்களை அழிக்க வைக்கிறது.

பாலினத்தை கண்டறியும் சோதனைக்கு தடை உள்ளபோதே வெளிப்படையாக பெண்சிசுக்களை கருவிலே அழிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் லேசான பயத்தைக் கொடுக்கும் அந்தச் சட்டத்தையும் நீக்கிவிட்டால், பிரச்சினையே இல்லை. ஆண் குழந்தைகளை மட்டும் இந்திய சமூகம் பெற்றெடுக்க ஆரம்பித்துவிடும். மேனகா காந்தியின் வாதப்படியே, கருவில் இருப்பது பெண் தான் என்று அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டாலும் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத காரணத்தால் கரு அழிந்துவிட்டது என அதை சுமந்தவர் தரப்பில் சொன்னால், அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும்? இவரேதான் கருகளைப்புகளை கண்காணிப்பது கடினமாக இருக்கிறது என்கிறார். பிறகு, சட்டத்தை நீக்கிவிட்டு, கருவில் இருக்கும் குழந்தையில் விவரங்களை பதிவு செய்து கண்காணிப்பது மட்டும் எளிதாக இருக்குமா?

இத்தகைய குளறுபடியான கருத்துகளுக்காகத்தான் மேனகா காந்தியை, சுப்பிரமணியம் சுவாமியுடன் ஒப்பிட முடிகிறது. சென்ற வாரம் மகாராஷ்டிர மாநிலம் சனி பகவான் கோயிலில் தங்களுக்கு வழிபடும் உரிமை வேண்டும் என்று பெண்கள் நடத்திய  போராட்டம் குறித்து, மேனகா காந்தியிடம் கேட்கப்பட்டபோது, அதை சமூகத்திடமே விட்டுவிட வேண்டும் என்று பதில் சொன்னார். இந்திராவின் மருமகளுக்கு இருக்கும் சமூக அக்கறையை இந்த விஷயமே எடுத்துக் காட்டும்!

தினச்செய்தி(3-2-2016) நாளிதழில் வெளியானது.

மத போதகருக்கு மொட்டையடித்து, கழுதையில் ஏற்றி ஊர்வலம்: கிறித்துவர்களை குறிவைக்கும் இந்துத்துவ அமைப்புகள்!

ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியில் 2008-ஆம் ஆண்டு கிறித்துவர்களின் மதமாற்றத்தை தடுப்பதாகக் கூறி விஷ்வ ஹிந்து பரிஷத் தூண்டிவிட்ட கலவரம் மறக்கக் கூடியதல்ல.  இந்தக் கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டதும் 50 ஆயிரம் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து அகதிகளானதும் நடந்தது.  அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசின் பிரதமர் மன்மோகன் சிங், ‘நாட்டின் அவமானம்’ என்று இதை சொல்லியிருந்தார்.

இந்து மதத்தின் தனித்துவத்தை காப்பாற்றும் பொருட்டு, பழங்குடி மக்கள் கிறித்துவ மதத்துக்கு தாவுவதை தடுக்கும் வகையில் கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாமியார்கள் இதை முன்னின்று நடத்தினர். இந்த சம்பவங்களுக்கெல்லாம் முன்னோடியாக 1999-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன்னுடைய இருமகன்களுடன் ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்தபோது எரித்துக் கொல்லப்பட்டார். இதைச் செய்தது விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த தாராசிங் என்பவர்.

இந்தச் சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் உத்தர பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை கிறித்துவ போதகர் ஒருவர் மிகக் கடுமையான முறையில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். பாதி மழித்த மீசை, பாதி மழித்த தலைமுடி, புருவ முடியும்கூட பாதி மழிக்கப்பட்டநிலையில், செருப்பு மாலைகள் அணிவிக்கப்பட்டு கழுதையில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டிருக்கிறார். இவரை இப்படி ஊர்வலமாக பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆட்கள் அழைத்துச் சென்றனர்.
பஜ்ரங் தள் அமைப்பினர் போதகர் மேல் குற்றச்சாட்டு, மூன்று இந்துக்களை ஏமாற்றி கிறித்துவர்களாக மதம் மாற்றி அவர்களை மாட்டிறைச்சி உண்ண வைத்தார் என்பதே. மாட்டிறைச்சியை வேண்டுமென்றே உண்ண வைத்தார் என்று இவர்கள் அழுத்தம் சேர்த்துக் கொள்கின்றனர்.

தனக்கு விருப்பமான மதத்தை பின்பற்றவும் அதைப் பற்றி போதனை செய்யவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்தியரின் அடிப்படை உரிமையாக வரையறுக்கிறது. இந்நிலையில் மதத் தூய்மைவாதம் பேணுகிறோம் என்கிற பெயரில் இந்துத்துவ அமைப்புகள், அடிப்படை உரிமைகளை பறிக்கும்வகையிலும் மனிதத் தன்மையற்ற முறையிலும் இத்தகைய செயல்களைச் செய்கின்றன. உபியில் மனிதத்தன்மையற்று போதகரிடம் நடந்து கொண்டவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 2015-ஆம் ஆண்டில் மட்டும் முஸ்லிம், கிறித்துவ மதத்தினருக்கும் எதிராக 600க்கும் மேற்பட்ட வன்முறைகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. இந்த வன்முறைகளில் 40 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த விவரம் சொல்கிறது. கிறித்துவர்களுக்கு எதிராக மட்டும் 149 வன்முறைச் சம்பவங்கள். இதில் கொல்கத்தாவில் 70 வயது கன்னிகாஸ்திரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும் அடங்கும்.

பெரும்பாலும் முஸ்லிம்களை குறிவைத்தே அரங்கேறிய வன்முறை சம்பவங்கள், இப்போது கிறித்துவர்களை நோக்கி படர ஆரம்பித்துள்ளன. மவுனப் பிரதமராக பெயர் பெற்ற மன்மோகன் சிங், மத வெறியாட்டங்களைப் பார்த்துக்கொண்டு எப்போதும் மவுனமாக இருந்ததில்லை. ஆனால், அக்லக் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரமாகட்டும் சிறுபான்மையினருக்கு எதிரான எந்தவொரு வன்முறையாகப்பட்டும் இன்றைய பிரதமர் மோடி, வாயைத் திறக்காமல் மவுனம் காக்கிறார். இந்த மவுனம்தான் இந்துத்துவ அடிப்படைவாதிகளுக்கு வன்முறையை அவிழ்த்துவிட சம்மதமாகத் தெரிகிறதோ என்னவோ?!

தினச்செய்தி(31-01-2016) நாளிதழில் வெளியானது.

#2015 : இந்துத்துவ பரிசோதனைகளின் ஆண்டு!

2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் காங்கிரஸுக்கு பின்னடைவைத் தரும் என்பது அனைவரும் எதிர்ப்பார்த்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் தவிர, மற்ற கட்சிகள் மத்தியில் பெரும்பான்மைப் பெற்றதில்லை. அந்த வகையில் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிருப்தி காரணமாக காங்கிரஸும் பெரும்பான்மை பெறாது; மற்ற கட்சிகளும் பெரும்பான்மை பெற முடியாது என்றே அரசியல் ஆரூடங்கள் சொல்லிவந்தன. பாரதிய ஜனதா கட்சியை பெரும்பான்மை பெறக்கூடிய கட்சியாக எவரும் கணிக்கவில்லை.

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் திட்டம் ’சிறப்பானதாக’ நடைமுறைப்படுத்தக்கூடியதாக மாற்றி அமைக்கப்பட்டது. இதை மாற்றி அமைத்தது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம்! கூட்டணி ஆட்சி மத்தியில் அமையலாம், அப்படி அமைந்தால் பிரதமர் ஆக்கப்படலாம் என்கிற கனவில் இருந்த எல்.கே. அத்வானியை புறம்தள்ளிவிட்டு, நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்பட்டார்.  அத்வானியும் ஆர் எஸ் எஸ்ஸின் தீவிர தொண்டர்தான், ஆனால் அவருடைய ‘அரசியல்’ காலாவதியாகிவிட்டதாகக் கருதியது ஆர். எஸ். எஸ்.
போலியை மறைக்கும் பொலிவான வளர்ச்சி முகமாகத் தெரிந்தார் மோடி. குஜராத்தில் அவர் முன்வைத்த ‘மத அரசியல்’, ‘வளர்ச்சி’ என்ற பூச்சால் அழகாக பூசி மெழுகப்பட்டிருந்தது. இதை குஜராத் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்; அதுபோல இந்த பூச்சை நாடு முழுவதிலும் பரப்புவதற்கு நரேந்திர மோடியைத் தேர்ந்தெடுத்தது ஆர்.எஸ்.எஸ்.

இல்லாததை இருப்பதென காட்ட தொழில்முறை காப்பொரேட் நிறுவனங்கள் தேர்தல் பணியாற்ற அமர்த்தப்பட்டார்கள். வெற்றி எதிர்பாராததாக அமைந்தது. மிகப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியில் ஏறியது. முதல் ஆறு மாதங்கள் ஆரம்பக் கட்ட அதிகார டாம்பீகங்களைக் காட்டிக் கொள்வதுமாக சென்றது. இந்துத்துவ அமைப்புகள் இந்தக் காலத்தில் எதிர்காலத்திட்டங்களை கூர்தீட்டிக் கொண்டார்கள்.

வழக்கமாக பாஜகவின் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் இந்து சாமியார்கள் ‘சர்ச்சைக்குரிய’ கருத்துக்களை சொல்ல ஆரம்பித்திருந்தார்கள்.  அவற்றை ஆரம்பம் முதலே அது அவர்களுடைய சொந்தக் கருத்து என்று தப்பித்துக்கொள்ளும் வழிமுறையை பாஜக சொல்லக் கற்று வைத்திருந்தது. டெல்லியில் கர்வாப்ஸி(தாய் மதத்துக்கு திரும்புதல்) என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் இந்து மதத்துக்கு திருப்பிக் கொண்டிருந்தன இந்துத்துவ அமைப்புகள். அதன் அடுத்த கட்டமாக  2015 ஜனவரியில் டெல்லியில் கிறித்துவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடந்தது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஒபாமா, அமெரிக்காவுக்குச் சென்று தேவாலய தாக்குதல்கள் குறித்து கண்டித்தார்.

“மதமாற்றத்தை மத்திய அரசு முழுமையாக தடை செய்யும் வரை தாய் மதம் திரும்பும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும்” என விசுவ இந்து பரிஷத் தலைவர் ப்ரவீன் தொகாடியா பேசினார்.  ஆனால் அரசு தரப்பில் இருந்து கண்டிப்புக்கு பதிலாக கண்டுகொள்ளாத தன்மை வெளிப்பட்டது. இந்த கண்டுகொள்ளாத தன்மையை இந்த அமைப்புகளுக்கு பாஜக அரசு தரும் க்ரீன் சிக்னலாக புரிந்து கொள்ள வேண்டும்.

நாடுமுழுவதும் அடுத்த மூன்று மாதங்கள் கர்வாப்ஸி நிகழ்வுகள் ஜரூராக நடந்தன. தமிழகத்திலும் ஆங்காங்க ஒரு சிலர் இந்துக்களாக மதம் மாறினர். இந்துக்களாக மதம் மாற இந்து அமைப்புகள் பணம் கொடுத்ததாக பத்திரிகைகள் துப்பு துலக்கிய நேரத்தில், இந்து அமைப்புகள் அடுத்த விவகாரத்துக்கு தாவின. இந்த முறை அவர்களின் கவனம் பகுத்தறிவாளர்கள் பக்கம் திரும்பியது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கோவிந்த் பன்சாரே, சமகாலச் சூழலில் இந்துத்துவ மோசடிகளை, மூடநம்பிக்கைகளை கேள்வி கேட்டவர். கோயில்களில் தலித்துகள், பெண்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமைகளுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்தார்; இயக்கம் நடத்தினார்.  சிவாஜியை முன்னிறுத்தி சிவ சேனாவும் மற்ற இந்து அமைப்புகளும் மத அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில் பன்சாரே எழுதிய ‘சிவாஜி யார்?’ என்கிற புத்தகம் சிவாஜியின் உண்மையான வரலாற்றைச் சொன்னது. ஏற்கனவே தங்களின் ‘எதிரி’கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த அவரை, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒழிப்பது இந்துத்துவ அமைப்புகளுக்கு மிக எளிதான செயலாகத்தான் இருந்தது. அதிகாலையில் நடைபயிற்சிக்குச் சென்றிருந்த பன்சாரே நெற்றிப் பொட்டில் சுடப்பட்டார்.

நாடு முழுவதும் இந்துத்துவ அமைப்புகளின் எழுச்சி ஆரம்பித்த அதே காலக்கட்டத்தில் தமிழகத்தில் அந்த எழுச்சியானது எழுத்தாளர் பெருமாள் முருகனை முன்வைத்து நடந்தேறியது. பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் வெளியானபோது வராத விமர்சனம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது.  தங்கள் சாதி மக்களை தவறாக சித்தரிப்பதாக ஒரு குறிப்பிட்ட சாதி சங்கங்கள் போராட்டங்கள் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்துக்களை நடத்தின. அதற்கு இந்துத்துவ அமைப்புகள் முழு ஆதரவும் கொடுத்தனர். இறுதியில் பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் இறந்துவிட்டார் என்று அவரையே எழுத வைத்தார்கள்.

இந்துத்துவம் முன்வைக்கும் ‘புனித’ பிம்பங்களுக்கு எதிராக எழுதுவதையோ, விமர்சிப்பதையோ வேரறுக்க வேண்டும் என்பதை முதல் பணியாக இந்துத்துவ அமைப்புகள் கொண்டன. அடுத்த ‘பலி’யை அவர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். எம். எம். கல்புர்கி, பசவண்ணரின் தத்துவ சாரத்தை மீண்டும் மக்கள் முன்வைத்த சிந்தனையாளர், பேராசிரியர். கர்நாடகத்தில் இந்து மதம் முன்வைத்த சாதி தீண்டாமையை ஒழிக்க புதிய மதத்தை தோற்றுவித்தவர் பசவண்ணர்.

காலப் போக்கில் பசவண்ணரை இந்துத்துவ சக்திகள் இந்து மத ஞானியாக மாற்றினர், அவருடைய கொள்கைகளை மழுங்கடித்தனர். இதனை மீண்டும் கர்நாடக மக்களுக்கு நினைவுபடுத்தும் பணியைச் செய்து வந்தார் கல்புர்கி. இந்து மதம் உருவ வழிபாட்டை முன்வைத்த போது, அதை மறுத்த பசவண்ணிரின் கருத்துக்களை கல்வி மேடைகளில் பேசினார். இதுதான் இந்துத்துவ அமைப்புகளுக்கு  பிரச்சினையாக இருந்தது. கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்ட அதே பாணியில் கல்புர்கியும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கல்புர்கியின் மரணம்தான் இந்தியாவின் மனசாட்சியை எழுப்பி விட்டது. சமூகத்தின் மனசாட்சிகளாக கருதப்படும் எழுத்தாளர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.  இந்தியாவின் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பி அளித்தார்கள். அரசியல் சார்பற்று தன்னெழுச்சியாக நடந்தது இந்தப் போராட்டம். தமிழ் எழுத்தாளர்களைத் தவிர, அனைத்து இந்திய மொழிகளில் எழுதும் விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்களுடைய விருதைத் திருப்பி அளிப்பதன் மூலம் இந்துத்துவ அமைப்புகளின் ‘தாலிபான்’ கலாச்சாரத்தைக் கண்டித்தார்கள்.

ஒருபுறம் எழுத்தாளர்களின் விருதைத் திருப்பி அளிக்கும் போராட்டம் வலுக்க ஆரம்பித்த அதே நேரத்தில், மாட்டிறைச்சி அரசியலை பாஜகவும் இந்துத்துவ அமைப்புகளும் கையில் எடுத்தன. ‘புனித பசு’ என்னும் முன்னிறுத்தி இவர்கள் செய்து வந்த ‘வெறுப்பு’ அரசியலின் விளைவாக உத்திர பிரதேசத்தில் முகமது அக்லக் என்னும் அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டது. ‘அடித்துக் கொல்லுதலை’ நியாயப்படுத்த புராணங்களை துணைக்கு வரவழைத்துக் கொண்டார்கள் இந்துத்துவ சக்திகள். முகமது அக்லக்கின் கொலையில் உள்ளூர் பாஜகவினரே குற்றவாளிகளாக இருந்தார்கள்.

‘300 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து ஆட்சி’ அமைந்ததில் 300 ஆண்டுகாலமாக செய்ய மறுக்கப்பட்ட அத்தனை விஷயங்களையும் பாஜகவின் ஐந்தாண்டுகால ஆட்சியில் செய்து விடலாம் என்கிற முனைப்பில் பாஜகவின் மறைமுக அஜெண்டாவாக இருக்கிறது என்பதும் அதற்கான முன்னோட்டமாக இந்த ஆண்டின் அடுத்தடுத்த நிகழ்வுகளை அரங்கேற்றின இந்து அமைப்புகள்.  முஸ்லிம், கிறித்துவர் உள்ளிட்ட சிறுபான்மையினரை தாய் மதம் திரும்ப அழைப்பது, மறுப்பவர்களை பாகிஸ்தானுக்குப் போ என்று சொல்வது, உணவை முன்வைத்து மக்களைப் பிரிப்பது, கல்வி அமைப்புகளில் இந்துத்துவ ஆட்களை நியமிப்பது, அறிவியலுக்குப் புறம்பான புராண கதைகளை உண்மையென நிறுவ முயல்வது, பகுத்தறிவாளர்களை அச்சுறுத்துவது என இந்த ஆண்டு இந்துத்துவத்தின் ‘எழுச்சி’ ஆண்டாகவே அமைந்துவிட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு என்கிற முத்திரையுடன் பாஜக அரசு மிக நுணுக்கமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த நுணுக்கங்கள் வெளிப்படையாக அரசிடமிருந்தே வெளிப்படலாம். ராமர் கோயில் கட்டுவது உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை வைத்து  பிரித்தாளக் காத்திருக்கிற இந்துத்துவ சக்திகளிடமிருந்து மக்கள் எப்படி தங்களைக் காத்துக்கொள்ளப் போகிறார்கள்? புத்தாண்டை வரவேற்கும் வேளையில் இந்தக் கேள்விக்கான பதிலையும் தேடுவோம்…

தினச்செய்தி(1-1-2016) நாளிதழில் வந்த கட்டுரை.