அம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி!

“உன் காதலின் ஒரு துளி கலந்திருந்தது
எனவே, நான் வாழ்க்கையின் முழு கசப்பையும் குடித்தேன்”

இந்திய இலக்கியத்தில் காதலைக் கொண்டாடிய, எழுதித் தீர்த்த ஒரு பெண் கவி உண்டென்றால் அது அம்ரிதா ப்ரீதமாக மட்டுமே இருக்க முடியும். அவருடைய கவிதைகளில் காதலின் உள்ளொளி இருந்தது. அதனால்தான் காலம்கடந்தும் அவருடைய கவிதைகள் நேற்று படைத்தது போல உள்ளன.

நவீன எழுத்தில் பஞ்சாபி மொழிக்கு மகுடத்தை சூடிச் சென்ற அம்ரிதா, பிரிவினைக்கு முந்தைய பஞ்சாபின் குஜ்ரன்வாலா என்ற ஊரில் பிறந்தவர் . அவருடைய தந்தை கர்தார் சிங் கவிஞர், சீக்கிய மத பிரச்சாரகராகவும் இருந்தவர். தாய் ராஜ் பீபி பள்ளி ஆசிரியராக இருந்தவர். தன்னுடைய 11 வயதில் தாயை பறிகொடுத்த அம்ரிதாவும் அவருடைய தந்தையும் லாகூருக்கு குடிபெயர்ந்தனர்.

‘ரெவின்யூ ஸ்டாம்ப்’ என்ற தன்னுடைய சுயசரிதையில், தாயைக் காப்பாற்றாத கடவுளை இனி வணங்கப் போவதில்லை என ஆன்மீகவாதியான தனது தந்தையுடன் வாக்குவாதம் செய்ததை பதிவு செய்துள்ளார். தன்னுடைய பதின்பருவத்தில் தாய் இருந்திருந்தால் தன்னுடைய நிலை வேறுமாதிரியாக இருந்திருக்கும் என வருந்துகிற அவர், வீட்டுக்குள் முடக்கப்பட்ட தன்னை வேறு உலகத்தை சிருஷ்டிக்க வைத்தது எழுத்து மட்டுமே என்கிறார்.

தனிமையை எழுதிக் கடக்க முனைந்த அவர், தன்னுடைய 13 வயதில் முதல் கவிதை தொகுப்பான ‘அம்ரித் லெக்ரானை’ வெளியிட்டார். ஆன்மீக பாடல் நடையில் எழுதப்பட்டிருந்தது இது. அடுத்து 16 வயதில் வெளியான ‘தண்டியான் கிரண்’ என்ற கவிதை நூல் மூலம் பஞ்சாபின் முதல் புதுக்கவிதை படைத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

அதே வயதில் சிறுவயதில் நிச்சயக்கட்ட ப்ரீதம் சிங்கை மணந்தார். அதன்பின் ‘அம்ரிதா ப்ரீதம்’ என்கிற பெயரில் எழுத ஆரம்பித்தார். கட்டாயத்தின் பேரில் சேர்த்துக்கொண்டாரா அல்லது காதலுடன் சேர்த்துக்கொண்டாரா என்பது தெரியாது. ஆனால், அந்தப் பெயர் நிலைத்து இந்திய இலக்கிய உலகில் இறவாப் புகழ் பெற்றுவிட்டது!

அம்ரிதா ப்ரீதமின் ஆரம்பகால கவிதைகள் காதலால் நிரம்பியவை. அதன்பின் முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்துடன் உண்டான அறிமுகத்தால் சமூக பிரச்சினைகள் குறித்து எழுதத் தொடங்கினார். 1943-ஆம் ஆண்டின் வங்க பஞ்சத்தை ஒட்டி எழுதப்பட்ட ‘மக்களின் கோபம்’ என்ற கவிதை தொகுப்பும் பிரபலமானது.

பாகிஸ்தானின் இடதுசாரி இதழ்களில் எழுதிய அம்ரிதா, லாகூரில் இருந்த வனொலி நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். லாகூரின் இலக்கிய வட்டத்தோடு தொடர்பில் இருந்தார். ஒரு பெண் கவிதைகள் எழுதுவது, முற்போக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பது இப்போதும்கூட விமர்சனத்துக்குரியதாகவே உள்ளது. அம்ரிதாவின் காலத்திலும் அது இருந்திருக்கிறது.

இலக்கிய வட்டாரத்தில் தன்னைச் சுற்றி புனையப்பட்ட ‘காதல்’கள் குறித்து அம்ரிதா தன்னுடைய சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார். லாகூரில் மட்டுமல்ல, டெல்லி வந்த பிறகு இங்கேயும் கூட அத்தகைய ‘கிசுகிசுக்கள்’ தன்னைச் சுற்றி கிளம்பியதையும் அவர் கூறுகிறார்.

பத்து லட்சம் பேருக்கும் மேலாக பலிவாங்கிய இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் நேரடி சாட்சியமாக இருந்தவர்களில் அம்ரிதாவும் ஒருவர். 1948-ஆம் ஆண்டு தன்னுடைய 28 வயதில் பாகிஸ்தானின் லாகூரிலிருந்து டேராடூனுக்கு ரயிலில் வந்தபோது புகழ்பெற்ற பஞ்சாபி சூஃபி கவிஞரான வாரீஸ் ஷாவுக்கு எழுதுவதாக பிரிவினையின் துயரங்களை கவிதையாகப் பகிர்ந்துகொண்டார்.

பிரிவினை குறித்த எழுத்தப்பட்ட முதல் கவிதை இது. இதை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங், “அவர் உருவாக்கிய அந்த சில வரிகள் அவரை இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இறவாப் புகழ் பெற்றவராக்கிவிட்டன”என எழுதினார்.

1984-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சீக்கிய படுகொலை வழக்கின் சமீபத்திய தீர்ப்பொன்றில் அம்ரிதாவின் இந்தக் கவிதையை மேற்கோள் காட்டியிருந்தார் நீதிபதி…

“வெறுப்பின் விதைகள் வேகமாக வளர்ந்துவிட்டன; எங்கு நோக்கினும் ரத்தத்துளிகள்
நஞ்சு பாய்ந்த தென்றல் காட்டில் உள்ள மூங்கில் குழல்களை பாம்புகளாக மாற்றிவிட்டன
அவைகளின் நஞ்சு, ஒளியும் வண்ணமும் மிக்க பஞ்சாபை நீலமாக மாற்றிவிட்டன”

வெறுப்பின் அரசியல் அரங்கேறும் இன்றைய இந்திய சூழலுக்குப் பொருந்தும்படியாகவும் உள்ளது இந்தக் கவிதை. இந்திய-பாகிஸ்தான் பிரிவினை, சீக்கிய கலவரம் அல்லது வெறுப்பரசியலால் தூண்டப்படும் கும்பல் கொலைகளுக்கும்கூட அம்ரீதாவின் கவிதை பொருந்திப் போகிறது. வன்முறை என்னும் நச்சின் பாதிப்பை உள்ளுணர்ந்து கவிதையாகப் படைத்துவிட்டார் அவர். அது காலம் கடந்து நிற்கிறது.

இந்தியா-பாக் பிரிவினையை ஒட்டி எழுதப்பட்ட ‘பிஞ்சர்’(எலும்புக்கூடு) என்ற நாவலும் பிரபலமானது. பின்னாலில் இது இந்தியில் திரைப்படமாகவும் ஆக்கப்பட்டது.

டெல்லியில் வந்த பிறகு அனைத்திந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றினார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார். தனது இருபத்தைந்து ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். தனது மணவாழ்க்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயம் இருந்தது. இருவரும் பேசி இயல்பாகவே பிரிந்தோம் என்கிறார்.

அவருடைய திருமண வாழ்க்கையில் காதல் இருந்ததில்லை. அந்தக் காதலை அம்ரிதா தேடிக்கொண்டே இருந்தார். சாஹிர் லூதியானி என்ற பிரபல கவிஞருடன் அவருக்கு ஆழமான காதல் இருந்தது.

‘சாஹிர் என்னுடைய சாத்தார்
நான் அவருடைய சிமோன்’ என எழுதினார் அம்ரிதா.

‘உன் மரத்தின் கிளையை நான் கண்டபோது
என் உடைந்த இதயத்தின் பறவை அங்கே நிரந்தமாக தங்கிவிட்டது’ சாஹிர் உடனான காதல் குறித்து எழுதிய கவிதை இது. ஆனால், அது ஒரு ‘கோரப்படாத காதலாக’வே எஞ்சிவிட்டது. சாஹிருக்கு அம்ரிதாவின் காதலை ஏற்றுக்கொள்ளும் துணிவில்லை.

‘நான் முழுமனதாக உன்னை காதலிக்கிறேன்
நீங்கள் அந்த அளவுக்கு என்னை காதலிக்கிறீர்களா?’ என வினவினார். அந்தக் காதல் முறிந்தது.

‘இது ஆத்மாவால் உணரப்பட வேண்டிய ஒரு உணர்வு
காதல் காதல் என்ற பெயரிலேயே இருக்கட்டும்
அதற்கொரு பெயர் கொடுத்து மாசாக்கிவிடவேண்டாம்’ அவர் துயரப்படவில்லை. மாறாக, சாஹிருடனான காதலைக் கொண்டாடினார்.

அதன்பின், ஓவியரும் கவிஞருமான இந்திரஜித் இம்ரோசுடன் காதல் கொண்டு, தன்னுடை இறுதி காலம் வரை அவருடை வாழ்ந்தார். டெல்லி வந்த தொடக்க காலத்திலிருந்தே அம்ரிதாவின் நண்பராக இருந்தவர் இம்ரோஸ். இவருக்காக இறுதியாக எழுதப்பட்ட ‘மீண்டும் உன்னை சந்திப்பேன்’ என்ற காதல் கவிதையும் புகழ்பெற்றது.

காதால் நிரம்பிய கவிதை உலகத்தைப் படைத்த அவர், தன்னுடைய சிறுகதைகளில் பெண்களின் அக உலகைப் படைத்தார். ‘காட்டுப் பூ’ அப்படியான ஒரு சிறுகதை. பிற்போக்குத்தனங்களோடு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு நகரத்தில் ஒருவனுக்கு இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வைக்கப்படும் ஒரு பெண் காதல் வயப்படுவதே கதையின் மையக்கரு. ஒரு ஆண் எழுதியிருந்தால் அது ஆபாசமான உறவு மீறல் கதையாகியிருக்கும். அம்ரிதா அதை பூப் போல படைத்திருக்கிறார்.

தன்னுடைய எழுத்தை பெண் எழுத்து என வகைப்படுத்துவதில் அவருக்கு விருப்பம் இருந்ததில்லை. சுயசரிதையில் அப்படித்தான் குறிப்பிடுகிறார். நேர்காணல் ஒன்றில், “ஒரு ஆண், பெண்ணின் ஆற்றலை நிராகரிக்கிறார் எனில், அவர் தன்னுடைய உள்ளுணர்வை நிராகரிக்கிறார் என பொருள். ஆணின் வெளிப்புறம் ஆண் தன்மையுடையது உள்புறம் பெண் தன்மையுடையது. இரண்டும் சேர்ந்ததுதான் மனித இனத்தின் அடிப்படை” என விளக்குகிறார் அதை.

2005-ஆம் ஆண்டு தன்னுடைய 86 வயதில் முதுமை காரணமாக காலமானார் அம்ரிதா. அவருடைய எழுத்து இறவாப் புகழோடு வாழ்ந்துகொண்டிருக்கிறது.

‘நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்
எப்படி எங்கே என்று
எனக்குத் தெரியாது
ஒருவேளை உன் கற்பனையின்
ஒரு பகுதியாக இருப்பேன்
உன் சித்திரத்திரையில்
மர்மமான கோடாக என்னைப் பரப்பிக்கொண்டு
உன்னை உற்று நோக்கிக்கொண்டிருப்பேன்’ என சொல்லிச் சென்றதுபோல…

அம்ரிதா ப்ரீதம் நூற்றாண்டை ஒட்டி, தி இந்து தமிழின் இணைப்பான பெண் இன்று-வில் வெளியான கட்டுரை.

இரா. முருகவேளின் ‘செம்புலம்’

தமிழ் நாவல்கள் பெரும்பாலும் எடிட் செய்யப்படாமல்தான் வெளியாகின்றன. (சில சமயம் எழுத்துப் பிழைகளைக்கூட பதிப்பகங்கள் திருத்துவதில்லை. 🙂 ) என்னைக் கேட்டால் நிச்சயம் நாவல் எடிட் செய்யப்பட வேண்டும். எழுத்தாளரின் ‘சுயம்’ எப்படி வெளியே வரும்? என்பதெல்லாம் வாசகருக்கு ஒரு பொருட்டே அல்ல. வாசகருக்கு என்ன வேண்டும்? நிச்சயம் நல்லதொரு வாசிப்பனுபவத்தை பெற வேண்டும். அந்த வகையில் எழுத்தாளர் இரா. முருகவேளின் நாவல்களை வாசகர்கள் வரவேற்கிறார்கள் என நினைக்கிறேன். நாவல் மொழி, அவருக்கு சிறப்பாக கைவந்திருக்கிறது என்பதற்கு ‘செம்புலம்’ மீண்டுமொரு உதாரணம். அவர் ஒரு பெஸ்ட் செல்லர் எழுத்தாளர்.

செம்புலம்’ நாவலை கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் வாங்கலாம்.

http://imojo.in/esr4j2

சினிமாவை எப்படி இலக்கியத்தரமாக்கலாம்?: பாஸ்கர் சக்தி நேர்காணல்

பாஸ்கர் சக்தி, வெகுஜன வாசகர்களை சென்றடைந்த ஒரு எழுத்தாளர். செறிவுள்ள கதைகளைப் படைத்தவர். தமிழ் சினிமாவில் சொற்பமாக உள்ள வசனகர்த்தாக்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். எம்டன் மகன்,வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல,முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, பாண்டிய நாடு போன்ற படங்களுக்கு வசனங்கள் எழுதியிருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களுக்கு தொடர்ந்து வசனம் எழுதி வருகிறார். இவருடைய நாவல் ‘அழகர்சாமியின் குதிரை’ சுசீந்திரனால் இயக்கப்பட்டு தேசிய விருதுகளைப் பெற்றது. அந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியவரும் இவரே. இலக்கியத்திலிருந்து சினிமாவுக்கு வருவது பலமாக அமைந்ததா? இலக்கியங்களை சினிமாவாக்குவது தமிழ்ச் சூழலில் ஏன் பரவலாக இல்லை? என்பது போன்ற சில கேள்விகளுக்கு பதில் தந்தார் பாஸ்கர் சக்தி…

கேரளத்தில் சினிமாவும் இலக்கியமும் நெருக்கமாக இயங்குகின்றன. பல இலக்கியப் படைப்புகள் தொடர்ந்து சினிமாவாகின்றன. அங்கே ஒரு தொடர்ச்சி இருக்கிறது. தமிழில் அப்படியான ஒரு சூழல் இல்லை. இதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் இலக்கியத்துக்கான இடமும் கேரளத்தில் இலக்கியத்துக்கான இடமும் வேறுபடுகிறது. அங்கு எழுத்தாளர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு.  தமிழ்நாட்டில் பெரும்பாலும் எழுத்தாளர்களைக் கண்டுகொள்வதில்லை. அப்படியே பார்த்தாலும் யாரை எழுத்தாளர்களாக பார்ப்பார்கள் என்றால், வெகுஜன பத்திரிகையில் எழுதுகிறவர்களில் ஒரு சிலரைத்தான். உதாரணத்துக்கு சுஜாதா, பாலகுமாரன் போன்றோர்களுக்கு ஸ்டார் எழுத்தாளர்கள் அந்தஸ்து இருந்தது. அப்புறம் ஜெயகாந்தன் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை..நான் சிறுவனாக இருந்தபோது இரண்டு படங்கள் வந்தன. சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற இரண்டு படங்கள். அதில் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் ஹிட்டானது. அடுத்து  எடுத்த ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படம்  ஓடவில்லை. தமிழ்நாட்டில் வெற்றிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. நாளைக்கே பிரபலமான இலக்கியத்தை படமாக எடுத்து அது வசூல் ஆகிவிட்டது எனில், எல்லோரும் அதுபோல எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இது மாதிரி ஒன்று இங்கே நடக்கவேயில்லை.

இங்கே கதை பஞ்சம் எப்போதுமே இருக்கிறது. இலக்கியத்துக்குள் போனால் நிறைய கதைகள் கிடைக்கும். ஆனால் அதற்கான உழைப்பைச் செலுத்த யாரும் தயாராகயில்லை. இரண்டு வருடங்களில் எத்தனை பேய் படங்கள் வந்திருக்கிறது என்று உங்களுக்கே தெரியும்.  ரெண்டு, மூணு படங்கள் வசூலானது என்ற உடனே, எல்லாவிதமான பேய்ப்படங்களும் வர ஆரம்பித்துவிட்டன. பேய்-காமெடி அப்படியென்றால் ஹிட்.  தற்போது வெளியான தில்லுக்கு துட்டு என்ற படமும் அப்படித்தான் ஹிட்டாகிவிட்டது. இப்படியிருந்தால் வேறு மாதிரி கதைகள் எப்படி வரும்?. காலம்காலமாக டிரெண்ட்டை ஒட்டித்தான் இங்கே சினிமா செய்துகொண்டிருக்கிறார்கள். நாவல் படிப்பதற்கோ, சிறுகதை படிப்பதற்கோ அவர்களுக்கு நேரமில்லை. ஸ்கிரிப்டுக்காக மெனக்கெட தமிழ் சினிமாவில் பெரும்பாலானோர் தயாராக இல்லை. ஒருசில விதிவிலக்குகள் உண்டே தவிர, எல்லோரும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

இலக்கிய வாசிப்பு பழக்கமற்ற சமூகமும் இதற்கொரு காரணமில்லையா?

உண்மைதான். விசாரணை ஒரு தனிமனிதரின் அனுபவமாக இருந்தாலும் இலக்கிய பிரதி அது. அந்தப்படம் விருதெல்லாம் வாங்கியது, ஆனால் கமர்ஷியலாக ஹிட்டாகவில்லை. எப்போதாவது வரக்கூடிய முயற்சிகள் இப்படி ஆகிவிடுகின்றன. நாளை ஒரு இயக்குனர் ஒரு புத்தகம் பிடித்துப் போய் இந்தப் புத்தகத்தை படமாக எடுக்கலாம் யாராவது ஒரு தயாரிப்பாளரை அணுகினால், உடனே தயாரிப்பாளர் விசாரணைகூட கூட ஓடலையே என்று சொல்லி நிராகரித்து விடலாம்..எனவே விசாரணை போன்ற  முயற்சிகளை ஆடியன்ஸ்தான் ஆதரித்து நிலைமயை மாற்ற வேண்டும். ஆனால் நீங்கள் சொல்வது போல தமிழில் படிக்கிற பழக்கம் குறைந்துள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்றமாதிரி வாசகர் எண்ணிக்கை இல்லை. 15, 20 ஆண்டுகளில் நிறைய பேர் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். படிப்பென்றால் அதெல்லாம் பட்டம் வாங்குவதற்கான படிப்பாக மட்டுமே இருக்கிறது. வாசிப்பனுபவம் மிக மிக பலவீனமாக இருக்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மாதிரியான சமூக ஊடகங்கள் வந்தபிறகு, வாசிப்பு என்பது அந்த அளவில் தேங்கிப் போய்விடவும் வாய்ப்பிருக்கிறது.

பரந்துபட்ட சமூகம் நிறைய வாசிக்கிறதெனில், ரசனை கூடும். சினிமா மாதிரியான வடிவங்களிலும் அது பிரதிபலிக்கும்.  இலக்கியம் படிப்பதே குறைவு எனும்போது, இலக்கியம் எப்படி படமாக வரும்?

வசனகர்த்தாவாக கதைக்கு தகுந்த வசனங்கள் எழுதிக்கொடுத்தால் போதும் என்று உங்களிடம் கேட்கிறார்களா? அல்லது இலக்கியவாதிக்குண்டான சுதந்திரத்துடன் உங்களுக்கு பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுகிறதா?

என்னை ஒரு வசனகர்த்தாவாகத்தான் பார்க்கிறார்கள். அழகர் சாமியின் குதிரை ஒரு விதிவிலக்கு. அது என்னுடைய கதை. அதை சுசீந்திரன் படமாக்கியது தற்செயலாக நடந்தது. விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்தாலும் அதுவும்கூட கமர்ஷியலாக பெரிய வெற்றியடையாத படம்தான். அதனால்தான் அதுபோல அடுத்தடுத்து எதுவும் நடக்கவில்லை.

என்னிடம் வந்து இலக்கியத்தரமாக வசனம் எழுதிக்கொடுங்கள் என்று எவரும் கேட்பதில்லை. திரைக்கதைக்கு ஏற்றமாதிரி எழுதிக்கொடுங்கள் என கேட்பார்கள். ஒரு எல்லைக்குட்பட்டுதான் வசனம் எழுதிகொடுக்க முடியும். இதுதான் கதை, இந்த கதாபாத்திரம் இதைத்தான் பேசும் என்பதற்கான எல்லையுடனே எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அதைத்தாண்டி இலக்கியவாதியாக இருப்பதால் இலக்கியத்தரமாக கொடுங்கள் என யாரும் கேட்பதில்லை. எனக்கு மட்டுமல்ல ஜெயமோகன், எஸ். ரா போன்ற இலக்கிய வெளியில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்ற எழுத்தாளர்கள் கூட அவங்களுடைய முழுமையான திறமையை சினிமாவுக்குள் பிரதிபலிக்க முடியவில்லை. எல்லைக்குட்பட்டே அவர்களும் செயல்படுகிறார்கள்.
அழகர்சாமியின்  குதிரைக்கு எழுத்தில் இருந்த உயிர்ப்பு, சினிமாவிலும் வந்திருக்கிறதா?
ஒரளவுக்கு திருப்தியாக இருந்தது. என்ன காரணமென்றால் இந்தப் படத்துக்கு திரைக்கதை யில் சுசீந்திரனுடன் நானும் இருந்ததால்தான். அப்படத்தில் அசோசியேட்டாக வேலை செய்தேன். எழுதி முடித்த கதையில் சினிமாவுக்காக சிலதை சேர்க்க வேண்டியிருந்தது. குதிரைக்காரனின் பின்புலத்தை சேர்த்தோம். எழுதிய கதையில் இரண்டு வரிகளில்தான் அது சொல்லப்பட்டிருக்கும். நானும் சேர்ந்து இதைச் செய்ததால் திருப்தியாக இருந்தது. அழகர்சாமியின் குதிரை எழுத்தாளராக எனக்கு மகிழ்ச்சியைத்தந்த படம்தான்.  ஒரு எழுத்தாளராக திருப்தியானேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

குறு நாவலில் வரும் ரெண்டு, மூன்று இடங்கள்…குறிப்பாக காவல் நிலைய காட்சி, இறுதியில் ‘சாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிட்டா மழை பெயாது’ எனச் சொல்லும்போது மழை பெய்யும் காட்சி போன்றவை சினிமாவில் அழுத்தமாக வெளிப்பட்டன. மழை பெய்யும் காட்சியைப் பார்த்து தியேட்டரில் கைத்தட்டினார்கள். அதுதான் வெற்றி என நினைக்கிறேன். அழகர்சாமியைப் பொறுத்தவரை அது சரியாகவே உருமாற்றம் ஆகியிருந்தது.

இப்போது படம் இயக்கும் முயற்சிகளில் இருக்கிறீர்கள். உங்களுடைய சினிமாவில் இலக்கியத்தின் தாக்கம் எப்படியானதாக இருக்கும்?

ஆமாம், இப்போது நான் ஒரு திரைக்கதை எழுத்திக்கொண்டிருக்கிறேன்.  அதில் என்னுடைய பல சிறுகதைகளின் சாயல் இருக்கும். எனக்கு திருப்திகரமான திரைக்கதையாக அது அமையும் என நினைக்கிறேன். புதுமுகங்கள் வைத்து எடுக்கும்போது சுதந்திரமாக அதைச்  சிறப்பாக வெளிப்படுத்த முடியும் எனத் தோன்றுகிறது. ஆனால் எங்கு அது பிரச்சினையாகும் என்றால், இதை புதுமுகங்கள் வைத்து எடுக்க முடியாது, இதில் இந்த நடிகர்களைப் போடுங்கள் என சொல்லும் போது பிரச்சினையாகும்.  சின்ன சின்ன காம்ப்ரமஸை பண்ண வேண்டியிருக்கும். சினிமாவில் நூறு சதவீதம் திருப்தியாக செய்துவிடமுடியாது. வெளிப்புற தாக்கங்கள் நாற்பது, ஐம்பது சதவீதம் இருக்கும். எவ்வளவு அதிகபட்சமாக உங்களை வெளிப்படுத்துறீங்களோ, அந்தளவில் அது உங்களுக்கான வெற்றி என புரிந்துகொள்ள வேண்டும். இப்போதைய சூழல் அப்படித்தான் உள்ளது.

சினிமாவை எப்படி இலக்கியத்தரமாக்கலாம்?

இலக்கியத் தரம் என்கிற பிரயோகம் இங்கு பொருந்தாது.இலக்கியம் என்பது வேறு, சினிமா என்பது வேறு. சினிமா என்கிற மீடியம் வேறுபட்டது. அதன் தன்மை வேறுபட்டது.  இலக்கியம் என்பது தனி அனுபவம் ஒருத்தர் எழுதுகிறார் இன்னொருவர் படிக்கிறார். ரெண்டு பேருக்குமான அனுபவம் அது. அதை சினிமாவுக்கு நூறு சதவீதம் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. டிமாண்ட் என்னவாக இருக்கலாம் என்றால், நல்ல சினிமாவாக, நல்ல அனுபவமாக இருக்கலாம் என வைக்கலாம். இப்படிச் சொல்லலாம் ஏண்டா அந்தப் படத்தைப் பார்த்தோம். அல்லது நீங்கள் ஒரு படத்தைப் பார்த்து டி மாரலைஸ்டு ஆகி வரக்கூடாது.  அலுப்பூட்டுவது, சங்கட உணர்வை ஊட்டுவது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை குலைப்பது போன்ற நெகட்டிவ்வான விஷயங்களைத் தராமல், நல்ல அனுபவம் தருவதே நல்ல படத்துக்கான இலக்கணமாக நான் நினைக்கிறேன். கமர்ஷியல் படமாகக்கூட இருக்கட்டும். உங்களை மேலும் சீரழிக்காமல், நல்ல மனநிலையில் வைத்திருப்பதே நல்ல படம்தான். இலக்கியத்தரமான படம்தான் என்று சொல்வதைவிட நல்ல படம் என்று சொல்லலாம்.

இலக்கியத்தரம் என்பதை சினிமாவை சினிமா எனும் கலையாக பார்ப்பது என எடுத்துக்கொள்ளலாம் இல்லையா?

இலக்கியத்தில் எந்தவித சமரசங்களும் செய்யாமல் நான் ஒரு வாழ்க்கையை சொல்கிறேன், அதை வேறொரு வாழ்க்கை பின்புலத்தில் வாழ்கிற நீங்கள் அந்த வாழ்க்கைக்குள் போய் வாசிக்கிறீர்கள். ஒரு அனுபவம் கிடைக்கிறது. இதுதான் இலக்கியத்தின் செயல்பாடு. சினிமாவிலும் அதேமாதிரி வெறுமனே புனையப்பட்டதாக இல்லாமல், ஒரு வாழ்வியலை, ஒரு நெருக்கடி, பிரச்சினையை, காதலை வெளிப்புற சமரசங்கள் இல்லாமல் சொல்ல வேண்டும். அதில் ஒரு உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்று சொல்லலாம். கூடவே அது அழகியலோடும் இருக்கவேண்டும். இதை வேண்டுமானால் நீங்கள் சொல்ல வருகிற இலக்கியத்தரமான சினிமாவுக்கான வரையறை என்று வைத்துக் கொள்ளலாம்.

மலையாளத்திலிருந்து மறுஆக்கம் செய்யப்பட்ட ‘36 வயதினிலே’ படத்தின் ஒரு இடத்தில் ஜோதிகா கதாபாத்திரம் தன் அலுவலகத்தில் பேசுவதாக உரையாடல் வரும். அதில் புத்தகம், இலக்கியம் பற்றியெல்லாம் பேசிக்கொள்வார்கள். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தபோதும் அந்த உரையாடல் வெட்டுப்படாமல் வைத்திருந்தார்கள். ஆனால், தமிழ் படங்களில் இலக்கியம் குறித்தோ, புத்தகங்கள் குறித்தோ இப்படியான உரையாடல் வைப்பதற்கான சாத்தியங்களே இல்லை என்ற சூழல்தானே நிலவுகிறது?

அந்த படத்தின் வசனகர்த்தா விஜி. அவர் இலக்கிய ஆர்வம் உள்ளவர், நிறைய படிக்கக்கூடியவர். ரொம்ப சென்ஸிபிள் ஆன ரைட்டர்.வேறொருவராக இருந்தால் அந்த வசனமும் கூட இடம் பெற்றிருக்காது. மலையாள சூழலோடு தமிழ் சூழலை ஒப்பிடவே முடியாது. கதாநாயகியை மையப் பாத்திரமாக வைத்து வந்த அந்தப்படம் மலையாளத்தில் வெற்றியடைந்ததால்தான் தமிழுக்கு வந்தது. தமிழில் கதாநாயகியை மையப்படுத்திய கதையை ஒரு இயக்குனர் யோசிப்பதே அபூர்வம். நீங்கள் சினிமா படைப்பாளியாக இருக்கும்பட்சத்தில் இருக்கிற ட்ரெண்டுக்கு ஏற்றமாதிரிதான் படம் செய்ய வேண்டும் என்று உங்களை நீங்களே கட்டுப்படுத்திக்கொள்வீர்கள். எழுதும்போதே அப்படித்தான் எழுதுகிறோம். ஒரு திரைக்கதை எழுதிவிட்டு, அதற்கேற்ற தயாரிப்பாளரைத் தேடுவது மிக மிக சிரமமானது.  அவர்களுக்கு எது பிடிக்கும், டிரெண்டுக்கு ஏற்றாற்போல் எதைச் செய்தால் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்வார் என்பதற்கேற்பதான் கதை யோசிக்கிறார்கள்.

நிறைய இளைய இயக்குநர்கள் இலக்கியம் படிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் படம் இயக்க வரும்போது இன்றைய டிரெண்டுக்கு என்ன கதை சொன்னால் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்வார் என்றுதான் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் அது அவர்களுடைய வாழ்க்கைப் பிரச்சினை. வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன, படம் இயக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கும்போது ரிஸ்க் எடுக்க அவர்களாலும் முடியவில்லை. இது சூழலின் சிக்கல்தான்.

இந்த சூழல் மாறும் என நினைக்கிறீங்களா? ஏதேனும் புரட்சி நடக்க வாய்ப்பிருக்கிறதா?

இந்தப் புரட்சியெல்லாம் தமிழ் சூழலில் இப்போதைக்கு சாத்தியமே இல்லை. நமக்குக் கிடைக்கிற வெளியில் என்ன செய்ய முடியும் என பார்க்க வேண்டும். நான் எழுதும் வசனத்துக்குள் ஏதேனும் சொல்ல முடியுமா எனப் பார்ப்பேன், படம் செய்தால், முழு திருப்தி இல்லாவிட்டாலும் திருப்தியாக இல்லை என்று படம் செய்யக்கூடாது. பெரிய அளவில் புதுசாக நான்கைந்து இயக்குநர்கள் வருகிறார்கள், நம்பிக்கை தருகிறார்கள். ஆனால் அவர்களுமே இரண்டு படங்களுக்குப் பிறகு, ஒரு பெரிய ஹீரோவை வைத்து இயக்கும்போது வேறுமாதிரி ஆகிவிடுகிறார்கள்.

இலக்கிய பின்புலத்தில் சினிமாவுக்கு வருவது, உங்களுக்கு பலமாக இருக்கிறதா, பலவீனமாக இருக்கிறதா?

தற்செயலாதான் சினிமாவுக்கு வந்தேன். பர்சனலா இலக்கியவாதியாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. என்னுடைய எல்லை எது என்பதையும், வாழ்வு குறித்தும் வெற்றி தோல்வி பற்றிய எனது பார்வையையும் இலக்கியம் தெளிவு படுத்தி இருக்கிறது. என்னுடைய கதைகள்தான்  என்னுடைய அடையாளம். வாழ்க்கைக்காக சினிமா, சீரியல் வசனங்கள் எழுதுகிறேன்; இப்போது ஒரு படம் இயக்கும் முயற்சியிலும் இருக்கிறேன். இது இயல்பாக நடந்தது. சினிமாவுக்கு வரவேண்டும் என நான் வரவில்லை. கதை எழுதுகிறவர் என்பது திரைத்துறையில் எனக்கொரு மரியாதை அவ்வளவுதான். கதை எழுதி வருமானம் ஈட்டமுடியும் என்ற நிலை இல்லை. வசனம் எழுதித்தான் ஈட்ட முடிகிறது.

இலக்கியவாதியாக இருந்து சினிமாவுக்கு வசனம் எழுதுவது உதவிகரமாக இருக்கிறது. பலமாகவும் இருக்கிறது. புதிதாக வருகிறவர்களுக்கு நிறைய படிக்க வேண்டும் என நான் சொல்வேன். ஏனென்றால் வேறுபட்ட வாழ்க்கையை படிப்பதன் மூலம் நிறைய தெரிந்துகொள்ள முடியும். வாழ்க்கை இல்லாமல் படம் நன்றாக இருக்காது. வாழ்வியலை தெரியாமல், சமூகத்தையும் மனிதர்களையும் இங்கிருக்கும் அரசியலையும் புரிந்துகொள்ளவில்லையென்றால், அவன் செய்வது அனைத்தும் உள்ளீடற்ற விஷயமாகத்தான் இருக்கும். இது எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். சினிமா படிக்கிற மாணவர்களுக்கு இதை நான் வலியுறுத்தி சொல்வேன். இலக்கியம் தெரிந்த ஆள் உருவாக்குகிற ஒரு சினிமா, இலக்கியம் தெரியாதவர் உருவாக்குகிற சினிமாவைவிட சிறந்ததாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

தற்போது இயக்குவதற்காக எழுதிக்கொண்டிருக்கும் திரைக்கதை எதைப் பற்றியது?

தற்போது சமூகத்தில் பெரிய மாறுதல் நடந்து கொண்டிருக்கிறது. வேளாண்மை, நிலம் சார்ந்த பெரிய மாறுதல் கிராமங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த பிரச்சினைகளைப் பேசுகிற திரைக்கதை ஒன்றை எழுதி வருகிறேன். இதை அப்படியே சொல்லாமல் நகைச்சுவை கலந்த ஒரு திரைக்கதையாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அது எதை சொல்லும் என்றால் கிராமத்தில் நடக்கும் மாற்றங்கள், மதிப்பீடுகள் எப்படி மாறுகின்றன, உறவுகளின் அடிப்படை மாறுவது, பணம் என்பது எப்படி ஒரு பெரிய முக்கியமான பொருளாக சொல்லப்படுகிறது, அந்தப் பணம் நிம்மதியையும் சந்தோசத்தையும் ஏன் தருவதில்லை, கிராமங்களில் வெறுமை சூழ்ந்திருக்கிறது, கிராமத்தில் நிம்மதி இருக்கும் என்பார்கள் ஆனால் இப்போது அது இல்லை. இப்படியான் இந்த விஷயங்களை பேசியிருக்கிறேன். இதில் நகைச்சுவையும் காதலும் இருக்கும். இவை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஆனால் அது முடியாது.

சமீபத்தில் ‘திதி’ என்றொரு கன்னடப்படத்தைப் பார்த்தேன். இந்தப்படம் எனக்கு மிக நெருக்கமாக இருந்தது. கர்நாடகத்தில் அந்தப் படம் விருது வாங்கியிருக்கிறது. ஓரளவு ஓடவும் செய்திருக்கிறது. தமிழில் ஏன் அது சாத்தியமில்லை என்பது உண்மையில் எனக்குப் புரியவில்லை. அப்படியொரு படம் எடுத்தால் தமிழ்நாட்டில் அங்கீகரிப்பார்களா? ஓடுமா? முதலில் அதை திரையரங்குகளுக்கு கொண்டு சேர்க்க முடியுமா? என்கிற வருத்தமான சிந்தனைகள் தோன்றுகின்றன.

தற்போது வெளியாகியிருக்கும் ‘கபாலி’ படத்தில்  வரும் ‘ஆண்டை’ என்ற சொல் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஒரு வசனகர்த்தாவாக இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நாம் தொழிற்நுட்ப ரீதியாக நிறைய வளர்ந்திருக்கிறோம் என நினைக்கிறோம். ஆனால் நாம் சிந்தனையில் மோசமாக சீரழிந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. சவாலே சமாளி போன்ற பழைய படங்களில் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர் கதாநாயகனாக இருப்பார். அவர் பண்ணையாராக, ஆண்டையாக இருப்பவரின் மகளைக் காதலிப்பார். அதனால் பிரச்சினை வரும். கதாநாயகன் பண்ணையாரை எதிர்த்து நிற்பார். அவருடைய ஆண்டைத்தனத்தை கேள்வி கேட்பார். நசுக்கப்பட்ட மனிதன் நசுக்கிறவனை கேள்வி கேட்கும் எம்ஜிஆர் படங்கள் பல உண்டு..இப்படி தமிழில் அந்தக் காலக்கட்டத்தில் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. அப்போது அது ஒரு விஷயமாகவே இல்லை. ஆனால்  இப்போது அது பிரச்சினைக்குரியதாக மாறி இருக்கிறது.

ஆண்டை என்பது அடக்குமுறையைக் குறிக்கும் ஒரு சொல்லாக இந்தப் படத்தில் சொல்லப்பட்டதாகவே நான் பார்க்கிறேன். குறிப்பிட்ட எந்தவொரு சாதியையும் அந்த வசனம் குறிக்கவில்லை. ஒடுக்குகிற ஒருவனை ஒடுக்கப்படுகிற ஒருவன் நீ என்னை ஒடுக்குகிறாய் என சொல்கிறான் இதிலென்ன தவறு இருக்கிறது? இதற்கு எவ்வளவு விவாதங்கள். பேச்சுகள். ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் வந்துவிட்ட பிறகு இவ்வளவு வக்கிரமான ஆட்கள் இருக்கிறார்களா என்ற எண்ணம் வருகிறது. சாதியம் முன்னை விட அதிகமாகவே இங்கே பரவிக்கொண்டிருக்கிறதாகவே தோன்றுகிறது. இது வேதனைக்குரிய ஒன்று.

‘படச்சுருள்’ ஆகஸ்ட் 2016 இதழில் வெளியான நேர்காணல்.

முகப்புப் படம்: பாஸ்கர் சக்தியின் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.

பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கும் தீர்ப்பும் குறித்து நக்கீரன் பதிவு

மோடி ஆட்சி மத்தியில் தொடங்கியதும் மறைமுகமாக இயங்கிக் கொண்டிருந்த இந்துத்துவ அமைப்புகள் வெளிப்படையாக வெறுப்புப் பிரச்சாரத்தை தொடங்கின. தமிழகத்தில் மத அடிப்படைவாதம் வளர வாய்ப்பில்லாத சூழலில் சாதி அடிப்படைவாதத்தை கையில் எடுத்தனர், இந்துத்துவத்தின் பின்னணியில் ஒளிந்துகொண்டவர்கள். மோடி ஆட்சிக்கு முன்பே, பாமகவின் சாதி அரசியல்  தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ் கொலைகளின் பின்னணியில் அதற்கான களத்தை உருவாக்கி வைத்திருந்தது. அந்தக் களத்தில் நடத்தப்பட்ட சோதனைதான் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை தடை செய்யக்கோரிய போராட்டங்கள், கட்டப்பஞ்சாயத்துகள் எல்லாம்!

மாதொருபாகன் ஒரு புனைவு. தங்கள் சாதியை இழிபடுத்துகிறது என்று குற்றம்சாட்டப்பட்ட சம்பவங்களின் விவரிப்பையும் புனைவாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். நூலை எரிப்பது, அதை எழுதியவரை ஊர்விலக்கம் செய்வது, அவர் வீட்டுப் பெண்களை பொதுவெளிக்கு இழுப்பது என சாதி அமைப்புகள் தொடங்கிய ‘அரசியலு’க்கு அதிகார அமைப்புகளும் அரசும் துணை போயின.  உச்சபட்சமாக காவல்துறை மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் சாதியவாதிகள் கலந்துகொண்ட ‘பஞ்சாய’த்தில் பெருமாள் முருகன்  குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். ஒரு படைப்புக்காக, ஒரு எழுத்தாளனும் நேரக்கூடிய நடந்திருக்கக்கூடாத அவமரியாதையான மன உளைச்சலை ஏற்படுத்தும் தருணங்களாக அவை இருந்திருக்கும். இந்த அடிப்படையிலே பெருமாள் முருகன் எனும் எழுத்தாளன் மரணித்துவிட்டதாக எழுதினார் பெருமாள் முருகன். சாதியவாதிகள் ஓய்ந்தார்கள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், பெருமாள் முருகனுக்கு நடந்த அநீதிக்கு நீதி கோரி நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் சாதியவாதிகளின் முகத்தில் அறைந்தாற்போல், இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சாதியவாதிகளின் செயலுக்கு துணைபோன தமிழக அரசுக்கு மிகப்பெரிய அடி இது. வரவேற்கக்கூடியது. ஒரு நூலைப் பிடிக்கவில்லை எனில் தூக்கி எறியுங்கள். அதை வைத்து ஒரு எழுத்தாளனை முடக்க நினைக்காதீர்கள் என்கிறது நீதிமன்றம். சமூகத்தில் ஒளிந்துகிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்து தொடர்ந்து எழுதும்படி நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது. தமிழகத்தின் எழுத்துரிமைக்கும் கருத்துரிமைக்கு கிடைத்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது.

தீர்ப்புக்குப் பிறகு அறிக்கை வெளியிட்டிருக்கும் பெருமாள் முருகன், சற்று கால அவகாசம் எடுத்துக்கொண்டு எழுதுவதாகச் சொல்கிறார். அவர் எழுதுவார் என எதிர்பார்க்கலாம். இந்த முன்மாதிரி தீர்ப்பு இதே போன்ற சாதியவாதிகளின் ஒடுக்குதலுக்கு ஆளான எழுத்தாளர் துரை குணாவுக்கும் வழக்கு அலைகழிப்புகளிலிருந்து விடுதலை தரவேண்டும்.

நன்றி: ஜீவா பாரதி (நக்கீரன்)

’வெங்கட் சாமிநாதன் ஏன் இந்துத்துவ ஆதரவாளராக மாறினார்?’

venkat saminathan

தமிழின் முதன்மையான இலக்கிய விமர்சகர்களில் ஒருவரான வெங்கட் சாமிநாதன் செவ்வாய்கிழமை மரணமடைந்தார். வெங்கட் சாமிநாதனின் மறைவுக்கு பல தமிழ் எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இமையம்

1984ல் இருந்து வெங்கட் சாமிநாதனின் எழுத்துக்களை நான் அறிவேன். ‘கோவேறு கழுதைகள்’,’ஆறுமுகம்’, ‘செடல்’, ‘சாவு சோறு’, என்று என்னுடைய எழுத்துக்களை தொடர்ந்து படித்தவர். அதுகுறித்து எழுதியவர். நான் அவரை சென்னை க்ரியா அலுவலகத்திலும் டெல்லியிலும் சந்தித்திருக்கிறேன். இப்போதும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்பவர். அவ்வப்போது தொலைபேசியிலும் பேசி இருக்கிறேன். உண்மையைச் சொன்னால் தொடர்ந்து அவர் என்னுடைய எழுத்தை ஆதிரித்து வந்தவர். வெங்கட் சாமிநாதன் ஓயாமல் தமிழ் இலக்கிய உலகின் சர்ச்சைக்குரியவராக இருந்தார். அதே நேரத்தில் அவர் படிப்பதையும் எழுதுவதையும் நிறுத்தியதே இல்லை. வெங்கட் சாமிநாதனுடைய மரணம் மிகுந்த மன உளச்சலைத் தருகிறது. ஒருவகையில் என்னுடைய மரணத்தையும் அது நினைவூட்டுகிறது. வெங்கட் சாமிநாதன் எழுத்து வாழ்க்கையில் பெருவாழ்வு வாழ்ந்தவர் என்று நினைக்கிறேன். அவருக்கு என்னுடைய அன்பு. இப்போது அவருடைய எழுத்துக்களை படித்துகொண்டிருக்கிறேன். ஒரு வாசகனாக நான் அவருக்கு வேறு என்ன செய்ய முடியும்?

வெளி ரங்கராஜன்

வெங்கட் சாமிநாதன் காலமான செய்தி கிடைத்தது.அவருடன் தீவிரமான கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் ஒரு கட்டத்தில் தமிழின் போலியான populist mindset க்கு எதிரான மாற்றுக் கலைக்குரல்களை அவர் தீவிரமாக அடையாளப்படுத்தியது முக்கியமானது. அதேபோல் நுண்கலைகள், இசை, நடனம், நாடகம், கூத்து இவை பற்றி இவர் உருவாக்கிய சிந்தனைத்தளமும் தீவிரத்தன்மை கொண்டது. ஆனால் இலக்கியக் கோட்பாடுகளும், அணுகுமுறைகளும் மாற்றமடைந்து கொண்டிருந்த நிலையிலும் ஒரு இறுக்கத்துடன் அவைகளை கவனிக்க மனமில்லாதவராக இருந்தது ஒரு இடைவெளியை உருவாக்கியது. ஆனால் கடைசி காலத்தில் மனைவியின் மரணத்துக்குப் பிறகு உருவான தனிமையில் தன்னுடைய நம்பிக்கைகள் சார்ந்த உலகத்துக்கே உயிர் கொடுத்தபடி இருந்தார். இருந்தாலும் அவர் மறைவு ஒரு தீவிர அதிர்வை உருவாக்குகிறது.

ராஜன்குறை

நமது கருத்தியல் எதிரிகள் ஒருவகையில் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நண்பர்களைப் போன்றே அவர்களும் நமது சுய உருவாக்கத்தில், உருமாற்றத்தில் பங்கெடுக்கிறார்கள். அந்த வகையில் வெங்கட் சாமிநாதன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவது இன்றியமையாதது. அவரைப் போன்ற தீவிர நவீனத்துவ ஆதரவாளர்கள், இந்திய பாசிச வகைமாதிரியான இந்துத்துவ ஆதரவாளர்களாக மாற நேர்வதை புரிந்துகொள்வது நம் காலத்தினை எதிர்கொள்ள மிக அவசியமானது. கலை இலக்கியத்தில் கறாரான அழகியல் அளவுகோல்களை கொண்டு படைப்புகளை தரம் பிரித்து வெகுஜன ரசனையை கடுமையாக சாடி வந்தவருக்கு, சோ. ராமசாமியை அறிவுஜீவி என எப்படி கொண்டாட முடிந்தது? தன்னுடைய தொகுக்கப்பட்ட எழுத்துக்கள் நூல் வெளியீட்டு விழாவில் “உடையும் இந்தியா” பூச்சாண்டி அரசியல் புகழ் ஆர்.எஸ்.எஸ்.பிரசாரகர் அரவிந்தன் நீலகண்டன் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்த முடிந்தது? வெ.சா கொண்டாடிய நவீனத்துவ கலை. இலக்கிய வெளிப்பாடுகளை தீவிரமாக நேசிக்கும், கொண்டாடும் என் போன்றோருக்கு இந்த கேள்விகள் மிக முக்கியமானவை. யார் மறந்தாலும் வெங்கட் சாமிநாதனை நான் மறக்க முடியாது என்பதுதான் உண்மை.

அ. மார்க்ஸ்

மூத்த எழுத்தாளரும் விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் அவர்கள் மறைந்த செய்தி சற்றுமுன் அறிந்தேன். வருத்தங்களும் அஞ்சலிகளும்.

அவருடைய கருத்துக்கள் பலவற்றிலும் மாற்றுக் கருத்துக்கள் உண்டெனினும் சிற்றிதழ்ப் பாரம்பரியத்தில் நின்றவர் என்கிற வகையில் அவர் மீது எனக்கு மரியாதைகள் உண்டு. மார்க்சீய அணுகல்முறையைக் கிட்டத்தட்ட அவதூறு எனும் அளவிற்கு எதிர்த்தவர். அவருடைய இது தொடர்பான கருத்துக்களை மிகவும் ஆழமாகவும் வன்மையாகவும் பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மான் மறுத்துள்ளார்.

என்னையும் ஒரு சந்தர்ப்பத்தில் சற்றும் பொருத்தமின்றி போகிற போக்கில் கடுமையான வார்த்தகளைப் பயன்படுத்தித் தாக்கியுள்ளார். எல்லாவற்றிற்கும் அப்பால் இன்று அவரது மரணச் செய்தி துயரத்தை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்

ஞாநி சங்கரன்

விமர்சகர் வெங்கட் சாமிநாதன் இன்று (அக்டோபர் 21 புதன்) அதிகாலை பெங்களூரு மருத்துவமனையில் காலமானார் என்ற தகவல் வந்துள்ளது. என் அஞ்சலிகள். அவருடைய பல கருத்துகளுடனும் தனி நபர் தாக்குதல்களுடன எனக்கு உடன்பாடு இல்லையெனினும் அழுத்தமாக விடாப்பிடியாக கருத்தை முன்வைக்கும் உறுதியில் அவர் ஒரு முக்கியமான முன்னோடியாவார்.

அ. ராமசாமி

வெங்கட்சாமிநாதனின் மரணம் எழுப்பும் நினைவலைகள் தமிழின் பரபரப்பான விமரிசகர் ஒருவரின் மரணமாகவே அலைந்து கொண்டிருக்கின்றன. பாலையும் வாழையும், ஓர் எதிர்ப்புக்குரல், கலை – இலக்கியம் – வெளிப்பாடு எனப் பல நூல்களும் வாசிப்புச் சுவை தரக்கூடியன. அவரோடு நேரடித் தொடர்பும் தாக்குதலைச் சந்தித்த அனுபவங்களும் கூட உண்டு.

கடந்த 20 ஆண்டுகளில் முன்பு எழுதியனவற்றையே பூடகமின்றி வெளிப்படையாக எழுதிக் கொண்டிருந்தார். கருத்தியலிலும் சமூக நடப்பிலும் மாற்றங்களை முன்மொழியாத இந்தியக் கலைமரபுகளுக்காக வாதாடிய அவரது விமரிசனங்களை நவீனத்துவ விமரிசனமாக எப்போதும் நான் கருதியதில்லை. இந்தியா எல்லா ஞானமும் கொண்ட பாரத தேசம் என்ற இன்றைய அரசியல் கருத்தோட்டங்களுக்கான கலைப்பார்வைகளைத் தமிழ்நாட்டவர்க்குத் தந்தவர் என்ற வகையில் கவனிக்கப்பட்டார்; மரணத்திற்குப் பின்னும் கூடக் கவனிக்கப்படுவார். கவனிக்கத்தக்க மனிதர்களின் மரணம் வருத்தத்துக்குரியனவே.

உங்களின் வாதங்களின் வழியாக உங்களை நினைத்துக் கொள்கிறேன் வெ.சா. அவர்களே!

ஜெயமோகன்

நேற்று மதியம் சென்னையில் வெங்கட் சாமிநாதனைப்பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரது மூர்க்கமான பேரன்பு பற்றி. மூன்றுமுறை வெ.சாவிடம் என் நண்பர்களுக்கு வேலை கிடைக்க, பொருளியல் இக்கட்டை சமாளிக்க உதவும்படி கோரியிருக்கிறேன். ஒருவர் அவரை மோசமாக விமர்சித்து எழுதியவர். பிற இருவரையும் அவருக்கு எவரென்றே தெரியாது.

ஆனால், வெ.சா இறங்கிப் பணியாற்றி அவர்களுக்கு உதவினார். அவர்கள் வாழ்க்கையின் திருப்புமுனைகளுக்குக் காரணமாக அமைந்தார். ஏனென்றால் வெ.சாவை குருபீடத்தில் வைத்துள்ள பலர் உண்டு. அவருடன் மிக அணுக்கமான உறவுள்ளவர்கள் நிறையபேர். உதவிபெற்றவர்கள் ஒருசில மாதங்களில் அதை முற்றாக மறந்தனர், அவரை நிராகரிக்கவும் முயன்றனர். அது மானுட இயல்பு.

அதையும் வெ.சா அறிந்திருந்தார். வெடிச்சிரிப்புடன் ‘மனுஷன் வேற மாதிரி இருந்தா தெய்வங்கள்ளாம் கோவிச்சுகும்ல?” என்றார். அதிகாலையில் குறுஞ்செய்தி வெ.சா இறப்பை அறிவித்தபோது நான் அவரது அந்த சிரிப்பை நினைத்துக்கொண்டேன். சிறிய கண்கள் குறும்பாக இடுங்க சன்னமாக ஓசையிட்டபடி உடல் குலுங்கச் சிரிக்கும் அந்த முகம்.

முகப்புப் படம்: சேதுபதி அருணாசலம்