பிரதமர் நரேந்திர மோடி கோயில் இல்லாத நாட்டுக்கோ, மாநிலத்துக்கோ செல்ல மாட்டார்!

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிற முதுமொழியை இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியோ கோயில் இல்லாத ஊருக்குச் செல்ல வேண்டாம் என்கிற புதுமொழியை தனது பயண திட்ட மொழியாக வைத்திருக்கிறார். அன்றாட வாழ்க்கைப் பாடுகளில் இருந்து தங்களுளைக் காப்பாற்றி மிகப் பெரும் புரட்சியை செய்துவிடுவார் என வாக்களித்த மக்கள் அவரது திருக்கோயில் தரிசனங்களை தினசரிகளின் முதல் பக்கத்திலும் தொலைக்காட்சிகளில் முதன்மை செய்திகளாகவும் படித்தும் பார்த்தும் வருகிறார்கள்.

modi temple visit (2)

இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட தமிழின மக்கள் வாழும் இடங்களைப் பார்வையிட்டு தமிழரின் துயர் தீர்ப்பார் என இங்கிருந்து அறிக்கைவிட்ட அரசியல்வாதிகள், குறிப்பாக பெரியார் வழி வந்த மு. கருணாநிதியின் அறிக்கை கண்முன் வந்து போகிறது. மோடி நாகுலேஸ்வரன் கோயிலுக்கு சென்று இலங்கை தமிழரின் துயர் தீர்க்க இறைவனிடம் வேண்டி வந்ததாக தமிழிசையும் பொன்.ராதாகிருஷ்ணனும் அறிக்கை விடக்கூடும்.

முதன்முறையாக இந்துத்துவத்தை நேரடியாக முன்வைத்து ஆட்சியை பிடித்திருக்கும் மோடி உலகெங்கும் உள்ள இந்துக்களை இந்துக் கோயில்களுக்குச் செல்வதன் மூலம் இணைக்கிறார், இந்துத்துவத்தை பரப்புகிறார் என்று வாக்களித்த பெரும்பான்மை மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள். மோடி ஆஸ்திரேலியாவுக்கு அதானிக்காக செல்கிறார், டாடாவுக்காக ஸ்ரீலங்கா செல்கிறார் என்பதை அவர்கள் எப்போதும் அறியப் போவதில்லை.