“தோற்பது எப்படி?”

கோசிகன் படிக்கும் பள்ளியில் ‘அம்மாவை பார்த்தே ஆக வேண்டும்’ என கடந்த வெள்ளிக்கிழமை கட்டாய அழைப்பு விடுத்திருந்தார்கள். திங்கள் காலையில் செல்ல முடியவில்லை. மாலைதான் சென்றேன்.

இரண்டாண்டுகளாக உள்ள குற்றச்சாட்டுத்தான். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே சொல்ல அழைத்திருக்கிறார்கள்..

“உங்க பையன் அறிவா இருக்கான்; கிளாஸ்ல நல்லா பதில் சொல்றான். ஆனா, எழுதவே மாட்டேன்கிறான். ஒரு மாசமா எழுதவேயில்லை… கடைசியா கட்டாயப்படுத்தி உட்காரவெச்சி எழுத வெச்சோம்… பெரிய தலைவலியா இருக்கான்னு எல்லா மிஸ்சும் சொல்றாங்க” என மென்மையான குரலில் வேகமாக பேசி முடித்தார் துணை தலைமை ஆசிரியர்.

“எதையும் எழுதிப் போடலைன்னு சொன்னான் மேம்.. வீட்லேர்ந்த நோட்டையே நான்தான் பையில் வெச்சு அனுப்பினேன்” நானும் வேகமாக சொல்லிவிட்டு,

அருகே நின்றிருந்த கோசியைப் பார்த்தேன். இருவரையும் மாறிமாறிப் பார்த்து “நோ மிஸ்…நோ மிஸ்” என்றான்.

“கோசி, ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் ல ஒரு டிராமா நடிச்சான் அதிலேர்ந்து அவனை பிடிச்சுபோச்சு..such a talented boy…

போன வருசம் complaint பண்ணப்போ, நான் பெரிசா எடுத்துக்கலை… இந்த வருசம் நானே அனுபவிக்கிறேன்… என்னால முடியல…” என்றார் ஆசிரியர் அவனைப் பார்த்து.

நானும் ‘என்னால முடியலை’ என்றேன்.

“இனி நீதான் திருத்திக்கணும்பா” என பஞ்சாயத்தை ஒருவழியாக முடித்து வைத்தார் ஆசிரியர்.

நான்காவது படிக்கிறான். இரண்டாவதில் இருந்து இதே குற்றச்சாட்டு; இதே பாராட்டு… இந்தப் பிரச்சினையை யாரிடமாவது சொன்னால் கற்றலில் குறைபாடு போன்ற பிரச்சினையாக இருக்குமோ எனக் கேட்பார்கள். அப்படியெதுவும் இல்லை.

சோம்பேறித்தனம்… நன்றாக (சொற்பொழிவே நடக்கும்) பேசுவான். குழந்தைகளுக்கே உரிய திக்கிப்பேசும் மழலை மொழியில் அல்லாமல் மிகச் சிறப்பாகவே உச்சரிப்பான். படிக்கவும் செய்வான். தூங்கும் முன் தினமும் புதுப்புது கதைகளை சொல்வான்.

எழுதுவதில் மட்டும் அத்தனை மெத்தனம். இரண்டு பக்கங்களை எழுத வைப்பதற்குள் நெஞ்சுலி வந்துடும். போன வருடம் நடந்த தேர்வுகளில் அனைத்து பதில்களும் தெரிந்திருந்தும்கூட ஒரே ஒரு விடையை மட்டும் தாளில் எழுதி வைத்திருந்தான்.

பள்ளிகளில் எழுதுவதை குறைத்து கொடுக்கலாம். ஆனால் பள்ளிக் கல்வி முறை அப்படியில்லை. பக்கம் பக்கமா எழுதியே ஆக வேண்டிய கல்வி முறை. எழுதியே ஆக வேண்டும். இந்த ஆண்டு சற்றே வேகம் கூடியிருக்கிறது.

“ஃபர்ஸ்ட் மார்க் வாங்கலாம், ஆனா நீ பாஸ் வாங்கினா போதும்” என பள்ளியிலிருந்து வரும்போது மென்மையாகவே சொன்னேன். தலையை ஆட்டினான்.

வகுப்பு ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் அவனைப் பற்றி புகார் சொல்லத்தான் அழைத்திருந்தார்கள். ஆனால், அவனைப் புகழ்ந்தார்கள். எனக்கு புகார் பற்றிய கவலை இல்லை; புகழ்ச்சி குறித்து மகிழ்ந்தேன்.

நான் எப்போது கடிந்துகொள்வேனோ என்கிற அச்சம் அவனிடம் இருந்தது. திங்கள் இரவு இரவு முதல் காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி எனக்கு. சுத்தமாக பேசவே முடியவில்லை. பேச முயற்சித்தபோது, “அம்மா, ப்ளீஸ் உன்னால பேச முடியலை..பேசதம்மா… ஏன் கஷ்டப்படற”. சிரித்துக்கொண்டே நக்கலாகச் சொன்னான். அவனுடைய கவலை அவனுக்கு. ஆனால், ஒரு நாள் விடுமுறை எடுத்து, என்னைப் பார்த்துக்கொண்டான். நன்றி மகனே… 🙂

………………………………………………………………………………………………………………………….

இரண்டு வாரங்களுக்கு முன் முகநூலிலிருந்து விலகிவிட்டேன். குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. சில நேரங்களில் நான் எழுதுவது பலருக்கு மனவருத்தத்தைக் கொடுக்கிறது, கோபத்தை உண்டாக்குகிறது. வினை…எதிர்வினை…விவாதம்… சலிப்பாக உணர்ந்ததால் விலகிவிட்டேன்.

செய்தியாளராக முகநூலிலிருந்து விலகியிருப்பது இழப்புதான். ஆனால், இப்போதைக்கு இந்த விலகல் தேவையாக உள்ளது.

……………………………………………………………………………………………………………………..

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் செயல்பாட்டாளர் முகிலனுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமூக ஊடகங்களில் எழுதிய பதிவுகளை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். சூழலியல் தொடர்பான பல பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த முகிலனுக்கு ஆதரவாகவே நிறைய பேர் எழுதியிருந்தனர்.

‘மீறல்கள்’ நிகழக்கூடிய சாத்தியங்கள், சந்தர்ப்பங்கள் எல்லோருக்குமே வர வாய்ப்பிருக்கிறது. அது இயல்பானதுதான். ஆனால், மீறல் நிகழ்ந்துவிட்டபின் என்ன நடக்கும் என்பது குறித்து பலர் சிந்திப்பதில்லை. உணர்ச்சிகளின் உந்துதலில் நடக்கும் மீறல்களுக்கான பலனை தொடர்புடையவர்கள் அனுபவிக்கத்தான் நேரிடும். அது உண்டாக்கும் தொடர் சங்கிலி நிகழ்வுகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

அதோடு, ஆண்மய சமூகத்தில் ‘கட்டிக்கிட்டது ஒன்னு; வெச்சிக்கிட்டது ஒன்னு’ என்கிற வாய்ப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறைந்தபட்ச அறம் குறித்த உணர்வை தள்ளி வைத்து விடுகின்றன. தன்னுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை எனில் முகிலன் அதிலிருந்து வெளியேறியிருக்கலாம்; ‘காதலித்த’ பெண்ணை திருமணம் செய்துகொண்டிருக்கலாம். விவாகரத்தை நிகழக்கூடாத விசயமாகக் கருதும் சமூக உணர்வு, திருமண மீறல்களை மறைமுகமாக ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது.

…………………………………………………………………………………………………………………

’தோற்பது எப்படி?’ என்கிற ஒலிபரப்பு நிகழ்ச்சி குறித்து அண்மையில் அறிந்தேன். வெற்றியாளர்களின் தோல்வி அனுபவங்களை மட்டும் பகிர்வதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. பத்திரிகையாளர் எலிசபெத் டே தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சிகளை இங்கே கேட்கலாம்.

இப்படியொரு நிகழ்ச்சியை உருவாக்க பின்னணி காரணங்கள் குறித்து எலிசபெத் டே எழுதிய இந்தக் கட்டுரை Why we should learn to embrace failure. எனக்குப் பிடித்திருந்தது.

சமீப காலமாக சற்றே ஆழமாக விசயங்களை அணுகிப்பார்த்து எழுதும் யோசனை வந்துகொண்டிருக்கிறது. எலிசபெத்தின் கட்டுரை அகத்தூண்டலை உண்டாக்கியிருக்கிறது. அப்படியேதும் முயற்சித்தால் இங்கேயேதான் எழுதவிருக்கிறேன்.

………………………………………………………………………………………………………………..

கடந்த மாதம் நெருக்கடி காரணமாக மீண்டும் ஊடகங்களில் பணிவாய்ப்புத் தேடினோம்; நண்பர்களும் உதவினார்கள். ஆனால், நேர்மறையான எந்த பதிலும் கிட்டவில்லை. இது எதிர்ப்பார்த்ததுதான். உண்மையில், பணிதேடிவது எனக்கே பிடிக்கவில்லை. மனதளவில் தயார்ப்படுத்திக்கொண்டுதான் தேடினேன். அமையவில்லை. உண்மையாகவே மகிழ்ச்சி.

அந்த அமைப்பை குறை சொல்லிக்கொண்டே அதே அமைப்பில் 12 மணி நேரம் பணியாற்ற நேர்வது கொடுமையாகவே இருக்கும். 12 மணி நேர கொடுமையை தாங்குவதற்கு நான்கைந்து மணி நேர கொடுமையை தாங்கிக் கொள்ளலாம். அல்லது வேறு வழியைக் கண்டுபிடிக்கலாம்.

……………………………………………………………………………………………………………….

சில ஆண்டுகளாக எனக்கு PMDD (premenstrual dysphoric disorder) பிரச்சினை உள்ளது. பெண்களுக்குள்ள (20 பேரில் ஒருவருக்கு) பொதுவான பிரச்சினை இது. மாதவிடாய் காலத்துக்கு முன்பு கோபம், எரிச்சல், கவனக்குறைவு, இனம்புரியாத வருத்தம், காரணமே இல்லாத அழுகை, விரக்தி போன்ற உணர்வு உருவாகும். இதுதான் PMDD. சில நேரங்களில் மாதவிடாய் முடியும்வரைகூட தொடரும். ஹார்மோன் சமநிலை குலைவதால் இந்தப் பிரச்சினை வரலாம் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். முழுமையான காரணமும், மருந்துகளும் இல்லை.

ஆபத்தாக, தற்கொலை உணர்வுகூட சிலருக்கு வரலாம். சில நேரங்களில் எனக்கும்கூட அப்படித் தோன்றுவதுண்டு. ஆனால், தற்கொலையைக் காட்டிலும் எனக்கு மன உறுதி அதிகம். என் நண்பர் ஒருவர், இந்தப் பிரச்சினை உள்ளவர். அவருக்கும் இந்த உணர்வு உள்ளதென்று கூறினார். இந்த உணர்வு நிலையிலிருந்து வெளியேற உடற்பயிற்சி செய்வேன் என்றார். பிரச்சினை உணர்ந்தவர்களுக்கு பிரச்சினை இல்லை. பிரச்சினையை கைகொள்வது அவர்களால் முடிகிறது. இப்படியொரு பிரச்சினையை அறியாத பெண்களும் இருக்கிறார்கள். பல சமூக அழுதத்தங்களின் காரணமாக அவர்களுக்கு மேலும் மன அழுத்தம் அதிகமாகவே வாய்ப்புகள் அதிகம்.

பெரும்பாலும் இந்த சமயத்தில் அமைதியைக் கடைப்பிடிப்பேன். பிரச்சினைகள் வலிய வந்தாலும் சுரணையில்லாமல் நடந்துகொள்வேன். விரக்தியாக எண்ணங்கள் வரும்போது அடுத்த வாரம் சரியாகிவிடும் என சொல்லிக்கொள்வேன்.

மோசமான முடிவுகளை எடுக்க மனம் உந்தித்தள்ளும், அப்போது அதன் பேச்சைக் கேட்கவே கூடாது. அழும் உணர்வு வந்தால், தனிமையில் அழலாம்.

குடும்பத்தில் உள்ளவர்களிடம் இந்தப் பிரச்சினையை சொல்லி, ஒத்துழைக்கக் கேட்கலாம். அதிகப்படியான கோபத்தை குறும்பு செய்யும் மகனிடம் காட்ட வேண்டியிருக்கும், தாமதிக்காமல் அவனிடம் மன்னிப்பு கேட்டு விடுவேன். பிரச்சினை முடிந்தது.

யாரும் இல்லையென்றாலும் பிரச்சினை இல்லை, உங்களுக்குப் பிடித்த விசயங்களை அந்த சமயத்தில் செய்யுங்கள். படம் பார்க்கலாம், படிக்கலாம், எழுதலாம். நான் கொரிய சீரியல்களைப் பார்ப்பேன். 🙂

PMDD காரணமாக ஏராளமான சண்டை- சச்சரவுகளும் வந்துள்ளன. அந்தக் காலத்தை கடந்துவிட்ட பிறகு, இதற்கெல்லாம் இப்படி வினையாற்றியிருக்கத் தேவையில்லை எனத் தோன்றும். அதே சமயம் சில நல்லவைகளும் நடக்கலாம். எனக்கு நடந்திருக்கிறது.

PMDD ஒரு மோசமான பிரச்சினைதான். ஆனால், அதை கடக்க பழக்கப்படுத்திக்கொள்ள முடியும்.

நான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது

ஊடகங்கள் சமூகத்தின் நாடி. இங்கே நான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது. நமக்குத் தேவை மேற்குவங்கத்தின் டெலிகிராப் போல துணிச்சலான வெகுஜென ஊடகம். உ.பி. தேர்தலில் தோல்வியடைந்த பாஜக குறித்த தலைப்பு செய்தி இப்படி சொல்கிறது, ‘லெனினுக்கு பிறகு, நகரத்தில் புதிய சிலை’. இந்தத் தோல்வி குறித்து கருத்து சொல்லாத மோடியின் மவுனம் குறித்து பேசுகிறது இந்த தலைப்பு! டெலிகிராப்பின் முகப்பு பக்க தலைப்புகளை தொகுத்து கட்டுரை எழுதலாம். அடுத்து வருகிற ஊடகவியலாளர்களுக்கு முன்மாதிரியாக இப்படி ஊடகம் இருக்கும் என காட்டுவதற்கு உதவும்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டமோ, காவிரிக்கான போராட்டமோ நீர்த்துப் போகிறது, உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது எனில் அதற்கான முதன்மையான காரணமாக நான்காவது தூண் சாய்ந்து கிடப்பதே. ஸ்டெர்லைட்டின் விளம்பரத்துக்காக மக்களை விற்றவர்கள் அல்லவா இவர்கள்?
#IndiaBetraysTamilnadu

பிரபல என். ஜி.ஓனாலே இப்படித்தான்!

இதழ் ஒன்றுக்காக பிரபல என் ஜி ஓ ஒருவரிடம் பேட்டி கேட்டிருந்தேன். ஓரிரு தொலைபேசியில் பேசியதுண்டு. முதல் முறை இந்த இதழுக்காக பேட்டி வேண்டும் என்று கேட்டேன். சரி இத்தனை மணிக்கு அழையுங்கள் என்றார். அழைத்தேன். எடுக்கவில்லை.. சிறிது நேரம் கழித்து அழைத்தேன் எடுக்கவில்லை. அடுத்த நாள் இடைவெளி விட்டு அழைத்தும் எடுக்கவில்லை. ஒரு பதினைந்து நாள் கழித்து அழைத்தேன் எடுக்கவில்லை, இதுபோல பல முறை வெவ்வேறு நேரங்களில் அழைத்தும் எடுக்கவில்லை.
 
அவர் பரபரப்பானவர் என்பதால் ஏதோ வேலையில் சிக்கியிருக்கலாம் என ஒவ்வொருமுறையும் நினைத்தேன். ஆனால், அவர் புறக்கணிக்கிறார் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு இதழுக்கோ அல்லது பேட்டியாளருக்கோ பேட்டி கொடுக்க விருப்பமில்லை என நேரிடையாக சொல்லிவிடலாம். இதில் வருத்தப்பட ஏதும் இல்லை. அவரவர் சுதந்திரம்,விருப்பம் என ஒதுங்கிவிடலாம். ஆனால் தருகிறேன் என சொல்லிவிட்டு, எதுவுமே சொல்லிக்கொள்ளாமல் அலையவிடுவது எவ்வகையான செயல்பாடு?
 
இதுவே பிரபல அச்சு ஊடகங்களுக்கோ, தொலைக்காட்சி ஊடகங்களுக்கோ அவர் செய்துதிருப்பாரா? சுதந்திர பத்திரிகையாளராக இருப்பதும், அல்லது சிறு பத்திரிகையாக இருப்பதும் இவர்களுக்கு அலட்சியமாகத் தெரிகிறது. என் ஜி ஓக்கள் எதில் அதிக கவரேஜ் கிடைக்கிறது என்பதைத்தான் பார்ப்பார்கள்; புரிந்துகொள்ளக்கூடியதே.
 
என்ஜிஓக்கள் குறித்து விமர்சித்து எழுதிவருகிறேன். அந்த வகையில் அயற்சியாக உணர்ந்தபோதும் அவரை பேட்டி காணும் சந்தர்ப்பம் வாய்க்காமல் போனதிலும் அவரைப் பற்றி தெளிவு கிடைத்ததிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

கபாலி புரட்டிப்போடும் சாதி சர்ச்சைகள்!

இன்றைக்கு சமூக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக மாறிப்போயிருக்கிறது சாதி. சாதி ஒழிப்பு பிரச்சாரம் நடந்த மண்ணில் சாதியை பின் ஒட்டாக வைத்து முகநூல் குழுக்கள் தோன்றுகின்றன.  அவை சாதி பெருமையைப் பேசுவதோடு நின்றுவிடுவதில்லை; வன்மத்தை கக்கும் குழுக்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அரசியல் வாழ்க்கைக்கு சாதியே பிரதானமாகிவிட்டச் சூழலில் இத்தகைய குழுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் அரசுகள் எடுப்பதில்லை.  சமூக ஊடகங்கள்  சாதிய சமூகத்தின் கண்ணாடிகளாக மாறிப்போயிருக்கும் இந்தச் சூழலில் இன்னொரு குறிப்பிடத் தகுந்த தகவல் ஒன்றையும் சொல்ல வேண்டும். இணைய தேடு பொறிகளில் தமிழில் தேடப்படும் விஷயங்களில் நடிகர்களின் சாதி எது என்பது குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்திருக்கிறது.

தங்களுக்குப் பிடித்த அல்லது பிடிக்காத நடிகர்களின் சாதியைத் தெரிந்துகொள்ள இணையவாசிகள் ஏன் விரும்புகிறார்கள்? சாதிய சமூகம் ஒரு காரணம் என்றாலும் வெகுஜென கலைவடிவமான சினிமா மீது சாதிய கண்ணோட்டத்தை  ஏற்படுத்தியது இதே கலைத்துறைச் சார்ந்தவர்கள்தான். நடிகர் கமல்ஹாசனின் தேவர் மகனிலிருந்து பாரதிராஜாவின் தேவர் பெருமை பேசும் இடைக்காலப் படங்களிலிருந்து கே. எஸ். ரவிக்குமார், உதயகுமார் ஆகியோரின் கவுண்டர் பெருமை பேசும் படங்களிலிருந்து சாதிய நிழல் சினிமா மீது  படர்ந்தது எனச் சொல்லலாம். இவர்களின் அடிகளை பின்பற்றி நூறு படங்களாவது வந்திருக்கும்.

சமகாலத்தில் தேவர் சாதியினரின் பங்களிப்பு அதிகமாக இருப்பதாலோ என்னவோ, தேவர் சாதி பெருமை பேசும் சினிமாக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. சாதிய கொலைகளும் சாதி பெண்கள் மீது செலுத்து வன்முறையும் பெருமைக்குரிய, வீரம் செறிந்த கதைகளாகப் பதிவு செய்யப்படுகின்றன. தேவர் மகனில் வந்த ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்ற பாடல் சாதி வெறியேற்றும் வகையில் ஆதிக்க சாதிகளின் விழாக்களின் ஒலிக்க வைக்கப்படுகின்றன. இந்த வரிசையில் கொம்பன், சுந்தர பாண்டியன் இன்னும் பல படங்களின் பாடல்கள், சாதி கலவரத்தைத் தூண்டும்வகையில் தலித் சாதியினரை உசுப்பேற்றும் வகையில் ஒலிக்க வைக்கப்படுவதாக பல பதிவுகள் ஆங்கில செய்தி ஊடகங்களில் பதிவாகியுள்ளன.

இத்தகையதொரு சூழலில் தலித் என்கிற அடையாளத்துடன் பா. ரஞ்சித் திரைப்படத்துறைக்கு வருகிறார்; முதல் படமாக ‘அட்டைக்கத்தி’ காதலைப் பற்றிப் பேசினாலும் அது தலித் வாழ்வியலின் அடித்தளத்தில் அமைந்திருந்தது. திணிப்பாக இல்லாமல் மிக இயல்பாக அதை பா. ரஞ்சித் செய்திருந்தார். அவருக்கு அதில் வெற்றியும் கிடைத்தது. வெற்றி என்பது அனைத்து ‘சாதி’யைச் சார்ந்த ரசிகர்கள் கொடுத்தது தானே? பா. ரஞ்சித்தின் தலித் அடையாளம் அட்டகத்தியின் வெற்றிக்குப் பிறகுதான் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது. ‘மெட்ராஸ்’ படத்துக்குப் பின் சமூக ஊடகங்களில் தலித் மக்கள், தங்கள் சமூகத்தின் வெற்றி முகமாக ரஞ்சித்தை கொண்டாடினார்கள்.

ஆயிரம் ஆண்டுகாலமாக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்த ஒருவர் வெற்றியாளராக நிற்கும்போது அவரை, அவர் சார்ந்த சமூகம் கொண்டாட நினைப்பது இயல்பான ஒன்றே. தங்களை ஒடுக்க நினைக்கும் போதெல்லாம், தங்களுக்குக் கெதிரான வன்முறைகளைக்  கட்டவிழ்க்கும் போதெல்லாம் சாதிய சினிமாப் பாடல்களை ஒலிக்கவிடும் ஆதிக்க சாதியினரின் செயல்கள், தங்களுக்காகவும் தங்களை பிரதிநிதிப்படுத்தவும் ஒருவர் வந்திருக்கிறார் என உவகை கொள்வது இயல்பாக நடக்கக் கூடிய ஒன்றுதான். நமக்காக ஒருவர்,  என்கிற நினைப்புக்கும் நாம்தான் எல்லாம் என்கிற நினைப்புக்கு பாரதூர வித்தியாசம் இருக்கிறது. ஒடுக்கும் சாதியின் பெருமையை பதிவு செய்யும் சினிமாவுக்கும் ஒடுக்கப்படும் சாதியின் வாழ்வியலை பேசும் சினிமாவுக்குமான வித்தியாசமாக அதைச் சொல்லலாம்.

ஆனால், இங்கே நடப்பது என்ன? தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகர், அவருக்காக திரையுலகமே ஏங்கிக் காத்துக்கிடக்கும், நடிகர் ரஜின்காந்தை வைத்து ‘தலித்’ இயக்குநர் பா. ரஞ்சித் படம் இயக்குகிறார். முந்தைய படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக வாழ்வியலையும் அரசியலையும் காட்சிப் படுத்திய ரஞ்சித், இந்தப் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லா மட்டங்களிலும் இருக்கத்தான் செய்தது. ட்ரெய்லர் வந்தது, ‘கபாலின்னா முறுக்கு மீசை, மச்சத்தை வெச்சிக்கிட்டு, கூப்ட உடனே சொல்லுங்க எஜமான்னு வந்து நிப்பேன்னு நினைச்சியா? கபாலிடா’ என்ற வசனங்கள் அனலைக் கிளப்பின.  சமூக ஊடகங்களில் அறிவுஜீவிகள் கபாலியின் குறியீட்டைப் பற்றி பேசி சிலாகித்தார்கள். இதுஒரு கொண்டாட்ட மனநிலைதான். அதுவே முகநூலில் இயங்கும் சாதிய குழுக்களை கிளப்பிவிட்டிருக்கலாம்.

கபாலி பாடல்கள் வெளியானபோது ஒரு பாடலில் ஒலித்த ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என்று வருவதை வைத்து மிகப் பெரிய சர்ச்சை முகநூலில் எழுந்தது. இந்த வரியை வைத்து பா. ரஞ்சித்தின் சாதியுடன் பிணைத்து வன்மமாக எழுதினார்கள். ‘பற’ என ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புது பொருள் தந்தார்கள். அவர் சார்ந்த சாதி மக்களின் தொழிலுடன் தொடர்பு படுத்தி இவரும் அந்த வேலைகளுக்குத்தான் லாயக்கு என்று எழுதினார்கள். வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அத்தனை தகுதியும் இந்தப் பதிவுகளை எழுதியவர்கள் கொண்டிருந்தார்கள். சில நடுநிலைமைவாதிகள் ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என இவர்களும் வன்முறைப் பாதையை கையில் எடுப்பதா என்றார்கள். ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெப்போம்’ என அடிமைத்தனத்தை பெருமிதத்துடன் சொன்ன பாடல்களையெல்லாம் நீங்கள் ரசிக்கவில்லையா? ஆண்டைகளின் கதை முடிப்பான் என்ற வரிகள் ஏன் உங்களை கதி கலங்க வைக்கின்றன என்று முற்போக்குவாதிகள் சிலர் பா. ரஞ்சித்தின் தரப்பில் பேசினார்கள்.

இப்படியாக விவாதங்கள் கனன்று கொண்டிருக்கும் வேளையில், நமக்கு ஒரு அடிப்படையான கேள்வி எழுகிறது? நாம் எப்போது கலைஞர்களிடம் சாதி பார்க்க ஆரம்பித்தோம்? நம்முடைய பொழுதுகளை இனிமையாக்கும், நம் துயரங்களை தங்கள் திறமையால் சில மணிநேரங்கள் மறக்க வைக்கும் சினிமா கலைஞர்களுக்கு சாதி சாயம் பூசுவது சரியானதுதானா? உங்கள் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் உங்களுக்கு எதிரான சமூகத்தின் பெருமை பேசினார்/ பேசுகிறார் என்பதற்காக, அவரை ஒதுக்கினீர்களா/ஒதுக்குவீர்களா? அப்படித்தான் பா. ரஞ்சித்தையும் ஒரு கலைஞனாகப் பாருங்கள், அவருடைய சாதியைப் பார்க்காதீர்கள்!

ஜூன் மாதம் இதழ் ஒன்றில் எழுதியது.

போராட்டங்களை கொச்சைப்படுத்துகிறதா நியூஸ் 7 தமிழ்?

THE TIMES TAMIL

போராட்டம் என்பது மக்கள் குறைகளை அரசுக்கு சுட்டிக்காட்டும் ஒரு வடிவம். அரசின் எல்லா அதிகாரக் கதவுகளையும் தட்டிவிட்டுத்தான் இறுதியாகப் போராட்டத்தை மக்கள் கையில் எடுக்கிறார்கள். இவ்வகையில் ஊடகங்கள் போராட்டங்களை இன்னும் விரிவாக அனைத்து தரப்பினரை(அரசு தரப்பு உள்பட)யும் சேரும் பணிகளைச் செய்பவை. செய்ய வேண்டும். அதுதான் ஜனநாயக அமைப்பை தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறையாக இருக்கும். அதைவிடுத்து “தினந்தோறும் 20 போராட்டங்கள்: நிம்மதி இழந்து தவிக்கும் போலீசார்” என்று தலைப்பிட்டு செய்தி எழுதுவது போராட்டங்களை மழுங்கடித்து, போராட்டங்களை விரும்பாத சர்வாதிகாரத் தன்மையை நிலைநாட்டுவதற்கு உதவி புரிவததாகத்தான் தோன்றும்.

போராட்டத்தைக் கண்காணிப்பதும், அன்றாட நடவடிக்கைகளை பாதிக்காமல் போராட்டத்தை கட்டுப்படுத்துவதுதான் காவல்துறையின் பணி. அரசுக்கே போராட்டங்களை முடக்கும் எண்ணம் இல்லை எனும்போது, ஊடகங்கள் ஏன் போராட்டங்கள் என்றால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்ற கோணத்திலே செய்தி வெளியிடுவது ஏன்?

பொது மக்கள் என்பவர் யார்? தண்ணீர் வரவில்லை என்னும் போது அதிகாரத்தின் அனைத்து கதவுகளையும் தட்டிவிட்டு இறுதியாக சாலையில் இறங்கி போராடுகிறார்கள். இப்படிப் போராடுகிறவர்கள் மக்கள் இல்லையா? சாலையில் இந்தப் போராட்டத்தால் அதிகபட்சம் அரைமணி நேரத்தை இழக்கும் பொது மக்களின் துயரம்தான் இங்கே முக்கியமானதா? அல்லது மாதக் கணக்கில் வருடக்கணக்கில் பாதிக்கப்பட்டு போராட்டத்தில் இறங்கியிருக்கும் மக்களின் துயரம் முக்கியமானதா?

நியூஸ் 7 தமிழ் பல நல்ல விவாதங்களை முன்னெடுக்கிறது. ஆனால், போராட்டங்களைக் கொச்சைப் படுத்தும் இத்தகைய செய்திகள் யாரைத் திருப்திப் படுத்த என்கிற…

View original post 139 more words