இது மக்களாட்சி என சொல்ல இன்னும் ஏதேனும் மிட்சம் இருக்கிறதா?

மகாராஷ்டிரத்தில் ஏதும் செய்யாமல் இருக்கிறார்களே என அரசியல் நோக்கர்கள் ஏமாந்து போன ஒரு தருணத்தில், நள்ளிரவு ஆட்டத்தை அதிரடியாய் அரங்கேற்றியிருக்கிறார்கள் நவீன ‘சாணக்கியர்கள்’. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவ சேனாவுடன் கூட்டணி முடிவாகிவிட்டதென்றும் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாகவும் நாட்டின் பெரும்பான்மையான நாளிதழ்கள் சனிக்கிழமை காலையில் செய்தி வெளியிட்டிருந்தன. செய்தித்தாளில் வந்தது உண்மையா அல்லது காலையில் வந்துகொண்டிருக்கு பிரேக்கிங் நியூஸ் உண்மையா என ஒரு கணம் மக்கள் குழம்பிப் போனார்கள். ஆனால், தேசியவாத காங்கிரசின் அஜித் பவாருடன் நள்ளிரவு கூட்டணி அமைத்து அதிகாலை ஐந்தரை மணிக்கு முதலமைச்சர் – துணை முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்ய வைத்த டெல்லி சாணக்கியர்கள் இந்தக் குழம்பிய நிலையைக் கண்டு சிரித்திருக்கக்கூடும்.

சமீபத்தில் நடந்துமுடிந்த மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஒரு கூட்டணியிலும் பாஜக – சிவசேனா கட்சிகள் மற்றொரு கூட்டணியிலும் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் தேசியவாத காங்கிரசுக்கு 54 இடங்களும் காங்கிரசுக்கு 44 இடங்களும் கிடைத்தன. ஆக, பாஜக தலைவர்கள் காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கத்தை முன்வைத்து இந்து தேசியவாத பிரச்சாரத்தை முடுக்கிவிட்டபோதும், அமோக வெற்றியை பாஜக கூட்டணியால் பெறமுடியவில்லை. ஆட்சியமைக்கத் தேவையான 145 எம்.எல்.ஏக்கள் போதும் என்றாலும் பாஜகவால் 105 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

ஆட்சியமைக்க சிவசேனாவின் தயவு பாஜகவுக்கு அவசியமாகத் தேவைப்பட்டது. ஆனால், கடந்த காலத்தைப் போல வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுக்க சிவசேனா தயாராக இல்லை. துணை முதலமைச்சர் பதவி, முக்கிய அமைச்சரவைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அதில் உறுதியாக நின்றது சிவசேனா. சித்தாந்த பங்காளிகளான பாஜகவும் சிவ சேனாவும் எப்படியும் சேர்ந்து ஆட்சியமைத்து விடுவார்கள் என்றே அனைத்து தரப்பினரும் எதிர்ப்பார்த்தனர். இழுபறி நீடித்துக்கொண்டிருந்த வேளையிலும்கூட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அமைதி காத்தன.

ஒருகட்டத்தில் சிவ சேனாவை பாஜகவுடன் இனி பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்கிற நிலைக்கு வந்தது. சித்திரங்கள் மாறின… ‘அரசியல் வேறுபாடுகளை’ மறந்து சிவ சேனாவுடன் தே.வா. கா. – கா பேச்சு வார்த்தை நடத்தின. நீண்ட இழுபறிக்குப் பின், உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் ஆட்சியை நடத்த குறைந்தபட்ச செயல்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் சரத் பவார் தரப்பு கூறியது.

தேர்தல் முடிவுகள் செப்டம்பர் 24 அன்று வெளியாகி, சரியாக இரண்டு மாதங்கள் கழித்து நீண்ட இழுபறிக்குப் பிறகு, மகாராஷ்டிரத்தில் அரசு அமைந்துள்ளதாக பெருமூச்சு விட்ட நிலையில், ‘டெல்லி சாணக்கியர்கள்’ புதிய திரைக்கதையுடன் காட்சியை மாற்றியமைத்துவிட்டனர்.

டெல்லி சாணக்கியர்களின் மாற்றியமைத்த திரைக்கதையின் ஜனநாயக தன்மை குறித்து அலசும் முன் ஒரு ட்விட்டர் பதிவுடன் பிளாஸ் பேக்கை அறிந்துகொள்வோம். பாஜக -சிவ சேனாவுடன் நடத்திய இழுபறி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே, தே.வா. கா. உடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான செய்திக்கு பதிலளிக்குவிதமாக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஒரு ட்விட்டர் பதிவை எழுதியிருந்தார்.

“பாஜக நிச்சயம் ஒருபோதும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைக்கப் போவது இல்லை, இல்லை..இல்லை.. மற்றவர்கள் அமைதியாக இருந்தபோது, அவர்களுடைய ஊழலை நாங்கள்தான் வெளிக்கொண்டுவந்தோம்” என்றது பட்னாவிஸின் ட்விட்.

பாஜகவுக்கும் முந்தைய காங்கிரஸ் – தே. வா. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது ரூ. 70 ஆயிரம் கோடி மதிப்பிலான பாசன திட்டத்தில் முறைகேடு நடந்ததாகவும், அதில் அஜித்பவாருக்கு முக்கிய இடம் இருந்ததாகவும் குற்றச்சாட்டை எழுப்பியது பாஜக. இதை முன்வைத்து பிரச்சாரம் செய்த பாஜக ஆட்சியைப் பிடித்ததும் 2014-ஆம் ஆண்டு பாசன ஊழலை விசாரிக்க உத்தரவிட்டப்பட்டது. விசாரணை இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. மேலும் பாவர் குடும்பத்தினர் மீது கூட்டறவு சங்க முறைகேடு குற்றச்சாட்டும் காத்திருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் டெல்லி சாணக்கியர்கள் புதிய திரைக்கதையை அமைத்துள்ளனர்; அஜித் பாவரை மத்திய அரசாங்கத்தின் அனைத்து ஆற்றல்களையும் பயன்படுத்தி இணைத்துள்ளனர். யார் யாருடனும் கூட்டணி சேரலாம், இதுதான் ஜனநாயகம். சரிதான்… ஜனநாயகம் என்ன பாடுபட்டிருக்கிறது என்பதையும் பார்ப்போம்.

பட்னாவிஸுக்கும் அஜித் பவாருக்கும் அதிகாலை 5.30 மணிக்கு அவசர அவசரமாக பதவி பிரமாணம் செய்து வைத்து ஆளுநர் பகத் சிங் கோசியாரி, பாஜகவின் திட்டத்தை செயல்படுத்துபவராக நடந்துகொண்டிருக்கிறார். முன்னதாக, மகாராஷ்டிர பாஜகவின் அங்கமாக, பாஜகவின் நடவடிக்கைகளுக்கு மட்டுமே இவர் இசைவாக நடந்துகொண்டார் என்பதும் நினைவு கூறத் தக்கது.

பாஜக ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மையை திரட்ட முடியாத நிலையில், தனது பதவியை நவம்பர் 9-ஆம் தேதி பட்னாவிஸ் ராஜினாமா செய்தார். அவருக்கு 48 மணி நேரம் வழங்கியிருந்த ஆளுநர், சிவ சேனா 24 மணி நேரம் ஆட்சியமைக்க கால அவகாசம் கேட்டபோது மறுத்தார். தேசியவாத காங்கிரசுக்கு 24 மணி நேரம் அளித்து, அது முடியும் முன்னரே குடியரசு தலைவர் ஆட்சி மாநிலத்தில் அமலாக்கப்படுவதாக அறிவித்தார். பொம்மை தலைமையிலான உச்சநீதிமன்ற தீர்ப்பை வெளிப்படையாக மீறியது இந்த அமலாக்கம்.

மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏக்களை குதிரை பேரத்தில் வாங்க, பாஜகவுக்கு அவகாசம் வழங்கவே இந்த குடியரசு தலைவர் ஆட்சி அமலாக்கத்தைக் கொண்டுவந்தார் ஆளுநர். அதுபோல, நினைத்தது நடந்தது. தேசியவாத காங்கிரஸ் உடைக்கப்பட்டு அஜித் பவாரும் அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது. எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரிக்கிறார்கள், அவர் யார் என்கிற விவரம் எதையும் ஆளுநர் மாளிகை வெளியிடவில்லை. அவர்களுடைய கையெழுத்து, அவர்கள் ஆதரவளிப்பதாக சொன்னது உண்மைதானா என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் எவ்வித விசாரணையும் ஆளுநர் செய்யவில்லை.

இதில், உச்சகட்ட ஜனநாயக படுகொலையாக, ஆளுநரும் குடியரசு தலைவரும் டெல்லி சாணக்கியர்களின் கைப்பாவைகளாக இந்த விசயத்தில் செயல்பட்டிருப்பதைச் சொல்லலாம். முந்தைய நாள் ஒரு கூட்டணி தங்களிடம் பெரும்பான்மை உள்ளதாக அறிவிக்கிறது. இரவோடு இரவாக மாநிலத்தில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்படுகிறது. குடியரசு தலைவர் ஆட்சி நீக்கப்படுவதற்கு முன் மத்திய அமைச்சரவை கூடி தனது பரிந்துரையை குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும். அந்த பரிந்துரையின் அடிப்படையில் குடியரசு தலைவர், ஆளுநருக்கு உத்தரவை அனுப்புவார். இதெல்லாம் நள்ளிரவில் எப்போது நடந்தது?

பிரிவு 12-ஐப் பயன்படுத்தி, அவசர கால நிலை காரணமாக பிரதமர், குடியரசு தலைவர் ஆட்சியை மாநிலத்திலிருந்து திரும்பப் பெறலாம். இந்தப் பிரிவைப் பயன்படுத்தியிருப்பதாக அரசு சொல்கிறது. ஆனால், அப்படியென்ன அவசர நிலை என்பது குறித்து விளக்கப்படவில்லை.

பாஜக ஆட்சி தொடர, 36 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும். இந்த எம்.எல்.ஏக்களை அஜித் பவார் எங்கிருந்துகொண்டுவருவார் என்பது டெல்லி சாணக்கியர்களுக்கே வெளிச்சம். பாஜகவின் அரசியல் தந்திரங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் காங்கிரசால் என்ன செய்ய முடியும்? கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏக்கள் மீது பாய்ந்த வழக்குகள் ஆண்டுகணக்கில் நீதிமன்றத்தில் தூங்கும்போது சரத் பவாரால் என்ன செய்துவிட முடியும்?

“அஜித் பவார் ரூ. 70 ஆயிரம் கோடியை பாசன திட்டத்துக்காக பயன்படுத்தினார். அந்தப் பணம் எங்கே போனது? அந்த தண்ணீர் எங்கே போனது? ஒரு சொட்டுகூட தண்ணீர் இல்லையே?” என உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அனல் பறக்கும் பேச்சின் தகிப்பு இன்னமும் மறையவில்லை.

கர்நாடகா, கோவா, அஸ்ஸாம், மணிப்பூர் மாநிலங்களில் பெரும்பான்மையே பெறாமல், அல்லது முன்னாள் எம்.எல்.ஏக்களை வாங்கி தனது சுவடே இல்லாத திரிபுராவில் ஆட்சியமைக்க திட்டம் தீட்டி செயல்படுத்திக் காட்டிய ‘சாணக்கியர்’, ஊழல் குறித்து ஏன் இத்தனை தூரம் அலட்டிக்கொள்ளப்போகிறார்?

காங்கிரசின் ஊழல் ஆட்சி, குடும்ப ஆட்சி குறித்து பேசியே ஆட்சியைப் பிடித்தது பாஜக. பயங்கரவாதிகளிடம் கருப்புப் பண புழக்கத்தை ஒழிப்பேன் என சொல்லி பணமதிப்பழிப்பு நடவடிக்கையை கொண்டுவந்த பாஜக, பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமிடம் தேர்தல் நிதி வாங்கியிருப்பதாக ஆதரத்துடன் வெளியாகியிருக்கிறது. ஆக, பாஜகவிடன் எந்த அறமும் பாக்கியில்லை.

பல கட்சி ஜனநாயகத்தில் எந்தக் கட்சியும் யாருடனும் கூட்டு சேரலாம் என்பதைச் சொல்லி சொல்லியே மக்களை இத்தகைய கீழிறங்கிய நிலையைக் காணப் பழக்கப்படுத்திவிட்டார்கள். ஒருமுறை வாக்களித்தபின், மக்களின் ஜனநாயக கடமை முடிந்துவிடுகிறது. எத்தகைய பொய் வாக்குறுதிகளை கூறினாலும், எத்தகைய தகிடு தத்தங்களை செய்தாலும் மக்களால் அதன்பிறகு எந்தக் கேள்வியும் கேட்க முடியாது. மக்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இது மக்களாட்சி என சொல்ல இன்னும் ஏதேனும் மிட்சம் இருக்கிறதா? ‘சர்வாதிகார ஜனநாயகம்’ என சொல்வதே சரியாக இருக்கும். இனியும் ஏன் பூசி மொழுக வேண்டும்? வெளிப்படையாகவே அறிவித்துவிடுங்கள்.

தத்தளிக்கும் காங்கிரசை கரை சேர்ப்பது யார்?

கடந்த ஒருவாரமாக மகாராஷ்டிரத்தில் அரங்கேறிக்கொண்டிருந்த அரசியல் த்ரில்லர் நாடகம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பதன் மூலம், தாராளவாத ஜனநாயகவாதிகளின் வாழ்த்துக்களை பெற்றுவருகிறது சிவ சேனா என்னும் பாசிச மதவாத, பிரிவினை வாத கட்சி. ஜனநாயகத்தின் யாரும் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்கிற ஃபார்முலா படி, சரத் பவார்தான் இந்த அரசியல் த்ரில்லரின் இயக்குநர் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள். எனில், காங்கிரசின் இடம் என்னவாக உள்ளது என்கிற முக்கியமான கேள்வி எழுகிறது. சிவ சேனாவுக்கு ஆதரவா இல்லையா என்கிற முடிவெடுக்கவோ துணிந்து களத்தில் இறங்கவோ காங்கிரஸ் மேலிடம் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போன நிலையில் பாஜக முந்திக்கொண்டு ஆட்சியமைக்க முயன்றது.

மாலுமி இல்லாத கப்பலைப் போல காங்கிரஸ் இந்திய அரசியல் களத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது என்பதையே மகாராஷ்டிரத்தில் நடந்தவை சுட்டிக்காட்டுகின்றன. பொது நோக்கத்துக்காக இயங்கும் ஒரு அமைப்புக்கு தலைவர் வேண்டும் அல்லது உறுதியான ஒரு சித்தாந்தம் வழிநடத்த வேண்டும். பாஜகவை வலதுசாரி சித்தாந்தம் வழிநடத்துகிறது. கம்யூனிஸ்டுகளை இடதுசாரி சித்தாந்தம் வழிநடத்துகிறது. ஆனால், காங்கிரஸ் தனது சித்தாந்தம் குறித்த தெளிவற்ற நிலையில், ஒரு தலைமையை மட்டுமே நம்பியுள்ளது. அந்தத் தலைமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள காங்கிரசில் யாருமில்லை. அல்லது காங்கிரசின் வாரிசு தலைமை அந்தப் பொறுப்பை மற்றவர்களுக்கு விட்டுத்தர தயாராக இல்லை.

2014-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்த நேரத்தில் அவருக்குத் தெரியாமலேயே காங்கிரசின் இரண்டாம் கட்ட தலைவர்கள் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என அறிவித்தார்கள். காங்கிரஸ் துணை தலைவராகவும் எம்.பி. யாகவும் இருந்த ராகுல் காந்தியை முதன்மைப்படுத்தி 2014-ஆம் ஆண்டின் பிரச்சாரங்கள் இருந்தன. ஆனால், ஐ.மு.கூ. ஆட்சியின் மீது இருந்த பல்வேறு ஊழல் புகார்கள், பாஜக முன்வைத்த ‘வளர்ச்சி’ என்கிற முழக்கம் காரணமாக காங்கிரஸ் வெறும் 44 இடங்களை மட்டுமே வெல்லும் நிலைமைக்குச் சென்றது.

‘மோடி’ அலை காரணமாகவே இந்த வீழ்ச்சி என காங்கிரசார் சொல்லிக்கொண்டார்கள். தோல்விக்கான காரணங்களை கூட்டாகவோ, தனிப்பட்ட முறையிலோ அவர்கள் அலசவில்லை. பதவியில்லை; சற்று ஓய்வெடுக்கலாம் என்கிற மனநிலையே காங்கிரசாரிடம் இருந்தது. இந்த ஓய்வு மனநிலையில், எல்லாம் தலைமை பார்த்துக்கொள்ளும் என ராஜீவ் குடும்பத்திடம் பொறுப்புகளை தள்ளிவிட்டார்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள். சோனியா காந்தி உடல்நிலை காரணங்களால் அரசியலில் முழுமையாக ஈடுபட முடியாத நிலையில், ராகுல் காந்தி தலைவர் பதவியில் அமரவைக்கப்பட்டார்.

ராகுல் காந்தியை அரசியல் வாரிசாக அந்தப் பதவியில் அமர்ந்தாலும், அத்தனை எளிதாக அவருடைய முயற்சிகளை புறம்தள்ளிவிட முடியாது. தங்களுடைய கடந்த கால அரசியல் தவறுகளுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதாகட்டும், மதவாத அரசியலை கடுமையான நிலைப்பாட்டுடன் எதிர்ப்பதாகட்டும் அவர் நேருவிய மதப்பீடுகளை சற்றேனும் உள்வாங்கியவராகத்தான் தெரிந்தார். தன்னளவில் அவர் உறுதியாக இருந்ததுபோல, தன் கட்சியினர் முக்கியமாக இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களுக்கு இந்த உறுதியை வலியுறுத்தவில்லை என்கிற அளவில் ராகுலின் தலைமைப் பண்பு கேள்விக்குறியாகிறது.

உதாரணத்துக்கு, திரிபுரா மாநிலத்தை எடுத்துக்கொள்வோம். இடது முன்னணி 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது காங்கிரஸ். அம்மாநிலத்தில் தனது இருப்பை தக்க வைக்கவோ, ஆட்சியைப் பிடிப்பதற்கோ காங்கிரஸ் மேலிடம் வழிமுறைகளை வகுத்து தந்திருக்க வேண்டும். தனது மாநிலங்களை நழுவவிட்டதைப் போல, திரிபுராவையும் கைகழுவியது காங்கிரசின் டெல்லி மேலிடம். காங்கிரசிலிருந்து திரிணாமூல் காங்கிரசுக்குத் தாவிய எட்டு எம்.எல்.ஏக்கள், 2018 சட்டப் பேரவை தேர்தலுக்கு முன், பாஜக-வில் இணைந்தார்கள். சுவடே இல்லாத பாஜக, ஒரே தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது! காங்கிரஸ் தலைமை மறைமுகமாக அதற்கு உதவியது! 10 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த காங்கிரசின் சுவடுகூட திரிபுராவில் இல்லை.

அதுபோல, சோனியாவுக்கும் – ஜெகன் மோகனுக்கும் – சந்திரசேகரராவுக்குமான ஈகோ யுத்தம் காரணமாக ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் சுவடில்லாமல் அழிந்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். கர்நாடகத்தில் இன்று பாஜக தலைமை ஆள்கிறதென்றால் அதற்குக் காரணமும் விலைபோன காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்தான். சமீபத்திய உதாரணமான மகாராஷ்டிர மாநிலத்தில்கூட இரண்டு தேர்தல்களுக்கு முன்னால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இன்று வெறும் 44 எம்.எல்.ஏக்களுடன் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.

அதாவது, தனிநபராக ராகுல் காந்தி, தாராளவாத ஜனநாயகவாதியாக மதவாதத்தை எதிர்ப்பவராக இருந்தாலும், அதை தனது கட்சியினருக்கு கடத்தும் அளவுக்கும் ஆளுமை உள்ளவராக வளரவில்லை. இதை உணர்ந்ததாலோ என்னவோ தானாகவே 2019 தேர்தல் முடிவுகளை ஏற்று பதவி விலகியிருக்கிறார். தனது போதாமைகளை அவர் உணர்ந்திருக்கலாம். ஆனால், காங்கிரசின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ராஜீவ் குடும்பத்திடமிருந்து தலைமை பொறுப்பை வேறு ஒருவருக்கு போவதை பிரயத்தனத்துடன் தடுத்துக்கொண்டிருக்கிறது. சோனியாவும் ராகுலுமே தங்களுடைய பதவிகளை விட்டுத்தருவதாக வெளிப்படையாக அறிவித்தாலும் அதை செயல்படுத்துவோர் யாரும் இல்லை.

மாநிலங்களில் காங்கிரசின் தலைமை பதவிகளில் பெரும்பாலும் கட்சி தலைவர்களின் வாரிசுகளே அலங்கரிக்கும் நிலையில், டெல்லி தலைமையில் வாரிசு அல்லாதவர்கள் வந்தால், எங்கே தங்களுடைய வாரிசுகளின் பதவிகளும் பறிபோய்விடுமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள். கட்சி எப்படி போனாலும்சரி, நாடு எப்படி போனாலும்சரி நம்முடைய பதவி தப்ப வேண்டும் என்கிற மானப்பான்மை காங்கிரசாரின் பொதுவான குணமாகியுள்ளது.

அண்மையில் மத்திய பிரதேச காங்கிரசின் வாரிசு இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்திய, தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி குறிப்பில் காங்கிரஸ்காரர் என்ற பதத்தை நீக்கினார். முன்னதாக, பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறியிருந்த நிலையில், இது பரபரப்பாக பேசப்பட்டது. பாஜகவுக்கு தாவப்போகிறாரா என்றெல்லாம் வதந்திகள் வந்த நிலையில், வதந்திகளைவிட அவர் அளித்த விளக்கம் மோசமானதாக இருந்தது; காங்கிரசின் பரிதாப நிலையைக் காட்டுவதாகவும் இருந்தது. அதாவது, தன்னைப் பற்றிய முக்கியமானவற்றைப் பற்றி மட்டும் கூறிக்கொண்டதாகவும், நீளமாக இருந்ததால் காங்கிரஸ்காரர் என்பதை வெட்டி விட்டதாகவும் விளக்கம் கொடுத்தார்.

பாரம்பரியமாக காங்கிரஸ்காரர்கள் குடும்பத்திலிருந்து வரும் வாரிசு இளம் தலைவர் காங்கிரசை எவ்வளவு துட்சமாக மதிக்கிறார் என்பதை சுட்டிக்காட்டியது அவருடைய விளக்கம். அயோத்தி தீர்ப்பை ஒரு சில காங்கிரசார் விமர்சிக்கிறார்கள்; பலர் வரவேற்கிறார்கள். இதுபோல பாஜகவின் மதவாத அரசியலுக்கு ஆதரவான கருத்துக்களை காங்கிரசார் சொல்வது அவ்வவ்போது பரபரப்புக்குரிய செய்தியாகிறது. இத்தகையவர்களை வைத்துக்கொண்டு காங்கிரஸ் எப்படி இந்தியாவை இறுகப் பற்றியிருக்கும் மதவாத அரசியலை வேரறுக்க முடியும்? திறந்த மனதுடன் தற்போதிருக்கும் தலைமை ஒரு தலைவரை, ராஜீவ் குடும்பத்தைச் சாராத ஒருவரை (தனது போதாமைகளை வளர்த்துக்கொள்ள ராகுலுக்கு கால அவகாசத்தை கொடுத்துவிட்டு) அனுமதிக்குமா?

“நாம் அனைவரும், நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சம உரிமை, சலுகைகள் மற்றும் கடமைகளைக் கொண்ட இந்தியாவின் குழந்தைகள். வகுப்புவாதத்தையோ அல்லது குறுகிய மனப்பான்மையையோ நாம் ஊக்குவிக்க முடியாது, ஏனென்றால் சிந்தனையிலோ அல்லது செயலிலோ குறுகிய மக்களைக் கொண்ட எந்தவொரு நாடும் சிறந்த நாடாக இருக்க முடியாது”.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு ஆற்றிய முதல் உரையில் இடம்பெற்ற முழக்கம் இது. நேரு முதல் பிரதமர் மட்டுமல்ல, மதசார்பின்மையை என்னும் பாதையை வலுவாக போட்டு, இந்தியாவை கட்டமைத்த தலைவர்களில் ஒருவர். காங்கிரஸ்காரராக அதைச் செய்தார். இன்றைய காங்கிரஸ் தலைமை அவர் காட்டிய வழியில் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்குமா? அல்லது தனது சுயநலனுக்காக நாட்டையும் அதன் பாரம்பரியத்தை மதவாதத்திடம் அடகு வைக்குமா?

சுபாஷ் சந்திர போஸை முன்வைத்து அமித் ஷா-மோடியின் அரசியல்!

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகான வரலாற்றில் மர்மமாக நீடிப்பவர் சுபாஷ் சந்திர போஸ். சுபாஷ் சந்திர போஸ் மரணமடைந்துவிட்டாரா அல்லது இன்னமும் வாழ்கிறாரா என்பதை புனைகதைகளை விஞ்சும் புதிய புதிய கதைகள் மூலம் திரும்ப திரும்ப ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.  இதில் அவரவர் கட்சி சார்ந்து அரசியல் செய்வதற்கு சுபாஷ் சந்திர போஸ் உதவிக் கொண்டிருக்கிறார் என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் சந்திர போஸின் குடும்பத்தினரைச் சந்தித்த பிரதமர் மோடி, சந்திர போஸ் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார். அவருடைய அறிவிப்பு வெளியான அடுத்த மாதமே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,  மாநில அரசிடன் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் பொது மக்கள் பார்வைக்கு விட்டார்.  மேற்கு வங்க தேர்தலை ஒட்டி மாநிலத்தில் கணிசமாக உள்ள ‘போஸ்’ வகுப்பினரின் ஓட்டுக்களை கவரும் உத்தியுடனே பிரதமரும் மாநில முதலமைச்சரும் கணக்குப் போட்டார்கள். இதில் திதி முந்திக்கொண்டார்.

மம்தா வெளியிட்ட ஆவணங்கள், சுபாஷ் சந்திர போஸின் மரண சர்ச்சையைத் தீர்த்து வைத்ததா? அதுதான் இல்லை. இங்கு சர்ச்சையே இல்லை. தெளிவான ஆவணங்கள், சுபாஷ் சந்திர போஸ் ஜப்பான் செல்லும் வழியில் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி தைபெய்யில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்தார் என்று தெரிவித்தன.  ஆனாலும் ‘புனைகதை மன்னர்கள்’ சுபாஷின் மரண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இல்லை.
பிரதமர் வெளியிடவிருக்கும் ஆவணங்களுக்காக காத்திருந்தார்கள். நடுவில் இங்கிலாந்து இணையதளம் ஒன்று, சுபாஷ் சந்திர போஸின் மரணம் விமான விபத்தில் நேர்ந்தது என ஆதாரங்களுடன் சொன்னது. போஸின் மரண சர்ச்சை ஒருவகையில் முடிவுக்கு வந்ததற்கான அமைதி நிலவியது.

இந்தச் சூழ்நிலையில் கடந்த 23-ஆம் தேதி போஸின் பிறந்த தினத்தில் தேசிய ஆவணக் காப்பகத்தின் மூலம் போஸ் குறித்த இந்தக் கோப்புகள் டிஜிட்டல் முறையில் வெளியிட்டார் பிரதமர் மோடி. இத்தனை ஆண்டு காலமும் இந்தக் கோப்புகளை ரகசியமாக காங்கிரஸ் அரசு பேணி வந்ததற்கு காரணம் இருந்தது. பிரபல வரலாற்று அறிஞர்களும்கூட இந்த ரகசிய ஆவணங்களைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. காரணம், போஸ் குறித்து முதல் பிரதமர் நேருவின் கருத்துக்களும் கடிதப் பரிமாற்றங்களும்கூட அதில் இருந்தன என்பதே.

நேருவும் போஸும் இரு வேறு துருவங்களாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் களம் கண்டவர்கள். இங்கிலாந்துடன் போர் புரிவது ஒன்றே இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் என்று ஆயுதம் ஏந்தி, ஜெர்மன் கொடுங்கோலர் ஹிட்லரின் உதவியை நாடினார் போஸ். நேருவின் பாதை, காந்தி முன்னிறுத்தி இருந்தது.  எனவே, இவர்களுக்கிடையே விமர்சனங்கள் கடுமையானதாக இருந்திருக்கலாம். இந்த ஆவணங்கள் வெளியே வந்தால் அவை சர்ச்சைகளைக் கிளப்பும் என காங்கிரஸ் அரசு நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இதை அரசியலாக்க முயற்சித்தது. அதன் வெளிப்பாடே போஸ் ஆவணங்களை வெளியிடும் முடிவு. இந்திய அரசுக்கு நன்றாகத் தெரியும், போஸ் மரணம் விபத்தினால் ஏற்பட்டதுதான் என்பது. ஆனால் அவரது மரண சர்ச்சையை முன்வைத்து, நேரு-போஸ் கடிதங்களை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதே பாஜக அரசுக்கு இருந்த உள் அரசியல். அதன்படி ஆவணங்களும் வெளியிட்டாகிவிட்டது.

ஆனால், ஆதாயம் கிடைத்ததா என்றால் அதுதான் இல்லை. நேரு எழுதியதாக வெளியிட்ட ஒரு கடிதம், போஸ் ஒரு போர்க் குற்றவாளி என நேரு சொல்வதாக எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கடிதம் இங்கிலாந்து பிரதமர் அட்லிக்கு எழுதப்பட்டதாகவும் அதை இந்திய பிரதமராக இருந்த நேரு எழுதியதாகவும் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளுடன் வெளியாகியிருக்கிறது. இந்தக் கடிதம் எழுதப்பட்ட காலம் 1945 என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகே, நேரு பிரதமரானார். ஆனால், அந்தக் கடிதம் 1945-ஆம் ஆண்டு நேரு பிரதமர் என்பதாக உள்ளது.
இத்தனை ஓட்டைகளுடன் இந்த ஆவணம் ஆவணக் காப்பகத்தில் இத்தனை ஆண்டுகள் இருந்ததா என்றும், ஆங்கிலப் புலமை பெற்ற, நேரு இத்தனை தவறுகளுடன் கடிதம் எழுதினாரா என்பதும் வரலாற்று அறிஞர்களிடம் நகைப்பை உண்டாக்கியிருக்கிறது.  போட்டோஷாப்புக்கு புகழ்பெற்ற மோடி அரசின் புகழ் போஸின் ஜோடிக்கப்பட்ட ஆவணங்களில் முழுமையடைந்திருப்பதாக சமூக ஊடகங்கள் பகடி செய்கின்றன.
இந்நிலையில்  இனி ஒவ்வொரு மாதமும் 25 ரகசியக் கோப்புகளை வெளியிடுவதற்கு தேசிய ஆவணக் காப்பகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கிறது. அதாவது மேற்கு வங்க தேர்தல் முடியும் வரை இந்த ரகசியக் கோப்புகள் வெளிவரும் என நம்பலாம். ஆனால், ரகசிய கோப்புகளை மட்டும் நம்பக்கூடாது!
கொசுறு:  பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவினர் சந்திரா போஸ் பாஜகவில் இணைந்தார். பாஜகவின் போஸ் பற்றுக்கும் இந்த இணைவிற்கும் ஏதும் தொடர்பில்லை என நம்புவோமாக!

’மோடியை நீக்குவோம்’ மணி சங்கர் அய்யரின் பாக். தொலைக்காட்சி பேட்டியால் சர்ச்சை

The Union Minister for Panchayati Raj and Development of North Eastern Region, Shri Mani Shankar Aiyar addressing the Valedictory Session of the 2-day Seminar on the findings of the Nationwide Survey on Elected Women Representatives in Village Panchayats, in New Delhi on March 3, 2009.

பாகிஸ்தானின் துனியா டிவி என்கிற தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான மணி சங்கர் அய்யர், “இந்தியாவின் பிரதமராக உள்ள மோடியை அகற்றினால்தான் பாகிஸ்தானுடன் இந்தியா அமைதிப் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்பதற்கான சூழ்நிலை அமையும்” என்று தெரிவித்தார்.

அதற்கு, நிகழ்ச்சி தொகுப்பாளர், “நீங்கள் நினைத்தால் மோடியை நீக்கலாமே” என்று கேட்டார். பதிலளித்த மணி சங்கர் அய்யர், “ஆமாம், நாங்கள் அவரை நீக்குவோம். அதற்கான காலம் வரும்வரை பொறுத்திருக்க வேண்டும்” என்றார்.

mani tweet

இதற்கு பாஜக கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. ‘இந்தியாவுக்கு எதிரான’ கருத்தாக உள்ளதாகவும் மணி சங்கர் அய்யர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால், ‘மணி சங்கரின் பேச்சில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் எதுவும் இல்லை. மணி சங்கர் சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதுகுறித்து விளக்கியிருக்கிறார்’ என்று பாஜகவின் கண்டனத்துக்கு விளக்கம் அளித்திருக்கிறார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுரஜ்வாலா.

முன்னதாக, பாரீஸ் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்திருந்த மணி சங்கர் அய்யர், “இஸ்லாமுக்கு எதிரான ஃபோயியா(பயம்)வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஃபிரான்ஸில் வாழும் முஸ்லீம்கள் அனைத்து உரிமைகளுடனும் பாதுகாப்புடன் வாழ ஃபிரான்ஸ் அரசு உறுதியளிக்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பிரச்சாரம் செய்வதாக இருப்பதாக மணி சங்கருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.

 

ஆட்சியில் பங்கேட்கும் கட்சிகளின் கனவு பலிக்குமா?

allai

பெரிய கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கெல்லாம் தமிழகத்தில் வாய்ப்பேயில்லை என்று பேசிவந்த காலம் போய், சிறிய கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கொண்டால்தான் கூட்டணிக்கே வருவோம் என பெரிய கட்சிகளை மிரட்டிக் கொண்டிருக்கின்றன. அதிமுகவுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாத காரணத்தினால் திமுகவால் நடைபெறவிருக்கும் தேர்தலில் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற அடுத்த நிலையில் உள்ள கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் தவிர, மற்ற கட்சிகள் அனைத்தும் திமுகவுடன் கூட்டணிக்கு வரத் தயார் இல்லை என்கின்றன.

தமிழகக் கட்சிகள் – கூட்டணி

காங்கிரஸ்-திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது. ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ்-அதிமுகவுடன் கைக்கோர்க்க முயற்சிக்கிறது. வைகோவின் மதிமுக, திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் – தேமுதிகவை இழுக்கப்பார்க்கிறார்கள். பாஜக-தேமுதிக-பாமக கூட்டணிக்கு முயற்சிக்கிறது. புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் அதிமுகவுடன் சேர விரும்புகின்றன.

கட்டுப்பாடு போடும் காங்கிரஸ்

அண்மையில் 234 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவன். தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகள் நக்மா, குஷ்பூ போன்றவர்கள் காங்கிரஸுக்குப் புத்துயிர் தருவாவர்கள் என நம்புகிறார் அவர். எனவே, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “கூட்டணி ஆட்சிக்கு யார் ஒத்துக்கொள்கிறார்களோ அவர்களுடன் மட்டும்தான் கூட்டணி அமைப்போம். இதில் நாங்கள் உறுதியாக இருப்போம். இனி தேர்தலுக்கு மட்டும் கூட்டணி பிறகு நட்பான அணுகுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

பாஜகவின் கனவு

மக்களவைத் தேர்தலை இணைந்தே சந்தித்ததைப் போல பாஜக தங்களுடன் பாமக,தேமுதிக கட்சிகளை இணைத்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க விரும்புகிறது. இதன் மூலம் கணிசமான இடங்களைப் பிடித்து ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைந்ததுபோல தமிழகத்திலும் அமைக்க வேண்டும் என்பது பாஜக தலைவர் அமித் ஷாவின் திட்டம். ஆனால் இந்தக் கூட்டணியில் பாமக-தேமுதிக எப்படி இணைந்திருப்பார்கள் என்பது அவர்கள் முன் உள்ள சவால். கடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு ஆதரவாக வட மாவட்டங்களில் பாமகவினர் சரியாக தேர்தல் பணியாற்றவில்லை; தங்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டியது தேமுதிக. ஆனால் பாமகவோ தாங்கள் மனசாட்சிப்படி பணியாற்றியதாக விளக்கம் சொல்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தங்களுடன் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்று சொல்லியிருந்தார். இதை கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரேமலதா, காரணம் அன்புமணியை முதல்வராக எப்படி ஏற்கமுடியும் என்பதே. விஜயகாந்த், அன்புமணி என முதல்வர் பதவியை தீவிரமாக விரும்புகிறவர்கள் ஒரே கூட்டணியில். அதை எப்படி எதிர்கொள்வது என்பதே பாஜக முன் இருக்கும் சவால்.

மக்கள் நலக் கூட்டியக்கம் விரும்பும் விஜயகாந்த்

அதிமுக, திமுகவுக்கு அடுத்து தீர்மானிக்கு சக்தியாக மாறியுள்ள தேமுதிகவை நான்கு கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு தலைமை ஏற்ற வைக்க வேண்டும் என்பது வைகோவின் விருப்பம். ஆனால் விஜயகாந்த் பிடிகொடுப்பதாகத் தெரியவில்லை. கணவனும் மனைவியும் அதிமுக, திமுகவென பிரித்துக்கொண்டு கடுமையாக மேடைகளில் விமர்சித்துவருகிறார்கள். இந்த இரண்டுக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லியே வருகிறார்கள். ஆனாலும் தங்களுடைய நிலைப்பாடு பற்றி தமிழக அரசியல் கட்சிகளிடையே குழப்பமான நிலையையே இவர்கள் உருவாக்கிவருகிறார்கள். இந்தக் குழம்பியக் குட்டையில் யார் தேமுதிக என்னும் வளமான மீனைப் பிடிக்கப் போகிறார்?