தமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்?

metoo இயக்கத்தை பலரும் வெவ்வேறு விதமாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் எழுதும் பலரின் புரிதல் அதிகாரம் உள்ள ஆண், ஒரு பெண்ணை உடல்ரீதியாக துன்புறுத்துவது என்பதாக உள்ளது. இன்னும் சிலர் இதை ஆண்கள் பெண்களை வளைத்த கதையாக எழுதுகிறார்கள். பெயரை குறிப்பிடுதல் – அவமானப்படுத்துதல் என்பதைத் தாண்டியும் metoo இயக்கம், பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கான சம உரிமையை நிலை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். 2004-மே மாதம் முதல் ஊடகங்களில் பணியாற்றி வருகிறேன். உண்மையில் உடல்ரீதியிலான பாலியல் அத்துமீறல்களை எதையும் நானோ, என் உடன் பணியாற்றிய பெண்களோ எதிர்கொள்ளவில்லை. ஆனால், அதைவிட கொடுமையான மனரீதியான ஒடுக்குமுறைகளை நானும் உடன் பணியாற்றிய பெண்களும் எதிர்கொண்டிருக்கிறோம். இந்த ஒடுக்குமுறை சூழல் மாற வேண்டும் என்கிற சிந்தனையில்தான் தொடர்ந்து இதுகுறித்து எழுதிவருகிறேன். metoo இயக்கம் உருவாகும் முன்பே ஒடுக்குமுறைகளை சந்திக்கும்போதெல்லாம் துணிச்சலாக எழுதி வருகிறேன். அதற்கான விளைவுகளையும் சந்தித்து வருகிறேன். என்வழியாக ஊடகங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசி, தீர்வு காண முற்படுகிறேன்.

என்னுடைய அம்மா சத்துணவு மேற்பார்வையாளராக இருந்தவர்; அப்பா பேருந்து நடத்துனராக இருந்து, உடல்நிலை காரணமாக அந்த பணியை விட்டவர். என் அம்மாதான் குடும்பத்தின் ஆதாரம். விவசாய குடும்பப் பின்னணியில் பெண்ணை படிக்க வைப்பதில் எங்கள் உறவினர்கள் எவருக்கும் பிடிக்கவில்லை. என் அம்மா, என்னை கல்லூரிக்கு அனுப்புவதில் உறுதியாக இருந்தார். அம்மாவுக்கு என்னை ஆசிரியர் அல்லது ஏதேனும் அரசு வேலைக்கு அனுப்புவதில் விருப்பம் இருந்தது. எனக்கு சினிமா இயக்குநராக வேண்டும் என்கிற விருப்பம். ஒரு பெண் சினிமா துறையில் பணியாற்றப்போகிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. எனவே, விஸ்காம் படித்துவிட்டு விளம்பரம் அல்லது கிராபிக்ஸ் துறையில் பணியாற்றலாம் என அம்மாவை சமாதானம் செய்துவிட்டு சென்னை வந்தேன்.

முதல் இரண்டு ஆண்டுகள் ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். மூன்றாம் ஆண்டு வீட்டில் பொருளாதார நெருக்கடி. நீண்ட தூரம் பயணிக்க முடியவில்லை என்கிற காரணத்தால் சென்னையின் மையப்பகுதியில் இருந்து சோழிங்கநல்லூர் கல்லூரி ஹாஸ்டலில் தங்கியிருந்தார் சீனியர் அக்கா ஒருவர். அவர் மீண்டும் வீட்டிலிருந்தே கல்லூரிக்கு வரப்போவதாக சொன்னார், என்னையும் அவருடன் தங்கிக்கொள்ள அழைத்தார். என்னுடைய பொருளாதார சூழலை அறிந்த அவர், மூன்றாம் ஆண்டு படித்து முடிக்கும்வரை அவருடைய அறையில் என்னை அனுமதித்தார். அவருடைய வீட்டாரும் என்னை பெருந்தன்மையோடு அனுமதித்தனர்.

மூன்றாம் ஆண்டு இறுதி தேர்வு எழுதியதும் வேலைத் தேட ஆரம்பித்தேன். சினிமா உதவி இயக்குநராகும் முயற்சியும் செய்தேன். சினிமா துறையில் பெண்களுக்கு இருந்த பிரச்சினைகள் என்னை பயமுறுத்தின. எப்படி, யாரை அணுகுவது என்கிற தெளிவில்லாத பாதையாக அது எனக்குப் பட்டது. எனக்கு எழுத வரும், பத்திரிகை பணி செய்யலாம் என முடிவெடுத்தேன். நான்கைந்து பத்திரிகை அலுவலகங்களில் பயிற்சியாளர் வாய்ப்பு கேட்டு அலைந்தேன். பணிமுடித்தபின், அம்மாவிடமிருந்து நிச்சயம் எந்தவித பொருளாதார உதவியும் கேட்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அடுத்த மாத செலவுக்கு என்ன செய்ய என்கிற சூழலில், அண்ணாநகரில் ஒரு ஸ்டுடியோவில் வேலை கிடைத்தது. போட்டோஷாப் வேலை என்றுதான் விளம்பரத்தில் அழைத்திருந்தார்கள். ஆனால், நாள் முழுக்க ரிசப்ஷனில் நின்று வருகிறவர்களிடம் கேமராக்களை விற்பது, விளக்கம் சொல்வது என்றபடியாக அந்த வேலை போனது. அயற்சியான பணி. காலையில் சாப்பிட மாட்டேன். மதியம், இரவு மட்டும்தான் உணவு. எப்படி நாள் முழுக்க நின்றுகொண்டு வேலை பார்க்க முடியும்? எப்போது தப்புவோம் என இருந்தது. நல்லவேளையாக தினமணி நாளிதழில் இண்டன்ஷிப் கிடைத்தது. அப்போது அங்கு என்னைப் போல இண்டன்ஷிப் வந்திருந்த எழுத்தாளர் ஜா. தீபா, நான் தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருந்ததை அறிந்து குமுதம் சிநேகிதியில் பணி வாய்ப்பு இருப்பதை சொன்னார்.

குமுதல் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி, என்னுடைய எழுத்தைப் பார்த்து எனக்கு வாய்ப்புக்கொடுத்தார். அடுத்த மாதமே நான் பணிக்குச் சேர்ந்தேன். என்னைப் போல எளிய பின்னணியில் வந்தவர் அவர், என் ஆர்வத்தை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. என்னை ஊக்கப்படுத்தினார், வளர்த்தெடுத்தார். இரண்டு ஆண்டுகளில் உதவி ஆசிரியர் ஆனேன். பெண்கள் பத்திரிகை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக ஒரு குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் பேசுகிறது. எனக்கு அதையும் கடந்து எழுதும் விருப்பமும் தேடலும் இருந்தது. அரசியல்-சமூகம் குறித்து எழுதுவதில் எப்போதும் தீவிரமான ஆர்வம் இருந்தது. ஆனால், வேறு வேலை தேடாமல் இந்தப் பணியை விட்டுவிட்டேன். பணி கிடைக்க ஐந்து மாதங்கள் ஆனாது.

‘குங்குமம்’ இதழில் நிருபராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பு என்னை பலவிதங்களிலும் மேம்படுத்தியது. சூழலியல், இலக்கியம், சமூகம் சார்ந்து எழுதினேன். வடதமிழகத்தின் பல பகுதிகளுக்கு பயணித்து கட்டுரைகள் எழுதினேன். அப்போது தினகரன் இணைப்பிதழின் ஆசிரியராக இருந்த கே. என். சிவராமன், என்னை ஊக்கப்படுத்தினார். என்னுடைய கட்டுரைகள் பார்த்துதான் ஆனந்த விகடன் இதழிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. முதலில் ஆனந்த விகடன் உதவி ஆசிரியர் பேசிவிட்டு, பிறகு ஆசிரியரிடம் பேசச் சொன்னார். ஆசிரியர், ‘நம்மைப் போல பிந்தங்கிய சூழலில் இருந்து வருகிறவர்கள் வெற்றி பெறுவது முக்கியம்’ என்கிற அர்த்தத்தில் பேசினார். அந்தப் பேச்சு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. அதோடு, ஆனந்த விகடன் இதழில் (உள்குத்துகளை தெரியாதவரை) பணியாற்ற யாருக்குத்தான் விருப்பம் இருக்காது?

தொடக்கத்தில் எல்லாமே மிகச் சிறப்பாகத்தான் இருந்தது. அரசியல் பேட்டிகள் எடுக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள். இதற்காகத்தானே இத்தனை நாளும் காத்திருந்தோம் என விரும்பிச் செய்தேன். ஆனால் ஆனந்த விகடன் குழு ஒரு Boys’ club போலத்தான் செயல்பட்டது. எங்கள் குழுவில் மற்றொரு பெண் நிருபர் இருந்தார். அவர் பெரும்பாலும் வெளி அசைன்மெண்டுக்குச் சென்றுவிடுவார். மற்றவர்கள் இயல்பாக பேசமாட்டார்கள், அதிகார தொனியிலேயே நடந்துகொள்வார்கள். அவர்கள் அப்படி இருக்கவே ஆசிரியரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். ஆசிரியரின் அதிகாரத் தொனியை அலுவலகம் அறிந்தது. அரசனைப் போல அல்லது அதிகாரம் மிக்க குடும்பத்தலைவனைப் போல. தலைமையில் இருப்பவர் அதிகார தொனியில் இயங்கினால் எப்படி அங்கே இயல்பாக பணிபுரிய முடியும்? அருகில் இருந்தாலும்கூட நேரடியாக ஆசிரியர் பேசமாட்டார், உதவி ஆசிரியரை விட்டுத்தான் கேட்க வைப்பார். இதைத்தான் ஆண்-அதிகார திமிர் என்கிறார்கள்.

இந்த Boys’ club சொற்றொடருக்கு ஓர் உதாரண சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். நான் தமிழ் வழியில் படித்தவள். அப்போது ஆங்கிலத்தை ஓரளவில் புரிந்துகொள்ள முடியும். பேச வராது. ஆனாலும் பிரபல எழுத்தாளர்கள் அமிதவ் கோஷ், ஷோபா டே நேர்காணல்களை எடுத்தேன். இதுகுறித்து ஆசிரியர் குழுவில் இருந்தவர்களுக்கு பலத்த சந்தேகம். குறிப்பாக, மூத்த சினிமா நிருபருக்கு ஆங்கிலம் தெரியாத நான் எப்படி பேட்டியெடுத்திருக்க முடியும் என சந்தேகம். பல முறை கூடிப்பேசி சிரித்த பின், நேரடியாக என்னிடமே கேட்டார். அலுவலகத்தில் இருந்த நண்பரின் உதவியுடன் ஆங்கில கேள்விகளை தயாரித்து கேட்டேன், என்னுடைய பேட்டியை பதிவு செய்திருக்கிறேன், கேட்கிறீர்களா என்றவுடன் அமைதியானார். அந்த அலுவலகத்தில் தமிழ் வழியில் படித்து வந்தவர்கள் ஏராளமாக இருந்தார்கள். ஆனால், ஒரு பெண் தமிழ் வழியில் படித்து கொஞ்சம் அறிவுப்பூர்வமாக செயல்பட்டால் ஆண்கள் மனம் தாங்குவதில்லை.

ஆனந்த விகடன் இதழில் நான் மற்றொரு எதிர்கொண்ட பிரச்சினை. வேலை நேரம். ஆசிரியர் குழு நண்பகல் 12 மணிக்கு மேல்தான் பணியாற்றத் தொடங்கும். இரவு எட்டு மணிக்கு மேல் தான் இறுதிகட்டப் பணிகள் தொடங்கும். குமுதம் சிநேகிதி இதழில் இரவு 11 மணி மரைக்கும்கூட பணியாற்றிவிட்டு திரும்பியிருக்கிறேன். அது உதவி ஆசிரியரின் பணி தன்மை அப்படி. ஆனால், இங்கே நான் நிருபர். இதழ் முடிக்கும் நேரங்களில் காலையில் 9.30 மணிக்கு வந்து, இரவு 9, 10 மணி வரைக்கும் கட்டாயம் இருந்ததாக வேண்டிய நிர்பந்தம் இல்லை. ஆனால், நிர்பந்தித்தார்கள். ஆனந்த விகடன் இதழின் வடிவமைப்பு மாற்றப்பட்டபோது, இரவு முழுக்க அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழல். விடியகாலை 3 மணிக்கு எங்களுடைய கட்டுரை திருத்தம் செய்யப்பட்டு அச்சுக்கு போகும் அதுவரை அங்கேயே இருக்க வேண்டும். இடையில் நமக்கு வேறு எந்த வேலையும் இருக்காது. சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும். Boys’ club-க்கு மிகச் சிறந்த உதாரணம்.

இத்தகைய பணிச்சூழலுக்கிடையே தொடர்ந்தபோதும், என்னுடைய கட்டுரைகள் கவர் ஸ்டோரியாக வந்தபோதும் என்னுடைய ப்ரோபேஷன் காலம் நீட்டிக்கப்பட்டது. எனக்கு பணி நிரந்தரம் தரப்படவில்லை. சில வாரங்களில் என்னுடைய கட்டுரைகள் அச்சேறுவது குறைக்கப்பட்டது. இரவு 10 மணி வரை அலுவலகத்தில் இருந்து பணியாற்றியபோது, அடுத்த நாள் காலை அலுவலக நேரத்துக்கு சரியாக வந்துவிட வேண்டும் என்கிற கண்டிப்பு எனக்கு மட்டும் இருந்தது. ஒருவிதமான ஒதுக்கல் சூழல் ஆசிரியர் குழு மூலம் செய்யப்பட்டது. என்னுடைய ஒதுக்கலை தாங்க முடியாமல் வெடித்து அழும்போது, ஆறுதல் பார்வையைக்கூட அந்த ஆசிரியர் குழு பார்க்கவில்லை. அவர்கள் எப்போது தங்களை ஆண்களாகவே நினைத்தார்கள். அடுத்த சில நாட்களில் ஆசிரியர் என்னை பணியிலிருந்து நீக்கத் திட்டமிட்டிருப்பதும், அதற்கு நான் தனி தீவாக இருக்கிறேன் என்கிற காரணத்தை நிர்வாகத்திடம் சொன்னதும் தெரியவந்தது. அங்கேயே இருந்து போராடுவதெல்லாம் முடியாத காரியம். ஆண்-அதிகாரத்தை இயல்பாக கருதுகிற ஒரு பணிச்சூழலில் நிச்சயம் என்னால் பணியாற்ற முடியாது என்கிற தீர்மானத்துடன் நானே ராஜினாமா கடித்தத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

“நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள், நம்மைப் போன்ற முதல் தலைமுறையாக படித்து பணிபுரிய வருகிறவர்கள் வெற்றி பெற வேண்டும்” என சொன்ன அதே ஆசிரியர், என்னை ஒரே நாளில் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்தார். தனி தீவாக இயங்குவது என்பது என்ன பொருளில் சொல்லப்பட்டது எனத் தெரியவில்லை. பத்திரிகை துறைக்கு வந்திருக்கும் நான் எப்படி தனி தீவாக இயங்க முடியும்? வெளியூர்களுக்கு பயணித்து கட்டுரைகள் எழுதும் பெண், ரிசர்வ் டைப்-ஆக இருக்க முடியுமா? ஏற்கனவே இரண்டு இடங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ள பெண், தனி தீவாக எப்படி இயங்க முடியும்? யாருக்கு அட்டியூட் பிரச்சினை? எனக்கா ஆசிரியருக்கா? அல்லது ஆசிரியர் என்னிடம் எதிர்ப்பார்த்தது என்ன? சமீபத்தில் அந்த ஆசிரியர் பணியிலிருந்து விடுபட்டார். அவருக்கு பல பத்திரிகையாளர் சமூக ஊடகங்களில் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு நன்றி சொன்னார்கள். பல சினிமா பிரபலங்களை, எழுத்தாளர்களை, ஊடகவியலாளர்களை ‘தூக்கி’விட்ட அந்த ஆசிரியருக்கு ஏன் ஒரே ஒரு பெண்ணிடமிருந்துகூட இப்படியொரு நெகிழ்ச்சியான பதிவு வரவில்லை? இப்போது ஓய்வில் இருக்கும் ஆசிரியர் இதற்கான பதிலை அசை போடட்டும்.

இரண்டு மாத இடைவெளியில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் சிறப்பு நிருபர் பணிக்குச் சேர்ந்தேன். சிறப்பு நிருபர் என்றால், சிறப்பு செய்தி தொகுப்புகளை செய்வார்கள். ஆனால், பணியாற்றிய ஒரு வருடத்தில் ஒரு முறைகூட அந்த வேலை செய்யவில்லை. என்னுடைய பத்திரிகை அனுபவத்தில் மிக மிக கசப்பான அனுபவம் இங்கேதான் ஏற்பட்டது. சிறப்பு நிருபராக பணியில் சேர்க்கப்பட்ட நான், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பணியே தரப்படாமல் உட்கார வைக்கப்பட்டேன். சும்மா உட்கார்ந்திருக்கிறோமே என்கிற ஆதங்கத்தில் நானாக ஏதேனும் செய்தி எழுதி கொண்டுபோனால் அந்த ஆசிரியர் அந்த தாளை வாங்கி ஓரமாக வைத்துவிடுவார். பிற சிறப்பு நிருபர்களுக்கு சிறப்பு செய்திகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுப்பேன். அதை ஆசிரியரும் பார்ப்பார். அது தொலைக்காட்சியிலும் வரும். ஆனால், எனக்கு அப்படியொரு வாய்ப்பு தரப்படாது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஸ்க்ராலிங் எழுத பணிக்கப்பட்டேன். அதுவும்கூட ஃபிளாஷ் நியூஸ் எழுத விடமாட்டார். அவர் எதையோ எதிர்பார்த்தார் என்று மட்டும் புரிந்தது. அவருடைய சமிக்ஞைகளை என்னால் புரிந்தகொள்ள முடியாதபடியால் என்னை எழுதவே வராத, தண்டச் சம்பளம் வாங்கும் பெண் என்பதைப்போலவே ஆசிரியர் அறையில் அவமானப்படுத்துவார். நான் எழுதிய கவர் ஸ்டோரி ஒன்று பெயர் போடாமல், ஆனந்தவிகடனில் பணியிலிருந்து விலகியபின் வெளியாகியிருந்தது. சிறுபிள்ளைத்தனமாக ஆசிரியரிடம் ‘சார், இந்த கட்டுரையை எழுதியது நான்” என காட்டினேன். திரும்பவும் என்னை எதற்கும் லாயக்கில்லாதவள் போலவே பார்த்தார். என்னுடைய கனவுகள் தேய்ந்து, எதற்கும் லாயக்கில்லாதவள் என்கிற எண்ணம் எனக்குள்ளே ஓட ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகால பத்திரிகை சூழலில் எனக்குக் கிடைத்த வாய்ப்பில் சிறப்பாகவே எழுதியிருக்கிறேன். ஆனால், இங்கே இப்படி இருக்கிறோமே என்கிற எண்ணம் என்னை அலைகழித்தது.

என்னைப்போல, அவருடைய விருப்பத்துக்கு இணங்காத பெண்களை அவர் இப்படித்தால் அலைகழிக்க வைத்தார். பணியிடங்களில் நான் பார்த்த செக்ஸிஸ்ட் ஆண்கள் மிக மோசமானவர் அவர். அங்கிருந்து விலகிய சில ஆண்டுகளில் அவர் மீது ஒரு பெண் செய்தி வாசிப்பாளர் பாலியல் புகார் கொடுத்தார். கைதாகி சிறை சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து பணிக்கு அழைத்துக்கொண்டது சன் நிர்வாகம். metoo குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்களை பணிநீக்கம் செய்வதும் அவர்களுடம் பணிபுரிய மாட்டோம் என அறிவிப்பதும் உலகம் முழுக்க முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்ச்சூழலில் அதெல்லாம் நிகழ வாய்ப்பில்லை.

பெண்கள் படிக்கிறார்கள்; பணிபுரியும் கனவும் லட்சியமும் அவர்களிடம் இருக்கிறது. சிறு நகரங்களிலிருந்து கிராமங்களிலிருந்து பெருநகரை நோக்கி வருகிறார்கள். பெரும்பாலும் முதல் தலைமுறையாக முன்னேறி வருகிறது, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள்…இவர்களை ஆணாதிக்க பணிச்சூழல் பெரும்பாலும் விழுங்கிவிடுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகை பணிச்சூழலில் ஆணாதிக்க சூழலை தகர்த்திருந்தாலும் தமிழ் ஊடகங்களின் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. பின்புலத்துடன் இருக்கிறவர்கள் மட்டுமே ஊடகங்களில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்கிற சூழல் இருக்கிறது. பெண்களைப் பொறுத்தவரை திறமை என்பது இரண்டாம் பட்சமானது. பணியைப் பொறுத்தவரை 25 வயது வரைக்குமுள்ள பெண்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். தமிழ் ஊடகங்களில் பெண்கள் என சர்வே எடுத்தால் ஊடகங்களில் செக்ஸிஸ்ட் தன்மை வெட்ட வெளிச்சமாகத் தெரியும். வேளாண் பத்திரிகையில் பெண்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்காது. புலனாய்வு இதழ்களில் பணி வாய்ப்பு கிடைக்காது. ‘ஆண்பால்-பெண்பால்’ என தலைப்பிட்டு பெண் உரிமை பேசிய விகடன் குழுமத்தில்தான் இந்த நிலை. இன்னும் சொல்லப்போனால் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ‘அவள் விகடன்’ இதழின் ஆசிரியர் ‘ஸ்ரீ’ என்ற முகமூடியுடன் இயங்கும் ஒரு ஆண். இது எத்தனை பெரிய அயோக்கியத்தனம். விகடன் விருதுக்காக வாயைப் பிளக்கு எத்தனை பெண்ணுரிமை போராளிகள் இதைப் பற்றி கேள்வி எழுப்புவார்கள்?

ஆனந்த விகடன், சன் நியூஸ் தொலைக்காட்சியில் எனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையிலிருந்து மீண்டு வர எனக்கு காலம் பிடித்தது. குங்குமம் இதழில் எழுதிய கட்டுரைகள் குறித்து இப்போதும் நினைவு கூரும் நண்பர்கள் இருக்கிறார்கள். முகம் தெரியாதபோதும்கூட நீங்கள் எழுதுங்கள் என வாய்ப்பு தருகிறவர்கள் இருக்கிறார்கள். அவநம்பிக்கைகளின் ஊடாக நம்பிக்கையை வெளிப்படுத்தியபடி எப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இது எத்தனை பெண்களுக்கு சாத்தியமாகக்கூடும். பணியிட ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய கனவுகள் நசுக்கப்படுவதை எப்படி தடுத்து நிறுத்துவது? பெண் என்பதாலேயே எங்களுக்கு எந்தவித லட்சியங்களும் இருக்கக்கூடாதா? இத்தகைய சூழலில் metoo இயக்கம் பாலின சமத்துவம் கோரலில் ஒரு புதிய உரையாடலை தொடங்கியிருக்கிறது. அதனால்தான் அதை நான் நிபந்தனை இல்லாமல் ஆதரிக்கிறேன்.

கருப்பு இணையதளத்தில் வெளியான எனது கட்டுரை.

குங்குமம் பேட்டி

Kunkumam interview about our web portal www.thetimestamil.com.

இந்த பேட்டி, கடந்த ஜனவரி மாதம் வந்தது. அப்போது எங்கள் வீட்டில் இழவு விழுந்த நேரம் பகிரும் மனநிலை இல்லை. கவிதா இல்லாமல் இணைய தளம் தொடங்கும் யோசனை விரைவடைந்திருக்காது. கவிதாவின் ஊக்கமும் பங்களிப்பும் என்னை உற்சாகமாக இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. குங்குமம் ஆசிரியர் கே.என். சிவராமன், குமுதம் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகிக்குப் பிறகு என்னை ஊக்குவித்து, வாய்ப்பளித்த நல் உள்ளம் கொண்டவர். எங்களுடைய இந்த முயற்சிக்கு நான் பணியாற்றி, எனக்கு பெயர் பெற்றுக்கொடுத்த அதே பத்திரிகையில் பேட்டி வெளியிட்டு இப்போதும் ஊக்கமளித்திருக்கிறார். இவர்களைப் போல என்னைச் சுற்றியிருக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை சொல்கிறேன். காலம் தாழ்ந்தாலும் நன்றிக்கடனை சொல்லிவிடவேண்டும்.

முதல் வாசக கடிதம்!

மின்னஞ்சலில் இப்படியொரு கடிதத்தைப் பார்த்தேன். என் புத்தகத்துக்கு வந்த முதல் வாசகக் கடிதம்…
//இன்று நூலகத்திற்குச் சென்றிருந்த நான்,  எனக்கான ஒரு நூலைத் தேர்ந்தெடுக்க என்னற்ற புத்தகங்களைக் கையில் தாங்கியபடி நின்றிருந்தேன். அவ்வேளையில் சட்டென உங்களின் ”நான்” என்ற புத்தகம் என் கண்ணில் பட்டது. உங்களின் வகையே மற்ற எல்லா நூலின் வகைகளிலும் மாறுபட்டு இருந்ததே காரணம். பிறகு வீட்டில் நுழைந்த உடனே வாசிக்கத் தொடங்கி சில மணி நேரங்களிலேயே வாசித்து முடித்து விட்டேன்.
பதிப்புரையில் குறிப்பிடப் பட்டிருந்ததைப் போன்று படைப்பாளியின் மொழியிலேயே அவர்களைப் புரிந்து கொள்ள பெரு வாய்ப்பாக இந்நூல் எனக்கு அமைந்திருந்தது. நாம் இன்று பார்க்கும் பரவலான பரிச்சமிக்க எழுத்தாளர்கள் கூட தங்களின் தொடக்க காலத்தில் மிக எளிமையாகவே பங்களின் படைப்பு உலகில் அடியெடுத்து வைத்திருக்கின்றனர் என்பது என்னைப் போன்ற எழுத்தார்வம் மிக்கனுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. குறிப்பாக பிரளயன் அவர்கள் வெற்றி குறித்த கருத்து என் மனதில் உள்ள கருத்தை அப்படியே பிரதியெடுத்தது போன்று இருந்தது.
ஆக உங்களின் இம்முயற்சி நல்ல பலனைத் தொடர்ந்து சமூகத்தில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன்
க.சம்பத் குமார்.//
நான் தொடராக வந்தபோது நிறைய பேர் வாழ்த்து சொன்னார்கள், நன்றாக இருக்கிறது என்றார்கள். இந்தத் தொடரை புத்தகமாகக் கொண்டு வரலாம் என திரு. காவ்யா சண்முகசுந்தரம் கேட்டார். மிகுந்த தயக்கத்துடனே ஒத்துக்கொண்டேன். அட்டை வடிவமைப்பு,உள்ளடக்க வடிவமைப்பை கார்ட்டூனிஸ்ட் முருகு செய்துகொடுத்தார். பிழைகள்கூட சரிபார்க்கப்படாமல் அவசர அவசரமாக 2008 புத்தக சந்தைக்கு தயாரானது. புத்தகம் அச்சாகி 10 பிரதிகள் கொடுத்தார்கள். பிறகு மீண்டும் 10 பிரதிகள் வேண்டும் என்று பெற்றுக்கொண்டதோடு சரி. பிறகு எத்தனை புத்தகங்கள் விற்பனையானது, புத்தகத்தைப் படித்த வாசகர் யாராவது தொடர்பு கொண்டார்களா என்பது பற்றித் தெரிந்து கொள்ள பதிப்பகத்தை தொடர்பு கொள்ளவேயில்லை. எழுத்தாளர்கள் பேசியதை வெட்டி, ஒட்டுதலுடன் கட்டுரையாக்கியது மட்டுமே என் பணியாக இருந்தது என்பதால் இந்தப் புத்தகம் குறித்து பெருமிதம் கொள்ள ஒன்றுமில்லை. என் எழுத்தாக்கத்தில் வெளிவந்த கட்டுரைகள் புத்தகமாகியிருக்கிறது என்றுதான் இதைப் பற்றி நினைத்திருந்தேன். மேலே உள்ள கடிதம் அந்த எண்ணத்தை சற்று அசைத்திருக்கிறது. ஏதோ ஒரு வாசகனை, இந்தப் புத்தகத்தில் உள்ள எழுத்தாளர்கள் வாசிக்கத் தூண்டியிருக்கிறார்கள் என்பதை அறிய உற்சாகம் அடைந்தேன்.
நன்றி நண்பரே!

’’நினைச்சவுடனேயே அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு?’’

தற்காலச்சூழலில் பெண்ணியம், தமிழ் நாடக வெளியில் இயங்கிவரும் ஆளுமை அ. மங்கை. குங்குமம் இதழில் வெளிவந்த நான் தொடருக்காக அவரைச் சந்தித்து எழுதிய தன்அறிமுகம் இது.

”ஒரு பொண்ணுன்னா இப்படியிருக்கணும், அப்படியிருக்கணும்னு ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள். உட்கார்றது, நடக்கிறது, சிரிக்கிறதுன்னு பெண்ணை உடல்சார்ந்து ஒடுக்கி, தட்டி, கொட்டி வெச்சிருக்காங்க. அப்படிப்பட்ட பெண்ணை கையை வீசி, சுதந்திரமா நடக்க வைக்கிற இடமா மேடை இருக்கு. வளைஞ்சி, நெளிஞ்சி, குனிஞ்சி கிடக்கிற பெண்களைக் குறைந்தபட்சம் தங்களுக்கும் முதுகெலும்பு இருக்குன்னு உணர்த்துகிற வெளியா நாடகம் இருக்கு. யாராவது பார்த்தா தலையை குளிஞ்சிக்கணும்னு பெண்ணுக்குச் சொல்லித்தர்ற சமூகத்துல, நாலு பேரை தலை நிமிர்ந்து பார்த்து பேச வைக்கிற இடம்தான் நாடக மேடை. பெண் விடுதலைக்கான சாத்தியமா நான் மேடையைப் பார்க்கிறேன். நான் நாடகத்தை எனக்கான கலையா ஆக்கிக்கிட்டதுக்கும் இதுதான் காரணமா அமைஞ்சது.
பாரம்பரியமா இருக்கிற கலைகள் எல்லாம் எத்தனை தூரம் பெண்களைப் பங்கெடுக்க வெச்சிருக்குங்கிறதை நாம ஆராய வேண்டியிருக்கு. பெண்கள் கூத்தாடக் கூடாதுன்னு ஒரு மரபே இருந்துக்கிட்டு இருக்கு. அப்போ கற்பனையா சொல்லப்படற கலைகள்லேயும் ஏற்றத்தாழ்வு இருக்குன்னுதானே அர்த்தமாகுது. கலைகள் கலாசாரத்தோட வெளிப்பாடுன்னு சொன்னா, நம்மோட கலாசாரமே ஏற்றத்தாழ்வோட இருக்கான்னு கேள்வி எழுது.
தமிழ் கற்பு, தமிழ் சார்ந்த வாழ்க்கைன்னு அதிகமாக பேசப்படுது. சங்க இலக்கியம் சொல்ற கற்பை நாம எப்படி புரிஞ்சி வெச்சிருக்கோம்? கற்புங்கிறது சொல் திரும்பாமைன்னு சங்க பாடல்கள்ல அவ்வை வெளிப்படையா சொல்லியிருக்காங்க. கற்புங்கிறது அறவியல் சார்ந்த சொல், அதுல எப்படி பெண் சம்பந்தப்பட்டாங்கிறது ஆய்வுக்குரிய விஷயம். இவ்வளவு சொன்ன அவ்வையை நாம எப்படி உருவகப்படுத்துறோம்…எந்த ஆதாரமும் இல்லாம மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டமாதிரி, சங்க இலக்கியத்துல வாழ்ந்த அவ்வையும் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அவ்வையும் ஒண்ணுங்கிறோம். ஆனா, அந்த காலத்திலயே தனியா வாழ்ந்த ஒரு பெண்ணா அவ்வை இருந்திருக்கா. கள் குடிச்சிருக்கா. அதியமானுடன் நல்ல பகிர்தலுக்குரிய நட்போட இருந்திருக்கா, புலால் சாப்டிருக்கா. பின்னாடி வந்த நாம என்ன பண்ணியிருக்கோம்? தமிழ் நாகாரிகம், பண்பாடுங்கிற பேர்ல குமரியா இருந்தவளை, கிழவியாக்கிட்டோம்.

பெண்ணோட பார்வையை, இருப்பைக் கேள்வி கேட்கிற நாடகங்களைத்தான் நான் மேடையில கொண்டுவர்றேன்.எவ்வளவு தூரம் இதையெல்லாம் நாடகத்துல செய்ய முடியும்னு தெரியலை. சுயத்தை கேள்வி கேட்காத, வீட்டுல வளர்க்கிற வளர்ப்பு பிராணிமாதிரிதானே பெண்களை வெச்சிருக்கோம். பிராமணீயம் உண்டாக்கின சாதி வேறுபாடுகளை எதிர்க்கிற நாம, அது முன்நிறுத்துகிற பெண் அடிமைத்தனத்தை மட்டும் ஏத்துகிறது முரண்பாடா தெரியுது. இதையெல்லாம் பேசினா ஆண்களுக்கு எதிரானவங்க நினைக்கிறாங்க. கவுரவம், அந்தஸ்துங்கிற பேர்ல சம்பாதிக்கிற மெஷினா ஆண்கள். காலம் முழுக்க அவங்க உழைப்பை உறிஞ்சுகிற அட்டைப் பூச்சிகளா பெண்கள் இருக்காங்க. நினைச்சவுடனேயே வெட்கப்படாம அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு? பொதுஇடத்துல அப்படி வெட்கப்படாம தன் உணர்ச்சியைக் கொட்ற ஒருத்தனை நான் உண்மையான ஆண்மகன், வீரத் திருமகன்னு ஒத்துக்கிறேன். ஆணோ, பெண்ணோ, திருநங்கையோ அவங்கவங்க சுயத்தோட இருக்கணும். அடிப்படையான மனிததேவையும் அதுதான். இதையெல்லாம் சொல்றதால நீங்க பெண்ணியவாதியான்னு கேட்கலாம். பெண்ணியவாதின்னு சொன்னாதான் உங்களுக்குப் புரியும்னா, என்னை பெண்ணியவாதின்னு சொல்லிக்கிறதுல எந்த தயக்கமும் இல்லை.

mangai
ஒரு வழக்கமான குடும்பத்துலதான் நான் பிறந்தது. சின்ன வயசிலேயே படிக்கிறதுக்காக வீட்டை விட்டு வந்துட்டேன். அந்த வீட்டுக்குரிய பழக்க வழக்கங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அதுக்கு பிறகு நானா எனக்கான வாழ்க்கையை அமைச்சுக்கிட்டேன். யாரை திருமணம் செய்துக்கணும், தாலி கட்டிக்கணுமா வேண்டாமா, எப்போ குழந்தை பெத்துக்கணும், எப்படி வளர்க்கணுங்கிறதை நானே தேர்ந்தெடுக்கிட்டேன்.
கணவர் அரசுக்கும் எனக்குமான உறவு ரொம்ப இணக்கமானதுன்னு சொல்லிக்க விரும்பலை. எல்லா குடும்பங்கள்ல இருக்கிறதுபோல நெருடல்களும் கருத்து மோதல்களும் எங்களுக்குள்லேயும் வந்ததுண்டு. நிச்சயம், இந்த இடத்துல என்னுடைய மாமியருங்கிற உறவைப் பத்தி சொல்லியாகணும். அவங்க கிராமத்துல பிறந்து, வாழ்ந்தவங்க.நான் செய்ற சில உணர்வுப்பூர்வமான செயல்களுக்கு அவங்கதான் எனக்கு பக்கபலமா இருந்திருக்காங்க. என்னோட நாடகத்துக்கு அவங்கதான் முதல் பார்வையாளரா இருந்தாங்க. நான் ஏதோ பொறுப்பான செயல்ல இருக்கேன்னு அவங்க நம்பினாங்க. அவங்களோட இருப்பு எனக்கு மிகப்பெரிய பலமா இருந்துச்சு.
அரசியல் பின்னணியோ, கலை பின்னணியோ எனக்குக் கிடையாது. 70களின் மத்தியில் எமர்ஜென்ஸி, வங்கப்போர்னு அரசியல் கொந்தளிப்பு இருந்த சமயம். கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் ரொம்ப சீரியசான பகிர்தல் இருந்தது. அந்தப் பகிர்தல் பல மாணவர்களை அரசியலுக்குக் கொண்டு வந்தது. திராவிட கட்சிகளிலும் இடதுசாரி கட்சிகளிலும் இணைந்து பணியாற்றினாங்க. அப்படித்தான் எனக்கும் ஆர்வம் வந்தது. அரசியல் தெளிவோடதான் நாங்க செயல்பட்டோம்னு சொல்ல முடியாது. பின்னால அமைப்புரீதியா செயல்பட ஆரம்பிச்சப்போ நிறைய தெளிவு கிடைச்சது. அப்புறம் நாடகங்கள் மீது ஈடுபாடு. ஆரம்பத்துல நடிக்கவும் செஞ்சேன். பிறகு நெறியாள்கை செய்றது மனசுக்குப் பிடிச்ச வேலையா இருந்தது.
சென்னையை ஒப்பிடும்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்கள்ல நாடகங்களுக்கு இருக்கிற மரியாதை அதிகம். நாடகத்தைச் சினிமாவும் டி.வி.யும் அழிச்சிருச்சின்னு சொல்லவே முடியாது. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இருக்கிற அளவுக்கு டி.வி.யும் சினிமாவும் இங்கே வளர்ந்துடலை. ஆனா, அங்க நாடகத்துக்குப் போறதை இன்னமும் முக்கியமான பழக்கமா வெச்சிக்கிட்டு இருக்காங்க. சரியான நாடக அரங்கங்கள், நாடக ஒத்திகைக்கான இடம், நடிகர்களுக்குக் குறைந்தபட்சம் போக்குவரத்து செலவைக்கூட கொடுக்க முடியாத சூழல்னு நிறைய வருத்தங்கள் தமிழ் நாடகத்துறையில இருக்கு. ஒண்ணும் தராத வேலைதான், ஆனாலும் தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கோம்.’’

27-9-2007 அன்று வெளியானது. நான் என்ற பெயரில் குங்குமம் இதழில் வெளியான இந்தத் தொடர் பின்னர் புத்தகமாகவும் வெளிவந்தது. காவ்யா பதிப்பகம் இதை வெளியிட்டது.

DSCN0267

’’பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ஒருவகையான போர்தந்திரம்’’

குங்குமம் வார இதழில் நிருபராக பணியாற்றிய 2007ல் ஒரு புகைப்படக் கண்காட்சியை ஒட்டிய கட்டுரைக்காக சுசித்ரா விஜயனை சந்தித்தேன். போர் பாதித்த ஆப்பிரிக்க பகுதிகளில் வசித்த சிறுவர்களைப் பற்றி பதிவு அந்தப் புகைப்படக் கண்காட்சி. புகைப்படங்களை எடுத்தவர் சுசித்ரா. ஐநாவின் போர் குற்றப்பிரிவில் யுகோஸ்லோவியா, ருவாண்டா நாடுகளில் பணியாற்றியபோது எடுத்த படங்கள் அவை. தெளிவான சிந்தனையும் அரசியல் பார்வையும் கொண்ட பெண். எளிமையானவர். அவருடைய புகைப்படங்களே புதிய மொழியைப் பேசின. சுசித்ரா இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். தற்போது மனித உரிமைக்கான வழக்கறிஞராக பணியாற்றுகிறார். எழுத்தாளர், அரசியல் விமர்சகர் என்பவை இவருடைய வெவ்வேறு முகங்கள்.

selects_o
தற்போது பார்டர் லேண்ட்ஸ் என்கிற பெயரில் இந்தியாவை ஒட்டியுள்ள பாகிஸ்தான், சீனா, நேபாளம், பர்மா, பூடான், வங்காளதேசம் எல்லைப் பகுதிகளில் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைச்சூழலை ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இந்த ஆவணப்படுத்தலுக்காக பிரபல நிதி திரட்டு தளமான கிக்ஸ்டார்டர் மூலம் நிதி திரட்டிக் கொண்டிருக்கிறார். ஆர்வம் உள்ளவர்கள் இந்தச் சூட்டியில் சென்று உதவுங்கள்.

IMG_2550

ஒரு வார இதழுக்காக சுசித்ராவுடனான உரையாடலின் ஒரு பகுதி கீழே…

நீங்கள் வெவ்வேறு நாடுகளில் வசித்திருக்கிறீர்கள். அந்த சமூகங்களில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? முக்கியமாக இங்கிலாந்திலும் ஆப்பிரிக்க நாடுகளிலும்.

பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததல்ல, அவர்கள் யாரால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதே முக்கியம். சமூகத்தைக் கடந்து, தனிப்பட்ட முறையில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதையே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. குடும்ப வன்முறைகள்தான் உலகம் முழுக்க உள்ள பெண்களை அதிகம் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இதில் வேறுபடும் ஒரே விஷயம், வெவ்வேறு நாடுகளில் உள்ள பொது சமூகம், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளை எப்படி பார்க்கிறது என்பதாக இருக்கிறது.

போர், பெண்களின் வாழ்க்கைச்சூழலில் எத்தகைய மாற்றங்களை, பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?

ஆயுதமேந்திய போராட்டங்களின்போது பெண்கள் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கிறார்கள். அமைதிக் காலங்களில் சந்தித்த பாலின பாகுபாடுகளின் நீட்சியாகவே போராட்டக்காலங்களிலும் பெண்களுக்குக் கெதிரான குற்றங்கள் அரங்கேறுகின்றன. ஏனெனில் சமூகத்தில் பெண்களுக்குரிய இடம் மறுக்கப்படுகிறது, முக்கிய முடிவுகளை எடுக்கும் பணிகளிலிருந்து அவர்கள் தள்ளியே வைக்கப்படுகிறார்கள். அவர்கள் எப்போதும் பாதிக்கப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய அனுபவங்கள், பங்களிப்புகள் தெரிந்தே மறுக்கப்படுகின்றன. பிரச்னைக்குரிய நாடுகளிலும் பிரச்னை ஓய்ந்த நாடுகளிலும் இதே நிலைதான். ஆயுதமேந்திய போராட்டங்களில் பெண்களைவிட ஆண்கள் அதிகமளவில் ஈடுபடுகிறார்கள். பராமரித்தல், மருத்துவ பணிகள், தொழிற்சாலை மற்றும் விவசாயப் பணிகள், குழந்தை வளர்ப்பு போன்றவை பெண்களுக்குரிய பணிகளாக மாறிவிடுகின்றன. இந்தப் பணிகளுக்கு எப்போதும் ஊதியமும் கிடைப்பதில்லை, அங்கீகாரமும் கிடைப்பதில்லை. இவற்றைத் தவிர, போராட்டக்களங்களில் உதவியாளர்களாக, செவிலியர்களாக, சமைப்பவர்களாக, பாலியல் தொழிலாளிகளாகவும் இருக்கிறார்கள்.
பிரச்னைக்குரிய பகுதிகளில் பெண்களும் பெண்களை சார்ந்திருப்பவர்களும் மருத்துவ உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். குறிப்பாக பிரச்னைக்குரிய அரசாங்கங்கள் கர்ப்பத்தடைக்கான மருத்துவ நிதியின் பெரும்பாலான பகுதி போருக்காக பயன்படுத்துகிறது. ஆயுதமேந்திய போராட்டப் பகுதிகளில் முறையான மருத்துவ, உளவியல் தொடர்பான உதவிகள் மறுக்கப்படுகின்றன. இதனால் பாதிக்கப்படுபவர்கள் வீட்டை சார்ந்திருக்கும் பெண்கள்தான். பிரச்னைக்குரிய பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ஒருவகையான போர்தந்திரமாகவே கையாளப்படுகிறது. 1994ம் ஆண்டு மட்டும் ருவாண்டாவில் 5 லட்சம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதுதவிர, பெண்களை அவர்கள் சார்ந்த குடும்ப ஆண்களின் முன்பே பாலியல் வல்லுறவு செய்வதும் நடந்திருக்கிறது.
பல சமூகங்களில் போர்களின்போது எதிரி வீட்டுப் பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்குவது பாரம்பரியமிக்க செயலாகவே கருதப்படுகிறது. பெண்களை குழந்தைகளை கடத்தி, அவர்களை பாலியல் அடிமைகளாக நடத்துவதுடன், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயரும்போது தங்களுடைய உடைமைகளை சுமக்கவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த சூழலில் மாட்டிக்கொள்ளும் பெண்கள் வலுக்கட்டாயமாக எச்ஐவி தொற்றுக்கு ஆளாகிறார்கள். வன்முறையான போராட்டச்சூழல் பெண்களை தங்கள் வீடுகளை விட்டு விரட்டியடிக்கிறது, தங்களுக்கு பாதுகாப்பான சொர்க்கத்தைத் தேடும் அவர்களுக்கு, புதைக்குழிகளே காத்திருக்கின்றன.
அகதி முகாம்களில் இருக்கும் பல பெண்கள், தங்களை பாலியல் வன்முறைகளிலிருந்து காப்பாற்ற தங்கள் வீட்டு ஆண்கள் ஆயுதமேந்த வேண்டும் என்கிறார்கள். ஆனால், அதிகாரத்தில் இருக்கிறவர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்பட தங்கள் நடுநிலைமைகளை தக்கவைத்துக்கொள்ள எப்போதும் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.

நீங்கள் பெண்ணியவாதியா?

நான் பெண்ணியவாதில்லை. பெண்ணுக்குரிய உரிமைகள் எனக்கு மறுக்கப்பட்டதில்லை. நான் வளர்க்கப்பட்ட சூழல் அப்படி. நானும் என் தங்கையும் பெண்கள் என்பதைக் கடந்து வளர்க்கப்பட்டோம். பாகுபாடுகளோடுகூடிய சூழலை நாங்கள் இதுவரை உணர்ந்ததில்லை.