‘‘இலக்கியவாதிகளுக்கு சூழலியல் பற்றி எதுவும் தெரியாது!’’

ச.முகமதுஅலி

ச.முகமதுஅலி

உலகம் சூடாகிறது என்று சொன்னாலும் சொன்னார்கள் சுற்றுச்சூழல் பற்றி பேசுவது இன்று பலருக்கு ஃபேஷனாகிவிட்டது. இயற்கைப் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் சரியாக புரிந்து கொண்டு பேசுபவர்கள் இங்கே ரொம்பவும் குறைவு. இயற்கையியலாளர் ச. முகமது அலி அப்படிப்பட்டவர்களுள் ஒருவர். இவர் பேச ஆரம்பித்தால் நாம் எவ்வளவு தூரம் இயற்கையைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம் என்று பொட்டில் அடித்தமாதிரி தெரிகிறது. மேட்டுப்பாளையத்தில் உள்ள அவருடைய வீட்டில் அவரைச் சந்தித்தேன். கிட்டத்தட்ட 4 மணி நேரம் பேசினார். அதிலிருந்து சில துளிகளைத் தொகுத்திருக்கிறேன்.
‘‘வெறுமனே மரம் நடறது மட்டும்தான் இயற்கையைக் காப்பாத்தறதுக்கான ஒரே வழிங்கறமாதிரி இப்போ நிறையபேர் செயல்பட்டுட்டு இருக்காங்க. அதுல எத்தனைபேர் மரம் நட்ட பிறகு அது வளர்ந்திருக்கான்னு பார்ப்பாங்கன்னு தெரியாது. எனக்கு தெரிஞ்சி பல செடிகள் நட்ட உயரத்திலேயே காணாமல் போயிருக்கு.
இயற்கையை போற்றி அதோட பின்னிப் பிணைந்திருந்த பாரம்பரியம் நம்மோடது. ஆனா, தமிழ் பாரம்பரியங்கற பேர்ல எதை எதையோ பேசிக்கிட்டிருக்கோம். 400, 500 வருஷமா அந்த பாரம்பரியத்தை தொலைச்சிட்டு நிற்கிறோம். வெளிநாட்டுக்காரன் ‘குளோபல் வார்மிங்’ பத்தி சொன்னாதான் நமக்கு சுற்றுச்சூழல் காப்பாத்தறது பத்தி நினைப்பு வருது.
பெரிய பெரிய இலக்கியவாதிகளிலிருந்து உலகமெல்லாம் சுத்திவந்த அரசியல்வாதி வரைக்கும் ‘ஆண்சிங்கம்’ங்கிற அடைமொழி கொடுக்கிறோம். உண்மையில் பெண் சிங்கம்தான் வேட்டைக்குப் போகும். ஆண்சிங்கம் இயற்கையிலேயே சோம்பேறியான உயிரி. அது அதோட இயல்பு. அதேபோல ஆண் குயிலுக்குத்தான் இனிமையான குரல் உண்டு. ஆனா பெண் பாடகிகளுக்கு ‘இசை குயில்’னு அடைமொழி கொடுக்கிறோம்.
நம்முடைய எழுத்தாள மெதாவிகளுக்கு உயிரினங்கள் பற்றி  எந்த அறிவும் கிடையாது. பெயர் தெரியாது. வகையும் தெரியாது. பொதுமக்கள் மத்தியில் வனஉயிரினங்களைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்புறதில இவங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. ‘பயங்கரமான காடு’, ‘சூழ்ச்சி செய்யும் நரி’னு எவ்வளவோ தவறான உதாரணங்களை தந்துகிட்டு இருக்காங்க.

குயில் குடும்பத்துல மட்டும் 127 வகைகள் இருக்கு. அன்னப்பறவை இந்தியாவிலேயே இல்லை. வானம்பாடின்னு ஒரு பறவையே கிடையாது. 250 வகை இந்திய பாம்புகள்ல 3 வகை பாம்புகளுக்கு மட்டுமே விஷம் இருக்கு. இப்படி அடிப்படையான விஷயங்கள் தெரியாம எதிர்கால சந்ததிகளுக்கு இந்த எழுத்தாளர்கள் தவறான தகவல்களைத்தான் தந்துகிட்டு இருக்காங்க. இந்த நிலையில எப்படி இயற்கை சூழல் காப்பாத்தப்படும்?
சங்க இலக்கியங்கள்ல பறவைகள், விலங்குகள் பற்றி நுணுக்கமான விஷயத்தைகூட பதிவு பண்ணியிருக்காங்க. அத்தனைக்கும் அழகான தமிழ்பெயர் வச்சிருக்காங்க. எல்லாத்தையும் மறந்துட்டு இன்னைக்கு ஆங்கிலப் பெயர்களை அப்படியே தமிழ்ல எழுதற வேலையைச் செய்துட்டு இருக்கோம். குரங்குக்கும் மந்திக்கும் நமக்கு வித்தியாசம் தெரியறதில்லை. யானையைத் தொட்டு பார்த்த குரங்கு கதையாத்தான் நாம இயற்கையைப் புரிஞ்சிவச்சிருக்கோம்.’’அனலாக வார்த்தைகள் வந்து விழுந்தாலும், இவருடைய அக்கறை இயற்கையை காப்பதற்காக மட்டுமே. 20 ஆண்டுகளாக இவர் ‘காட்டுயிர்’ என்ற பத்திரிகையை நடத்தி வருகிறார். பொள்ளாச்சியில் இயற்கை வரலாற்று அறக்கட்டளையை நிறுவி, சூழலில் காப்பதன் அவசியத்தை மக்களுக்கு சொல்லிவருகிறார்.

Untitled-7

‘‘நமக்கு பயன்படக்கூடிய உயிரினங்கள் மட்டும் இந்த உலகத்துல இருந்தா போதாதாங்கிற கேள்வி பலருக்கு வர்றதுண்டு. உண்மையில் இயற்கைளோட ஒவ்வொண்ணும் பிணைந்துதான் இருக்கு. உதாரணத்துக்கு நீலகிரி மலையில வசிக்கிற இருவாசிப் பறவை அழிஞ்சதுன்னா அதோட தொடர்புடைய பத்து வகையான மரங்களும் அழிஞ்சிடும். காரணம், இருவாசிப் பறவை சாப்பிட்டு வெளியேற்றுகிற விதைகளுக்குத்தான் முளைக்கும் திறன் இருக்கு.அதனாலதான் மரங்கள் செழித்து வளருது. இப்படி நம்மைச் சுற்றியிருக்கி பல்லுயிர்களும் செழிப்பா இருந்தாதான் நாமும் செழிப்பா இருக்கமுடியும்’’ என்கிற ச.முகமதுஅலி, ‘யானைகள் அழியும் பேருயிர்கள்’ ‘நெருப்புக் குழியில் குருவி’ ‘பறவையியலாளர் சாலிம் அலி’ போன்ற தமிழில் வந்திருக்கும் முக்கியமான சூழலியல் நூல்களின் ஆரியரும் கூட.

புலிகளைப் பாதுகாக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு?

காட்டுயிர் -மனித பிணக்கு குறித்த செய்திகள் ஊடகங்களில் வருவது இப்போது சாதாரண விஷயமாகிவிட்டது. கோவை, வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளை ஒட்டியமைந்த மனித வாழிடங்களிலும் விவசாய நிலங்களிலும் காட்டுயிர்கள் குறிப்பாக யானைகள் புகுந்து ‘‘அட்டகாசம்’ செய்வதாக தமிழ் ஊடகங்களில் ‘சுவாரஸ்ய’ செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆங்கில ஊடகங்களில் மட்டுமே காட்டுயிர்-மனித பிணக்கு குறித்த கன்சர்வேஷன் நோக்கிலான கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தமிழ் ஊடகவியலாளர்களின் காட்டுயிர்கள் மீதான வார்த்தை வன்முறை குறித்து சு.தியடோர் பாஸ்கரனும் ச. முகமது அலியும் எவ்வளவோ முறை பேசியிருக்கிறார், ஒருவருக்கும் அது எட்டவில்லை போலும். இத்தகையதொரு சூழலில் முதுமலை வனப்பகுதி கடந்த ஜனவரி 2009 முதல் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதும் அதையொட்டி அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தரிவித்து போராட்டம் நடத்தியதும் ‘யானைகள் அட்டகாச செய்திகளுக்கு நடுவே வெளியானது. சுற்றுலாவுக்குப் பெயர் போனது இந்தப் பகுதி. புலிகள் சரணாலய அறிவிப்பால் எங்கே தங்களுடைய பிழைப்புக்கு இடைஞ்சல் வந்துவிடுமோ என்றுதான் இந்தத் தொழிலை நம்பியிருக்கும் பெரும்பாலான மக்கள் இதை எதிர்த்தார். இப்போது உச்சநீதி மன்றம் புலிகள் சரணாலயப் பகுதிகள் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது. காட்டுயிர் ஆர்வலர் இந்த இடைக்கால தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு புலிகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முதுமலை ஊட்டியிலிருந்து 67 கிமீ தொலைவிலும் மைசூரிலிருந்து 90 கிமீ தொலைவிலும் இருக்கிறது. முதுமலை தேசியப் பூங்கா 321 சதுர கிமீ பரப்பில்  இருக்கிறது. புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு, செந்நாய், காட்டுப்பன்றி, தேவாங்கு,குரங்கு, மான்களில் புள்ளி மான், அன்டிலோப் உள்ளிட்ட விலங்கினங்களும் நன்னீர் முதலை, மலைப்பாம்பு, நாகம் போன்ற ஊர்வன வகைகளும் இந்நிலத்திற்குரிய பூர்வாங்க பறவையினமான இருவாச்சி உள்ளட்ட 200 வகையான பறவைகளும் அறிய தாவர வகைளும் சிறு உயிரினங்களும் நீர்நிலைகளும் அடங்கிய இயற்கையின் தொகுப்பு முதுமலை.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களின் எல்லைப்பகுதிகளும் ஒன்று சேரும் இடத்தில் இருக்கிறது. முதுமலை வனச்சரணாலயம். ஒருபுறம் கர்நாடகத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்காவும் மற்றொரு புறம் வயநாடு சரணாலயமும் இருக்கின்றன. பந்திப்பூர், வயநாடு வனப்பகுதிகள் புலிகள் சரணாலயங்களாக மாற்றப்பட்டு சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

நிர்வாக வசதிகளுக்காக இவ்வனப்பகுதிகள் பிரிக்கப்பட்டனவே அன்றி இவை மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளின் தொடர்ச்சியானவையே. தமிழக பகுதியான முதுமலை வனப்பகுதியில் புலிகள் வாழ்வதற்கான உயிர்ச்சூழலும் அவற்றின் எண்ணிக்கை ஆரோக்கியமான நிலையில் இருந்தபோதும் அது நீண்ட வருடங்களாக புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவில்லை. காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்களின் தொடர்ந்த முயற்சிகளால் முதுமலை வனப்பகுதி ஜனவரி 2009ல் புலிகள் சரணாலயமாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
பந்திப்பூர், முதுமலை ஒட்டிய பகுதிகளில் காட்டுயிர் ஆராய்ச்சியளராக செயல்பட்டவர் உல்லாஸ் கரந்த். அவர் தன்னுடைய அனுபவங்களை The Way of the Tiger  என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். காட்டுயிர், சூழலியல் மீது ஆர்வம் உள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம். சு. தியடோர் பாஸ்கரன் ‘கானுறை வேங்கை’ என்ற பெயரில் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார்.

புலி உறுமல் கேட்குமா?

புலிகளை வீரத்தின் அடையாளமாகக் கருதி கொண்டாடிய சமூகம் நம்முடையது. இன்று அதே சமூகத்தின் சந்ததிகள்தான் புலிகள் எங்கே இருக்கின்றன? என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் நம் தேசிய விலங்கான புலிகள் எஞ்சியிருப்பது வெறும் 1411 மட்டுமே.

புலி ஒரு காட்டுயிர் மட்டுமல்ல, வளமான காட்டின் அடையாளம். அதாவது நாமும் நமக்குப் பின்னால் வரும் சந்ததிகளும் சிறப்பான வாழ்வை வாழப்போகிறோம் என்பதற்கான குறியீடு. அடர்ந்து வளர்ந்த மரங்களும் புல்லும் புதரும் நிறைந்த காட்டில் அதை உணவாக உண்ணும் முயல், மான், மாடு, காட்டுப் பன்றி, குரங்கு போன்ற உயிரினங்கள் வாழும். இவற்றின் எண்ணிக்கை கூடும்போது புலி, சிறுத்தை, நரி, ஓநாய் உயிரினங்களின் உணவுத் தேவை தீர்ந்து அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. இந்த மூன்றும் சங்கிலித்தொடராக தொடரும்போதுதான் காடு தன் இயல்பைத் தொலைக்காமல் இருக்கிறது. பருவ மழை சரியான பருவத்தில் பொழிந்து ஆறு பெருகி மக்களின் தேவைகளை நிறைவேற்றுகிறது. எல்லாமே ஒன்றொடொன்று தொடர்புடையவை. சென்னையில் இருக்கும் நான், மேற்கு தொடர்ச்சி மலையின் ஏதோ ஒரு சரணாயத்தில் வாழும் புலிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என ஏன் கவலைப்பட வேண்டும் என கேட்டுவிட முடியாது! நம் ஒவ்வொருவரின் கவனத்துக்கும் அக்கறைக்கும் உரியவை புலிகள். காடுகள் வேகமாக அழிக்கப்படுவதாலும் தோலுக்காக வேட்டையாடப்படுவதாலும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அழிவின் விளிம்பில் இருக்கும் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அரசும் தன்னார்வர்லர்களும் முழுமூச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த செயல்பாடுகளால் புலிகளின் எண்ணிக்கையும் சக இரையுண்ணிகள், அவற்றின் இரைகள், தாவர வளம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக வருடந்தோறும் மத்திய வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
கடந்த ஒன்பது வருடங்களாக வனவிலங்குகள் கணக்கெடுப்பில் பங்கேற்று வருகிறார் சென்னையிலிருந்து இயங்கிவரும் நேச்சர் டிரஸ்ட் அமைப்பைச் சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் திருநாரணன்.
“தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள வனங்களில் நடந்த கணக்கெடுப்பில் பங்கேற்று வருகிறேன். இந்த வருடம் ஆனைமலை பகுதியில் கணக்கெடு எடுத்தோம். புலிகள் கணக்கெடுப்பு என்று பெயர் இருந்தாலும் காட்டில் உள்ள அதாவது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட எல்லைக்குள் இருக்கும் மரம், செடி, விலங்குகள், பறவைகள் என அத்தனையையும் கணக்கெடுக்க வேண்டும். இதுதான் செயல்முறை. இதை வைத்துதான் புலிகளின் எண்ணிக்கையும் வாழ்வாதாரமும் கணிக்கப்படும்.

அந்த வகையில் ஆனைமலை சரகம் வளமோடு இருக்கிறது என்பதை நேரிடையாக பார்க்க முடிந்தது.
இவ்வளவு உயிரினங்கள் இருக்கின்றன என்று ஆறே நாட்களில் கணக்கிட்டு சொல்லிவிட முடியாது. புலி, சிறுத்தை போன்றவற்றை நேரிடையாக பார்ப்பதும் அரிதான விஷயம். அதனால் அவற்றின் கால்தடங்கள், கழிவுகள், மரங்களின் மேல் அவை ஏற்படுத்திச் சென்ற உராய்வுகள் இவற்றை வைத்து கணக்கெடுப்பு செய்கிறோம். மான் இனத்தில் பல்வேறு வகைகள் உண்டு. அவற்றின் கழிவு பொருட்களை வைத்துதான் அவை இந்த வகையைச் சேர்ந்தவை என்று குறித்துக்கொள்கிறோம். நீர் நிலைகளில் விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். அங்கு அவை விட்டுச்சென்ற அடையாளங்களையும் சேகரிப்போம். நீர்நிலைகளை வைத்து யானைகளின் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ள முடியும். இதெல்லாம் மறைமுக கணக்கெடுப்பில் வருபவை. பெரும்பாலும் காட்டுயிர் கணக்கெடுப்பில் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது. » » » »

பல காலமாக பின்பற்றிவரும் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கூறமுடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு சொல்லும் வகையில் ஹைதராபாத்தில் உள்ள செல்லுலர் மற்றும் மாலிக்குலர் மையம் (Centre for cellular and Molecular Biology) புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது புலிகள் விட்டுச்சென்ற தடயங்களிலிருந்து அவற்றின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து அவற்றின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதே இந்த முறை. உயிரினம் ஒவ்வொன்றுக்கும் டிஎன்ஏ அமைப்பு வேறுபட்டு இருக்கும். இதை வைத்து துல்லியமாக புலிகளின் எண்ணிக்கை சொல்ல முடியும் என்கிறது இந்த ஆராய்ச்சி நிறுவனம். முதுமலை வனசரணாலயத்தில் இந்த கணக்கெடுப்பு முறை சோதனை செய்து பார்க்கப்பட்டிருக்கிறது. இது ஆராய்ச்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டால் அனைத்து சரணாலயங்களிலும் இந்த முறை செயல்படுத்தப்படும் என்கிறது இந்நிறுவனம்.

« « « காட்டுயிர் வளத்தை மட்டுமல்ல, காட்டை நம்பி, அவற்றை சுற்றி வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறையை கவனிப்பதும் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற வகையில் முக்கியமான பணி. இந்த வருடம் ஆனைமலையில் வசிக்கும் முதுவர் பழங்குடி மக்களை சந்திக்க முடிந்தது. காட்டின் நடுவே உடுவம்பாறை, சங்கரன்குடி, பரமன்குடி போன்ற வசிப்பிடங்களில் அவர்களைப் பார்த்தோம். காடு, வனஉயிரினங்கள் குறித்த அவர்களின் அறிவு வியத்தலுக்குரியது. பழங்குடி இன மக்களைத்தான் வேட்டை தடுப்பு நடவடிக்கைக்காக அரசு பயன்படுத்திவருகிறது. காடு குறித்த அறிவுச்செல்வம் மிக்க இந்த மக்கள் வாழ்வாதாரத்தில் மிகவும் கீழ்நிலையில் இருக்கிறார்கள். இவர்களின் அறிவை பயன்படுத்திக் கொள்ளும் அரசு, அதற்குரிய வேலை உள்ளிட்ட பொருளாதார தேவைகளை செய்துகொடுக்க வேண்டும்” என்ற திருநாரணன்…» » » »

அடர் காடுகளில் மட்டுமே புலிகள் வசிக்கும். கடலும் ஆறு சேரும் முகத்துவாரப் பகுதியில் வசிப்பதால் வங்காளப் புலிகள் தனிச்சிறப்பானவை. அலையாத்தி(மாங்குரோவ்) மரங்கள் நிறைந்த சுந்தரவனக்காடுகளில் வாழும் வங்காளப் புலிகள், இன்னும் 60 வருடங்களில் அழிந்து விடும் என எச்சரித்துள்ளது உலக காட்டுயிர் பாதுகாப்புக்கான நிதியம்.

« « « “ஆனைமலை சரகத்தில் காட்டுவளம் நல்லநிலையில் இருந்தாலும் காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் தலையீடு அதிகமாகவே இருக்கிறது. புதிதாக முளைத்திருக்கும் தேயிலை தோட்டங்களும் அதை ஒட்டி எழுந்துள்ள குடியிருப்புகளும் காட்டுயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடியவை. இப்படி காட்டின் பகுதிகளை அபகரித்துக்கொண்டு, பின் நாளில் புலிகள் வேட்டையாடுகின்றன, யானைகள் அட்டகாசம் செய்கின்றன என்று கூச்சலிடுவதில் எந்த நியாயமும் இல்லை!” என்று முடித்தார்.


நாடு முழுவதும் நடந்த கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு காட்டுயிர் ஆர்வலர்களுக்கு இது ஆறுதலுக்குரிய செய்திதான் என்றாலும் இந்த வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு இன்னும் நிறைவே செய்யவேண்டியிருக்கிறது.