பாமக சாதி அரசியல் நடத்தவில்லையா?!

என்னுடைய முந்தைய பதிவில் பாமக குறித்து எழுதியிருந்தேன். அதற்கு மாதவன் என்பவர் நேர்மறையான பின்னூட்டங்களை இட்டிருந்தார். நேர்மறையான என்று ஏன் சொல்கிறேன் என்றால், சாதி பற்றி எழுதினாலே மிக மோசமான, கண்மூடித்தனமான வசவுகளை பின்னூட்டமாகப் பெற வேண்டியிருக்கும். மாதவன், என் பதிவுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மட்டும் பின்னூட்டமிட்டிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் இட்ட பின்னூட்டங்களின் தொகுப்பு இதோ… என்னுடைய விளக்கம், கேள்வியை பின்னால் தருகிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சி ஜாதிக்கட்சி என்று மக்களோ, கட்சியின் உறுப்பினர்களோ, தலைவர்களோ யாரும் அறிவிக்கவில்லை. ஆனால் ஊடகங்களான நீங்கள் தான் பா.ம.க வின் நிலைப்பாட்டை மக்களிடம் மறைத்து அதனை வேறு பிம்பமாக மாற்றி மக்களிடம் காட்டுகிறீர்கள். ஊடகங்களின் உண்மையை தோலுரிக்கும் நல்ல நேர்மையான கட்டுரை. அதே சமயம் நீங்கள் பாமக-வை பற்றி நேர்மையாக எழுதவில்லையோ என தோன்றுகிறது.

ஊழலை மறைக்கும் அதே ஊடகங்கள் தான் பாமக-வை தலித் எதிரியாக சித்தரித்தது என்பது எனது கண்ணோட்டம். இன்றைய நிலை அல்லது தேவை என்பது அதிமுக ஆட்சிக்கு வந்தபின் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு எல்லா துறைகளிலும் ஊழல் மிக பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. இதை இரண்டு பேர் மட்டும் தான் தட்டி கேட்க முடியும். ஒன்று ஊடகங்கள், மற்றொன்று எதிர்கட்சிகள். இந்த நிலையில் பார்க்கும் போது இதுவரை எந்த ஊடகங்களும் (ஜூனியர் விகடன் சற்று விழித்துள்ளது, தினமலம் தேவைற்கேற்ப) பெரிய அளவில் மக்களிடம் ஊழல் பிரச்னையை கொண்டு செல்லவில்லை. எதிர்கட்சிகள் என்று பார்த்தால் இதுவரை துணிச்சலாக தொடர்ந்து குரல் கொடுப்பது பாமக மட்டுமே. அவர்களின் அரசியல் நிலைப்பாட்டில் எனக்கு ஒத்த கருத்து இல்லையென்றாலும், அவர்களின் ஊழலுக்கு எதிரான நிலைபாடு பாராட்டுக்குரியதே. “ஜெயலலிதா மீது பாமக பட்டியலிடும் பரபரப்புப் புகார்” என்ற தலைப்பில் சவுக்கு எழுதியுள்ள கட்டுரையை படித்தால் உண்மை உங்களுக்கு புரியும்.

 

கடந்த 2012ல் தர்மபுரி நத்தம் காலனி இளவரசன் – திவ்யா காதல் காரணமாக எரித்து நாசமாக்கப்பட்டது. அதை எரித்தது வன்னிய சாதியினர் என்பதும், பின்னணியாக இருந்தது பாமக என்பது தர்மபுரி மாவட்ட சிறார்களுக்குக் கூடத் தெரியும். நானும்கூட தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவள் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். (நான் என்ன சாதியாக இருக்கக்கூடும் என ஆராய்ந்து நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்).

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, இளவரசனின் அகால மரணம்(கொலை) வரை பாமக தலைவர்கள் விட்ட அறிக்கைகள், அவர்கள் பின்னணியில் இயக்கியது என எல்லாம் காலத்தால் அழிக்க முடியாதவை. பாமக ஆதரவு வலைத் தளங்களிலேயே இவர்களின் அறிக்கைகள் அப்படியேதான் உள்ளன.  வன்னியர் என்கிற சொல்லைப் பயன்படுத்தாமல் இன்றுவரை இவர்கள் அரசியல் நடத்த முடியாது என்பது வெளிப்படையான ஒன்று.

அதிமுக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டுவந்தது உண்மையில் பாராட்டுக்குரிய ஒன்றுதான். அதற்காக வெளிப்படையாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது வெறுப்பை உமிழும் ஒரு கட்சியை அரசியல் அதிகாரத்தில் அமர்த்த முன்மொழிவது ஆபத்தில் கொண்டுவிடும் என்பதை மாதவன் போன்ற பாமக அனுதாபிகள் உணர வேண்டும். ஊழல் பேயை ஓட்ட, சாதிப் பேயையா அழைப்பது?

பாமகவுக்கு அரசியல் எதிரி வெளியில் இல்லை, அவர்கள் கட்சிக்குள்ளாக ஒரு எதிரி இருக்கிறது. சாதி அரசியல் என்பதே அந்த எதிரி!

ஜூனியர் விகடனில் வந்த பாமக-ஆளுநர் சந்திப்பு பின்னணி பற்றி சொல்லி, ஜூவி பாமகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக சொல்லியிருக்கிறார் மாதவன். ஜூவி அலசியிருக்க வேண்டியது அதிமுகவின் ஊழல்களைத் தானே தவிர, பாமக-ஆளுநர் சந்திப்பு பின்னணி பற்றி அல்ல. கைமேல் இவ்வளவு விடயங்கள் கிடைத்தால் தமிழகத்தை பரபரப்பாக்கும் வெளிவராத பல தகவல்கள் ஜூவி போன்ற இதழ்கள் தந்திருக்க வேண்டும். இரண்டாம் தரமான கிசுகிசுக்களை கொடுத்து உண்மையில் மக்களை வேறு திசையில் திருப்பும் வேலையைத்தான் இவை செய்கின்றன.

அறத்தின் மேல் நம்பிக்கை கொள்ள வைத்த சவுக்கு!

சவுக்கு தளம் தடை செய்யவேண்டும் என்கிற அறிவிலித்தனமான உத்தரவு வந்த வேகத்தில் குப்பைத்தொட்டிக்குள் போய்விட்டது. அது அப்படித்தான் போகும். ஆனால் ஊடகத்தை முடக்கும் அளவுக்கு நீதித்துறை சிலரின் கைபாவையாக மாறியிருப்பது அதிகாரத்தின் உச்சக்கட்டம். வாய்கிழிய அறம் பேசும் ஊடகங்கள் செய்ய வேண்டிய வேலையை செய்திருக்கிறது சவுக்கு. ஒரு வலைத்தளம் மிகப்பெரிய ஊழலின் முக்கியமான ஆதாரத்தை வெளிக்கொண்டு வந்திருப்பது இந்திய ஊடக வரலாற்றில் இதுவே முதல்முறை. இணைய ஊடகத்தில் இதை முக்கியமான வரலாற்று நிகழ்வு என்றே சொல்லலாம்.

சமீபத்தில் அறம் பேசும் சில பத்திரிகையாளர்களால் நான் வேலையிழந்து நெருக்கடிக்கு உள்ளானேன். மிகவும் சோர்வான தருணம் அது. அறப் புரட்சியாளர்களுக்கு சத்தியமாக நான் நல்லதையும் செய்யவில்லை, கெட்டதையும் செய்யவில்லை. நான் வேலையில் இருக்கக்கூடாது, அல்லது எனக்கு வேலை கிடைக்கக்கூடாது என்பதில் அவர்கள் ஏன் இத்தனை காழ்ப்போடு இருக்கிறார்கள் என்று சத்தியமாக இதுவரை எனக்குத் தெரியவில்லை. இந்த அறம் பேசும் ஊடகக்காரர்களை சவுக்கு தோலுரித்துப் போட்டது! இங்கே இன்னொன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்தக் கட்டுரைகளில் நான் எந்த இடத்திலும் வரவில்லை. எந்தவிதமான தகவல்களும் சவுக்கு நான் தந்ததில்லை. ஆனால் நான் நேரடியாக கண்டவற்றை அப்படியே எழுதியிருந்தார்கள் சவுக்கில். என்னைப் போல் பாதிக்கபட்டவர்களின் குரலாக அது இருந்தது.

நான் சோர்ந்து போகும்போதெல்லாம் எனக்கு நம்பிக்கை அளித்தவர்கள் வினவு தோழர்கள். இப்போது சவுக்கும் அதில் இணைந்து கொண்டுள்ளது. சவுக்கின் பணி தொடர வேண்டும். எந்தவித சமரசங்களுக்கும் அதில் அது இசைந்துகொடுக்கக்கூடாது. ஊடகத்தின் எதிர்காலம் என்பது அச்சு ஊடகத்திலோ, காட்சி ஊடகத்திலோ இல்லை அது இணையத்தில்தான் இருக்கிறது. சமரசங்களுக்கு இசைந்து கொடுக்காத ஊடகமாக சவுக்கு வளர வேண்டும் என்று இந்த தருணத்தில் விருப்பம் தெரிவிக்கிறேன்.