காடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொலைக்காட்சியில் வந்த பிரபல தொடரான சந்தனக்காடு தொடரில் வீரப்பனாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம் ஒகேனக்கல் காட்டுப் பகுகளில் மறைந்திருப்பதாக ஒரு காட்சி. அந்தக் காட்டுப் பகுதியைக் காட்டுவதாக சில கோப்புக் காட்சிகளைக் காட்டினார்கள். அதில் யானைகள், குரங்குகள், சிங்கங்கள் உலவுவதாகக் காட்டினார்கள். எனக்கோ ஒரே ஆச்சரியம் ஒகேனக்கல் காட்டில் சிங்கமா? மதிப்பிற்குரிய வீரப்பன்தான் தோலுக்காக சிங்கங்களை சுட்டு வீழ்த்தியிருப்பாரோ என்று தோன்றியது. தொடரை இயக்கிய கெளதமனின் காட்டுயிர் அறிவை எண்ணி வியந்தேன். அது இருக்கட்டும், சிங்கங்கள் நம் நாட்டுக்கு உரிய உயிரினங்களே இல்லை என்கிறார் பிரபல காட்டுயிர் ஆய்வறிஞர் வால்மீகி தாப்பர்.

சமீபத்தில் இந்தியாவின் முதன்மையான வரலாற்றறிஞர்களுள் ஒருவரான ரோமிலா தாப்பர் மற்றும் மொகலாய வரலாற்று ஆய்வாளர் யூசுப் அன்சாரியுடன் வால்மீகி தாப்பர் எழுதிய Exotic Aliens: The Lion & The Cheetah in India என்ற நூல் சிங்கங்களும் சிவிங்கிப்புலிகளும் நம் நிலப்பரப்புக்குரிய உயிரினங்களே இல்லை என்கிறது. பல்வேறு வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார்கள் இவர்கள். இந்திய காட்டுயிர் சகாப்தத்தில் இது மிக முக்கியமானதொரு ஆய்வு நூலாக பார்க்கப்படுகிறது. பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்திலும் இந்தியாவில் கிர் காடுகளிலும் மட்டும்தான் சிங்கங்கள் வாழ்கின்றன. ஆப்பிரிக்க சிங்கங்கள் உருவத்தில் பெருத்தவை. ஆசிய சிங்கங்கள் எனப்படும் இந்திய சிங்கங்கள் உடலமைப்பில் சிறியவை.காட்டின் அரசனாக நாட்டுப்புற கதைகளிலும் வலிமை, வீரத்தின் அடையாளமாக வரலாற்றிலும் சொல்லப்பட்ட சிங்கங்கள், நம் நாட்டுக்குரிய பிரத்யேக உயிரினங்கள் இல்லை என்பது பலருக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கலாம்.

’’உலகின் எல்லாக் கண்டங்களிலும் தொன்மையான மத வழிபாட்டுக்குரிய விலங்காக சிங்கம் இருந்திருக்கிறது. இதை வலிமையின் சின்னமாகவும் வழிபாட்டுக்குரியதாகவும் கொண்டாடிய பகுதிகளில் இது காட்டில் உலவியிருக்கும் ஒரு விலங்காக இருந்திருக்கும் என்று கருதுவதற்கு வாய்ப்பில்லை. பைபிளில்கூட சிங்கங்கள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை பாபிலோனிய பகுதிகளில் சிங்கத்தின் எலும்புகூடுகளோ, அவற்றின் மிச்சங்களோ கண்டறியப்படவில்லை. இங்கிலாந்து, பெல்ஜிய பேரரசுகளின் சின்னமாக சிங்கங்கள் உள்ளன. ஆனால் அந்தப் பகுதிகளில் மனித குடியேற்றத்திற்கு முந்தைய கால சிங்கங்களின் புதை படிமங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை’’ என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த சூழலியல் எழுத்தாளரும் கவிஞருமான ருத் படெல்.

exotic aliens the lion and the cheetah in india

இவருடைய கருத்துப்படியே தமிழில் சங்க இலக்கியங்கள் தொட்டு எண்ணற்ற இலக்கியங்களில் சிங்கம் தொடர்பான வர்ணணைகள், உவமைகள், வியப்புகள், போற்றுதல்கள் பதியப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் குறித்து பல்வேறு காலக்குழப்பங்கள் இங்கே உண்டு. பொதுவாக முதலாம் நூற்றாண்டில் சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்டிருக்கலாம் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள்.

வரலாற்றறிஞர் ரோமிலா தாப்பர், அலெக்ஸாண்டரின் படையெடுப்பின் போதோ அல்லது அவருடைய படையெடுப்புக்குப் பிறகோ சிங்கங்களின் வருகை நிகழ்ந்திருக்கலாம் என்கிறார். அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பு கி.மு. 327ல் நிகழ்ந்தது. சங்க இலக்கியங்களில் கிரேக்க, ரோமானிய மக்களுடன் வணிக தொடர்பு இருந்தது சொல்லப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரபூர்வ சான்றுகளாக புதுச்சேரி அரிக்கமேடு பகுதியில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ள ரோமானிய கலைப்பொருட்கள் மற்றும் நாணயங்கள் (கி.மு. 1 நூற்றாண்டைச் சேர்ந்தவை) மூலம் தெரிந்துகொள்ளலாம்.

எனவே இவ்வகையான தொடர்புகள் மூலம் சிங்கங்கள் இங்கே வந்திருக்கலாம், அல்லது சிங்கத்தைப் பற்றி வாய்மொழியாகவோ சித்திரங்கள் மூலமாகவோ பண்டைய தமிழ்மக்கள் அறிந்திருக்கலாம். வலிமையின் வீரத்தின் அடையாளமாக இருந்த சிங்கங்கள் ஏன் சேர, சோழ, பாண்டிய அரசர்களின் கொடிகளில் இடம்பெறவில்லை? சிங்கத்துடன் ஒப்பிட்டு பாடப்பெற்றவ மன்னர்கள் ஏன் தங்கள் கொடிகளில் சிங்கத்தைக் கொண்டிருக்கவில்லை. சிங்கம் இந்த மண்ணுக்குரிய விலங்கு அல்ல என்பதற்கு இதை ஒரு ஆதாரமாகக் கொள்ளலாம். மற்றொரு முக்கியமான ஆதாரமாக தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் சொல்லும் ஐந்திணைகளை எடுத்துக்கொள்வோம். இதில், காடும் காட்டைச் சார்ந்த நிலப்பகுதியைக் குறிக்கும் குறிஞ்சித் திணையின் கருப்பொருள்களில் புலி, யானை, கரடி,பன்றி என்ற விலங்குகள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன. சிங்கத்தை வேறு திணைகளின் கருப்பொருள்களிலும் சொல்லப்படவில்லை.

DSCN0715

மாமல்லபுர சிங்க சிற்பம்

அடுத்து, பல்லவர் கால மாமல்லபுர கல்சிற்பங்களில் சிங்க உருவங்கள், சிலைகள் பல இடங்களில் வடிக்கப்பட்டுள்ளன. இதை சிங்கங்கள் தமிழகத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரமாகக் கொள்ளலாம் என காட்டுயிர் ஆர்வலரும் எழுத்தாளருமான சு. தியடோர் பாஸ்கரன் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக என்னும் நூலில் சிங்கங்கள் பற்றி கட்டுரையில் தெரிவிக்கிறார். பல்லவர்கள் (கிபி 6ம் நூற்றாண்டு) வடக்கிலிருந்து வந்தவர்கள் என்கிற கருத்தாக்கத்தை வரலாற்றாசிரியர்கள் பலர் முன்வைக்கிறார்கள். சிங்கங்கள், வட இந்தியாவில் நன்கு அறிமுகமான விலங்காக இருந்திருக்கலாம், அது வழிபாட்டுக்குறியதாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கலாம். அதன்பேரில் நம்பிக்கை கொண்டிருந்த பல்லவர்கள் இங்கு ஆட்சி செலுத்தியபோது அவற்றை சிலைகளாக செதுக்கியிருக்கக்கூடும்.

காட்டுயிர் எழுத்தாளர் ச.முகமது அலி, சிங்கங்கள் 6000 வருடங்களுக்கு முன்பு வடக்கு ஆப்பிரிக்கா வழியாக இந்தியாவிற்குள் வந்திருக்கலாம் என்கிற கருத்தை முன்வைக்கிறார். பண்டைய நகரமான பால்க் (ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பகுதி)லிருந்து கி.பி. 6ம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தவை என்கிறார் வால்மீகி தாப்பர். காலங்கள் வேறுபட்டாலும் இருவருடைய முடிவுகளும் சிங்கங்கள், இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டவை என்பதை சொல்கின்றன. எதற்காக சிங்கங்களும் சிவிங்கிப்புலிகளும் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டன? அரசர்கள், குறுநில மன்னர்கள் தங்களுக்கு கட்டுப்பட்ட வனப்பகுதிகளில் செல்லப்பிராணிகள் போல் விட்டு வளர்ப்பதற்காக கொண்டுவந்தனர். 17ம் நூற்றாண்டில் மொசாம்பிக் காடுகளிலிருந்து அதிக அளவிலான சிங்கங்கள் தருவிக்கப்பட்டிருக்கின்றன என்கிறார் வால்மீகி. சிவிங்கிப்புலிகளை மொகாலய மன்னர்கள் தங்கள் அரண்மனைகளிலேயே செல்லப்பிராணிகளாக வளர்த்திருக்கிறார்கள்.

அக்பரிடம் 1000 சிவிங்கிப்புலிகள் இருந்ததாக அக்பர் நாமா என்கிற நூல் கூறுவதாக கட்டுரை ஒன்றில் சு. தியடோர் பாஸ்கரன் தெரிவிக்கிறார். அதேபோல் திப்பு சுல்தானிடம் 16 சிவிங்கிப்புலிகள் இருந்ததாகவும் அதே கட்டுரையில் சொல்லியிருக்கிறார். சிறுத்தை சற்றே பெருத்த உருவமும் உயரத்தில் சற்றும் குறைந்தும் இருக்கும். சிறுத்தை நீண்டு உயர்ந்த ஒல்லியான உடல்வாகைக் கொண்டது. இப்படியான உடல்வாகால் சிவிங்கிப்புலியால் மிக வேகமாக ஓட முடிகிறது. இந்த காரணத்தால்தான் இந்திய மன்னர்கள் காட்டில் வேட்டையாடச் செல்லும்போது சிவிங்கிப்புலிகளை தங்களுடன் அழைத்துச் செல்வதை விரும்பியிருக்கின்றனர். சிங்கங்களைப் போலவே சிவிங்கிப்புலிகளும் வேற்று நிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை என்பதற்கான வலுவான ஆதாரங்களாக இவற்றைக் கொள்ளலாம்.

FourSeals

ஹரப்பா முத்திரைகள்

இந்த நூலில் ரோமிலா தாப்பர், ’’சிங்கங்கள் இந்த மண்ணுக்குரிய தனித்துவமான விலங்காக இருந்திருக்கும் பட்சத்தில் இந்தியாவின் பழமையான நாகரிகங்களில் ஒன்றான ஹரப்பா முத்திரைகளில் புலி, காளை, காண்டாமிருக உருவ முத்திரைகள் உள்ளதுபோல், சிங்க முத்திரை ஏன் இடம் பெறவில்லை? 8லிருந்து 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களில் சிங்க உருவங்கள் எதுவும் காணப்படவில்லை’’ என்கிறார். ’’புலிகள், சிறுத்தைகளோடு சிங்கம், சிவிங்கிப்புலிகளும் நம் காடுகளில் திரிந்திருக்குமென்றால், புலிகள், சிறுத்தைகள் மட்டும் இன்றுவரை எப்படி நிலைத்திருக்க முடிகிறது. இவற்றின் வலிமையோடு ஒப்பிடும்போது சிங்கங்களும் சிவிங்கிப்புலிகளும் வலிமை குறைந்தவை அல்ல.  எனில் எப்படி அவை முற்றிலுமாக அழிந்துவிட்டன?’’ என்கிற கேள்வியை முன்வைக்கிறார் வால்மீகி. ’

’குஜராத்தில் ஜூனாபாத் நவாப், சிங்கங்களைப் போற்றி வளர்த்தார். தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலிருந்து வேறுபகுதிகளுக்கு சிங்கங்கள் கொண்டு செல்லப்படுவதை தடை செய்தார். இன்றைய குஜராத் ஆட்சியாளரும் சிங்கங்களை தம் மாநிலத்தின் சொத்தாகக் கருதுகிறார். மத்திய பிரதேச மாநில வனப்பகுதியில் சிங்கங்களைக் கொண்டு போய் விட்டு, அவற்றைப் பெருக்கும் திட்டத்தை எதிர்த்தார் மோடி. இந்த விஷயத்தில் முன்னாள், இன்னாள் ஆட்சியாளர்களின் நிலைபாடு ஒன்றாகவே இருக்கிறது’’ என்கிறார் வால்மீகி.

இந்த நூலின் தொடர்ச்சியாக தமிழ் இலக்கியங்கள், வரலாற்று குறிப்புகளில் சிங்கம் மற்றும் சிவிங்கிப்புலிகள் குறித்து மறுவாசிப்பு அவசியமாகிறது. இந்த நூலை மறுத்தோ, ஆதரித்தோ பல்வேறு தடையங்கள் கிடைக்கலாம். இந்த நூலைப் பற்றிய அறிமுகத்தில் ’’இருக்கவே இருக்காது!’’ என தன்னுடைய வியப்பைத் தெரிவிக்கிறார் சான்சுவரி ஏசியா ஆசிரியர் பிட்டு சாஹல். உண்மை சில சமயங்களில் வியப்பையும் ஏற்படுத்துவதுண்டு. Exotic Aliens: The Lion & The Cheetah in India  புத்தகத்தை இங்கே வாங்கலாம்.

புலிகளைப் பாதுகாக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு?

காட்டுயிர் -மனித பிணக்கு குறித்த செய்திகள் ஊடகங்களில் வருவது இப்போது சாதாரண விஷயமாகிவிட்டது. கோவை, வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளை ஒட்டியமைந்த மனித வாழிடங்களிலும் விவசாய நிலங்களிலும் காட்டுயிர்கள் குறிப்பாக யானைகள் புகுந்து ‘‘அட்டகாசம்’ செய்வதாக தமிழ் ஊடகங்களில் ‘சுவாரஸ்ய’ செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆங்கில ஊடகங்களில் மட்டுமே காட்டுயிர்-மனித பிணக்கு குறித்த கன்சர்வேஷன் நோக்கிலான கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தமிழ் ஊடகவியலாளர்களின் காட்டுயிர்கள் மீதான வார்த்தை வன்முறை குறித்து சு.தியடோர் பாஸ்கரனும் ச. முகமது அலியும் எவ்வளவோ முறை பேசியிருக்கிறார், ஒருவருக்கும் அது எட்டவில்லை போலும். இத்தகையதொரு சூழலில் முதுமலை வனப்பகுதி கடந்த ஜனவரி 2009 முதல் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதும் அதையொட்டி அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தரிவித்து போராட்டம் நடத்தியதும் ‘யானைகள் அட்டகாச செய்திகளுக்கு நடுவே வெளியானது. சுற்றுலாவுக்குப் பெயர் போனது இந்தப் பகுதி. புலிகள் சரணாலய அறிவிப்பால் எங்கே தங்களுடைய பிழைப்புக்கு இடைஞ்சல் வந்துவிடுமோ என்றுதான் இந்தத் தொழிலை நம்பியிருக்கும் பெரும்பாலான மக்கள் இதை எதிர்த்தார். இப்போது உச்சநீதி மன்றம் புலிகள் சரணாலயப் பகுதிகள் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது. காட்டுயிர் ஆர்வலர் இந்த இடைக்கால தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு புலிகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முதுமலை ஊட்டியிலிருந்து 67 கிமீ தொலைவிலும் மைசூரிலிருந்து 90 கிமீ தொலைவிலும் இருக்கிறது. முதுமலை தேசியப் பூங்கா 321 சதுர கிமீ பரப்பில்  இருக்கிறது. புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு, செந்நாய், காட்டுப்பன்றி, தேவாங்கு,குரங்கு, மான்களில் புள்ளி மான், அன்டிலோப் உள்ளிட்ட விலங்கினங்களும் நன்னீர் முதலை, மலைப்பாம்பு, நாகம் போன்ற ஊர்வன வகைகளும் இந்நிலத்திற்குரிய பூர்வாங்க பறவையினமான இருவாச்சி உள்ளட்ட 200 வகையான பறவைகளும் அறிய தாவர வகைளும் சிறு உயிரினங்களும் நீர்நிலைகளும் அடங்கிய இயற்கையின் தொகுப்பு முதுமலை.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களின் எல்லைப்பகுதிகளும் ஒன்று சேரும் இடத்தில் இருக்கிறது. முதுமலை வனச்சரணாலயம். ஒருபுறம் கர்நாடகத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்காவும் மற்றொரு புறம் வயநாடு சரணாலயமும் இருக்கின்றன. பந்திப்பூர், வயநாடு வனப்பகுதிகள் புலிகள் சரணாலயங்களாக மாற்றப்பட்டு சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

நிர்வாக வசதிகளுக்காக இவ்வனப்பகுதிகள் பிரிக்கப்பட்டனவே அன்றி இவை மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளின் தொடர்ச்சியானவையே. தமிழக பகுதியான முதுமலை வனப்பகுதியில் புலிகள் வாழ்வதற்கான உயிர்ச்சூழலும் அவற்றின் எண்ணிக்கை ஆரோக்கியமான நிலையில் இருந்தபோதும் அது நீண்ட வருடங்களாக புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவில்லை. காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்களின் தொடர்ந்த முயற்சிகளால் முதுமலை வனப்பகுதி ஜனவரி 2009ல் புலிகள் சரணாலயமாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
பந்திப்பூர், முதுமலை ஒட்டிய பகுதிகளில் காட்டுயிர் ஆராய்ச்சியளராக செயல்பட்டவர் உல்லாஸ் கரந்த். அவர் தன்னுடைய அனுபவங்களை The Way of the Tiger  என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். காட்டுயிர், சூழலியல் மீது ஆர்வம் உள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம். சு. தியடோர் பாஸ்கரன் ‘கானுறை வேங்கை’ என்ற பெயரில் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார்.

புலி உறுமல் கேட்குமா?

புலிகளை வீரத்தின் அடையாளமாகக் கருதி கொண்டாடிய சமூகம் நம்முடையது. இன்று அதே சமூகத்தின் சந்ததிகள்தான் புலிகள் எங்கே இருக்கின்றன? என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் நம் தேசிய விலங்கான புலிகள் எஞ்சியிருப்பது வெறும் 1411 மட்டுமே.

புலி ஒரு காட்டுயிர் மட்டுமல்ல, வளமான காட்டின் அடையாளம். அதாவது நாமும் நமக்குப் பின்னால் வரும் சந்ததிகளும் சிறப்பான வாழ்வை வாழப்போகிறோம் என்பதற்கான குறியீடு. அடர்ந்து வளர்ந்த மரங்களும் புல்லும் புதரும் நிறைந்த காட்டில் அதை உணவாக உண்ணும் முயல், மான், மாடு, காட்டுப் பன்றி, குரங்கு போன்ற உயிரினங்கள் வாழும். இவற்றின் எண்ணிக்கை கூடும்போது புலி, சிறுத்தை, நரி, ஓநாய் உயிரினங்களின் உணவுத் தேவை தீர்ந்து அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. இந்த மூன்றும் சங்கிலித்தொடராக தொடரும்போதுதான் காடு தன் இயல்பைத் தொலைக்காமல் இருக்கிறது. பருவ மழை சரியான பருவத்தில் பொழிந்து ஆறு பெருகி மக்களின் தேவைகளை நிறைவேற்றுகிறது. எல்லாமே ஒன்றொடொன்று தொடர்புடையவை. சென்னையில் இருக்கும் நான், மேற்கு தொடர்ச்சி மலையின் ஏதோ ஒரு சரணாயத்தில் வாழும் புலிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என ஏன் கவலைப்பட வேண்டும் என கேட்டுவிட முடியாது! நம் ஒவ்வொருவரின் கவனத்துக்கும் அக்கறைக்கும் உரியவை புலிகள். காடுகள் வேகமாக அழிக்கப்படுவதாலும் தோலுக்காக வேட்டையாடப்படுவதாலும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அழிவின் விளிம்பில் இருக்கும் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அரசும் தன்னார்வர்லர்களும் முழுமூச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த செயல்பாடுகளால் புலிகளின் எண்ணிக்கையும் சக இரையுண்ணிகள், அவற்றின் இரைகள், தாவர வளம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக வருடந்தோறும் மத்திய வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
கடந்த ஒன்பது வருடங்களாக வனவிலங்குகள் கணக்கெடுப்பில் பங்கேற்று வருகிறார் சென்னையிலிருந்து இயங்கிவரும் நேச்சர் டிரஸ்ட் அமைப்பைச் சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் திருநாரணன்.
“தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள வனங்களில் நடந்த கணக்கெடுப்பில் பங்கேற்று வருகிறேன். இந்த வருடம் ஆனைமலை பகுதியில் கணக்கெடு எடுத்தோம். புலிகள் கணக்கெடுப்பு என்று பெயர் இருந்தாலும் காட்டில் உள்ள அதாவது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட எல்லைக்குள் இருக்கும் மரம், செடி, விலங்குகள், பறவைகள் என அத்தனையையும் கணக்கெடுக்க வேண்டும். இதுதான் செயல்முறை. இதை வைத்துதான் புலிகளின் எண்ணிக்கையும் வாழ்வாதாரமும் கணிக்கப்படும்.

அந்த வகையில் ஆனைமலை சரகம் வளமோடு இருக்கிறது என்பதை நேரிடையாக பார்க்க முடிந்தது.
இவ்வளவு உயிரினங்கள் இருக்கின்றன என்று ஆறே நாட்களில் கணக்கிட்டு சொல்லிவிட முடியாது. புலி, சிறுத்தை போன்றவற்றை நேரிடையாக பார்ப்பதும் அரிதான விஷயம். அதனால் அவற்றின் கால்தடங்கள், கழிவுகள், மரங்களின் மேல் அவை ஏற்படுத்திச் சென்ற உராய்வுகள் இவற்றை வைத்து கணக்கெடுப்பு செய்கிறோம். மான் இனத்தில் பல்வேறு வகைகள் உண்டு. அவற்றின் கழிவு பொருட்களை வைத்துதான் அவை இந்த வகையைச் சேர்ந்தவை என்று குறித்துக்கொள்கிறோம். நீர் நிலைகளில் விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். அங்கு அவை விட்டுச்சென்ற அடையாளங்களையும் சேகரிப்போம். நீர்நிலைகளை வைத்து யானைகளின் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ள முடியும். இதெல்லாம் மறைமுக கணக்கெடுப்பில் வருபவை. பெரும்பாலும் காட்டுயிர் கணக்கெடுப்பில் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது. » » » »

பல காலமாக பின்பற்றிவரும் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கூறமுடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு சொல்லும் வகையில் ஹைதராபாத்தில் உள்ள செல்லுலர் மற்றும் மாலிக்குலர் மையம் (Centre for cellular and Molecular Biology) புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது புலிகள் விட்டுச்சென்ற தடயங்களிலிருந்து அவற்றின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து அவற்றின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதே இந்த முறை. உயிரினம் ஒவ்வொன்றுக்கும் டிஎன்ஏ அமைப்பு வேறுபட்டு இருக்கும். இதை வைத்து துல்லியமாக புலிகளின் எண்ணிக்கை சொல்ல முடியும் என்கிறது இந்த ஆராய்ச்சி நிறுவனம். முதுமலை வனசரணாலயத்தில் இந்த கணக்கெடுப்பு முறை சோதனை செய்து பார்க்கப்பட்டிருக்கிறது. இது ஆராய்ச்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டால் அனைத்து சரணாலயங்களிலும் இந்த முறை செயல்படுத்தப்படும் என்கிறது இந்நிறுவனம்.

« « « காட்டுயிர் வளத்தை மட்டுமல்ல, காட்டை நம்பி, அவற்றை சுற்றி வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறையை கவனிப்பதும் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற வகையில் முக்கியமான பணி. இந்த வருடம் ஆனைமலையில் வசிக்கும் முதுவர் பழங்குடி மக்களை சந்திக்க முடிந்தது. காட்டின் நடுவே உடுவம்பாறை, சங்கரன்குடி, பரமன்குடி போன்ற வசிப்பிடங்களில் அவர்களைப் பார்த்தோம். காடு, வனஉயிரினங்கள் குறித்த அவர்களின் அறிவு வியத்தலுக்குரியது. பழங்குடி இன மக்களைத்தான் வேட்டை தடுப்பு நடவடிக்கைக்காக அரசு பயன்படுத்திவருகிறது. காடு குறித்த அறிவுச்செல்வம் மிக்க இந்த மக்கள் வாழ்வாதாரத்தில் மிகவும் கீழ்நிலையில் இருக்கிறார்கள். இவர்களின் அறிவை பயன்படுத்திக் கொள்ளும் அரசு, அதற்குரிய வேலை உள்ளிட்ட பொருளாதார தேவைகளை செய்துகொடுக்க வேண்டும்” என்ற திருநாரணன்…» » » »

அடர் காடுகளில் மட்டுமே புலிகள் வசிக்கும். கடலும் ஆறு சேரும் முகத்துவாரப் பகுதியில் வசிப்பதால் வங்காளப் புலிகள் தனிச்சிறப்பானவை. அலையாத்தி(மாங்குரோவ்) மரங்கள் நிறைந்த சுந்தரவனக்காடுகளில் வாழும் வங்காளப் புலிகள், இன்னும் 60 வருடங்களில் அழிந்து விடும் என எச்சரித்துள்ளது உலக காட்டுயிர் பாதுகாப்புக்கான நிதியம்.

« « « “ஆனைமலை சரகத்தில் காட்டுவளம் நல்லநிலையில் இருந்தாலும் காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் தலையீடு அதிகமாகவே இருக்கிறது. புதிதாக முளைத்திருக்கும் தேயிலை தோட்டங்களும் அதை ஒட்டி எழுந்துள்ள குடியிருப்புகளும் காட்டுயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடியவை. இப்படி காட்டின் பகுதிகளை அபகரித்துக்கொண்டு, பின் நாளில் புலிகள் வேட்டையாடுகின்றன, யானைகள் அட்டகாசம் செய்கின்றன என்று கூச்சலிடுவதில் எந்த நியாயமும் இல்லை!” என்று முடித்தார்.


நாடு முழுவதும் நடந்த கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு காட்டுயிர் ஆர்வலர்களுக்கு இது ஆறுதலுக்குரிய செய்திதான் என்றாலும் இந்த வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு இன்னும் நிறைவே செய்யவேண்டியிருக்கிறது.