செங்காந்தள் மலரும் மரகதப் புறாவும்

மருதாணிப் பூசிச் சிவந்த கைவிரல்கள் காட்டும் நாட்டிய முத்திரைப்போல அழகுடைய பூ செங்காந்தள்! தமிழ்நாட்டின் மலர். இன்றைய தலைமுறையில் பலர் இந்தப் பூவைப் பார்த்திருக்கமாட்டார்கள்; கேள்விப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கூட ஏரிக்கரைகளில் புதர்மண்டிய இடங்களில் செங்காந்தள் கொடி படர்ந்திருக்கும், அதில் ஆங்காங்கே சிவந்த பூக்கள் பூத்திருக்கும். அதை ரசிக்காமல் யாரும் அதைத் தாண்டிச் சென்றிருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை தாம்பரம், சோழிங்கநல்லூர் போன்ற சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் இந்தச் செடிகளைப் பார்த்திருக்கிறேன். இப்போது எங்கும் கான்கீரிட் மயம். வனங்களுக்குப் போகும்போதுதான் செங்காந்தளை ரசிக்க முடிகிறது.

செங்காந்தள் கிழங்கு மருத்துவ குணமுடையது என்பதால் சில விவசாயிகள், அதைப் பயிர் செய்கிறார்கள். வீட்டித் தோட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மலர்ச்செடிகள் வளர்ப்பதை பலர் பெருமையாக நினைக்கின்றனர். இப்படி இறக்குமதியான பல தோட்டச் செடிகள் களைகளாக வனத்துக்குள் புகுந்து இம்மண்ணுக்கே உரிய செடிவகைகளை, உயிர்ச்சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றன.

kanthal

உயிர்ச்சூழல் ஒரு வலைப்பின்னல் போன்றது. நம் மண்ணுக்குரிய செடிகளை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று கேட்கலாம். இந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் வளரும் இந்தச் செடிகளை நம்பி பூச்சிகள், இந்தப் பூக்களில் தேனெடுக்க வரும் வண்டுகள், சிட்டுகள் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. செடிகள் இல்லாமல் போகும்போது அவற்றின் உணவுச் சங்கிலி தடை படுகிறது. நேரடியாக இது மனிதனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், சூழலியலில் இது எதிர்மறை மாற்றத்தை உண்டாக்கும். செங்காந்தள் போன்ற அழகு நிறைந்த, நம் சூழலுக்கு ஏற்ற நம் மண்ணின் செடிகளை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்க மக்கள் முன்வர வேண்டும்.

மரகதப் புறா

பச்சைப் புறாக்கள் என்று குறிப்பிடப்படும் மரகதப் புறாக்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊர்ப்புறங்களில் காணக் கிடைத்தன. இன்று அடர் வனங்களில் மட்டுமே இவை வாழ்கின்றன. கட்டுக்கடங்காமல் வேட்டையாடப்பட்டதுதான் இவை இல்லாமல் போகக் காரணம்.

நீலகிரி வரையாடு

இதுபோல நீலகிரி வரையாடும் அதிகளவில் வேட்டையாடப்பட்டதாலேயே இன்று அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இமயமலை மலைத்தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மட்டுமே வரையாடுகள் உள்ளன. செங்குத்தான மலைகளே இவற்றின் வசிப்பிடங்கள். நீலகிரி மலைகளில் வசிப்பதால் இந்த வரையாடு, நீலகிரி வரையாடு என சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை இந்திய காட்டுயிர் வாரம் கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் சூழலியல், காட்டுயிர் சார்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல கருத்தரங்கங்கள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாம் இந்த ஆண்டின் காட்டியிர் வார விழாவில் நம் தமிழ்நாட்டின் மலரான செங்காந்தள், மாநில பறவையான மரகதப் புறா, மாநில விலங்கான நீலகிரி வரையாடு போன்றவற்றை நினைவு கூர்வோம். நம் மண்ணுக்கே உரிய சிறப்பான இந்த காட்டுயிர்களை நினைவுக் கொண்டு இந்த ஆண்டின் காட்டுயிர் வாரத்தைக் கொண்டாடுவோம்!

காட்டுயிர் செயற்பாட்டாளர் திருநாரணனின் உதவியுடன் இணையதளம் ஒன்றுக்காக எழுதப்பட்ட பத்தி. மீள் பிரசுரம்.

முகப்புப் படம்: திருநாரணன்

திருநாரணன் தொடர்புக்கு:

KVRK THIRUNARANAN
FOUNDER
THE NATURE TRUST
G-3, KRISH VIEW APPTS.,

PLOT NO 45-A, VALMIKI ST.,
EAST TAMBARAM
CHENNAI-600059.

044 22393959
9444477358
9176893949

 

 

யுனிலிவருக்கு எதிராக பாடகர் டி. எம். கிருஷ்ணா

இந்திய நுகர்வோர் சந்தையை பெருமளவில் கைப்பற்றி வைத்திருக்கும் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம், கொடைக்கானல் மலையில் தான் விட்டுச் சென்ற பாதரச கழிவுகளை 14 ஆண்டுகளாக அகற்றாமல் விட்டு வைத்திருக்கிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடந்த 2001ஆம் ஆண்டு, யுனிலிவரின் தெர்மாமீட்டர் தயாரிப்பு தொழிற்சாலை சுற்றுச்சூழல் விதிகளை மீறி கழிவுகளை கொட்டுகிறது எனக் கூறி மூடியது. திர்வயம் என்ற இடத்தில் 7.5 டன் பாதரசத்துடன் கூடிய உடைந்த தெர்மாமீட்டர்களை கொட்டியது யுனிலிவர். ஆனால் இதுவரை அதை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையிலும் யுனிலிவர் நிறுவனம் ஈடுபடவில்லை. மூளை நரம்புகளை அதுசார்ந்த செயல்பாடுகளையும் பாதிக்கும் பாதரசக் கழிவால் இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் என இங்கு களப்பணி செய்த பல சூழலியல் தொண்டு நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில் ஜட்கா என்ற சூழலியலுக்கான ஊடகம் தயாரித்த ‘கொடைக்கானல் அடங்காது’ என்ற ராப் பாடல் சமூக தளங்களில் வெளியாகி, இந்தப் பிரச்சினையை வெளி உலகத்துக்குக் கொண்டுவந்தது. கொடைக்கானல் பகுதியில் பரவியுள்ள பாதரசக் கழிவுகளை அகற்ற, அதற்குக் காரணமான யுனிலிவர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அந்நிறுவனத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.
இதையொட்டி நித்தியானந்த் ஜெயராமன் தலைமையிலான சூழலியல் செயல்பாட்டாளர்கள் ‘யுனிலிவர் பொருட்களை வாங்க மாட்டோம்’ என்ற முழக்கத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். யுனிலிவர் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பால் போல்மனை கொடைக்கானல் கழிவுகளை அகற்றுங்கள் என்று நேரடியாக சமூக வலைத்தளங்கள் மூலம் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கொடைக்கானல் பாதரசக் கழிவுகளை அகற்றுவதற்கு தரம் குறைந்த முறையை பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. யுனிலிவர் கொடைக்கானலில் பயன்படுத்தவுள்ள தரம் என்பது, பாதரச கையாளும் தரத்தை விட 25 மடங்கு குறைந்தது எனக் கூறப்படுகிறது. ‘உலக பெருவணிக நிறுவனம் இதே கழிவை இங்கிலாந்தில் அகற்ற பயன்படுத்த ஒரு முறையும் இந்தியாவில் அதைவிட தரம் தாழ்ந்த முறையும் பின்பற்றுவது இந்திய மக்களின் நலனில் எள்ளளவும் அது அக்கறை கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது’ என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன். மேலும் அவர்,

தெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணிபுரிந்து பாதிப்புக்குள்ளான டோமினிக்…
தெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணிபுரிந்து பாதிப்புக்குள்ளான டோமினிக்…
“டாமினிக் என்பவர் தெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணியாற்றியவர். பணியிடத்தில் பாதரசம் ஏற்படுத்திய விளைவால் அவருக்கு வலிப்பு நோய் வந்தது. நன்றாகப் பாடக்கூடிய இவரால் தற்போது இயல்பாகப் பேசக்கூட முடியாது. ஆனால் இந்நிறுவனமோ சுற்றுச்சூழல் மட்டும்தான் மாசடைந்ததாகவும் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை. தன் நிறுவனத்தின் விளம்பரங்களுக்கு மட்டும் வருடத்துக்கு 48 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கும் யுனிலிவர் நிறுவனம் கொடைக்கானல் பாதரசக் கழிவுகளை அகற்ற சில லட்சங்களை ஒதுக்கத் தயங்குகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் ஐக்கிய நாடுகள் அவையின் பசுமை விருதைப் பெற்றிருக்கிறது. இந்த விருதுக்கான தகுதியை நிறுவனம் பெற்றுள்ளதாக என்பதை நாங்கள் அந்நிறுவனத்திடம் கேட்கிறோம்” என்கிறார்.

“வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாக செயல்படும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்தத் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. யுனிலிவர் திட்டமிட்டிருப்பதைப் போல தரம் குறைந்த முறையில் அரைகுறையாக தூய்மைப்படுத்தப்பட்டால் கணிசமான அளவில் பாதரசக் கழிவு தொடர்ந்து தேங்கி கொடைக்கானல் ஏரிகளை மாசுபடுத்தும். அதுமட்டுமின்றி, அந்த ஏரிகளையும், வைகை நதியையும் நம்பியிருக்கும் மக்களையும் அது கடுமையாக பாதிக்கும். பாதரச பாதிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மினமாட்டா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதுடன், பாதரசக் கழிவுக்கான அனைத்து ஆதாரங்களையும் அகற்றுவதாகவும் உறுதி பூண்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசோ, மத்திய அரசோ கொடைக்கானல் கழிவுகளை அகற்ற இதுவரை அந்நிறுவனத்தை வலியுறுத்தவில்லை. பல ஆயிரம் பேரை பலிவாங்கிய போபால் விஷ வாயு விபத்து குற்றவாளிகளை தப்பவிட்டதுபோல யுனிலிவருக்கு அரசுகள் சாதகமாகவே இருக்கின்றன” என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.

பெருங்கொன்றை மலர்களின் இளவேனிற் கால அழைப்பிதழ்!

இளவேனிற் காலம் தொடங்கப் போவதை அறிவிக்கும் அழைப்பிதழைத் தருகின்றன இம் மஞ்சள் மலர்கள்! பெருங்கொன்றை (Peltophorum pterocarpum)  மலர்கள் இவை. தெற்காசிய மண்ணின் மரம் இது. நிழல் தரும் மரங்கள் பட்டியலில் முதன்மையான இடம் பிடிக்கும் இம் மலர்களை சாலையோரங்களில் காணலாம்…

DSCN1924

DSCN1921

DSCN1922

ஒரு கூடு, இரண்டு பறவைகள்!

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ காதல் கவிதை(பிப்ரவரி மாதம் ஆயிற்றே)க்கான தலைப்பென்று நினைக்கலாம். இல்லை, இது இரண்டு பறவைகளின் இருப்பிடப் பிரச்னை குறித்து! கடந்த பொங்கலின் போது கிராமத்து வீட்டருகே உள்ள தோட்டத்தில் கண்ட இந்தக் காட்சிகளை படம் பிடித்தோம். ஒரு பட்டுப்போன தென்னை மரத்தில் இருந்த பொந்தில் கூடமைத்து தங்கியிருந்த மைனாவின் வீட்டை ஆக்ரமித்துக் கொண்டது ஒரு கிளி. முதல் அதிகாலையில் பார்த்தபோது சில மைனாக்கள் இருந்த அந்த கூட்டில் சற்றே வளர்ந்திருந்த மைனா குஞ்சு ஒன்றும் இருந்தது. அந்த மைனா பெற்றோர் இல்லாத சமயத்தில், பகல் நேரங்களில் வெளியே வந்து அருகில் இருக்கும் மரக் கிளைகளில் அமர்ந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் அந்தக் கூட்டை ஆக்ரமித்துக் கொண்டது கிளி ஒன்று. கூடு பறிபோனதைப் பார்த்த மைனா குஞ்சு, கிளியிடம் போராடிப் பார்த்தது, கிளி விடுவதாக இல்லை. கிளி முட்டையிடும் காலத்தில் இருந்திருக்கலாம், கூட்டை வெகு நாட்கள் நோட்டம் விட்டு, சமயத்தில் கூட்டைப் பிடித்துக் கொண்டது. மைனா செய்வதறியாது அருகில் இருந்த தென்னை மரக் கிளையில் அமர்ந்து கொண்டிருந்தது. கிளி, மைனா இல்லாத நேரத்தில் கூட்டை விட்டுப் பறந்து அருகில் இருந்த வயலில் காய்ந்த சோளத்தை தின்றுவிட்டு மீண்டும் கூட்டுக்குள் அடங்கியது. கூடு, அருகிலேயே உணவுக்கு வசதி என கிளியின் தேர்வு எனக்கு வியப்பைத் தருகிறது. அடுத்தடுத்த நாட்களில் மைனா குடும்பம் தன் வீட்டைக் கைப்பற்ற முயற்சித்தும் இறுதிவரை கிளி விட்டுத் தருவதாக இல்லை. உண்மையில் கிளிகள்தான் அந்த பட்டுப்போன தென்னையில் முதன்முதலாக குடியேறி இருந்தன. எனவே கிளி ஆக்ரமித்தது என்று சொல்வதைவிட மீண்டும் தன் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது என சொல்லலாம். மைனா குஞ்சும் தனியே வாழும் அளவில் வளர்ந்திருந்தது, எனவே அது ஒரு புது வீட்டை தேடிக் கொண்டிருக்கும்!

DSCN0265

DSCN0436

DSCN0508

DSCN0509

DSCN0439

DSCN0559படங்கள்: சண்முகசுந்தரம், நந்தினி

 

இனிப்பாக பொங்கிய பொங்கல்!

என் சிறு வயது பண்டிகைகாலங்கள் குறித்து மறக்க முடியாத நினைவலைகள் என்று எதுவும் இல்லை. பால்யத்தில் வெவ்வேறு ஊர்களில் வசிக்க நேர்ந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.  ஆனால் ஒரு வார கொண்டாட்டமாக பாட்டியுடன் இருந்த காலத்தில் என் அம்மாவின் ஊரில் கொண்டாடிய பொங்கல் நினைவுகள் எனக்குள் உண்டு. பக்கத்து ஊரில் மாடு விரட்டு போட்டி நடந்ததும் அதைக் காண திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்து மனதில் பயம் ஏற்பட்டதும் நினைவுக்கு வருகிறது. மற்றபடி இயற்கைக்கு நன்றி சொல்லும் திருநாளாகவோ புத்தாண்டாகவோ பொங்கல் என் வாழ்நாளில் இனித்ததில்லை. பொங்கல் மட்டுமல்ல எனக்கு எந்த பண்டிகை கொண்டாட்டத்திலும் ஆர்வம் கிடையாது. ஆனால் என் மகன் பொங்கல் போன்ற இயற்கையோடு தொடர்புபடுத்தப்படும் பண்டிகையை தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். வலுக்கட்டாயமாக கடந்த 2 மூன்று ஆண்டுகள் சென்னையில் விறகடுப்பில் பொங்கலிட்டேன்! (விறகு அடுப்பில் பொங்கல் என்பதற்குத்தான் இந்த ஆச்சரியக்குறி) சூரிய பகவான் என் வாழ்க்கையில் மிகப் பெரிய ஆச்சரியங்களை நிகழ்த்தி விடவில்லைதான். ஆனாலும் எதையாவது கொண்டாட வேண்டுமே என்கிற சுய உந்துதல் காரணமாக பொங்கலை பொங்கிவிட நினைத்தேன்.  இப்படியாக இந்த ஆண்டும் பொங்கலிட நினைத்திருந்த நேரத்தில் என்னை வழக்கு வா வா என்று அழைத்தது. பாழடைந்து கொண்டிருக்கும் வீட்டின் ஒட்டடை அடிக்கவும் கரையான் புற்று எவ்வளவு தூரம் கிளம்பியிருக்கிறது என்று பார்க்கவும் கிளம்பியே ஆக வேண்டும் என்று தீர்மானித்தேன். மாமனாரிடம் ராசியாகிவிட்டபடியால் மாப்பிள்ளையும் வருகிறேன் என்றார், கூடவே மகனும்.

இறுதி நேர பயண முடிவால் தனியார் பேருந்தில் இருக்கை கிடைக்கவில்லை. நான் எப்போதும் அரசு பேருந்து பயணம் செய்பவள். போனோமா, வந்தோமா கதைதான். முதன் முறையாக அரசு பேருந்தில் செல்ல முன்பதிவு செய்து 11 மணிக்கு வரவேண்டிய பேருந்துக்காக 12.30 வரை காத்திருந்து, ஏகப்பட்ட கடுங்கோபத்துக்கு ஆளாகி என் மகனின் வால்த்தனங்களை இனியும் சகிக்க முடியாது என்கிற நிலையில் விசாரித்துப்பார்த்தால் அப்படியோரு பேருந்தே விடவில்லையாம். நிலையத்தில் இருந்த ஒரு அதிகாரி ஈயோடிக்கொண்டிருந்த ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டார். நினைத்துக் கொண்டேன், எப்போதுமே என் ஃபார்முலாதான் சரி… வந்தோமா..போனோமா…

குளிர் வாட்டியெடுக்க காலை 9 மணிக்குத்தான் ஊர் போய் சேர்ந்தோம். வழக்கம்போல் வீடு மேற்சொன்ன ஒட்டடை, கரையான் புற்று வர்ணனைகளோடுதான் இருந்தது. வசிக்கும் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள ஏன் இந்த ஆண்களுக்கு (இந்திய ஆண்களுக்கு) எப்போதும் ஒரு பெண் தேவைப்படுகிறாள்? கேட்டால் தினமும் சுத்தம் செய்கிறேன் என சத்தியம் செய்கிறார் என் அப்பா.

என் அப்பாவுக்கு கேஸ் சிலிண்டரில் சமைக்க பயம். அம்மா இறந்த பிறகு கேஸ் சிலிண்டர்களை யாருக்காவது கொடுத்து விடுகிறார். எல்லாமே விறகு அடுப்பில்தான். நாங்கள் சென்ற பிறகு சிலிண்டர் வந்தது, பற்ற வைத்தால் கேஸும் வந்தது. அலறியடித்து மூடி வைத்துவிட்டோம். பனிக்கு குளிர்காய்ந்தபடியே சமைத்து உண்டோம். எனக்கு புகை சேர்ந்த உணவுகளில் அதிக விருப்பம் உண்டு. குறிப்பாக சுட்ட மாமிசம் மகிழ்ந்து உண்ணுவேன். அது இருக்கட்டும்  விறகு அடுப்பில் சமைப்பதால் சூழல் பாதிக்கிறது  என்கிறார்கள். வேறு வழியே இல்லாமல் அவசியதுக்காக அன்றாடம் பிழைக்க இதை பயன்படுத்துவோரே இங்கு அதிகம். அவசியமே இல்லாமல் அல்லது பகட்டை ஆடம்பரத்தைக் காட்ட வீட்டுக்கு இரண்டு கார், இரண்டு பைக் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஏற்படும் சூழலியல் மாசு ஏன் கணக்கில் கொள்ளப் படுவதில்லை. மாசுவிலும் இப்படிப்பட்ட நவீன மாசுவுக்குத்தான் மதிப்பா?

என் ஊர்க்கதைக்கு வருகிறேன்…மாமனார், மருமகன், பேரன் எல்லோரும் இம்முறை இன்பமாக இருந்தார்கள். முதன்முறையாக ஊரில் யாரும் எங்களை சாதிப் பேர் சொல்லி செல்லமாகவோ, கோபமாகவோ வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கலாமா என்று யோசிக்கும் அளவுக்கு திட்டவில்லை! பாட்டாளிகளின் மண்ணில் இவ்வளவு விரைவில் ஓர் சமூகப் புரட்சி சாத்தியமென்று சத்யமாக நான் நேரம் விரயம் செய்து கனவுகூட காணவில்லை!