“பெண் அரசியல்வாதிகளும் உள்வாங்கிக் கொண்டிருப்பது ஆணாதிக்க சிந்தனைகளைத்தான்”: பேரா. சரஸ்வதி

“பெரியோர்களே! தாய்மார்களே!”

வாக்குக் கேட்கும் அனைத்து கட்சிகளும் பேதம் பார்க்காமல் உச்சரிக்கும் சொற்கள் இவை. பெரியோர் என்றால் அதில் ஆண், பெண் எல்லோருமே வந்துவிடுவார்கள். அடுத்து வருகிற ‘தாய்மார்களே’ என்பது சிறப்பான சொல். தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் வாக்கு வங்கியை நேரடியாக ஓட்டுக் கேட்க இறைஞ்சும் சொல். பெண்கள், ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கிறார்கள் என்பது உண்மையா? மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கக் கூடிய பெண்கள் தேர்தலில் ஆண்களைவிட அதிக சதவீதத்தில் வாக்களிக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தேர்தல் முடிவின் போதும் நிரூபணமாகிறது.  தமிழக அரசியல் வரலாற்றில் பெண்களின் வாக்குகளைக் கவர்ந்த அரசியல்வாதியாக எம். ஜி. ராமச்சந்திரன் இருந்தார் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவருக்குப் பிறகு அவர் தலைமை தாங்கிய அஇஅதிமுகவுக்கு ஜெயலலிதா தலைமை தாங்கிய போது பெண்களை தக்க வைத்துக் கொண்டார். எம். ஜி. ஆரின் அரசியல் வெற்றியை முன்மாதிரியாகக் கொண்டு பெண்களைக் கவரும் திட்டங்களை முன்வைத்து களம் காணுகின்றன. குறிப்பாக, திமுக, அதிமுக அறிவிக்கும் இலவச அறிவிப்புகளைச் சொல்லலாம். கருணாநிதி தன்னுடைய ஆட்சியில் கேஸ் அடுப்பையும் தொலைக்காட்சிப் பெட்டியையும் தந்தார். அடுத்து வந்த அதிமுக மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகிய இலவசங்களை வழங்கினார். பெரும்பாலான பெண்களின் அன்றாட நடவடிக்கைகளில் தொடர்புடைய வீட்டு உபயோகப் பொருட்களை வழங்குவதன் மூலம் பெண் வாக்கு வங்கியை தனதாக்கிக் கொள்ள அனைத்து கட்சிகளும் போட்டி போடுகின்றன.

பெண்களை வெற்றிக்குரிய வாக்குவங்கியாகப் பார்க்கும் அரசியல் கட்சிகளின் தேர்தல் உத்திகள் எல்லாம் சரிதான். ஆனால், இதே பெண்கள், அரசியலில் பங்கெடுக்க வரும்போது கட்சிகள் அவர்களை எப்படி வரவேற்கின்றன? அவர்களை எப்படி பிரதிநிதித்துவப் படுத்துகின்றன? அரசியலில் பெண்களுக்கான இடம் என்ன?

சுதந்திரத்துக்குப் பிறகான தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவைத் தவிர மிகப் பெரும் அரசியல் சக்தியாக வேறு பெண் உருவாகவில்லை. சக்தி வாய்ந்த ஜெயலலிதாவின் தலைமைகூட அரசியலில் பெண்களின் பங்களிப்பை கூட்ட முடியவில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் 2748 ஆண் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? அதில் ஒரு சிறு துளி 134 பேர் மட்டுமே!  இந்த 134 பேரில்  அதிமுக சார்பில் 15 பேரும் திமுக 1, தேமுதிக 2, சிபிஎம் 1, காங்கிரஸ் 1 என மொத்தம் 17 பெண்கள் வெற்றி பெற்றார்கள்.

சமூக நீதி கொள்கைகளை பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லிக் கொள்ளும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் ஏன் சொல்லிக் கொள்ளும்படி இல்லை? பேராசிரியர் சரஸ்வதி ,

“பெண்களைப் பத்தி பொது புத்தி நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு குடும்பத்துக்கு தொண்டு செய்ய வேண்டும் என்கிற பொதுபுத்தி இருக்கிறதில்லை? அதைப் பிரதிபலிக்கிற ஆணாதிக்க அரசியல்வாதிகளும் பெண்களுக்கு உரிய நீதியை உரிமையைப் பத்தி கவலைப் படாதவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் வாக்கு வங்கிகள் தானே தவிர, அரசியல் அதிகாரத்தில் பங்கு செலுத்தும் உரிமை உள்ளவர்கள் என்கிற நினைவே கிடையாது  இந்த அரசியல்வாதிகளுக்கு. நிலவும் ஆணாதிக்க சமூக சூழல், ஆணாதிக்க அரசியல் சூழலுக்கும் காரணமாக உள்ளது. இந்த ஆணாதிக்க சமூக கலாச்சார சூழலை மாற்றியமைக்கும்போதுதான் ஆணாதிக்க அரசியல் சூழலையும் மாற்ற முடியும். ஆனால் அதற்கான முயற்சியை யாரும் எடுப்பது கிடையாது. ஏனென்றால், ஆணாதிக்கம் பெண்ணடிமை என்பதை ஏதோ போற்றிப் பாதுகாக்க வேண்டிய விஷயமாக, அதுதான் தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்று போற்றி புகழ்ந்துகொண்டு இருப்பதால் சமூகத்தின் பொது புத்தி மாறவில்லை, பொதுபுத்தியை பிரதிபலிக்கிற அரசியல்வாதிகளின் எண்ணங்களும் மாறவில்லை. எல்லாத் தலைமைகளும் ஆணாதிக்க தலைமைகள்தான். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். அது ஜெயலலிதாவாக இருக்கலாம்; ஜெயலலிதாவோ, சோனியோ காந்தியோ பெண்ணுரிமை சிந்தனைகளோட, பெண்களின் சமவாய்ப்புக்காக செயலாற்றுகிறவர்களாக இல்லை. ஏனென்றால் அவர்களும் உள்வாங்கிக் கொண்டிருப்பது ஆணாதிக்க சிந்தனைகளைத்தான்” என்கிறார்.

தன்னுடைய சொந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விரும்பி, அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்ட ஜோதிமணிக்கு அவருடைய கட்சித் தலைமை ஆணித்தரமான மறுப்பை தெரிவித்தது. கூட்டணியில் இருக்கும் முறைகேடு வழக்குகளில் சிக்குண்ட நபருக்கு சாதகமாக தன் கட்சி தலைமை செயல்படுவதாக பேசினார் ஜோதிமணி.  பெண் என்பதால்தான் இந்த வாய்ப்பு ஜோதிமணிக்கு மறுக்கப்பட்டதா?

“இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸின் மேல் மட்டும் வைக்கவில்லை. இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 41 இடங்களில் எத்தனை இளைஞர்கள்- பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது? இளைஞர்கள் – பெண்கள் பங்களிப்பை ஒழித்து கட்டும் முயற்சியைத்தான் பார்க்க முடிகிறது. 41 பேரில் மூவர் மட்டும் பெண்கள். பெண்களை ஊக்குவிக்காத நிலைமைதான் அரசியல் கட்சிகளிடத்தில் இருக்கிறது. ஆண் அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்று வெளிப்படையாகவே சொல்கிறேனே… பெண்கள் இந்த அரசியல்வாதிகளின் வீட்டு வாசலில் போய் நின்று எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று கெஞ்சிக் கேட்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். இப்படியான சிந்தனையுள்ள அரசியல்வாதிகளால் சுயமாக சிந்திக்கக் கூடிய, மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க பெண்கள் ஏற்றுக்கொள்ள முடியுவதில்லை.” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறார் ஜோதிமணி.

பெரும்பாலான அரசியல்வாதிகள் பெண்களை அடிமைகளாகப் பார்ப்பதாகச் சொல்லும் ஜோதிமணி, சில அரசியல்வாதிகள் பெண்களைப் பார்க்கிற பார்வை, அவர்களுடைய பேச்சு ஆகியவை ஆணாதிக்க மனோபாவத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது என்கிறார். சில தலைவர் ஆணாதிக்க சிந்தனை படிந்த சமூகத்தின் நீட்சியாக இருக்கிறார்கள் என்கிறார்.

தேர்தல் அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் விதமாக 33 சதவீத இடஒதுக்கீடு கட்டாயமாக்கப்படும் என்று அரசியல் அறிஞர்களும் எல்லா அரசியல் கட்சிகளும் பேசுகின்றன. ஆனால் உண்மையில் 33 சதவீத இடஒதுக்கீட்டை ஒரு வெற்று வாக்குறுதியாகத்தான் எல்லா கட்சிகளுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதைப் பேசினால் தேர்தல் நேரத்தில் பெண்களின் வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்ற நோக்கில் பேசுகிறார்கள். நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவருவோம் என்று சொன்ன பாஜக மகளிர் மசோதாவை நிறைவேற்றும் பேச்சையே விட்டுவிட்டது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒரு அவையில் நிறைவேற்றப்பட்டு இன்னொரு அவையில் முடங்கிப்போனது மகளிர் இடஒதுக்கீடு மசோதா.

தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண் தான் அதிகாரம் செலுத்துகிறவராக இருக்கிறார் என்கிற விமர்சனங்கள் வந்தாலும், வீட்டுக்குள் முடங்கிய பெண்களை கட்டாயத்தின் பேரிலாவது பொது வெளிக்கு இழுத்து வந்ததை பெரும் சாதனையாக சொல்லத்தான் வேண்டும். அதேபோல சமீபத்தில் இந்த இடஒதுக்கீடு விகிதத்தை 50 சதவீதத்துக்கு உயர்த்தி சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் இந்த இடஒதுக்கீட்டை வரவேற்றுள்ளன.

“இயற்கை நீதி என்று இருக்கிறது சமூகத்தில் சரிபாதியாய் பெண்கள் இருக்கிறார்கள். அந்த இயற்கை நீதிதான் எல்லா தளங்களிலும் பிரதிபலிக்க வேண்டும்.  பஞ்சாயத்துகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பஞ்சாயத்துகள் முடிவை எடுக்கிற அமைப்புகள் அல்ல, அவை கொடுக்கப்பட்ட வேலைத் திட்டத்தை  செயல்படுத்துகிற அமைப்புகள். கொள்கை ரீதியிலான முடிவுகளை இந்த அமைப்புகளால் எடுக்க முடியாது. சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு கேட்பது, அவை கொள்கை முடிவுகள் எடுக்கிற இடங்களாக இருப்பதால்தான்” என்கிற பேரா. சரஸ்வதி, இடஒதுக்கீடு என்பது சர்வரோக நிவாரணி அல்ல என்கிறார். இடஒதுக்கீடு கொடுத்த உடனேயே சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்கிற எல்லா வன்முறைகளும் மனித உரிமை மறுப்புகளும் போய்விடும் என்று சொல்லவில்லை. அரசியல் ரீதியாக வலிமைப் படுத்துகிற முயற்சி. பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு தீர்வு காண்கிற வழியாகப் பார்க்கிறார் பேராசிரியர்.

இடஒதுக்கீட்டில் பதவிக்கு வந்த பெண்களின் முடிவுகளின் ஆதிக்கம் செலுத்துகிறவர்களாக அவர்கள் வீட்டு ஆண்கள் இருக்கிறார்கள் என்கிற கருத்தையும் கடுமையாக விமர்சிக்கிறார் பேரா. சரஸ்வதி.  ஆண் அரசியல்வாதிகளாக இருக்கிற இடங்களில் அவருடைய குடும்பம் தாக்கம் செலுத்தவதில்லையா? என்று கேள்வி எழுப்புகிற அவர், சில இடங்களில் பெண்கள் பஞ்சாயத்து தலைவர்களாகவும் மற்ற பதவிகளிலும் அமரும்போது ஆண்களின் சிந்தனைகள் தாக்கம் செலுத்தலாம். அதற்காக எல்ல இடங்களிலும் அப்படித்தான் நடக்கும் என்பது யூகிப்பது அறிவியலற்ற தன்மை என்கிறார்.

“பெண்கள் பதவிக்கு வந்தாலும் அவர்கள் ஆண்களாகத்தான் இருப்பார்கள் என்பது சொத்தை வாதம்!இதையேதான் பட்டியல் சாதியினருக்கு இடஒதுக்கீடு கொடுத்தபோது அவர்கள் ஆண்டைகளின் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்றார்கள். ஆனால் இப்போது, அவர்கள் வலிமை பெற்றவர்களாக மாறவில்லையா?” என்பது பேர. சரஸ்வதியின் வாதம்.

இந்த வாதத்துக்கு வலிமை சேர்ப்பதுபோல, பஞ்சாயத்து அமைப்புகளில் கிடைத்த இடஒதுக்கீடே, அரசியல் பின்புலம் இல்லாத தன்னை அரசியல்வாதியாக்கியிருக்கிறது என்கிறார் ஜோதிமணி. அதுபோல பெரும்பாலான அரசியல்வாதிகளைப் போல அல்லாமல்  ராஜுவ்காந்தி, ராகுல் காந்தி போன்ற ஒருசிலர் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு ஊக்கம் கொடுக்கிறவர்களும் இருக்கிறார்கள் என்கிறார்.

யூத் காங்கிரஸ் தலைவராக ராகுல் இருந்தபோது தன்னைப் போன்ற பெண்கள் இளைஞர்களின் குரல்களுக்கு மதிப்பு கொடுத்தார். இவர்களால் முடியாது என்று ஒதுக்கப்பட்ட பணிகளைக் கொடுத்தார் என்கிற ஜோதிமணி முந்தைய தலைமுறை அரசியல்வாதிகளுக்கு இன்றைய அரசியல்வாதிகளுக்கு தலைமுறை இடைவெளி இருப்பதாகச் சொல்கிறார்.

பெண்களின் பிரதிநிதித்துவத்தை எப்படி அதிகரிப்பது என்பதற்கு ஜோதிமணி, “பஞ்சாயத்துகளில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட இந்த 15 ஆண்டுகளில் ஏராளமான பெண் நிர்வாகிகள் எல்லா அரசியல் கட்சிகளிலும் தோன்றிவிட்டார்கள். தகுதியான, திறமையான பெண்கள் இல்லையென்று இனி சொல்ல முடியாது” என்கிறார்.

பேராசிரியர் சரஸ்வதியோ, “பெண்களுக்கு சரியான பயிற்சி கொடுத்து, உரிய தெளிவைக் கொடுத்து பதவிக்கு அனுப்புகிற பொறுப்பு அரசியல் கட்சிகளுடையது. எந்தக் கட்சியுமே போராட்டங்களுக்கு முன்னால் நிற்க மக்களாக மட்டுமே பெண்களைப் பார்க்கின்றன.  எந்த கட்சி அரசியல் நுணுக்கத்தையும் ஆளுகைத் திறனையும் பெறுவதற்கான பயிற்சி கொடுக்கிறது? எல்லா கட்சிகளின் தலைமையிலும் ஆண்கள்தானே இருக்கிறார்கள். பெண்களை வெளியைக் கொடுக்காத, போராடி போராடி பெற வேண்டிய கட்டாயத்தில் பெண்களும் பெண்கள் அமைப்புகளும் இருக்கிறார்கள்” என்கிற வழிமுறைச் சொல்கிறார்.

ஜோதிமணி இறுதிக் கருத்தாக இதைச் சொன்னார், “அரசியலுக்கு வரும் பெண்களை ஆண் அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்வதுதான் சிக்கலே தவிர, மக்கள் எப்போது வரவேற்று கொண்டாடுகிறவர்களாக இருக்கிறார்கள். இதற்கு உதாரணங்களாக, சோனியா, மம்தா, ஷீலா, மாயாவதி, ஜெயலலிதா போன்றவர்களைச் சொல்லலாம். இதில் குறிப்பிட்டுச் சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது  இவர்களில் சிலர் மேல் ஊழல், சர்வாதிகார தன்மை என்கிற குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஆனால் அதை எல்லாம் மறந்து மக்கள் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்” என்றவர்,

“பயணத்தில் தடையாக இருக்கிற எல்லாவற்றையும் எதிர்கொண்டு போராடித்தான் ஆக வேண்டும். எதிர்த்து நிற்கத்தான் வேண்டும்; ஆண் அரசியல்வாதிகளின் அடையாள அழிப்பு முயற்சிகளுக்கு பயந்து பின்வாங்காமல் இருப்பதும் நம்பிக்கைகளை பிரதிபலித்துக்கொண்டே இருப்பதும் முக்கியம்!” என்கிறார்.

அந்திமழை மே 2016 இதழில் வெளியான கட்டுரை.

பெண்ணியவாதிகள், பகத்சிங், கபீர் கலா மஞ்சில்…

இதுநாள்வரையில் எனக்குள் இருந்த பெண்கள் பற்றிய மிகை மதிப்பீடுகளை சமீப காலமாக உடைத்தெறிந்து வருகிறேன்.  இரும்பு பெண்களாகவும் பெண்ணியவாதிகளாகவும் அடைமொழிகளுக்குள் அடங்கிக் கொண்டிருந்தவர்களின் உண்மையான முகம் முதலாளித்துவத்தையும் சர்வாதிகாரத்தையும் ஒன்றாக கலந்தத் தன்மை  உடையது. இவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை… சீமாட்டிகளாகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பின்னணி கொண்டவர்களாகவும் இருப்பது.  சிந்தனையும் செயல்பாடும் அவரவர் வளர்ந்த வர்க்க பின்னணியுடன் பிணைக்கப்பட்டுள்ளது.  நிலப்புரத்துவ பின்னணியில் வளர்ந்த பெண்ணியவாதி, ஆணுக்கு நிகரான ஊதியத்தை பெண்ணுக்கும் நிர்ணயிப்பார் என எதிர்பார்க்க முடியாது(சொந்த அனுபவம்!). இப்போதெல்லாம் பெண்ணியவாதிகள் என்றாலே கையில் மதுக்கோப்பையும் சிகரெட்டும் ஏந்திய பெண்களே நினைவுக்கு வருகிறார்கள். இது பொதுபுத்தி அல்ல, மேட்டிக்குடி சிந்தனையாளர்களின்  பெண்ணியவாதிகள் பற்றிய கட்டமைப்பு இத்தகையதுதான். தீர்மானிப்பதற்குரிய அதிகாரம் தனக்கிருந்தும் சமத்துவத்தை விரும்பாத இத்தகையவர்கள் போற்றப்படுவதை ஆண்மைய சமூகம் விரும்புகிறது, அவர்கள் வரலாற்றில் போற்றப்படுகிறார்கள். இந்திரா காந்தி, மார்க்கெரட் தாச்சர், தெரஸா வகையறா முதல் ஜெயலலிதா போன்ற பெண்களை சில உதாரணங்களாகக் கொள்ளலாம். இவர்கள் மட்டுமல்ல அதிகாரத்தில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான்.

……………………………………………………………………………………….

பகத்சிங் ஆய்வாளர் Chaman Lal  பகத் சிங் உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவின் லெனினாக வந்திருப்பார் என்கிறார். லெனின், மாவோ, பிடல், சே குவேரா போல பகத் சிங்கும் மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் என்கிறார் லால். புதிய ஜனநாயகம் மே இதழில் இவருடைய நேர்காணல் இடம்பெற்றிருக்கிறது. படிக்க வேண்டிய ஒன்று. வினவு தளத்தில் புதிய ஜனநாயகம் இதழை டவுன்லோடு செய்து படிக்கலாம்.. http://www.vinavu.com/…/05/puthiya-jananayagam-may-20151.pdf

பேராசிரியர் சமன் லாலில் வலைத்தளத்தில் பகத் சிங்கிற்கு ஆதரவாக ஜின்னாவின் பேச்சு குறித்த கட்டுரை இன்று வாசித்ததில் முக்கியமான ஒன்று. சமன் லால் குறித்த தேடலில் இணையத்தில் கிடைத்த வலைத்தளம் கபீர் கலா மஞ்சில் . sheetal மகாராஷ்டிராத்தில் செயல்படும் மக்கள் கலைக் குழு இது. இந்த கலைக் குழுவைச் சேர்ந்த பல கவிஞர்கள், இசைக் கலைஞர்கள்  அரசின் தீவிரவாத ஒழிப்பு படையினரால் அரசியல் குற்றவாளிகளாக சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் மராத்தியில் பாடி சில பாடல் https://soundcloud.com/kractivist/devhar-bajula-sarle-poetகளின் மொழிபெயர்ப்பைப் படித்தேன். அந்த வரிகளில் சாதீய, சமூக விமர்சனங்கள் தவிர வேறொன்றும் இல்லை. கர சேவகர்களின் கை ஓங்கியிருக்கும் மகாராஷ்டிரா போன்ற மாநிலத்தில் சமூக விமர்சனங்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். அதனால்தான் மக்கள் கலைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்கூட நக்ஸலைட்டுகளாகத் தெரிகிறார்கள்.

இந்தக் குழுவைச் சேர்ந்த ஷீத்தல் தலித் படுகொலைகள், பெண்சிசுக் கொலை, சாதியம், விவசாயிகள் தற்கொலை குறித்தும் புலே, ஷானு, அம்பேத்கர் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறார். இதற்காக இவர் கைதும் செய்யப்பட்டார். இவருக்கு தற்போது கிடைத்திருப்பது தலைமறைவு வாழ்க்கை!

மேற்சொன்ன அதே கருப் பொருட்களில் போலியாக சில பெண்கள் பேசியும் எழுதியும் வருகிறார்கள். அவர்களுக்கு ஆகச் சிறந்த அங்கீகாரம் கிடைக்கிறது எனில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சமூகம் கண்டுகொள்ளட்டும்!

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: அஇஅதிமுகவின் அதிகாரப் பூர்வ நாளேடு எது? அ.நமது எம்ஜியார் ஆ.தினமணி ஆப்ஷன்கள் ஒரு டஜனுக்கு மேல் தேரும்…தலைப்பின் நீளம் கருதி மற்றவை உள்ளே…

சொத்து வழக்கில் அல்லது சொத்து குவிப்பு வழக்கில் அல்லது ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் முதல்வரும் தமிழகத்தின் அடுத்த முதல்வருமான ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். மோடி, வைகோ, தமிழிசை, ஜி.கே.வாசன் இதர இந்திய அரசியல் தலைவர்கள் வழியில் நானும் வாழ்த்துக்களை சொல்லி வைக்கிறேன். வாழ்த்துக்கள்! சின்மயி போல பாடத் தெரிந்தால் நானும் ஏதாவது ஒரு பெருமாள் கோயிலில் சுப்ரபாதம் பாடி அசத்தியிருப்பேன். கழுதைக் குரல் எனக்கு!

டெல்லியின் அரசியல் தரகு வேலைப் பார்க்கும் ஊடகங்கள் பற்றி தெரிய வந்திருக்கிறது. தமிழகத்தில் அந்தக் குறையை போக்கும்விதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தினமணி. குறிப்பாக அதிமுக அல்லது அம்மாவின் அடுத்த ‘மூவ்’ எப்படி இருக்கும் என்பதை தினமணியை கூர்ந்து நோக்கும் எவராலும் தெரிந்துகொள்ள முடியும். நமது எம்ஜிஆரைத் தாண்டி அம்மாவின் செயல்திட்டங்களை மக்கள் மத்தியில் சேர்க்கும் பணியினை செம்மையாக செய்துவருகிறது தினமணி. நமது எம்ஜிஆரைவிட கணிசமான வாசகர்களை வைத்திருக்கும் தினமணி, ’நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளோடு’ அதைச் செய்து வருகிறது. அந்த வகையில் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீடு இப்படித்தான் முடியும் என்பது நான் எதிர்பார்த்ததுதான். அதனால் நீதிபதி குமாரசாமி 3 நிமிடங்களில் தீர்ப்பு சொன்னதைக் கேட்டு எனக்கு ‘இதய அடைப்பு’ வரவில்லை.

தினமணியின் இணையத்தில் தீர்ர்பு வருவதற்கு முன்பே இரட்டை இலையை காட்டி வெற்றிச் சிரிப்பில் திளைத்த ஜெயலலிதாவை பார்த்தபோது என் முன்முடிவுகள் சரியென முடிவுக்கு வந்தேன்.

jaya dina

பொதுவாகவே தமிழக (பார்ப்பன) ஊடகங்கள் ஜெயலலிதாவின் அரசி பிம்பத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருப்பவைதான்.  ஆனால் அவையெல்லாம் ஜெயலலிதாவுக்கு விசுவாசத்தைக் காட்டும் பணியாட்கள்போல. தள்ளி நின்று கும்பிடு போடுவார்கள். தினமணிதான் ஜெயலலிதாவின் ராஜகுரு! அது சொல்வதைத்தான் அவர் கேட்பார்! பாருங்கள் ஜெயலலிதாவின் விடுவித்தலுக்கு மோடியே எப்படி சல்யூட் அடிக்கிறார் என்று…

jaya modi

தினமணியின்படி அம்மாவின் அடுத்த ‘மூவ்’ எப்படி இருக்கும். சில துளிகள்….

  • அடுத்த ஆண்டுதான் தேர்தல் வரும். தற்போதைய சட்டப்பேரவை விரைவில் களைக்கப்படும் என்று அரசியல் நோக்கர்கள் அநாவசியமாக எதிர்பார்க்கத் தேவையில்லை.
  • ஜி.கே.வாசன் கட்சி தொடங்கியதில் இருந்தே, அவர் கட்சி யாரோடு கூட்டணி வைக்க வேண்டும் என்பதை தினமணி தீர்மானித்துவிட்டது.  அதன்படி வாசன், அதிமுகவின் கூட்டணியில் முதலில் போய் சேர்வார்.
  • இதைச் சொல்ல வேண்டும் என்பதில்லை, பாஜக – அதிமுக கூட்டணி உறுதி. தினமணி நடுநிலையோடு பேச்சுவார்த்தை நடத்தி பாஜகவுக்கு கணிசமான தொகுதிகளைப் பெற்றுத் தரும்.

இப்போது தலைப்பில் கேட்டிருக்கும் கேள்விக்கு பதிலளிப்பது எளிதாக இருக்கும் என்று நம்புகிறேன். பதில் தெரிந்துவிட்டதால் மற்ற ஆப்ஷன்களை பற்றி ஆராய வேண்டிய தேவை இதனால் தவிர்க்கப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு படிக்கவும் இங்கே…

 

 

 

 

ஊழல் அரசுடன் ஊடகங்களின் கூட்டு; 2015திலும் ஏமாறுவோம் மக்களே!

ஜெயலலிதா அரசின் ஊழல் புகார்களை திரட்டி(இவர்களாக கண்டுபிடித்து அல்ல) அவ்வவ்போது அறிக்கையாக வெளியிட்டு ‘ஊழலுக்கு எதிரான’ இமேஜை கட்டியமைத்துக் கொண்டிருக்கிறது பாமக. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாள் பாமகவினர் தமிழக ஆளுநரை சந்தித்து ஊழல் பட்டியலை அளிப்பது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்க முடியாது. இடைத்தேர்தலில் நிற்காவிட்டாலும் ஆளுநரிடம் அளித்த பட்டியலை தங்கள் கூட்டணியில் உள்ள (இன்னமும் கூட்டணியில்தான் இருக்கிறார்களாம்) பாஜகவினருக்கு கொடுத்திருக்கலாம். அல்லது இடைத்தேர்தல் நேரத்தின்போதாவது அறிக்கையாக வெளியிட்டிருக்கலாம்.

மக்களவையில் அன்புமணி வெற்றி பாமகவுக்கு புது தெம்பைக் கொடுத்திருக்கிறது. அதற்குப் பிறகான பாமகவின் நகர்வுகள் ஒவ்வொன்றும் திட்டமிடப்படுகின்றன. ஆம் ஆத்மியின் டெல்லி வெற்றி மேலும் அவர்களுக்கு உற்சாகமூட்டியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டுகள் உள்ள நிலையில்,  சேலம் மாநாட்டில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கும் அறிவிப்புக்குக் காரணம் டெல்லியின் உற்சாகமே.  அறிவித்த கையோடு ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருக்கிறது பாமக.

ஜெயலலிதா அரசின் ஊழல் வெளிவந்தது பாமகவால் அல்ல, ஆனால் அதை தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்கிறது பாமக. ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகளாக பாமக வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு வாய்ப்பையும் மக்கள் பல முறை அளித்துவிட்டார்கள். இவர்களால் என்ன மாற்றத்தை மக்கள் அடைந்தார்கள் என்பதற்கும் வழமையாக மற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என்ன செய்தார்களோ அதைத்தான் செய்தார்கள் என்பதே பதில்.

‘ஊழலுக்கு எதிரானவர்கள்’, திராவிட கட்சிகளுக்கு மாற்று என்பதெல்லாம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மாயையான வார்த்தைகள்தான். பாமகவின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் மறந்துவிடமாட்டார்கள். முக்கியமாக ஒரு சாதிக் கட்சியாக உள்ள பாமகவுக்கு எப்படி தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை அரசியல் அதிகாரத்துக்கு திட்டமிடும் கட்சியின் தலைமை சிந்திப்பதாகத் தெரியவில்லை. தலித்துகள் மீது நேரடியான வன்மத்துடன் அறிக்கை வெளியிட்ட பாமக, இன்று வாக்குக்கு கையேந்தி ‘ஊழலுக்கு எதிரானவன்’ என்ற நல்லவனை முன்னிறுத்துகிறது. ஊழல் பெரியதா, உயிர் பெரியதா என்கிற நிலையில் காலம்காலமாக ஒடுக்கப்பட்ட சாமானியனுக்கு உயிரோடு இருப்பதே பெரியது!

மூன்றே ஆண்டுகளில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கிறது, நம்மால் முடியவில்லையே என்கிற ஆதங்கம் மக்களை சாதிய ரீதியாக துண்டாட நினைக்கும் ஒரு சாதிக் கட்சிக்கு வரக்கூடாது. இதை ஆதங்கம் என்று சொல்வதைவிட அரசியல் அதிகாரத்திற்கான ஆசை என்று கூறலாம். இந்த ஆசை காரணமாக பாமக தன் வலதுசாரி ஊடகங்களின் ஆதரவை இழந்துவருவதை இனி உணரக்கூடும். வலதுசாரி ஊடகங்களின் ஏகபோக முதன்மையாளரான ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த செய்தியும் வெளியிடப்படக்கூடாது என்று தங்களுக்குள் எழுதப்படாத விதியுடன் இவை செயல்படுகின்றன. சாலை சரியில்லை என்பது தொடர்பாக ஏதோ வழமையான மனுவை பாமக அளித்தது போன்றே தமிழக அரசுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணை மனு குறித்த செய்தியும் இரண்டு வரிகளில் வெளியாகியுள்ளது.  அதிலும் தினமணி தமிழக அரசின் ஊழல்கள் என்பதற்கு பதிலாக, ‘தமிழக அரசு மீதான  புகார்களை’ என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறது. தினத்தந்தி மட்டும் பாமகவின் முழு அறிக்கையில், எடிட் செய்யப்பட்ட பகுதியை வெளியிட்டிருக்கிறது. இணைய ஊடகங்களில்கூட முழு அறிக்கையும் வெளியாகவில்லை. ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த இந்திய கருப்பு முதலாளிகளின் பட்டியலை வெளியிட்ட எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்துதான் தமிழக அரசின் ஊழல் தொடர்பான செய்திகளைக்கூட வெளியிடக் கூடாது என்கிற கொள்கையை வைத்திருக்கும் தினமணியும் வெளிவருகிறது!

இத்தனை காலமும்(பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல்) பாமகவின் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள், முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்குப் பின், மிகுந்த கவனத்துடன் பாமகவை தவிர்க்கின்றன, அல்லது அறிக்கைகளை மட்டுப்படுத்துகின்றன. பாமகவும் ஊழலுக்கு எதிரானது அல்ல, வலதுசாரி தமிழ் ஊடகங்களும் ஊழலுக்கு எதிரானவை அல்ல. உண்மையில் தமிழக மக்கள் மாறி மாறி ஊழல் அரசுகளால் ஆளப்பட்ட இந்த ஊடகங்கள்தான் காரணம். இவர்கள் கட்டியெழுப்பும் பிம்பங்களே மாறிமாறி ஆண்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் முதலில் புறக்கணிக்க வேண்டியது இந்த ஊடகங்களைத்தான். வாக்குக்கு கையூட்டு வாங்குவதை நியாயப்படுத்துவதும், மக்களை ஊழலுக்கு பழக்குவதும் இந்த ஊடகங்கள்தாம்.  ஆகவே நாம் 2015திலும் ஏமாறுவோம் என்பதில் மாற்று இருக்க முடியாது!

(நண்பர் ஒருவர் தினமலரை ஏன் குறிப்பிடவில்லை என இந்தப் பதிவில் கேட்டிருந்தார்.  இரண்டாம் தரமான மொழி நடையில் எழுதப்படும் பிரபல தினசரிகளை நான் படிப்பதில்லை. முக்கியமாக பெண்கள் தொடர்பான செய்திகளை இவர்கள் எழுதும்விதம் அருவருக்கத்தக்கது. அதனால் மலர், தந்திகளை நான் படிப்பதில்லை. ஒரு வகையில் தினமணி எனக்கு தமிழைக் கற்றுக் கொடுத்த இதழ், என்றாலும் அதன் வலதுசாரி தனத்தை என்னால் இனம்காண முடியும். தினமணியுடன் தி இந்து தமிழை சில ஊடகவியலாளர்கள்கூட ஒப்பிட்டு சொல்கிறார்கள். நிச்சயம், தினமணியின் தமிழ் நடையுடன் தி இந்துவை ஒப்பிட முடியாது. தி இந்து, ஆ.வி. பாணி தமிழின் தினசரி வடிவம் என்பதே சரி)