சென்னையின் இதயப் பகுதியான கிண்டியில் அமைந்திருக்கிறது கிண்டி தேசிய பூங்கா. இங்கே புள்ளி மான்கள், வெளி மான்கள் அதிக அளவில் வசிக்கின்றன. மாநகரம், மெட்ரோ நகரமாகி காஞ்சிபுரம் வரை நீண்டுகொண்டே போகிற நிலையிலும் இந்த வன உயிரினங்களின் வாழ்விடத்தை அரசாங்கம் விட்டு வைத்திருப்பதே அரிதான விஷயம்தான்.
நகரத்துக்கு நடுவே அமைந்திருக்கும் தேசிய பூங்காக்களில் கிண்டி தேசிய பூங்கா முக்கியமான ஒன்று. இரண்டு வகையான மான்கள் தவிர, பல வகையான பறவைகளும் பூச்சியினங்கள், செடி, மர வகைகளும் இங்கே உள்ளன. இவற்றை கணக்கெடுக்கும் பணி வருகிற 2013 மார்ச் 10ம் தேதி(ஞாயிற்றுக் கிழமை) நடைபெற இருக்கிறது. காலை 6.30 மணி தொடங்கி, 9.30 மணிக்கு முடிந்துவிடும். இரண்டே மணி நேரம்தான். சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் தேசிய பூங்காவை பாதுகாக்க விரும்பும் சூழலியல் விரும்பிகள் அனைவரும் இதில் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புகிறவர்கள் சூழலியல் தன்னார்வ அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.