சாதி இந்திய சமூகத்தின் இயல்பான மனநோய்!

ஆதவன் தீட்சண்யாவின்  ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை முன்வைத்து…

சமீபத்தில் மகாத்மா புலேவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் படித்தேன். 19ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் இந்திய சமூகத்தில் வேறோடிப் போயிருக்கும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து, கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் விமர்சனப் போக்கில் எழுதியிருப்பார். அந்த நேரத்தில் சாதி ஒடுக்குமுறைகளை குறித்து ஆட்சியாளர்களுக்கு அறிவிக்கும்பொருட்டும் ஒடுங்கிக் கொண்டிருந்த மக்களின் உரிமைகளை உணர்த்தும் பொருட்டும் சமூக நீதிக்கான பாதையை வகுத்துக் கொடுத்தது அவர் எழுத்து.  புலேவின் தொடர்ச்சியாக ஆதவன் தீட்சண்யாவின் எழுத்தைப் பார்க்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து பலரும் எழுதுகிறார்கள், அவையெல்லாம் இந்த மக்களின் அவலங்கள், பாடுகள் குறித்துதான் அதிகம் பேசுகின்றன. இத்தகைய அவலங்கள், பாடுகளுக்கான சமூக காரணிகளை இவை பேசுவதில்லை.
ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’  முன் அட்டையில் தொடங்கி பின் அட்டை வரை நந்தஜோதி பீம்தாஸ் என்கிற எழுத்தாளர் வழியாக, சமகால சமூக அரசியல் சார்ந்து தனித் தனி களங்களுக்கு படிப்பவரை இட்டுச் செல்கிறது.

Adhavan the novel

மகாத்மா புலே, அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார் என நம் புரட்சியாளர்கள் சாதி குறித்த பெருமிதங்களை உடைத்தெறிந்துவிட்டார்கள். நூறாண்டுகளாக தொடரும் இந்த சாதி வேரை பிடிங்கி எறியும் பனி இன்னமும் முடிவு பெறும் கட்டத்தை அடையவில்லை. இன்றைய கட்சி அரசியல் சூழல் சாதிக்கு குளிர் நீரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் ரத்தத்தையும் சத்தாக அளிக்கிறது. புரட்சியாளர்கள் சடங்குக்குரிய கற்சிலைகளாக மட்டும் இன்று நினைக்கப்படுகிறார்கள். சாதி இல்லை, சாதியெல்லாம் இப்ப யாரு பார்க்கிறா? போன்ற பேச்சுக்கள் அதிகபட்சம் 1% க்கும் கீழே உள்ள மெட்ரோவில் வசிக்கும் மேல்தட்டு வர்க்கம் கோபித்துக் கொள்கிறது. 1%த்துக்கும் குறைவான இந்த மக்கள் சாதியை விட்டொழித்தவர்கள் என்று எண்ணி விடுவதற்கு வாய்ப்பு உண்டு, உண்மையில் இவர்களை சாதியைக் கண்டு கொள்ளாதவர்கள் என வகைப்படுத்தலாம். எனக்கென்ன, எனக்கொன்றும் சாதியால் பாதிப்பில்லை என்பது இவர்களுடைய மனோபாவம். இந்த 1%த்தினரில் தலித் இருக்கலாம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பார்ப்பனர் என எந்த சாதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். இவர்கள் ஒன்று படுவது வர்க்க அடிப்படையில், அதாவது மேல்தட்டு வர்க்கம் என்ற அடிப்படையில்.

இந்த 1 சதவீதத்தினர் குறித்து நாம் ஏன் இவ்வளவு ஆராய வேண்டி இருக்கிறது என்றால், இவர்கள்தான் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள், கொள்கைகள், திட்டங்கள் போடுபவர்களாக இருக்கிறார்கள், இவர்களின்றி அதிகாரத்தின் ஓர் அணுவும் அசையாது! இவர்கள் கண்ணைக் மூடிக்கொண்டு சதா வசதிகளில் திளைத்துக்கொண்டு எல்லாம் நல்லதாகவே நடக்கிறது, நல்லதாகவே நடக்கும் என்று மந்திர வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அம்பேத்கர் பாடலை ரிங் டோனாக வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக ஒரு தலித் இளைஞன், ‘சாதி’ இந்துக்களால் அடித்து, நொறுக்கப்பட்டு, நெடுஞ்சாலைகளில் வாகனங்களால் மீண்டும் மீண்டும் நசுக்கப்படும் விபத்துக்குள்ளான ஒரு பிராணியைப் போல, ‘சாதி’ இந்துக்களின் இரு சக்கர வாகனங்களால் நசுக்கப்பட்டு கொல்லப்படுகிறான். இப்படியான கொடூரத்திலும் கொடூர மனநிலை, மனநோய் இந்திய சாதிய சமூகத்தின் இயல்பான குணங்களாக இன்று வரைக்கும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

சுதந்திர போராட்ட காலகட்டத்தில் பேசப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் சுதந்திரத்திற்குப் பிறகு, கட்சிகளின் அரசியல் அதிகார போதையில் மறக்கடிக்கப்பட்டன.   சுதந்திர இந்தியாவின் ‘வளர்ச்சி’ திட்டங்களுக்கிடையே திறந்துவிடப்பட்ட முதலாளித்துவ கதவுகள், உலகமயமாக்கலின் நவீன வசதி வாய்ப்புகள் சமூக சீர்திருத்தங்களிலிருந்து பெரும்பான்மை மக்களை தள்ளி வைத்துவிட்டன. தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் மீதான ஒடுக்குதல்கள் சுதந்திரத்துக்கு முன் இருந்த இந்தியாவின் நிலையைப் போல இன்றும் ஒத்துப் போகின்றன. இன்னமும் கிராமங்களில் சேரிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ‘சட்டப்படி’ தடை செய்யப்பட்ட பலதார மணமுறை இன்னமும் வட இந்திய பகுதிகளில் கோலுச்சுகிறது. நீர்குடங்கள் சுமப்பதற்காகவே இரண்டு, மூன்று ‘தண்ணீர்’மனைவிகள் ஒரு ஆணுக்குத் தேவைப்படுகிறார்கள். அமைச்சர்கள் பாலியல் வன்கொடுமைகள் பரஸ்பர ஒப்புதலுடனே நடப்பதாக அறிவிக்கிறார்கள். (பாலியல் வன்கொடுமை செய்வதை பொழுதுபோக்காக கொண்ட அந்த கால ஜமீன் மைனர்களின் வாரிசுகள்) பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும் அனுபவத்தின் வாயிலாகத்தான் இத்தகைய முடிவுகளுக்கு வரமுடியும். அக்ரஹாரங்களில் நுழைவதற்கே தகுதி வேண்டும் என்பதைப் போல ஐஐடி போன்ற இந்தியாவின்  உயர்ந்த கல்வி நிறுவனங்கள் நவீன அக்ரஹாரங்களாக உள்ளன.  அக்ரஹாரத்தில் கீழ்சாதிகள் நுழைவது தடை செய்யப்பட்டதைப்போல அம்பேத்கரும் பெரியாரும் இன்று தடை செய்யப்படுகிறார்கள். ஆக, சுதந்திரம் யாருக்கு வந்தது என்பது குறித்தும் எது சுதந்திரம் என்பது குறித்தும் நிறையவே எண்ணத் தோன்றுகிறது.

கடத்தப்பட்டும் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பிக்கவும் இலங்கைக்குச் சென்ற தலித்துகளின் அசாதாரண மரணங்கள், இன்று உலகம் முழுக்கவும் அகதிகளாக பயணிக்கும் மக்கள் படும் துயரங்களுடன் ஒத்துப்போகிறது. உதாரணமாக மியான்மரின் ரொஹியாங்கா முஸ்லீம்களின் நிலை, நாவலில் சொல்லப்படும் மலையகத் தமிழர்களுடம் பொருந்திப் போகிறது.

தலித்துகளின் மீதான வன்முறைகள், சாதிய படிநிலைகளை தீவிரமாக்கும் போக்கு,  ஒடுக்கப்பட்ட மக்கள்  அடிப்படை வாழ்வாதாரத்துக்காக  சந்திக்கும் நெருக்கடிகள் சமீப காலங்களில் அபாய நிலையை எட்டியுள்ளன. சமூக செயல்பாட்டாளர்கள் தீவிரமாக செயல்பட்டாக வேண்டிய நேரத்தில், அதற்கொரு முன்னுரையை அமைத்துக் கொடுத்திருக்கிறது இந்நாவல்.

ஒரு புனைவு உங்களுக்கு சமூகத்தின் பல்வேறு இடர்பாடுகளை அழுத்தங்களை அடக்குமுறைகளை  இனம் காட்டுகிறதென்றால் அது புனைவு என்கிற வரையறைத் தாண்டி வேறொன்றை அடைகிறது. . ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை வாசித்த பிறகு அதை சீர்திருத்த எழுத்து என்று வரையறை செய்கிறேன். ‘இஸங்கள்’ ‘கூறுகள்’ பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது, நான் ஒரு வாசகி, நான் வாசிக்கின்ற ஒன்று எத்தகையது என்று கருத்து சொல்லும் உரிமை எனக்குள்ளதாக நினைக்கிறேன்.

நாவலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ஆன் லைனில் வாங்கலாம்..

”தனியா வாழற பெண் எப்பவுமே புலனாய்வுக்கு உரியவள்தான்” – பாமா


பாமாவுக்கு ரொம்ப நாளா ஒரு ஆச உண்டு. எதுக்கெடுத்தாலும் ஆம்பளயதான் கேக்குறாங்க. கரண்ட் பில்லு கட்டணும்னாலும் ஆம்பள. ஒரு போன் வேணும்னாலும் ஆம்பள வேணுங்கறாங்க. அதான் சம்பளத்துக்குப் புருசன் கிடைச்சா நல்லா இருக்குமேன்னு ஆச. கேக்கறவங்களுக்கெல்லாம் இவன்தான் புருசன், புருசன்னு காட்டணும். ஏன்னா இந்த சமூகம் எப்பவும் அப்பா, கணவன், மகன், அண்ணன், தம்பின்னு ஒரு ஆம்பளயத்தான் புடிச்சி வச்சிருக்கு. சம்பளத்துக்குப் புருசன் வேலைப் பார்த்து, வேலை முடிஞ்சா அவன் வேலையைப் பார்த்துட்டு போறமாதிரி ஒரு சிஸ்டம் இருந்தா நல்லா இருக்கும்னு பாமாவுக்கு நினைக்கத் தோணுது. ஏன்னா தனியா ஒரு பொம்பள வாழ்க்கை நடத்தறதுங்கிறது இந்த ஆண்மைய சமுதாயத்துல என்னைக்குமே ஒரு கேள்விகுறியாதான் இருக்குது.

ஏன் இவ கல்யாணம் கட்டிக்கல?
எவனையாவது மனசுல நெனச்சுட்டு இருக்காளோ?
இவ வீட்டுக்கு யார் யார் வாராங்க?
எவ்வளவு நேரம் பேசறாங்க?
வர்றவங்ககிட்ட இவ எப்படி பேசுறா?
சிரிச்சுப் பேசுறாளா? மொறச்சிப் பேசுறாளா?

இப்படி கேள்விகள் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கும்.

அதாவது தனியா வாழற பெண் இந்த சமுதாயத்துக்கு எப்பவுமே புலனாய்வுக்கு உரியவள்தான். இதையெல்லாம் மீறி பாமா சுதந்திரத்தை விரும்பறா.

அதுக்காக இன்னும் எத்தனை விதமான கேள்விகள் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கா.
மதுரை மாவட்டம், புதுப்பட்டி பிறந்து, வளர்ந்தது. மத்த பெண்களைவிட தலித் பெண்கள் சுதந்திரமானவங்க. ஒண்டிக்கிறதுக்காக மட்டும்தான் சின்ன குடிசை. மத்தபடி வெளியிலதான் ஒலகம். பேசவும் சிரிக்கவும் ஆடவும் பாடவும் சுதந்திரம் இருந்தது. அந்த சுதந்திரத்தை அனுபவிச்சவ பாமா. ஆனாலும் கல்யாணம்னு வரும்போது எல்லா பெண்களைப்போல இவங்களும் சராசரியாதான் வாழ்ந்தாகணும். ஆணுக்காகவே, ஆணின் வசதிக்காகவே மனைவி, குழந்தை எல்லாம். ஆண்கள் எல்லோரும் கெட்டவங்கன்னு சொல்ல வரலை. ஜனநாயக முறை குடும்பத்துல இல்லன்னு சொல்ல வர்றேன்.
ஒடுக்கப்படற தலித் பெண்களை மீட்கணும்னா, அவங்களுக்குக் கல்வி கிடைக்கணும். கல்வி ஒண்ணுதான் அவங்களை உயர்த்தும்னு நம்பிக்கை. அதுக்காகவே தன் வாழ்க்கையை வாழணும்னு கிறித்துவ மடத்துல சேர்ந்தா பாமா. ஆனா, அங்கயும் சமூகத்துல இருக்குற அத்தனை ஏற்றத்தாழ்வுகளும் இருந்தது. பண்பாடு, ஜாதி, மொழி, பணம்னு அங்கயும் ஏகப்பட்ட பிரிவினைகள்.

துக்கத்துல இருந்தாலும் சந்தோசமா இருக்குறமாதிரி காட்டிக்கிற பாவ்லா வாழ்க்கை அது. சமத்துவம், சகோதரத்துவம்ங்கிற கிறித்துவ மதிப்பீடுகள் அங்கே காணாமல் போய்கிட்டு இருந்துச்சு. பணக்கார பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க பாமா டீச்சர் தேவையில்லை. வேற யாராவது செஞ்சுட்டு போகட்டுமே.

பாமா என்ன நினைச்சுப் போனாளோ அது அங்க இல்ல. ஏழு வருசத்துக்கு அப்புறம் மடத்தை விட்டு வந்தாச்சு.
பெறகுதான் போராட்டம் ஆரம்பமாச்சி. ஒரு பொண்ணு மடத்தை விட்டு வந்துட்டான்னா அது அவ சார்ந்த குடும்பத்துக்கே மானக்கேடான விசயமா இருக்கும். அதனால வீட்டுக்கும் போக விரும்பலை. தனியாகவே வாழ்ந்துக்கலாம்னு முடிவு பண்ணி, மதுரையில வாடகைக்கு வீடு எடுத்து தங்கியாச்சு. வேலைக்காக அலைஞ்சிட்டு இருந்த நேரம். தொண்டையை அடைக்கிற துக்கம் இருந்துகிட்டே இருக்கு. அழுது முடிக்கவும் முடியல. நண்பர் ஒருத்தர் எழுதுனா துக்கம் தீரும்னார். எழுதிக் காட்ட, இலக்கியமா இருக்கு. முழுசா எழுதுன்னார். துக்கத்தை, வாழ்க்கையை எழுதின பிறகு அது ‘கருக்கு’ன்னு நாவலா வந்தது.
92-ம் வருசம் நாவல் வந்ததும் பல விசயங்கள் நடந்தது. இலக்கிய ஒலகத்துல மொழியிலயும் வடிவத்திலயும் புது முயற்சின்னாங்க. கிறித்துவ அமைப்புகள்ல இருந்து முணுமுணுப்பு வந்தது. உண்மையை எழுதினதால அதை அவங்க மறுக்கல. ஆனா, எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்ப்பார்க்காத எதிர்ப்பு. புதுப்பட்டி மக்கள், நம்ம ஊரப்பத்தி அசிங்கமா எழுதிட்டாளேன்னு கோவப்பட்டாங்க. ஊருக்குள்ள கொஞ்ச காலம் போக முடியல. படிச்ச பிள்ளைகள் நாவலைப் படிச்சி காட்டி ஊரைப்பத்தி பெருமையாதான் எழுதியிருக்கான்னு புரிய வைக்கவும். பாமாவைக் கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. பெறகு அவங்க கதைகளைச் சொல்லி இதையும் எழுதுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் ‘சங்கதி’, ‘வன்மம்’ன்னு நாவல் ரெண்டும் ‘கிசும்புக்காரன்’னு சிறுகதை தொகுப்பும் எழுதணும்னு நெனச்சி எழுதினது.
பாமா ஊர விட்டு வந்து பல வருசங்கள் ஆனாலும் பேசும்போது மொழி மாறியிருக்கே தவிர, எழுத ஒக்காந்தா புதுப்பட்டியோட மொழிதான் வந்து ஒக்காந்துக்குது. அந்த மொழிய எழுது பிரியமா இருக்கு. செல பேர் கெட்ட வார்த்தைகயை அப்படியே எழுதறதா சொல்றாங்க. இது கெட்ட வார்த்தை, இது நல்ல வார்த்தைன்னு சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல.

ஒரே வார்த்தை ஒருத்தருக்குக் கெட்டதாவும் இன்னொருத்தருக்கு நல்லதாகவும் தோணலாம். உண்மையைப் பதிவு பண்ணும்போது நல்லது, கெட்டது பார்க்கக்கூடாது.

யாரு பாமா? வாழ்க்கையை நேசிக்கிற, வாழ்க்கையை வாழத் துடிக்கிற மனுசி. அண்ணன், தம்பி, அப்பா, அம்மா, நண்பர்கள், சமுதாயம் கொடுத்த எத்தனையோ பிரச்னைகளுக்கு ஊடாக சந்தோசத்தை அனுபவிக்கிறவ பாமா. கடந்த காலத்தைப் பத்தியோ, எதிர்காலத்தைப் பத்தியோ கவலைப்படாம இந்த நிமிசத்துல வாழறவ. எல்லோரும் கேப்பாங்க, ‘வயசாயிட்டா என்ன பண்ணுவே?’ன்னு. தள்ளாத வயசு வரைக்கும் வாழ்வோம்னு யாரால சொல்ல முடியும்? பெத்த புள்ளைகளே தள்ளிப்போன்னு சொல்ற காலமிது. பணம் பிரதானமாயிட்ட காலத்துல உறவுகளுக்கு மரியாதை இல்லை. அதுக்கு இதுவே பரவாயில்லை. பாமா செத்துக்கிடந்தா எடுத்துப் போடுங்க. ஏன்னா, செத்ததுக்கு அப்புறம் பாமாவுக்கு கவலைப்பட ஒண்ணும் இல்லை. அதப்பத்தி நீங்கதான் கவலைப்படணும்!

குங்குமம் இதழில் ‘நான்’ என்ற தலைப்பில் தமிழிலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் சிலரை நேர்காணல் செய்து, அவர்கள் மொழியிலேயே ஒரு தொடர் எழுதியிருந்தேன். அதில் இடம்பெற்ற பாமாவின் தன் அறிமுகம் இது.
சென்னைக்குள்ளேயே நிருபராக பணியாற்றிக் கொண்டிருந்த நான், பாமாவைப் பார்க்க உத்தரமேரூர் போனதுதான் முதல் வெளியூர் பயணம். அதற்குப் பிறகு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு பயணித்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அந்தவகையில் ஒரு நல்ல அனுபவத்துக்கு பாமா தொடக்கமாக இருந்திருக்கிறார். அவருக்கு என் நன்றி.
தலித் இலக்கியத்தில் பாமாவின் எழுத்துக்களுக்கு தனித்த இடம் உண்டு. பள்ளி ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கும் அவர் நிறைய எழுத வேண்டும். அவருடைய ‘கருக்கு’ நாவலும் ‘கிசும்புக்காரன்’ சிறுகதை தொகுப்பும் அவசியம் படிக்க வேண்டியவை. தமிழில் ’கருக்கு’ நாவல் தள்ளுபடி விலையில் வாங்க ஆங்கிலத்தில் படிக்க 
கருக்கு அமேசானிலும் கிடைக்கும்

”கச்சத்தீவை மீட்போம் என்று கூச்சலிடும்போதெல்லாம் கடலில் இருக்கிறவனுக்கு மரண அடி விழுகிறது!”

  

இதுவரைக்கும் வந்த தமிழ் நாவல்களில் மீனவர்களின் வாழ்க்கை பின்னணியில் ஜோ டி குருஸ் எழுதிய ஆழி சூழ் உலகு நாவலுக்கு தனித்த இடம் உண்டு. மீனவ சமூகத்தின் சிக்கல்கள், அவலங்களை அவர்களுடைய மொழியிலேயே வெளிப்படுத்தியது இந்நாவலின் தனித்துவத்துக்கு காரணம் என்பது விமர்சகர்களின் கருத்து. கொற்கை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தின் பின்னணியில் அடுத்த நாவலை தந்திருக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குருஸ். புத்தக காட்சியை ஒட்டி வெளியான கொற்கை நாவல்(காலச்சுவடு பதிப்பக வெளியீடு) வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கொற்கையை முன்வைத்து ஜோ டி குருஸுடன் இந்த நேர்காணல்..

கொற்கை நாவல் எதைப்பற்றி பேசுகிறது?

”ஆழிசூழ் உலகு நாவலில் அடித்தள மீனவ மக்களின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை சொல்லியிருந்தேன். பரதவர்கள், மீன் பிடிக்கிறவர்கள் மட்டுமல்ல கடல்வழி வாணிபத்தின் முன்னோடிகள் என்பதை கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டில் கொற்கை செழித்து விளங்கிய துறைமுகம். பாண்டிய நாடு வளமுடைத்து என்ற வாக்கு உருவானதே கொற்கை துறைமுகத்தை வைத்துதான். கொற்கையில் கிடைத்த நன்முத்துக்கள் பாண்டிய நாட்டை வளமுள்ளதாக ஆக்கியிருந்தது. கொற்கையில் கிடைத்த முத்துக்கள் அந்நூற்றாண்டுகளிலேயே பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இதனால் கடல்வழி வாணிபம் சிறந்திருக்கிறது. சில்க் ரூட், பெப்பர் ரூட் என்று சொல்வதைப்போல கொற்கைக்கு பெர்ல் ரூட் இருந்திருக்கிறது. முத்துக்களுக்காக கிரேக்கர்கள், அரேபியர்கள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், வெள்ளையர்கள் கொற்கையைத் தேடி வந்திருக்கிறார்கள். ஆனால் இது எதுவுமே வரலாற்றில் சரியாக பதிவாகவில்லை. ஏராளமான கடல் வளமுடைய மிகப்பெரிய துறைமுகமான கொற்கை பரதவர்களால் ஆனது, ஆளப்பட்டது. வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு அந்த சந்ததிகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து வரலாறு இல்லை. வணிகமும் கலாச்சாரமும் சிறந்து விளங்கிய கொற்கையை பார்த்து ரசித்து வெள்ளையன் உள்ளே வந்திருக்கிறான். இதுபற்றிய குறிப்புகள் நம்மிடம் இல்லை. வெள்ளையர்கள் பார்த்து, ரசித்து உள்ளே வருகிறான். இப்படி வளம்பெற்ற கொற்கை கடந்துவந்த நூறு ஆண்டுகளின் கதையைத்தான் கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த சமூக, பொருளாதார கலாச்சார மாற்றங்களை பேசுகிறது நாவல். போர்த்துக்கீசியர்கள், வெள்ளையர்கள் வெளியேறி சுதேசி அரசாங்கம் வந்த பிறகு கொற்கையில் வாழ்ந்த பரதவர்கள் சமூகம் எப்படி மாறியது என்பதையும் பரதவர்களின் பல்வேறு பிரிவுகளுக்குக்கிடையேயான சமூக சிக்கல்கள், அதை அவர்கள் கையாண்ட விதம் இதெல்லாம் தான் நாவலாக்கியிருக்கிறேன். இதை வரலாற்று ஆவணம் என்று சொல்லமுடியாது. நாவலுக்குள் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களால் இது வரலாற்று ஆவணமாகலாம்.”

மீண்டும் மீனவ சமூகத்தின் பின்னணியில் நாவல் எழுதக் காரணம்?

”சங்கப் பாடல்களில்கூட அம்மூவனார் போன்றவர்கள் நெய்தல் கரையைப் பற்றி பாடினார்களே தவிர, நெய்தல் நில மக்களின் சுக துக்கங்களை பாடவில்லை. நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் இதுகுறித்து எனக்கு நிறையவே ஆதங்கம் உண்டு. நெய்தலின் மீதும் நெய்தல் மக்களின் மீதும் உள்ள பாசத்தின் வெளிப்பாடுதான் என் எழுத்து முயற்சி. வருமானத்துக்காக ஒரு வேலையில் இருக்கிறேன், ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்.

என் சமூகத்தில் உள்ள அவலங்களை கோளாறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாக படுகிறது. ஆழி சூழ் உலகு நாவல் வெளிவந்த பிறகு, ஊரில் நிறைய எதிர்ப்பு வந்தது, வந்துக்கொண்டிருக்கிறது. நிலைக்கண்ணாடி போல ஒரு சமூகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும். மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் சமூக குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். ஆடி போல சமூகத்தைக் காட்ட வேண்டும். அதனால் மேற்படியான எதிர்ப்புகள் பற்றி கவலைப்படுவதில்லை!

நாவலில் சொல்லவந்ததை ஒரு கட்டுரையிலேயே கூட சொல்லி முடித்திருக்கலாம். ஆனால் அதை அப்படி சொல்ல விரும்பவில்லை. வாழ்வாக சொல்ல விரும்பினேன். ஆழி சூழ் உலகு எழுதி முடித்த உடனே கொற்கையை எழுத உட்கார்ந்தேன். 2005 தொடங்கி 2009 ஆண்டு முடிய நாவலுக்காக உழைத்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்து எனக்குள் போன செய்திகளை மெருகுபடுத்தி சேர்த்திருக்கிறேன். வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்கள், ஆண்களை சந்தித்து பேசி தகவல்களை திரட்டினேன். நாவலை எழுதி முடித்தவுடன் ஒருவித அயற்சி ஏற்பட்டது. எழுதி முடித்த பக்கங்களை தூக்கி பரணில் போட்டதைப் பார்த்த என் மனைவி பதறிக்கொண்டு ஐந்து வருட உழைப்பை வீணாக்கலாமா? என்றார். பிறகுதான் எழுதியதை பதிப்பகத்திடம் கொடுக்கும் முடிவுக்கு வந்தேன். நாவல் எழுதி முடித்தபோது ஏற்பட்ட அயற்சிக்குக் காரணம், முன்னோடியாக இருக்க வேண்டிய சமூகம் இப்படி முடங்கிக் கிடக்கிறதே என்கிற ஆதங்கம் தான்! என் சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்கிற கேள்வி என்னை சதா துளைத்துக்கொண்டே இருக்கிறது”

எழுதுவதைத் தாண்டி மீனவர்களின் இன்னல்களை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறீர்கள். குறிப்பாக இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் தமிழக மீனவர்கள் பற்றி ஆவணப்படங்கள் எடுத்ததன் பின்னணி என்ன?

”காலம்காலமாக தமிழக மீனவர்கள், வடமேற்கு இலங்கை நோக்கி மீன் பிடிக்கப்போவதுதான் வழக்கம். 1983ல் இலங்கை யாழ்பாணத்தில் நூலகம் எரிப்பு என்கிற நிகழ்வுக்குப்பிறகு, விடுதலைப்புலிகளின் எழுச்சி தொடங்கியபோதுதான் தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தின் தாக்குதல் அரங்கேற்றம் பெற்றது. தமிழக மீனவர்கள் மூலமாக விடுதலைப்புலிகளுக்கு உதவிகள் கிடைப்பதாக கருதியே இலங்கை அரசு இத்தகைய தாக்குதல்களை ஊக்குவித்தது. இன்று ஈழம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஈழப் போராட்டத்தின் பின்னணியில் தென் தமிழக மீனவர்களின் இரத்தமும் கலந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தமிழினம் என்கிற காரணம் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு இன்னும் ஏராளமான கோர முகங்கள் உண்டு. மீனவர்கள் பிடித்த மீன்கள் பிடிங்கிக் கொண்டு வளையை அறுத்துவிடுவதிலிருந்து காதில் இருக்கிற கடுக்கணை பிடிங்கிக் கொள்வது வரையான கடற்கொள்ளையர்களைப் போன்ற செயல்களையும் அவர்கள் செய்கிறார்கள். பச்சை மீனை திண்ணச் சொல்வது, ஐஸ்கட்டியில் நிர்வாணமாக படுக்கவைப்பது, கடலில் தள்ளிவிட்டு இரண்டு, மூன்று மணி நேரம் நீந்தவிட்டு களைத்துப்போகும்போது ஹெலிகாப்டரிலிருந்து சுட்டுப் பழகுவது, இதையெல்லாவற்றையும்விட அப்பன்-மகன் என்று தெரிந்த பின்னும் உறவு கொள்ள கட்டாயப்படுத்துவது கொடுமையின் உச்சம்! கச்சத்தீவை மீட்போம் என்று நாட்டில் கூச்சலிடும்போதெல்லாம் கடலில் இருக்கிறவனுக்கு மரண அடி விழுகிறது.

மீனவர்கள் நாதியில்லாதவர், அவர்களுக்கென்று அமைப்புகள் கிடையாது, ஒருங்கிணைந்த குரல் கிடையாது. இதுதான் காரணமேயில்லாமல் இத்தனை பேரின் இறப்புக்கும் பல இழப்புகளுக்கும் காரணம். நம்முடைய அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எல்லைகளில் வாழ்கிறவர்கள் தானே என்கிற விட்டேத்தி மனோபாவம். இருபது வருடங்களுக்கும் மேலாக மீனவர்களிடையே பணியாற்றுவதாக சொல்லிக்கொள்ளும் தொண்டு நிறுவனங்களிடம்கூட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றுவதற்கான எந்தவித திட்டமும் இல்லை. குறைகளை கணக்கெடுத்திருப்பதுதான் தொண்டு நிறுவனங்கள் செய்திருக்கும் மிகப்பெரிய சேவை!

இதெல்லாம்தான் ‘விடியாத பொழுதுகள்’ என்ற முதல் ஆவணப்படம் எடுக்க தூண்டுதலாக அமைந்தது. அவலங்களை மட்டும் சொன்னால் எனக்கும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அதனாலேயே பிழைப்புக்காக எல்லைத் தாண்ட நேரிடும் மீனவர்களுக்கு மாற்று வழியைச் சொல்லும் நோக்கில் விடியலை நோக்கி என்ற ஆவணப்படத்தை எடுத்தேன். மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள மூக்கையூர் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்வு. மூக்கையூர் பகுதியில் வீணாகிக்கொண்டிருக்கும் ஆழ் கடல் வளத்தை பயன்படுத்த வாய்ப்பாகவும் இந்தத் தீர்வு அமையும். பரவலாக கவனம் பெற்ற இந்த ஆவணப்படத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விருது கொடுத்திருக்கிறது. விருது பெறுவது, கவனம் பெறுவது என்பதைவிட என் மக்களின் துயரம் அறியப்படவேண்டும் என்பதுதான் என் நோக்கம். மீனவ சமூகத்திலிருந்து வந்த எனக்கு, என் சமூகத்தின் வலி நன்றாகவே தெரியும். ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலே அலறுகிறார்கள் எம் மக்கள். கைநிறைய சம்பளமும் வசதி குறைவில்லாத வாழ்க்கையும் எனக்கு நிறைவை தந்துவிடாது. எம் மக்களின் வாழ்வுக்காக எதையாவது நான் செய்துகொண்டே இருப்பேன். ஏனெனில் மூச்சு விடுவது மட்டுமே வாழ்க்கையில்லை!”

பெண் இருப்பு எப்போதும் சூன்யப் புள்ளியில்…

பகுதி-1

Nawal El Saadawiருவரின் ஒழுக்க மீறலை அல்லது ஒழுக்க சீலத்தை சுட்டும்போது, அவர் சார்ந்துள்ள மதத்தோடு பொறுத்தி பேசுவது இயல்பான விஷயமாக இங்கே இருக்கிறது. ‘இஸ்லாமியதீவிரவாதி என்ற சொல்லாடலும் பார்ப்பான் உயர்ந்தவன்என்கிற எண்ணமும் இதற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். உயர்ந்த நல்லோழுக்கங்களையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் இன்னபிற நல்லனவற்றையும் வலியுறுத்துவதாக சொல்லப்படும் அனைத்து மதங்களைச் சேர்ந்த தீவிர பற்றாளர்களும்கூட அடிப்படையில் மனிதர்களே! மதங்களால் புனிதர்களாகப்படும் எல்லோருக்குமே புனிதத்திற்கு எதிரிடையான பக்கமும் இருக்கிறது என்பதற்கு வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் ஏராளமான உதாரணங்களை நாம் பார்த்துவருகிறோம். மதத்தால் புனிதராக்கப்பட்டவருக்குள் எப்படி சராசரியான மனித இயல்புகள் இருக்கிறதோ, அதுபோலவே இஸ்லாம், கிறித்துவம், இந்து என உலக மதங்கள் அத்தனையிலும் பெண் ஒடுக்குதலும் அவள் இரண்டாம் பாலினமாகக் கருதப்படுவதும் இருக்கிறது.

கருணையும் குரூரமும் மனித இயல்பானால், பெண் மீதான ஒடுக்குதல் என்பது ஆணாதிக்கச் சிந்தனை, இச்சமூகத்திற்கு இயல்பென செயற்கையாக உருவாக்கிக் கொடுத்திருக்கும் கொடை. அது வழிவழியாக இச்சமூகத்ததில் பெண் ஒடுக்கப்பட வேண்டியவள் என்பதை ஆணுக்கும் ஒடுக்கப்பட பிறந்தவர்கள் என்பதை பெண்ணுக்கும் போதிக்கிறது. இந்தியாவில், ஈரானில், அமெரிக்காவில் எங்கு பிறந்தாலும் காலச்சாரங்களும் நாடுகளும் வேறுபட்டிருந்தாலும் பெண், ஒடுக்குதலுக்கு ஆளாக வேண்டியவள் தான்! இது குறித்து பெண்ணிய சிந்தனையோடு கூடிய ஆய்வுகளும் கட்டுரைகளும் இலக்கிய பதிவுகளும் உலகம் முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் எகிப்து பெண்ணிய எழுத்தாளரான நவ்வல் எல் சதாவியின் எழுத்துகளை மதிப்பு மிக்க ஆவணங்களாக கருத முடியும்.

நீண்ட மாதங்களுக்கு முன் ஒரு இலக்கிய பத்திரிகையில் நவ்வல் எல் சதாவி குறித்த கட்டுரையை வாசித்தபோது, அவர் மீது ஒருவகை ஈர்ப்பு உண்டானது. நவ்வல் எல் சதாவி குறித்த மேலதிக விவரங்களை அவருடைய இணைய தளத்தில் படித்து அறிந்தேன். சில கட்டுரைகளையும் அங்கே படிக்க முடிந்தது. கட்டுரை, சிறுகதை, நாவல் என பன்முகத் தன்மையோடு ஏராளமாக எழுதியிருக்கும் அவருடைய எழுத்துகளைப் படிக்க ஆர்வம் மேலிட்டது. குறிப்பாக
Women at point zero

நாவலை படிக்க விரும்பினேன்
. புத்தகக் கடைகளில் விசாரித்தபோது அப்போதைக்கு இருப்பில் இல்லை என்று கூறி, வேண்டுமானால் தருவித்து தருவதாக பதில் வந்தது. அழைப்பு எண்ணை தந்துவிட்டு வந்த நேரம், எண்ணையே மாற்ற வேண்டியதாகிவிட்டது. நேரில் சென்றும் விசாரிக்கவில்லை. அதோடு வேறுவேறு வேலைகளில் கவனம் கொள்ள எதேச்சையாக தி.நகர் புக் லேண்டில் Women at point zero-ன் தமிழ் பெயர்ப்பாக சூன்யப் புள்ளியில் பெண்நாவலை புத்தகமாகப் பார்த்தேன். ஆங்கிலத்தில் படித்திருந்தால் ஒரே மூச்சில் படித்திருக்க முடியுமா என்று தெரியாது. தமிழில் கிடைத்ததால் விரைந்து முடித்தேன். லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு இது. மூல மொழியில் படிக்காததால் மொழிபெயர்ப்பு குறித்து பேசுவது சரியாக இருக்காது.

1974 ல் நவ்வல் எல் சதாவி அரசியல் கைதியாக சிறையில் இருந்தபோது அங்கு சந்தித்த ஃபிர்தவுஸ் என்ற பெண்ணின் வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. நாவல் குறித்து பேசுவதற்கு முன் நவ்வல் எல் சதாவி குறித்து சில குறிப்புகளைத் தர விரும்புகிறேன். நவ்வல் எல் சதாவியின் அப்பா சுதந்திரப் போராட்ட வீரர். கல்வி அமைச்சகத்தில் பணியாற்றியவர். பெண் இரண்டாம் பட்சமாக ஒதுக்கப்படுவதை தன் குடும்பத்திலிருந்தே ஆரம்பிக்கும் அனுபவத்தின் வாயிலாக உணர்கிறார் நவ்வால். தன் சகோதரனைவிட தான் படிப்பிலும் இன்னபிற விஷயங்களிலும் முதன்மையானவராக இருந்தபோதும் சகோதரனுக்கு தன் குடும்பத்தினரிடம் கிடைக்கும் சலுகையும் அன்பும் (இந்த விஷயம் நம்முடைய குடும்பங்களுக்கு இப்போதும் பொருந்திப்போவதை கவனிக்க) இவருக்கு கிடைப்பதில்லை. அடிப்படையில் ஒரு பெண் எதிர்கொள்ளும் குடும்ப, சமூக பிரச்சினைகளை நவ்வால் எதிர்கொண்டபோதிலும் உளவியல் மருத்துவம் படிக்க வைக்கும் அளவுக்கு அவருடைய குடும்பத்தினர் கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

உளவியல் மருத்துவராக குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட பெண்களை சந்திக்கும்போது அவருக்குள் பெண்ணிய சிந்தனை கிளர்ந்து எழுந்துள்ளது, எழுதத் தொடங்கியிருக்கிறார். ஆய்வு நோக்கில் அவர் எழுதிய கட்டுரைகள், நாவல்கள் மத அடிப்படைவாதத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் அரசுகளை விமர்சிப்பதாகவும் இருந்த காரணத்தினால் அரசியல் கைதியாக ஒரு வருடம் சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கே எழுதவதற்கு மறுக்கப்படுகிறது. கழிப்பறையில் பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பரில் ஐப்ரோ பென்சிலைக் கொண்டு எழுதுகிறார். சிறையிலிருந்து விடுதலையான பின்பும் அடிப்படைவாதிகளிடமிருந்தும் அரசிடமிருந்தும் தொடர்ந்துகொண்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார் நவ்வால். அவருடைய எழுத்துப் பயணம் சற்றே அசுவாசத்தோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.