பாம்புகளோடு யானைகளும் புலிகளும் சாகடிக்கப்பட வேண்டியவைதான்!

தமிழில் விவசாயம், தொழிற்நுட்பம், மேலாண்மை குறித்த எழுத்துக்கள் ரொம்பவே குறைவு. இப்போதுதான் அவற்றையெல்லாம் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தத் துறைகளில் தமிழ் பத்திரிகைகள் வருவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது. பொருளாதார ரீதியிலான பலவீனம் காரணமாக இந்தப் பத்திரிகைகள் பெரிய அளவில் வாசகர்களை சென்று சேருவதில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்த விகடன் கொண்டுவந்ததுதான் ‘பசுமை விகடன்’.
தரமான கட்டுரைகளுடன் இயற்கை விவசாயம் குறித்து சூழலியல் நோக்கில் தொடர்ந்து எழுதிவருகிறது பசுமை விகடன். தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது ‘பசுமை விகடன்’ வாங்கிப் படிக்கும் வாசகி நான்.

தற்போது கடைகளில் இருக்கும் இதழில் பதினைந்து அடி நீளமுள்ள ராஜநாகத்தை அடித்துக் கொன்றதாக அப்பையா நாயக்கர் என்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்துவிட்டதாக இதில் ஒரு செய்தி. ‘மரத்தடி மாநாடு’ என்ற தொடரில் (விவசாயம் சார்ந்த நல்லது கெட்டதுகளை அரட்டை பாணியில் சொல்லும் பகுதி) இதில் வரும் ஏரோட்டி என்ற கதாபாத்திரம் இந்த செய்தியை சொல்வதோடு, ‘‘ஏதோ கடத்தலுக்காக அடிச்சுக் கொன்னுருந்தா ஜெயில்ல போடறதுல தப்பில்ல.. பாவம், பயந்துபோய் அடிச்சவறுக்கும் அதே கதியா?’’ என்றுநொந்துபோய் சொல்வதாக முடித்திருக்கிறார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள ஒரு கிராமத்திலிருந்து மீட்ட ஆண் ராஜநாகத்துடன் காட்டுயிர் ஆய்வறிஞர் ரோமுலஸ் விட்டேகர்.

அடர்ந்த வனங்களில் மட்டுமே வாழும் ‘ராஜநாகம்’ இந்திய மண்ணுக்கே உரித்தான அரிய வகை உயிரினம். கிட்டத்தட்ட அழிந்துகொண்டிருக்கும் நிலையில் இருக்கிறது. இன்னும் பத்தாண்டுகளில் காட்சியகங்களில் மட்டுமே இது வாழும். அரிதாகிக் கொண்டிருக்கும் உயிரினம் என்பதால்தான் இதைக் கொல்லவோ, உயிரோடு வைத்திருக்கோ தடை விதித்து சட்டம் இயற்றி இருக்கிறது வனத்துறை. ‘‘பயந்துபோய் அடிச்சவறுக்கும் இதே கதியா?’’ என்று இந்தப் பத்தியை எழுதியவர் கேட்டிருப்பது இது குறித்து அவருக்கு உள்ள போதாமைக்காட்டுகிறது. இப்படியொரு போதாமையில்தான் எல்லா கட்டுரைகளும் எழுதப்படுகிறதா என்கிற சந்தேகமும் நமக்கு வருகிறது. நம்முடைய கவலையெல்லாம் லிவசாயிகள் மத்தில் நல்லதொரு மதிப்பைப் பெற்றிருக்கிற பத்திரிகை, அவர்களுக்கு தவறான வழிகாட்டியாக மாறிவிடக்கூடாது என்பதுதான். கோவை, நீலகிரி மாவட்டங்களில் யானைகளுக்கும் விவசாயி (காட்டை ஆக்கிரமித்து விவசாயம் செய்பவர்கள்)களுக்கும் உள்ள பிரச்னை அவ்வப்போது செய்தியாகிறது. தன் விவசாய பூமிக்குள் யானை புகுந்துவிடாமல் இருக்க,. மின்சார கம்பிகளில் வேலிகட்டி, யானைகளை பலியிடுவதை நியாயப்படுத்த முடியுமா?
அல்லது தன் இடம் பறிபோகும்போது வழியில்லாமல் குடியிருப்புகளில் புகுந்துவிடும் புலிகளை கொன்றுவிட்டு, ‘என் இடத்தில் வந்துவிட்டது’ என்று சொல்லலாமா? 15 அடி நீள பாம்பைக் கொன்றது சரியென்றால், 11 அடி நீளமுள்ள புலிகளைக் கொல்வதும் யானைகளைக் கொல்வதும் சரிதான்!

படங்கள் நன்றி : KING COBRA RESEARCH STATION, WESTERN GHATS 

புலிகளைப் பாதுகாக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு?

காட்டுயிர் -மனித பிணக்கு குறித்த செய்திகள் ஊடகங்களில் வருவது இப்போது சாதாரண விஷயமாகிவிட்டது. கோவை, வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளை ஒட்டியமைந்த மனித வாழிடங்களிலும் விவசாய நிலங்களிலும் காட்டுயிர்கள் குறிப்பாக யானைகள் புகுந்து ‘‘அட்டகாசம்’ செய்வதாக தமிழ் ஊடகங்களில் ‘சுவாரஸ்ய’ செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆங்கில ஊடகங்களில் மட்டுமே காட்டுயிர்-மனித பிணக்கு குறித்த கன்சர்வேஷன் நோக்கிலான கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தமிழ் ஊடகவியலாளர்களின் காட்டுயிர்கள் மீதான வார்த்தை வன்முறை குறித்து சு.தியடோர் பாஸ்கரனும் ச. முகமது அலியும் எவ்வளவோ முறை பேசியிருக்கிறார், ஒருவருக்கும் அது எட்டவில்லை போலும். இத்தகையதொரு சூழலில் முதுமலை வனப்பகுதி கடந்த ஜனவரி 2009 முதல் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதும் அதையொட்டி அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தரிவித்து போராட்டம் நடத்தியதும் ‘யானைகள் அட்டகாச செய்திகளுக்கு நடுவே வெளியானது. சுற்றுலாவுக்குப் பெயர் போனது இந்தப் பகுதி. புலிகள் சரணாலய அறிவிப்பால் எங்கே தங்களுடைய பிழைப்புக்கு இடைஞ்சல் வந்துவிடுமோ என்றுதான் இந்தத் தொழிலை நம்பியிருக்கும் பெரும்பாலான மக்கள் இதை எதிர்த்தார். இப்போது உச்சநீதி மன்றம் புலிகள் சரணாலயப் பகுதிகள் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது. காட்டுயிர் ஆர்வலர் இந்த இடைக்கால தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு புலிகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முதுமலை ஊட்டியிலிருந்து 67 கிமீ தொலைவிலும் மைசூரிலிருந்து 90 கிமீ தொலைவிலும் இருக்கிறது. முதுமலை தேசியப் பூங்கா 321 சதுர கிமீ பரப்பில்  இருக்கிறது. புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு, செந்நாய், காட்டுப்பன்றி, தேவாங்கு,குரங்கு, மான்களில் புள்ளி மான், அன்டிலோப் உள்ளிட்ட விலங்கினங்களும் நன்னீர் முதலை, மலைப்பாம்பு, நாகம் போன்ற ஊர்வன வகைகளும் இந்நிலத்திற்குரிய பூர்வாங்க பறவையினமான இருவாச்சி உள்ளட்ட 200 வகையான பறவைகளும் அறிய தாவர வகைளும் சிறு உயிரினங்களும் நீர்நிலைகளும் அடங்கிய இயற்கையின் தொகுப்பு முதுமலை.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களின் எல்லைப்பகுதிகளும் ஒன்று சேரும் இடத்தில் இருக்கிறது. முதுமலை வனச்சரணாலயம். ஒருபுறம் கர்நாடகத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்காவும் மற்றொரு புறம் வயநாடு சரணாலயமும் இருக்கின்றன. பந்திப்பூர், வயநாடு வனப்பகுதிகள் புலிகள் சரணாலயங்களாக மாற்றப்பட்டு சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

நிர்வாக வசதிகளுக்காக இவ்வனப்பகுதிகள் பிரிக்கப்பட்டனவே அன்றி இவை மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளின் தொடர்ச்சியானவையே. தமிழக பகுதியான முதுமலை வனப்பகுதியில் புலிகள் வாழ்வதற்கான உயிர்ச்சூழலும் அவற்றின் எண்ணிக்கை ஆரோக்கியமான நிலையில் இருந்தபோதும் அது நீண்ட வருடங்களாக புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவில்லை. காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்களின் தொடர்ந்த முயற்சிகளால் முதுமலை வனப்பகுதி ஜனவரி 2009ல் புலிகள் சரணாலயமாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
பந்திப்பூர், முதுமலை ஒட்டிய பகுதிகளில் காட்டுயிர் ஆராய்ச்சியளராக செயல்பட்டவர் உல்லாஸ் கரந்த். அவர் தன்னுடைய அனுபவங்களை The Way of the Tiger  என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். காட்டுயிர், சூழலியல் மீது ஆர்வம் உள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம். சு. தியடோர் பாஸ்கரன் ‘கானுறை வேங்கை’ என்ற பெயரில் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார்.