சாதி இந்திய சமூகத்தின் இயல்பான மனநோய்!

ஆதவன் தீட்சண்யாவின்  ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை முன்வைத்து…

சமீபத்தில் மகாத்மா புலேவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் படித்தேன். 19ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் இந்திய சமூகத்தில் வேறோடிப் போயிருக்கும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து, கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் விமர்சனப் போக்கில் எழுதியிருப்பார். அந்த நேரத்தில் சாதி ஒடுக்குமுறைகளை குறித்து ஆட்சியாளர்களுக்கு அறிவிக்கும்பொருட்டும் ஒடுங்கிக் கொண்டிருந்த மக்களின் உரிமைகளை உணர்த்தும் பொருட்டும் சமூக நீதிக்கான பாதையை வகுத்துக் கொடுத்தது அவர் எழுத்து.  புலேவின் தொடர்ச்சியாக ஆதவன் தீட்சண்யாவின் எழுத்தைப் பார்க்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து பலரும் எழுதுகிறார்கள், அவையெல்லாம் இந்த மக்களின் அவலங்கள், பாடுகள் குறித்துதான் அதிகம் பேசுகின்றன. இத்தகைய அவலங்கள், பாடுகளுக்கான சமூக காரணிகளை இவை பேசுவதில்லை.
ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’  முன் அட்டையில் தொடங்கி பின் அட்டை வரை நந்தஜோதி பீம்தாஸ் என்கிற எழுத்தாளர் வழியாக, சமகால சமூக அரசியல் சார்ந்து தனித் தனி களங்களுக்கு படிப்பவரை இட்டுச் செல்கிறது.

Adhavan the novel

மகாத்மா புலே, அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார் என நம் புரட்சியாளர்கள் சாதி குறித்த பெருமிதங்களை உடைத்தெறிந்துவிட்டார்கள். நூறாண்டுகளாக தொடரும் இந்த சாதி வேரை பிடிங்கி எறியும் பனி இன்னமும் முடிவு பெறும் கட்டத்தை அடையவில்லை. இன்றைய கட்சி அரசியல் சூழல் சாதிக்கு குளிர் நீரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் ரத்தத்தையும் சத்தாக அளிக்கிறது. புரட்சியாளர்கள் சடங்குக்குரிய கற்சிலைகளாக மட்டும் இன்று நினைக்கப்படுகிறார்கள். சாதி இல்லை, சாதியெல்லாம் இப்ப யாரு பார்க்கிறா? போன்ற பேச்சுக்கள் அதிகபட்சம் 1% க்கும் கீழே உள்ள மெட்ரோவில் வசிக்கும் மேல்தட்டு வர்க்கம் கோபித்துக் கொள்கிறது. 1%த்துக்கும் குறைவான இந்த மக்கள் சாதியை விட்டொழித்தவர்கள் என்று எண்ணி விடுவதற்கு வாய்ப்பு உண்டு, உண்மையில் இவர்களை சாதியைக் கண்டு கொள்ளாதவர்கள் என வகைப்படுத்தலாம். எனக்கென்ன, எனக்கொன்றும் சாதியால் பாதிப்பில்லை என்பது இவர்களுடைய மனோபாவம். இந்த 1%த்தினரில் தலித் இருக்கலாம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பார்ப்பனர் என எந்த சாதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். இவர்கள் ஒன்று படுவது வர்க்க அடிப்படையில், அதாவது மேல்தட்டு வர்க்கம் என்ற அடிப்படையில்.

இந்த 1 சதவீதத்தினர் குறித்து நாம் ஏன் இவ்வளவு ஆராய வேண்டி இருக்கிறது என்றால், இவர்கள்தான் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள், கொள்கைகள், திட்டங்கள் போடுபவர்களாக இருக்கிறார்கள், இவர்களின்றி அதிகாரத்தின் ஓர் அணுவும் அசையாது! இவர்கள் கண்ணைக் மூடிக்கொண்டு சதா வசதிகளில் திளைத்துக்கொண்டு எல்லாம் நல்லதாகவே நடக்கிறது, நல்லதாகவே நடக்கும் என்று மந்திர வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அம்பேத்கர் பாடலை ரிங் டோனாக வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக ஒரு தலித் இளைஞன், ‘சாதி’ இந்துக்களால் அடித்து, நொறுக்கப்பட்டு, நெடுஞ்சாலைகளில் வாகனங்களால் மீண்டும் மீண்டும் நசுக்கப்படும் விபத்துக்குள்ளான ஒரு பிராணியைப் போல, ‘சாதி’ இந்துக்களின் இரு சக்கர வாகனங்களால் நசுக்கப்பட்டு கொல்லப்படுகிறான். இப்படியான கொடூரத்திலும் கொடூர மனநிலை, மனநோய் இந்திய சாதிய சமூகத்தின் இயல்பான குணங்களாக இன்று வரைக்கும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

சுதந்திர போராட்ட காலகட்டத்தில் பேசப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் சுதந்திரத்திற்குப் பிறகு, கட்சிகளின் அரசியல் அதிகார போதையில் மறக்கடிக்கப்பட்டன.   சுதந்திர இந்தியாவின் ‘வளர்ச்சி’ திட்டங்களுக்கிடையே திறந்துவிடப்பட்ட முதலாளித்துவ கதவுகள், உலகமயமாக்கலின் நவீன வசதி வாய்ப்புகள் சமூக சீர்திருத்தங்களிலிருந்து பெரும்பான்மை மக்களை தள்ளி வைத்துவிட்டன. தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் மீதான ஒடுக்குதல்கள் சுதந்திரத்துக்கு முன் இருந்த இந்தியாவின் நிலையைப் போல இன்றும் ஒத்துப் போகின்றன. இன்னமும் கிராமங்களில் சேரிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ‘சட்டப்படி’ தடை செய்யப்பட்ட பலதார மணமுறை இன்னமும் வட இந்திய பகுதிகளில் கோலுச்சுகிறது. நீர்குடங்கள் சுமப்பதற்காகவே இரண்டு, மூன்று ‘தண்ணீர்’மனைவிகள் ஒரு ஆணுக்குத் தேவைப்படுகிறார்கள். அமைச்சர்கள் பாலியல் வன்கொடுமைகள் பரஸ்பர ஒப்புதலுடனே நடப்பதாக அறிவிக்கிறார்கள். (பாலியல் வன்கொடுமை செய்வதை பொழுதுபோக்காக கொண்ட அந்த கால ஜமீன் மைனர்களின் வாரிசுகள்) பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும் அனுபவத்தின் வாயிலாகத்தான் இத்தகைய முடிவுகளுக்கு வரமுடியும். அக்ரஹாரங்களில் நுழைவதற்கே தகுதி வேண்டும் என்பதைப் போல ஐஐடி போன்ற இந்தியாவின்  உயர்ந்த கல்வி நிறுவனங்கள் நவீன அக்ரஹாரங்களாக உள்ளன.  அக்ரஹாரத்தில் கீழ்சாதிகள் நுழைவது தடை செய்யப்பட்டதைப்போல அம்பேத்கரும் பெரியாரும் இன்று தடை செய்யப்படுகிறார்கள். ஆக, சுதந்திரம் யாருக்கு வந்தது என்பது குறித்தும் எது சுதந்திரம் என்பது குறித்தும் நிறையவே எண்ணத் தோன்றுகிறது.

கடத்தப்பட்டும் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பிக்கவும் இலங்கைக்குச் சென்ற தலித்துகளின் அசாதாரண மரணங்கள், இன்று உலகம் முழுக்கவும் அகதிகளாக பயணிக்கும் மக்கள் படும் துயரங்களுடன் ஒத்துப்போகிறது. உதாரணமாக மியான்மரின் ரொஹியாங்கா முஸ்லீம்களின் நிலை, நாவலில் சொல்லப்படும் மலையகத் தமிழர்களுடம் பொருந்திப் போகிறது.

தலித்துகளின் மீதான வன்முறைகள், சாதிய படிநிலைகளை தீவிரமாக்கும் போக்கு,  ஒடுக்கப்பட்ட மக்கள்  அடிப்படை வாழ்வாதாரத்துக்காக  சந்திக்கும் நெருக்கடிகள் சமீப காலங்களில் அபாய நிலையை எட்டியுள்ளன. சமூக செயல்பாட்டாளர்கள் தீவிரமாக செயல்பட்டாக வேண்டிய நேரத்தில், அதற்கொரு முன்னுரையை அமைத்துக் கொடுத்திருக்கிறது இந்நாவல்.

ஒரு புனைவு உங்களுக்கு சமூகத்தின் பல்வேறு இடர்பாடுகளை அழுத்தங்களை அடக்குமுறைகளை  இனம் காட்டுகிறதென்றால் அது புனைவு என்கிற வரையறைத் தாண்டி வேறொன்றை அடைகிறது. . ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை வாசித்த பிறகு அதை சீர்திருத்த எழுத்து என்று வரையறை செய்கிறேன். ‘இஸங்கள்’ ‘கூறுகள்’ பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது, நான் ஒரு வாசகி, நான் வாசிக்கின்ற ஒன்று எத்தகையது என்று கருத்து சொல்லும் உரிமை எனக்குள்ளதாக நினைக்கிறேன்.

நாவலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ஆன் லைனில் வாங்கலாம்..

’’நினைச்சவுடனேயே அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு?’’

தற்காலச்சூழலில் பெண்ணியம், தமிழ் நாடக வெளியில் இயங்கிவரும் ஆளுமை அ. மங்கை. குங்குமம் இதழில் வெளிவந்த நான் தொடருக்காக அவரைச் சந்தித்து எழுதிய தன்அறிமுகம் இது.

”ஒரு பொண்ணுன்னா இப்படியிருக்கணும், அப்படியிருக்கணும்னு ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள். உட்கார்றது, நடக்கிறது, சிரிக்கிறதுன்னு பெண்ணை உடல்சார்ந்து ஒடுக்கி, தட்டி, கொட்டி வெச்சிருக்காங்க. அப்படிப்பட்ட பெண்ணை கையை வீசி, சுதந்திரமா நடக்க வைக்கிற இடமா மேடை இருக்கு. வளைஞ்சி, நெளிஞ்சி, குனிஞ்சி கிடக்கிற பெண்களைக் குறைந்தபட்சம் தங்களுக்கும் முதுகெலும்பு இருக்குன்னு உணர்த்துகிற வெளியா நாடகம் இருக்கு. யாராவது பார்த்தா தலையை குளிஞ்சிக்கணும்னு பெண்ணுக்குச் சொல்லித்தர்ற சமூகத்துல, நாலு பேரை தலை நிமிர்ந்து பார்த்து பேச வைக்கிற இடம்தான் நாடக மேடை. பெண் விடுதலைக்கான சாத்தியமா நான் மேடையைப் பார்க்கிறேன். நான் நாடகத்தை எனக்கான கலையா ஆக்கிக்கிட்டதுக்கும் இதுதான் காரணமா அமைஞ்சது.
பாரம்பரியமா இருக்கிற கலைகள் எல்லாம் எத்தனை தூரம் பெண்களைப் பங்கெடுக்க வெச்சிருக்குங்கிறதை நாம ஆராய வேண்டியிருக்கு. பெண்கள் கூத்தாடக் கூடாதுன்னு ஒரு மரபே இருந்துக்கிட்டு இருக்கு. அப்போ கற்பனையா சொல்லப்படற கலைகள்லேயும் ஏற்றத்தாழ்வு இருக்குன்னுதானே அர்த்தமாகுது. கலைகள் கலாசாரத்தோட வெளிப்பாடுன்னு சொன்னா, நம்மோட கலாசாரமே ஏற்றத்தாழ்வோட இருக்கான்னு கேள்வி எழுது.
தமிழ் கற்பு, தமிழ் சார்ந்த வாழ்க்கைன்னு அதிகமாக பேசப்படுது. சங்க இலக்கியம் சொல்ற கற்பை நாம எப்படி புரிஞ்சி வெச்சிருக்கோம்? கற்புங்கிறது சொல் திரும்பாமைன்னு சங்க பாடல்கள்ல அவ்வை வெளிப்படையா சொல்லியிருக்காங்க. கற்புங்கிறது அறவியல் சார்ந்த சொல், அதுல எப்படி பெண் சம்பந்தப்பட்டாங்கிறது ஆய்வுக்குரிய விஷயம். இவ்வளவு சொன்ன அவ்வையை நாம எப்படி உருவகப்படுத்துறோம்…எந்த ஆதாரமும் இல்லாம மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டமாதிரி, சங்க இலக்கியத்துல வாழ்ந்த அவ்வையும் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அவ்வையும் ஒண்ணுங்கிறோம். ஆனா, அந்த காலத்திலயே தனியா வாழ்ந்த ஒரு பெண்ணா அவ்வை இருந்திருக்கா. கள் குடிச்சிருக்கா. அதியமானுடன் நல்ல பகிர்தலுக்குரிய நட்போட இருந்திருக்கா, புலால் சாப்டிருக்கா. பின்னாடி வந்த நாம என்ன பண்ணியிருக்கோம்? தமிழ் நாகாரிகம், பண்பாடுங்கிற பேர்ல குமரியா இருந்தவளை, கிழவியாக்கிட்டோம்.

பெண்ணோட பார்வையை, இருப்பைக் கேள்வி கேட்கிற நாடகங்களைத்தான் நான் மேடையில கொண்டுவர்றேன்.எவ்வளவு தூரம் இதையெல்லாம் நாடகத்துல செய்ய முடியும்னு தெரியலை. சுயத்தை கேள்வி கேட்காத, வீட்டுல வளர்க்கிற வளர்ப்பு பிராணிமாதிரிதானே பெண்களை வெச்சிருக்கோம். பிராமணீயம் உண்டாக்கின சாதி வேறுபாடுகளை எதிர்க்கிற நாம, அது முன்நிறுத்துகிற பெண் அடிமைத்தனத்தை மட்டும் ஏத்துகிறது முரண்பாடா தெரியுது. இதையெல்லாம் பேசினா ஆண்களுக்கு எதிரானவங்க நினைக்கிறாங்க. கவுரவம், அந்தஸ்துங்கிற பேர்ல சம்பாதிக்கிற மெஷினா ஆண்கள். காலம் முழுக்க அவங்க உழைப்பை உறிஞ்சுகிற அட்டைப் பூச்சிகளா பெண்கள் இருக்காங்க. நினைச்சவுடனேயே வெட்கப்படாம அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு? பொதுஇடத்துல அப்படி வெட்கப்படாம தன் உணர்ச்சியைக் கொட்ற ஒருத்தனை நான் உண்மையான ஆண்மகன், வீரத் திருமகன்னு ஒத்துக்கிறேன். ஆணோ, பெண்ணோ, திருநங்கையோ அவங்கவங்க சுயத்தோட இருக்கணும். அடிப்படையான மனிததேவையும் அதுதான். இதையெல்லாம் சொல்றதால நீங்க பெண்ணியவாதியான்னு கேட்கலாம். பெண்ணியவாதின்னு சொன்னாதான் உங்களுக்குப் புரியும்னா, என்னை பெண்ணியவாதின்னு சொல்லிக்கிறதுல எந்த தயக்கமும் இல்லை.

mangai
ஒரு வழக்கமான குடும்பத்துலதான் நான் பிறந்தது. சின்ன வயசிலேயே படிக்கிறதுக்காக வீட்டை விட்டு வந்துட்டேன். அந்த வீட்டுக்குரிய பழக்க வழக்கங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அதுக்கு பிறகு நானா எனக்கான வாழ்க்கையை அமைச்சுக்கிட்டேன். யாரை திருமணம் செய்துக்கணும், தாலி கட்டிக்கணுமா வேண்டாமா, எப்போ குழந்தை பெத்துக்கணும், எப்படி வளர்க்கணுங்கிறதை நானே தேர்ந்தெடுக்கிட்டேன்.
கணவர் அரசுக்கும் எனக்குமான உறவு ரொம்ப இணக்கமானதுன்னு சொல்லிக்க விரும்பலை. எல்லா குடும்பங்கள்ல இருக்கிறதுபோல நெருடல்களும் கருத்து மோதல்களும் எங்களுக்குள்லேயும் வந்ததுண்டு. நிச்சயம், இந்த இடத்துல என்னுடைய மாமியருங்கிற உறவைப் பத்தி சொல்லியாகணும். அவங்க கிராமத்துல பிறந்து, வாழ்ந்தவங்க.நான் செய்ற சில உணர்வுப்பூர்வமான செயல்களுக்கு அவங்கதான் எனக்கு பக்கபலமா இருந்திருக்காங்க. என்னோட நாடகத்துக்கு அவங்கதான் முதல் பார்வையாளரா இருந்தாங்க. நான் ஏதோ பொறுப்பான செயல்ல இருக்கேன்னு அவங்க நம்பினாங்க. அவங்களோட இருப்பு எனக்கு மிகப்பெரிய பலமா இருந்துச்சு.
அரசியல் பின்னணியோ, கலை பின்னணியோ எனக்குக் கிடையாது. 70களின் மத்தியில் எமர்ஜென்ஸி, வங்கப்போர்னு அரசியல் கொந்தளிப்பு இருந்த சமயம். கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் ரொம்ப சீரியசான பகிர்தல் இருந்தது. அந்தப் பகிர்தல் பல மாணவர்களை அரசியலுக்குக் கொண்டு வந்தது. திராவிட கட்சிகளிலும் இடதுசாரி கட்சிகளிலும் இணைந்து பணியாற்றினாங்க. அப்படித்தான் எனக்கும் ஆர்வம் வந்தது. அரசியல் தெளிவோடதான் நாங்க செயல்பட்டோம்னு சொல்ல முடியாது. பின்னால அமைப்புரீதியா செயல்பட ஆரம்பிச்சப்போ நிறைய தெளிவு கிடைச்சது. அப்புறம் நாடகங்கள் மீது ஈடுபாடு. ஆரம்பத்துல நடிக்கவும் செஞ்சேன். பிறகு நெறியாள்கை செய்றது மனசுக்குப் பிடிச்ச வேலையா இருந்தது.
சென்னையை ஒப்பிடும்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்கள்ல நாடகங்களுக்கு இருக்கிற மரியாதை அதிகம். நாடகத்தைச் சினிமாவும் டி.வி.யும் அழிச்சிருச்சின்னு சொல்லவே முடியாது. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இருக்கிற அளவுக்கு டி.வி.யும் சினிமாவும் இங்கே வளர்ந்துடலை. ஆனா, அங்க நாடகத்துக்குப் போறதை இன்னமும் முக்கியமான பழக்கமா வெச்சிக்கிட்டு இருக்காங்க. சரியான நாடக அரங்கங்கள், நாடக ஒத்திகைக்கான இடம், நடிகர்களுக்குக் குறைந்தபட்சம் போக்குவரத்து செலவைக்கூட கொடுக்க முடியாத சூழல்னு நிறைய வருத்தங்கள் தமிழ் நாடகத்துறையில இருக்கு. ஒண்ணும் தராத வேலைதான், ஆனாலும் தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கோம்.’’

27-9-2007 அன்று வெளியானது. நான் என்ற பெயரில் குங்குமம் இதழில் வெளியான இந்தத் தொடர் பின்னர் புத்தகமாகவும் வெளிவந்தது. காவ்யா பதிப்பகம் இதை வெளியிட்டது.

DSCN0267

”தனியா வாழற பெண் எப்பவுமே புலனாய்வுக்கு உரியவள்தான்” – பாமா


பாமாவுக்கு ரொம்ப நாளா ஒரு ஆச உண்டு. எதுக்கெடுத்தாலும் ஆம்பளயதான் கேக்குறாங்க. கரண்ட் பில்லு கட்டணும்னாலும் ஆம்பள. ஒரு போன் வேணும்னாலும் ஆம்பள வேணுங்கறாங்க. அதான் சம்பளத்துக்குப் புருசன் கிடைச்சா நல்லா இருக்குமேன்னு ஆச. கேக்கறவங்களுக்கெல்லாம் இவன்தான் புருசன், புருசன்னு காட்டணும். ஏன்னா இந்த சமூகம் எப்பவும் அப்பா, கணவன், மகன், அண்ணன், தம்பின்னு ஒரு ஆம்பளயத்தான் புடிச்சி வச்சிருக்கு. சம்பளத்துக்குப் புருசன் வேலைப் பார்த்து, வேலை முடிஞ்சா அவன் வேலையைப் பார்த்துட்டு போறமாதிரி ஒரு சிஸ்டம் இருந்தா நல்லா இருக்கும்னு பாமாவுக்கு நினைக்கத் தோணுது. ஏன்னா தனியா ஒரு பொம்பள வாழ்க்கை நடத்தறதுங்கிறது இந்த ஆண்மைய சமுதாயத்துல என்னைக்குமே ஒரு கேள்விகுறியாதான் இருக்குது.

ஏன் இவ கல்யாணம் கட்டிக்கல?
எவனையாவது மனசுல நெனச்சுட்டு இருக்காளோ?
இவ வீட்டுக்கு யார் யார் வாராங்க?
எவ்வளவு நேரம் பேசறாங்க?
வர்றவங்ககிட்ட இவ எப்படி பேசுறா?
சிரிச்சுப் பேசுறாளா? மொறச்சிப் பேசுறாளா?

இப்படி கேள்விகள் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கும்.

அதாவது தனியா வாழற பெண் இந்த சமுதாயத்துக்கு எப்பவுமே புலனாய்வுக்கு உரியவள்தான். இதையெல்லாம் மீறி பாமா சுதந்திரத்தை விரும்பறா.

அதுக்காக இன்னும் எத்தனை விதமான கேள்விகள் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கா.
மதுரை மாவட்டம், புதுப்பட்டி பிறந்து, வளர்ந்தது. மத்த பெண்களைவிட தலித் பெண்கள் சுதந்திரமானவங்க. ஒண்டிக்கிறதுக்காக மட்டும்தான் சின்ன குடிசை. மத்தபடி வெளியிலதான் ஒலகம். பேசவும் சிரிக்கவும் ஆடவும் பாடவும் சுதந்திரம் இருந்தது. அந்த சுதந்திரத்தை அனுபவிச்சவ பாமா. ஆனாலும் கல்யாணம்னு வரும்போது எல்லா பெண்களைப்போல இவங்களும் சராசரியாதான் வாழ்ந்தாகணும். ஆணுக்காகவே, ஆணின் வசதிக்காகவே மனைவி, குழந்தை எல்லாம். ஆண்கள் எல்லோரும் கெட்டவங்கன்னு சொல்ல வரலை. ஜனநாயக முறை குடும்பத்துல இல்லன்னு சொல்ல வர்றேன்.
ஒடுக்கப்படற தலித் பெண்களை மீட்கணும்னா, அவங்களுக்குக் கல்வி கிடைக்கணும். கல்வி ஒண்ணுதான் அவங்களை உயர்த்தும்னு நம்பிக்கை. அதுக்காகவே தன் வாழ்க்கையை வாழணும்னு கிறித்துவ மடத்துல சேர்ந்தா பாமா. ஆனா, அங்கயும் சமூகத்துல இருக்குற அத்தனை ஏற்றத்தாழ்வுகளும் இருந்தது. பண்பாடு, ஜாதி, மொழி, பணம்னு அங்கயும் ஏகப்பட்ட பிரிவினைகள்.

துக்கத்துல இருந்தாலும் சந்தோசமா இருக்குறமாதிரி காட்டிக்கிற பாவ்லா வாழ்க்கை அது. சமத்துவம், சகோதரத்துவம்ங்கிற கிறித்துவ மதிப்பீடுகள் அங்கே காணாமல் போய்கிட்டு இருந்துச்சு. பணக்கார பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க பாமா டீச்சர் தேவையில்லை. வேற யாராவது செஞ்சுட்டு போகட்டுமே.

பாமா என்ன நினைச்சுப் போனாளோ அது அங்க இல்ல. ஏழு வருசத்துக்கு அப்புறம் மடத்தை விட்டு வந்தாச்சு.
பெறகுதான் போராட்டம் ஆரம்பமாச்சி. ஒரு பொண்ணு மடத்தை விட்டு வந்துட்டான்னா அது அவ சார்ந்த குடும்பத்துக்கே மானக்கேடான விசயமா இருக்கும். அதனால வீட்டுக்கும் போக விரும்பலை. தனியாகவே வாழ்ந்துக்கலாம்னு முடிவு பண்ணி, மதுரையில வாடகைக்கு வீடு எடுத்து தங்கியாச்சு. வேலைக்காக அலைஞ்சிட்டு இருந்த நேரம். தொண்டையை அடைக்கிற துக்கம் இருந்துகிட்டே இருக்கு. அழுது முடிக்கவும் முடியல. நண்பர் ஒருத்தர் எழுதுனா துக்கம் தீரும்னார். எழுதிக் காட்ட, இலக்கியமா இருக்கு. முழுசா எழுதுன்னார். துக்கத்தை, வாழ்க்கையை எழுதின பிறகு அது ‘கருக்கு’ன்னு நாவலா வந்தது.
92-ம் வருசம் நாவல் வந்ததும் பல விசயங்கள் நடந்தது. இலக்கிய ஒலகத்துல மொழியிலயும் வடிவத்திலயும் புது முயற்சின்னாங்க. கிறித்துவ அமைப்புகள்ல இருந்து முணுமுணுப்பு வந்தது. உண்மையை எழுதினதால அதை அவங்க மறுக்கல. ஆனா, எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்ப்பார்க்காத எதிர்ப்பு. புதுப்பட்டி மக்கள், நம்ம ஊரப்பத்தி அசிங்கமா எழுதிட்டாளேன்னு கோவப்பட்டாங்க. ஊருக்குள்ள கொஞ்ச காலம் போக முடியல. படிச்ச பிள்ளைகள் நாவலைப் படிச்சி காட்டி ஊரைப்பத்தி பெருமையாதான் எழுதியிருக்கான்னு புரிய வைக்கவும். பாமாவைக் கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. பெறகு அவங்க கதைகளைச் சொல்லி இதையும் எழுதுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் ‘சங்கதி’, ‘வன்மம்’ன்னு நாவல் ரெண்டும் ‘கிசும்புக்காரன்’னு சிறுகதை தொகுப்பும் எழுதணும்னு நெனச்சி எழுதினது.
பாமா ஊர விட்டு வந்து பல வருசங்கள் ஆனாலும் பேசும்போது மொழி மாறியிருக்கே தவிர, எழுத ஒக்காந்தா புதுப்பட்டியோட மொழிதான் வந்து ஒக்காந்துக்குது. அந்த மொழிய எழுது பிரியமா இருக்கு. செல பேர் கெட்ட வார்த்தைகயை அப்படியே எழுதறதா சொல்றாங்க. இது கெட்ட வார்த்தை, இது நல்ல வார்த்தைன்னு சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல.

ஒரே வார்த்தை ஒருத்தருக்குக் கெட்டதாவும் இன்னொருத்தருக்கு நல்லதாகவும் தோணலாம். உண்மையைப் பதிவு பண்ணும்போது நல்லது, கெட்டது பார்க்கக்கூடாது.

யாரு பாமா? வாழ்க்கையை நேசிக்கிற, வாழ்க்கையை வாழத் துடிக்கிற மனுசி. அண்ணன், தம்பி, அப்பா, அம்மா, நண்பர்கள், சமுதாயம் கொடுத்த எத்தனையோ பிரச்னைகளுக்கு ஊடாக சந்தோசத்தை அனுபவிக்கிறவ பாமா. கடந்த காலத்தைப் பத்தியோ, எதிர்காலத்தைப் பத்தியோ கவலைப்படாம இந்த நிமிசத்துல வாழறவ. எல்லோரும் கேப்பாங்க, ‘வயசாயிட்டா என்ன பண்ணுவே?’ன்னு. தள்ளாத வயசு வரைக்கும் வாழ்வோம்னு யாரால சொல்ல முடியும்? பெத்த புள்ளைகளே தள்ளிப்போன்னு சொல்ற காலமிது. பணம் பிரதானமாயிட்ட காலத்துல உறவுகளுக்கு மரியாதை இல்லை. அதுக்கு இதுவே பரவாயில்லை. பாமா செத்துக்கிடந்தா எடுத்துப் போடுங்க. ஏன்னா, செத்ததுக்கு அப்புறம் பாமாவுக்கு கவலைப்பட ஒண்ணும் இல்லை. அதப்பத்தி நீங்கதான் கவலைப்படணும்!

குங்குமம் இதழில் ‘நான்’ என்ற தலைப்பில் தமிழிலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் சிலரை நேர்காணல் செய்து, அவர்கள் மொழியிலேயே ஒரு தொடர் எழுதியிருந்தேன். அதில் இடம்பெற்ற பாமாவின் தன் அறிமுகம் இது.
சென்னைக்குள்ளேயே நிருபராக பணியாற்றிக் கொண்டிருந்த நான், பாமாவைப் பார்க்க உத்தரமேரூர் போனதுதான் முதல் வெளியூர் பயணம். அதற்குப் பிறகு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு பயணித்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அந்தவகையில் ஒரு நல்ல அனுபவத்துக்கு பாமா தொடக்கமாக இருந்திருக்கிறார். அவருக்கு என் நன்றி.
தலித் இலக்கியத்தில் பாமாவின் எழுத்துக்களுக்கு தனித்த இடம் உண்டு. பள்ளி ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கும் அவர் நிறைய எழுத வேண்டும். அவருடைய ‘கருக்கு’ நாவலும் ‘கிசும்புக்காரன்’ சிறுகதை தொகுப்பும் அவசியம் படிக்க வேண்டியவை. தமிழில் ’கருக்கு’ நாவல் தள்ளுபடி விலையில் வாங்க ஆங்கிலத்தில் படிக்க 
கருக்கு அமேசானிலும் கிடைக்கும்

ஆண்கள் சமைத்தால் வேகாதா என்ன?”

”வாசிக்க வாசிக்க, எழுத்து மறைந்து, அதில் சொல்லப்பட்டு இருக்கும் வாழ்க்கை மட்டுமே மனதில் நிற்க வேண்டும். அதுதான் உண்மையான எழுத்து. உணர்வுமயமான எழுத்துதான் என்னை வசீகரிக்கிறது. நான் நெகிழ்ச்சியானவனாக இருப்பதால் என் எழுத்தும் நெகிழ்ச்சியானதாகவே இருக்கிறது!” என்கிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்.
மதுரகவி பாஸ்கரதாஸின் பேரன். சிறந்த சிறுகதை ஆசிரியர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக, சமூகம், கலை, பண்பாடு குறித்துத் தீவிரமாகச் செயல்படுபவர்…

”இலக்கியத்தில் இயங்குபவர்களுக்கு அரசியல் பார்வை இருக்கா? பெரும்பாலான பிரச்னைகளில் எழுத்தாளர்கள் மௌனம் சாதிக்கிறார்களே, ஏன்?”

”அரசியல் இல்லாமல் இந்தப் பூமியில் எதுவும் இல்லை. எனக்கு அரசியல் வாடையே ஆகாது என்று சொல்வதே ஒரு அரசியல்தான்! 1940களில் தஞ்சாவூர் பகுதியிலிருந்து மிகப் பெரிய எழுத்தாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். அதே காலகட்டத்தில் தஞ்சாவூர் பகுதிகளில் விவசாயக் கூலிகள் செய்கிற சிறு தவறுக்குக்கூட சாட்டை அடியும் சாணிப்பாலை வாயில் ஊற்றுகிற கொடுமைகளும் நடந்திருக்கின்றன. அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாமல், ஆண்பெண்ணுக்கு இடையில் உள்ள காதலை நுட்பமாக விவரிக்கிற எழுத்தையே அந்த மிகப் பெரிய எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். நடக்கிற அநியாயங்களைப் பார்த்து அமைதியாக இருப்பதும் அரசியல்தான். பெண்ணுடல் பற்றியும் காதலைப் பற்றியும் எந்தக் காலத்தில், எந்தச் சந்தர்ப்பத்தில் எழுதுகிறோம் என்பதிலும் அரசியல் இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனும் ஒகேனக்கல் பிரச்னைக்கு அறிக்கைவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதைச் சக மனிதர்களின் ஜீவாதாரப் பிரச்னையாக, அவலமாகத் தனது எழுத்தில் பதிவு செய்ய வேண்டிய தார்மிகப் பொறுப்பு இருக்கிறது!”

”அறிவொளி இயக்கத்தில் தீவிரமாக இயங்கியவர் நீங்கள். பாலியல் கல்வி, மாற்றுக் கல்வியின் அவசியங்கள் குறித்த விவாதங்கள், ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்குமா..?”

”நம் சமூகம் ஆணாதிக்கச் சமூகம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதை மாற்றி சமத்துவமான சமூகத்தை உருவாக்க, ஒரு கோடி விஷயங்கள் செய்ய வேண்டியிருக் கிறது. அதில் ஒரு சிறு முயற்சிதான் பாலியல் கல்வி!
ஆண் குழந்தைகள் 12 வயது வரை அம்மாவின் நெருக்கமான அரவணைப்பில் வளர்கிறார்கள். அதன் பிறகு, திருமணமாகி மனைவி வரும்போதுதான் அவனுக்குப் பெண்ணின் அரவணைப்பு கிடைக்கிறது. 12க்கும் 25க்கும் இடைப்பட்ட இந்த வருடங்களில்தான் ஒருவன் மனிதனாக மாறுகிறான். இந்தக் காலத்தில் ஆண், பெண் உறவு குறித்துச் சரியான புரிதல்கள் நம்மிடையே ஏற்படுவதில்லை. ஆண், பெண் உறவு குறித்த உரையாடல்களை மறுக்கிற சமூகமாக நம் சமூகம் இருக்கிறது. இயல்பாக ஓர் ஆணும் பெண்ணும் பேசுவது சாத்தியமற்றதாக இருக்கிறது. உடல்ரீதியான மாற்றங்கள் ஏற்படும் இந்தக் காலகட்டத்தில் ஆண்பெண் உடல் குறித்துத் தெளிவு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதைச் சொல்லாமல் விடும்போதுதான் பாலியல் குறித்த வக்கிரமான சிந்தனைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. வக்கிரமான சிந்தனை கள் பதிவான பிறகுதான், நாம் பாலியல் குறித்துப் பாடப் புத்தகங்கள் மூலம் சொல்லித் தருகிறோம். இது தவறான வழிமுறை. சிறு வயதிலேயே பாலியல் கல்வியைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதுதான் சமூகத்தை ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி நகர்த்தும்.
குழந்தைகளின் மூளைகளை காலியான பாட்டில்களாக நினைத்துக்கொண்டு இருக்கிறது நமது கல்வி முறை. அந்த பாட்டில்களை நிரப்பி அனுப்பும் வேலையையே பள்ளி, கல்லூரிகள் செய்கின்றன. ஆனால், உண்மையில் ஒரு நாளின் 24 மணி நேரமும் குழந்தைகள் ஏதோ ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆள்பவர்களுக்குத் தேவையான அலுவலர்களையும் அதிகாரிகளையும் உருவாக்குவதையே நோக்கமாகக்கொண்டு இருக்கிறது நமது கல்வி முறை. குழந்தைகளின் தனித் திறன்கள் அடையாளம் காணப்பட வேண்டும். மாற்றுக் கல்வி முறை அதற்கு வழி செய்யும்!”

”ஒருவழியாக உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது… ‘க்ரீமிலேயர்’ நிபந்தனையோடு! இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

”வருட வருமானம் இரண்டரை லட்சம் உள்ளவர்களைத்தான் ‘க்ரீமிலேயர்’ என்கிறார்கள். சாதாரணமாக ‘ஐ.ஐ.டி’, ‘ஐ.ஐ.எம்’ நுழைவுத் தேர்வுப் பயிற்சிகளுக்கே 80 ஆயிரம் வரைக்கும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. 20 ஆயிரம் சம்பளம் வாங்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால்கூட இவ்வளவு தொகை செலவழிக்க முடியாது. ‘க்ரீமிலேயர்’ என்பது ஏமாற்று வேலை!
உயர் கல்வியிலும் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பது கொள்கை ரீதியாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், அதற்குள் ஏராளமான ஓட்டைகள் இருக்கின்றன. 27 சதவிகிதத்தையும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டவர்களை மட்டுமே வைத்து நிரப்ப முடியாது. எனவே, மீதமிருப்பவற்றையும் பிற்படுத்தப்படுத்தப்பட்டவர்களுக்கே வழங்க வேண்டும், பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லக் கூடாது என்பதுதான் எங்கள் நிலை.”

”ஆண்களும் சமையல் கட்டுக்குப் போக வேண்டும் என்று நீண்ட காலமாகச் சொல்லிவருகிறீர்களே… நம் சமூகத்தில் இது சாத்தியமா?”

”சமைப்பது பெண்களுக்கு மட்டுமேயானது என்பதைக் கேள்விக்குள்ளாக்கத்தான் ‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’ என்ற புத்தகத்தை எழுதினேன். உலகிலேயே சமைப்பதுதான் அதிமுக்கியமான வேலை. கவனம், உடல் உழைப்பு, தொழில் நுட்பம், அக்கறை எல்லாம் சேர்ந்தது சமையல் வேலை. இப்படி பெரும்சுமையான வேலையை ஆயிரம் ஆண்டுகாலமாக பெண்கள் தலையிலேயே சுமக்க வைத்துக்கொண்டு இருக்கிறோம்.
‘நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறாமல் மனித குல விடுதலை சாத்தியமில்லை’ என்றார் லெனின். வீட்டு வேலை செய்து பார்த்தால்தான் அவர் சொன்னதன் அர்த்தம் தெரியும். வியாபார ரீதியான எல்லா இடங்களிலும் ஆண்கள்தான் சமைக்கிறார்கள். வீட்டில் சமைத்தால் மட்டும் வேகாதா என்ன?”

”எழுத்தாளர் என்பதையும் தாண்டி பண்பாட்டுத் தளத்திலும் செயல்பட்டு வருகிறீர்கள். பண்பாட்டுத் தளத்தில் செயல்படுவதற்கான தேவை இங்கே இருக்கிறதா?”

”அரசியல், பொருளாதாரம், பண்பாடு என மூன்று தளங்களில் இயங்குகிறது சமூகம். அரசியல், பொருளாதாரத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பண்பாட்டுத் தளத்திலிருந்துதான் தொடங்குகின்றன. ஆனால், அந்த மாற்றங்கள் பற்றிய அக்கறையே இல்லாத சமூகமாக இருக்கிறோம்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் மதச் சார்புள்ள விஷயங்கள் பயங்கரமாக வளர்ந்திருக்கின்றன. மக்களை மதவாதிகளிடம் சுலபமாகத் தள்ளுவதற்கான சூழல் இங்கே உருவாகியிருக்கிறது. இதைத் தடுக்க பண்பாட்டுத் தளத்தில் நாம் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. இல்லையென்றால், நாளை தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது!”
நன்றி: ஆனந்த விகடன்