நான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்?

பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளை, அச்சுறுத்தல்களை, உடல் ரீதியான துன்புறுத்தலை வெளியே கொண்டுவரப்பட்டதற்காக தொடங்கப்பட்டதே மீ டூ இயக்கம். உலகம் முழுக்க பல்வேறு துறைகளில் ஆண்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்கள் மீ டூ இயக்கத்தின் மூலம், தொடர்புடைய சம்பவங்கள் நடந்து பல ஆண்கள் ஆனது போதும் இப்போது வெளியே சொன்னார்கள். தனியாக ஒலிக்கும் குரலுக்கு இத்தனை வீரியம் இருந்திருக்காது; கூட்டுக்குரலாக ஒலிக்கும்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இது வெறுமனே பாலியல் சுரண்டலுக்கு எதிரான குரலாக மட்டுமே பார்த்து, ‘எனக்கு நடக்கவில்லை’ அல்லது ‘எங்கள் குடும்பத்தில் யாருக்கும் நடக்கவில்லை’ என பலர் ஒதுங்கிப் போகக்கூடும். பாடகர் சின்மயி மூலம் தமிழகத்தில் பேசுபொருளாகியிருக்கும் மீ டூ இயக்கத்தின் மூலம், பல முகம் காட்ட விரும்பாத பெண்கள், பொதுவெளியில் தங்களுக்கு நேர்ந்த அச்சுறுத்தல்களை முன்வைத்திருக்கிறார்கள். இது வெறுமனே சின்மயி-வைரமுத்து போன்ற சினிமா பிரபலங்களுக்குள் நடக்கும் பிரச்சினை அல்ல என்பதை நாம் உணர வேண்டும். நம் வீட்டுப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை.

பெரும்பாலும் முதல்தலைமுறையாக பெண்கள் பணிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கும் சூழலில் 90 சதவீதம் பெண்கள் இத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். சில பெண்கள் தங்களுக்குள்ளாகவே இத்தகைய ஒடுக்குமுறைகள் பேசி கடந்துவிடுகிறார்கள். சிலர் கூட்டாக இணைந்து அத்துமீறல் செய்யும் ஆண்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்கிறார்கள். சில வேலைக்குச் செல்வதே வேண்டாம் என முழுக்குப் போடவும் செய்கிறார்கள். இறுதியில் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கும் ஆண்கள் தொடர்ந்து இதையே அடுத்து வருகிற பெண்களுக்கும் செய்ய துணிகிறார்கள். மீ டூ இயக்கத்தில் பேசப்பட்ட இத்தகைய ஒடுக்குமுறை விஷயங்கள் எவை எவை?

Abuse – துன்புறுத்தல்: ஒரு நபர் இன்னொருவர் மீது உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, உளவியல்ரீதியாகவோ, பொருளாதாரரீதியாகவோ துன்புறுத்துவது. உதாரணத்துக்கு, அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஆண், ஒரு பெண்ணை அவருடைய விருப்பத்துக்கு மாறாக இணங்க வற்புறுத்தி அதை அந்தப் பெண் மறுக்கும்போது, அவளுடைய இன்கிரிமெண்ட், ப்ரோமோஷனில் கை வைப்பதுகூட துன்புறுத்தல் வகையைச் சேர்ந்ததுதான்.

Boys’ club – பணியிடத்தில் ஆண்கள் மட்டும் ஒரு குழுவாக இயங்குவது. பெரும்பாலான பணியிடச்சூழலில் இது நடக்கும். இவர்கள் சேர்ந்து அலுவலக பெண்கள் கிண்டலடிப்பார்கள், அவர்களுக்குள் பாலியல் ஜோக்கடித்து உரக்க சிரிப்பார்கள், பெண்களை மோசமாக பேசுவார்கள். அதாவது, பெண்களை ஒரு பொருட்டாக மதிக்காது; எல்லா இடமும் ஆணுக்கானதுதான் என நிறுவ முயல்வதும் ஒடுக்குமுறையே!

Male entitlement- வேறு எந்த தகுதியும் தேவையில்லை, ஆண் என்ற தகுதியே சமூக அந்தஸ்துகளை பெற போதுமானது என கருதுவது. பணியிடங்களில் ஒரு குறிப்பிட்ட பணியை ஆணால் மட்டுமே செய்ய முடியும் என சொல்வார்கள். குறிப்பாக தமிழ் ஊடகங்களில் புலனாய்வு நிருபர் பணிக்கு பெண்களை சேர்த்துக்கொள்ளாமல் இருப்பதை சொல்லலாம்.

Mansplaining – ஆண்களுக்கு எல்லாம் தெரியும்: தனக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போல சில ஆண்கள் தேவைப்படுமா இல்லையா என்பதைக்கூட அறிய முற்படாமல் அறிவுரைகளை கூறுவார்கள். பொதுவாக, பெண்களை நெருங்குவதற்காக ஆண்கள் இதை செய்வார்கள்.

Molesting – விருப்பமில்லாமல் அழைத்தல்: ஒரு பெண்ணை அவளுடைய விருப்பம் இல்லாமல் அல்லது அவளால் நிராகரிப்புக்கு ஆளான பின்னும் பாலியல் உறவுக்கு அழைப்பது.

Negative questioning – எதிர்மறையாக கேட்பது: இதை நிறைய பெண்கள் எதிர்கொண்டிருக்கலாம். அதாவது இரட்டை அர்த்தத்தில் பேசிவிட்டு, தாங்கள் எதிர்பார்க்கும் பதிலை எதிர்ப்பார்ப்பார்கள்.

Negging – உணர்வுரீதியான துன்புறுத்தல்: ஒருவரின் தன்னம்பிக்கையை குறைக்கும் வகையில் எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டிருப்பது.

Policing – கண்காணித்தல்: ஒரு நபரின் செயல்பாடுகளில் விருப்பம் இல்லாமல் ஒரு பெண் ஒதுங்கி தன்னுடைய பணிகளை செய்ய விரும்பினாலும் அந்த நபர் விடாது அந்தப் பெண்ணை கண்காணித்துக்கொண்டே இருப்பது. இதை செய், அது கூடாது என அந்தப் பெண்ணை கட்டுப்படுத்த நினைப்பது.

ஆண்களின் இயல்பே இதுதானா?

பெண்களின் மீது ஈர்ப்பு கொள்வது ஆண்களின் இயல்பு. எனவே, பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலின ஒடுக்குமுறைகள் நிகழத்தான் செய்யும் என வாதிடுகிறார்கள். இதில் முதல் பாதி மட்டுமே உண்மை. ஆண்கள் மீது ஈர்ப்பு கொள்வது பெண்களுக்கும்கூட இயல்பாக நிகழக்கூடியது. அதை பெண்கள் எப்படி கையாள்கிறார்கள். ஆண்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். உணர்வுகளை கட்டுப்படுத்தி, பண்படுத்திக்கொள்ளும் கண்ணியமான ஆண்களும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், பாலின ஒடுக்குமுறை என்பது ஆணுக்கு கிடைக்கும் அளவற்ற அதிகாரத்தின் விளைவாக நடப்பது. இதை தொடர்புடைய ஆண்கள் அவமானமாக கருத வேண்டும் என்பதாலேயே மீ டூ இயக்கத்தை ‘பெயர்களை சொல்லுதல் -அவமானம் கொள்ளச் செய்தல்’ என அழைக்கிறார்கள்.

தனக்காக, தன் குடும்பத்துக்காக பணிபுரிய வருகிற ஆணுக்கு இருக்கும் அதே நிர்பந்தமும் லட்சியமும் பெண்ணுக்கும் இருக்கும். பஞ்சாலைக்கு தின சம்பளத்துக்கு செல்கிற பெண்ணுக்கும் அல்லது ஐடி நிறுவனத்தில் மாதச் சம்பளம் வாங்கும் பெண்ணுக்கும் அவரவர்க்குண்டான வாழ்வியல் நிர்பந்தங்கள் இருக்கும். அதை அதிகாரத்தால் சிதைக்க நினைப்பதே ஆணாதிக்கம். இந்த ஆணாதிக்க சூழலை மாற்ற முனைந்திருக்கும் கூட்டுக்குரல் மீ டூ. நமக்கு அல்லது நமது வீட்டினருக்கு அல்லது நமக்கு தெரிந்தவர்களுக்கு இந்த ஒடுக்குமுறைகள் நடந்திருக்கலாம். சினிமா ஆட்களின் பெயர்கள் அடிபடுவதால் ஏதோ கிசுகிசு போல எண்ணி நகர்ந்துவிடாமல், இந்த இயக்கத்தை ஆதரிப்பது நமது கடமை. ஏனெனில், பணியிடங்களில் பாலியல் சமத்துவம் என்பது நமக்கு பின்னால் வருகிற அடுத்தடுத்த தலைமுறை பெண்களுக்கு நாம் பெற்றுத்தர வேண்டிய உரிமை.

வினவு தளத்தில் வெளியானது எனது கட்டுரை.

#metoo: இதுவரை என்ன நடந்தது? ஒரு முழுமையான அறிக்கை!

இந்தியாவில் மீ டூ இயக்கம் கடந்த மூன்று வாரங்களாக பேசுபொருளாகியிருக்கிறது. இதுவரை பேசத்துணியாத பல துறைகளைச் சேர்ந்த பெண்கள் கூட்டுக்குரலாக பணியிடங்களில் ஆண்களால் எதிர்க்கொண்ட ஒடுக்குமுறை, பாலியல் வன்முறைகளைப் பேசினர். இதில் மோடி அரசின் பங்குபெற்றிருந்த அமைச்சர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டும் அடக்கம்.

பாதிக்கப்பட்ட பெண்களின் அனுபவ பகிர்வுகளிலிருந்து அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையேதான் பணியாற்றி வந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இந்த இயக்கம் பெண் பணியாளர்களின் உரிமைகள் குறித்த உரையாடலை உண்டாக்கியது. ஒடுக்குமுறை, வன்முறையற்ற, பாதுகாப்பான பணியிடத்தை பெண் பணியாளர்களுக்கு உருவாக்கித்தர வேண்டும் என்கிற பேச்சுக்களையும் அது உருவாக்கியது. சட்ட ரீதியாக அணுகுவது உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெறுவது குறித்தும் பேசப்பட்டது. இன்னொரு பக்கம், பெயர் சொல்லப்படாமல் வெளிவரும் புகார்களை கையாள்வது எப்படி எனவும் பேசினார்கள். தலித், ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களின் குரல்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.

இந்த இயக்கத்தின் மிகப் பெரிய வெளிப்பாடாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பரின் பதவி விலகலைச் சொல்லலாம். 1980களிலிருந்து 1990களின் தொடக்கம் வரை 16க்கும் மேற்பட்ட பெண்கள் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டினர். பாஜகவில் இணையும் முன் டெல்லியில் பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது நடந்த சம்பவங்கள் இவை. முதன்முதலில் இவர் பெயரைச் சொன்ன பத்திரிகையாளர் ப்ரியா ரமானி மீது இவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

மீ டூ இயக்கம் செப்டம்பர் 25-ஆம் தேதி வேகமெடுத்தது. பாலிவுட் நடிகர் தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா பட்டேகர் மீது பாலியல் வன்கொடுமை புகார் சொன்னார். இந்த சம்பவம் 10 ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்பு தளத்தில் நடந்ததாக அவர் கூறினார். அதன்பின், அக்டோபர் 4-ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த மஹிமா குக்ரேஜா என்ற இளம் நகைச்சுவை நடிகர், தன் சக நகைச்சுவை நடிகரான உத்சவ் சக்ரவர்த்தி மீது பாலியல் ஒடுக்குமுறை கூறினார். உத்சவ் மீது மேலும் ஒரு பெண் குற்றம்சாட்டினார். அடுத்த நாள் பெங்களூருவைச் சேர்ந்த பகுதி நேர பத்திரிகையாளர் சந்தியா மேனன், மூன்று வெவ்வேறு பத்திரிகைகளில் தனக்கு நேர்ந்த பாலியல் ஒடுக்குமுறைகள் குறித்து எழுதினார். த வயரில் பணியாற்றும் அனு பூயான், வேறொரு பத்திரிகையில் தனக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

அரசியல், ஊடகம், பொழுதுபோக்கு, கலை, சட்டம், விளையாட்டு, கல்வி, தொழில்துறை உள்ளிட்ட 14 துறைகளைச் சார்ந்த வெளியான மீ டூ குற்றச்சாட்டுக்களின் தொகுப்பு இங்கே…

பத்திரிகை துறை:

மீ டூ இயக்கத்தின் வாயிலாக வெளியான பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களின் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய, பழமையான ஆங்கில செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை இழந்துள்ளனர். அதோடு, பலர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு, நிறுவனத்துக்குள்ளே அல்லது வெளியே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

டி.என்.ஏ-வின் முன்னாள் ஆசிரியரும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஆசிரியராக பணியாற்றியவருமான கவுதம் அதிகாரி, US think-tank Centre for American Progress (CAP) என்ற அமைப்பிலிருந்து வெளியேறினார். இவர் மீது மூன்று பெண்கள், விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார் என குற்றம்சாட்டியிருந்தனர்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஹைதராபாத் பதிப்பின் ஆசிரியரான கே. ஆர். ஸ்ரீனிவாஸ் மீது பத்திரிகையாளர் சந்தியா மேனன் உள்ளிட்ட ஆறு பெண்கள் அவருடைய தலைமையகத்தில் புகார் அனுப்பினர்.

த வயரில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது, நிஷ்தா ஜெயின் என்ற திரை இயக்குநர் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் வினோத் துவாவின் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நிஷ்தா ஜெயின் அளித்த புகாரை விசாரிக்க தனி குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.

ஹிந்துஸ்தான் டைம்ஸின் மூத்த பத்திரிகையாளர் பிரசாந்த் ஜா தன்னுடைய பதவியை விட்டு விலகினார். இவர் மீது வழக்கறிஞராக உள்ள அவந்திகா மேத்தா புகார் கூறியிருந்தார். இவர்கள் இருவருக்கிடையே நடந்த குறுஞ்செய்தி பறிமாற்றங்கள் பொதுவெளியில் வெளியானபோது, தார்மீக அறத்தின் அடிப்படையில் பதவி விலகுவதாக பிரசாந்த் ஜா அப்போது கூறினார்.

பிஸினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையின் நிருபர் மானக் ஜெயின் மீது தனது மறுப்பை தெரிவித்தபோதுமம் பாலியல் உறவுக்கு அழைத்ததாக த வயரின் அனு பூயான் குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். இதனால் மானக் ஜெயின் பதவி விலகினார்.

தி இந்துவின் கவுரிதாசன் நாயர், யாமினி நாயர் மற்றும் சிலர் பாலியல் ரீதியாக தவறாக நடந்ததாக குற்றம்சாட்டியிருந்தனர். இதனால் இவரை அலுவலக விடுப்பில் அனுப்பியது தி இந்து.

என்டிடீவி தன்னுடைய பணியாளர் ஒருவருக்கு எதிரான பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டை விசாரிப்பதாக உறுதியளித்தது.

ஹஃபிங்டன் போஸ்ட் தன்னுடைய முன்னாள் பணியாளர்கள் அனுராக் வர்மா, உத்சவ் சக்ரவர்த்தி மீதான புகார்களை விசாரிக்க உள்விசாரணைக்குழு அமைத்திருப்பதாக கூறியது.

க்விண்ட் இணையதளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர், தன் சக பெண் பத்திரிகையாளரிடம் முறை தவறி நடந்துகொண்டதற்காக மன்னிப்புக் கேட்டார். மேக்நாத் போஸ் என்ற பத்திரிகையாளர் மீது ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரியில் உடன் படித்த பெண் அளித்த பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டின் காரணமாக நிர்வாக விடுப்பில் அனுப்பப்பட்டார்.

நியூஸ் லாண்ட்ரி இணையத்தளத்தின் பணியாற்றும் அலுவலர் மீது எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க உள் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலர்கள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா மீ டூ குற்றச்சாட்டுக்களை முக்கியத்துவம் கொடுத்து கவனிப்பதாக அறிக்கை வெளியிட்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் பணியிடங்களில் பாலியல் ஒடுக்குமுறை குறித்த சிறப்பு பயிற்சி பட்டறைகளை நடத்துவதாக அறிவித்தது.

டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியது. எடிட்டர்ஸ் கில்டு செய்தியறைகளில் நடக்கும் பாலியல் ஒடுக்குமுறை குறித்து அறிக்கை வெளியிட்டது.

மும்பை பத்திரிகையாளர் மன்றமும் ஊடக பெண்கள் நெட்வொர்க்கும் இணைந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிப்பதாக அளிக்கை வெளியிட்டன. பாலியல் ஒடுக்குமுறை தொடர்பான சட்டங்கள் குறித்த விவாதம் ஒன்றையும் நடத்தின. இந்திய பத்திரிகையாளர் மன்றம், பெண் பத்திரிகையாளர் அமைப்பு, தெற்காசிய பெண் ஊடவியலாளர்கள் அமைப்பு ஆகியவை இணைந்து பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டங்கள் பணியிடங்களில் அமல்படுத்தப் படாததற்கு கண்டனம் தெரிவித்தன. ஃபர்ஸ்போஸ்ட் இணையதளம் மீடூ உரையாடல் என்ற பெயரில் மீ டூ இயக்கத்தில் வெளியான பாலியல் ஒடுக்குமுறைகள் குறித்த நிகழ்ச்சியொன்றை நடத்தி வருகிறது. இந்திய செய்தி அறைகளில் நடக்கும் பாலியல் ஒடுக்குமுறைகள் குறித்த சர்வே ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறது ஊடக பெண்கள் நெட்வொர்க்.

அடித்தளத்தில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர்களின் ‘கபார் லஹரியா’ என்ற அமைப்பைச் சேர்ந்த பெண் நிருபர்கள் பிந்தங்கிய, கிராமப்புறங்களில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படையாக எழுதியிருந்தனர். இப்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் விழிப்புணர்வு காரணமாக போர்னோ வீடியோக்கள், பாலியல் நகைச்சுவை துணுக்குகள் அனுப்பிக்கொண்டிருந்த ஆண்கள், அதை நிறுத்தியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

அரசியல்

ஏசியன் ஏஜ் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம்.ஜே. அக்பர் மீது இதுவரை 16 பெண்கள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களை சொல்லியிருக்கிறார்கள். வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்த அவர், இந்த குற்றச்சாட்டுக்களின் காரணமாக ராஜினாமா செய்தார். பத்திரிகையாளர் ப்ரியா ரமானி மீது அக்பர் தொடுத்திருக்கும் அவதூறு வழக்கை திரும்பப் பெற எடிட்டர் கில்டு கோரியிருந்தது. மிண்ட் பத்திரிகையின் வாராந்திர இணைப்பான லாங்க்’ இல் ப்ரியா ரமானி பத்தி எழுதிவருகிறார். ப்ரியாவுக்கு தங்களுடைய ஆதரவை தரும் பொருட்டு, பத்தி எதுவும் வெளியிடாமல் அந்த இடத்தில் ‘நாங்கள் ப்ரியாவுடன் இருக்கிறோம்’ என்ற ஹேஷ் டேக் மட்டும் பிரசுரித்திருந்தது மிண்ட்.

பத்திரிகையாளர் அமைப்புகள் அனைத்தும் அமைச்சருக்கு எதிராக நின்றன. மணி கண்ட்ரோல் என்ற இணையதளத்தின் ஆசிரியர் சுசித்தா தலால் மற்றும் பத்திரிகையாளர் ஹரீந்தர் பவேஜா ஆகியோர் ப்ரியாவின் வழக்கு செலவுகளுக்காக நிதி திரட்டி தருவதாக அறிவித்தனர்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அக்பரின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பாவிட்டாலும் பாலியல் ஒடுக்குமுறைகளை குறித்து பேசும் பெண்களின் மன உறுதியை பாராட்டினார். அதே சமயம் பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் மீ டூ இயக்கம் வக்கிரபுத்தி உள்ளவர்களின் செயல்பாடு என்றார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி, இந்த இயக்கத்தை அதரித்தார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அரசு பாலியல் ஒடுக்குமுறைகளை எதிர்க்கொள்ள சட்ட மற்றும் அமைப்பு ரீதியிலான குழு ஒன்றை அமைத்தது. மேனகா காந்தி பாலியல் ஒடுக்குமுறையில்லாத பணியிடத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மூத்த நீதிபதி மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். ஊடக நிறுவனங்கள் மற்றும் மாநில, தேசிய கட்சிகள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களை விசாரிக்க உள்விசாரணைக்குழு அமைக்க வேண்டும் எனவும் கோரினார்.

தேசிய பெண்கள் ஆணையம் பணியிடத்தில் பாலியல் ஒடுக்குமுறை குறித்து விசாரிக்க சிறப்பு மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டது. மின்னணு புகார் பெட்டி ஒன்றை அமைத்ததோடு, புகார் பதியப்பட்டவுடன் தொடர்புள்ள துறைக்கு அந்த புகாரை தானாகவே அனுப்பும் முறையையும் அறிமுகப்படுத்தியது.

டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டவர்களை விசாரிக்க தனி விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதோடு டெல்லி பெண்கள் ஆணையமும் மீ டூ புகார்களை அளிக்க தனி மின்னஞ்சல் முகவரியை ஏற்படுத்தியது.

அரசியல் தலைவர்கள் பலர் மீ டூ இயக்கத்தை பொதுப்படையாக ஆதரித்தாலும் வழக்கம்போல மோடி தனது வாயைத் திறக்கவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற வக்கிர புத்தி கொண்ட அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பெண்களை வக்கிரபுத்தி படைத்தவர்கள் என குற்றமசாட்டினார்கள்.

இளைஞர் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஃபெரோஸ் கான் என்பவர் பதவி விலகினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சச்சின் பைலட், சல்மான் குர்ஷித், விவேக் தன்ஹா, கபில் சிபல், ஸ்ரீனிவாஸ் பி.வி., சசி தரூர் போன்றோர் மீ டூ இயக்கத்தை வரவேற்றனர்.

மத்திய அமைச்சர் உமா பாரதி, இந்த இயக்கம் பணியிடத்தில் பெண்களுக்கு நல்லதொரு மாற்றத்தை உண்டாக்கும் என தெரிவித்தார். பாஜக எம்பிக்கள் மீனாட்சி லேகி மற்றும் பூனம் மஹாஜன் ஆகியோரு வரவேற்றனர்.

திமுக எம்.பி. கனிமொழி தனது ஆதரவை தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களை நம்ப வேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். மலையாள நடிகரும் சிபிஎம் எம்.எல்.ஏவுமான முகேஷ் குமாருக்கு எதிராக டெஸ் ஜோசப் என்பவர் சொன்ன குற்றச்சாட்டின் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என கோரப்பட்டது.

பாலிவுட்டில் மீ டூ!

தனுஸ்ரீ தத்தா, நானா பட்டேகர் மீது சொன்ன குற்றச்சாட்டு இந்தியாவின் ஹார்வி ஹெயின்ஸ்டீன் தருணம் என பலரும் கூறுகிறார்கள். 2008-ஆம் ஆண்டு இதே குற்றச்சாட்டுக்களை தனுஸ்ரீ சொன்னபோது, எவரும் கண்டுகொள்ளவில்லை. இம்முறை ஊடகங்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டன.

’ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பின்போது நானா பட்டேகர் பாலியல் ஒடுக்குமுறையில் ஈடுபட்டதாக தனுஸ்ரீ குற்றம்சாட்டினார். இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி (அறிவுஜீவிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்களை அர்பன் நக்ஸல் என்ற முத்திரை குத்திய நபர்-அதே பெயரில் நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்) மீது இழிவாக பேசுதல், ஒடுக்குமுறை புகாரை தனுஸ்ரீ கூறியிருந்தார்.

மகாராஷ்டிர பெண்கள் ஆணையம் நானா பட்டேகர், படத்தின் இயக்குநர் ராகேஷ் சாரங் மற்றும் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இவர் மூவர் மீதும் தயாரிப்பாளர் சாமீ சித்திக் மீதும் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இவர்கள் நால்வரும் தனுஸ்ரீ மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

சினிமா பெண்களுக்கான அமைப்பு தனுஸ்ரீக்கு ஆதரவளித்தது. சினிமா மற்றும் டிவி நடிகர்கள் சங்கம் 2008-ஆம் ஆண்டு தனுஸ்ரீ கொடுத்த புகாரை பதிய மறுத்ததற்காக மன்னிப்பு கோரியது. நானா பட்டேகர் மீதான போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்திழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த போராட்டக்குழுவினர் தனுஸ்ரீக்கு ஆதரவளித்தது.

அடுத்து பாலிவுட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் பிரபல நடிகர் அலோக் நாத். எழுத்தாளர்-இயக்குநர்- தயாரிப்பாளர் வினிதா நந்தா இவர் மீது பாலியல் வல்லுறவு புகார் கூறியதோடு, காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்தார். நடிகர்கள் சந்தியா மிருதுள், தீபிகா அமீன் ஆகியோர் அலோக் நாத் மீது பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டைக்கூறினர். திரை எழுத்தாளர்கள் அமைப்பு, வினிதாவுக்கு ஆதரவளித்தது. விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தியது. பிரதமர் நரேந்திர மோடிக்கு, வினிதா எழுதிய கடிதத்தில் நீதியை நிலைநாட்ட இந்தப் பிரச்சினையில் தலையிடுமாறு கோரியிருந்தார். (மோடியின் மவுனம் இன்னமும் களையவில்லை.)

பாலிவுட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளான மூன்றாவது பெரிய பெயர், இயக்குநர் சஜீத் கான். பத்திரிகையாளர் கரிஷ்மா உபாத்யாய், நடிகர்கள் ரேச்சர் ஒயிட், சிம்ரன் சூரி உள்ளிட்ட பலர் இவர் மீது குற்றம்சாட்டினர். இந்திய சினிமா இயக்குநர்கள் சங்கள், இந்த புகார்கள் குறித்து விளக்கம் அளிக்கும்படி சஜீத் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ஹவுஸ்ஃபுல்-4 படத்தின் இயக்குநராக பணியாற்ற இருந்த சஜீத் நீக்கப்பட்டார். நானா பட்டேகரும் இந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான அக்‌ஷய் குமார் இவர்கள் மீதான குற்றச்சாட்டு காரணமாக இவர்களை நீக்கினார்.

நான்காவது நபர், இயக்குநர் விகாஸ் பால். ஹஃபிங்டங் போஸ்ட் வெளியிட்ட விசாரணையில் ‘குவின்’ படப்பிடிப்பின்போது ஒரு பெண்ணை எத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கினார் என தெரியவந்தது. இந்தப் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கங்கணா ரணவத், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவளித்தார். விகாஸ் தன்னிடம்கூட முறை தவறி நடந்ததாக கங்கணா பேசினார். அமேசான் பிரைம்-க்காக தயாரிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியிலிருந்து விகாஸ் நீக்கப்பட்டார். அனுராக் காஷ்யப், விக்ரமாதித்ய மோட்வானி, மது மண்டேனா, விகாஸ் பால் ஆகியோர் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனத்திலிருந்து விகாஸ் நீக்கப்பட்டார். நடிகர் ஹிரிதிக் ரோஷன், விகாஸ் இயக்கவிருந்த படத்திலிருந்து அவரை நீக்குமாறு தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டார்.

பாலிவுட்டைச் சேர்ந்த பலர் மீது இப்படிப்பட்ட புகார்கள் குவிந்தன. நடிகர் ரஜத் கபூர் மீதான புகார் காரணமாக அவர் நடிக்கவிருந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார். தன்னுடைய செயலுக்காக அவர் மன்னிப்பு கேட்டார்.

யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் வர்த்தக தலைவர் ஆசிஸ் பட்டேல் மீதான குற்றச்சாட்டின் காரணமாக அவர் நிர்வாக விடுவிப்பில் அனுப்பப்பட்டார். ஃபாஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், இயக்குநர் முகேஷ் சப்ராவை தங்களுடைய தயாரிப்பிலிருந்து நீக்கியது. நான்கு பெண்கள் புகார் அளித்ததன் காரணமாக திரை விமர்சகர் சிபாஜி ராய்சவுத்ரியின் ஒப்பந்ததை ரத்து செய்தது டைம்ஸ் நவ். இயக்குநர் ஈரே கவுடா மீதான குற்றச்சாட்டின் காரணமாக ‘பாலேகெம்பா’என்ற படத்தை திரை விழாக்களில் திரையிடப்போவதில்லை என அறிவித்தது அந்தப் பட தயாரிப்பு நிறுவனம்.

தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவளிக்க மறுத்த அபிதாப் பச்சன், கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பொத்தாம் பொதுவாக எந்த பெண்களும் பாதிக்கப்படக்கூடாது என அறிக்கை வெளியிட்டார். நடிகர் அமீர்கானும் இயக்குநர் கிரண் ராவும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் பெயர் குறிப்பிடாத ஒரு சகபணியாளருடன் இனி ஒருபோதும் பணிபுரியப்போவதில்லை என தெரிவித்தனர். இவர்கள் அடுத்து தயாரிக்க விருந்த படத்தை சுபாஷ் கபூர் இயக்கவிருந்தார். அவர் மீது பலர் புகார் கூறியிருந்தனர். இதுபோல பூஷன் குமார், ஏக்தா கபூர் ஆகியோரும் சுபாஷ் கபூரை தங்களுடைய தயாரிப்புகளிலிருந்து நீக்கினர்.

பாலிவுட் நடிகர்கள் எம்ரான் ஹாஸ்மி, ராதிகா ஆப்தே, ஃபர்ஹான் அக்தர், பிரியங்கா சோப்ரா, எழுத்தாளர் சோபா டே ஆகியோர் மீ டூ இயக்கத்தை ஆதரித்தனர். ஸ்டார் டிவி குழுமம் இந்த இயக்கத்தை ஆதரித்தது. கொங்கனா சென் சர்மா, நந்திதா தாஸ், கவுரி ஷிண்டே, சோனாலி போஸ், கிரண் ராவ், ஸோயா அக்தர் உள்ளிட்ட 11 பெண் இயக்குநர், குற்றம்சாட்டு நிரூபிக்கப்பட்ட நபர்களுடன் பணிபுரியப் போவதில்லை என அறிக்கை வெளியிட்டனர். நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து இந்தத் துறையில் உள்ள பாலியல் புகார்களை விசாரிக்க சிறப்புக்குழு அமைக்க ஒப்புக்கொண்டன.

தென்னிந்திய சினிமாவில் மீடூ!

2017-ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட குற்றச்சாட்டில் நடிகர் திலீப் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’விலிருந்து விலகினார். இவருடைய விலகலை தலைவராக உள்ள மோகன்லால் ஏற்றுக்கொண்டார். ஆனால் நடிகர் சங்கம் திலீப்புக்கு ஆதரவாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இதன்காரணமாக ‘அம்மா’விலிருந்து பலர் விலகினர். மலையாள சினிமாவில் பணியாற்றும் பெண்கள் இணைந்து பெண்கள் அமைப்பொன்றை தொடங்கினர். இந்த அமைப்பு திலீப்புக்கு ஆதரவாக அம்மா செயல்படுவதாக குற்றம்சாட்டியது. பணியிடங்களில் பாலியல் ஒடுக்குமுறைகளை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தில் சினிமா பெண்கள் அமைப்பு வழக்கு ஒன்றையும் கேரள உயர்நீதிமன்றத்தில் தொடுத்தது.

தெலுங்கு திரைப்பட உலகம், பெண்கள் தங்களுடைய புகார்களை தெரிவிக்க தொடர்புகொள்ள வேண்டியவர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டது. தெலுகு ஃபிலிம் சேம்பர், ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திலும் புகார்களை பெற குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.

கன்னட நடிகர், இயக்குநர், தொழிற்நுட்ப கலைஞர்களைக் கொண்ட சுதந்திர அமைப்பொன்றை கன்னட சினிமா துறை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு இந்தத் துறை சார்ந்த பாலியல் ஒடுக்குமுறை புகார்களை பதிவு செய்து விசாரிக்கும்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் தலைவராக உள்ள விஷால், பாலியல் ஒடுக்குமுறை புகார்களை விசாரிக்க மூன்று நபர்கள் அடங்கிய குழு அமைத்துள்ளதாக அறிவித்தார். பாடகர் சின்மயி மற்றும் லீனா மணிமேகலைக்கு ஆதரவளிக்கும் வகையில் தென்னிந்திய சினிமா பெண்கள் அமைப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. சின்மயி -உடன் மேலும் இரண்டு பெண்கள் கவிஞர் வைரமூத்து மீது குற்றம்சாட்டியிருந்தனர். லீனா மணிமேகலை இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டை கூறியிருந்தார். நடிகர் அமலா பால், லீனாவுக்கு ஆதரவளித்ததோடு, சுசு கணேசன் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

பொழுதுபோக்கு துறை

சிறுமிகள் உள்பட பல பெண்கள் ஸ்டேண்ட் அப் காமெடியன் உத்சவ் சக்ரவர்த்தி மீது குற்றம்சாட்டியிருந்தனர். தன்னுடைய செயலுக்காக உத்சவ் மன்னிப்புக்கேட்டார். நகைச்சுவையாளர்கள் குழுமத்தின் நிறுவனராக உள்ள தன்மய் பட், உத்சவ் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அந்த குற்றச்சாட்டுக்களை கண்டுகொள்ளாமல் உத்சவு-க்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதாக விமர்சிக்கப்பட்டார்.
இந்த அமைப்பின் நிகழ்ச்சியை ஹாட் ஸ்டார் ரத்து செய்தது. பழைய நிகழ்ச்சிகளையும் நீக்கியது. சக பெண் நகைச்சுவையாளரிடம் முறை தவறி நடந்துகொண்டதற்காக அதிதி மிட்டல் மன்னிப்புக்கேட்டார்.

குறும்பட தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் சிந்தன் ரூப்ரேல் தன் மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக பதவி விலகினார்.

இசைத்துறை

ஒளிப்படக்கலைஞர் நடாஷா ஹேம்ராஜ் , பாடகர்கள் சோனா மஹோபாத்ரா ஆகியோர் தெரிவித்த பாலியல் புகாரின் காரணமாக பாடகர் கைலாஷ் கெர் மன்னிப்புக் கேட்டார்.
பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டின் காரணமாக சோனி டிவி இந்தியன் ஐடல் நிகழ்ச்சியிலிருந்து இசையமைப்பாளர் அனு மாலிக்கை நீக்கியது

மீ டூ இயக்கத்தை ஆதரித்து ஏ. ஆர். ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். மியூசிக் அகாடமி குற்றச்சாட்டுக்கு உள்ளான கர்நாடக இசை துறையைச் சேர்ந்த என். ரவிக்கிரண், ஓ. எஸ். தியாகராஜன், மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமூசம் வி. ராஜாராவ், நாகை ஸ்ரீராம், ஆர். ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோரை இந்த ஆண்டு தன்னுடைய சபா நிகழ்ச்சியிலிருந்து நீக்குவதாக தெரிவித்தது. கர்நாடக இசை கலைஞர்கள் கூட்டாக பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் மீ டூ!

வீடியோ தன்னார்வலர் என்ற அமைப்பின் நிறுவனர் ஸ்டாலின் கே. பத்மா மீது பல பெண்கள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டை கூறியிருந்தனர். இதனால் இவர் பதவி விலகினார். இந்த அமைப்பிலிருந்து தங்களுடைய உறவை துண்டித்துக் கொள்வதாக டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசியல் ஸ்டடீஸ் மற்றும் ஸ்கூல் ஆஃப் மீடியா அண்ட் கல்ச்சர் நிறுவனங்கள் முடிவெடுத்தனர். டீச் பார் இந்தியா என்ற நிறுவனம் தனது ஊழியர் மூவரை விடுப்பில் அனுப்பியது, அவர்கள் மீதான புகாரையும் நிறுவனம் விசாரிக்கிறது. மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குனர் மேத்யூ ஜேக்கப், பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகினார்.

தீபிகா படுகோனே-வின் லிவ் லவ் லாஃப் பவுண்டேஷன் தனது ட்ரஸ்டீ ஒருவரை பாலியல் ஒடுக்குமுறை புகார் காரணமாக பதவி விலகியதாக தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுடைய அமைப்பு ஆதரவாக இருக்கும் எனவும் அறிவித்தது.

கலைத்துறை மீ டூ!

பிரபல ஓவியர் ஜதின் தாஸ் மீது நான்கு பெண்கள் புகார் கூறியிருந்தனர். இதற்காக இவர் பிறகு மன்னிப்பும் கேட்டார்.
ஓவியர் ரியாஸ் கோமு மீதான புகார் காரணமாக கொச்சி முசிறி பினாலே விழாக்குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இவரும் மன்னிப்புக்கேட்டார். மீ டூ இயக்கத்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

மும்பையைச் சேர்ந்த கலைக்கூடமான ‘டார்க்’, ஒளிப்படக் கலைஞர் ஷாகித் தத்தாவாலா மீதான புகார் காரணமாக அவருடைய காட்சியை ரத்து செய்தது.

இலக்கியத்தில் மீ டூ!

மீ டூ இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் எழுத்தாளர் ரஜினி ஜார்ஜ் குழு ஒன்றை தொடங்கினார். இந்தக் குழுவில் இதுவரை 500 முன்னணி ஓவியர்கள், எழுத்தாளர்கள் இணைந்துள்ளனர். மீ டூ இயக்கத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான எழுத்தாளர், பிரபலங்கள் எவரும் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு அழைக்கப்படவில்லை.

எழுத்தாளர் சச்சின் கார்க், முறைதவறி நடந்துகொண்டதற்காக ஒரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார். பெங்களூரு இலக்கிய விழாவின் நிறுவனரான சுபோத் சங்கர், பாலியல் புகாருக்கு உள்ளான எவருக்கும் வாய்ப்பளிக்கப்படாது என அறிவித்துள்ளார்.

சட்ட துறையில்!

சட்ட துறையைச் சேர்ந்த பல நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீ டூ இயக்கத்துக்கு ஆதரவளித்துள்ளனர். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் பட்டேல் ஆதரவளித்திருக்கிறார். சட்ட மாணவர் கோஷிகா கிருஷ்ணா என்பவர் மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சரவையில் பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவினரின் பெயரை நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் வெளியிட வலியுறுத்த வேண்டும் என மனு ஒன்றை அளித்திருக்கிறார். மாற்று சட்ட கருத்துக்களம் (Alternative Law Forum) பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி செய்வதாக அறிவித்துள்ளது. வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நீதிக்காக போராடிய தாலிப் உசைனுக்காக வழக்காடப் போவதில்லை என தெரிவித்திருக்கிறார். தாலிப் உசைன் மீது பாலியன் வல்லுறவு புகார் எழுந்த நிலையில் அவர் இப்படி அறிவித்திருக்கிறார்.

வர்த்தகம் மற்றும் விளம்பரத்துறை மீ டூ!

விளம்பர துறையைச் சேர்ந்த சுகைல் சேத் மீது பல பெண்கள் புகார் அளித்த நிலையில் குளோபல் மெண்டோர்ஷிப் பிளாட்ஃபார்ம், வேர்ல்டு உமன் ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் சுகைல் சேத் -உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன. டாடா குழுமம், கோககோலா, மகேந்திரா குழுமம் ஆகியவையும் உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளன.
விளம்பரத்துறையைச் சேர்ந்த கார்த்திக் ஐயர், பிரவீன் தா, போதிசத்வா தாஸ்குப்தா, தினேஷ் சுவாமி ஆகியோர் பாலியல் ஒடுக்குமுறையை தவறான நடத்தை குற்றச்சாட்டின் காரணமாக பதவி விலகியுள்ளனர்.

முத்ரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்யூனிகேஷன் அகமதாபாத், அதன் இயக்குனர் பிரவீன் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க முன்வந்துள்ளது.

டிடிபி முத்ரா குழுமம் தன்னுடைய ஊழியர் மூவருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கிறது.
பாலிசி இந்தியா நிறுவனம் அதன் க்ரியேட்டிவ் இயக்குநர் இஷ்ரத் நவாஸ் மீதான குற்றச்சாட்டு காரணமாக அவரை நீக்கியுள்ளது. உடோப்பியா கம்யூனிகேஷன் இணை நிறுவனர், பாலியல் நடத்தை குற்றச்சாட்டு காரணமாக விடுப்பில் அனுப்பப்பட்டிருக்கிறார்.

விளம்பரம், வடிவமைப்பு மற்றும் ஊடக பெண்கள் அமைப்பு இந்தத் துறையில் உள்ள பாலியல் ஒடுக்குமுறை புகார்கள் மீது ஒருமுகப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பில் விளம்பர ஊடக துறையைச் சேர்ந்த பிரபல பெண்கள் பலர் கையெழுத்திட்டுள்ளனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் ரங்கராஜ், பாலியல் ஒடுக்குமுறை புகார் காரணமாக விடுப்பில் அனுப்பப் பட்டிருக்கிறார். அவர் மீதான புகாரும் விசாரிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அஜித் தாக்கூர் பதவி விலகியிருக்கிறார். விபூ சர்மா என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அவர் பணிபுரியும் நிறுவனம் பெண்கள் மட்டுமே உள்ள விசாரணைக்குழு அமைத்துள்ளது.

ஐடிசி நிறுவனம் தன்னுடைய அனைத்து கிளைகளிலும் பாலியல் ஒடுக்குமுறைகளை விசாரிக்க குழு அமைத்துள்ளது.

விளையாட்டு துறையில்…

டென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஷ் பூபதி மீ டூ இயக்கத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். பிசிசிஐ செயல் இயக்குநர் ராகுல் ஜோக்ரி மீது பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டு வெளியான நிலையில், அவர் விடுவிப்பில் அனுப்பப் பட்டிருக்கிறார்.

கல்வி துறையில் மீ டூ!

கல்வி துறையில் புகார்கள் பெருகிவருவதன் காரணமாக, கல்வி அமைப்புகளில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஐஐஎஸ்.சி பெங்களூருவைச் சேர்ந்த மூத்த கல்வியாளர் ஒருவர் மீது பிஎச்டி மாணவி ஒருவர் குற்றம்சாட்டினார். திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் பிஎஸ்ஸி மாணவி ஒருவர், பேராசிரியர் ஒருவர் மீது குற்றம்சாட்டியிருந்தார். அவரை நிர்வாகம் நீக்கியிருக்கிறது. அசோகா பல்கலையைச் சேர்ந்த மாணவி ஒருவர், பாலியல் ஒடுக்குமுறை செய்யும் பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் காப்பாற்றுவது நிறுத்த வலியுறுத்தி கையெழுத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். சிம்பாலிஸிஸ் செண்டர் பார் மீடியா அண்ட் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குனர் அனுபம் சித்தார்தா குற்றச்சாட்டு காரணமாக விடுவிப்பில் அனுப்பப்பட்டிருக்கிறார். பல கல்வி நிறுவனங்கள் கல்விக்கூடங்களில் பாலியல் ஒடுக்குமுறை குறித்த விவாதத்தை துவக்கியுள்ளன. ஜம்மு காஷ்மீர் பள்ளி கல்வித்துறை மாவட்ட வாரியாக பாலியல் ஒடுக்குமுறைகளை விசாரிக்கும் கமிட்டி அமைக்க முடிவு செய்துள்ளது. ஹைதராபாத் உயர்நீதிமன்றம், பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தெலுங்கானா அரசிடம் தெரிவித்துள்ளது.

பொது சமூகத்தின் முன்னெடுப்புகள்!

சிறு சிறு குழுக்களாக பொது சமூகம் மீ டூ இயக்கத்தை ஆதரித்து வருகிறது. ‘ஐ வில் கோ அவுட்’, ஏஜெண்ட்ஸ் ஆப் இஸ்க் போன்ற அமைப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வையும் ஆதரவையும் அளித்து வருகின்றன. டெல்லி ஆக்ஸ்போர்டு புத்தநிலையம் மீ டூ இயக்கம் குறித்தும் தண்டனைக்குரிய குற்றம் குறித்து உரையாடல் நிகழ்வை நடத்தியது.

பெண்ணிய அமைப்பான ‘ஷிரோஸ்’ பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டுவந்த கதைகளை கேட்க உதவி எண்களை ஏற்படுத்தியுள்ளது. TheLifeofScience.com இணையதளம் அறிவியல் துறையில் உள்ள ஒடுக்குமுறைகளை பதிவு செய்ய விண்ணப்பங்களை உருவாக்கியுள்ளது.

தலித் வுமன் ஃபைட் என்ற அமைப்பு மீ டூ இயக்கத்தை ஆதரித்துள்ளது. காஷ்மீர் பெண்கள் அமைப்பு பாலியல் ஒடுக்குமுறைக்கு உள்ளானர்களின் பட்டியலை தயாரித்துள்ளது. பாலியல் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டு மீண்டவர் #MeTooK12 என்ற ஹேஷ்டேக்கின் மூலமாக இளம் தலைமுறையினருக்கு பாலியல் ஒடுக்குமுறை குறித்த விழிப்புணர்வையும் உரையாடலையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

கத்தோலிக் திருச்சபையைச் சேர்ந்த மேகாலயா கிறித்துவ அமைப்பு, தன் உறுப்பினர் ஒருவர் மீதான பாலியல் வன்முறை புகாரை விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

மீ டூ இயக்கத்தின் மீது தமிழகத்தில் ஒரு எதிர்மறையான உணர்வே உள்ளது. இருவேறு நபர்களிக்கிடையேயான பிரச்சினையாக திரிக்கும் அயோக்கியத்தனத்தை பலரும் தொடக்கம் முதலே செய்து வருகிறார்கள். இந்த நீண்ட பதிவை வாசித்த பிறகாவது இது இருவர் தொடர்பான பிரச்சினையல்ல, மீ டூ இயக்கம் பணிபுரியும் இடத்தில் பாலியல் சமத்துவத்துக்கான ஒரு போராட்டம் என்பதை புரிந்துகொள்வார்கள் என நம்பலாம். வரலாற்று காலம் தொட்டு பெண்ணுரிமைப் போராட்டங்கள் அவ்வளவு எளிதானதாக இருந்ததில்லை.

நன்றி: த வயர், வினவு

நாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்?: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை

நாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்?

‘‘பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளை, அச்சுறுத்தல்களை, உடல் ரீதியான துன்புறுத்தலை வெளியே  கொண்டுவருவதற்காக தொடங்கப்பட்டதே ‘மீ டூ’ இயக்கம். இந்த இயக்கத்தின் மூலம், உலகம் முழுக்க பல்வேறு துறைகளில் ஆண்களால்  ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்கள் தொடர்புடைய சம்பவங்கள் நடந்து பல ஆண்டுகள் ஆன போதும் இப்போது வெளியே சொல்கிறார்கள்.  தனியாக ஒலிக்கும் குரலுக்கு இத்தனை வீரியம் இருந்திருக்காது; கூட்டுக்குரலாக ஒலிக்கும்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதை வெறுமனே பாலியல் சுரண்டலுக்கு எதிரான குரலாக மட்டுமே பார்த்து, ‘எனக்கு நடக்கவில்லை’  அல்லது ‘எங்கள் குடும்பத்தில் யாருக்கும் நடக்கவில்லை’ என பலர் ஒதுங்கிப் போகக்கூடும். தமிழகத்தில் பேசுபொருளாகியிருக்கும் மீ டூ  இயக்கத்தின் மூலம், பல முகம் காட்ட விரும்பாத பெண்கள், பொதுவெளியில் தங்களுக்கு நேர்ந்த அச்சுறுத்தல்களை  முன்வைத்திருக்கிறார்கள். இது வெறுமனே பிரபலங்களுக்குள் நடக்கும் பிரச்னை அல்ல.  நம் வீட்டுப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை  என்பதை நாம் உணர வேண்டும்.

பெரும்பாலும் 90 சதவீதம் பெண்கள் இத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். சிலர் தங்களுக்குள்ளாகவே இத்தகைய  ஒடுக்குமுறைகளைப் பேசி கடந்துவிடுகிறார்கள். சிலர் கூட்டாக இணைந்து அத்துமீறல் செய்யும் ஆண்களிடமிருந்து தங்களை  பாதுகாத்துக்கொள்கிறார்கள். சிலர் வேலைக்குச் செல்வதே வேண்டாம் என முழுக்குப் போடவும் செய்கிறார்கள். இறுதியில் இத்தகைய  நடவடிக்கைகளில் இறங்கும் ஆண்கள் தொடர்ந்து இதையே அடுத்து வருகிற பெண்களுக்கும் செய்ய துணிகிறார்கள்.பெண்களின் மீது ஈர்ப்பு  கொள்வது ஆண்களின் இயல்பு. பணிபுரியும் இடங்களில் பாலின ஒடுக்குமுறைகள் நிகழத்தான் செய்யும் என சிலர் வாதிடுகிறார்கள்.  இதில் முதல் பாதி மட்டுமே உண்மை. ஆண்களிடம் ஈர்ப்பு கொள்வது பெண்களுக்கும்  இயல்பாக நிகழக்கூடியது. அதை பெண்கள் எப்படி  கையாள்கிறார்கள். ஆண்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பாலின ஒடுக்குமுறை என்பது ஆணுக்கு கிடைக்கும் அளவற்ற அதிகாரத்தின் விளைவாக நடப்பது. இதை தொடர்புடைய ஆண்கள்  அவமானமாகக் கருத வேண்டும் என்பதாலேயே மீ டூ இயக்கத்தை ‘பெயர்களை சொல்லுதல் – அவமானம் கொள்ளச் செய்தல்’ என  அழைக்கிறார்கள். தனக்காக தன் குடும்பத்துக்காக பணிபுரிய வருகிற ஆணுக்கு இருக்கும் அதே நிர்பந்தமும் லட்சியமும் பெண்ணுக்கும்  இருக்கும். பஞ்சாலைக்கு தின சம்பளத்துக்கு செல்கிற பெண்ணுக்கும், ஐ.டி. நிறுவனத்தில் மாதச் சம்பளம் வாங்கும் பெண்ணுக்கும்  அவரவர்க்குரிய வாழ்வியல் நிர்பந்தங்கள் இருக்கத்தான் செய்யும். அதை அதிகாரத்தால் சிதைக்க நினைப்பதே ஆணாதிக்கம். இந்த  ஆணாதிக்க சூழலை மாற்ற முனைந்திருக்கும் கூட்டுக்குரல் ‘மீ டூ’.

மீ டூ இயக்கத்தில் பேசப்பட்ட இத்தகைய ஒடுக்குமுறை விஷயங்கள் எவை?

Abuse(துன்புறுத்தல்)- ஒரு நபர் இன்னொருவர் மீது உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, உளவியல்ரீதியாகவோ, பொருளாதாரரீதியாகவோ  துன்புறுத்துவது. உதாரணத்துக்கு, அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஆண், ஒரு பெண்ணை அவருடைய விருப்பத்துக்கு மாறாக இணங்க  வற்புறுத்தி அதை அந்தப் பெண் மறுக்கும்போது, அவளுடைய இன்கிரிமென்ட், ப்ரோமோஷனில் கை வைப்பதுகூட துன்புறுத்தல் வகையைச்  சேர்ந்ததுதான்.

Boys’ club – (பணியிடத்தில் ஆண்கள் மட்டும் ஒரு குழுவாக இயங்குவது) பெரும்பாலான பணியிடச் சூழலில் இது நடக்கும். இவர்கள்  சேர்ந்து அலுவலக பெண்களைக் கிண்டலடிப்பார்கள், பாலியல் ஜோக்கடித்து பெண்களை மோசமாகப் பேசி சிரிப்பார்கள். பெண்களை  மதிக்காது; எல்லா இடமும் ஆணுக்கானதுதான் என நிறுவ முயல்வதும் ஒடுக்குமுறையே!

Male entitlement – (ஆண் என்ற தகுதியே சமூக அந்தஸ்துகளை பெற போதுமானது எனக் கருதுவது) பணியிடங்களில் குறிப்பிட்ட பணியை ஆணால் மட்டுமே செய்ய முடியும் எனச் சொல்வார்கள். ஊடகங்களில் புலனாய்வு நிருபர் பணிக்கு பெண்களை  சேர்க்காமல் இருப்பதைச் சொல்லலாம்.

Mansplaining (ஆண்களுக்கு எல்லாம் தெரியும்) தனக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போல அறிவுரைகளை கூறுவார்கள். பொதுவாக,  பெண்களை நெருங்குவதற்காக ஆண்கள் இதைச் செய்வார்கள்.

Molesting – (விருப்பமில்லாமல் அழைத்தல்) ஒரு பெண்ணை அவளுடைய விருப்பம் இல்லாமல் நிராகரித்த பிறகும் பாலியல் உறவுக்கு  அழைப்பது.

Negative questioning – (எதிர்மறையாகக் கேட்பது) இதை நிறையப் பெண்கள் எதிர்கொண்டிருக்கலாம். இரட்டை அர்த்தத்தில் பேசிவிட்டு,  பதிலை எதிர்பார்ப்பார்கள்.

Negging – (உணர்வுரீதியான துன்புறுத்தல்) ஒருவரின் தன்னம்பிக்கையை குறைக்கும் வகையில் எதற்கெடுத்தாலும் குறை  சொல்லிக்கொண்டிருப்பது.

Policing – (கண்காணித்தல்) ஒரு நபரின் செயல்பாடுகளில் விருப்பம் இல்லாமல் ஒரு பெண் ஒதுங்க விரும்பினாலும் அந்தப் பெண்ணை  கண்காணித்துக்கொண்டே இருப்பது. இதை செய், அது கூடாது என கட்டுப்படுத்த நினைப்பது.

ஏதோ கிசுகிசு போல எண்ணி  நகர்ந்துவிடாமல், இந்த இயக்கத்தை ஆதரிப்பது நமது கடமை. ஏனெனில்,  பணியிடங்களில் பாலியல் சமத்துவம் என்பது நமக்கு பின்னால்  வருகிற அடுத்தடுத்த தலைமுறை பெண்களுக்கு நாம் பெற்றுத்தர வேண்டிய உரிமை.’’

நன்றி: குங்குமம் தோழி

கட்டுரையில் த வயரில் வந்த கட்டுரை ஒன்றிலிருந்து ஒடுக்குமுறை சொல்லாடல்கள் சிலவை எடுத்தாளப்பட்டுள்ளன.

முகப்புப் படம் நன்றி: நியூயார்க்கர்

எழுத வாய்ப்பளித்த தோழர் மகேஸ்வரிக்கு அன்பும் நன்றியும்.

பெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா?

‘த பியானோ டீச்சர்’ குறித்து ஒரு பிரபல(பெயரைச் சொல்ல விரும்பவில்லை) எழுத்தாளர் எழுதிய கட்டுரை ஒன்றை சிறுபத்திரிகையில் படித்திருக்கிறேன். ஒரு ஆண், ஒரு பெண்ணிய படைப்பு குறித்து எழுதினால் எப்படியிருக்கும்? பெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா? அதுவும் இந்திய ஆண்களால்? ஃபெனிமிஸ்ட் ஆண்கள் என எவரும் இங்கே இல்லை… என்னிடம் சண்டைக்கு வரக்கூடாது, ஃபெனிஸ்ட் என சொல்லிக்கொள்கிறவர்கள் தங்களை தாங்களே சீர்தூக்கிப் பார்க்கலாம். விஷயத்திற்கு வருகிறேன். பாலியலை கொண்டாடக்கூடிய படமாக ‘பியானோ டீச்சர்’ குறித்து அந்த எழுத்தாளர் எழுதியிருந்தார். போர்னோகிராபியை கொண்டாடுகிற தாராளவாத பார்வை முற்போக்காளர்கள் பலருக்கும் உண்டு.

ஆனால், இது போர்னோகிராபி அல்ல, அதற்கு எதிரானது என்கிறார் இந்தப் பிரதியை எழுதிய எல்ஃபிரீட் ஜெனிலிக். 2004-ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் பரிசு வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. எனக்கு கூட்டத்தைப் பார்த்தால் பேச்சுவராது(அது ஒரு போபியா) என செய்தி அனுப்பினார். ஆனால் அது மட்டும் காரணமாக இருந்திருக்க முடியாது. எல்ஃபிரீட் தீவிர இடதுசாரி ஆதரவாளர். ஆஸ்திரிய இடதுசாரி கட்சியில் இணைந்து செயல்பட்டவர். அமெரிக்க-இங்கிலாந்து நாடுகளின் படையெடுப்புகளை கடுமையாக விமர்சித்தவர். இவருடைய எழுத்து போர்னோகிராபி என சொல்லி நோபல் விருது தேர்வு குழுவில் இருந்த ஒருவர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேற்குலகின் ஊடகங்கள், தாராளவாத அறிவுஜீவிகள் எல்ஃபிரீட்டை அதிகமாக விமர்சித்திருக்கின்றனர். இவர்கள் சொல்லும் இதே காரணங்கள் தாராளவாத பெண்ணிய எழுத்தாளர்களுக்கு மாறுபடும். இடதுசாரி என்ற காரணத்துக்காகவே எல்ஃபிரீட் விமர்சிக்கப்படுகிறார். பெண்களை முதலாளித்துவ சமூகம், நிலவுடைமை சமூகத்திலிருந்ததைக் காட்டிலும் அதிகமாக சுரண்டிக்கொண்டிருக்கிறது என்பதும் அதற்காக எதிர்வினைகள் எப்படி இருக்கின்றன என்பதுமே எல்ஃபிரீட் எழுத்து.

சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் என பலவடிங்களில் எழுதிவரும் எல்ஃபிரிட்டை நேர்மறையான முறையில் புரிந்துகொள்ள இந்த நேர்காணல் உதவும் என நினைக்கிறேன்.

”என் எழுத்து நிதர்சனத்தின் பேரச்சத்தை வெளிப்படுத்துவது; போர்னோகிராபி அல்ல”: ’த பியானோ டீச்சர்’ நாவலாசிரியர் எல்ஃபீரிட் ஜெலினீக் நேர்காணல்

சந்திரபாபு நாயுடுவை கலங்கடிக்கும் செக்ஸ் முறைகேடு!

செம்பரக் கட்டைக் கடத்தலை ‘பல’ யுத்திகளைக் கொண்டு தடுக்க நடவடிக்கை எடுத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஆட்டம் காண வைத்திருக்கிறது ‘கால் மணி’ முறைகேடு. அதென்ன கால் மணி?

பணம் தேவைப்படுவோர் குறிப்பிட்ட எண்ணுக்கு அழைத்தால் வீட்டிற்கே வந்து பணம் தருவார்கள்.  பணம் என்றால் சும்மா கிடையாது; வட்டிக்குத்தான். அதுவும் கந்துவட்டி போல பத்து வட்டி, பதினைந்து வட்டி அல்ல. மீட்டர் வட்டி! இருபது, முப்பது வட்டி. அதாவது 100 ரூபாய் கடன் கொடுத்தால் அதில் 30 ரூபாய் வட்டியாக பிடித்துக்கொள்வார்கள். கடனைத் திருப்பிச்செலுத்தும்போது அசலைவிட வட்டிதான் அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும். ஆந்திராவின் பல பகுதிகளில் குறிப்பாக விஜயவாடாவில் இந்த கால் மணி மிகவும் பிரபலமானது.

இந்த விதத்தில் அவசரத்து பணம் வாங்கிய மக்கள், ஒரு கட்டத்தில் கட்ட முடியாமல் தவித்திருக்கிறார்கள். இதில் ரூ. 2000கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

chandrababu naidu
இந்த முறைகேட்டில் மீட்டர் வட்டி மட்டும் பிரச்சினையல்ல…கடன் கட்ட முடியாதவர்களின் வீட்டுப் பெண்களை பாலியல் தொழிலுக்குத் தள்ளியதாக பெரும் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. கால் மணி மூலம் ரூ. ஒன்றரை லட்சம் கடன் பெற்ற ஒரு பெண், ரூ. ஆறு லட்சத்தை கட்ட வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டதாகவும் அதைக் கட்டத் தவறியதால் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தப் பட்டதாகவும் புகார் தெரிவித்தார். இதன் பிறகுதான் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் செய்தார்கள். கால் மணி முறைகேடு, செக்ஸ் முறைகேடாக மாறியது.

இதில் உச்சக்கட்ட விவகாரமே இந்த முறைகேட்டில் ஆளும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் எம் எல் ஏக்கள் ஈடுபட்டார்கள் என்பதுதான். இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக வைக்கிறது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்.

கால் மணி முறைகேட்டை விசாரிக்க தனிப் படை அமைத்திருப்பதாக சொல்லியிருக்கும் சந்திரபாபு நாயுடு, வெள்ளிக்கிழமை ஆந்திர சட்டமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்தார். சந்திரபாபு நாயுடுவின் கட்சி எம் எல் ஏக்களுக்கு நேரடியாக தொடர்பு இருக்கும்போது எப்படி விசாரணை நேர்மையாக நடக்கும் என ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்  நகரி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நடிகை ரோஜா, சட்டமன்றத்தில் சந்திர பாபு நாயுடுவின் செயல்பாடுகளை கடுமையாக சாடினார். இதற்காக ரோஜாவை ஒரு வருட காலத்துக்கு சட்டமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடைவிதித்தார் சபாநாயகர்.

வெளியே வந்த ரோஜா, “ஆந்திர முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் எல்லாம் கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். அதற்கெல்லாம் அவர் தகுதியானவரே கிடையாது. இந்த செக்ஸ் முறைகேட்டில் சந்திரபாபு நாயுடுவும் அவருடைய மகனுமே சம்பந்தப்பட்டிருக்கும்போது, எப்படி விசாரணை நேர்மையாக நடக்கும்?” என அதிரடியாகப் பேசினார்.

மரக்கட்டைகளுக்காக அப்பாவித் தமிழர்களின் உயிரை துச்சமென நினைத்து அவர்களை சுட்டுக் கொல்வதற்கு ஆதரவாக இருக்கும் முதலமைச்சர், தன் சொந்த மக்களுக்கு மட்டும் அனுசரணையாக இருப்பார் என்று எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

தினச்செய்தி நாளிதழில் வெளியானது