ஃபீனிக்ஸாய் மீண்டெழுவாரா பெருமாள் முருகன்!

மாதொருபாகன் என்னும் பெயரைக்கேட்டதும் நண்பர் ஒருவர், சைவ நெடியடிக்கும் தலைப்பு என்றார். உண்மைதான். இது சிவனின் பெயர்களில் ஒன்று. பெண்ணுக்குத் தன் இடப்பாகத்தைக் கொடுத்து ஆண் பாதி பெண் பாதி எனக் காட்சி தரும் அர்த்தநாரீசுவர வடிவத்தை குறிக்கும் பெயர். அர்த்தநாரீசுவரன், அம்மையப்பன், மங்கைபங்கன் ஆகிய பெயர்களும் இதே பொருளைத் தருவன. எனினும் எனக்குள் ஒருவித மயக்கத்தை உண்டாக்கிய பெயர் ‘மாதொருபாகன்.’ பொதுவாக நாவலை முடித்த பிறகே தலைப்பை யோசிப்பது என் வழக்கம். ஆனால் இந்நாவலை எழுதத் தொடங்கும் முன்பே இத்தலைப்பு எனக்குள் தோன்றிவிட்டது. எனினும் அதை ஒத்திவைத்துவிட்டு பல தலைப்புகளை யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இதற்கு ஈடான நிறைவை வேறு எதுவும் தரவில்லை.

மூலவர் மாதொருபாகனாகச் சிவன் காட்சித் தருவது திருச்செங்கோட்டில் மட்டுமே. இவ்வுருவம் இக்கோயிலில் அமைய ஊகத்திற்கு உட்பட்டும் ஊகத்திற்கு அப்பாற்பட்டும் காரணங்கள் இருக்கலாம். சைவம், கோயிலின் பூர்வ வரலாறு ஆகியவற்றைவிட மக்களிடையே கோயில் பெற்றிருக்கும் மிதமிஞ்சிய செல்வாக்கே என்னை ஈர்த்த விஷயம். வாழ்வின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஏதோ ஒரு வடிவில் கோயில் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. மலைஅடி வாரம் முதல் உச்சி வரை மக்கள் குறை தீர்க்கும் படையாகத் தெய்வங்கள் அணிவகுத்திருக்கின்றன. அந்தந்தச் சமயத்திற்கு ஏற்றாற்போலத் தெய்வங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

திருச்செங்கோடு தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்ட போது எனக்குக் கிடைத்தவை பல. படைப்பு உந்துதல் கொடுத்த விஷயங்களில் ஒன்று இந்நாவல். நான் சேகரித்தவற்றை விரிவாகப் பயின்று கொண்டிருக்கிறேன். ஆய்வின்போது நான் பெற்ற பேரனுபவங்கள் சில என்னுள் ஊறிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் வரலாறு சார்ந்து விரிவாக எழுதும் தூண்டல் ஒன்றும் இருக்கிறது. அதற்குச் சில ஆண்டுகள் எனக்குத் தேவைப்படக்கூடும்.

– மாதொருபாகன் நாவல் முன்னுரையில் எழுத்தாளர் பெருமாள் முருகன்.

இப்படி பெருமிதத்துடன் எழுதிய நாவலோடு தன் எழுத்துப் பயணத்தை முடித்துக் கொள்வார் என எழுத்தாளர் பெருமாள் முருகனும்கூட நினைத்திருக்க மாட்டார்.

நாவலில் தங்கள் இனத்துப் பெண்கள் இழிவாகச் சித்தரிக்கப் பட்டுள்ளதாக சில சாதி அமைப்புகள் நாவல் எரிப்புப் போராட்டத்தை நடத்தின. பெருமாள் முருகன் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என அவரை நிர்பந்தித்தன. சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக மிகப்பெரும் எழுத்து வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. கட்ட பஞ்சாயத்துகளும் நடந்தன. அவர் மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தினரும் சாதி அமைப்புகளால் கடுமையான அவதூறுகளுக்கு உள்ளானார்கள்.

இறுதியில், ‘எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்’ என அறிவித்தார். சர்ச்சைகளும் ஓய்ந்தன.

இந்நிலையில் பத்து மாதங்களுக்குப் பிறகு, ‘மாதொருபாகன்’ நாவலுக்கு கிடைத்திருக்கும் சமன்வய் விருதையொட்டி பொதுவெளியில் அறிக்கை மூலம் பேசியிருக்கிறார்.

பெருமாள் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாதொருபாகன் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ள இவ்விருது நெடும் இலக்கியப் பாரம்பரியம் கொண்ட செம்மொழி ஆகிய தமிழுக்குக் கிடைத்திருக்கும் நவீன அங்கீகாரம் ஆகும். துரதிர்ஷ்டம் நிறைந்திருக்கும் இச்சூழலில் என் தாய்மொழி அடைந்திருக்கும் இப்பேறு அதன் வரலாற்றில் துருத்தும் மருவாக அல்ல, ஒளிரும் மணியாக அமையும் என்று நம்புகிறேன். இவ்விருதுக்குக் காரணமான அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இயற்கையின் இயல்புக்கு மாறாகப் பெருமாள் முருகனின் நிழலாக மட்டுமே தங்கி உலவும் நான் பெருமைமிகு தருணமாக இதை உணர்கிறேன். இவ்விருதை எல்லாம் வல்ல இறையாகிய மாதொருபாகனின் பாதக் கமலங்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

பல மாதங்களுக்குப் பிறகு ஊடகங்களில் அறிவிப்பு வழியாக பேசியிருக்கும் பெருமாள் முருகன், இனி எழுதுவதில்லை என்ற முடிவை மாற்றிக்கொள்வாரா? பெருமாள் முருகனின் பெருவாரியான நூல்களை வெளியிட்டிருக்கும் காலச்சுவட்டின் பதிப்பாளர் கண்ணனிடம் இது குறித்துக் கேட்டபோது.

“அவர் எழுதுவாரா என்பது குறித்து தெரியவில்லை. எழுதுவீர்களா என நானும் கேட்கவில்லை. சென்னை வந்த பிறகு அவர் அமைதியான மனநிலைக்குத் திரும்பியிருக்கிறார். இப்போது அவர் மீண்டும் படிக்க ஆரம்பித்திருக்கிறார்.” என்றார்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் என்ற எழுத்தாளரைத் தாக்கிய சாதியம், கோகுல்ராஜ் என்ற மாணவரின் படுகொலை, விஷ்ணுப் பிரியா என்ற காவல் அதிகாரியின் மரணம் வரை இழுத்துச்சென்றுள்ளது. கொங்கு மண்டலத்தில் கிளம்பிய இந்த சாதியத்தை உணர்ந்ததால்தான் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதுவதையே நிறுத்திக் கொள்கிறேன் என அறிவித்தார் என்கிறார் கண்ணன்.

“மாதொருபாகனுக்கு எதிராக சாதிய அமைப்புகள் கிளம்பியபோது பெருமாள் முருகன் தேவையில்லாமல் அச்சப்படுகிறாரோ என பலர் பேசினர். சூழல் மோசமாகிவிட்டதை உணர்ந்ததால்தான் அவர் அப்படி அச்சப்பட்டார். இன்று அது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது” என்றவர், பெருமாள் முருகனின் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளர் என்ற முறையில் தங்களையும் சிலர் மிரட்டினார்கள் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

“இந்த பிரச்சினை கிளம்பிய நேரத்தில் காலச்சுவடு அலுவலகத்துக்கு நிறைய மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்தன. என்னிடம் பேச பலமுறை முயன்றார்கள். என் செல்பேசி எண்ணை எப்படியோ தெரிந்துகொண்டு ஒருவர் அழைத்தார். ‘வணக்கம் இந்து துரோகியே!’ என்பதுதான் அவர் பேசிய முதல் வார்த்தை. நான் கடுமையாக பேசிவிட்டு பேசியை அணைத்தேன்.

சேலம் ஆர்எஸ்எஸ் என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் தன்னைப் பற்றி குறிப்பிட்டிருந்த ஒருவர், என் மனைவியின் முகநூல் பக்கத்தில் ‘திருச்செங்கோடு கோயிலில் நடைபெறும் திருவிழாவில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கமெண்ட் போட்டிருந்தார். இப்படி அந்த சந்தர்ப்பத்தில் நிறைய சந்திக்க வேண்டியிருந்தது” என்கிறார்.

இன்னும் சில நாட்களில் எழுத்தாளர் பெருமாள் முருகன் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கின் தீர்ப்புக்குப் பிறகுதான் எழுதுவது குறித்து அவர் பேசுவார் என சொன்ன கண்ணன், தற்போது பெருமாள் முருகனின் நூல்களை மறுபதிப்பு செய்வதையும் நிறுத்தி வைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நண்பரும் கவிஞருமான சிபிச்செல்வன், வழக்கு முடியும்வரை பெருமாள் முருகன் பொதுவெளியில் பேசுவதில்லை என முடிவெடுத்திருப்பதாகக் கூறினார். வழக்கின் முடிவைப் பொறுத்தே அவர் எழுதுவாரா, இல்லையா என்பது தெரிய வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் கிடைத்திருக்கும் மன அமைதியும் விருது பெற்றிருக்கும் மகிழ்ச்சியும் அவரை ஃபீனிக்ஸ் பறவைபோல சாம்பலில் இருந்து மீண்டெழ வைக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம்!

வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா? பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி!

பரமார்த்த குரு கதை:முன்னோடி முயற்சியாகுமா? என்ற தலைப்பில் எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய கட்டுரையை அவருடைய வலைத்தளத்தில் படித்தேன். பெருமாள்முருகன் எழுதிய கட்டுரையை ஒட்டி சில விளக்கங்களையும் சில வினாக்களையும் முன்வைக்கிறேன். இந்தக் கட்டுரையின் ஊடாக வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் தமிழின் முன்னோடி முயற்சியில்லை என்று பெருமாள்முருகன் நிறுவ முயல்வது தெரிகிறது.

”வரலாற்றில் இவ்விதம் வைக்கப்படும் அளவுக்கான நூல்தானா அது?அப்படியானால் அது எங்கே கிடைக்கிறது? நூலகங்களில் பார்க்க முடியுமா?நூலில் மொத்தம் எத்தனை கதைகள் உள்ளன? பரமார்த்த குரு கதை என்னும் பெயரில் பாட நூல்களில் காணப்படும் கதைகள் வீரமா முனிவர் எழுதியவையா? நூல்களாக வெளியிடப்பட்டு இன்று புத்தகச் சந்தையில் கிடைப்பவை நம்பகமானவையா? இத்தகைய ஐயங்களுக்குப் பதில் சொல்வது என்பது வருத்தப்படுவதாகவே அமையும்.

  மூன்று நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட அந்நூலைப் பற்றி விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. இது தொடர்ந்து அச்சில் இல்லாமைக்கான காரணம் பற்றியும் ஆராய வேண்டும். சிறுவர் கதை நூலாக அதன் தளம் சுருங்கிவிட்ட வரலாறும் பேசப்பட வேண்டும். பரமார்த்த குரு கதை பற்றிய அடிப்படைத் தகவல்கள்கூடப் போதுமான அளவு இல்லை. இக்கதை தழுவல் என்றும் இலத்தீன் – தமிழ் அகராதியின் பின்னிணைப்பாக அவரால் வெளியிடப்பட்டது என்றும் 1728ஆம் ஆண்டு புதுச்சேரியில் அச்சிடப்பட்டது என்றும் கிடைக்கும் தகவல்கள் போதுமானவையாக இல்லை.” என்கிறார் பெருமாள்முருகன் அந்தக்கட்டுரையில்.
தமிழ் இலக்கியம் பயின்றவரான பெருமாள்முருகன், பரமார்த்த குரு கதைகளை முழுமையாக படிக்காமலேயே, இதுதான் பரமார்த்த குரு கதைகள் என்பதில்கூட அவருக்கு நிறைய சந்தேகம் இருக்கும் நிலையில் ஒரு கருத்தை நிறுவ முயல்வது எவ்வகையான ஆய்வுத்தன்மை என்கிற கேள்வி எழுகிறது.
paramartha guru kathaigal
1800களில் வெளியான பரமார்த்த குரு கதைகள் என்ற நூல் தமிழ் மரபு அறக்கட்டளையால் பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய பெஞ்சமின் பபிங்டன் என்பவர் முன்னுரையுடன் இதை பதிப்பித்திருக்கிறார். பெஞ்சமின் குறுகிய காலமே அன்றைய மெட்ராஸ் ராஜதானியில் பணியாற்றியிருக்கிறார். பிறகு, இங்கிலாந்து சென்று மருத்துவம் பயின்றிருக்கிறார். இவர் இங்கிருந்த 1812லிருந்து 1830வரையான காலகட்டத்திலேயே இந்த நூல் வெளியாகியிருக்க வேண்டும் என்று அனுமானிக்கிறேன். இவர் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையை முக்கியமான ஆவணம் என்பேன். இதில் வீரமாமுனிவர் குறித்தும் பரமார்த்த குரு கதைகள் குறித்தும் இந்த கதைகள் எழுதப்பட்ட தமிழ்மொழி குறித்தும் எழுதியிருக்கிறார். இந்த நூலின் முகப்பில் இருக்கும் தமிழ் மொழியில் ஒரு கதை என்கிற வரிகள், இந்தக் கதைகள் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதல்ல என்கிற கருத்துக்கு வலுசேர்க்கின்றன. இந்த நூலில் மொத்தம் எட்டுக் கதைகள் மட்டுமே உள்ளன. வீரமாமுனிவர் இவற்றை மட்டும் தான் எழுதினாரா, இன்னும் சிலவற்றையும் எழுதியிருக்கிறாரா என்பதில் மேற்கொண்டு ஆய்வுகள் தேவை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது, பின்னாளில் வந்த கதைசொல்லிகள் வீரமாமுனிவரின் அடியொற்றி பரமார்த்த குரு கதைகளை விரிவாக்கியிருக்கிறார்கள். வீரமாமுனிவரின் மொத்த கதைகளும் கிடைக்கும்பட்சத்தில் இந்த மாதிரிகளை இனம்கண்டுவிடலாம்.
1720களில் எழுதப்பட்ட பரமார்த்த குரு கதைகள், கிட்டத்தட்ட 1820வரைக்கும்கூட பேசப்பட்ட படைப்பாக இருந்திருக்கிறது என்பதை பெஞ்சமினின் முன்னுரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். கா.சிவத்தம்பியும் இரா.தண்டாயுதமும் சொன்னதுபோல இது தமிழ் படைப்பிலக்கியத்துக்கு அடிக்கல் இட்ட படைப்பாக இது இருப்பதற்கு சாத்தியப்பாடுகள் அதிகமாகவே உள்ளன. ஆகவே  பெருமாள்முருகனின் கருத்தை பரிசீலிக்க வேண்டியுள்ளது.